Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ❤️23

யாதுமாகி #23

 மத யானையின் பிளிறலோ என்று கேட்டவர் அஞ்சினர்.

தன்னவனின் தனல் கங்கு வீச்சில் மிடறு விழுங்கி வெளியில் வந்தாள் நேத்ரா.

அவன் எழுப்பிய ஓங்காரத்தில் மாடியில் இருந்து பயத்துடன் இறங்கி வந்தார் வெங்கடாசலம்.



Advertisement

தன் தந்தைக்கு எதிரே வெஞ்சினம் கொண்டு பார்க்கும் தன்னவனை கண்டு உறைந்து நின்றாள் நேத்ரா.

அய்யனாரப்பன் கணக்காக நெஞ்சை நிமிர்த்தி ரௌத்திரத்துடன் நின்றான். இப்படி ஒரு விஷ்ணுவை அவள் இதுவரை பார்த்ததில்லை.

 பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் வைத்தான்.

Advertisement

 அவருக்கு மேனி தடதடத்து சல்சா ஆடியது.

Advertisement

யோவ்.. நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? பொம்பள பிள்ளையை மிரட்ட கத்தியை எடுத்திருக்க. இப்போ நான் கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன் உன் சங்கை அறுக்கவா? சொல்லு உன் சோலியை முடிச்சுடவா? கொலை பார்வை பார்த்தான்.

 இரக்கமில்லாத அவன் கழுகு பார்வையை கண்ட வெங்கிக்கு ஈரக்குலையே நடுங்கியது.

 வேண்டாம்…என் அப்பாவை ஒண்ணும் பண்ணிடாதீங்க! தப்பு பண்ணினது நான். தண்டனை கொடுக்கணும்னா என் கழுத்தை அறுத்துட்டு போங்க! இவ்வளவுக்கும் நான் தான் காரணம்.கதறினாள் நேத்ரா.

Advertisement

 தம்பி எனக்கும் என் பொண்ணுக்கும் ஒரே துணை அவர்தான். தயவு செய்து அவரை விட்டுடுங்க! அவன் காலில் விழ வந்தார் வேதவல்லி.

 அவன் இன்னும் கழுத்திலிருந்து கத்தியை நகரத்தவில்லை குப்பென வியர்த்து நின்றார் வெங்கி.

பொண்ணு கொடுக்க முடியும், இல்லை முடியாது! ஒத்த வார்த்தையில் பதில் சொல்லுவியா…அதை விட்டுட்டு கத்தி எடுத்து காமெடி பண்ணிக்கிட்டு.

 சுரேனும் வாசுவும் ஓடி வந்து அவன் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டனர்.

 இன்னும் இயல்புக்கு திரும்பாத வெங்கிக்கு மூச்சு சீராகவில்லை.

 யாரும் எதுவும் பேசாது பயத்தில் நெஞ்சடைத்து நின்றனர்.

 நீங்க கிளம்புங்க! நேத்ரா அவன் முன் வந்து கை கூப்பினாள்.

 வாடி உன் அப்பன் மகளே…அவள் கரம் பற்றி இழுத்து அணைத்துக் கொண்டான்.

 தன் பெற்றோர் முன் அவன் இப்படி நடந்து கொண்டதில் அவள் கூசி போனாள்.

 என்னடி அப்படி பார்க்கிற? என்னை பார்த்தா பயமா இருக்குமே…காட்டான் போல இருக்குமே? அவள் விழி நோக்கி நக்கல் பேசியவனிடமிருந்து நேத்ராவை இழுத்து விலக்கினான் சுரேன்.

 அடியே நீ வேணும் வேணாம்னு நொடிக்கு ஒரு முறை மனசு மாற நான் பொம்மை இல்லை. விஷ்ணு…தி கிரேட் கிரிமினல் லாயர் விஷ்ணு.

 நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ! நீ வேணாம்னு அழுதாலும் காலை பிடித்து தொழுதாலும் உன்னை விடறதா இல்லை.

 சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டுட்டு இப்போ அழுது வடிந்தால் எல்லாம் ஆச்சா?

நீ இப்போ இங்கே இருக்க தன் மார்பில் வலுவாய் குத்தி காட்டினான். இனி நானே நினைத்தாலும் உன்னை விட முடியாது.அந்த நிலையை எல்லாம் எப்போவோ கடந்தாச்சு!

 ஏழு ஜென்மம் பத்தி எனக்கு தெரியாது.இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்கு, நான்தான் உனக்கு.

சொல்லி வை உங்க அப்பனுக்கு சம்மந்திகிட்ட எப்படி மரியாதையா பேசணும்னு…

 நல்ல நாள் பார்த்து சொல்லி விடறேன்,வரட்டா…

அவள் கன்னத்தில் தட்டி விட்டு விறு விறுவென்று வெளியேறினான்.

“——————–’

 வெறும் நாய்க்கு வீராப்பு பார்த்தியா… என் வீட்டுக்கு மருமகளா வர என்ன தகுதி இருக்கு அந்த அன்னக்காவடி பெத்த மகளுக்கு?

 அவ அப்பன் அவ்வளவு சலம்பல் பண்ணி இருக்கான். வாய் கிழிய கத்தினார் ஜோதி

உன்னைப்பற்றி ஊருக்குள்ள விசாரிச்சிட்டு தான் அந்த ஆளு பொண்ணு கொடுக்கவே மாட்டேன்னு சொல்றாராம்! அன்னம் வாய்விட்டு சிரித்தார்.

பல்லை கடித்த ஜோதி,நான் தான் மோசமானவள் ஆச்சே அந்த ஆளு பொண்ணை பத்திரமா வச்சிக்க சொல்லுங்க!

ஒரு போன் போட்டா என் அண்ணன் இப்போவே பொண்ணை கூட்டிட்டு வரப்போறாரு. அடுத்த முகூர்த்தத்தில் ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிட போறோம்.

 கிடைத்த கேப்பில் பிட்டு போட்டு பார்த்தார் ஜோதி.

அம்மா ஐயரை நாளைக்கு நாள் குறிக்க வர சொல்லுங்க! வாசு தவிப்புடன் சொல்லி முடித்தான்.

 ஓ!அவ்வளவு தூரம் கதை போயிடுச்சா? நெஞ்சாங்குழி ஏறி இறங்க படபடத்தார் ஜோதி. அவர் கருத்தை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.

 ஜாதகம் பார்க்கல,பொருத்தம் இருக்கான்னு தெரியல! இன்னும் கிண்டி கிளறிக் கொண்டிருந்தார். தன் பிடித்தமின்மையை எப்படி எல்லாமோ காட்டிப் பார்த்தார். யாரும் மசியவில்லை.

 மனப்பொருத்தம் இருந்தால் மற்ற பொருத்தம் பார்க்க தேவையில்லை. வேணு தன் மனையாள் விரும்பாத பதிலைக் கொடுத்தார்.

“—————–”

 வீடு தேடி வந்து மிரட்டல் விடுத்து கூடவே சவால் விட்டு சென்றவனை எண்ணி உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தார் வெங்கி.

 எந்த நேரம் என்ன செய்வானோ என்ற திகில் அவருக்கு

வீடு இழவு வீடு போல் காட்சி அளித்தது.

வீடு ஒளிரவில்லை, அடுப்படி மணக்கவில்லை, யாரும் உண்ணவில்லை, உறங்கவும் இல்லை.என்னாகுமோ என்ற பதட்டம் நேத்ராவிற்கு.

அவளுக்கு தான் அவன் பிடிவாதம் தெரியுமே!

 அப்பா என்ன செய்வாரோ என்ற பதைபதைப்பு மட்டுமே அவளுக்கு.

நம்ம பொண்ணுக்காக இவ்வளவு உறுகுறானே இவனை விட வேற எவன் பொருத்தமான மாப்பிள்ளை? உள்ளுக்குள் நினைத்து பெருமிதம் கொண்டார் வேதம். வெளியில் சொல்லிவிட முடியாதே… அவருக்கு அமைந்த முசுட்டு கணவர் அப்படி.

 பல மணித்தியாலங்களாய் சாய்வு நாற்காலியில் சரிந்து இருந்த வெங்கிக்கு இன்னும் கழுத்தில் கத்தி இருப்பது போன்ற குறுகுறுப்பு. மூடிய இமைக்குள்ளும் பிடரியை குலுக்கி பீடு நடை போடும் சிங்கமென அவன் முகம். ஏதேதோ யோசித்து சிந்தையில் ஆழ்ந்தவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

“—————–”

 மறுநாள் காலையிலேயே பெட்டி படுக்கையுடன் வந்து இறங்கினால் சந்திரவதனி ஹாய் அத்தான் என்று விஷ்ணுவை தழுவ முற்பட்டவளை ஒற்றை பார்வையாலே தள்ளி நிறுத்தினான் விஷ்ணு.

 ஹேய் வதனி நீ எப்போ வந்த? பரவாயில்லையே அத்தான் கல்யாணத்துக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய முன்னாடியே வந்துட்ட போல.. விஷம புன்னகை பூத்தான்.

 முகம் கருத்து போனவளை ஜோதி சமாதானம் செய்து அத்தானிடம் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இன்னும் அவன் அந்த எடுபட்டவளுக்கு தாலி கட்டலை, இன்னும் கூட உனக்கு டைம் இருக்கு! என்று உசுப்பி விட்டார்.

மதியம் லஞ்சுக்கு வீட்டுக்கு வந்த விஷ்ணுவிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள் சந்திரவதனி.

அத்தான் என்னை ஏன் உங்களுக்கு பிடிக்காமல் போச்சு?வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.

 உன்னை பிடிக்காதுன்னு சொன்னேனா?

 நீ என் மாமா பொண்ணு. நாம ஒன்னா வளர்ந்தவங்க ஒன்னா ஓடிப் பிடித்து விளையாடி இருக்கோம். உன்னை பிடிக்காமல் இருக்குமா?

 உனக்கு இந்த கிராமத்து வாழ்க்கை செட்டாகாது வதனி.

 உனக்கு எல்லாம் தெரியும்! நான் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஊரை விட்டு என்னால் நகர முடியாது.ஒரே ஒரு நாள் உன்னால் இந்த ஊரில் தாக்குப் பிடிக்க முடியாமல் புலம்புற.நீ எப்படி காலம் முழுக்க இந்த கிராமத்தில் இருப்ப?

 நேத்ரா கூட சிட்டியில் வளர்ந்தவ தானே?

 இருக்கலாம்… என் மேல் உள்ள காதல் அவளை அனுசரித்து போக வைக்கும்!

இருந்தாலும் அத்தான் நாம மேரேஜ் பண்ணிக்கிட்டா ரெண்டு பேமிலிக்கும் ஹாப்பியா இருக்கும். அவள் ஏமாற்றத்தில் வலி தந்த விழி நீரை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

கல்யாணம் என்பது குடும்பத்துக்காக மட்டும் இல்லை. இரு மனசு இணைவது தான்

 எனக்கு நேத்ராவை பிடிச்சிருக்கு வதனி. அவ எனக்கு பொருத்தமா இருப்பான்னு என் மனசு சொல்லுது.

கூடிய சீக்கிரமே உன்னோட டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி ஒருத்தன் அமைவான்.

 அவ்வளவு தான் என்பதாய் “கை கழுவி” எழுந்து போனான்.

இவனுக்கு மயங்கி இந்த பட்டிக்காட்டில் குப்பை கொட்ட தன்னால் ஆகாது என்று தலையை சிலுப்பிக் கொண்டாள்.

“———————-’

 மாலை ஐயர் வந்தார் மஞ்சள் வண்ண பாம்பு பஞ்சாங்கத்தை பிரித்து நாள் பார்க்க தொடங்கினார்.

 இந்த மாசத்துலையே ஒரு நல்ல நாளா பாருங்க! என்றார் அன்னம்.

கிழவிக்கு என்ன அவசரம்? மனதில் வறுத்தெடுத்தார் ஜோதி.

 நிச்சயம் பண்ண வேண்டாமா?

நேரடியா கல்யாணமா முடிச்சுடுவோம். எண்ணத்துக்கு அதுக்கு வேற கூட்டம் சேர்த்துக்கிட்டு? கையோட ஆனியிலே கல்யாணமே முடிச்சிடலாம் என்றார்.

 பொண்ணு வீட்ல ஒரு வார்த்தை கேட்கணுமே… வேணு மகன் முகம் பார்த்து கொஞ்சம் இழுவையாய் கேட்டார்.

 நாம பார்த்து சொன்னா சரிதான்!ஒரே போடாக போட்டான் விஷ்ணு.

 ஆனி 11 ஆனி 24 இரண்டு சுப முகூர்த்தம் இருக்கு.உங்களுக்கு எது தோத்துப்படும்? என்றார் ஐயர்.

ஆனி 24 ஓகே பா! என்றான் விஷ்ணு.

 கல்யாண என்ற சொல்லே ஆகாது என்ற பய இப்படி ஒத்தக்காலில் நிற்கிறானே…!கறுவினார் ஜோதி.

ஆனி 24 ஓகே. அதுக்கு நாள், நட்சத்திரம்,லக்னம் பார்த்து குறிச்சிடுங்க என்றார் வேணு.

எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி ஜோ”தீ “ ஒருவரை தவிர.

“—————–”

 விஷ்ணு முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. மாப்பிள்ளை கலை இப்போதே வந்துவிட்டது என்றார் அன்னம்.

 அத்தான் நான் நேத்ரா போட்டோ பார்க்கலாமா? சங்கோஜமாய் கேட்டாள் வதனி. அவளுக்கு உள்ளுக்குள் அவ்வளவு புகைச்சல். அப்படி என்ன அவள் தேவலோக ரம்பையா? என்ற கடுகடுப்பு.

வை நாட்? பார்த்துட்டா போச்சு! அவளை அருகில் அழைத்து மொபைலில் சேமித்து வைத்திருக்கும் நேத்ராவின் புகைப்படங்களை காட்டினான்.

 ஆளு சோக்காத்தான் இருக்கா… அதுதான் இந்த பட்டிக்காட்டான் கவுந்துட்டான் போல! மனதிற்குள் புகைந்து, வெளியில் சிரித்தாள்.

 இனி நமக்கு இங்கே என்ன வேலை? இந்த அத்தை பேச்சை கேட்டு வந்தது வேஸ்ட்…என்று புலம்பிக் கொண்டு பெட்டியை கட்டினாள்.

“—————-”

 இரவு 10 மணிக்கு மேல் சுரேந்தரின் பொலிரோ தேசிய நெடுஞ்சாலை 542 ல் ராக்கெட்டு போல் சீறி பாய்ந்தது.

 கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை… அதிக போக்குவரத்தற்ற சாலையில் கார் வழுக்கி ஓடியது.

 விருத்தாசலம் வேப்பூர் கடந்து தலைவாசலுக்கு முன்பாக காளசமுத்திரம் என்ற இடத்தில் வெள்ளை நிற டவேராவை கடந்து சென்று குறுக்கே போய் நின்றது.

மூர்க்கனாய் துள்ளி குதித்து இறங்கிய விஷ்ணு டவேரா கதவை எட்டி உதைக்க…

சிவந்த கண்ணுடன் அச்சம் மறைத்து தடதடவென்று நடுங்கி கொண்டே இறங்கினார் வெங்கடாசலம். பின்னே நேத்ரா வாடிய முகத்துடன் இறங்கி நின்றாள்.

நினைச்சேன்… இப்படி தெலுங்கு படத்து சீன் எல்லாம் ஓட்டுவேன்னு தெரியும்!

 நான் கல்யாணத்துக்கு நாள் குறிச்சு இருக்கிறேன். நீ எஸ்கேப் ஆக பார்க்கறியா?

 தம்பி அது…வேதம் விளக்கம் சொல்ல முயன்றார்.

 வேண்டாம் என்பதாக கைநீட்டி தடுத்தவன் நீங்க எங்க வேணா போங்க.. எனக்கு சொந்தமானவளை என்கிட்ட ஒப்படைச்சிட்டு போங்க!

 எதுவும் செய்ய முடியாத நிலையிலும் தீப்பார்வை பார்த்தார் வெங்கி.

அப்படி என்னய்யா உனக்கு வெட்டி கௌரவம்?

ஒத்த பொண்ணு பெத்து வச்சிருக்க..அதை மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விடுவியா, அதைவிட்டுட்டு சொந்தக்காரன் என்று சொல்லி எவனுக்கோ கட்டிக் கொடுத்து அவ என்னை நினைத்து அவன் கூட வாழாம போயிட்ட என்னையா பண்ணுவ?

ஆக்ரோஷத்தில் கழுத்து நரம்புகள் புடைத்து வெடித்து விடுமோ என்ற அளவிற்கு துடித்தது.

மலர்ந்த முகத்தை தகப்பனிடம் காட்டாது குனிந்து கொண்டாள் நேத்ரா.

 இப்படி கலாட்டா பண்ணினா நான் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும் என்றார் வெங்கி.

 நான் பார்க்காத கேஸா, போலீஸ் ஸ்டேஷனா? நீ எங்க வேணா போய் கம்ப்ளைன்ட் பண்ணு.

 ஆமா என்னன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவ? கூலாக கேட்டான்.

 அடுத்து என்ன பேசுவது என்று அறியாமல் வெங்கி மலங்க மலங்க பார்க்க… மச்சி லேட்நைட் ஆகுதுடா என்றான் கொட்டாவி விட்டபடி வாசு.

 மச்சி எனக்கு பசிக்குது. ஹைவேஸ் ஹோட்டலில் பரோட்டா எதுனா வாங்கி கொடுடா என்றான் சுரேன்.

சரி,நேத்ரா வா! அவள் கரம் பற்றினான்.

 அவள் தந்தையை பயத்துடன் பார்க்க…நாங்க கூட்டிட்டு வறோம் தம்பி, தடுமாறினார் வேதம்.

 திரும்பி அழுத்தமாய் முறைத்தவள் நான் அவளை கூட்டிட்டு போறேன் நீங்க பின்னாடியே வாங்க அவள் கரம் பற்றி இழுத்துப் போனான்.

 சுரேன், பாலாக்கு இப்போவே போன் பண்ணி முகூர்த்தம் ஆனி 24 இல்லை ஆனி பதினொன்னுன்னு இன்விடேஷன் மாத்தி பிரிண்ட் பண்ண சொல்லு!

 என்னடா இப்போவா?

சொன்னதை செய்! சீறினான்.

இன்னும் பத்து நாள் கூட இல்லையடா… வாசு வாய் பிளந்தான்.

பத்து நாள் அதிகம் மச்சி. அவன் சொந்த மண்டபமே சேத்தியாதோப்பில் ரெடியா இருக்கு. ஷாப்பிங் ஒரு நாள், இன்விடேஷன் டிஸ்ட்ரிபியூஷன் நாலு நாள்,மேளம், தாம்பூலம் கேட்டரிங் அரேஞ்ச்மெண்ட்ஸ் பிரண்ட்ஸ் நாம பாத்துக்கலாம். நரேன் சொல்லி முடிக்க…வெங்கி முகத்தில் ஈடவில்லை.

சாலையோர உணவு விடுதி ஒன்றில் நிறுத்தி அகோரப்பசியை தனித்தனர்.

நேத்து என் மேல கோபமா? அவள் கரம் பற்றினான்.

எங்கப்பாவை ரொம்ப மரியாதை குறைவா பேசறீங்க…மூக்கு விடைத்தது அவளுக்கு.

அடிங்…உங்கப்பன் பண்றதுக்கு வெஞ்சாமரம் வீசி சிம்மாசனத்தின் ஏத்தி வைப்பாங்களோ?

அதுக்கு…? இப்படி தான் வயசுல பெரியவரை மரியாதை இல்லாம…

ஏய் காரை நிறுத்துடா! போ…போடி…உங்கப்பன் கூடவே போ! அந்தாளு கை காட்டுற மாப்பிள்ளையை கட்டிக்கோ தோளில் கைப்போட்டு தள்ளினான்.

மச்சி டென்ஷனை குறை. பாரு அந்த பொண்ணு பயப்படுது.. வாசு அடக்கினான்.

யாரு…இவ பயப்படுறாளா? என்னை விட்டு எஸ்கேப் ஆக பார்த்திருக்கா…இவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்.

டேய் விடுடா…. அந்த பொண்ணை எதையாவது சொல்லி குத்தி காட்டிட்டே…சுரேன் டென்ஷனாகி கத்தினான்.

ஓசையின்றி அழுதவளை பார்க்க மனசு பிசைந்தது. ஆறுதல் கொடுக்க எண்ணி அவள் கரம் பற்றினான். விசுக்கென்று கோபமாய் தட்டிவிட்டாள்.

வேகமாய் இழுத்து தன் தோளில் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டான்.

 வடலூர் வந்து விடவே… நீங்க வீட்டுக்கு போங்க,நேத்ரா சுரேன் வீட்டில் இருக்கட்டும் என்றான் வேதத்திடம்.

 என்ன பேசுற நீ?எவன் வீட்டுக்கோ என் பொண்ணை கூட்டிட்டு போறேன்னு சொல்ற. இயலாமையிலும் ஆத்திரத்திலும் கத்தினார் வெங்கி.

உஷ்… இப்போ எதுக்கு இப்படி கத்துற… கத்துறீங்க? சுரேன் எவனோ இல்லை என் உயிர் நண்பன்.

 நாளைக்கு இன்விடேஷன் ரெடி ஆகி வந்துடும். நீங்க கல்யாண வேலை பார்க்க அங்கே இங்கே அலையணும்,அங்கே நேத்ரா தனியா இருப்பாளா?

அதுக்கு?என் பொண்ணை உன் பிரண்ட் வீட்டுக்கு அனுப்புவியா?

 சரி என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்!எப்படியும் கல்யாணம் ஆகி அங்கே தானே வரப்போறா? இப்பவே வரட்டும்!

 எதுவும் பேச முடியாது. துக்கம் கோபம், விரக்தி என்று சரிவிகித கலவையுடன் தலையைப் பிடித்துக் கொண்டார் வெங்கி.

 சார் நேத்ரா என் தங்கை. என் வீட்டில் என் தங்கை அனு இருக்கா,என் வைஃப் தீபிகா இருக்கா,உங்க பொண்ணு பாதுகாப்பா இருப்பா. சுரேன் வாக்கு கொடுத்தான்.

“——————–”

 மகள் விரும்பியவனுடன் அவளுக்கான வாழ்க்கையை வாழப் போகிறாள் என்று உணர்ந்து கொண்ட வேதம் ஒரே பெண்ணுக்கு குறைவில்லாமல் சீர் செய்ய வேண்டும் என்றார்.

 மகளுக்காய் சேர்த்து வைத்த 100 பவுன் நகை, வெள்ளி பாத்திரங்கள், வைர நகைகள் என்று எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்.

விஷ்ணுவின் நண்பர்கள் குழு பம்பரமாய் சுழன்று தீயாய் வேலை பார்த்தனர்.

 பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்டமாய் திருமண ஏற்பாடுகளை செய்தார் வேணு.

 வினிதாவிற்கு நேத்ராவை பார்த்த மாத்திரமே பிடித்து விட்டது.அஸ்வியாவுமே அண்ணன் செலக்ஷனை மனதார பாராட்டினாள்.

 ஜோதியை யாருமே கணக்கில் கொள்ளவில்லை. அவரது பிறந்த வீட்டினர் தஞ்சாவூரில் இருந்து வந்தவர்கள் ஜோதியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றனர்.

 முகூர்த்த பட்டு வாங்க, மாங்கல்யம் செய்ய எதற்குமே அவர் வரவில்லை.

 மாப்பிள்ளையை பெத்தவளா வந்து சபையில் நில்லு! இல்லைன்னா உனக்கு தான் அது அசிங்கம். என்று வேணு இறுதியாய் எச்சரித்தார்.

 வேதாவிற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். மாப்பிள்ளை கண்ணுக்கு லட்சணமாய் இருக்கிறார். ஊருக்குள் பெயர் பெற்ற பெரிய குடும்பம். அவருக்கு பூரிப்பாய் இருந்தது.

 மிகவும் கோலாகலமாக திருமண வைபவம் நடந்தேறியது.

 தேவ கன்னிகையாய் தன் அருகில் அமர்ந்திருந்தவளைக் கண்டு பூரித்துப் போனான் விஷ்ணு.

 நடக்குமா என்று ஏங்கிய தருணம்…இதோ தன் உள்ளம் கவர்ந்தவனுக்கு சொந்தமாக போகிறோம் என்ற மகிழ்வில் கண்ணீர் பெருக அமர்ந்திருந்தாள் நேத்ரா.

என்னதான் விருப்பம் இல்லை என்று சொல்லிக் கொண்டாலும் ஜோடி பொருத்தம் கண்டு மனம் நிறைந்தார் வெங்கி.

 வேண்டா வெறுப்பாய் நின்று பாத பூஜை செய்து கொண்டு அட்சதை தூவினர் ஜோதி.

 தன் செல்ல பேரனின் மணக்கோலம் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் அன்னம்.

 கெட்டி மேளம் முழங்க முன்னோர்,மூத்தோர், உற்றார், பெற்றார் ஆசியுடன் திருமாங்கல்யம் பூட்டினான் விஷ்ணு.

நேத்ரா தன் திருமண கதையை சொல்லி முடிக்க குழுமி நின்ற கன்னியர் கூட்டம் ஓஹோ என்று கும்மாளமிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!