Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 2

காலை எழுந்து தன் தினப்படி வழக்கமான உடற்பயிற்சியை முடித்து விட்டு கையில் கிரீன் டீயுடன் பால்கனியில் இருக்கும் ஒரு பீன் பேகில் தளர்வாக அமர்ந்தாள் ரேஷ்மா.

டீயைக் குடித்தபடி , கொஞ்ச நேரம் இப்படி ஆசுவாசப்படுத்திக் கொண்டு விட்டு,

பின் லாப்டாப்பில் அவளுக்கு வந்திருக்கும் தனிப்பட்ட ஈ மெயில்களை பார்வையிட்டாள்.

பெரும்பாலானவை அவளின் பிஏவாலேயே பதில் அளிக்கப்பட்டு விட்டு, இவளின் வெறும் பார்வைக்கு மட்டுமே!



Advertisement

பெரும்பாலும் அவள் தான் செய்ய வேண்டும் என்று எந்த வேலையுமே அவள் பிஏ மதுரா மேம் வைப்பதில்லை!

காலையில் எழுந்து, இப்படி தன் தனிப்பட்ட காலை வேலைகள் மட்டுமே அவள் செய்வது.

வந்த மெயில்களையும், அவற்றுக்கு மதுராவால் அனுப்பட்ட பதில்களையும் ஒரு முறை பார்த்து விட்டு,

Advertisement

கொஞ்ச நேரம் நெட்டில் ஃபேஷன் சைட்களில் உலாவினாள்.

Advertisement

பின் எழுந்து குளித்து விட்டு வந்தவள், மிகவும் எளிமையான காய்கறி சாலட் ஒன்றை அவளே கலந்து சாப்பிட்டு விட்டு,

தன் காரில் அலுவலகம் கிளம்பினாள்.

ரேஷ்மா ஒரு பெண் தொழிலதிபர்.

Advertisement

அவள் குடும்ப சொத்தாக இரண்டு பெரிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இருந்தன.

குழந்தைகளுக்கான உடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள்!

அதை அவள் பெற்றோர் மறைவுக்குப் பிறகு, அவளும் அவன் அண்ணன் ரேவந்தும் தான் நிர்வகிக்கிறார்கள்.

அப்பாவின் உயிர் நண்பரான ஆடிட்டர்  ராமநாதன் மேற்பார்வையில், வழிகாட்டுதலில்!

ஒன்று திருப்பூரில் ஒன்று சென்னையில்!

ஆரம்பத்தில் ரேவந்த் சென்னையிலும் ராமநாதன் திருப்பூரிலும் இருந்து கொண்டு நிர்வாகம் செய்து கொண்டிருந்தனர்.

வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தாலும் இப்போது ராமநாதன் சென்னையில் இருக்க,

அவருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு, ரேவந்த் தான் இரண்டு நிறுவனத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்!

இதில் ரேஷ்மாவின் பங்கு ஆடை வடிவமைப்பில் தான்!

அத்துடன் அவளின் ஆசைக்காக என்று அவள் ஆரம்பித்து இருக்கும் இன்னொரு பிராண்ட்.

 Reshma Reva – இளம்பெண்களுக்கான நவ நாகரிக உடைகள்!

அவை நவீனமாகவும் இருக்கும், நம் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கும் படியான இந்தோ வெஸ்டர்ன் வகை உடைகள்!

அதன் உற்பத்தியும் அந்த இரு ஃபேக்டரிகளில் தான் நடக்கிறது!

ரேஷ்மா ஒரு இளம் பெண் தொழிலதிபர் மட்டுமில்லை!

அவள் ஒரு ஃபேஷனிஸ்டா(Fashionista)!

நவநாகரிக உடை நிபுணர்.

ஃபேஷன் உலகின் புதுப்புது ட்ரெண்டுகளை நன்கு அறிந்து கொண்டு, அதற்கேற்ப புதுப் புது டிசைன்களில் நவ நாகரிக ஆடைகளை தானே வடிவமைத்து,

தானே அணிந்து வந்து, அழகாகவும் தன்னம்பிக்கையாகவும் தன்னை வெளிப்படுத்தி, அந்த உடைகளைப் பிரபலபடுத்துபவர்கள் தான் இந்த பேஷனிஸ்டா பெண்கள்!

அவர்கள் உடையலங்கார ட்ரெண்ட் செட்டர்ஸ் ஆகவும் இருப்பர்.

ஆனால் தொழில்முறையில் அவர்கள் மாடல்கள் இல்லை!

மாடல்கள் உடைகளை அணிந்து வந்து விளம்பரம் மட்டுமே படுத்துவார்கள்.

அதை வடிவமைப்பதில் அவர்கள் பங்கு இருப்பதில்லை!

மேலும் அவர்கள் வர்த்தக நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு பணி செய்பவர்கள்!

இருவருக்குமே ஃபேஷன் உலகில் தான் வேலை என்றாலும் இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது!

அந்த வகையில் ரேஷ்மா புதுப் புது உடைகளை வடிவமைத்து, தானே அதை அணிந்து கொண்டு வந்து,

அவளின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்து, அந்த உடைகளை ப்ரமோட் செய்பவள்!

மேலும் இவையெல்லாம் அவளின் சொந்தக் கம்பெனி தயாரிப்புகளுக்கு மட்டும்!

வெளி நிறுவனங்களுக்கு அல்ல!

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,

A Fashionista of her own brand – Reshma Reva!

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், 80’களில் நடித்த நடிகை நதியாவை சொல்ல வேண்டும்!

ஒரு ஸ்டைல் ஐகான்!

அந்த காலத்தில் இளம்பெண்கள் எப்படி நதியா அணிந்து வரும் உடைகளை, ஹேர் ஸ்டைலை, கம்மல் போன்ற நகைகளை பின்பற்றி அணிந்தார்களோ,

இப்போது அது போல ரேஷ்மாவின் உடைகள் இளம்பெண்கள் மத்தியில் பிரபலம்!

நாகரிகமாகவும் அதே சமயம் கண்ணியமாகவும் இருக்கும் ஆடை வடிவமைப்புகள் அவளின் தனித்துவம்!

கல்லூரி பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், கார்பரேட் பெண் அதிகாரிகள், இளம் பெண் தொழிலதிபர்களின் விருப்பமான தேர்வு அவளின் பிராண்ட்!

அது மட்டுமில்லாமல் நல்ல ஒரு ப்ரக்யூர்மென்ட் டீமின் உதவியுடன் நல்ல ப்ரீமியம் தரத்தில் இருக்கும் டிசைனர் புடவைகள்,

பாரம்பர்யத்தோடு நாகரிகமும் கலந்த ஃபியூஷன் வகை பட்டுப்புடவைகளை தருவித்து,

ஸாரி ஃபார் ஸ்ரீமதிஸ் என்று எக்ஸ்க்ளுசிவ் பொட்டிக் ஒன்றையும் நடத்தி வருகிறாள்.

அதற்கு சினிமா, டெலிவிஷன் மற்றும் கர்னாடக இசைப் பிரபலங்கள் தாம் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள்!

இப்படி நாள் முழுவதும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் இளம்பெண்!

ஆனால் வீட்டில் தான் யாரும் இல்லை! அவளைக் கவனித்துக் கொள்ளவென்று.

அண்ணன் ரேவந்த்,  அவள் ஆசைப்பட்டு, அந்த வானத்து சந்திரனைக் கேட்டால் கூட வாங்கி கொடுத்து விடுவான் அவன் தங்கைக்கு!

ஆனால் பாவம் அவனால் அவன் நேரத்தை மட்டும் கொடுக்க முடியவில்லை!

அவ்வளவு பொறுப்புகள் கடமைகள் அவன் தலையில்!

அதனால் அவனை அவளும் பெரும்பாலும் தொந்திரவு செய்வதில்லை!

அவள் அம்மா ஸ்ரீமதி இருந்தவரை அவள் அம்மா செல்லம் தான்!

ஆனால் அது நிலைக்க வில்லை!

இன்று நினைத்தாலும் அவள் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துவிடும்.

ஒரு தொழில்முறை பயணமாக அமெரிக்கா சென்றவர்கள், ஃபிளைட் ஏறும் முன்பு வரை போனில் பேசியவர்கள்,

அடுத்த சில நிமிடங்களில்  விபத்தை சந்தித்தார்கள்!

அம்மா சம்பவ இடத்திலேயே இறந்திருக்க, அப்பா சித்தார்த் ஒரு வாரம் ஐசியூவில் இருந்து விட்டு இறந்தார்.

அப்போது தான்  ரேவந்த் எம்பிஏ முடித்து இருந்தான். ரேஷ்மாவோ ப்ளஸ்டூ முடித்து விட்டு ஃபேசன் டிசைனிங் சேரக் காத்திருந்தாள்!

அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது!

சாகும் போது, “நீ பார்த்துக்கடா ராம்” என்று நண்பரின் கையில் குழந்தைகள் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கண் மூடியிருந்தார் சித்தார்த்!

ரேவந்த், ரேஷ்மா இருவருமே அப்போது மேஜர் தான் என்பதால், சட்டப்படியான கார்டியன் என்று ராமநாதன் இல்லை!

ஆனால் கூட இருந்து அத்தனையும் பார்த்துக் கொண்டார்.

சொத்துகளைக் காப்பாற்றிக் கொடுத்தார்.

ஃபேக்டரி நிர்வாகம் சீர்குலையாமல் பார்த்துக் கொண்டார்.

தேவையில்லாத ஆட்களை அப்புறப்படுத்தினார்.

அவர்கள் சொந்தக்காரர்களே என்றாலும் கூட பல்வேறு விசாரிப்புகளுக்கு பிறகே அனுமதித்தார்.

பவுன்சர்கள் போன்ற காவல் ஆட்களை கூட இருக்கும் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்.

அவரின் இத்தகைய நடவடிக்கைகளால், தீய எண்ணத்துடன் அவர்களை நாடுபவர்களை களைந்தார்!

ஆனால் அதில் சில நல்ல உறவுகளும் களையப்பட்டு பிரிந்து பின் விலகி போய் விட்டது விதி!

மொத்தத்தில் இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே உறவு!

ஸ்ரீமதி சித்தார்த்தோடு வாழ்ந்த அவ்வளவு பெரிய வீட்டில்,

அடிக்கடி அண்ணனும் திருப்பூர் சென்று விடும் நாட்களில் தனிமையை உணர்ந்த ரேஷ்மாவுக்கு அவள் ஆபிஸ் அருகிலேயே ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு டபுள் பெட்ரூம் ஃபிளாட் வாங்கி விட்டார்கள்!

இப்போது அண்ணனும் தங்கையும் அதில் தான் இருக்கிறாகள்

வீடு இப்படி வெறுமையாக இருக்க, ரேஷ்மாவின் ஆபிஸோ ஒரு கார்பரேட் ஆபிஸ் போல இல்லாமல் ஒரு குடும்பம் போல இருந்தது!

காரணம் மதுரா!

அவளுக்கும் அப்பா அம்மா உயிருடன் இல்லை.

இரு தங்கைகள் மட்டுமே.

அதில் பெரிய தங்கைக்கு மதுரா ஒரேடியாக பிடிவாதம் பிடித்து சாம பேத தான தண்டம் அத்தனையையும் உபயோகித்து

தனக்கு முன்னரே முதலில் அவளுக்குத் திருமணம் செய்து அமெரிக்கா அனுப்பி விட்டாள் மதுரா!

இப்போது அவளும் கல்லூரி மாணவியான அவளின் குட்டித் தங்கையும் மட்டுமே அவள் வீட்டில்.

எல்லோரையும் அன்புடன் அதே சமயம் கண்டிப்புடன் பார்த்துக் கொள்வாள் மதுரா.

அவளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு கேரிங், மெனக்கிடல் இருக்கும்!

கூடவே அதிகார குரலும் மிரட்டலும் இருக்கும்!

அவளுக்கு மென்மையாக பேசவெல்லாம் வரவே வராது!

தப்பு கண்டு விட்டால், அல்லது அவள் சொல் பேச்சை கேளாவிட்டால், பெரும்பாலும் அவை நல்லதுக்காக தான் இருக்கும்,

அவற்றை கேளாவிட்டால் சட்டென்று யாரென்றும் பார்க்காமல் கையை ஓங்கி விடுவாள்.

சிறு வயதில் இருந்தே இரண்டு தங்கைகளை தாய் ஸ்தானத்தில் இருந்து கோழி அடைக்காப்பது போல பாதுகாத்து, வளர்த்து வந்ததால் தானே உருவாகி விட்ட சுபாவம்!

ஆனால் அடிக்கிற கை தான் அணைக்கும் என்பது போல, வேலைப் பார்ப்பவர்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்டு,

அவர்களின் இக்கட்டு காலங்களில் தானே வலிய வந்து கேட்காமலே கூட உதவியும் செய்பவள்!

அதனால் தான் அவள் இப்படி திட்டினாலும், ஏன் அவள் அறையவே செய்து இருந்தாலும் யாரும் அவள் மேல் புகார் அளித்தது கிடையாது!

ரேஷ்மாவுக்கு, அவள் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருப்பதால் வரும் தொல்லைகளை எல்லாம் மதுரா உதவியுடனே தான் சமாளிக்கிறாள்!

ரேஷ்மாவின் தேவைகள் உணர்ந்து, மூட் அறிந்து செயல்படுபவள்!

ரேஷ்மாவைப் பற்றிய அனைத்தும் அவள் விரல் நுனியில்!

ஏன் அவளின் பீரியர்ட் சைக்கிள் கூட அவளுக்கு தெரியும்!

அவளின் ஆரோக்கியம் பற்றி தெரியும்.

மொத்தத்தில் ரேஷ்மாவின் காவல் தெய்வம், பரிவார தெய்வம், தளபதி போல செயல்படுவாள் மதுரா!

சில சமயம் தாயாகவும்!

ஒரு முறை, “அடுத்தடுத்து மீட்டிங்க்ஸ் இருக்கு, ஆனா தலை வலிக்குது.  வேற வழியில்லை” என்று ரேஷ்மா தொடர்ந்து டோலோ மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தாள்.

மதுரா எவ்வளவோ தடுத்தும் கேளாமல்!

ஒரே நாளில் மூன்றாவது முறையாக அவள் மாத்திரை போட போன போது, அதை தடுத்தாள் மதுரா.

ரேஷ்மா கேட்காத போது, சம்பளம் கொடுக்கும் முதலாளி என்றும் பாராமல், விட்டாள் ஒரு அறை!

அறைந்து விட்டு, மாத்திரையை பிடுங்கி எறிந்தவள், தன் கைப்பையில் இருந்து பச்சை நிற திரவ தைலத்தை எடுத்து வந்து ரேஷ்மாவின் நெற்றியில் தடவி விட்டு,

போய் அவள் வேலையை தன் லாப்டாப்பில் தொடர்ந்தாள்.

ரேஷ்மாவுக்கு பயங்கர கோபம் வந்து விட்டது!

ஏற்கனவே தலைவலி, இப்போது மதுராவின் செயலால் கோபம் ஆனவள், அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

விரல்கள் தைலத்தை தடவிக் கொண்டு இருந்தன.

சிறிது நேரத்தில் தலைவலியும் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது அவளுக்கு.

நேராக மதுராவிடம் சென்றவள்,

“எழுந்துருங்க மொதல்ல..” என்று அவள் கையைப் பிடித்து எழுப்பினாள்.

“சாரி.. நான்.. உங்க கிட்ட என் சிஸ்டர்கிட்ட பண்ற மாதிரி நடந்துகிட்டேன். என்ன இருந்தாலும் நான் பண்ணினது தப்பு தான்!”

“உங்கள நான் எழுந்து வாங்கன்னு சொன்னேன்” என்றவள் மதுராவின் கையைப் பிடித்து அழைத்து சென்று , அங்கு இருந்த சோபாவில் அமர வைத்தாள்.

மதுரா ஒன்றும் புரியாமல் பார்க்க, டக்கென்று அவள் மடியில் தலை வைத்துக் கொண்டு படுத்து விட்டாள் ரேஷ்மா!

“என்னையும் உங்க சிஸ்டரா நினைச்சுக்கோங்க” என்றபடி!

மதுராவின் விரல்கள், தன்னைப் போல அவளின் நெற்றியில் நீவி விட்டன, “இப்படி தான் எங்க லக்கிக்கு பண்ணுவேன். தலைவலி சரியாகிடும்!” என்றாள் மதுரா.

இதோ, அவளின் கூட்டுக்குள் இன்னொரு தாய் தந்தையில்லா குருவி! சேர்த்துக் கொண்டாள் மதுரா!

சேர்ந்து கொண்டு விட்டாள் ரேஷ்மாவும்!

நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டே காரை செலுத்தியவள், அவள் போன் அடிக்கவும் கார் ஓட்டிய படியே ஸ்பீக்கரில் பேசினாள்.

மதுரா தான்!

“இதோ கிளம்பிட்டேன். வந்துட்டே இருக்கேன்.”

“பத்தரைக்கு மிஸ்டர் யுவநிலவனோடு மீட்டிங் இருக்கு. அவர் வந்துட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கார். கொஞ்சம் இயர்லியரா வந்துட்டார் போல!”

“ஓ.. தட் யுவி.. அண்ணாவோட ஸ்கூல்மேட்!” அவன் முகத்தை நினைவுப் படுத்தி பார்த்தாள் நினைவுக்கு வரவில்லை!

“இவன் கிட்ட என்ன சொல்லி அனுப்பினாங்களோ!

அண்ணன் வேற உன் பிஏவை அவன் கிட்ட நல்லபடியா ரெஸ்பெக்டா நடந்துக்க சொல்லு! யுவி என் திக் ஃ பிரன்ட்!

உன் பிஏ பெரிய ரவுடி பொம்பளயாம்மே அவங்க!” என்றான் ரேவந்த். அப்படி ஒரு பிம்பம் தான் அவனுக்கு.

இன்னும் மதுராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை அவனுக்கு!

“யார் சொன்னா அப்படி?”

“ஜெயந்த் தான் சொன்னான்!”

ஜெயந்த், ராம் அங்கிளின் மகன்!

ரேஷ்மாவைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவன்!

அவள் பின்னால் சுற்றுபவன். சரியான ஜொள்ளு பார்ட்டி. இதற்கு அவன் அம்மாவின் ஆதரவு வேறு!

பெண்கள் இருவருக்குமே புரியவும் செய்தது!

ராம் அங்கிள் முகத்துக்காக ரேஷ்மாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை!

ஆனால் மதுராவால் முடிந்தது!

அவனைத் தள்ளி நிறுத்தினாள்.

“மேம்.. நான் அவரை விடவே மாட்டேன் உங்க கிட்ட.

உங்க கிட்ட கம்ப்ளைண்ட் வரும்! வந்தா அவர் முன்னாடி ரெண்டு திட்டு என்னைத் திட்டிடுங்க. பார்த்துக்கலாம்!”

ட்ராமா பண்ண ஆரம்பித்தார்கள் இரு பெண்களும்!

ஜெயந்திடம் மட்டுமில்லை. மற்ற தேவையில்லா ஆணிக்களுடனும்!

ரேஷ்மா செலிப்ரிட்டியாக இருப்பதால், யாரையும் ஒன்றும் நேரிடையாக திட்டக் கூட முடியாது!

ஆனால் மதுரா செய்வாள்!

ஒருமுறை ரேஷ்மாவை ஒரு பார்ட்டிக்கு அழைத்து செல்ல பிடிவாதமாய் ஜெயந்த் வந்து நின்ற போது,

மதுரா அவள் அறைக்கு செல்லவே அனுமதி மறுத்தாள்.

அவன் மேலும் வாதிட்ட போது,

அவள் மாதேஷை அழைத்து ஜெயந்த் பார்க்க ஒரு அறை விட்டாள் அவனை!

“ஒரு வாட்டி சொன்னா புரியாது! சோறு தானே தின்ற? அறிவில்ல உனக்கு?” என்று மேலும் திட்டிக் கொண்டே மாதேஷ் அருகில் வந்தவள்,

“டேய்.. அக்காவை மன்னிச்சு.. எல்லாம் ஒரு ட்ராமா.. கோ ஆபரேட் பண்ணு.

உன்னை ஈவனிங் ஃபிரைடு சிக்கன் சாப்பிட் கூட்டிட்டுப் போறேன்” என்றாள் காது அருகில் மெல்லமாக!

ஜெயந்திற்கு ஏதோ ட்ராமா என்று புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை!

காலை உதைத்து ஆங்கில கெட்டவார்த்தை ஒன்றை சொல்லி விட்டு கிளம்பினான்!

கிளம்பியவன் ரேவந்த்க்கு போனைப் போட்டு மதுராவை பற்றி போட்டுக் கொடுத்து விட்டான்!

“பிஏவை அப்பாயின்ட் பண்ண சொன்னா ஒரு பவுன்சரை பிஏவா வச்சுருக்கா உன் சிஸ்டர்!

பார்த்து நடந்துக்க சொல்லு அந்த கண்ணாடிக் காரியை!” என்றான் கோபமாக!

“ராம் அங்கிள் டைரக்ட் அப்பாயின்மென்ட் அவங்க! நான் ஒண்ணும் பண்ண முடியாது” என்றான் ரேவந்தும்!

அது முதல் ரேவந்த் அவன் நெட்வொர்க்கில் இருந்து யாராவது ரேஷ்மாவைக் காண அனுப்பினால், கூடவே மதுராவைக் குறித்தும்

எச்சரித்து தான் அனுப்புவான்! அவங்க கிட்ட ரொம்ப பேச வேண்டாம் என்று!

இப்போ இந்த யுவியிடம் என்ன சொல்லி அனுப்பி இருக்கானோ?

என்று நினைத்துக் கொண்டு எழுந்த சிரிப்பை உள்ளுக்குள்  அடக்கிக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள் ரேஷ்மா!

யுவி என்ன சொல்லுவான் மதுராவைப் பற்றி ரேவந்திடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!