Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 12

அன்பு – 12

“பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…
நான் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி…
படிதாண்ட துடிக்கும் பருவ பட்சி…”

என தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாடலுடன் சேர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டே, தலையைப் பின்னி ரிப்பன் வைத்து கட்டிக் கொண்டிருந்தாள் பதினாறு வயது கவிதாஞ்சலி!!!



Advertisement

துடைத்து வைத்த சிற்பம் போல் அவ்வளவு அழகாய் இருந்த கவிதாஞ்சலிக்கு, கவலை எனும் வார்த்தைக்கு அர்த்தம் கூடத் தெரியாது அந்த வயதில்!!!

சில சமயம் கண்டித்தாலும், அவள் கேட்டதை எல்லாம் நிறைவேற்றித் தந்துவிடும் பெற்றோர் இருக்க, பெண்ணவளுக்கு வாழ்க்கை அவ்வளவு ரம்மியமாய் தெரிந்தது!!

அதிலும், அவளை விட சிறு வயது குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டு அவள் செய்யும் குறும்புகளினால், அங்கே மிக பிரபலமாகத் திகழ்ந்தாள் அவள்!!!

Advertisement

பூர்வீகம் வேறெங்கோ இருந்தாலும், சொந்தங்களுக்குள் ஏற்பட்ட சிறு மனஸ்தானத்தால், கவியின் சிறுவயதிலேயே மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு மதுரை வந்துவிட்டார் சேதுராமன்.

Advertisement

மனைவி, மகள் மீது அதிக பாசம் உள்ளவர் தான் என்றாலும், அவரின் குடும்ப ரத்தம் தான் அவருள்ளும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என அப்போது வரை அவரே அறிந்திருக்கவில்லை!!!

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வருவதால் என்னவோ, எந்நேரமும் கடு கடுவென தான் மனிதரின் முகம் இருக்கும்.

அதனாலே , கவிக்கு தந்தையை விட தாயுடன் ஒட்டுதல் சற்று அதிகம்!!

Advertisement

இதோ இப்போது கூட அவளின் பாட்டு சப்தம் கேட்டு, அடுப்படியில் இருந்து வெளியே வந்த பொற்கொடி,

“ஸ்கூலுக்கு முதல் நாள் போற!! கொஞ்சம் சீக்கிரம் தான் கிளம்ப வேண்டிதான டி?? இப்போ கூட பாட்டு ரொம்ப முக்கியமா???” என்றவர் தொலைக்காட்சியை அணைக்கப் போக,

“அப்பாவே அப்பாவே பெத்த பொண்ண திட்டாதே…
அம்மாவே அம்மாவே அட்வைஸ் பண்ணி கொல்லாதே…”

என பாடியவள், அன்னையைக் கண்டு குறும்பாய் கண்ணடிக்க,

“அடிங்!!! உன்னை!!! பாட்டைப்பாரு!! போ ஒழுங்கா போய் லஞ்ச் செஞ்சு வச்சிருக்கேன்.. பேக் பண்ணிட்டு, பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு கிளம்பு!! அப்பா வசூல் போயிட்டு வந்துடுவாங்க” என்ற பொற்கொடி, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு வெளியே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர்,

கவியின் “அம்மாஆஆ!!!” எனும் கூச்சலில் மீண்டும் பதறியடித்துக் கொண்டு உள்ளே வந்து,

“என்னாச்சு டி?? எதுக்கு இப்படி கத்துன??” என மகளுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என அவசரமாய் அவளை ஆராய்ந்து, எதுவும் இல்லை என உறுதிபடுத்திக் கொண்ட பின்பு தான் சற்று ஆசுவாசமானார்!!

அவரின் பதற்றத்தை குறும்புடன் ரசித்திருந்த கவியை நன்றாக முறைத்த பொற்கொடி,

“எதுக்குடி கத்துன??” என்க,

“ப்ச்!! சும்மா தான் மா!! உனக்கு காது கேட்குதான்னு செக் பண்ணேன்!!!” என தோளைக் குலுக்கியவளை வெட்டவா குத்தவா என்பது போல் பொற்கொடி பார்த்து வைக்க,

அதற்கெல்லாம் அசராத கவி,

“பரவாயில்லை தாயே!! வயசானாலும் உன் காது நல்லா தான் வேலை பார்க்குது!!” என பாராட்டி அவரின் ரத்த அழுத்தத்தை ஏற்றி விட்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் சேதுராமன் அன்றைய வசூலை முடித்துக் கொண்டு வந்திருக்க, பள்ளி சீருடையில் தயாராகி நின்றிருந்த மகளைக் கண்டு அவரின் முகம் கனிந்தது!!

“என்ன அதிசயமா சீக்கிரம் கிளம்பிட்ட!!” என போலியாய் வியந்தவர்,

“வா!! வந்து வண்டில ஏறு!!” என அவளை அழைக்க,

“நான் எப்பவும் சீக்கிரம் தான் கிளம்புறேன்.. நீங்க தான் லேட்” என முணுமுணுத்துக் கொண்டே தந்தையின் பின்னால் ஏறினாள் கவி!!!

செல்லும் வழியெங்கும் மகளுக்கு குறும்பைக் குறைத்துக் கொண்டு நன்றாகப் படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கிக் கொண்டே வந்த சேதுராமனை, சிறிதும் கண்டுகொள்ளாமல் நன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் கவி!!!

“சரியான சேட்டை!!!” என மகளை நினைத்து சலித்துக் கொண்ட சேதுராமன், பள்ளியின் வாயிலில் வண்டியை நிறுத்த, துள்ளிக் குதித்து இறங்கிய கவி,

“பாய் ப்பா!!!” என நகரப்போக,

“டென்த்ல தான் நானுறைத் தாண்டலை!! இப்போயாச்சும் ஒழுங்கா படி!!! இப்போ இருந்தே நல்லா படிச்சா தான் அடுத்த வருஷம் டுவல்த்ல நல்ல மார்க் வரும்!!!” என சிறு கண்டிப்புடன் சொல்லியவர், மகளிடம் தலையசைத்து விடைபெற,

“பத்தாங்கிளாஸ் பெயில் ஆன இவருக்கு, முன்னுத்தி அறுபத்தி எட்டு மார்க் கம்மியா இருக்கா?? ரொம்ப பண்ற டாடி!!” என கடுப்புடன் நினைத்துக்கொண்டவள், பின் அதை கண்டுகொள்ளாமல் துள்ளலுடன் தன் நண்பர்களைக் காண தன் வகுப்பறை நோக்கிச் சென்றாள்.

மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்திருக்க, கிட்டத்தட்ட இரண்டரை மாதம் கழித்து சந்தித்த நண்பர்கள் பேசிக்கொள்ள ஆயிரம் கதைகள் இருக்க, கவிக்கு நேரம் போனதே தெரியவில்லை!! அதிலும் புதிதாய் சேர்ந்த மாணவர்களை அப்போதே ராகிங் எனும் பெயரில் அழைத்து வைத்து அலப்பறை செய்து கொண்டிருந்த கவி & கோவை வகுப்பாசிரியர் வந்து தான் அடக்கினார்!!

காலை வழிபாடு முடிந்து முதல் வகுப்பு துவங்கி விட,

புதிய மாணவர்களுக்கான அறிமுகப் படலம் நிறைவடைந்த பின்,

“ஓகே!! சப்ஜெக்ட்குள்ள போகலாம்!!!” என கணித ஆசிரியர் புத்தகத்தை கையில் எடுத்த நேரம்,

“எக்ஸ்க்யூஸ் மீ சார்!!!!” என வெளியே ஒரு குரல் கேட்க,

வகுப்பில் இருந்த நாற்பத்தி ஆறு பேரின் கவனமும் வாசலில் குவிந்தது.

அங்கே, ஒடிசலான தேகத்துடன், நெடு நெடுவென உயரமாக ஒரு மாணவன், ஓடி வந்ததன் விளைவாக மூச்சு வாங்க நின்றிருக்க,

“ஃபர்ஸ்ட் டே வே லேட்டா!!! ஹம்ம்!! உள்ள வா!!!” என ஆசிரியர் சலித்துக் கொண்டார்.

அந்த மாணவனின் முகம் ஆசிரியரின் அதிருப்தியில் அனிச்சமலராய் வாட, அதை கவனித்த கவிக்கு,

“இதுக்கே மூஞ்சியை தொங்க போடுறான்!! சரியான தொட்டாச்சினுங்கியா இருப்பான் போல!!!” என்று தான் தோன்றியது!!!

தொங்கிப் போன முகத்துடன் உள்ளே வந்த மாணவன்,

“சாரி சார்!!! இனி கரெக்ட் டைம்க்கு வந்திடுவேன்!!” என மெல்லிய குரலில் மன்னிப்பு வேண்ட,

அருகில் நின்றிருந்த ஆசிரியருக்கே அவன் குரல் சரியாகக் கேட்கவில்லை எனும்போது, கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்க கவிக்கு கேட்கவா போகிறது அவன் குரல்??

“என்ன இவளோ மெதுவா பேசுறான்!! சரியான பயந்தாங்கொலி போல!!! சரி!! நமக்கு ஒரு அடிமை சிக்கிருச்சு!!!” என கவி நினைத்துக்கொள்ள,

அங்கே ஆசிரியரோ,

“இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்!! இனி என்னைக்கு லேட்டா வந்தாலும், நான் உள்ள அலோவ் பண்ண மாட்டேன்!!” என கண்டிப்புடன் கூறியவர்,

“சரி!! நியூ அட்மிஷனா???” என்று விசாரிக்க,

அந்த மாணவனின் தலை ஆம் என்பதாய் அசைந்தது!!!

“இதுக்கு முன்னாடி எங்க படிச்ச???”

ஒரு குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளியை அவன் குறிப்பிட,

“ஓஹ்!! அங்கேயா?? தமிழ் மீடியமா நீ???”

“இல்..இல்லை சார்!! அங்க இங்கிலீஷ் மீடியமும் இருக்கு.. அங்கே தான் படிச்சேன்!!!”

“சரி!! டென்த்ல எவ்வளவு மார்க்???”

“நானுத்தி எண்பத்தி அஞ்சு சார்!!!” என்ற பதிலில், அதுவரை ஆசிரியரிடத்தில் இருந்த அலட்சியம் விலகிச் செல்ல, அவனை ஆச்சரியமாய் நோக்கினார் அவர்!!

“நானுத்தி எண்பத்தி அஞ்சா???” என வியப்படைந்தவருக்கு அவன் மேல் ஒரு நன்மதிப்பு உண்டாகியிருந்தது!!

“என்னாது நானுத்தி எண்பத்தி அஞ்சா???!! நம்ம ஸ்கூல் ஃபர்ஸ்டே நானுத்தி எழுபத்தி எட்டு தான???” என வகுப்பில் இருந்த மாணவர்கள் கூட வியப்புடன் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள,

“ஓஹ் படிப்ஸா!!!” என அலட்சியமாய் எண்ணிக்கொண்ட கவி, அவனின் மருண்ட முகத்தை தான் சுவாரசியமாக பார்த்திருந்தாள்.

“வெரிகுட் தம்பி!!! உன் பேர் என்ன??” என கவி கேட்க நினைத்த கேள்வியை ஆசிரியர் கேட்டிருந்தார்.

“பிரபஞ்சன் சார்!!!” என மீண்டும் மெல்லிசாக அவன் முணுமுணுக்க,

“சார்!!! கேட்கலை!!!” என கடைசி பெஞ்சில் இருந்து சப்தமாய் குரல் கொடுத்து பிரபஞ்சனின் கவனத்தை ஈர்த்தாள் கவி!!!

கண்கள் நான்கும் மோதிக்கொள்ள, நொடி நேரம் கூட நீடிக்கவில்லை இருவருக்குமான முதல் சந்திப்பு!!!!

பட்டென பார்வையை விலக்கிக் கொண்ட பிரபஞ்சன்,

“பிரபஞ்சன் சார்!!!” என மீண்டும் கொஞ்சம் குரலை உயர்த்தி சொல்ல,

கவியைப் பின்பற்றி இன்னும் சில அராத்து மாணவர்கள்,

“கேட்கலை சார்!!!” என கோரசாக கோஷமிட,

பிரபஞ்சனுக்கு இப்போதே பயத்தில் வியர்த்துக் கொட்டியது!!!

“ஷ்!! சைலண்ஸ்!!” என சத்தமிட்ட ஆசிரியர்,

“நீ இங்க உட்காருப்பா!!” என முதல் வரிசையில் அவனை அமரவைத்த பின் வகுப்பைத் துவங்க, பிரபஞ்சன் தன் பயத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு கர்மசிரத்தையாக பாடத்தை கவனிக்க, அங்கே அவனை கவனித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி!!!

சிறுவயதிலிருந்தே இருபாலர்கள் படிக்கும் பள்ளியில் படித்திருந்த கவிக்கு, பெண்களுக்கு இணையாக ஆண் நண்பர்களும் இருந்தனர்.

அவள் பழகிய ஆண் பிள்ளைகளிடமிருந்து தனித்துத் தெரிந்த பிரபஞ்சனை சற்று அதிகமாய் கவனிக்கத் தூண்டியது அவளின் வயது!!

அதுவும் சற்று நேரம் தான்,

“சரியான பயந்தாங்கொலியா இருக்கான்!!! இந்த படிப்ஸ் எல்லாம் எக்ஸாமல பேப்பர் கூட காட்டாது!! வேஸ்ட்!!!” என அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தவள், அதன் பின் தன் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்கத் துவங்கிவிட்டாள்.

அன்று முழுவதும் அனைத்து ஆசிரியர்களிடமும் இருந்து திட்டு வாங்கிய பெருமையுடன் கவி வீடு செல்லக் கிளம்ப,

சரியாக அதே சமயம் பிரபஞ்சனும் தன் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

உணவு இடைவேளையிலே பிரபஞ்சனைப் பற்றி அவனின் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவனிடம் இருந்து விசாரித்து அறிந்து கொண்ட அவனின் வகுப்பைச் சேர்ந்த சில அடாவடி மாணவர் கும்பல் ஒன்று பிரபஞ்சனை வழி மறிப்பது போல் வந்து நிற்க,

“வழி விடுங்க!! லேட் ஆச்சுன்னா பஸ் போயிடும்!!” என முயன்று வரவழைத்த தைரியத்துடன் பிரபஞ்சன் அவர்களிடம் கூற,

அவர்களின் பார்வையோ இகழ்ச்சியாய் அவன் மீது படிந்தது!!

அதை உணர்ந்து கொண்டாலும், பிரபஞ்சனின் எண்ணம் எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும் அரசுப்பேருந்தை பிடிப்பதிலே இருக்க,

“லேட் ஆச்சு!! பிளீஸ்!!” என அவர்களிடம் இறைஞ்சுதலாய் கேட்டான்.

ஒருவன் இறங்க, இறங்கத் தான் ஏறி மிதிக்கத் தோன்றுமாமே!! அப்படித்தான் அவனின் பயம் அவர்களுக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுக்க,

“டென்த்ல நிறைய மார்க் எடுத்துட்டா, பெரிய பருப்பா நீ??” என கையை மடக்கி குத்துவிடுவது போல் பிரபஞ்சனின் முகத்தினருகே கொண்டு சென்று ஒருவன் கேட்க,

பயத்தில் அனிச்சை செயலாய் தலையை பின்னுக்கு இழுத்துக்கொண்ட பிரபஞ்சன்,

“என்.. என்ன?? ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க??” பயத்தில் முகத்தில் முத்து முத்தாய் வேர்வை பூத்திருந்தது அதற்குள் அவனிற்கு!!

“எங்க தல கிட்டயே எதிர்த்து கேள்வி கேப்பியா நீ??” என இன்னொரு மாணவன் எகிறிக்கொண்டு வர,

“நான்.. எங்க???” என பிரபஞ்சன் தடுமாற,

அவனின் பயம் அவர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

எனவே அவர்களின் சீண்டல் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறிக்கொண்டு போக,

வகுப்பில் இருந்த சில மாணவர்கள் இதை சுவாரசியமாக பார்த்திருந்தனர்.

அதில் வாய்த்துடுக்கு அதிகம் கொண்ட ஒருவன்,

“அப்பன் பேர் தெரியாதவன் தான நீ???” என அவனைப்பற்றி அரசல் புரசலாக அறிந்து கொண்டதை வைத்து வார்த்தைகளை சிதற விட,

பிரபஞ்சனின் முகம் அவமானத்தில் கருத்து சிறுத்தது!!!

அதுவரை அங்கு நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கவிக்கு கூட அந்த மாணவனின் பேச்சு ரசிக்கவில்லை,

“இடியட்!!! எப்படி பேசுறான் பாரு!!!!” என பல்லைக் கடித்தவள்,

அதைக்கேட்டு கோபமடையாமல் தனக்குள் குறுகிப்போய் நின்றிருந்த பிரபஞ்சனைக் கண்டு ஆதங்கம் கொண்டாள்.

“டேய் லூசு!! அவன் மூஞ்சியில ரெண்டு குத்து விடாம!! ஃபீல் பண்ணிட்டு இருக்க!!” என மனதிற்குள் அவனோடு கேட்டுக்கொண்டவளுக்கு, பிரபஞ்சனின் கசங்கிய முகம் மிகவும் பாதித்தது!!!

“உன் ஆத்தா ஒரு **** தான?? யாரு கூட படுத்து உன்னைப் பெத்தா??” என பிரபஞ்சனின் அமைதி அந்த மாணவனை இன்னும் பேச வைக்க, வயதுக்கு மீறிய வார்த்தைகளை வரம்பு மீறி உபயோகித்திருக்க,

இது போன்ற பேச்சுக்கள் பிரபஞ்சனிற்கு பழகிப்போன ஒன்று தான் என்றாலும், தன் அன்னையை ஒருவன் தவறாக பேசும்போது, அதை தட்டிக்கேட்க கூட முடியாத தன் தைரியத்தை எண்ணியே அவன் மிகவும் கலங்கிப் போக, ஒரு ஆண்மகனாய், தன்னை மிகவும் கீழாக உணர்ந்தவன், கண்ணீரை சிந்த,

சரியாக அதே நேரம், பிரபஞ்சனின் அன்னையை தவறாக விமர்சித்தவன்,

“அம்மாஆஆ!!!” எனும் கதறலுடன் கன்னத்தைப் பற்றிக்கொண்டு கீழே விழுந்திருந்தான்.

ஆம், அவனின் பேச்சை சகித்துக்கொள்ள முடியாமல் கவி தான் அவனை அடித்திருந்தாள்.

தான் செய்ய வேண்டிய செயலை, ஒரு பெண் செய்ததைக் கண்டு, பிரபஞ்சன் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவளைப் பார்த்திருக்க,

அவளின் கவனமோ அவனிடத்தில் சுத்தமாக இல்லை.

மாறாக கீழே விழுந்தவனை அசூசையுடன் பார்த்தவள்,

“ச்சீ!!! இவளோ கேவலமான புத்தி உள்ளவனா நீ??? வெக்கமா இல்லை இப்படி பேச உனக்கு!!!” என கோபத்தில் கொந்தளித்திருந்தாள்.

முன்பே அவளின் செயலில் அதிர்ச்சியில் இருந்த அவளின் சக மாணவர்கள், இப்போது அவள் தங்கள் மீதே கோபம் கொள்ளவும்,

“ஹேய் அஞ்சலி!! யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக, இத்தனை வருஷம் நம்ம கூட ஒன்னா படிச்ச மாதவ்வை அடிப்பியா நீ???”

“இந்த மாதிரி ஒரு கேடு கெட்டவன் கூட ஒன்னா படிச்சோம்ன்னு நினைச்சாலே எனக்கு அருவெறுப்பா இருக்கு!!” என முகத்தை சுழித்தாள் கவி!!

“ஹேய்!! நீ என்ன அவனுக்கே சப்போர்ட் பண்ற?? என்ன அதுக்குள்ள உன்னை கவுத்துட்டான அவன்??” என மீண்டும் அடிவாங்கியவன் துள்ளிக்கொண்டு வர,

அவனை பார்வையாலே பஸ்பம் ஆக்கிய கவி,

“இன்னொரு கன்னமும் பழுக்கணுமா உனக்கு??”

“தயவு செஞ்சு இவனை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க!! இவனை பார்க்க பார்க்க கடுப்பாகுது!! அப்பறம் நானே பிரின்சிபல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்!!” என மற்ற மாணவர்களிடம் எச்சரித்தாள் கவி.

இருந்தும் சில மாணவர்கள், அந்த அடிவாங்கியவனுக்கு பரிந்து கொண்டு கவியிடம் சண்டைக்கு வர,

“இந்த கேவலமானவனுக்கு சப்போர்ட் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க!! இன்னைக்கு இந்த பையனோட அம்மாவை அசிங்கமா பேசுறவன், உங்களையும் உங்க வீட்டுல இருக்கவங்களையும் பேச எவ்வளவு நேரம் ஆகும்??” என கவி நியாயமாகக் கேட்க,

மற்றவர்களும் அவன் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி பேசுவான் என எதிர்பார்த்திருக்காத காரணத்தால், அதற்கு மேல் கவியுடன் வாதாடாமல், அங்கே அச்சத்துடன் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிரபஞ்சனை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

அவர்கள் சென்ற பின் தான் கவியின் கவனம் பிரபஞ்சன் மீது திரும்ப, அங்கே கண்களில் கண்ணீருடன் அவளையே நன்றியுணர்வுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு கவிதாஞ்சலிக்கு லேசாய் தடுமாற்றம்!!

இதற்கு முன் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்திராதலால், அவனின் மனநிலை எப்படி இருக்கும், அவனுக்கு எவ்வாறு சமாதானம் சொல்வது என கவிக்கு விளங்கவில்லை!!

எனவே ஒரு வித தயக்கத்துடன் கவி அவனை நெருங்க,

“ரொம்ப.. ரொம்ப தேங்க்ஸ்ங்க!!!” என கரகரத்த குரலில் சொல்லியவனுக்கு, மீண்டும் தன் கோழைத்தனத்தை நினைத்தே கோபம் வர அதைக்கூட கண்ணீரில் தான் வெளிப்படுத்தினான் அந்த வளர்ந்த குழந்தை!!

அவனின் கண்ணீர் கவியை அசைத்துப் பார்க்க,

“அழ.. அழாத!!!” என தயக்கத்துடன் அவனை இன்னும் நெருங்கியவள்,

“அவங்க இவ்வளவு மோசமா நடந்துப்பாங்கன்னு நானும் நினைக்கலை!!! சும்மா டீஸ் பண்றாங்கன்னு தான் நானும் வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன்.. இல்லைனா அப்போவே அவங்களை துரத்தி விட்டிருப்பேன்”

ஏதோ தவறு தன் மீது தான் என்பது போல் கவி அவனுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க,

“நீங்க.. என்ன பண்ணுவீங்க.. விடுங்க!!”

“நான் வரேன்!!” என லேசாய் தலையசைத்து அவன் விடைபெற,

கவி என்ன நினைத்தாளோ,

“இப்படியே அழுதுட்டே போகாத!! அப்பறம் உங்க அம்மா பார்த்தா என்னாச்சுன்னு கேப்பாங்க.. நடந்ததை சொல்லி அவங்களையும் ஹர்ட் பண்ணாத!!” என்று சொல்ல,

தனக்காக இவ்வளவு யோசிக்கும் கவியை ஒரு நொடி வியப்பு மேலிட பார்த்தவன், அவளின் கூற்றுக்கு சம்மதமாய் தலையசைக்க,

“இனி யார் உன்னைக் கிண்டல் பண்ணாலும் பயப்படாத!! நீயே எதிர்த்து கேளு!! இல்லை உனக்கு பயமா இருந்தா என்கிட்ட சொல்லு!! நான் பார்த்துக்கிறேன்!!!” என பெரிய மனித தோரணையில் அவனுக்கு தைரியம் சொன்ன கவியைக் காணும் போது அப்போது அவனை காக்க வந்த தேவதையைப் போல் தான் தோன்றியது பிரபஞ்சனுக்கு!!!

“சரிங்க!!!” என அவளின் தோரணையில் தோன்றிவிட்ட மென்புன்னகையுடன் அவன் கூற,

சிரிக்கும் போது வசீகரமாக மாறிவிட்ட அவனின் முகம், பெண்ணவளின் மனதில் முதல் சலனத்தை உண்டுபண்ணியிருக்க, செல்லும் அவனையே பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள் கவிதாஞ்சலி!!!

“தேவதைகள் அனைத்து நேரமும் வெள்ளை உடையும், பறக்க சிறகும் அணிவதில்லை!!

சில நேரங்களில் ரெட்டை ஜடையும் பள்ளி சீருடையும் கூட தரித்திருப்பர்!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!