Skip to content
Post Views: 2,696
தன் இருகைகளிலும் இட்டுக் கொண்டிருந்த மருதாணிப் பூச்சை ரசித்தபடி தன் வீட்டில் சோபாவில் அமர்ந்து இருந்தாள் ரேஷ்மா!
மருதாணி?
அதுவும் ரேஷ்மா?
அதுவும் இரு உள்ளங்கைகளிலும் வெறும் வட்டமும் அதை சுற்றியிருக்கும் சிறிய புள்ளிகளுமான பழையக் காலத்து டிசைனில்!
Advertisement
நிஜம் தான்!
அதை வைத்து விட்டது சாட்சாத் யுவியின் அம்மா பத்மா!
அன்று காலையில் இருந்தே நடந்தவை எல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிய அனுபவங்களைத் தந்திருந்தது!
Advertisement
அன்று காலையில் அவளும் ரேவந்தும் அவர்களின் கார்மென்ட் ஃபேக்டரிக்கு சென்றார்கள், வெகு நாட்களுக்குப் பின் ஒன்றாக சேர்ந்து.
Advertisement
ரேவந்துடன் அதிக நேரம் இருக்க வேண்டுமென்றே நினைத்து அவளது தினசரி வேலைகளை மாற்றியும், அன்று வேறு யாரையும் சந்திக்காமல் இருக்கும்படியும் மதுராவிடம் சொல்லி நேரம் ஒதுக்கிக்கொண்டு அவனுடன் சென்றாள்.
மதுராவையும் கூட சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பும்படி சொல்லிவிட்டாள்.
இருவரும் அங்கு சென்று சேர்ந்து ஆடைகள் உற்பத்தியாவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த போது ரேவந்த் சொன்னான்.
Advertisement
“ரேஷ்மா.. இன்னிக்கு யுவி நம்ம ஃபேக்டரிக்கு விசிட் பண்ணிப் பார்க்கணும்னு சொன்னான்.
வர சொல்லியிருக்கேன். அவனும் இங்க வரப் போறான். ஒரு மணி நேரத்தில் வந்துடுவான்.
மதியம் தானே உன்னோட நியூ லாஞ்ச் டிசைன் ப்ரடக்சன் ஸ்டார்ட் பண்ணப் போறாங்க?
அதுக்குள்ள அவன் வந்திடுவான்.
இரு.. எங்க வந்துட்டு இருக்கான்னு போன் பண்ணிப் பார்க்கிறேன்” என்று போனை எடுத்துக் கொண்டு தனியே போய் பேசி விட்டு வந்தான்.
அவன் போனில் பேசிய பின் ஒரு மணி நேரம் கழித்தே யுவி வந்தான்.
“ரேஷ்மா.. யுவிக்கு எல்லா செக்சனையும் கூட்டிட்டுப் போய் காட்டு. எனக்கொரு கால் இருக்கு” என்று சொல்லி அவன் நகர்ந்து போனான்.
ரேஷ்மா, யுவிக்கு எல்லா இடங்களையும் கூட்டி சென்று காட்டினாள். அவனுக்கு விளக்கம் சொன்னாள்.
அப்படி அவர்கள் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த போது, யுவிக்கு அம்மாவிடமிருந்து போன் வந்தது.
“சொல்லும்மா” என்றான்.
“எங்கேடா இருக்க?”
“நான் கொஞ்சம் சிட்டி அவுட்டர்ல இருக்கேன்மா. நம்ம ரேவந்த்தோட கார்மென்ட் ஃபேக்டரிக்கு வந்திருக்கேன்!”
“ஓ. அப்படியா? ரேவந்த் நல்லா இருக்கானா? அவன் சிஸ்டர் நல்லா இருக்காளா?”
“ம்ம். அவனுக்கு என்ன? தடிமாடு மாதிரி நல்லா தான் இருக்கான்”.
“எங்க போனை அவனிடம் கொடு”.
“அவன் இப்ப பக்கத்துல இல்ல. ஆபிஸ் ரூம்ல இருக்கான். அவன் சிஸ்டர் தான் இருக்காங்க.”
“ஓ.. ரேஷ்மா.. நல்லா இருக்காளா? அப்ப போனை அவ கிட்ட கொடு. சின்னப் பிள்ளையா இருக்கும் போது பார்த்தது!”
“ம்ம். இரும்மா..” என்று சொல்லி விட்டு,
“ரேஷ்மா.. என்னோட அம்மா உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க. பேசுறீங்களா?”
“ம்ம். ஓ. ஆன்ட்டியா? கொடுங்க” என்று புன்னகையுடன் போனை வாங்கினாள் ரேஷ்மா.
“ஹலோ ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?”
“ம்ம் நான் நல்லா இருக்கேண்டா.. நீ எப்படி இருக்க? என்னை ஞாபகம் இருக்கா?”
‘என்ன இப்படி கேட்டுட்டீங்க? நல்லா ஞாபகம் இருக்கு.
இன்ஃபேக்ட் எனக்கு யுவி ஃபேஸ் கூட மறந்துடுச்சு. ஆனா உங்க ஃபேஸ் நினைவு இருக்கு எனக்கு இன்னும் நல்லாவே!
அப்புறம் நீங்க வாங்கி கொடுத்த அந்த பட்டுப்பாவாடை சட்டை, அப்புறம் அந்த தாழம்பூ வச்சு பின்னி விட்ட ஜடை எல்லாமே கூட.
இப்பவும் எங்காச்சும் தாழம்பூவே அப்படின்னு பாட்டுக் கேட்டா கூட உங்க ஞாபகம் வரும் ஆண்ட்டி!
ஒரு வருஷம் நவராத்திரி கொலுவுக்கு உங்க வீட்டுக்கு வந்தோம்னு நினைக்கிறேன் என் அம்மாவோட.
நான் அப்ப செவன்த் ஸ்டாண்டர்ட் படிச்சுட்டு இருந்தேன்!”
“கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கும்மா.
பரவாயில்ல. என்னை இன்னும் ஞாபகம் இருக்கு!
அந்த பட்டுப்பாவாடை கூட யுவியை நிக்க வச்சு அவனுக்கு அளவெடுத்து உனக்கு தைச்சு வைச்சுருந்தேன்!
உனக்கு கொஞ்சம் பெரிசா இருந்துச்சு இல்ல!”
“ஆமா ஆண்ட்டி.. ஆனா அம்மா அதை கொஞ்சமா ஆல்டர் பண்ணிக் கொடுத்தாங்க. ஆண்ட்டி பிரியமா வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லி போட்டுக்க வைப்பாங்க”.
“இன்னிக்கு வேற எதாச்சும் முக்கியமான ஒர்க் இருக்காடாம்மா?
இன்னிக்கு வெள்ளிக் கிழமை.
நான் மகாலக்ஷ்மி பூஜை பண்ணுவேன். வந்து வெத்தல பாக்கு தம்ம்பூலம் வாங்கிட்டு போறியா?”
“வீட்டுக்கா..?” என்று ரேஷ்மா கொஞ்சம் தயங்க,
போனை உடனே வாங்கிக் கொண்டு யுவி கொஞ்சம் கோபமாகவே பேசினான் அவன் அன்னையிடம்!
“அம்மா… என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ரேஷ்மா எவ்வளவு பிஸி தெரியுமா?”
“டேய்.. தெரியும்டா. எனக்கும்! நான் அவ கூட ஒரு செல்பி எடுத்துக்கனும்னு ஆசை! கொஞ்சம் பேசி பாருடா.”
“அம்மா..” என்று பல்லைக் கடித்தவனிடம்
என்னவென்று ரேஷ்மா கேட்டாள்.
“ம்ம். உங்க கூட செல்பி எடுத்துக்கனுமாம்!
ஏற்கனவே உங்க பொட்டிக் சாரியைக் கட்டிக் கொண்டு எங்க அம்மா பண்ற அலப்பரையே அதிகம்!
இதுல செல்பி வேற?”
“நான் வர்றேன்னு சொல்லுங்க” என்றாள் ரேஷ்மா?
“ரியலி?”
“ஆமா”
“உங்களுக்கு டைம் இருக்கா?”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்“
“அப்ப சரி. ரேவந்திடம் சொல்லி விட்டு அவனையும் கூட்டிக் கொண்டு போகலாம்!
இதோ அவனே வந்திட்டான்” என்று அங்கு அப்போது தான் வந்த ரேவந்திடம் விவரம் சொன்னான் யுவி.
“மச்சான் .. நீ ஒண்ணு பண்றியா? எனக்கு கொஞ்சம் இம்பார்டன்ட் ஒர்க் ஒண்ணு இருக்கு.
நீ உன் கார்ல அவளைக் கூட்டிட்டு போயிட்டு கொண்டு வந்து எங்க வீட்டில் விட்டுடு!” என்று சொல்லி விட்டு அவர்களை மட்டும் தனியாக அனுப்பி வைத்தான்.
ஆனால் பாவம் அவர்கள் இருவருக்கும் ரேவந்த் தான் தனியே போய் யுவியின் அம்மாவிடம் பேசி, ரேஷ்மாவை வீட்டுக்கு கூப்பிட சொல்லி சொன்னதும்,
அவர்கள் கிளம்பி சென்றதும் “தேங்க்ஸ் ஆண்ட்டி” என்று பத்மாவுக்கும் ஒரு நன்றி சொல்லி விட்டு லக்கியோடு பிக்கில் பால் விளையாட சென்று விட்டதும்!
வீட்டில் பயங்கர வரவேற்பு ரேஷ்மாவுக்கு!
“வாம்மா .. “ என்று பத்மாவும் தன சேகரும் ஒரு சேர அவளை வாயார வரவேற்று அழைத்து சென்றார்கள்.
“உன்னை ரொம்ப நாளா பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தா ஆண்ட்டி!
உன்னோட இன்ஸ்டா பேஜுக்கு தீவிர ஃபாலோயர் அவ!”
“அப்படியா? என்ன ஐடி உங்களுது? நான் கிட்டத்தட்ட எல்லாத்துக்குமே ரிப்ளை பண்ணிடுவேனே!”
பத்மா, அவர் ஐடியை சொல்லி விட்டு,
“உன் பொட்டிக்ல தான் நான் சாரி வாங்குவேன். என்னோட புது ஸாரி கலெக்சனில் பெரும்பாலும் உன்னோட பொட்டிக்கில் வாங்கியது தான்!” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையிட்டார் தனா.
“ஆமா.. இந்த கர்னாடக இசைப் பாடகிகள் எல்லாம், டிசம்பர் சீசன் அப்போ உன் பொட்டிக்ல தான் ஸாரி வாங்குவாங்களாம்.
அதைக் கேள்விப் பட்டுட்டு தான் இவளும் வாங்க ஆரம்பிச்சா!
எனக்கு அவ்வையார் பாட்டு ஒண்ணு தான் ஞாபகம் வருது, இவ செய்றத பார்க்கும் போது!
கான மயிலாட கண்டிருந்த
வான் கோழின்னு ஒரு பாட்டு!
அது மாதிரி புலியை பார்த்து பூனை சூடுப் போட்டுக் கொண்டது போல,
இவளும் அங்க வாங்கின பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு, இவளும் தன்னைப் பெரிய பாடகின்னு நினைச்சுட்டு பாடிட்டு இருக்கா!
யார் கேப்பாங்கன்னு கேக்குறியா?
அதான்.. இருக்கவே இருக்காங்க.. இந்த காலனி ஜனங்களும், அந்த வாயில்லா பூச்சியான பிள்ளையாரும்!
மார்கழி மாசம் வந்திட்டா போதும். காலங்கார்த்தால விடிஞ்சும் விடியாம பிள்ளையார் கோவில்ல இவ கச்சேரிய ஆரம்பிச்சுடுவா!
காலனிக் காரவங்க இவ்வளவுக்கு வச்சுருக்க பெயர் சித்ரா தேவிப் பிரியா!
அது மாதிரி தான் கேக்கவே நாராசமா இருக்கும்!
என்னைத் தேடாதீங்கன்னு எங்காச்சும் லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப் போயிடலாம் போல இருக்கும்!
ஆனா எங்க போக? நானெல்லாம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
ஆயுள் தண்டனை! என்று மனைவியைக் கிண்டலடித்தார் தனசேகர்!
தனா.. என்று செல்ல கோபத்துடன் முறைத்தார் பத்மா!
அப்பாவின் கூட சேர்ந்து கொண்டான் யுவியும்!
“அது மட்டுமா.. ஒரு எய்ட்டி ப்ளஸ் பாட்டி ஒருத்தர், என் கிட்ட வந்து, தம்பி உன் அம்மா கிட்ட சொல்லுடா.. கொஞ்சம் மைக்கை ஆஃப் பண்ணி வச்சுட்டாவது பாட சொல்லுடா. என்னால முடியல!
நானே நைட் எல்லாம் டேப்லெட் போட்டுகிட்டும் தூக்கம் வராம விடிய கார்த்தால தான் தூங்குறதே!
அதயும் உன்னோட அம்மா கெடுக்கிறா என்று ஒரே கம்ப்ளைன்ட்!” அவன் பங்குக்கு கிண்டலடித்தான்!
அவர்கள் குடியிருக்கும் அந்த காலனியில், காலனிவாசிகளின் நன்கொடையால் கட்டப்பட்ட சின்ன ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது!
பெயர் தான் பிள்ளையார் கோவில்.
ஆனால் கிட்டதட்ட எல்லா தெய்வங்களும் இருந்தார்கள்.
முருகன், ஐயப்பன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், சப்தகன்னியர், பைரவர், ஹயக்ரிவர் உள்ளிட்ட அனைத்து கடவுளர்களும் மினியேச்சர் வடிவில் இருந்தார்கள் அந்த நவீன கோவிலில்!
அதற்கு தாராளமாக நன்கொடை தருபவர் பத்மா!
போன வாரம் கூட யூ.பி.எஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.
கோவில் நிர்வாகம் அப்படியே அவரிடம் சிசிடிவி கேமராவும் வாங்கி தர சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.
இத்தனை விஷயங்கள் கோவிலுக்கு அவர் செய்வதால், கிடைத்த சலுகை,
அங்கே அவருக்கு மைக் செட்டப் எல்லாம் செய்து பாட்டு பாட ஏற்பாடு!
கொஞ்சம் மோசமாக தான் பாடுவார் அவர்!
அதை தான் கிண்டல் செய்கிறார்கள் தந்தை மகன் இருவரும்!
“பொய்.. பொய்.. ரேஷ்மா! இவங்கள நம்பாத!
ரெண்டு பேரும் இப்படி தான் கூட்டு சேர்ந்துட்டு என்னை கலாய்ப்பாங்க!
நீ நம்பாதே! என்ன தனா இதெல்லாம் ரேஷ்மா என்னைப் பத்தி என்ன நினைக்கும்?” அவர் குறைப்பட்டுக் கொள்ள,
“ரேஷ்மா என்ன நினைக்கும்? சரியா தான் நினைக்கும்” என்றார் தனா, இன்னமும் கிண்டலை விடாமல்!
“ஓ.. அப்படியா.. அப்ப இருங்க உங்க வண்டவாளத்தையும் அவ தெரிஞ்சுகிடட்டும்!
ரேஷ்மா, அங்கிள் மட்டும் அப்படியே பெர்ஃபெக்ட் கிடையாது!
மைக் கிடைச்சு பேச ஆரம்பிச்சா போதும்! எல்லோருக்கும் ஒய் ப்ளட் சேம் ப்ளட் தான்!
போன வருஷம், இவர பக்கத்துல இருக்கிற நர்சரி ஸ்கூல் ஆனுவல் டேக்கு சீஃப் கெஸ்டா கூப்பிட்டு இருந்தாங்க.
இவர் கொஞ்ச நேரம் குழந்தைகளை வாழ்த்தி பேசிட்டு, ப்ரைஸ் கொடுக்கணும்.
இவர் பேசின பிறகு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்!
அதுக்குப்புறம் தான் ப்ரைஸ் டிஸ்ட்ரிபியூஷன்.
அது தான் ப்ரோக்ராம்!
ஆனா இவரோ, நான் ரொம்ப நேரம் பேச விரும்பல, பேச விரும்பல சொல்லிட்டே ரொம்ப நேரம் இவரே பேசிட்டு இருந்தார்.
குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் கீழே இருந்து இவரைக் கண்டபடி அவர்களுக்குள் திட்டவே ஆரம்பிச்சுட்டாங்க!
வெல்கம் டான்ஸ் ஆட வேண்டிய கேஜி குழந்தைகள் எல்லாம் தூங்க ஆரம்பிச்சுடுச்சுங்க!
அதுங்க ஆடி முடிச்சு, அப்புறமா இவர் ப்ரைஸ் கொடுத்து எப்ப கிளம்ப?
குழந்தைங்க டான்ஸ் ஆடுறத பார்க்க வந்த பல தாத்தா பாட்டிகள் டயாபடிஸ் பேசன்ட்ஸ்!
அவங்களுக்கு சாப்பிடுற நேரம் வந்து, அவங்களும் கடுப்பாக ஆரம்பிச்சுட்டங்க!
இது ஒரு சாம்பிள் தான் ரேஷ்மா.
இன்னும் நிறைய இருக்கு! சொல்லட்டா..
ஏன்டா.. அப்பனும் மகனும் ஜோடி போட்டுகிட்டா ரேஷ்மா முன்னாடி என்னை கிண்டல் பண்ணுறீங்க?
இருங்கடா.. எனக்கு மருமக வரட்டும்! நான் அவ கூட ஜோடி போட்டுக்கிட்டு உங்கள வாரி விடுறேன்!”
“ஓ. மருமக.. அவ வந்து உன்கூட ஜோடி சேரப் போறா?
அதுக்கு உன் பிள்ளைக்கு அடியேன்னு சொல்ல பொண்டாட்டி வரட்டும்! அதுக்கு அப்புறம் பேசலாம் அதப் பத்தி!”
“என்ன பண்றது? என் சைட் பார்த்தா, உங்க வீட்டு ஆளுங்க கோவிச்சுப்பாங்க.
உங்க வீட்டு சைட் பார்த்தா என் தம்பி அவ்வளவு தான்! என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவான்!
அதுக்கு தான், நான் இவனையே பார்த்து கூட்டிட்டு வாடான்னு சொன்னா,
நீங்க என்ன ரெண்டு மூனு பிள்ளைங்க பெத்து வச்சுருக்கீங்களா?
நான் ஒருத்தன் தானே!
எனக்கு பொண்ணு பார்க்குறத விட வேற என்ன வெட்டி முறிக்கப் போறீங்கன்னு கேக்குறான்” என்று யுவியையும் வாரி விட்டார் பத்மா!
“அய்யோ.. உங்க பஞ்சாயத்தை விடுங்களேன் கொஞ்ச நேரம்!
பாவம் ரேஷ்மா! ரொம்ப வருசம் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா!
அவளை ஓட வச்சுராதீங்க!” என்று யுவி அவர்களை ஒருவாறு அடக்கினான்.
“ரேஷ்மா, இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறதால, ரொம்ப சண்டைப் போட்டுப்பாங்கன்னு நினைச்சுடாதீங்க!
ரெண்டு பேரும் பயங்கர லவ்வர்ஸ் இப்பவும்!
ஒருத்தர விட்டு ஒருத்தர் ஒரு ரெண்டு நாள் கூட தனியா இருக்க மாட்டங்க!
ஒரு தடவ , அம்மாவ அவங்க காலேஜ் பிரண்ட்ஸ் அரேன்ஜ் பண்ணின ஒரு மகளிர் மட்டும் டைப் டூர் அனுப்பி வச்சோம்.
அவங்களும் போனாங்க.
ஆனா அவங்க நினைப்பு பூரா வீட்டில் தான், டெல்லியில் இருந்துட்டும்!
ஏங்க.. இன்னிக்கு கேஸ் சிலிண்டர் போட வருவாங்க.
சீல் செக் பண்ணி வாங்கி வச்சுடுங்க. ஓடிபி அனுப்பி வச்சுட்டேன்.
வாட்டர் ப்யுரிஃபயர் ஃபில்ட்டர் டியூ டேட் வந்திருச்சான்னு பாருங்க.
நாளைக்கு ஈபி குறிக்க வருவாங்க. நோட் பண்ணி வாங்கிக்கங்க.
அப்புறம் தோசை ஊத்தி முடிச்ச பின்னாடி, டப்பா விளம்பில் எல்லாம் மாவை வழிச்சு விட்டு மூடுங்க. அப்படியே வச்சா காய்ஞ்சு போய்டும்.
மெட்ஃபார்மின் போட மறந்துடாதீங்க!
ஊறுகாயில் ஈர ஸ்பூன் போட்டுடாதீங்க.
இட்லிப் பொடியை தேவைக்கு வச்சு சாப்பிடுங்க. நிறையா வச்சுக்கிட்டு , அப்புறம் பொடியோட ப்ளேட்டை கழுவ போடுவீங்க!
ஈரத் துண்டை மறக்காம காயப் போட்டுடுங்க!
நான் வர வரைக்கும் டீ பேக் போட்டு டீயே குடிங்க.
பில்ட்டர் காபி போடுறேன்னு காபித் தூளை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. நான் மனுசியா இருக்க மாட்டேன்
இப்படி மணிக்கொரு தரம் போன் வந்துட்டே இருந்துச்சு.
பேசாம நீ அமெரிக்காவுக்கே போய்டு சிவாஜின்ற மாதிரி பிரண்ட்ஸ் எல்லாம் பேசாம நீ ஊருக்கே போய்டு பத்மா என்று அவங்க பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணவும் தான் விட்டாங்க.
டூர் போனாக்க கூட அவங்களுக்கு அப்பா நினைப்பும் வீட்டு நினைப்பும் தான்!” என்றான் யுவி!
“நைஸ்” என்று சொல்லி புன்னகைத்தாள் ரேஷ்மா!
“என்ன தான் நாங்க ஒருத்தர ஒருத்தர் கிண்டல் பண்ணினாலும்
அவர விட்டுட்டு நானோ, என்னை விட்டுட்டு அவரோ ஒரு நாள் கூட இருக்க மாட்டோம்!
செத்து போனா கூட ரெண்டு பேரும் ஒண்ணா தான் போகணும்ன்றது என்னோட ஆசை!
அதுக்கு எல்லாம் கொடுப்பினை இருக்கான்னு தெரியல!
ஆனா அதுக்கு முன்னாடி யுவிக்கு ஒரு நல்ல குடும்பம், எங்கள மாதிரியே புரிதலோட இருக்கும் ஒரு மண வாழ்க்கை அமைய வேண்டும்!
அது தான் இப்ப என்னோட பிரேயர்!
அப்படியே எங்களுக்கு சேர்ந்து சாவ கொடுத்து வைக்கலனா கூட, எனக்கு அவருக்கு முன்னாடி சுமங்கலியா செத்துடனும்னு எல்லாம் ஆசை இல்லை!
என்னைப் பொறுத்தவரை அது சுயநலத்தின் உச்சம்!
நம்மை லவ் பண்றவங்கள தனியா தவிக்க விட்டுட்டு போகணும்னு நினைக்கிறது பாவம்!
அதனால நான் இருந்து அவரை நல்லபடியா அனுப்பி வச்சுட்டு அப்புறமா அவர் பின்னாலேயே சீக்கிரமா போய்டணும்!
நான் இல்லாம அவரால ஒருநாள் கூட இருக்க முடியாது!
ரொம்பவும் தவிச்சு போய்டுவார்!
அப்படி ஒரு தண்டனைய அவருக்கு கொடுத்துட்டு போனா, நான் அவரை லவ் பண்ணவே இல்லன்னு அர்த்தம்!
இப்பவும் என்னோட பிரேயர் அது தான்” என்று பத்மா சொல்லும் போது கொஞ்சம் கண்கள் கலங்கி விட்டன ரேஷ்மாவுக்கு!
“என்னடா ஆண்ட்டி இப்படி பேசுறாங்கன்னு நினைக்காத ரேஷ்மா.
நாம லேடிஸ் எல்லாம் கடைசி காலத்தில் மகனை , மருமகளை இல்லன்னா மருமகனை அனுசரிச்சு அவங்க கூட கடைசி காலத்தை கழிச்சுடுவோம்!
ஆனா ஆம்பளைங்களால அது முடியாது!
என்னைப் பொறுத்தவரை கணவனை இழந்த விடோ பெண்களை விட, வயதான விடோயர் ஆண்கள் தாம் ரொம்பவும் பாவம்!
அப்படி ஒரு நிலைக்கு அங்கிளை விட மாட்டேன்!” என்று சொல்லியவர், தலையை உலுக்கிக் கொண்டு,
“அய்யோ சாரிடாமா ..மொதோ மொத எங்க வீட்டுக்கு வந்திருக்க உன் கிட்ட ஏதேதோ பேசிட்டு இருக்கேன்.
ரேஷ்மா .. உனக்கு தெரியுமா?
எனக்கும் ட்ரெஸ் டிசைன் படிக்க ஆசை இருந்துச்சு.
அப்பவெல்லாம் ரொம்ப கஷ்டம். சேர முடியல.
ஆனா நானா சில டிசைன்ஸ் பென்சிலில் வரைஞ்சு வச்சுருக்கேன். பார்க்கிறியா? என்று ஆர்வமாக அந்த பழைய படங்களை அவளுக்கு காட்டினார்!
“சூப்பர் ஆண்டி. அப்ப இருந்த பழைய டிசைன்ஸ் தான் இப்ப மறுபடி ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு!
ஆனா ஏன் எல்லாமே கேர்ல்ஸ் போடுற மாதிரி தான் இருக்கு!”
“எனக்கு பெண் குழந்தை தான் ரொம்ப ஆசை! ஆனா யுவி பிறந்துட்டான்.
அதுக்கப்புறம் எனக்கு சில ஹெல்த் இஸ்யூஸ்! வேற பேபி பொறக்கவே இல்லை!
அதனால என்ன? வரப் போற மருமகள என் மகளா நினச்சுட்டு போறேன்!” என்றார் ஆசையாகவே!
ரேஷ்மாவுக்கு அவர்கள் வீட்டை விட்டு வரவே மனதில்லை!
“எங்க வீடு மாதிரி இல்லை உங்க வீடு!
ரொம்ப உயிர்ப்போட இருக்கு! ரொம்ப பிடிச்சுருக்கு” என்று பேசியபடி அவர்கள் வீட்டில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது, பத்மா அவளுக்கு ஒரு மேக்கப் செட் பரிசளித்தார்!
“என் யூஎஸ் ஃபிரன்ட் எனக்கு கிப்ட் பண்ணினா. நான் என்ன பண்ண போறேன் இதை என்று சொல்லி,
கூடவே வேறு சில மங்கலப் பொருட்களுடன், கொஞ்சம் அரைத்த மருதாணியும் கொடுத்தார்!
“அம்மா. இது எதுக்கு ரேஷ்மாவுக்கு. அவங்க அத எல்லாம் போட்டுக்க மாட்டாங்க”. என்றான் யுவி.
“அப்படி இல்லடா . இதுவும் ஒரு மங்கலப் பொருள் தான்!
நான் இங்க நம்ம காலனியில இருக்கிற லேடிஸ்க்கு எல்லாம் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கொடுப்பது தான்!
நீயும் வாங்க்கிக்கோ ரேஷ்மா.
வச்சுக்கணும் கூட அவசியம் இல்ல!”
“இல்ல ஆண்ட்டி எனக்கு வச்சு விட யார் இருக்கா அங்க? அதான் யோசிக்கிறேன்.”
“அப்ப.. நானே வச்சு விடட்டா உனக்கு. காரில் போற வரைக்கும் வச்சுக்கோ!
அப்புறமா கழுவிக்கோ!” என்று சொல்லி மருதாணி இட்டுவிட்டே, அவளை யுவியோடு அனுப்பி வைத்தார்.
ஆனால் அதை கழுவ மனமில்ல அவளுக்கு!
யுவியையே வீட்டை திறந்து விட சொல்லி உள்ளே போனாள்.
இரவு உணவு கூட உண்ண தோன்றவில்லை அவளுக்கு!
கொஞ்சம் காய்ந்து இருந்த பூச்சோடே ஃபிர்ட்ஜை திறந்து ஒரு ஜூஸ் மட்டும் குடித்து விட்டு படுத்து விட்டாள்.
இரவு வீடு திரும்பிய ரேவ்ந்த், கையில் இன்னமும் மருதாணியோடு தூங்கிக் கொண்டிருக்கும் தங்கையைக் கண்டு மகிழ்ந்தான்.
உடனே , இதை லக்கிக்கு டெக்ஸ்ட் பண்ணினான்.
கிரீன் ஃபிளாக் (Green Flag)! என்று பதில் வந்தது!
பின்னே யுவி வீட்டுக்கு ரேஷ்மாவை அனுப்பும் ப்ளானின் சூத்ரதாரியே அவள் தானே!
error: Content is protected !!