Skip to content
Post Views: 1,556
“ஜெ..ய்.. ஜியா.. (ஏய் நீயா..)..?” என குழறலாக கேட்டபடி மீண்டும் நிமிர, மீண்டும் அதை போன்ற அடி மறு கன்னத்திலும் விழுந்திருந்தது.
அதில் உக்கிரமானவர் கையை ஓங்கிக்கொண்டு தள்ளாடி வர, அதை தடுத்த சகுந்தலா, “த்தூ.. நீயெல்லாம் மனுஷ ஜென்மமா..?
Advertisement
ஒரு சின்ன புள்ளைய போய் அவ அண்ணி கூட..!!
Advertisement
ஆத்தாளுக்கு சமய்யா அந்த ஒறவு..
Advertisement
அய்யோ.. கேட்கவே அத்தன அருவருப்பா இருக்கே.. எப்புடி இப்புடி ஒரு வார்த்தய சொல்ல வருது உனக்கு..?
Advertisement
பெறாத புள்ளையா பாத்து பாத்து வளர்க்கறவள போய் அந்த பிஞ்சு குழந்தையோட சேத்து பேசற..
உன்ன மாறி நாய் ஜென்மங்களுக்கு தா.. செக்குக்கும் சிவ லிங்கத்துக்கும் வித்தியாசோ தெரியாது..
உன்ற கேடு கெட்ட புத்தி தெரிஞ்சு தா அந்த மகராசி முன்னமே போய் சேர்ந்துட்டா போல..
இப்புடி வரமுற இல்லாத பேசற உன்னைய அப்படியே மண்ணெண்ணெய ஊத்தி கொழுத்தினா தான் என்ன..?” என்றவரின் ஆங்கார ரூபத்தில்..
அதே அக்னியில் எறிந்து போன கஸ்தூரி கண் முன் வந்து நின்றார் அந்த கொடூரனுக்கு.
அதில் இன்னும் மண்டை சூடாகி போக,
“என்னதி(டீ).. எல்லாதையும் தெஞ்சு போத்து எவுமே நக்காத மாதி நக்கறது ன்ன உன்னள மாதி பொண்ணுங்களுக்கு புச்சா..?” என குழறிய படி சொல்லி,
வாயில் வழிந்த ரத்தத்தை நன்றாக காறி துப்பிவிட்டு,
“என்னைய கட்டுனாளே முன்னாடி ஒருத்தி.. அவள சந்தேகப்பட்டு என்ற ரெண்டு புள்ளையும் நிசமா எனக்கு தான் பெத்தையான்னு கேட்டு போட்டேன்னு போய் கொழுத்திட்டு செத்தா..
அவ மகராசியா உனக்கு..?
அவ பவுசு தெரியாம அவள கல்யாணம் ஆன நாள் முதலா நல்லா தான்டீ பாத்துட்டேன்.
கேடு கெட்டவ அப்பவு எனக்கு துரோகத்தே செஞ்சான்னு அவுக சொத்த விக்க அவுக ஊருக்கு போயி தங்கற வர தெரியலயே எனக்கு..
அவ அப்பன் என்னய தனியா உடாம அவனெங்கூடவே ஏஞ் சுத்தினான்னு அப்போ தா தெரிஞ்சுது.
ஊருக்குள்ளார ஒருத்த உடாம அவ காதல் கதைய காவியமா ஒப்பிக்கறானுக.
அம்முட்டு லவ்ஸ் பண்ணவ.. என்ற கூட எப்புடி சிரிச்சு பேசினான்னு நினைக்க.. அப்புடியே மண்டைக்குள்ள நண்டு பூந்த கணக்கா கொடையுது.
அதுல அவ லவ்ஸ் பண்ணவனோட அண்ணங்காரன் பேசினான் பாரு..” என அவன் பேச்சை செய்கையை செய்து காட்டியவன்.. முழு சைக்கோ போல தான் கண் முன் நின்றார்.
அன்று கஸ்தூரி முன் நின்ற அதே பாவம் மாறாது அப்போது பேசிய அனைத்தையும் பேச,
கேட்டிருந்தவருக்கு நெஞ்சமெல்லாம் பதறி போனது.
“அப்போ நடந்தது தெரிஞ்சு ஆத்தாளுக்காக நியாயம் கேட்கறேன்னு.. என்ற சட்டைய புடிக்கிறான் அந்த பொடிப்பையே.
அதான் போடா வெளியேன்னு விரட்டினேன் அவன. போனவன் சம்பாதனையோட திரும்ப வந்து நின்னான் என்ற முன்னாடி.. அவ அக்காள அவனோட கூட்டி போறேன்னு..
அவ ஆத்தாக்காரி சொத்து வித்த காசு, நகைன்னு இருந்ததெல்லாம் கரஞ்சிட்டு இருந்த நேரத்துல அவன் பணத்தோட வந்தா விடுவேனா..?
அதும் என்ற சட்டைய புடுச்சு என்ற முன்னக்க கை ஓங்கி நின்னானே.. எப்புடி இருக்குமெனக்கு..?
அவ ஆத்தா யாரோடவோ படுத்து தான் உன்ற அக்காளையும், உன்னயும் பெத்தான்னு ஊருக்கே சொல்லுவேன்.
அப்புடி நா சொல்ல கூடாதுன்னா மொத்தமா சம்பாரிச்சு எங்கிட்ட கொட்டுன்னேன்.
அவனும் கோழ மாதிரி செஞ்சுட்டு இருந்தான்.. இதோ இவோ அவனோட வாழ்க்கையில வர்ற வரை..
இவோ எப்போ வந்தாளோ.. அப்பவே எல்லா என்ற கைய உட்டு போச்சு..
இவோ, அவன மட்டுமில்ல.. உன்ற தம்பி, உன்ற மவ.. ன்னு மொத்தமா அத்தன ஆம்பிளயும் மயக்கி..” என்றவரின் முதுகில் விழுந்த உதையில் குப்புற விழுந்தவர்,
தடுமாறி முகத்தை தூக்கி பார்க்க, முகமெல்லாம் சிவக்க கண்ணீலிருந்து நீர் அருவியாய் பொழிய நின்றிருந்தாள் வாணி.
“என்ற ஆத்தா சாவ நீ தான் காரணமா..?
நீ செஞ்ச வேலயால தான் என்ற தம்பி இத்தன வருஷமா எல்லாத்தையும் விட்டுபோட்டு தனியா போய் அநாத மாதிரி கிடந்தானா..?
ச்சீ.. நீயெல்லாம் எனக்கு அப்பனே இல்ல..
நீ என்னடா சொல்றது எங்க அம்மா உத்தமியா இல்லையான்னு.. நாயே..
உன்னய மாறி ஒருத்தன் எனக்கும் சரி.. என்ற தம்பிக்கும் அப்பனா இருக்க வேணுங்கற அவசியமே இல்ல..
நாங்க அப்பன் பேர் தெரியாத புள்ளைங்களாவே இருந்துக்கறோம்..” என வீராவேசமாய் பேசியவள்,
மடிந்து அமர்ந்து நெஞ்சில் கை வைத்து,
“எப்புடிடா எந்தம்பியையும் அம்மாவும் சேத்து பேச முடுஞ்சது உன்னால..?
அய்யோ.. இத கேட்டு அவன் என்ன துடிதுடிச்சிருப்பான்..?!
என்னைய விட்டு ஏன்டா விலகி போறேன்னு ஒவ்வொரு தடவ கேட்கறப்பவும்.. என்னோட மனசு வேதனப்படக்கூடாதுன்னு மொத்த பாரத்தையும் தாங்கிட்டானே..
அய்யோ.. இது அத்தனையும் தனி மனுஷனா எப்புடி தா தாங்கிட்டு இருந்தானோ..?
இப்புடி தனியா தவிக்க விட்டுட்டேனே.. அவன..
எங்கிட்ட ஒத்த வார்த்த சொல்லாம இருந்துட்டானே..” என்ற வாணியின் கதறல் அனைத்தும் காதில் விழுந்து மனதுக்குள் சென்றாலும், எழுந்து ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் யமுனா.
யமுனா மட்டுமல்ல வாணியின் உடன்பிறப்பும் அதே நிலையில் தான் நின்றிருந்தான் சிலையாய்.
ஜெயசீலனின் மறுமுகத்தை கண்டு செயலற்று, மறத்துப்போய் நின்ற சகுந்தலாவின் விழி வட்டத்தில் தெரிந்த கலங்கல் உருவத்தை.. தன் கண்ணை துடைத்து பார்க்க, எஃகு சிலையென நின்றிருந்தான் தீனதயாளன்.
“தீனா..” என சகுந்தலா அழைக்க, வாசல் கதவருக்கே நின்றிருந்த தன் தம்பியை திரும்பி பார்த்த வாணி, மின்னலாய் எழுந்து அடித்துபிடித்து அவனிடம் ஓடியவள் அவனை கட்டிக்கொண்டு கதற,
அவனால் பேச கூட முடியாத படி தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைத்து போனது போலிருந்தது.
“ஏன்டா விட்டே..? ஏன்டா இவன விட்டே..? அன்னைக்கே எல்லாத்தையும் சொல்லி.. இவன இல்லாம ஆக்கியிருந்தா.. நீ ஆம்பள..
எப்புடிடா நம்ம அம்மாவ அப்புடி பேசினவன விட்டே..?” என அவனின் நெஞ்சில் வலிக்கும் படி அடித்து கதறியவளை கண்டு வலி மிகு பார்வை வீசியவன்,
“இன்னைக்கு நீ விசயம் தெரிஞ்சு கதறிட்டு இருக்கீயே.. இது இத்தோட நிக்காது அக்கா.. காலம் பூராவும் அந்த வார்த்தை கொடுக்கற வலி கூடவே வரும்.
அது இந்த உசுரு போற வரை உள்ள இருந்து குத்தும்.. அப்படி ஒரு நிலைமை என்னோட போகட்டும்.. உனக்கு வேணாமேன்னு தான் இவனோட வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியா போனேன்.
இவன தொட்டு.. காரணம் தெரிஞ்சு.. நீ என்னைய மாதிரி துடிக்க வேணாமேன்னு.. மொத்த வலியையும் எனக்குள்ள தாங்கிக்கிட்டேன்.
ஆனா, இன்னைக்கு அந்த ஆளு வாயால இப்படி உண்மையெல்லாம் வருமுன்னு நா நினைக்கல க்கா..” என்றவனின் உடலோ இத்தனை வருட காலமாய் மறைத்த உண்மை வெட்டவெளிச்சமான அயர்ச்சியில் சரிந்தது.
“டேய் தம்பி..!!” என தாங்கிக்கொண்ட வாணி,
“வேணாம் டா.. இந்த ஆளோட சங்காத்தமே இனி நமக்கு வேண்டாம்..
இனி இவனுக்கும் நமக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல. வாடா.. போயிடலாம்..
இந்த ஆளு இருக்க இடத்துல வீசுற காத்து கூட வெசமா மாறி நம்மள அழிச்சிடும்..” என உசுப்பினாள்.
தலைகுனிந்து தனக்குள் எழுந்த அத்தனை ஆர்ப்பரிப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர போராடிக்கொண்டிருந்தவன் காதில், “அண்ணா..!!! அண்ணீ.. இங்கே சீக்கிரம் வா..” என்ற ஜெகதீஷின் பதட்டமான குரல் விழ மின்னலென விரைந்தான் அவர்கள் அறைக்கு.
error: Content is protected !!