Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே -05

    இன்னும் இரண்டு நாட்களில் திருமணம். நிலாவின் வீட்டினர் தரங்கினியின் வீட்டினர் தேசிகனின் அக்கா வீடு அண்ணன் வீட்டில் இருந்து என்று சொந்தங்கள் வீடே நிரம்பி வழிந்தது. 

    சமையலுக்கு என்று ஆள் போட்டிருந்தார் தேசிகன். 

    “எம்மா நீரா யார் யாருக்கு என்ன செய்யணும் னு நீ தான் பக்கத்தில் இருந்து பார்த்து செய்யணும் மா. உதவிக்கு இன்னும் ரெண்டு பேர் வேணும்னாலும் வச்சுக்கோ சாப்பாட்டுல ஒரு குறையும் வந்திடக் கூடாது”என்று மருமகளிடம் சொல்லி இருக்க அவளும் தலையாட்டினாள். 

    ‘தன் வீட்டினரும் இந்தியாவில் இருந்திருந்தால் இன்று அவர்களும் வந்திருப்பார்கள் தானே?!’ என்று ஏக்கமாய் நினைத்துக் கொண்டாள். 



Advertisement

    அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளின் அண்ணன் அழைத்திருந்தான்.

    “ஹலோ அண்ணா!”என்று மலர்ச்சியாக அழைத்திட அந்த பக்கமும் புன்னகை தவழ்ந்தது.

   சிலபல பேச்சிற்கு பிறகு”உன் கொழுந்தனுக்கு கல்யாணம் எப்போ மா?”என்று கேட்க 

Advertisement

    “டேட் பார்க்கலையாண்ணா நீ?, நாளன்னைக்கு கல்யாணம் எல்லா ரிலேட்டிவ்ஸும் வந்துட்டாங்க. என் பக்கம் நீங்களும் வந்திருந்தா ஹாப்பியா இருந்திருக்கும்”என்றாள் ஆவலாக.

Advertisement

    சற்று நேர மௌனத்திற்கு பின் “சீக்கிரம் வந்து உன்னை பார்க்கிறேன் மா”என்றவன் பேசும் முன்பே அவளின் அண்ணி வேகமாய் பேசினார்.

    “வந்திருக்கலாம் தான் நீரு. ஆனா அழைக்காத கல்யாணத்துக்கு எப்படி வர்றது?”என்று கேட்டு விட அதிர்ந்து நின்றாள் நீரதி.

    “நான் சொன்னேனே அண்ணி, அதுவும் இல்லாமல் அத்தை மாமா பேசறேன்னு சொன்னாங்களே?”என்று திக்கி திணற

Advertisement

    “நீ சொன்ன சரி, ஆனா வேற யாரும் உங்க வீட்டில் இருந்து சொல்லலை. ஏன் உன் வீட்டுக்காரரே சொல்லலையாம்”என்று நக்கலாய் பேச, அந்த பக்கம் நீரதியின் அண்ணன் எதுவும் பேசாதே என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

    “சொல்லித் தான் ஆகணும் னு கட்டாயம் இல்லை நீரு. ஆனா ஜஸ்ட் ஒரு மரியாதைக்கு சொல்லி இருக்கலாம் தானே இத்தனைக்கும் உன் கொழுந்தன் போன வாரம் கூட ஃபோன் பண்ணி ஃப்ரெண்ட் வர்றான் ரிசீவ் பண்ணிக்க முடியுமானு கேட்டான். நாங்களும் ஓகே சொல்லி அவனை கவனிச்சுக்கிட்டோம் அப்போ கூட இவர் கேட்டார் கல்யாண வேலை எப்படி போகுதுனு, நல்லா போகுதுனு சொல்லி விட்டுட்டான். ஒரு பேச்சுக்கு நீங்களும் இருந்தா நல்லா இருக்கும் ஏதாவது சொல்லணுமே?. ம்ஹூம். இதுல வரும் போது பர்ஃப்யூம் வாங்கிட்டு வரணுமாம்”என நக்கலாகவே பேச்சை முடித்தாள் அவளின் அண்ணி.

    நீரதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 

    “சாரி அண்ணி!”என்றவளுக்கு எப்படி மன்னிப்பு கேட்பது என்று கூட தெரியவில்லை.

    “ப்ப்ச் நீரு, அவ ஏதாவது பேசுவா மனசில் வச்சுக்காத சரி நீ சொல்லு நாங்க நெக்ஸ்ட் வீக் இந்தியா வர்றோம் உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்? ஸ்வரு க்கு என்ன வேணும்?”என்று தங்கையின் விசும்பல் தாளாமல் அவன் கேட்க 

    “நீங்க வந்து என்னை பார்த்தாலே போதும் ண்ணா”என்றாள் நிறைவாக.

    “சாரி நீரு, ஏதோ ஆதங்கம் சொல்லிட்டேன். அதெல்லாம் விடு நாங்க வந்ததும் வெளியே போக ப்ளான் பண்ணி இருக்கோம் நீயும் உன் ஹஸ்பண்டும் எங்களோட ஜாய்ன் பண்ணிக்கணும். அவர் கிட்ட பர்மிஷன் கேளு, நாங்களும் பேசறோம்”என்றாள் அண்ணியானவள்.

    “சரிங்க ண்ணி”என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு போனை கட் செய்தாள்.

    அதற்குள் வளர்மதி வந்து இரண்டு முறை பார்த்து விட்டு செல்ல கோபம் இருந்த போதிலும் வெளியே சென்றாள்.

    “பேசி முடிச்சாச்சா… எவ்வளவு நேரம்?”என்றவர் “அண்ணிக்கு காஃபி வேணுமாம் போடு நீரா. ஒரு நாலு பேத்துக்கு சேர்த்தா மாதிரி போடு”என்றார்.

    ‘அவரின் மகள் இருக்கிறாளே போட சொல்ல வேண்டியது தானே?’ என்ற ஆதங்கத்துடன் தரங்கினியைப் பார்க்க, அவளோ மகனை மடி விட்டு இறக்கவில்லை. பேச்சும் சிரிப்புமாக அமர்ந்திருக்க வேறு வழியின்றி காஃபி போட சென்றாள்.

    “ரதி இந்த மளிகை சாமான் எல்லாம் எடுத்து அடுக்கிடு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ”என்றபடி வியர்த்து வழிய வழிய உள்ளே வந்து சாமானை இறக்கினான் ஆழியன்.

    “ஹ்ம்ம்”என்றவள், அவன் பக்கம் திரும்பாமல் இருக்க “தண்ணி குடுடி இன்னும் எதுவும் குடிக்கலை”என்றதும் தண்ணீரை கொண்டு வந்து நீட்டினாள்.

    “ஏன் ஒரு மாதிரி இருக்க?”என்று கேட்டபடியே தண்ணீரை அருந்த 

    “எதுவும் இல்லை”என்றவளின் குரலில் சுரத்தில்லை. 

    “காஃபி போடுறியா?, எனக்கு இஞ்சி போட்டு டீ வை ரதி. தலைவலியா இருக்கு”என்றதும் அமைதியாக மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு இஞ்சியை துருவி போட அவளின் அமைதியில் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி நின்றான்.

    அதற்குள் அவனை அழைத்து விட்டனர் யோசிப்பதற்கு கூட இடம் கொடுக்காமல்.

    காஃபி ட்ரேயுடன் வெளியே வந்தவளை எதிர் கொண்டு தட்டை வாங்கினார் வளர்மதி.

    “சின்ன கிளாசில் இருக்கிறது இஞ்சி டீ அவருக்கு தந்திடுங்க”என்றவள் திரும்பி நடக்க 

    “ஹ்ம்ம் ஹ்ம்ம்”என்றவர் அனைவருக்கும் தர “என்ன நீரு வந்து அஞ்சு நிமிஷம் பேசக் கூட உட்கார மாட்டேங்குது. ஏம்மா தரு நீயும் அவளுக்கு ஒத்தாசை பண்ண வேண்டியது தானே ?, பிள்ளையை பார்க்க ஆளா இல்லை. பாவம் ஒத்தையாவே வேலை பாக்குது அந்த பொண்ணு.”என்று தரங்கினியின் பாட்டி கேட்டே விட்டார்.

    “இந்த கெழவி வேற…”என்று தரங்கினி அம்மா முணுமுணுப்பது அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது அந்த பாட்டியை தவிர, ஏனெனில் காது கொஞ்சம் மந்தம் அவருக்கு.

    தரங்கினி மையமாக புன்னகைத்து வைத்தாள்.

    அங்கே சிறிது நேரம் மௌனம் ஆட்சி செய்ய, சமையலறை கதவருகே நின்றிருந்த மனைவியை ஒரு முறை பார்த்து விட்டு தேநீரில் கவனம் ஆன ஆழியன், சட்டென எழுந்து சென்று தன்னறை புகும் தருவாயில் நீரதியை அழைத்தான்.

    “என்னங்க?!”கையை புடவை முந்தானையில் துடைத்தபடி கேட்க 

    “முகத்தை கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு பாப்பாவையும் தூக்கிட்டு வா. கடைக்கு போகணும்”என்று அழைக்க விநோதமாய் பார்த்தாள் அவனை.

    “போய் பாப்பாவை தூக்கிட்டு வா”என்றவன் குளிக்க சென்றான்.

    திடீரென அழைக்கிறானே வீட்டில் என்ன சொல்வது என்ற யோசனை அவளுக்கு. தன் அண்ணன் வீட்டை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பது கூட பின்னால் சென்றிருந்தது நீரதிக்கு.

    “வரு, அப்பா கூப்பிடறாங்க வா”என்றதும் குழந்தை ஓடி வந்து விட்டாள்.

    “உனக்கு பிடிச்ச ஃப்ராக் எடு தலை சீவிக்கோ வா. அப்பா வெளியே கூட்டிட்டு போறாங்களாம்”என்று சொல்லும் போதே அவளையறியாமல் ஒரு குதூகலம் தொற்றியிருக்க உள்ளிருந்தவன் மென்மையாக புன்னகை சிந்தினான்.

    அவன் வெளியே வந்ததுமே தாயும் மகளும் பரபரப்பாக கிளம்பி நிற்க, அதற்குள் ஓரிரு முறை பொன்னி அழைத்து விட்டார் அவளை.

    “சீக்கிரம் வாங்க”என்றவன் வெளியே வந்து,”ரதியை கடைக்கு கூட்டிட்டு போறேன். கல்யாணத்துக்கு ஜாக்கெட் எடுத்தது ஃபிட்டா இல்லை வேற எடுத்துட்டு வர்றோம்”என்றான் பொதுவாக.

    “ஏன் டா அதெல்லாம் முன்னமே பார்க்கிறது இல்லையா? எல்லாரும் வந்ந நேரம் தான் போகணுமா…?வேலை செய்ய வணங்காதே உன் பொண்டாட்டிக்கு ஆமா எவ்வளவு நேரம் ஆகும் வர?, ஏழு மணிக்கு எல்லாம் வந்திடுவீங்க தானே?”என்று வளர்மதி கேட்க 

    “டைம் எல்லாம் எப்படி மா சொல்றது முன்ன பின்ன ஆகும்”என்றவன் “ரதி சீக்கிரம் வா”என்று அதட்டலாய் அழைக்க பிள்ளையோடு ஓடி வந்து விட்டாள் அவள்.

    “எந்த நேரத்தில் எதை செய்யணும்னே தெரியாது”என்று பொடுபொடுத்த வளர்மதி “சரி சரி போயிட்டு சீக்கிரம் வாங்க”என்றார் தன்மையாக மற்றவர்கள் முன்பு பேசினால் தனக்கு அவமானம் ஆகிவிடுமே என்று பல்லைக் கடித்தபடி சொல்லி விட்டார்.

    ஆழியன் தன் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யவும் பிள்ளையை பின்னால் அமர வைக்கப் போனவளை தடுத்து “முன்னாடி உட்காருவா பாப்பா”என்று வாங்கி தனக்கு முன் பக்கம் அமர்த்திக் கொண்டான்.

    சீட்டில் அவனை உரசாமல் தள்ளி உட்கார்ந்தவளை எதுவும் கூறாமல் வண்டியை கிளப்பியவன், சற்று தூரம் சென்றதுமே அவள் கையை எடுத்து தன் இடையைச் சுற்றி கட்டிக் கொண்டான்.

    கண்கள் கலங்கும் போல் இருக்க அதனை வெளிக்காட்டாது அமர்ந்தவளை கண்ணாடி வழியாக பார்த்து விட்டு அங்கிருந்த விநாயகர் கோவிலில் நிறுத்தினான்.

    “பூவும் அர்ச்சனை தட்டும் வாங்கு ரதி, பார்க் பண்ணிட்டு வர்றேன்”என்று நிறுத்த அவள் இறங்கியதும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு மகளை தூக்கிக் கொண்டான்.

     மல்லிகை பூவை வாங்காமல் அங்கிருந்த காக்கரட்டானை எடுத்து எவ்வளவு என்று கேட்டவளை முறைத்து விட்டு “மல்லிப்பூ ரெண்டு முழம் குடுங்க அப்படியே அர்ச்சனை தட்டும்”என்று பணத்தை நீட்டினான்.

    “முழம் நூறு ரூபாய்”என்று முனகியவளை சட்டை செய்யாமல் “இன்னும் பத்து முழம் கூட சேர்த்து வாங்கி தர்ற அளவுக்கு தான் சம்பாதிக்கிறேன்”என்றான் முணுமுணுப்பாக

     அதற்கு மேல் வாய் திறப்பாளா அவள். 

    மூவருமாய் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசித்து விட்டு மீண்டும் கடைக்குச் சென்று துணி எடுக்கிறேன் பேர்வழியாக ஷாப்ட் சில்க் சேலை ஒன்றை எடுத்து தந்தவன்,” கல்யாணத்துக்கு முதல் நாள் போறப்ப கட்டிக்கோ” என்றவன் மகளுக்கும் தனக்கும் எடுத்தான். 

      “ஏங்க?”

    “ஹ்ம்ம்”என்றவன் நிமிர்ந்து பார்க்க “இந்த புடவைக்கு மேட்சா ரெடிமேட் ஜாக்கெட் எடுத்துக்கவா?”என்று தயக்கத்துடன் கேட்க 

    மெல்லிய சிரிப்புடன் “எடுடி”என்றவன்”நானும் பாப்பாவும் சாட் சென்டர் ல இருக்கோம் எடுத்துட்டு வா”என்று தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்தான். நீரதி அந்த பக்கம் நகரவே மகளோடு வெளியேறி சாட் சென்டரில் பாவ் பாஜியை ஆர்டர் செய்திருந்தான். 

    அதற்குள் வீட்டில் இருந்து அழைப்பு வந்து விட்டது. தேசிகன் தான் அழைத்திருந்தார்.

    “ஹ்ம்ம்”என்று பல ஹ்ம்ம் க்களை கொட்டி இருந்தவன் முகம் இறுகிக் கிடந்தது.

      “வர்றோம் ப்பா”என்று இணைப்பைத் துண்டிக்கவும் நீரதி வரவும் சரியாக இருந்தது.

      “என்ன ஆச்சு?”என்றதுமே “சாப்பிடு வா கிளம்பணும்”என்று பாவ் பாஜியை மட்டும் உண்டு விட்டு கிளம்பினர்.

    அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தில் வேறெதுவும் பேசிடவில்லை ரதி. பேசிவிட்டு ஏதேனும் சட்டென திட்டி விட்டால் என்ன செய்ய என்று அமைதியாக இருந்தாள். இந்த இலகுவான சூழலை கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.

    ….. தொடரும்.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!