உளமாற உனதாகிறேன் – 4
உளமாற உனதாகிறேன் – 4
கடிகார முள் நகர்ந்து மணி மூன்றை காட்டியது. கண்ணை கசக்கியபடி எழுந்தாள் வெண்பா. உறங்கியும் உறங்கா நிலை அவளுக்கு… இன்னும் விடிந்திருக்கவில்லை… மணி ஒன்பதுக்கு தான் முகூர்த்தம் என்பதால் எல்லாரும் அப்போது தான் கண் அசந்திருப்பார்கள் போலும்! இருப்பினும் வீட்டின் முன் ஒரு சிலர் பேசிக் கொண்டு இருந்த சத்தம் கேட்டது!
மெதுவாக எட்டிப் பார்த்தாள். பெருமாள் யாரிடமோ வேலை ஏவிக் கொண்டிருப்பது தெரிந்தது…
இவள் எழுந்து நிற்பது தெரிந்து அரை தூக்கத்தில் பக்கத்தில் வந்து நின்றாள் பிரபா.
“ஏய் வெண்பா என்னடி அதுக்குள்ள எழுந்துட்ட… இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குடி… டைம் இருக்கு… கல்யாணம் முடிஞ்சா உட்கார கூட நேரம் இருக்காது… என்னடி என் புருஷனா அது கத்திட்டு இருக்கிறது… அந்த ஆளுக்கு வேற வேலையில்ல… எவனயவது ஏச்சிட்டு திரியனும்…” என்றபடி மீண்டும் சென்று அவள் படுத்துவிட… வெண்பாவிற்கு தான் மனம் ஒருநிலையில் இல்லை…
Advertisement
என்னென்னவோ நினைப்புகள் மனதில் ஊர்வலமாக வர… இறுதியில் அது பெருமாளிடம் வந்து நின்று… வாசுவிடம் முடிந்தது. தனக்கு வாசுவை பிடித்தது என்ற நினைப்பு மறந்து… இந்த வாசுவும் பெருமாள் பார்த்த வரன் தானே… ஒருவேளை இவனும் தன் தந்தை தலையாட்டுவது போன்று பெருமாள் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுவனோ என்ற நினைப்பு எழுந்த நொடி… இத்திருமணம் வேண்டாம் என்று ஸ்திரமாய் முடிவு எடுத்தவள்… அதை செயல்படுத்தவும் ஆய்த்தமானாள்.
தன்னுடைய அழைப்பேசியை மட்டும் எடுத்துக் கொண்டவள் மெது மெதுவாக பூனை நடையிட்டு வீட்டின் பின்புறம் வர… அங்கு யாரும் இல்லை… வேக வேகமாக பின் வாசலுக்கு சென்றவள் வெளியேற முயல…
“எங்க போற வெண்பா… கல்யாண பொண்ணுக்கு இந்நேரத்துக்கு வெளியில என்ன வேலை” என்ற குரலில் அவசரம் அவசரமாக திரும்பியவள் கண்டது… அர்ஜூனை தான்.
Advertisement
“என்ன வெண்பா எதுவும் பேசாம அமைதியா இருக்க… எனக்கு தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு… நான் சொல்றது சரி தானே… உண்மையை சொன்னா உனக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்” என்ற அர்ஜூனை யோசனையாக பார்த்தாள். தன்னை விட ஒரு மாதம் சிறியவன் என்றாலும்… அவனோடு அத்தனை நட்பு இல்லை…
Advertisement
ஏன் அவனுமே இவளை கண்டுக்கொள்ள மாட்டான்… இனியாளின் பின்னேயே சுற்றுபவன்… அப்படியிருக்க இப்போ தானாக வலிய வந்து உதவி செய்வது எங்கேயோ இடித்தது!
நேற்று இனியாள் இவளிடம் வாசு வந்ததை பற்றி பேசியது… அதற்கு வெண்பாவின் எதிர்வினை என அனைத்தையும் எதர்சையாக கண்டவனுக்கு என்னவோ இடித்தது!
குழம்பிய குட்டையாக அவள் மனம் கலங்கியிருக்க… அதில் மீன் மாட்டுமோ என்று சிறு தூண்டிலிட… சரியாக மீனும் மாட்டியது.
Advertisement
“நீ எதுக்கு ஹெல்ப் பண்றன்னு புரியல… ஆனா அது ஆராய வேண்டிய அவசியம் எனக்கு இல்ல… இப்போதைக்கு இங்கிருந்து கிளம்புனா போதும்” என்றதும் அவனிடம் வெற்றி புன்னகை… அதை அவளுக்கு தெரியாமல் மறைத்தவன் தன் திட்டத்தை அவளிடம் சொல்ல… அவளும் சரியென்றபடி மீண்டும் வீட்டிற்குள்ளே சென்றுவிட்டாள்.
••••••••••••
“மணி எட்டை நெருங்கிக் கொண்டிருக்க… பட்டுச் சேலை… தங்க நகை அணிந்து நடக்க முடியாது அவ்வீட்டின் உள் நுழைந்தார் ஞானசெல்வி. நமச்சிவாயத்தின் அக்கா!
“என்னடா சிவம்… இன்னும் இங்கேயே இருந்தா எப்படி… எப்போ கோவிலுக்கு கிளம்ப போறீங்க… மணி இப்போவே எட்டாக போகுது… ஆமா அங்க எல்லாம் யாரு வேலையை பார்க்குறது…. எம்மவன் தான் பார்த்திட்டு இருக்கானா…”
“ம்ம் அவன் ஒருத்தன் இல்லன்னா நீயி ரொம்ப அல்லாடிட்டு இருக்கனும்… ஆனா அவன் அருமை இந்த வீட்டுல யாருக்கு தெரியுது” என்று படபடவென்று பொறிய…
“என்னக்கா இப்படி சொல்லிட்ட… இந்த வீட்டுல எல்லாம் நம்ம மெருமாளு தானே… பக்கத்து தெருவிலே வீடு இருந்தாலும்… இதுதான் நீ கல்யாணத்தை வர நேரமா… நீ தானே முன்ன நின்னு செய்யனும்…”
“என்னடா செய்றது… உட்கார்ந்தா எழ முடியல… எழுந்தா நிக்க முடியல… ஒரே மூட்டு வலி…. நீ தான் வாய் நிறைய நான் வரலேன்னு கவலைப்படுற… உன் பொண்டாட்டிக்கு அந்த நினைப்பு இல்ல போல...”
“என்னக்கா இப்படி சொல்லுற… ஏதோ கோவிலுக்கு தேவையானதை எடுத்து வைச்சிட்டு இருந்தா”
“ம்க்கும்… எல்லாம் ஒரு சாக்கு… வந்து இவ்வளவு நேரம் ஆச்சு… ஒரு எட்டு பார்த்தாளா… இல்ல ஒரு வாய் காப்பி தண்ணி கொடுத்தாளா… உன் மவ என் வீட்டுல ராணி மாதிரி இருக்க… அதுக்கு உன் பொண்டாட்டி செய்ற கைம்மாறு” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே…
“இந்தாங்க அண்ணி டீ” என்றபடி வாசகி அவரை நெருங்கினார்.
” ம்ம்… வந்து இம்புட்டு நேரமாச்சு… இப்போ தான் உன் கண்ணுக்கு தெரிஞ்சேனா… ஆமா எங்க கல்யாண பொண்ணு… ரெடியாகிட்டாளா… இல்ல அக்காவும் தங்கச்சிங்களும் சேர்ந்து கொட்டம் அடிச்சிட்டு இருக்காங்களா…”
“ரெடியாகிட்டா அண்ணி… இனியா தான் வெண்பா கூட இருக்கா… பிரபா ரோஜாவை ரெடி பண்ணிட்டு இருக்கா…”
“ஒத்த பொம்பிளை பிள்ள… அவளை ரெடிப்பண்ண உன் மவளுக்கு இம்புட்டு நேரமா… என்னைக்கு தான் அவளுக்கு சுறுசுறுப்பு வருமோ தெரியல… ஏதோ என் மவனை கட்டினதுனால பொழைக்குற… இல்லன்னா என்ன செஞ்சு இருப்பாளோ ” என்று குறை சொல்லிக் கொண்டு இருக்க…
அறையின் உள்ளே இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளியாளுக்கு பற்றிக் கொண்டு வந்தது!
“என்னக்கா இந்த அத்தைக்கு வேற வேலையே இல்லையா… எப்போ பார்த்தாலும் அக்காவை குறை சொல்றதே வேலை… அக்கா பொண்ணு கேட்டாங்கன்னு எதை பத்தியும் யோசிக்காம பெருமாள் மாமாவுக்கு கட்டி வைச்சாங்க பாரு இந்த அப்பாவை சொல்லனும்… எல்லாம் அவரு கொடுக்கிற இடம் தான்” என்று பொறுமிக் கொண்டிருக்க வெண்பாவோ பதட்டத்துடன் நகத்தை கடித்துக் கொண்டு இருந்தாள்.
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் தான் திருமணம். அதுவும் ஒன்பது மணிக்கு தான் முகூர்த்தம் என்பதால்… சரியான நேரத்திற்கு அங்கு சென்றால் போதும்… சடங்குகள் செய்ய சரியாக இருக்கும்… என்று முடிவெடுத்திருந்தனர்.
“மூகூர்த்ததிற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி வீட்டை விட்டு வா… நான் பின்னாடியே என் பிரென்ட் காரோட நிக்குறேன்… அதுல இங்கிருந்து போயிடு… அது இல்லாம இப்போவே கிளம்புன… அந்த எம்.எல்.ஏ ஈசியா உன்னை கண்டுபிடிச்சிடுவான்” என்று அர்ஜூன் கூறியிருக்க… இவளுக்கும் அவன் சொல்வது சரியெனபட அப்போது தலையசைத்திருந்தாள்.
ஆனால் இப்போது அனைவரையும் மீறி எப்படி வெளி செல்வது... அணிந்திருந்த பட்டு புடவை கணப்பது போன்று இருந்திட… அணிந்திருந்த தங்க நகைகளும் கழுத்தை நெரிப்பது போன்றிருந்தது! பெண் பார்க்க வந்திருந்த போது வாசுவின் அன்னை அணிவித்த நகைகள் தான்… தன் செல்வாக்கை காட்ட வளையாபதியின் ஏற்பாடு அவை!
“என்னக்கா எதுக்கு உனக்கு இவ்வளோ வேர்க்குது… கல்யாணம் டென்ஷனா… விடு… விடு… பார்த்துக்கலாம்… ஆமா இந்த கல்யாணத்துக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி யாருக்கும் தெரியாம பார்த்துக்குறது… பேசுறது… இதெல்லாம் நீ செய்யலையா” என்றபடி முறுக்கு ஒன்றை கடித்துக் கொண்டு இருக்க… மின்னல் போன்று பளிச்சென்று யோசனை தோன்றிட… இனியாளின் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள்.
“ப்ச்ச் என்னக்கா உனக்கும் முறுக்கு வேணுமா… நீ கல்யாணம் முடிஞ்சு சாப்பிடு… இல்லைன்னா உன் மேக்கப் எல்லாரும் கலைஞ்சிடும்” என்று சாப்பிடுவதில் கவனமாக…
“ஹேய் அதில்லடி… உன் மாமாவுக்கு… அதுதான் வாசு… அவருக்கு என்னை இப்போ பார்க்கணுமா… அதுதான் எப்படி வெளியே போறதுன்னு யோசிக்கிறேன்… இந்த அத்தை வராம இருந்தாவாச்சும் எப்படியாச்சும் அம்மாக்கிட்ட சொல்லிட்டு போய் இருப்பேன்… இப்போ எப்படி போறது” என்று நகத்தை கடிப்பது போன்று பாவனை செய்திட…
“ப்பூ இதுதான் மேட்டரா… இதுக்கா இவ்ளோ டென்ஷன்… இந்த இனியா இருக்கும் போது நீயெதுக்கு பீல் பண்ற” என்றபடி மெதுவாக வெளி எட்டிப் பார்த்து நோட்டமிட்டாள்.
அனைவரும் கல்யாண பரபரப்பில் இருந்திட… வெண்பாவின் கரத்தை பற்றியபடி பின் வாயிலுக்கு சென்றவள்…
“அக்கா எங்க உன் ஆளு… சீக்கிரம் வந்து பார்த்திட்டு போகச் சொல்லு… அப்புறம் யாராச்சும் வந்தா தப்பா போயிடப் போகுது”
“இருடி நானும் அவரைத்தான் தேடுறேன்” என்றபடி சுற்றிலும் பார்வை ஓட்டியவள்… கறுப்பு நிற கார் ஒன்று வீட்டின் ஓரம் நின்றிருந்ததை கண்டுவிட்டவள்…
“இனியா அவரு கார்ல இருக்காரு போல… நான் போய் பேசிட்டு வரேன்… நீ வீட்டுக்கு போ…”
“சரி… சரி… சீக்கிரம் வந்துச் சேரு…” என்றபடி செல்ல முயன்றவளை இறுக அணைத்து கொண்டவள்… “ஐ மிஸ் யூ டி” என்று கண்கலங்கினாள்…
“அட என்ன இப்போவே கல்யாணம் முடிஞ்ச மாதிரி சீன் போடுற… சீக்கிரம் பேசிட்டு வாக்கா… டைம் ஆகுது” என்றபடி உள் சென்றுவிட.. வெண்பாவும் காருக்குள் சென்றுவிட்டாள்.
இக்காட்சி சரியாக யாரின் பார்வையில் விழக்கூடாதோ அவரின் பார்வையில் விழுந்து தொலைத்தது… வெண்பா இனியாளை இறுக அணைத்து கண் கலங்குவதும்… அதற்கு இனியாள் ஏதோ ஆறுதலாக சொல்லிவிட்டு வீட்டினுள் செல்வதும் தெரிந்தது… மெது மெதுவாக காரும் அவரின் பார்வையில் இருந்து மறைந்திட… நொடியில் பரபரப்பானார் ஞானசெல்வி.
“டேய் சிவம்… டேய் சிவம்… எங்கடா இருக்க… சீக்கிரம் இங்க வாடா… இந்த சின்னக்கழுதை வெண்பாவை எங்கேயோ அனுப்பிவிடுறா… அய்யோ என் மவன் அரும்பாடு பட்டு சம்பந்தத்தை பேசி முடிச்சானே… ஓடுகாளி கழுதை… இப்படி மூகூர்த்தத்துக்கு முன்னாடி ஓடுறாளே” என்று கத்திட… பார்ப்போர் அனைவருக்கும் இவ்விடயம் மெல்ல அவலானது!
நொடியில் மணமகள் வீட்டை விட்டுச் சென்ற செய்தி காட்டுத்தீயாய் பரவ… வெண்பா ஓடிப்போனதிற்கு உதவி செய்ததே இனியாள் என்று கதை திரிந்து போனது…
அச்செய்தி அச்சுப்பிசகாமல் வாசு குடும்பத்தையும் சென்றடைய… திருமணத்திற்கு கோவில் செல்ல வேண்டிய வளையாபதியின் குடும்பம்… நமச்சிவாயத்தின் இல்லம் நோக்கி படையெடுத்தது!
தொடரும்….

Ada pavamae iniyal yenna panna 😟😟😟😟