லிங்கா அவளை தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டான்… சக்தியின் அங்கமெல்லாம் அவனின் இம்சையை கூட்ட அதைவிட இப்போது தன்னவளின் வாயிலிருந்து வரும் சொல்லுக்காக “நீ இப்படி கூப்பிட்டினா.. நான் எதுக்கு கோவப்பட போறேன்… ம்…” என்றான்.
சக்தி ஏதும் சொல்லாமல் அவனின் மீசையை இழுக்க “என்ன சொல்லுங்க இல்ல இழுப்பேன்…” என்றாள்.
கண்ணாளன் “ஆமாம், உன்னை பார்க்க வந்தா, என்னை வெளிய உட்கார வைச்சிட்டு.. என்னமோ, ஒன்னுமில்லாத சாமான எடுத்துகிட்டு இருக்க… வரவேண்டியது தானே.. அப்புறம் எடுத்துக்கிட்டா போச்சு… “ என்றான் கோவமெல்லாம் போய்.. ஒரு நிறைவான மன நிலையில்.
இதை கேட்ட சக்தி அவனின் உதடுகளை வலிக்க வலிக்க கடித்தாள்.. லிங்கா “போடி.. என்னமோதான், நான் கடிக்கிறேன் பாரு” என்றான். உருண்டு, அவனிடமிருந்து பெட்டில் வந்து படுத்துக் கொண்டாள் அந்த மெல்லிடையாள்.
லிங்கா “ப்ரியா… இங்கேயே படி.. எங்கேயும் போகாதே… ப்பா, நீ போயிட்டா இந்த ரூம் ரொம்ப பெருசா தெரியுது டா..” என்றான்.
சக்தி “ம்கூம்.. இத்தனை வருடம் இங்கதானே இருந்தீங்க மாமா” என்றாள்.
இப்போது திரும்பி அவளின் உதட்டுக்கு ஒரு முத்தம் வைத்தான் அவளின் மாமன்.
சக்தி “நீங்க மட்டும் ஜெர்மன் போனீங்க, நான் சிங்கபூராவது போக வேண்டாமா…” என்றாள்.
[the_ad id=”6605″]
அவளின் இடையை இழுத்து.. “அப்படி ஏதாவது எண்ணம் இருந்தது.. இப்போவே விட்டுடு… ப்ளீஸ்” என்றான் அதிகாரமாக ஆரம்பித்த குரல் இறைஞ்சியது கடைசி வார்த்தையில்.
சக்தி “அப்படின்னா.. ரெண்டு வருஷம் பொறுமை சார் பொறுமை..” என்றாள்.
“எதுக்கு…”
எல்லாத்துக்கும். அப்படின்னா.. கூட இருக்கேன், இல்லை நான் போறேன்” என்றாள் கறாராக.
“அடியேய்.. வேண்டாம் டி.. லிங்காவ அப்படியெல்லாம் படுத்தக் கூடாது. சரி எதுவும் இல்ல.. சரியா.. “ என்றான்.
“சமத்து “ என்றாள் அவனுக்கு முத்தம் வைத்து.
“ஏன் திடீர்ன்னு வெளிநாடு பிளான்… மனசுல ஏதாவது வச்சிருக்கியா சக்தி.. எதா இருந்தாலும் சொல்லுடா..” என்றான் கணவன் வாஞ்சையான குரலில்.
அவனின் சக்தி பதறி எழுந்தாள்.. “ச்சு.. என்னங்க… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்…” என்றாள் பதறி.
கணவன் “இல்ல… நான் சொன்னதுக்கு ஏதும்… நீ, நான் செய்ததை.. பத்தி ஏதும் சொல்லல நீ… அது, உனக்கு ஏதும் சங்கடமா இருக்கா…” என்றான்.
சக்தி “என்ன வேணும்.. இப்போ” என்றாள்.
அந்த காதலன் “என்னை பிடிக்கும் என் ப்யார்க்கு அது தெரியும். ஆனா, ஏன்னு தெரியலை… அ.. அது.. எவ்வளவு செய்து… அதாவது… என்னென்னமோ.. செய்துட்டேன், அதான்.. கேட்கிறேன். ” என்றான் மனைவி என்பவள் எப்போதும் எல்லோரையும் விட ஒருபடி மேல்தான் போல… எங்கும் திக்காத லிங்கா அவளிடம் திணறி திணறி கேட்கிறானே… தன் சந்தேகத்தை.
சக்தி “ம்.. நம்ம என்ன லவ் மேரேஜ்ஜா…” என்றாள் ஒருமாதிரி குரலில். அவனின் சீண்டல் மொழியைத் தான் கொண்டு, கேட்டாள்.
“சக்தி…. நீங்க இப்போ மிஸ்செஸ் லிங்கா… மாத்த முடியாது” என்றான்.
சக்தி “எனக்கு மாத்தவும் பிடிக்காது” என்றாள். லிங்கா அவளை தன்மேல் போட்டுக் கொண்டு “அழுத்தம் ஏதும் சொல்லிட கூடாது.. என்னை பத்தி.. ம்.. போ.. போ…” என்றான்.
அமைதியாக இருந்தாள் சக்தி, பின் அமைதியான குரலில் “முதலில், உங்களை பற்றி, அப்பா எனக்கு சொல்லும் போதே.. ‘உன்னை பிடிச்சு கேட்கிறார்ன்னு சொன்னாங்க..’ அப்போவே உங்களை பிடிச்சிடுச்சு சரியா… நீங்க அதப்பத்தி ஏதும் நினைக்க கூடாது..” என்றாள் சுட்டு விரல் நீட்டி அவனை மிரட்டியபடியே.. அதனை அழகாக தன் இதழளால் இழுத்தான் கணவன்.
“விடுங்க “ என்றாள்
அடுத்து தானே “எனக்கு அந்த நிச்சய நேரத்தில் தான்.. மனது உங்களை அதிகம் எதிர்பார்த்தது. அ.. அப்போ, அந்த போட்டோவில் எல்லாம்.. அதான்… உங்க fb பார்த்தேன்ல.. அதுல எல்லாம் நீங்க ஜாலி பெர்சனா… தெரிஞ்சீங்க. அப்.. அப்போ அந்த.. அந்த ரசகுல்லா போட்டோ.. பார்த்தேன்” என நிறுத்தினாள்.
லிங்கா சங்கடமாக “ம்.. சொல்லு, உனக்குத்தான் எல்லாம் தெரியுமே.. நீ என்ன பீல் பண்ண சொல்லு” என்றான்.
“அ.. அதுல நீங்க சிரித்தபடி இருந்தீங்க. எ.. என்கிட்டே.. நிச்சயத்தில் அப்படியே நீங்க ஆப்போசிட்… ஒருமாதிரி… கோவமா… ஏனோதானோன்னு இருந்தீங்க… அதான் எ.. எனக்கு சங்கடம்… எப்படி என்னை பிடிச்சு கேட்டார்…ன்னு.” என்றாள் திக்கித் திணறி.
லிங்கா எழுந்து அமர்ந்தான் அவளை உற்று பார்த்து ஏதோ சொல்ல வர… சக்தி “அதுல எனக்கு பயம் எங்க அப்பா ஏதும் பொய் சொல்லிட்டாரோ அப்படின்னு. அப்புறம் ஒரு எண்ணம்.. அப்பா எனக்கு நல்லதுதான் செய்வார்ன்னு, அதை அப்படியே பிடிச்சிக்கிட்டேன்…
எனக்கு உங்களை விட நம்ம குடும்பத்தைத்தான் முதலில் பிடிச்சது.. தப்பா நினைக்க கூடாது… இது லவ் மேரேஜ் இல்லையே” என்றாள் சாதாரனக் குரலில்.
லிங்கா “சாரி… சாரி ப்ரியா” என்றான் இறுகிய குரலில்.
சக்தி அவனின் இதழ்களை தன் விரல்களால் மூடினாள் “ஆனா, இப்போ… இந்த மாமாவ ரொம்ப பிடிக்குது.. எனக்கு தெரியாதே… நீங்க இப்படி உங்களை பத்தி கூட அப்போ யோசிக்காமல்… இருந்தீங்கன்னு எனக்கு தெரியாதே. அதனால, உங்களை நான் எதுவும் சொல்ல.. எந்த மேரேஜ் நிபந்தனை இல்லாமல் நடக்குது… டிமான்ட்ல தான் எல்லாம் நடக்குதுங்க…
அது அவங்க, அவங்க தேவையை பொறுத்து… இது எனக்கு அப்போவே புரிஞ்சிது, அதான் சொன்னேனே… என் ப்ரெண்ட்ஸ் கதையெல்லாம்..
ஆனா, அ… அவங்க எல்லாம் சொல்லிக் கேட்டக் கதையிலிருந்து நீங்க, அதிலிருந்து நீங்க வேற.. கண்டிப்பா வேற… நம்ம குடும்பம் வேற.. எனக்கு உங்களை பழகிடுச்சு அன்னிக்கு சொன்னேனே.. நானே நினைச்சாலும் மாற முடியாதுன்னு.. அந்த அளவுக்கு உங்களை பிடிக்குது. எனக்கு நீங்க என்னை நல்லா பார்ப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு, அதை விட எதையும் நீங்க என்கிட்டே மறைச்சது இல்ல.. சோ… சோ..” என்றவள்.. அவனின் கைபற்றிக் கொண்டாள். அவனின் மனம் வலிக்குமோ என கண்ணால் அவனை பார்த்தாள்.
லிங்காக்கு வார்த்தை வரவில்லை.. அமர்ந்திருந்தவன் அவளை தூக்கி தன் மீது போட்டுக் கொண்டு சாய்ந்தான். வார்த்தையில் அந்த நிமிடத்தை வடிக்க அவன் நினைக்கவில்லை.. மென்மையிலும் மென்மையான தருணத்தை கண்மூடி ரசித்தனர் லிங்காவும் அவனின் ப்யாரும். இது காதல் திருமணம் இல்லை என இருவரும் சொல்லிக் கொண்டனர்.. ஆனால் காதல் சொல்லியது அவர்கள் காதில் விழவில்லை போல… இதுவும் ஒருவகை காதல்தான்.. அந்த வகை திருமணம் தான் என சொல்லியது காதல்.
எல்லாம் உடனே புரிந்து நடக்கத் தொடங்காது.. சிலது நடக்க நடக்க நமக்கு புரியும். அப்படிதான் இவர்களின் வாழ்வும்.. போல. நீயில்லாமல் என்னால இருக்க முடியாது என அவள் கூறவில்லை.. ஆனால் உணர்ந்தாள். அதை உணர வைத்தான் லிங்கா. இப்படி இவர்களிடம் அடிப்படையான ஒரு புரிதலுடன் அவர்களின் காலம் இனிதாக தொடங்கியது.
[the_ad id=”6605″]
“வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்…
ஆனாலும் அன்பு மாறாதது…
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்..
பிரிவென்ற சொல்லே அறியாதது…
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே…
மடிமீது துயில சரசங்கள் பயில..
மோகங்கள் ஆரம்பமே…
நல்ல மனையாளி..
நேசமொரு தோழி…
நெஞ்சமெனும் வீணை..
பாடுதே தோடி…”
வருடங்கள் இயல்பாய் கடந்தது எல்லோருக்கும்.
பத்து வருடங்களுக்கு பிறகு…
வீடு பரபரப்பாக இருந்தது மூர்த்தியின் எழுபதாவது பிறந்தநாள் விழா… வீட்டிலேயே சின்னதாக ஹோமம் செய்து.. விழாவை ஆர்பாட்டமில்லாமல் நடத்தினர்.
மூர்த்திக்கு சற்று எங்கும் அலைய முடிவதில்லை.. அவரை கருத்தில் கொண்டே இந்த விழா வீட்டிலேயே நெருங்கிய சொந்தங்களைக் கொண்டு நடந்தது.
விழா நல்லபடியாக முடிந்தது.. அதை அடுத்து மதிய விருந்து நடந்து கொண்டிருந்தது. சம்பந்திகள்.. பங்காளிகள் வரைதான் அழைப்பு.. ஒரு கேட்டரீங்கில் இருந்து உணவு வரவழைத்திருந்தனர். ஆட்கள் பரிமாற உண்டு முடித்து எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
சக்தி “அம்மு… பாப்பாவா… பிடிடா…” என்றாள்.. சற்று மேடிட்ட வயிற்றுடன் ஓய்ந்த தோற்றமாக, சாதனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்முக்கு இப்போது பத்து வயது “தீக்ஷி…. “ என்றபடி அந்த இரண்டரை வயது குட்டியை துரத்திக் கொண்டு ஓடினாள் சாதனா.
அம்மு பத்து வயதில் இருந்தாள். அவளை அப்படியே பிடித்துக் கொண்டு தன் சித்தியிடம் வந்தாள் “ப்ரியா.. சீக்கிரம்.. ஊட்டு” என்றாள்.. கைகளில் பிடித்துக் கொண்டு. ம், சக்தியை தன் சித்தப்பா அழைப்பது போலவே அழைத்து பழகி இருந்தாள் அம்மு.
சக்தி தன் விரல்களால் உணவை எடுத்து தீக்ஷிதாவின் வாயில் வைக்க… அது வாயை இறுக்க மூடிக் கொண்டது. கண்ணில் கோவம் தன் அன்னையின் மேல்… அந்த கோவத்தோடு சேர்ந்து அவளின் சுருட்டை முடியும் கண்ணை மறைத்தது. அதில் சக்திக்கு தெரியவில்லை தன் பெண்ணின் கோவம்.. அத்தோடு குழந்தையை இறுக்கி பிடித்து ஊட்டவும் தெரியவில்லை சக்திக்கு “தீக்ஷிம்மா… ஒரு வாய் டா… கடைசி வாய் டா” என்ற கொஞ்சிக் கொண்டிருந்தாள் அன்னை.
இப்போது இளா அங்கே வர “பெரி…..ப்பா” என ஒரே சத்தம்…. தீக்ஷி.
அம்மு என்னவோ ஏதோ என அவளை விட.. ஓடி விட்டாள் குழந்தை… “பெரிப்பா…. சக்…தி….யி….” என சொல்லி ஒரே அழுகை.
இளா தூக்கிக் கொண்டான் குழந்தையை “யாரு டா… அம்மாவா” என்க.
குழந்தை விவரமாக “சத்தி….” என்றாள்.
சக்திக்கு கோவம் “பாருங்க இளாமாமா.. எப்படி சொல்றான்னு.. என்னை அம்மான்னே கூப்பிடவே மாட்டேங்கிறா..” என்றாள் குற்றம் சொல்லும் குரலில். இளாக்கு சிரிப்பு, எங்கே சிரித்து விடுவோமோ என “ நான்.. லதா கிட்ட கொடுக்கிறேன்.. இவளை…” என சொல்லி அவளிடம் இருந்த உணவு கிண்ணத்தையும் வாங்கிக் கொண்டு போனான் இளா.
லிங்கா அங்கே உணவு சப்ளையரிடம் நின்று கொண்டிருந்தான். பாத்திரங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.. அவர்களின் கணக்கை சரிபார்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.
[the_ad id=”6605″]
தனது கையை கழுவிக் கொண்டு, வந்து தன் கணவனின் அருகில் நின்றாள். லிங்கா அவளை பார்த்து “ஏன்டா… உட்கார் வரேன்” என்றான். சக்தி திரும்பி நடக்க தொடங்கினாள்.
அதற்குள் தீபக்.. வந்தான் சக்தியிடம் “சித்தி… சித்தப்பாகிட்ட பைக் சாவி வாங்கி கொடுங்க” என்றான். பதினாறு வயதில்.. திடு திடுவென வளர்ந்து தன் சித்தப்பாவின் உயரத்திற்கு சற்று குறைவாக… நின்று கேட்டுக் கொண்டிருந்தான் தீபக்.
லிங்கா பேண்ட் போட்டிருந்தால்.. எடுத்து கொடுத்திருப்பாள்… இன்று கணவன் வேட்டி கட்டி இருக்கவும்.. “இரு” என்றாள் சைகையில்.. தன் கணவனின் அருகில் நெருங்கினாள்.