Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 18

“வாத்சா‌‌..”

“ம்ம்ம்!” தூக்கத்தில் முனகினான் அவன்..

“விடிஞ்சிடுச்சு..”

“இரு.. க்.. கட்டும்!”



Advertisement

“எழுந்துக்கணும்.. இல்லனா ஆபீஸ் போக லேட்டாகிடும்..”

“ஆபீஸ் போக வேண்டாம் இப்படியே இருந்துக்கலாம்..!” என ஒரே போர்வைக்குள் நெருக்கமாய் கிடந்த மனைவியை தன்னோடு இழுத்துக் கொண்டான்.

“ச..ரிதான்.! சார் புது மாப்பிள்ளையாகிட்ட மாதிரி தெரியுது..”

Advertisement

இப்போது கண்விழித்து.. லேசாக தலை தாழ்த்தி தன் கழுத்துக்கு நேரே இருந்தவளை பார்க்கிறான்.

Advertisement

“நான் எப்பவுமே புது மாப்பிள்ளைதான்டி.. என் பெர்ஃபார்மன்ஸ்ல என்ன குறை கண்ட நீ..?” இன்னும் ஒரு முறை தேடலைத் தொடங்கும் சிக்னலை அனுப்பும் தீண்டல்களை அவள் மேனியில் நிகழ்த்திக் கொண்டே இப்படிச் சொன்னதில்..

கொல்லென ஒரே நேரத்தில் மலர்ந்த கோடிப் பூக்களாக நாணம் முண்டியடித்துக் கொண்டு நிற்க.. பதில் பேசத் தெரியாமல் இதழ்கள் குறுகுறுக்க அவன் மார்புக்குள் புதைந்து கொண்டாள் லஷ்மி.

மீண்டும் அவளை தன்வசமாக்கினான் வாத்சல்யன்..

Advertisement

“வாத்சா.. வாத்து..! டேய்! அடப்பாவி..” வகை வகையாய் தனது திகைப்பை காட்டி அதட்டினாலும் வேண்டாம் என மறுக்கவில்லை லஷ்மி.

முத்தங்களோடு முடித்து ஒரு இனிமையான காலை பொழுதை அவளுக்கு பரிசாக வழங்கியிருந்தான் வாத்சல்யன்.

“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே இருக்க முடியும் வாத்சா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா..!” அவனிடமிருந்து விடுபட முயன்று அங்குமிங்குமாய் நகர்ந்து.. மீண்டும் அவன் கை வளைவுக்குள் சிக்கிக் கொண்டாள் லஷ்மி.

“காதல்ல காலம் நேரம் கணக்கெல்லாம் பார்க்க கூடாது.. அதிலும் நாம கணவன் மனைவி.. பகல் இரவு பார்க்காம காதலிக்கணும் தெரியுமா..!”

“அப்படியா..! சோத்துக்கு என்ன பண்றது மேன்!”

“காதல் எல்லாத்தையும் கற்றுக் கொடுக்கும்.. வாழவைக்கும்.. அப்படியே சோறும் போடும்.. படிச்சதில்லையா நீ..?”

“என்னவோ முத்திப் போச்சு..!”

“ஆமா என் பொண்டாட்டி மேல காதல் பைத்தியம் முத்தி போச்சு.. எனக்கு எப்ப தோணுதோ அப்பதான் நீ எழுந்து போகணும்.. அதுவரைக்கும் இப்படியே கட்டிப்பிடிச்சு..”

“என்னது..!”

“தூங்கலாம்டி..! ஒரே டயர்டா இருக்குது.. இன்னைக்கு நீயும் ஆபீஸ் லீவ் போட்டுடு.. நானும் லீவு..!”

“இந்த வாய் மட்டுந்தான் அப்படி சொல்லுது.. இன்னும் அரை மணி நேரத்துல எனக்கே தெரியாம எழுந்து குளிச்சு சிட்டா பறந்து போயிடுவீங்க.. உங்கள பத்தி எனக்கு தெரியாது..! வாயத் திறந்தாலே பொய்..!” உதட்டு மேல் வலிக்காமல் ஒரு அடி வைக்க..

“ஆஆஆஆ.. ஐயோ.. ரத்தம் கொட்டுது பார்.. மருந்து போடு.. இல்லைன்னா செப்டிக்கா போகும்..” என பொய்யாக கதறினான் அவன்.

“அய்யோ..! டிஞ்சர் எடுத்துட்டு வந்து தேய்ச்சு விடட்டுமா..?”

தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவன் சட்டென விழிகளை திறந்தான்..

“அடிப்பாவி..!”

“நீங்கதான செப்டிக்காகிடும்னு சொன்னீங்க.. அதான் டின்சர்..!”

“ப்ச்..! போடி..!”

“அப்ப ஜிஞ்சரா..!”

“மருந்து உன் உதட்டுல இருக்கு..!”

“நான் என்ன அமேசான் காட்டிலிருந்து வந்த அற்புத மூலிகையா..?”

“அப்படியும் சொல்லலாம்.. தலைவன் நோயை தீர்க்கக்கூடிய அற்புத மருந்து தலைவியின் உதட்டிலும் உமிழ் நீரிலும் உண்டு.. இப்படியும் சொல்லலாம்..”

“வாரே வா..! கவிதை கவிதை..!”

“விளக்கம் சொல்லியாச்சுல்ல இப்ப மருந்து போடு..!” அவள் தலையை தன் பக்கமாக இழுத்து உதட்டை நோக்கி குனிய..

“நோ.. நோ..! இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம் எங்கேயோ போய் முடியும்.. இந்த விளையாட்டுக்கு நான் வரல..!” என தள்ளிப் போனாள் அவள்.

“ஒன்னும் பண்ணலடா.. சும்மா கட்டி பிடிச்சிட்டு தூங்குவோம்.. வா..!” இரு கைகளை நீட்டி கிறக்கத்தோடு அவன் அழைப்பதை பார்க்கவே அத்தனை அழகாய் தெரிந்தது. அவளுக்கு.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..‌ உங்களுக்கு அடியில இருக்கற என் துணிமணிகளை எடுக்கணும் கொஞ்சம் தள்ளி படுங்க..”

“உன் வாத்சா தூங்கிட்டேன்.”

“பொய் சொல்றான்.. பொய் சொல்றான்..! பரவாயில்லை போடா.. நான் போய் கப்போர்ட்லருந்து டிரஸ் எடுத்துக்கிறேன்.. எப்படியும் குளிக்க எழுந்துக்கக்தானே வேணும்..”

“கப்போர்ட் பூட்டி வச்சுட்டேன்..”

“அடப்பாவி இந்த திருட்டு வேலை எப்ப செஞ்சீங்க..?”

“இதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கில்ல..” தூங்குவதுபோல நடித்துக் கொண்டே பதில் சொன்னான் அவன்.

“வீட்டையே பூட்டி வச்சாலும் பரவாயில்லை.. கண்டிப்பா இன்னைக்கு ஆபீஸ் போயே ஆணும்..” போர்வையை தன் மேனியில் சுருட்டி கொண்டு எழுந்தவள் கபோர்ட் திறந்திருப்பதை கண்டு.. தலையணையை தூக்கி அவன் மீது அடித்தாள்.

“வாயை திறந்தாலே பொய்..! பொய்க்கார பையன்.. இப்படி பொய் பொய்யா சொன்னா வரிசையா உன்னை மாதிரி ஆம்பள புள்ளையாத்தான் பொறக்கும்..!” பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டு.. அந்த கொடுப்பினை இனி தனக்கு இருக்கிறதோ இல்லையோ என தெரியாமல் மெல்லிய சோகம் இழையோட.. எச்சில் விழுங்கிக் கொண்டு.. மாற்றுத் துணிகளோடு குளியலறைக்குள் நுழைந்த கணம்..

“சந்தா நானும் வரேன் இருடி..!” என அவன் திரும்புவதற்குள் வேகமாக கதவை சாத்திக் கொண்டாள். லஷ்மி.

இதுவரை சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அவன் முகத்திலும் கலைந்த மேகங்கள் ஒன்று சேர்வதை போல் சோகம் படர்கிறது அந்நொடி..

“நடிக்கறியா சந்தா..! அதுவும் எனக்காக..? உன்னோட ஆத்மார்த்தமான சந்தோஷம்தானடி எனக்கு நிம்மதியைத் தரும்.. அது புரியலையே உனக்கு..!” நெஞ்சம் கனக்க.. நீண்ட பெருமூச்சோடு கண்களை மூடினான் வாத்சல்யன்.

வாயில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் சந்தான லஷ்மி..

“அக்கா..!” என எதிர் வீட்டிலிருந்து ஓடி வந்தாள் மீனாட்சி.

கடைக்குப் போக வேண்டிய அவசரம்.. மீனாட்சியையும் முக்கியமாக அந்த குழந்தை தீப்தியையும் கண்ணால் காண்பதற்கு முன் இந்த இடத்தை கடந்து விட வேண்டுமென வேகமாக நடந்தும் பயனின்றி போக இதோ.. அவள் கண்களில் வசமாக சிக்கிக்கொண்டு விட்டவள். “என்ன மீனாட்சி..‌” என நெஞ்சுக் கூடு ஏறி இறங்க சிரிக்க முயல்கிறாள்!

ஏதோ ஒரு தயக்கத்தில் சில கணங்கள் தொடர்ந்த மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தாள் மீனாட்சி.

“பழகி கொஞ்ச நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அக்கா..”

“என்ன கேக்க போற..?” கண்கள் சுருக்கி அவளை கூர்மையாக பார்த்தாள் லக்ஷ்மி..

“அ..து கைமாத்தா ஒரு இரண்டாயிரம் ரூபாய் கிடைக்குமா அக்கா..”

சங்கடமும் தயக்கமுமாக அவள் கேட்டுமுடித்த கணம் லஷ்மியோ இலகுவாக மூச்சுவிட்டு சிரித்தபடி அவளை பார்த்தாள்.

“இதைக் கேட்கத்தான் இவ்வளவு தயங்கினியா..? நான் வேற என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்..”

“வேற என்ன நெனச்சீங்க..?”

“ம்ம்..! உன் குழந்தையை என்கிட்ட கொடுத்து வளர்க்க சொல்லப் போறியோன்னு நினைச்சிட்டேன்..” விளையாட்டு போல் வெளிப்படையாய் சொன்தில் அவளோ வெடித்து சிரித்தாள்.

“என்னமா யோசிக்கறீங்க.. அதெப்படிக்கா என் பாரத்தை நீங்க சுமக்க முடியும்.. துன்பமோ.. துயரமோ..! என் குழந்தைகளை பாடுபட்டாவது நான்தான வளக்கணும் வளர்ப்பேன்..!” அவள் பேச்சில் தெரிந்த உறுதியில் இவள் முகம் மங்கிப்போனது..

“உனக்கு ஜிபே பண்ணனுமா இல்ல கேஷ்ஷா கைல கொடுக்கட்டுமா..!” பேச்சை மாற்றினாள் லஷ்மி.

“பணமா தந்துடுங்கக்கா..! சீட்டு போட்டுருக்கேன்.. இன்னும் ரெண்டு மாசத்துல அதை எடுத்து தான் ஸ்கூல் பீஸ் கட்டணும்.. கொடுக்கறதை அப்படியே கொண்டு போய் அந்த அக்காட்ட குடுத்துடுவேன்.”

“ச..ரி! நான் கடைக்கு போறேன்.. திரும்பி வீட்டுக்கு போய் பணம் எடுத்துட்டு வரட்டுமா..? ஒன்னும் அவசரம் இல்லையே..?”

“அதெல்லாம் இல்லக்கா.. நீங்க வாங்க..” சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குள் போய்விட லஷ்மி இந்த பக்கம் கடையை நோக்கி நடையை செலுத்தினாள்.

“மீனாட்சி..!” கையில் பணத்தை வைத்துக் கொண்டு வாசலோடு இவள் கூப்பிட..

“என்னக்கா.. அங்கேயே நிக்கறீங்க உள்ள வாங்க..” என உள்ளே வரச்சொல்லி அழைத்தாள் மீனாட்சி..

“இல்லம்மா நேரமாச்சு.. நானும் ஆபீஸ்க்கு கிளம்பனும்.. இந்தா பணத்தை வாங்கிக்க..!”

“அட உள்ள வாங்கக்கா.. இப்படி வாசலோட நின்னு பணத்தை வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது..!” உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தாள்.

“மீனாட்சி.. காபி டீயெல்லாம் எதுவும் வேண்டாம்..! நான் இப்பவே போகணும்..”

“ஒரு நிமிஷம் உட்காருங்க..” அவள் சமையலறைக்குள் சென்று விட்டாள்.

வினோத் நந்தினி இருவரும் டிவி பார்த்தபடி ஏனோ தானோவென பையில் தங்கள் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு கிண்ணத்தில் எதையோ எடுத்துக்கொண்டு வந்து பக்கத்தில் அமர்ந்தாள் மீனாட்சி..

“பசங்க கேட்டாங்கன்னு நேத்து குலாப் ஜாமுன் பண்ணினேன்.. எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி பாருங்கக்கா..!” மீனாட்சி கிண்ணத்தை அவளிடம் தந்துவிட்டு ஆவலாக முகம் பார்க்க.. ஜாமூன் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு.. கரைந்துருகும் அதன் மென்மையிலும் முறுகலான சக்கரை பாகின் இனிப்பிலும் மெய் மறந்து.. “ரொம்ப நல்லா இருக்கு..!” என சப்பு கொட்டி ருசி பார்த்துச் சொன்னதில்.. மீனாட்சியின் உதட்டினில் தாராளமாய் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது..

“சும்மா அப்படியே அவசரமா.. கைக்கு வந்த அளவை போட்டு பண்ணினது.. என்னமோ நல்லா வந்துடுச்சு.. ஒரு சின்ன டப்பால போட்டு தரேன் எடுத்துட்டு போங்கக்கா..!”

“அய்யோ..! நான் அவ்வளவா ஸ்வீட் சாப்பிட மாட்டேன்.. நீ குழந்தைகளுக்கு கொடு அவங்களுக்காக செஞ்சதுதானே..!”

“அப்ப அண்ணனுக்கு எடுத்துட்டு போங்க..! இனிப்பு சாப்பிடுவாருல்ல!” விகல்பமின்றி அன்பும் உபசரிப்புமாய் மீனாட்சி கேட்க..

“யாரு.. அவரா..! பேருக்கு ஒன்னு சாப்பிட்டா பெரிய விஷயம்.. குழந்தைகளுக்கு கொடுன்னு சொல்லுறனில்ல.. ரெண்டு மூணு நாளைக்கு வச்சு சாப்பிடலாம்.. கெட்டா போக போகுது..”

“ப்ச்! சின்னத்துக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும்.. சாப்பிட முடியாம ஜுரத்தில் படுத்து கிடக்குது..!” கவலையோடு சொன்னாள் மீனாட்சி..

“ஏன்.. என்னாச்சு?” லஷ்மியின் இதயத்தோடு படபடப்பு தொற்றிக் கொண்டது. போன முறை வந்தபோதே மிகுந்த ஏக்கத்தோடு கண்கள் குழந்தையை தேடி அலைபாய்ந்தன..

“சின்ன பாப்பா தூங்குதுக்கா.. அது எழுந்துக்க நேரமாகும்..! சமையல் முடிச்சிட்டு தான் அவளை எழுப்பி குளிக்கவைத்து யூனிபார்ம் போட்டுவிட்டு தயார் பண்ணனும்..” என்றதில் ஏமாற்றமுற்று குழந்தை படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்ததெல்லாம் போன முறை.‌

இந்த முறை குழந்தையை பார்க்கவே கூடாது என நினைக்கும் போதுதான் அவளைப் பற்றிய பேச்சு தானாகவே அடிபடுகிறது..

“சளி இருமல் காய்ச்சல்..! அடிக்கடி இப்படித்தான்..! செவலப்புள்ளயாட்டம் உடம்புக்கு ஏதாச்சும் வந்துட்டே இருக்கும்.. பிள்ளைகளுக்கு உடம்புக்கு வந்துட்டாலே என்பாடு திண்டாட்டம் தான்.. அதிலயும் சின்னவ படுத்தி எடுத்துடுவா..!”

“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலையா..!”

“போன முறை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்த மருந்தேல்லாம் இருக்கே..! ரெண்டு நாளைக்கு அதை கொடுத்து பார்ப்போம் சரியாகலைனா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் மொய் வைக்கணும்..”

“குழந்தைக்கு என்னன்னு பாரு மீனாட்சி.. டாக்டர்கிட்ட போக பணம் வேணும்னா கேளு.. நான் தரேன். அதுக்காக செலவுக்கு பயந்துட்டு குழந்தை விஷயத்துல இப்படி அலட்சியமா இருக்காதே..!”

“இன்னைக்கு சாயந்திரம் எப்படின்னு பார்த்துட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்கா..!”

“குழந்தையை யார் பார்த்துக்குவாங்க..! நீ வேலைக்கு கிளம்பறதாட்டம் தெரியுது..”

“அவர் இன்னைக்கு லீவ் எடுத்துருக்கார்.. இந்த மனுஷன் லீவு போட்டும் வேஸ்ட் தான்.. குழந்தைக்கு சரியா சாப்பாடு கொடுத்து மருந்து கொடுத்து பார்த்துக்க தெரியாது.. பிள்ளை தூங்குதுன்னு நெனச்சு பொறுப்பில்லாம அவளை தனியா விட்டுட்டு எங்கேயாவது ஊர் சுத்த போய்டுவார்.. நான் இருந்த லீவையெல்லாம் எடுத்துட்டேன்.. இனிமே லீவு போட்டா சீட்டை கிழிச்சு அனுப்பிடுவாங்க.. அதனால வேற வழியில்லாம இவரை விட்டுட்டு போக வேண்டியதா இருக்கு..!”

“சரி ஏதாவது உதவி வேணும்னா கேளு.. இந்தா பணம்..!”

பணத்தை வாங்கிக் கொண்ட நேரம் சமையலறையில் குக்கர் விசில் சத்தம் எழுப்ப.. “ஒரு நிமிஷம் இருங்க.. இதோ வந்துடறேன்..!” மீனாட்சி எழுந்து சென்றாள்.

“நான் புறப்படறேன் மீனாட்சி..” என்று அவள் எழுந்த நேரம்.. குளித்துவிட்டு மேல் சட்டையின்றி ஒரு லுங்கியோடு தலையை துவட்டியபடி வெளியே வந்த மீனாட்சியின் கணவன் அந்த மூன்று குழந்தைகளின் தகப்பன் கூடத்தில் எதிர் வீட்டு பெண்மணி லஷ்மி நிற்பதை கண்டு.. அதிர்ந்து பிறகு சங்கடத்துடன் அசடு வழிந்து சிரித்தபடி.. மரியாதையுடன் கூடிய தலையசைப்போடு பக்கத்து அறைக்குள் நுழைந்து கொள்ள..

எவ்வளவு தடுத்தாலும் கேளாத மனது குழந்தையை பார்க்கச் சொல்லி நெட்டித் தள்ளியதில்.. மெல்ல நகர்ந்து.. தீப்தி உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள் லஷ்மி.

காய்ச்சலில் கன்னம் வற்றி.. ஏறி இறங்கும் மூச்சோடு.. சுருண்டு படுத்திருந்த குழந்தையை கண்டு.. அவள் நெஞ்சம் பரிதவித்து கண்கள் ஈரமானது.

தொடரும்.

5 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 18

  • Shilaja sankaran

    நாம ஒதுங்கி போனாலும் நம்மை தேடி வந்து சேர வேண்டியது வந்து விடும் என்பது போலதான் இருக்கிறது
    குழந்தையை பார்க்க கூடாதுன்னு சந்தா விலகி போனாலும் அவளை தேடி வர வைக்குது இந்த விதி

    Reply
  • nalavanganu peru vangurathu romba kastam pola………avunga rendu perum othungi ponalum vithi avungala inga kondu vanthuruthu…. santhu va pathalea kanna katuthu

    Reply
  • Revathy Dhanda

    அவங்க ரெண்டு பேரோட புரிதல் அன்னோன்னியம் அழகா இருக்கு, சந்தா வேணா னு உறுதியா இருந்தாலும் அந்த குழந்தை ய பார்க்கற போல சந்தர்ப்பம் அமையுதே, குழந்தை தீப்தி பாவம் 🤧🤧

    Reply
  • Divyalakshmi Sugumar

    Kuzhandhaiku onnu naa thanga mudiyala santha
    Yeppadi ava illama nee samalippa 😟😟😟😟😟😟

    Reply
  • Krishnaveni

    லஷ்மி வேண்டாம் ன்னு ஒதுங்கி போனாலும் ஏதோ ஒரு வகையில் குழந்தை பத்தின நினைப்பும் பேச்சும் தொடர்ந்து வந்துட்டே தான் இருக்கு பாவம் அவளும் என்ன தான் செய்வா 😔😔😔
    இவங்க ரெண்டு பேரும் என்னபா இப்படி அந்நியாயத்துக்கு லவ் பண்றாங்க 😍😍😍❤️❤️
    எவ்வளவு அழகாக புரிதல் ரெண்டு பேருக்கும் 🥰🥰🥰

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!