Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முள் மீது தூங்கினேனே 2 1

அத்தியாயம் 2

உணவுண்ட பின், ஒரு கவரில் மல்லிகை பூவை கொடுத்து “பத்து மணிக்கு உன் அண்ணனும் அண்ணியும் வராங்க கமலி, மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போக.. ரெடியா இரு.. கிரி நீயும் தாண்டா” என வசந்தா சொல்ல, சரியென தலையசைத்து விட்டு, தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து வந்தான் கிரி. வந்தவன், கட்டிலில் சாய்ந்தமர்ந்தான் கையில் போனுடன்.



Advertisement

பேன் ஓடும் சத்தம் தவிர்த்து வேறு சத்தமில்லை அந்த அறையில்.

ஏதாவது பேசுவனா இவளும், ஏதும் பேசிவிடுவாளோ என இவனும் ஒவ்வொரு நொடியையும் நெட்டி தள்ளிக்கொண்டிருந்தனர்.

எவ்வளவு நேரம் லஞ்சையின்றி அவனையே பார்ப்பது, தன்னை அவன் பார்த்துவிட்டால் என்ன நினைப்பான் என கூச்சம் தடுக்க, அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள்.

Advertisement

விஸ்தாரமான அறை, நடுநாயகமாய் கவர் கூட பிரிக்க படாத மர கட்டில் மெத்தை, இடது பக்கம் புது மர பீரோ, அதை ஒட்டினாற்ப்போல் புது டிரஸ்ஸிங் டேபிளும், அதன் அருகே துணிகள் அடங்கிய சிறிய ரேக்கும் வலது புறம் பாத்ருமூம் அதனை ஒட்டினாற்ப்போல் வெளியே செல்லும் கதவும்  இருந்தது.

Advertisement

நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. அண்ணன் வந்துவிடுவானே என பெருமூச்செறிந்தவள், எழுந்து சென்று பேக்கில் இருந்த ஹேர் டிரையரை எடுத்து வந்தாள்.

தலை முடியை காய வைத்து அழகாய் பின்னலிட்டாள். வசந்தா கொடுத்த மல்லிகைப்பூவை வைத்து கொண்டாள்.

குளிக்கையில் டிரஸ்ஸங் டேபிளில் கழற்றி வைத்த நகைகளை அது அதற்கான பாக்ஸில் வைத்து பீரோவில் வைத்தாள்.

Advertisement

ஏற்கனவே அணிந்திருந்த ஜிமிக்கியோடு, உறுத்தாத வகையில் இரண்டு நகைகளை மட்டும் அணிந்து கொண்டாள்.

வேறு புடவையை மாற்றிக்கொள்ளாமல், ஏனோ தானோ என கட்டியிருந்த புடவையை மேலோட்டமாய் சரி்செய்து கொண்டாள்.

அவளோ, இத்தனை நேரமாய் அங்குமிங்கும் நடக்கையில் கேட்ட கொலுசின் சத்தமோ, கண்ணாடி வளையல்களின் சத்தமோ அவனை சிறிதும் பாதிக்கவில்லை என்பதை போல, போனே கதி என கிடந்தான்.

திடீரென ‘கிரி’ ராஜி  அழைக்கப்படும் குரல் கேட்டது.

கமலி கமலி என கத்தி கொண்டிருப்பவள் இப்போதோ “கிரி” என கத்தி கொண்டு வந்தாள்.

ஏற்கனவே கதவு திறந்தே கிடக்க, எட்டி பார்த்து, “கமலியோட அண்ணன் வந்திருக்காப்பல” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ராஜி போனதும் கிரி இவளை தான் பார்த்தான். ராஜி வரும் முன்பும், அதன் பின்பும் அவனையே பார்த்திருந்தவள் “அத்தாடி.. இவர் பார்வை நம்ப பக்கம்லாம் திரும்புதா?” என இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“ரெடி ஆகிட்டன்ன போகலாமா” திருமணமான பின் கேட்கும் முதல் குரல்.. இதுவரை போனில் மட்டுமே கேட்டு மயங்கிய குரல்.

நேரில் கேட்கையில் இன்னும் பாந்தாமாய் வசீகிரத்தது அவளை.

“ஹல்லோ…” என்ற சத்தமும் கூடவே தன் முகத்தின் முன் இவன் கையாட்டுவதும் தெரிய

“எ.. என்ன?” என இவள் கேட்க

“போகலாமா, கிளம்பிட்டியான்னு கேட்டேன்”  என்றவுடன் “ம்” என தலையசைத்து எழுந்து நின்றாள்.

ஒரு செட் டரஸ், டவல், சோப், பிரஷ் என கட்டிலில் எடுத்து வைத்தவன், “உன் திங்க்ஸ்ஸோட இதையும் சேர்த்து வச்சிக்கோ”  என கூற வானில் பறந்தாள் கமலி. ஆசையோடு எடுத்து ஏற்கனவே பேக் செய்யப்பட்ட தன் உடைகளோடு அவனதையும் எடுத்து வைத்தாள்.

அண்ணன் கர்ணன், அண்ணி பிரபா, அவர்களது இரண்டு வயது மகன் சந்தோஷ் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

கிரியும் கமலியும் வந்த பிறகு, அன்பாய் வரவேற்று, நலம் விசாரித்து பின் கிளம்பினர் அவர்களது வீட்டிற்கு.

மறுவீட்டு சம்பிரதாயங்கள் என நேரம் காலமும் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடியது இதோ அவளது வீட்டில் இருக்கிறான்.

அதுவும் தன்னுடைய அறையில் தான் இருக்கிறான். தன் தாய் தந்தை அண்ணன் அண்ணி சந்தோஷ் என எல்லோரிடமும் சிரித்த முகமாய் தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

அவர்களின் முன்பு தன்னிடம் கூட சிரித்த முகமாய் தான் வலம் வருகிறான். ஆனால் இரவில், அவன் நிழல் கூட தன் மீது விழவில்லை.

இது மட்டுமே நெருப்பாய் தகித்து கொண்டிருக்கிறது அவள் மனதில்.

‘ஏன் இப்படி இருக்கிறார் கிரி? திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை போனில் நன்றாக தானே பேசிக்கொண்டிருந்தான். இப்போது என்ன வந்தது.

தன் வீட்டு பக்கமிருந்து எதுவும் சடவா? ச்ச்சே.. நம்ப வீட்டு ஆளுங்க கிட்ட நல்லா தானே பேசுறார். அவர் வீட்டில் ஏதும் பிரச்சனையா? யார் பக்கம் பிரச்சனை கேட்டுவிடுவோமா? என வாய் வரை வந்துவிடும் வார்த்தைகள், இங்கு வேண்டாம், அங்கே அவர் வீட்டில் கேட்டு கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டாள்.

இதோ தாய்வீட்டில் இரு நாட்கள் முழுதாய் சீராடிவிட்டு வந்தாயிற்று. கிளம்பும் முன் தாயின் அதே புராணம் ‘நம்ப வீடு இல்ல கமலி.. ஏடாகூடாம ஏதும் செஞ்சு வச்சிராத” என மல்லிகா மீண்டும் நாயனம் வாசிக்க, நால்புறமும் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டாள் கிரியோடு அவர்களது வீட்டிற்கு.

இரவு உணவு அங்கேயே முடித்து வந்ததால் உறங்க சென்று விட்டனர். மறுநாள் காலையில் வழக்கம் போல அவனை அவனது வீட்டில் காண முடியவில்லை. இன்னும் நெருங்கிய சொந்தங்கள் அங்காங்கே இருக்க, தயங்கி தயங்கி ராஜியிடம் தான் கேட்டாள். அவளோ ஆச்சர்ய பார்வை ஒன்றை பொய்யாய் படறவிட்டபடி “அவன் ப்ரண்ட்ஸ பார்க்க போய்ட்டானே உங்கிட்ட சொல்லலையா”  என வினவ, உள்ளே மூண்ட எரிச்சலை அடக்கி, “அது..” என இவள் இழுத்து “சொன்னாங்க நான் தான் காதல் வாங்கல போல அண்ணி” பொய்யாய் அரங்கேற்றமானது முதல் நாடகம்.

நம்பிட்டேன் என்பது போல ஓர் முகபவனை ராஜியிடம். அவளை பார்க்க மறுத்து சுற்றிலும் பார்வையை ஓட்ட சுற்றிலும் கிரியின் சொந்தங்கள். யார் யாரென தெரியவில்லை. சினிமா தியேட்டருக்குள் தனியாக சென்று மாட்டிக்கொண்டார்ப்போல் உணர்ந்தாள்.

தனியா என்னை விட்டுட்டு இவர் வேற எங்க போனாரோ..! ‘ஆமா! இருந்திருந்தா அறுத்து தள்ளிருப்பாரு!’ ப்ளோவாக வார்த்தைகள் வர, ‘அச்சோ!’ வாயிலேயே அடித்து கொண்டாள்.

“கமலி உன் திருவாய மூடுடி.. நிலவரம் தெரியாம நீ வேற ஒரண்ட இழுத்து வச்சுடாத” தனக்கு தானே எச்சரித்து கொண்டாள்.

கால நேரம் தெரியாமல் வயிறு வேறு பசித்து, ‘எனக்கு ஏதாவது கொடேன்’ என.

 ‘ச்சே நம்ப வீடா இருந்திருந்தா பல்லு கூட விளக்காம இரண்டு பூரிய ஆட்டைஸ் போட்ருப்பேன்’ இந்த வீட்டில்… என யோசித்து கொண்டே, சமையலறையை லேசாய் எட்டி பார்த்து, பாத்திரத்தில் நிரம்பி வழிந்த பூரியை ஏக்கமாய் பார்த்து வைத்தாள்.

சமையலறையில் வசந்தா, ராஜியோடு சேர்ந்து மேலும் இருவர் நின்றபடி சலசலவென வேலை பார்த்தபடி நின்றிருந்தனர்.

அந்த ‘L’ சேப் சோபாவில் அமர்ந்திருந்த யாரென்றே தெரியாத, மூன்று பெண்கள் ஐந்து ஆண்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக்கொண்டிருந்த சிறிதும் பெரிதுமான குழந்தைகள் நான்கு என நேரம் ஓட்டிக்கொண்டிருந்தாள்.

இவளிடம் யாரும் பேசவும் முனையவில்லை. இவங்க யாருமே ஏன் பேச மாட்றாங்க? என நினைத்தவள் ‘ஏன் கமலி.. நாம யாரு கண்ணுக்கும் தெரியலையா? ஒரு வேளை செத்து பேயாயிட்டமோ?’ கண்டமேனிக்கு ஓடியது எண்ணங்களில், தனக்கு கை கால்கள் எல்லாம் இருக்கிறதா? என குனிந்து, தொட்டு தடவி பார்த்து கொண்டாள்.

‘ஹோஸ்ட் ஹவுஸ்க்குள்ள மாட்டின மாதிரியே இருக்கு கமலி’ இவள் நினைக்கையிலேயே, ‘கமலி’ எனும் கூக்குரலில், திடுக்கிட்டு எழுந்து நின்றாள். ‘ஸப்பா..நிஜமாவே ஹோஸ்ட் ஹவுஸ் குடும்பம் தான் போல’ நெஞ்சை நீவி விட்டு கொண்டாள்.

‘கமலி சாப்ட வாம்மா’ அடுத்த வீட்டிற்கே கேட்கும் ஒரு குரலில. அழைத்தாள்.. வேறு யார் ராஜியே தான்!

‘தயவு செய்து இப்படி கத்தாதீங்களேன்..அண்ணி’ என சொல்லிவிடலாமா என்று கூட எண்ணினாள். கூடவே ‘ஏடாகூடாம ஏதும் செஞ்சிடாதடி’ என்ற மல்லிகாவின் முகமும் தோன்றிட, அமைதியாய் எழுந்து சென்றாள்.

முதல் நாளைப்போல் கிரிக்காக காத்திருக்க சொல்லவெல்லாம் இல்லை, தனியாகவே அமர்த்தி, உணவு கொடுத்து, ரெஸ்ட் எடும்மா என அனுப்பி வைத்து விட்டார்கள். மதியமும் இதே தான் ஆனால் உணவு தான், நான்வெஜ் புல் மீல்ஸ்ஸோடு… தின்றுவிட்டு மலைபாம்பு போல செரிக்கமாட்டாமல் கட்டிலில் விழுந்து கிடந்தாள்.

மாலை போல அழுக்கு துணிகளை துவைத்து காயப்போட்டாள், அவர்கள் அறையை சுத்தம் செய்து, குப்பைகளை குப்பை தொட்டியில் போடுகையில், குப்பையாய் கிடந்த ஹாலையும் சேர்த்து கூட்டி தள்ளினாள். மாலையில் டீ, ஸ்னாக்ஸ் வேறு. ஆத்தாடி முடியல..

‘அங்க நம்ப வீட்டில் இருபத்திநாழு மணி நேரமும் தின்னுட்டே இருப்போம், ஒன்றும் செய்யாது, இங்க இரண்டு வேளை தின்னுட்டு இவ்வளவு கஷ்டமா இருக்கே!’ என வடைகளை மறுத்துவிட்டு கையில் இருந்த டீயை மட்டும் எடுத்து கொண்டாள்.

ராஜியிடம் ‘கிரி எங்கே’ என கேட்க வாய் துடிக்கும். ஆனால் எங்கே காலையில் இதே கேள்விக்கு நக்கலாய் பார்த்த ராஜியின் முகம் நியாபகம் வர, டீ குடித்தபடியே அவனுக்கு போனில் அழைத்தாள்.

சரியாய் ஒரு வாரம் கழித்து அவன் போனுக்கு அழைக்கிறாள். ஆம் கத்தாரில் இருந்து கிளம்பும் போது கடைசியாய் போன் செய்தவள், ஒரு வாரம் கழித்து இன்று இவள் போன் செய்கிறாள்.

ரிங் சென்று கொண்டே இருந்தது எடுக்கதான் இல்லை இவன்.

பெருமூச்சு விட்டவள், தன் அறைக்கு சென்றாள். ஏற்கனவே பேக், டிராலி என கட்டிலின் கீழே நிறைந்திருந்தவைகளை வெளியே இழுத்தாள். அத்தனையையும் அவளுக்கான மரபீரோவில் வரிசையாய் அடுக்கினாள். கட்டிலின் அருகே சிறிதான ரேக்கில் இருந்த கிரியின் ஏனோ தானோ என கிடந்த உடைகளை நீட்டாக மடித்து தூக்கி பீரோவின் மேல் தட்டில் அடுக்கினாள். எண்ணி ஐந்தாறு செட் உடைகள், மூன்று டீராக் சூட்டுகள், நான்கு கைலி, ஓட்டை விழுந்தும் விழுகாமலும் நான்கு பனியன்கள், உள்ளாடைகள் கூறவே வேண்டாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!