Skip to content
Post Views: 249
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 45.1
பூர்வீக வீட்டை பங்கு பிரித்து பழனிச்சாமிக்கு கொடுக்க வேண்டும். தந்தை ஸ்தானத்தில் இருந்து கெளசிக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். லட்சுமியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிவராமனை போல இவரும் தன்னை ஏமாற்றி சென்று விட்டால்,தன் நிலை நடுக்கடலில் எந்த உபகரணமும் இல்லாமல் நிற்கும் நிராயுதபாணி நிலைதான்.
இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக சிவராமனின் கடை.கங்காவிற்கு நன்றாகவே தெரியும் அன்று அவள் எரியூட்டியது,வெறும் உடல் மட்டும்தான் அவரது உயிர் அவரது கடையிலே உள்ளது என.. அதை என்ன செய்வது?இதற்கு முன்பெல்லாம் அந்த கடைக்கு சென்று சேரில் அமர்ந்து வருவதோடு சரி.. ஆனால் இன்று மிகப்பெரிய கடமை தன் தோளின் மீது உள்ளது.
சிவராமன் வரவு செலவு கணக்குகளை முறையாக பராமரித்து இருப்பதால்,யாருக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை.ஒரு பைசா கடனும் இல்லை. மேலும் இறப்பை முதலிலே உணர்ந்திருப்பாரோ என்னவோ போகும்போதும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தையும் வாங்கி தந்தே சென்றிருக்கிறார்.
Advertisement
திருமணத்திற்காக எடுத்த நகைகளை மட்டும் அடமானத்தில் இருந்து திருப்பினால் போதும்.அதுவும் சிவராமன் அடமானம் வைத்தது இல்லை. அவர் உடல் நலமில்லாத போது கங்காவும், கெளசியுமே அடமானம் வைத்தார்கள்.அதை திருப்ப வேண்டிய பொறுப்பு இருவருடையது மட்டுமே…
இதையெல்லாம் நினைத்த கங்காவிற்கு தூக்கமே வருவது இல்லை.அதுபோக தன்னால்தானே அப்பாவிற்கு இந்த நிலை என்ற குற்ற உணர்வு மறுபுறம். அதை கங்கா நிலையில் இருந்து அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.இனி எஞ்சியிருக்கும் அவள் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு பாரமே..
எத்தனையோ யுகங்களாக வனாந்திரத்தில் உணவு,உறக்கம் இன்றி சதாகாலமும் அந்த பரம்பொருளின் நாமத்தை மட்டுமே உச்சரித்து கடுந்தவம் புரிந்ததன் பலனாக, ‘இதோ உனக்கான வரம்’என அவள் வாழ்வில் கொடுக்கபட்டவரே சிவராமன்.அதை பாதுக்காக்க தவறியதால் இன்று ஒவ்வொரு நொடியும் அவளுக்கு பாரமாக இருக்கிறது.
Advertisement
இந்த யோசனைகளோடு படுத்திருக்க,ஏதோ சத்தம்..காதை கூர்மையாக்கி கேட்க.. மீண்டும் சத்தம் அதிகமானது. லட்சுமியும் கெளசியும் எழுந்து கொண்டனர்.
Advertisement
கங்கா, என்னடி இப்படி சத்தம்?-கெளசி
தெரிலேடி.
கங்கா, ஒருவேளை திருடனா இருக்குமோ?- லட்சுமி
Advertisement
அப்படியெல்லா இருக்காதும்மா.மணி நாலாச்சு.டீக்கடை திறந்துருவாங்க. அப்பறோம் வெளியே போய் பார்க்கலாம்.
சத்தம் மேலும் மேலும் அதிகமானது.
“அம்மா எனக்கு பயமா இருக்கு” என கெளசி அவரை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
லட்சுமி,”கங்கா! திருடன்தா போலடி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.நான் உங்க ரெண்டு பேரையும் தனியா வெச்சிட்டு என்னடி பண்ணுவே?” என ஒரே அழுகை.
அதற்குள் டீக்கடை திறக்கும் சத்தம் கேட்க,மூவரும் வெளியே வந்தனர். ஒரு பூனை அவர்கள் வீட்டு கேட் அருகே ஒய்யாரமாக அமர்ந்து ஒரு எலியை தின்று கொண்டிருந்தது.
இதைப்பார்த்த கங்காவும்,கெளசியும் லட்சுமியை,”ரொம்ப பெரிய திருடன்தான்” என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இப்போ மட்டும் அப்பா இருந்திருந்தா,என்ன சொல்லும் தெரியுமா?என அவரை போலவே பேசிக் காட்டினாள் கெளசி.
சிவராமன் உடலளவில் விடைபெற்றிருந்தாலும்,அவரை மூவரும் உயிர்ப்புடனே வைத்து இருந்தனர்.”அப்பா இருந்தா இப்படிதான் செய்யும். அப்பாவுக்கு இது பிடிக்காது” என அவரது கொள்கையிலேயே நின்றனர்.
அவர் இறந்து மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையிலும் நிதிப்பிரச்சனை என ஏதும் இல்லை. அவர் எப்படி பிரித்து வீட்டிற்கு தேவையானதை வாங்கி,மீதியை சேமித்து வைத்தாரோ அதையே பின்பற்ற ஆரம்பித்தனர் மூவரும்.
இருவரும் பள்ளி செல்ல,லட்சுமி கடைக்கு சென்றார். சிவராமன் நிலவாடகைக்கு கடை கட்டி இருக்கிறார்.அந்த இடத்தின் உரிமையாளர்,வேறு ஒரு ரீடு கடைக்காரரை அழைத்து வந்து,” உங்க கடையே இப்படியே இவருக்கு வித்துடுங்க” என பேரம் பேசினார்.
“கடை விற்கும் எண்ணமெல்லாம் இல்லை.உங்களுக்கு தேவை நிலவாடகை அதை எந்த தாமதமும் இல்லமால் சரியான தேதியில் தானே கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என லட்சுமி உறுதியான குரலில் மறுத்து விட்டார்.
சிவராமன் கடைக்கு அருகில் உள்ள இடத்தில் ஒரு கடையை கட்டி…அந்த ரீடு கடைக்காரரை குடிவைத்தார், நில உரிமையாளர்.அதோடு முடிந்திருந்தால் பரவா இல்லை.சிவராமன் கடை முன்பே, பெரிய பெயர் பலகையை அடித்து வைத்துவிட்டனர். லட்சுமி எவ்வளவோ கூறியும் எடுக்க மறுத்து விட்டனர்.
கங்காவிடம் சொல்ல, அடுத்தநாள் ஸ்கூல்லிற்கு லீவு போட்டு..லட்சுமியை தவிர்த்து இவள் மட்டுமே தனியாக சென்றாள்.
நில உரிமையாளரை காணவில்லை. புதுகடைக்காரன் மட்டுமே இருக்கே..
“அண்ணா,போர்டு எங்க கடையை மறைக்குது.கொஞ்சம் தள்ளி வைங்க” என்றாள்.
ஃபோனில் ஹெட்செட் மாட்டி ஏதோ பாட்டு கேட்டவாறே…கால் மேல் கால் போட்ட படி, திமிராக இவள் முகத்தை கூட பார்க்காது.”நில ஓணர் தான் வைக்க சொன்னாரு.அவர் வந்தா கேளு” என ஒருமையில் பேசினார்.
அவ்வளவுதான்,
அவளுள் இருந்த சிவராமன் வெளியே வந்து விட்டார்.”நீயா எடுத்தா உனக்கு நல்லது. இல்லைனா நானே கடப்பாரையே வெச்சு தோண்டி எடுத்து வீசிருவே”என எச்சரிக்கை செய்து விட்டு வந்துவிட்டாள்.
அடுத்த நிமிடமே நில உரிமையாளர், அவர் மகன் என அனைவருக்கும் ஃபோனை போட்டு வர வைத்தான் புதுகடைக்காரன்.
அவர்கள் வந்ததும் இவன் ஆட்டம் அதிகமானது.ஃபோர்டை கடப்பாரை வெச்சு தோண்டறாங்களாமா?இவங்களுக்கு எந்த ரைட்ஸ்ஸும் அதுக்கு இல்ல என விளக்கில் நெருப்பை ஊற்றினான்.
“எனக்கு தோண்ட ரைட்ஸ் இல்லைதான். அதே மாதிரி என்ற கடைக்கு முன்னாடி ஃபோர்டு வெக்க உனக்கும் எந்த ரைட்ஸூம் இல்ல” என்றாள் கங்கா.
முதல்ல பொண்ணா அடக்கமா பேசி பழகனும்.
எனக்கு அடக்கமாகவும் போக தெரியும். உன்ன மாதிரி ஆட்கள் கிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியும்.
இவர்கள் வாய்க்கு வாய் பேசிக் கொண்டு போவதை பார்த்த,நில உரிமையாளனும் அவன் மகனும்…
“உங்க கடைக்குதான் விளம்பரம் இல்ல.நீங்க வேணும்னா விளம்பரம் வெச்சுகோங்க” என புதுக் கடைக்காரனுக்கே சப்போர்ட் செய்தனர்.
“சரிங்க,நாங்களும் ஃபோர்ட்டு வெச்சிக்கறோம்” என அந்த சாக்கடைகளிடம் இதற்குமேலும் மல்லுக்கட்டாமல் ஒதுங்கினாள் கங்கா.
சிவராமன் முடிந்துவிட்டான், இவர்கள் எல்லாம் எவ்வளவு நாட்கள் இந்த கடையை வைத்து தாக்கு பிடிப்பார்கள் ஒன்றிரண்டு மாதம் தான் அதன் பிறகு கடை உங்களுக்கே உன மூன்று ஜென்மங்களும் ஆணவத்தில் நின்றது.
இதற்கு முன் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டு கூட வெளியே வந்ததில்லை கங்கா. இந்த மாதிரியான கீழ்தரமான ஆட்களை இனி தினந்தினம் எதிர்கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு.வாழ்க்கை எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காதே.
இது வெறும் இரும்புகளால் நிறைந்த கடை அல்லவே.சிவராமன் வியர்வை துளியால் உருவானது. அவரது உயிர் பிரிந்த அடுத்த நொடி நிச்சயமாக இந்த கடைக்குதான் வந்திருப்பார்.இதை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டிய வைராக்கியம் கங்காவிற்கு வந்தது.
அடுத்தநாள் லட்சுமியை அழைத்துக் கொண்டு,ரீடு கடை நிறைந்திருக்கும் பகுதிக்கு சென்றாள். ஒவ்வொரு ரீடு கடையாக ஏறி இறங்கி அதன் மார்க்கெட் நிலவரம்.எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது? என விசாரித்தனர்.
அனைவரும் சொல்லி வைத்தது போல, இது பெண்களுக்கு ஏற்ற தொழில் இல்லை. அதுமட்டுமல்ல இது மளிகை பொருள் போல அடிக்கடி பயன்படுத்த முடியாது. ஒரு ரகம் தயாரிக்கும் போது மட்டுமே வியாபாரம் ஆகும். பெண்ணாக இருந்து கொண்டு எப்படி குடோனுக்கு சென்று நீக்கல் எடுப்பீர்கள்?அது போக நூல் விலை உயர்வு.மின்கட்டண உயர்வு என அடிக்கடி ஸ்ட்ரைக் ஏற்படும். வேண்டுமானால் அடுத்த ஊரில் ஒரு பெண் ரீடு கடை வைத்து நடத்தி வருகிறார்.அவரிடம் சென்று கேட்டு பின் முடிவு எடுங்கள் என்றனர்.
நன்றாக சுட்டெரிக்கும் வெயில்,”அம்மா நாம்ம வீட்டுக்கு போலாம். இன்னொரு நாள் வந்து அவங்கள பாத்துக்கலாம்” என்றாள் கங்கா.
“அவங்க ஒருத்தர மட்டும் பார்த்துட்டு போய்ரலாம் கங்கா. இங்க பாரு அப்பா வேலை செய்றே எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கே..அவங்க கிட்ட எப்படி வேலை செய்யனும்னு நானே பழகி,கடையே நம்மளே பார்த்துக்கலாம்” என்றார்.
அவரது ஆர்வம். கணவரின் கடைக்காக போராடும் குணம் எல்லாம் கங்காவின் சோம்பலை போக்கி அங்கே அழைத்துச் சென்றது.
ஆனால் அவரும் ‘இந்த தொழில் வேண்டாம்’ என அதில் உள்ள பாதகங்களை கூறினார்.அவருடைய கணவர் இறந்த பின்பே இதை தொடர்வதாகவும், மகன் இருப்பதால் ஏதோ ஓடுகிறது என்றும் கூறினார்.
முதல்முறையாக ஏன் பெண்ணாக பிறந்தோம்?என கங்கா வருத்தப்பட்டாள்.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!