Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் 09.02

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நினைவுகள்

வண்ண வண்ண புத்தாடைகள், நூற்றுக்கணக்கான பலகாரங்கள், கண்களைப் பறிக்கும் பரிசுப் பொருட்கள், அடுக்கடுக்காய் பட்டாசு வகைகள் என நிரம்பி வழிந்தது அந்தக் கடை. எஞ்சியிருந்த குறுகிய இடைகழிகளில்(aisle) வாடிக்கையாளர்கள் எறும்புக் கூட்டமென ஊர்ந்து நகர,

“அவசியம் இங்கதான் தீபாவளி ஷாப்பிங்க் பண்ணனுமா,” கடைக்குள் நுழையவே யோசித்தான் ஷ்ரவன்.



Advertisement

“டிஸ்கவுன்ட் ஆஃப்ஃபர் இருக்கும்போது வாங்கினால் தானே நமக்கு லாபம். பேசாம வாங்க,” அதட்டி, “முதல்ல கம்பெனி ஸ்டாஃப்க்கு கொடுக்க வேண்டிய கிஃப்ட்ஸ் வாங்கிடலாம்,” என அவனை வலுக்கட்டாயமாகப் பரிசுப் பொருட்கள் குவிந்திருந்த பகுதிக்கு இழுத்துச் சென்றாள் ரம்யா.

பித்தளையிலான பூஜை பாத்திரங்கள், லட்சுமி தேவி விக்ரஹங்கள், மரப்பெட்டிகள் என வழிபாடு சார்ந்த பொருட்களின் தரத்தையும் விலையையும் ஆராய்ந்து அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தவளுக்குக் கடனே எனத் தலையாட்டிக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.

“ஷ்ர்வன்!!!” என்ற கட்டையான ஆண்குரலில் திடுக்கிட்ட இருவரும் திரும்ப,

Advertisement

“எப்படிடா இருக்குற? எத்தனை வருஷமாச்சு உன்னைப் பார்த்து!” பற்கள் மின்ன நலன்விசாரித்தான் அந்த ஆடவன்.

Advertisement

ரம்யா திருதிருவென முழிக்க, “அட கௌதம்!” உற்சாகம் கொண்ட ஷ்ரவன்,

“என் காலேஜ் & ஹாஸ்டல் மேட் ரம்யா,” அறிமுகம் செய்து,

“ஷீ இஸ் மை வைஃப்,” என ரம்யாவின் தோளினைச் சுற்றி பெருமிதம் பொங்க அரவணைத்தான்.

Advertisement

“ஹெலோ சிஸ்டர்,” என்றவனுக்கு மென்புன்னகையுடன் தலையசைத்தாள் ரம்யா.

“சென்னைக்கு மூவ் ஆயிட்டீயா?” ஷ்ரவன் தொடர,

இல்ல இல்ல அதே திருவண்ணாமலை தான்! அடுத்த மாசம் தம்பிக்குக் கல்யாணம். கல்யாண ஷாப்பிங்காக வந்திருக்கோம்,”  பதிலுரைத்தவன், கைப்பையில் வைத்திருந்த திருமண அழைப்பிதழ் ஒன்றினை ஷ்ரவனிடம் நீட்டி,

“நவம்பர் 27ஆம் தேதி… கல்யாணம் சென்னையில் தான். கண்டிப்பா வந்துடணும்,” முக்கியமான விவரங்களைப் பகிர்ந்து அன்புக்கட்டளையிட்டான்.

ஆண்களின் பேச்சு கல்லூரி நாட்களுக்குத் திரும்ப, வந்த காரியத்தில் கவனம் செலுத்தினாள் ரம்யா.


வீட்டிற்குத் திரும்பியவன், திருமண அழைப்பிதழை அலட்சியமாக ட்ரெஸ்ஸிங்க் டேபில் மேல் வைக்க,

“கல்யாணத்துக்குப் போகுற வரைக்குமாவது பத்திரமா வச்சுக்க வேண்டாமா ஷ்ரவன்,” சலித்துக்கொண்டபடி அதை கடிதங்கள் சேமித்துவைத்திருக்கும் சுவர் மாட்டியில் பத்திரப்படுத்தினாள் ரம்யா.

“வழில பார்த்துட்டோமேன்னு ஃபோர்மாலிடிக்கு இன்வைட் பண்ணிருக்கான்,” ஷ்ரவன் பதிலில் அலட்சியம் வழிந்தோடியது.

“ம்ப்ச்” என உதட்டைச் சுழித்தவள், “எதுக்கு ஓவரா யோசிக்குறீங்க. காலேஜ் மேட்ன்னு சொல்றீங்க. கல்யாணத்துக்கு வர மத்த ஃப்ரெண்ட்ஸையும் மீட் பண்ணா மாதிரி இருக்கும்ல,” அவன் கன்னத்தில் வாஞ்சையாக வருடினாள்.

வருடிக்கொடுக்கும் அவள் கரம் மேல் தன் கரம் வைத்தவன், “ஃப்ரெண்ட்ஸ் மட்டுமில்ல ரம்யா. பானுவும் வருவா. அவன் சிஸ்டரும் பானுவும் க்ளாஸ்மேட்ஸ்,” என்றான் இமைகள் தாழ்த்தி.

வெடுக்கென்று அவன் கன்னத்தைக் கிள்ளி, “அப்போ கண்டிப்பா போகுறோம்!” என்றாள் தீர்மானக் குரலில்.

“உனக்கென்ன பைத்தியமா?” கன்னத்தைத் தேய்த்துக்கொண்டே சிடுசிடுத்தான் ஷ்ரவன்.

“நீங்க ரெண்டுபேரும் ஜென்ம விரோதிகள் இல்ல ஷ்ரவன்… சந்திக்காம இருக்குறதுக்கு! குடும்பத்துக்காக உங்க காதலை தியாகம் செஞ்சிருக்கீங்க. அவ்வளவுதான்,” தெளிவுபடுத்தினாள்.

மறுப்பாய் அவன் தலையசைக்க, அவன் முகத்தைக் கண்பார்க்க இழுத்துப் பிடிதவள்,

“வலியப் போய் நட்புறவாடுங்கன்னு சொல்லல. பாக்குற இடத்துல சிரிச்ச முகமா ஹெலோ சொல்லி நாலு வார்த்தைப் பேசுங்கன்னு தான் சொல்றேன்,” பாடம் நடத்தினாள்.

“யோசிக்கலாம்,” என்ற பதிலோடு அப்பேச்சைக் கத்தரித்தான்.


யோசிக்கிறேன் என்பவனுக்கு மூளைச்சலைவை செய்து தன் வழிக்குக் கொண்டுவந்தாள் அவன் தர்மபத்தினி.

“ரம்யா! நாம போகுறதுக்குள்ள ரிசப்ஷனே முடிஞ்சிடப்போகுது. சீக்கிரம் கிளம்பு,” கடந்த ஒருமணி நேரமாக வசிப்பறையிலிருந்து மாடிக்குக் கூவிக்கொண்டிருந்தான் ஷ்ரவன்.

“டென் மினிட்ஸ் ஷ்ரவன்,” அவளும் அதே பதிலை ஸ்ருதி மாறாமல் ஒருமணி நேரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

பொறுமை எல்லையைக் கடக்க, தங்கள் அறைக்கு வேக நடையிட்டான்.

தயாராகி கற்சிலையாக கண்ணாடிமுன் உட்கார்ந்திருப்பவளைக் கண்டதும் அவன் எரிச்சல் கூடியது.

“கிளம்பு ரம்யா!” அவள் தோளினைப் பற்றி இழுக்க,

“நீங்க சொன்னதுதான் சரி ஷ்ரவன். நாம அங்க போகவேண்டாம்,” எழ மறுத்தாள் அவள்.

“திடீர்ன்னு ஏன் இப்படிச் சொல்ற,” அவள் முகத்தைக் கண் பார்க்கத் திருப்பினான்.

“என் தலையில நானே மண்ணை வாரிக்கொட்டிக்குற மாதிரி தோணுது ஷ்ரவன்,” என்றவளின் கருவிழிகளில் கண்ணீர் தேங்கி நின்றது.

“புரியலையே!” என்றவனின் குரல் இறுகியது.

“கல்யாணத்துக்கு கிளம்ப, எனக்கு முன்னாடி ரெடியாகிட்டு உட்கார்ந்துட்டு இருக்கீங்க; ஒரு வாரமா ஷேவ் பண்ணாம தாடி வளர்த்துட்டு இருக்கீங்க; என்னைக்குமே இல்லாம ஷெர்வானி போட்டுட்டிருக்கீங்க; பர்ப்யூம் வாசமே பிடிக்காதுன்னு, இதோ இப்போ பர்ஃப்யூம் அடிச்சிட்டு வந்திருக்கீங்க,” அவன் மார்ப்பை மோப்பம் பிடித்த வண்ணம் அவன்மேல் தலைசாய்த்தவள்,

“உங்க போக்கே சரியில்ல ஷ்ரவன். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு,” என விசும்ப,
வெடித்துச் சிரித்தான் அவன்.

“அவ்வளவுதானா! இல்ல என்னோட போக்கில் இன்னும் ஏதாவது வித்தியாசமா இருக்குதா,” நமுட்டுச் சிரிப்புடன், தோள் சாய்ந்தவளின் தலைகோதினான்.

“சிரிச்சு மழுப்பினா எதுவுமே இல்லன்னு ஆகிடாது,” எத்தனித்து முறைத்தாள் பாவை.

“சரி! விவரமாவே சொல்றேன்,” என அவள் இரு தோள்களில் கைவைத்து தாங்கி நின்றவன்,

“சீக்கிரம் கிளம்பினா தலையைக் காட்டிட்டு சீக்கிரம் வந்துடலாம்; சீக்கிரம் வந்துட்டா என் பொண்டாடியோட க்ராஸ்வர்ட் போடலாம்னு நெனச்சேன். ட்ரெஸ் கோட் ஷெர்வானின்னு கௌதம் ஃபோன் பண்ணி சொன்னதுனால, போட்டிருக்கேன்; ட்ரெஸ்ல பழைய வாசனை வருதுடான்னு, சொல்ல சொல்லக் கேட்காம பர்ஃப்யூம் அடிச்சது உன் ஆருயிர் நண்பன்,” அவன் கூற,

“அப்போ இந்த தாடி,” என இங்கும் அங்குமாய் வளர்ந்திருந்த முடியை பிடித்து இழுத்தாள்.

“புருஷன் சூடுகட்டில அவஸ்த்தைப்படுறது கூட இந்த பொண்டாட்டிக்கு நியாபகமில்ல,” அவன் உதட்டைப் பிதுக்க,

“ஸ்ஸ்ஸ்,” எனப் பரவலாக வளர்ந்திருந்த தாடிக்குள் மறைந்திருந்த கட்டியை வாஞ்சையாக வருடினாள்.

சங்கடம் தீர்ந்ததில் மென்னகைத்தவள், “கண்டதையும் யோகிச்சு குழம்பிட்டேன் ஷ்ரவன். இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்படியே ஒரு லாங்க் ட்ரைவ் போயிட்டு வரலாமா,” எனக் குழைந்தாள்.

“ம்ஹூம்! ரிசப்ஷன்க்குத் தான் போகுறோம்,” தீர்மானமாக மறுத்தான்.

“இப்ப ஹாப்பியா தானே வேண்டாம்னு சொல்றேன். இன்னும் என்ன?” சிணுங்கினாள் பாவை.

“இப்ப மட்டுமில்ல ரம்யா. நீ எப்பவுமே என்னோட ஹாப்பியா வாழணும்னு நினைக்கிறன்,” ஷ்ரவன் தொடங்கவும்,

“ம்ப்ச்…. அதான் கண்டதையும் யோசிச்சு குழம்பிட்டேன்னு சொன்னேனே ஷ்ரவன்,” சலித்துக்கொண்டாள் அவள்.

“இல்ல ரம்யா. இன்னொரு முறை நீ இந்தமாதிரி குழம்பாம இருக்கணும்னுனா, உன் கற்பனைக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கணும்,” என்றவன், அவள் உம்மென்ற முகத்தை விரல்களில் குவித்து,

“இந்த ரம்யாதாசனின் காதலை நேரில் வந்து பாருங்க பொண்டாட்டி,” எனக் காதலாய் மொழிந்து அவளைத் தன்வசப்படுத்தினான்.


வண்டியை மண்டப்பத்தின் தரிப்பிடத்தில் நிறுத்திய மறுநொடியே காற்றிழந்த பலூன் போல ஷ்ரவனின் முகம் சுருங்கியது. வண்டியிலிருந்து இறங்காமல், எதிரே கலகலத்துப் பேசிக்கொண்டிருக்கும் ஜோடிகளைக் கண்கொட்டாமல் ஏறிடும் ஷ்ரவனைக் கவனித்த ரம்யா,

“உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?” என வினவினாள்.

“அவதான் பானு. காருக்குள்ள ஏறிக்கிட்டது அவளோட அக்கா புருஷன் ரஹீம்,” ஷ்ரவனின் குரல் கரகரக்க, புறப்படும் ரஹீமுக்கு கையசைத்த படி நிறைமாத கர்ப்பினியாய் அவர்கள் பக்கம் திரும்பி காட்சியளித்து, இருவருக்கும் பேரதிர்ச்சியைத் வாரியிரைதாள் ஷர்மிலாபானு.

ஷர்மிலாபானு மண்டபத்தின் வாசலை நோக்கி நடக்க, விருட்டென காரைவிட்டு இறங்கிய ரம்யா, அவளை எட்டிப்பிடிக்க வேக எட்டுக்களை வைத்தாள்.

“ரம்யா என்ன செய்யற,” பதறிய ஷர்வன் அவளைப் பின்தொடர, அதற்குள் ஷர்மிலா பானுவை மடக்கியிருந்தாள் ரம்யா.

“குழந்தை, கலாச்சாரம்ன்னு சாக்கு சொல்லி உன் மாமன் நாடகமாடினது எல்லாம் உன்னை ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்கத்தானா!” எடுத்த எடுப்பிலேயே பொங்கினாள் ரம்யா.

ஷர்மிலாபானு குழப்பத்தில் முழிக்க, “ரம்யா! வா போகலாம்!” எனக் குனிந்த தலை நிமிராமல் அவள் கையைப் பிடித்து இழுத்தான் ஷ்ரவன்.

“ஷ்ரவன்…நீயா…” ஷர்மிலாபானு கண்கள் அகல வினவ,

“நீங்க ஏன் பயப்படுறீங்க ஷ்ர்வன்,” சடாரென அவன் கை பிடியிலிடுந்து எத்தனித்த ரம்யா,

“தனக்குன்னு வாரிசே இல்லேனாலும் பரவாயில்லன்னு குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிட்ட இந்த உத்தமனோட தியாகத்தை மறந்து உங்களால எப்படித்தான் சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுதோ…ச்சீ,” முகம் சுருக்க,

“விடு ரம்யா,” வலிய இழுத்தான் ஷ்ரவன்.

ரம்யாவின் ஆவேசத்தில் அவள் காதலை மட்டுமே உணர்ந்தாள் ஷர்மிலாபானு.

ஷ்ரவனுக்கு அமைந்திருக்கும் நல்வாழ்க்கையை எண்ணி பூரித்தாள். அவளிடம் பேச வேண்டியது ஏராளம் இருக்கிறது என அசைபோட்டவள், தான் தங்கியிருக்கும் விடுதியின் விலாசத்தை ஒரு காகிதத்தில் எழுதி,

“நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு இந்த அட்ரெஸ்க்கு வாங்க. நாங்க எப்படிச் சந்தோஷமா குடும்பம் நடத்துறோம்னு நேருலேயே பார்க்கலாம்,” எனக் கூறி காகிதத்தை ரம்யாவின் கையில் திணித்தாள்.

அவள் செயலில் ரம்யா திடுக்கிட்டு மௌனம்காக்க, அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட ஷ்ரவன், அவள் தோள்சுற்றி வளைத்து அரவணைத்தவாரு தன் வண்டியை நோக்கி நடந்தான்.

“நாலு மணிக்கு நீங்க வரலேன்னா, ஆறு மணிக்கு நானும் என் புருஷனும் உங்க வீட்டுக்கு வந்துடுவோம் மிஸர்ஸ். ஷ்ரவன்,” குரலை உயர்த்திய ஷர்மிலா, அவர்கள் வீட்டு விலாசத்தை பிசிரற்ற குரலில் உரைக்க, சிலையாக நின்றனர் ரம்யாவும் ஷ்ரவனும்.

அவர்கள் எதிரே வந்த ஷர்மிலா, “ஐ ஏம் வெரி சீரியஸ் அபௌட் இட். வந்தீங்கன்னா அதுவே முதலும் கடைசியுமான சந்திப்பா இருக்கும்,” அழுத்தமாகக் கூறி நகர்ந்தாள்.

“நிஜமாவே மிரட்டுறாளா ஷ்ரவன்,” பம்மினாள் ரம்யா.

“என் பேச்சைக் கேட்காம வம்பை விலைக்கொடுத்து வாங்கிட்டு, இப்போ கண்ணக்கசக்கு,” கொந்தளித்தவன்,

“என்னால எங்கேயும் வரமுடியாது. உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செய்,” என வண்டியில் ஏறினான்.


மறுநாள் காலை வரை அவன் கோபம் கிஞ்சித்தும் தணியாத நிலையில்,

“அம்மா! இன்னைக்கு காலேஜ்லேந்து அப்படியே ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிட்டுவரதா இருக்கேன். வர எட்டுமணியாகிடும்,” மாமியாரிடம் பொய்காரணம் கூறும் சாக்கில் தன் முடிவை கணவனிடம் மறைமுகமாகத் தெரிவித்தாள் ரம்யா.

கல்லூரி முடிந்து வாசலுக்கு வந்தவள், ஷ்ரவனைக் கண்டதும் வியந்துபோனாள்.

அவள் வண்டியில் ஏறியும் அவன் அமைதிகாக்க,

“இப்ப மட்டும் ஏன் வந்தீங்களாம்,” என முகம் சுருக்கினாள்.

“நல்லதோ கெட்டதோ, என் பொண்டாட்டிக்காக நான்தானே முதல் ஆளா நிக்கணும்,” இறுகிய குரலில் அவன் பதிலுரைக்க,

“உங்க பேச்சு கேட்காதது தப்புதான்,” வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அவள் முகபாவனையில் கோபமெல்லாம் மாயமாக, “இனிமேலாவது என் பேச்சைக் கேளு,” என அவள் தலையில் வருடினான்.

அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியின் மூன்றாம் தளத்தை நோக்கி மின்தூக்கி மேலேற,

“அவ என்ன சொன்னாலும் ரியாக்ட் பண்ணிக்காத; அடென்டென்ஸ் போடுறோம்; கிளம்புறோம்,” நினைவூட்டினான் ஷ்ரவன்.

மடமடவென மண்டையை ஆட்டினாள் ரம்யா.

விலாசத்தில் குறிப்பிட்டிருந்த அறையில், முன்பின் தெரியாத ஒருவரைக் கண்டதும், “இங்க பானு… ஐ மீன்…ஷர்மிலாபானு,” தயங்கினான் ஷ்ரவன்.

அவரோ “வாங்க! வாங்க! உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம். ப்ளீஸ் கம் இன்,” எனப் புன்னகை முகமாய் வரவேற்க,

ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் ஏறிட்டுக்கொண்டனர் ஷ்ரவனும் ரம்யாவும்.

வெளியே வந்த ஷர்மிலாபானு, “அட உள்ள வாங்கப்பா,” என உரிமையுடன் ரம்யாவின் கையைப் பிடித்து உள்ளே இழுத்தாள்.

அரணாய் மனையாளைப் பின்தொடர்ந்தான் ஏகபத்தினி விரதன்.

இருவரும் திருதிருவென முழிக்க, கணவரின் கை இடுக்கில் தன் கைகளைப் பின்னிக்கொண்ட ஷர்மிலா பானு, “என்ன மிஸர்ஸ். ஷ்ரவன், நானும் என் புருஷணும் சந்தோஷமா குடும்பம் நடத்துறோமா இல்ல்லையா?” நமுட்டுச் சிரிப்புடன் கண்சிமிட்டி சீண்டினாள்.

குழப்பம் கப்பிய விழிகளுடன் அவர்கள் திணறி நிற்க,

“விளையாடினது போதும் ஷர்மி,” என மனையாளிடமிருந்து விலகி நின்றவன், “ஐ ஆம் ரஷீத்… ஷர்மிலாவின் பெட்டர் ஹாஃப் & ரஹீமோட தம்பி,” அறிமுகம் செய்துகொண்டான்.

அனைத்தையும் உள்வாங்க அவர்களுக்குச் சில நிமிடங்கள் ஆனது. அச்சமயம் வசிப்பறைக்கு வந்த ரஹீம்,

“என்ன மிஸர்ஸ் ஷ்ரவன்? என்னைப் பார்த்தா வில்லன் மாதிரியா இருக்குது. விட்டா போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திருப்பீங்க போலவே,” நமுட்டுச் சிரிப்புடன் கணீரென்று மிரட்ட,

அவன் ஆறடி உயரத்தையும் ஆஜானுபாகுவான தோற்றத்தையும் பார்த்து மிரண்ட ரம்யா, கணவனை நசுக்காத குறையாக அவன் புஜத்தில் ஒட்டிக்கொண்டாள்.

அவளை வாஞ்சையாக அரவணைத்த ஷ்ரவன், “என் வைஃப்க்கு எங்க பிரேக் அப் பத்தி எல்லாமே தெரியும் ரஹீம்… அதான் உங்க ரெண்டுபேரையும் சேர்த்துப் பார்த்ததும்… நீங்க பானுவ… ஐ மீன் ஷர்மிலாவை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுகிட்டீங்கன்னு நெனச்சு சட்டுன்னு கோபப்பட்டுட்டா,” கைகூப்பி மன்னிப்பை யாசித்தான்.

“ஹாஹாஹா!” பெருங்குரலில் சிரித்தவன், “அவளை டிராப் பண்ண மட்டும்தான் அங்க வந்தேன் மிஸர்ஸ். ஷ்ரவன். மற்றபடி ஏமாத்துறது, சீண்டுறது, லவ் டார்ச்சர் கொடுக்கிறது எல்லாம் இந்த நல்லவன்தான்,” என தம்பியின் தோளில் செல்லமாக அடிக்க, அழகாய் அசடுழிந்தான் ரஷீத்.

ரம்யாவின் முகத்திலும் ஒரு வழியாக புன்னகை மலர,

“என் பொண்ணுங்க ரெண்டுபேரும் ப்ளே ஏரியால விளையாடிட்டு இருக்காங்க. உங்கள சந்திக்கணும் சொல்லிட்டு வந்தேன். ரொம்ப நேரம் தனியா விடமுடியாது. நீங்க பேசிட்டு இருங்க,” கனிவாகப் பேசி அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்தான் ரஹீம்.

வீணாகப் பழித்துப் பேசிவிட்டேனே எனக் குற்றவுணர்ச்சியில் ரம்யாவும், தர்மசங்கடத்தில் ஷ்ரவனும் தயங்கி நிற்க, ஷர்மிலாபானுவே அங்கு நிலவிய மௌனத்தைக் களைந்தாள்.

“உங்கள சொல்லி, தப்பில்ல மிஸர்ஸ் ஷ்ரவன். ரஷீதோட கல்யாணம்னு வீட்டுல எல்லாரும் பிடிவாதமா இருந்தபோது, அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஏமாத்துறாங்களேன்னு தான் இருந்துது. ஆனால் போகப்போகத்தான் அவங்க எனக்காக எந்தளவுக்கு யோசிச்சிருக்காங்கன்னு புரிஞ்சுது,” என கணவன் தோளில் வருடிய ஷர்மிலாபானு,

“இந்த உண்மைகளை உடனே சொல்லணும்னு தான் இருந்துது. ஆனால் மேடமிருந்த நிலையில் நான் சொல்லப்போகுற எதையும் நம்பமாட்டீங்கன்னு புரிஞ்சுது. அதான் மிரட்ட வேண்டியதா போச்சு. ஐ ஏம் சாரி மிஸர்ஸ்.ஷ்ரவன்,” அடிமனத்திலிருந்து மன்னிப்பை யாசித்தாள்.

“ரம்யா,” அறிமுகம் செய்துகொண்டு அளவாய் புன்னகைத்தாள் ரம்யா.

சிரித்த முகமாய்த் தன் இல்வாழ்க்கை பற்றி விவரிக்கும் பானுவின் உற்சாகத்தைக் கண்ட ஷ்ரவன், அவளுக்கு அமைந்திருக்கும் நல்வாழ்வை எண்ணி மனத்தில் நெகிழ்ந்தான்.

“இப்பவாவது மனசவிட்டுப் பேசிக்கலாமே,” இருவரையும் இருக்கையில் அமருமாறு கண்கள் சுருக்கி கெஞ்சினாள் ஷர்மிலாபானு.

ரம்யா, ஷ்ரவனின் விருப்பத்தை அறிய அவனை ஏறிட, ‘உட்காரலாம்,’ எனக் கண்ணசைத்தான் ஷ்ரவன்.

“நமக்கு பிரேக் அப் ஆனது தெரிஞ்சதும் ரஷீத், குழந்தைகளை நாங்க வளர்த்துக்குறோம்னு சொல்லி, என்னை உன்னோட சமரசமா போகச் சொன்னாரு ஷ்ரவன். அப்பா பிஸினஸ்ன்னு கொடிப்பிடிக்குற உனக்காக நான் ஏன் தழைஞ்சுபோகணும்னு மாட்டேன்னு சொல்லிட்டேன்.

குழந்தைகளை யார் வளக்குறதுன்னு நாங்க ரெண்டு பேரும் எலியும் பூனையுமா சண்டைபோட, நாங்க கல்யாணம் செஞ்சிண்டா மட்டும்தான் இனி குழந்தைகளைக் கண்ணுல காட்டுவேன்னு மாமா தீர்மானமா சொல்லிட்டாரு,” ஷ்ர்மிலாபானு இடைநிறுத்த, ரஷீத் தொடர்ந்தான்.

“ஒண்ணுக்கு ரெண்டு கைக்குழந்தைகளோட தனியா கஷ்டப்படுற அண்ணனை பார்க்கவே சங்கடமா இருந்துது. இவளும் உங்களோட சேர மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டா. பிரச்சனைகள் தீரணுமேன்ற நல்லெண்ணத்துல, ஷர்மிக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேன்னு சொன்னேன். அவ்வளவுதான்! அன்னைலேந்து நான் இவ கண்ணுக்கு வில்லனாகிட்டேன்,” மனையாளின் தலையில் குட்டி சிரித்தான் ரஷீத்.

பதிலுக்குச் சிரித்தவள், “பின்ன என்ன! இவர் ஓகே சொல்லி எல்லார் கிட்டயும் நல்லபேரு வாங்கிட்டாரு. காதல் தோல்வியில் தவிக்கும் என் வலியை யாருமே புரிஞ்சுக்க முயற்சி செய்யல. எல்லாரும் என்னை கார்னர் பண்ணறா மாதிரி இருந்துது. இவ்வளவு பிடிவாதம் ஒரு பொண்ணுக்கு நல்லதில்ல; இதனாலத்தான் உன் லவ்வரும் உன்னைவிட்டு எஸ்கேப் ஆகிட்டான்னு சொந்தகாரங்க ஆளாளுக்கு புரளி பேச ஆரம்பிச்சிட்டாங்க,” பெருமூச்சுவிட,

அவள் சுபாவம் அறிந்திருந்த ஷ்ரவனும் ரஷீதும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.

“சிரிப்பு வருதா,” ரஷீதின் புஜத்தில் நறுக்கென்று கிள்ளினாள்.

“வலிக்குதுடி,” பொய்கோபம் கொண்டவன், “எல்லாரும் போட்ட ப்ரெஷர்ல கல்யாணத்துக்குச் சம்மதிச்சவ, ‘இவளை ஏன் கல்யாணம் செஞ்சுகிட்டேன்னு உன்னை தினம் தினம் ஃபீல் பண்ண வைக்கிறேன் பாரு’ன்னு வார்னிங்க் மெசேஜோட என் வாழ்க்கையில் டெரர் என்ட்ரி கொடுத்தாங்க,” என இன்னும் அழகாய் சிரித்தான் ரஷீத்.

“என்ட்ரி மட்டும்தான் டெரர்; கல்யாணமான ரெண்டே நாளுல ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்லி என் மனசைக் கொள்ளை அடிச்சிட்டாரு,” ஷர்மிலாபானு நெளிய,

“அதே ரகசியத்தை இப்போ உங்க ரெண்டுபேர் கிட்டயும் சொல்லி உங்க மனசையும் கொள்ள அடிக்கப்போறேன்,” குறும்பு செய்தான் ரஷீத்.

இருவரின் விழிகளிலும் ஆர்வம் மேலோங்க, கண்கொட்டாமல் காத்திருந்தனர்.

“இதுக்கு முன்னாடி நாம சந்திச்சிருக்கோம் ஷ்ரவன். உங்களுக்கு என்னை நியாபகமில்லையா,” பொடிவைத்துப் பேசினான் ரஷீத்.

“ம்ஹூம்,”

“காதலைத் தக்க வச்சுக்க, நீங்க எடுத்த முட்டாள்தனமான முடிவுக்கு ட்ரீட்மென்ட் செய்த டாக்டர் நான்தான்,” ரஷீத் சொல்லவும், பேரதிர்ச்சியும் அவமானமும் முட்டிமோத தலைகுனிந்தான் ஷ்ரவன்.

“ஷ்ரவன்…” ரம்யா அவன் தோளினின் வருட, இருக்குமிடம் உணர்ந்து சுதாரித்துக்கொண்டவன்,

“உங்கள சத்தியமா நியாபகமில்ல ரஷீத். அந்தச் சமயத்துக்கு அது முட்டாள்தனம்ன்னும் எனக்குத் தெரியல,” கண்கலங்க, ரம்யாவின் கைவிரல்களைக் கோத்துக்கொண்டான்.

“செய்யறது சரியா தவறான்னு நீங்க வேணும்னா புரிஞ்சுக்குற மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஒரு டாக்டரா, என் பேஷன்ட்க்கு எது சரி எது தவறுன்னு தெளிவா சிந்திக்கிற பக்குவமும் நிதானமும் எனக்கு ரொம்ப ரொம்ப அவசியம்,” ரஷீத் கூறவும்,

“அப்படின்னா,” அதிர்ந்தான் ஷ்ரவன்.

“நீங்க கேட்ட சர்ஜரியை செஞ்சதா சொல்லி பொய் ரிப்போர்ட் தந்து உங்களை வீட்டுக்கு அனுப்பிட்டேன்,” என மென்னகைத்தான் ரஷீத்.

” நிஜமாவா,” இன்பதிர்ச்சியில் மிதந்தவனின் விழிகள் ரம்யாவை ஏறிட்டது.

 அவளது பனித்த கண்களுக்குள்ளும் அதே நெகிழ்ச்சி.

“அன்னைக்கு உங்கள ஒரு பேஷன்ட்டா மட்டும்தான் தெரியும்,” ரஷீத் தொடங்க,

“எங்க கல்யாணத்துக்கு அப்புறம் இவரைப் பழி வாங்குறேன்ற பேருல, நாம லவ் பண்ணப்ப எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ் இவர்கிட்ட காட்டப்போய், அவர் சொன்ன ரகசியத்தைக் கேட்டு மொத்தமாய் ஆஃப் ஆகிட்டேன்,” முடித்தாள் ஷர்மிலாபானு.

ஆனந்தக் கண்ணீரில் மிதந்த இருவரையும் உளமார ரசித்த ஷர்மிலாபானு,

“நேத்து நீங்க சத்தம் போட்டதில், கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் உங்களுக்கு இன்னும் இந்த உண்மை தெரியலையேன்னு ஆச்சரியமா இருந்துது ரம்யா,” ஷர்மிலாபானு தொடங்க,

“எங்களுக்குக் கல்யாணமானது உனக்கு எப்படித் தெரியும்,” வியந்தான் ஷ்ரவன்.

“அதைவிடுடா! நான் கேட்டதுக்குப் பதில்சொல்லு,” அதட்டினாள் ஷர்மிலாபானு.

“அது…அது…” ஷ்ரவன் சொல்லத் தயங்க,

நற்செய்தி கேட்டு பேரானந்தத்தில் மிதந்த ரம்யா, “என்னைக் கேளுங்க ஷர்மிலா,” என்றாள் துள்ளலாக.

“தனக்கு இப்படியொரு குறை இருக்குன்ற தாழ்வு மனப்பான்மையில் பக்கத்துல கூட வரமாட்டேன்டாரு,” போட்டுக்கொடுத்தாள்.

“அடப்பாவி! அப்போ உங்களுக்குள்ள எதுவுமே நடக்கலையா,” வாயைப்பிளந்தாள் ஷர்மிலாபானு.

‘அந்தரங்கத்தை தம்பட்டம் அடித்த நீயே மீதியையும் சொல்லு’ என்ற பாவனையில், “கேக்குறால. பதில்சொல்லு,” மனையாளை கோத்துவிட்டான் ஷ்ரவன்.

“அது…அது..” ரம்யா பற்களைக் கடித்துக்கொள்ள,

“தயங்காதீங்க ரம்யா. நாங்க ரெண்டு பேருமே டாக்டர்ஸ். ஒரு பேஷன்டா பேசுங்க,” ஊக்குவித்தாள்.

“இவர் தாழ்வு மனப்பான்மையைப் போக்க, நானும் உங்களுக்குச் சமம்ன்னு உணர்த்த கருத்தடை மாத்திரைகள் எடுத்துட்டு வரேன்,” ரம்யா முடிக்கும் முன்,

“நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி,” பெருமூச்சுவிட்டாள் ஷர்மிலா.

இல்லறத்தின் பரிபாஷைகள் மனக்கண்ணில் ஓட, இருவரும் ஒருவரை ஒருவர் ஏறிட்டு அசடுவழிந்தனர்.

“போனது போகட்டும். சீக்கிரமே குட் ந்யூஸ் சொல்லுங்க,” ரம்யாவின் கன்னத்தில் வருடி மென்னகைத்தாள் ஷர்மிலாபானு.

வெட்கம் கலந்த சிரிப்புடன் ரம்யா இமைகள் மூடித் தலையசைக்க,

“எங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷாச்சுன்னு உனக்கு யாரு சொன்னா பா… ஷர்மிலா?” தலையே வெடித்துவிடும் போல இருந்தது ஷ்ரவனுக்கு.

“ஷர்மிலானே கூப்பிடுடா,” அவன் தயக்கத்தைக் களைந்த ஷர்மிலாபானு, ரம்யா பக்கம் திரும்பி,

“என்னை பானுன்னு கூப்பிட்டிடக் கூடாதுன்றதுல அவன் காட்டுற அக்கறையிலேயே அவன் உங்கமேல எத்தனை அன்பு வச்சிருக்கான்னு புரியுது ரம்யா,” என்றாள் பூரிப்புடன்.

“நாமளும் நீ வான்னே கூப்பிட்டுப் பேசிக்கலாமே ஷர்மிலா,” ரம்யா கேட்க,

“ம்ம்,” எனத் தலையசைத்தாள் ஷர்மிலாபானு.

“சரி! அவர்கேட்ட கேள்விக்குப் பதில்சொல்லு,” நினைவூட்டினாள்.

பெருமிதத்துடன் கணவனை ஏறிட்டவள், “ஷ்ரவன் விஷயத்தில் ரஷீத் செஞ்சதைக் கேட்டதும் எனக்கு அவர்மேல பெரிய மரியாதை ஏற்பட்டுது. ஆனால் அவருக்கு ஒரு மனைவியா நடந்துக்கு முடியாதபடி, மனவுளைச்சலில் தவிக்கும் ஷ்ரவனோட நினைவுகள் வந்து வாட்டியெடுக்கும்.

அப்போதான் ரஷீத்… ‘ஷ்ரவனோட வாழ்க்கையிலும் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டால் உன்னோட இந்த கில்டி ஃபீலிங்க் தானா மறைஞ்சிடும். அது வரைக்கும் லெட்ஸ் ஜஸ்ட் பி ஃப்ரெண்ட்ஸ்’ன்னு எனக்கான ஸ்பேஸ் கொடுத்தாரு,” கண்ணீர் மல்க உரைத்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“யூ ஆர் ரியலி க்ரேட் ரஷீத்,” பூரித்தான் ஷ்ரவன்.

“ஒருத்தருக்கு ஒருத்தர் மனசைவிட்டுப் பேசிகிட்டாலே எல்லாரும் எல்லார் கண்களுக்கும் க்ரேட்டா தான் தெரியுவோம் ஷ்ரவன்,” ரஷீத் பணிவடக்கத்துடன் பேச,

“உண்மைதான் ரஷீத்,” என ஷ்ரவனின் கைவிரல்களைக் கோத்துக்கொண்ட ரம்யா,

“மனசவிட்டுப் பேசிக்க முடியுற நம்மளுக்கு நிதர்சனத்தை ஏத்துட்டு சகஜமா உறவாடுற மனப்பக்குவமும் இருக்கும்ன்னு நம்புறேன். இதுதான் என் செல் ஃபோன் நம்பர் ஷர்மிலா,” மனமுவந்து நட்பு பாராட்டினாள்.

மடமை என்னை ஆட்கொள்ள,
மன்னிப்பே இல்லாத பாவங்களைச் செய்தேன் – நல்ல
மனிதர்களின் ரூபத்தில் தெய்வம் தடுத்தாட்கொள்ள,
மறுவாய்ப்பையும் தவறவிட்டு பிராயச்சித்தம் யாசிக்கிறேன்!

சோகங்கள் அனைத்தையும் உள்ளத்தில் பூட்டி,
சந்தோஷங்களை மட்டும் அள்ளி அள்ளித் தரும்,
சரிபாதியே! உன் சங்கடங்களைத் தீர்க்க -விடை தேடுகிறேன்
சிந்தையில் நிழலாடும் நின் நினைவில்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!