Skip to content
Post Views: 34
கண்ணாமூச்சி 22
அனன்யா வீட்டுக்குள் நுழைந்த அந்த நொடி, நிலா அவளுக்குப் பேசக்கூட அவகாசம் தரவில்லை. அவளது முகத்தைப் பார்ப்பதைத் கூடத் தவிர்த்தவள், “அம்மா, நாங்க ரெண்டு பேரும் அப்படியே பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு வரோம்,” என்று ஹாலில் இருந்த தங்கம்மாவிடம் சத்தமாகக் கூறிவிட்டு, அனன்யாவின் கையைப் பற்றி இழுக்காத குறையாக விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியே கூட்டிச் சென்றாள். அனன்யாவுக்குச் சூழ்நிலையின் விபரீதம் புரிந்துவிட்டதால், அவளும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் நிலாவின் பின்னால் மௌனமாக நடந்தாள்.
அதிகாலை நேரத்து அமைதியில், அந்தப் பகுதி பிள்ளையார் கோவில் பிரகாரத்தின் ஒதுக்குப்புறமான, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பெரிய மரத்தடிக்கு அனன்யாவை இழுத்துச் சென்றாள் நிலா. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அடுத்த விநாடி, அதுவரை தான் பிடித்து வைத்திருந்த அனன்யாவின் கைகளை ஆத்திரத்தோடு உதறிவிட்டு, அவளுக்கு நேருக்கு நேர் நின்றாள். நிலாவின் அத்தனை சாதுவான குணமும் மறைந்து, அவளது கண்களில் கோபமும், தன் உயிர்த்தோழியே தனக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்கிற ஏமாற்றமும் ஒருசேரக் கலந்து, நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தன.
“அனன்யா! நேத்து மதியம் லஞ்ச் டைம்ல என்கிட்ட ஏன் அப்படி ஒரு கேள்வியைக் கேட்ட? விஸ்வநாத்துக்கு என் மேல காதல் இருந்தா நான் ஏத்துக்குவேனானு எதுக்காகக் கேட்ட?”
Advertisement
மரத்தடியில் நின்றிருந்த நிலாவின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் அந்த அதிகாலை அமைதியில் அனன்யாவிற்கு லேசான கிலியை எழுப்பியது. அவளது குரலில் இருந்த நடுக்கமும் ஆவேசமும் அங்கிருந்த மர இலைகளைக் கூட ஒரு கணம் அதிரச் செய்தது போல் இருந்தது.
விஷ்வா நேற்று இரவே நிலாவுக்குப் போன் செய்துவிட்டார், தான் பயந்தபடியே விஷயம் கைமீறிப் போய்விட்டது என்பதை அனன்யா முழுமையாக ஊகித்துக் கொண்டாள். தன் தோழியின் கண்களில் தேங்கியிருந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், நிலாவின் பார்வையைத் தவிர்த்து பிரகாரத் தரையை வெறித்துப் பார்த்தபடி மழுப்பலாகப் பேச முயன்றாள்.
“அது… வந்து நிலா… நீ தப்பா நினைச்சுக்காத. சும்மாதான் கேக்கணும்னு தோணுச்சு. நேத்து பிரஸ் மீட்ல விஷ்வா சார் அப்படிப் பேசினாரா, அதான்…” என்று வார்த்தைகளைத் தேடித் திணறினாள்.
Advertisement
“பொய் சொல்லாத அனன்யா!” நிலா தன் பொறுமையை இழந்து சீறினாள். “இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும். நேத்துராத்திரி எனக்கு ஒரு பிரைவேட் நம்பர்ல இருந்து கால் வந்தது. அதுல பேசினது விஷ்வா சார்! விஸ்வநாத்! அவருக்கு என்னோட பேரு, என்னோட பர்சனல் ஃபோன் நம்பர் எப்படித் தெரிஞ்சது? நீதான் என்னோட நம்பரை அவருக்குக் கொடுத்தியா? என்கிட்ட உண்மையைச் சொல்லு!” என்று அனன்யாவின் தோள்களைப் பிடித்து உலுக்குவதைப் போலக் கேட்டாள்.
Advertisement
அந்தக் கேள்விக்கு அனன்யாவிடம் எந்தப் பதிலும் இல்லை. அவளது முகம் அப்படியே வெளுத்து, குற்ற உணர்ச்சியால் சுருங்கியது. அவளது இந்தத் திடீர் மௌனமும், கைகளைக் பிசைந்தபடி நின்ற தவிப்பும் நிலாவுக்குப் பதிலைத் தெள்ளத்தெளிவாக உணர்த்தின. தன் அத்தனை ரகசியங்களையும், இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் தன் உயிர்த் தோழி, தன் அனுமதி இல்லாமல் தன் தனிப்பட்ட மொபைல் எண்ணை ஒரு அந்நிய ஆடவனிடம், அதுவும் ஒரு சினிமா நடிகரிடம் தூக்கிக் கொடுத்திருக்கிறாள் என்பதை நிலாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“அனன்யா… நீயா இப்படிப் பண்ணின?” நிலாவின் குரல் கோபத்தில் இருந்து சட்டென்று பெரும் ஏமாற்றத்தால் உடைந்து கம்மியது. அவளது கண்களில் கண்ணீர் முட்டியது.
“என் சம்மதம் இல்லாம, நான் என்ன நினைக்கிறேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூட டிஸ்கஸ் பண்ணாம, எப்படி நீ என் நம்பரை யாருக்கோ குடுத்த? நான் என்ன சின்ன குழந்தையா, எனக்கு எது வேணும் வேண்டான்னு நீ முடிவு பண்றதுக்கு? இப்போ அவரோட அந்த ஒற்றைப் போன் காலால நான் எவ்வளவு கஷ்டமான, இக்கட்டான சூழ்நிலையில மாட்டியிருக்கேன் தெரியுமா? ராத்திரி முழுக்க என்னால தூங்க முடியல. நீ என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட், உன்னை முழுசா நம்புனதுக்கு… எனக்கு நல்லா பழிவாங்கிட்ட!” என்று கோபமும் அழுகையும் கலந்த குரலில் கத்திவிட்டு, அனன்யாவின் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்காமல், கோவிலை விட்டு வேகமாகக் கால் எடுத்து வைத்து வெளியே கிளம்பினாள்.
Advertisement
அனன்யா பதறியபடி, கைகளில் இருந்த பேகைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் பின்னால் ஓடினாள். கோவிலின் தார்ச்சாலையில் விறுவிறுவென்று நடந்து சென்ற நிலாவின் கையைப் பலமாகப் பற்றித் தடுத்து, அவளுக்கு முன்னால் வந்து நின்று வழிமறித்தாள்.
“நிலா, ப்ளீஸ் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு, தயவுசெஞ்சு ஓடாத!” என்று மூச்சிரைக்கக் கெஞ்சினாள் அனன்யா.
“நான் வேணும்னே உனக்குத் துரோகம் பண்ணணும்னு இதைச் செய்யல நிலா. எனக்குத் தெரியும், உனக்கும் விஷ்வா சார் மேல உள்ளுக்குள் ஒரு பெரிய சாஃப்ட் கார்னர் இருக்குன்னு.” என்றாள் அனன்யா.
“நீ என்ன முட்டாளா அனு, விஸ்வநாத் மேல இந்த உலகத்துல இருக்குற பல லட்சக்கணக்கான பொண்ணுங்களுக்கு சாஃப்ட் கார்னர் இருக்கு, அதுக்காக எல்லாருக்கும் ஃபோன் பண்ணி பேசுவாரா அவரு?” எரிச்சலாகக் கேட்டாள் நிலா.
“அவர் மேல சாஃப்ட் கார்னர் இருக்குற எல்லார்கிட்டயும் அவர் பேசணும்னு அவசியமில்லை, ஆனா அவருக்குப் பிடிச்ச பொண்ணுகிட்ட அவர் பேசறதுல தப்பு இல்லையே…” முணுமுணுத்தாள் அனன்யா.
“ஒரு ரசிகைங்குறதைத் தாண்டி விஷ்வா மேல உனக்கு ஒருவிதமான அன்பு இருக்குன்னு எனக்குத் தெரியும் நிலா. விர்ச்சுவல் உலகத்துல நீ தேடின அந்த அன்பு, இப்போ நிஜ உலகத்துல உன்னைத் தேடி வரும்போது, அவரை நேர்ல சந்திச்சுப் புரிஞ்சுக்கிறதுல என்ன தப்பு இருக்க முடியும்?” வாதிட்டாள் அனன்யா.
“அவர் நீ நினைக்கிற மாதிரி கிடையாது நிலா, பெண்களை ரொம்ப மதிக்கிற டீசண்டான மனுஷன். நீ ஒருமுறை அவரை நேர்ல சந்திச்சுப் பேசு, அதுக்கப்புறமும் உனக்கு உண்மையாவே இந்த ரிலேஷன்ஷிப்ல விருப்பம் இல்லைன்னு தோணினா, நீயே அவர்கிட்ட சொல்லிடு. அவர் உன்னை ஒருபோதும் டிஸ்டர்ப் பண்ண மாட்டார், அதைப்பத்தி நீ கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் விட, உன் வாழ்க்கைக்கான முடிவை நீதான் எடுக்கணும், அதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னுதான் நான் அப்படிப் பண்ணினேன்,” என்று தன் தரப்பு நியாயத்தைக் கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள்.
ஆனால் நிலா தன் கையை அனன்யாவின் பிடியில் இருந்து மிக வேகமாய் விடுவித்துக்கொண்டு, அவளை ஆக்ரோஷமாகப் பார்த்தாள். அவளது கண்கள் சிவந்திருக்க, வார்த்தைகள் அனலாய் வெளிவந்தன.
“நீ என்ன கனவு உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கியா அனன்யா? சினிமா இண்டஸ்ட்ரி, மீடியா வெளிச்சம், கேமரா பரபரப்புனாலே எங்க அப்பா, அம்மாவுக்கு எவ்வளவு அலர்ஜி, எவ்வளவு வெறுப்புன்னு உனக்குத் தெரியாதா? நடுத்தரக் குடும்பத்துப் பழக்கவழக்கங்கள்ல ஊறியிருக்குற அவங்களோட மனநிலை என்னன்னு தெரிஞ்சும் எப்படி இப்படிப் பேசலாம்?” ஆற்றாமையாய் வெளிவந்தது அவளுடைய வார்த்தைகள்.
“நாம ஏதோ தெரியாம ஒரு தடவை இன்ஸ்டாகிராம்ல சின்னதா ஒரு ஸ்டேட்டஸ் போட்டதுக்கே, எங்க வீட்ல எவ்வளவு பெரிய சண்டையாச்சு, அப்பா எவ்வளவு தூரம் கோபப்பட்டார்னு உனக்குத் தெரியும்தானே? அப்படியிருக்கும்போது, 24 மணி நேரமும் மீடியா வெளிச்சத்துல, வதந்திகளுக்கு நடுவுல இருக்குற ஒரு சினிமா நடிகரை நான் காதலிச்சா, அதை எங்க அப்பா அம்மா ஏத்துக்கிட்டு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு ஆசீர்வாதம் பண்ணுவாங்கனு எப்படி உன்னால எதிர்பார்க்க முடியுது? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!” என்று வெடித்தாள்.
அனன்யா நிலாவின் கைகளை மீண்டும் மென்மையாகப் பற்றிக்கொண்டு அவளை அமைதிப்படுத்த முயன்றாள். “நிலா, கொஞ்சம் நிதானமா யோசி. இந்த உலகத்துல எந்த அப்பா அம்மாவாவது ஆரம்பத்துலயே அவங்க பிள்ளைகளோட காதலைப் புரிஞ்சுக்கிட்டு, உடனே ஏத்துக்கிட்டு ஆசிர்வாதம் பண்ணியிருக்காங்களா?” நியாயமான கேள்வி கேட்டாள் அனன்யா.
“ஆரம்பத்துல எல்லாரும் எதிர்க்கத் தான் செய்வாங்க. ஆனா, நமக்குள் இருக்குற காதல் உண்மையா இருந்தா, அந்த உண்மையான அன்பு நமக்கு ஒரு பெரிய தைரியத்தைக் கொடுக்கும். எல்லாரையும் எதிர்த்துப் போராடுற தைரியமும், நம்ம அப்பா அம்மாவைக் காலப்போக்குல கன்வின்ஸ் பண்ணி புரிய வைக்கிற தைரியமும் தானா வரும் நிலா. நீ இப்போ மத்தவங்களைப்பத்தி எல்லாம் யோசிச்சுப் பயப்படாத. முதல்ல உனக்குள்ள இருக்குற உண்மையை யோசி. நீ விஷ்வாவை காதலிக்கிறியா, அந்த அன்பு எவ்வளவு ஆழமானதுன்னு உனக்குள்ள மட்டும் யோசிச்சு ஒரு தெளிவான முடிவுக்கு வா. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்,” என்று எதார்த்தமான வரிகளைப் பேசி அவளது பயத்தைப் போக்கப் பார்த்தாள்.
ஆனால், நிலாவின் மனதில் இருந்த பயம் அவளை அனன்யாவின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. அவளது மனம் இன்னும் அனன்யாவின் செயலைத் துரோகமாகவே பார்த்தது.
“எனக்கு இப்போ உன்கிட்ட பேசவே பிடிக்கல அனன்யா. இனிமேல் என் வாழ்க்கையைப் பத்தியோ, விஷ்வாவைப் பத்தியோ என்கிட்ட பேசாத!” என்று மிகக் கறாராகவும் கோபமாகவும் கூறிவிட்டு, தன் தோழியை அந்த மரத்தடியில் அப்படியே விட்டுவிட்டு, தன் வீடு நோக்கி விறுவிறுவென்று வேகமான அடிகளுடன் நடந்து சென்றாள் நிலா. அவளது பின்னால் அனன்யா ஏமாற்றத்துடனும் தவிப்புடனும் நின்றுகொண்டிருந்தாள்.
அதே சமயம், சென்னையின் மற்றொரு பகுதியில், பரபரப்பான பிரதான சாலைகளில் இருந்து தள்ளி, ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு சிறிய, அமைதியான காபி ஷாப்பில் விஷ்வா அமர்ந்திருந்தான்.
ஒரு சூப்பர் ஸ்டாராகப் பொது இடங்களுக்கு வரும்போது ஏற்படும் பின்விளைவுகள் அவனுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், யாரும் தன்னை எவ்விதத்திலும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். முகம் முழுவதையும் மறைக்கும் கறுப்பு நிற முகமூடி, தலையை முழுமையாக மூடிய ஹூடி, கண்களை மறைக்கும் கருப்பு நிறக் கூலிங் கிளாஸ் அணிந்து, ஒரு சராசரி மனிதனைப் போல் மாறுவேடத்தில் அந்தக் கஃபேவின் கடைசி மூலை மேஜையில் அமர்ந்திருந்தான்.
சுடச்சுட காபி மேஜை மேல் ஆவி பறக்கக் காத்துக்கொண்டிருக்க, விஷ்வாவின் கண்கள் மட்டும் கஃபேவின் கண்ணாடி நுழைவாயிலையே இமைக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. கதவு திறக்கும் ஒவ்வொரு முறையும், உள்ளே வருவது நிலாவாகத்தான் இருக்கும் என்கிற தவிப்போடு அவனது இதயம் துடித்தது.
ஆனால், மணித்துளிகள் நகர நகர, அவனது மனதில் இருந்த அத்தனை உற்சாகமும் மெல்ல வடியத் தொடங்கியது. ஒரு மணி நேரம்… இரண்டு மணி நேரம்… எனத் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காலம் கடந்தது. காபி ஆறிப்போய்க் குளிர்ந்ததே தவிர, நிலா வரவே இல்லை.
திரையுலகில் தன் ஒற்ற அசைவிற்காகக் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கிடக்கும் அந்தப் பிரம்மாண்ட பிம்பத்தை அப்படியே துறந்து, ஒரு சாதாரண மனிதனாக, தன் காதலியின் வரவிற்காக ஏங்கித் தவித்துக் காத்திருந்த விஷ்வாவின் இதயம் ஏமாற்றத்தால் கனத்தது. அவளுக்குத் தன் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பதை உணர்ந்துகொண்டவன், வேறு வழியின்றி, மிகுந்த சோகத்துடனும் ஏமாற்றத்துடனும் அங்கிருந்து கிளம்பினான்.
அதே நேரத்தில், கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த நிலா, தன் மனப் போராட்டத்தை யாருக்கும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. தனக்குக் கடுமையான தலைவலி என்றும், உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது என்றும் பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு, நேராகத் தன் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டாள்.
அனன்யாவின் துரோகமும், இரவில் வந்த விஷ்வாவின் ஃபோன் காலும் அவளது மன அமைதியைக் குலைத்து, அவளை நிலைகுலையச் செய்திருந்தன. எதார்த்த உலகிற்கும் தன் அடிமனதின் ஆழமான உணர்வுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவித்தவள், தலையணையில் முகம் புதைத்து அழுது அழுது களைத்துப் போனதிலேயே, அவளையும் அறியாமல் படுக்கையில் சுருண்டு அப்படியே தூங்கிப்போனாள்.
மாலை பொழுது மெல்லக் கடந்து, ஜன்னல் வழியே இரவு நெருங்கும் வேளையின் கருமை படரத் தொடங்கிய போது, அவளது மொபைல் போன் ‘டிங்’ என்ற கூர்மையான சத்தத்துடன் ஒரு புதிய மெசேஜ் வந்ததை அறிவித்தது. அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு உறக்கத்தில் இருந்து எழுந்த நிலா, ஒருவித பயத்துடன் போனை எடுத்துப் பார்த்தாள்.
அதில் விஷ்வாவின் எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது:
“நிலா… அந்த கஃபேவுல உனக்காக மூணு மணி நேரத்துக்கும் மேல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ வரல. பரவாயில்லை… இப்போ நான் நீ இருக்குற இடத்தைத் தேடி வந்துட்டே இருக்கேன். உன்னை மீட் பண்ணாம நான் போக மாட்டேன்.”
மெசேஜைப் படித்த அடுத்த விநாடி, நிலாவின் நெஞ்சு படபடவென அசுர வேகத்தில் அடித்துக் கொண்டது. அவனது பிடிவாதமும் துணிச்சலும் அவளை அப்படியே மிரளச் செய்தது. ‘இவர் சொன்னபடி நிஜமாகவே இங்கேயும் வந்துடுவாரா? இதற்குப் பதில் அனுப்பலாமா வேண்டாமா? பதில் அனுப்பினால் விஷயம் இன்னும் சிக்கலாயிடுமோ?’ என்று அவளது மூளை பலவாறாகக் குழம்பியது.
இறுதியாக, இதற்குப் பதில் அளிப்பதே தவறு என்று முடிவெடுத்தவள், அந்த மெசேஜைப் அப்படியே புறக்கணிக்க முடிவு செய்தாள். போனை படுக்கையின் மீது தூக்கிப் போட்டுவிட்டு, தன் முகத்தைக் கழுவி, நெஞ்சுக்குள் எழும்பிய பதற்றத்தை எப்படியோ கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். அங்கே இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்த தன் தாய்க்கு எதார்த்தமாக உதவத் தொடங்கினாள். அதன் மூலமாவது தன் சிந்தனைகளைத் திசைதிருப்ப முயன்றாள் நிலா.
இரவு உணவு நேரம் எப்போதும் போல் சாதாரணமாகவே கடந்து போனது. அப்பாவின் ஆபீஸ் காலத்துக் கதைகளும், அம்மாவின் சமையலறை அரட்டைகளும் என அந்த நடுத்தரக் குடும்பத்து இரவு நேரத்து உரையாடல்கள் வழக்கமான அமைதியுடனும் நிதானத்துடனும் நகர்ந்தன. நிலா தன் நெஞ்சுக்குள் எரியும் நெருப்பை ஒருவழியாகத் தன் புன்னகைக்கு பின்னால் மறைத்துக் கொண்டு, பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டாள். உணவுக்குப் பின் சமையலறையைத் தூய்மை செய்து, பாத்திரங்களை ஒதுக்கிவிட்டுத் தன் அறைக்கு வந்த நிலா, கதவைத் தாழிட்ட பிறகுதான் லேசான நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
‘நல்லவேளை, அவர்கிட்ட இருந்து அதுக்கப்புறம் எந்த மெசேஜும், போன் காலும் வரல. நாம அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம அமைதியா இருந்ததுதான் நல்ல முடிவா போச்சு. சும்மா என்னை மிரட்டிப் பாக்கலாம்னு மெசேஜ் போட்டிருப்பார், நாம கண்டுக்காததும் கிளம்பி போயிருப்பார்’ என்று தனக்குள்ளே நினைத்துத் தன் பதற்றத்தைத் தணித்துக் கொள்ள முயன்றாள்.
ஆனால், அவளது நிம்மதி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. சரியாக அதே விநாடி… அவளது படுக்கையின் மேல் கிடந்த போன் மீண்டும் ‘டிங்’ என்று கூர்மையான சத்தத்துடன் ஒலித்தது. அந்த நிசப்தமான இரவில் அந்த ஒற்றைச் சத்தம் அவளது காதுகளுக்குள் இடி முழக்கமாய் இறங்கியது.
இதயத் துடிப்பு ஒரு கணம் நின்றுவிடும் அளவுக்கு ஒரு நடுக்கத்துடனும் பயத்துடனும் போனை கைகளில் எடுத்தாள் நிலா. திரையில் மின்னிய “பிரைவேட் நம்பர்” என்ற பெயரைக் கண்டதும் அவளது விரல்கள் நடுங்கின. அவனிடமிருந்து அடுத்த குறுஞ்செய்தி வந்திருந்தது:
“நிலா… நான் இப்போ உன்னோட மொட்டை மாடியில, அந்த ஜாதிமல்லிப் பந்தலுக்குக் கீழ நின்னுகிட்டு இருக்கேன். நீ இப்போ மாடிக்கு வர்றியா… இல்லை நானே உன்னைத் தேடி கீழே உங்க வீட்டுக்குள்ள வரவா?”
மெசேஜைப் படித்த நிலா அடுத்த விநாடி அப்படியே உறைந்து போனாள். அவளது உடம்பில் ஓடிய ரத்தம் மொத்தமும் ஒரு கணம் உறைந்துபோனது போன்றதொரு பிரமை. அதிர்ச்சியிலும் சொல்லொணா பயத்திலும் அவளது கண்களில் இருந்து கண்ணீர் முட்டி கன்னங்களில் வழிந்தது.
‘இவர்… இவர் நிஜமாகவே என் வீட்டு மொட்டை மாடிக்கு வந்துவிட்டாரா? ஒரு சூப்பர் ஸ்டார், இப்படி ராத்திரி நேரத்துல அத்துமீறி என் வீட்டுத் தனிமைக்குள் நுழைந்திருக்கிறாரா? கீழே அப்பாவும் அம்மாவும் தூங்கிக்கிட்டு இருக்காங்க. சின்னதா சத்தம் கேட்டு அவங்க எழுந்து மாடிக்கு வந்தாலோ, இல்லைன்னா இவர் சொன்னபடி கீழே இறங்கி வந்துட்டாலோ அவ்வளவுதான்! குடும்ப மானமே கப்பலேறிடும், அப்பாவோட தலை குனிஞ்சுடும்!’ என்ற பயமும் நடுக்கமும் அவளை அப்படியே உயிரோடு அசைத்துப் பார்த்தது.
இனி ஒரு நொடி தாமதித்தாலும் விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த நிலா, தன் கைகளில் இருந்த நடுக்கத்துடனும், சொல்லொணா அதிர்ச்சியுடனும் தன் அறைக் கதவை அவசர அவசரமாகத் திறந்து கொண்டு, சத்தம் வராதவாறு மொட்டை மாடியை நோக்கி அசுர வேகத்தில் ஓடினாள்! அவளது ஒவ்வொரு எட்டிலும் பயமும் தவிப்பும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.
error: Content is protected !!