Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 19

ஓம் ஸ்ரீ சாய்ராம்

பெண்கள் இருவரும் மட்டும் தனியாகச் செல்லவிருந்ததால், இருவர் மட்டும் அமரக்கூடிய வகையில் மூலையில் உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்திருந்தான் தருண். அதனால் ரம்யாவைக் கண்டுகொள்ளும் சிரமம் அவனுக்கு இருக்கவில்லை.

திரையிலிருந்து வீசிய ஒளிவெளிச்சத்தில் அவளை நோக்கி நடந்தான். விடிய விடிய பேசிக்கொண்டிருந்த போதும், சினிமாவுக்குச் செல்வதைப் பற்றியோ, பெற்றோர் ஊருக்குச் சென்றிருப்பதைப் பற்றியோ எதையுமே கூறவில்லையே என்ற மலையளவு கோபத்துடன் வந்தவன், மங்கை அவளின் பளிங்கு முகத்தைப் பார்த்ததும்,

“ஹாய் ரம்யா,” எனக் காதல் வழிய அந்தர்பல்டி அடித்தான்.



Advertisement

மூவருமாகச் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்களே எனக் கோபம் தலைக்கேறிய பாவை, வெட்டும் பார்வையுடன் வெடுக்கென்று எழுந்துகொள்ள,

“ப்ளீஸ் ரம்யா. உட்காரு,” எனக் கண்களைச் சுருக்கிக் கெஞ்சினான்.

கணவனின் கைச்சிறையிலிருந்து விடுபட அக்கப்போர் செய்துகொண்டிருந்த பெண் திரையை மறைக்கவும், பின்னாலிருந்த பார்வையாளர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

Advertisement

இருக்குமிடம் உணர்ந்து அமைதியாக அமர்ந்தாள் பாவை.

Advertisement

“இங்க எதுக்கு வந்தீங்க?” முகத்தைத் திருப்பாமல் மெல்லியக் குரலில் அதட்டினாள்.

“படம் பார்க்கத்தான்,” கலாய்த்தவனை, பார்வையால் விழுங்கினாள்.

“பின்ன என்ன ரம்யா? உனக்காகத்தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சுகிட்டே கேக்குறியே,” என்றான் இதழோர புன்னகையுடன்.

Advertisement

“அவசியமில்லாம சந்திச்சுக்க வேண்டாம்னு…..” அவள் தொடங்கவும்,

வீட்டில் தனியாக இருப்பதை இப்போதும் கூடச் சொல்ல மறுக்கிறாளே என எரிச்சல் தலைக்கேறியவன், “உனக்கு இஷ்டமில்லேன்னா கிளம்பு ரம்யா,” கடுகடுத்தான்.

ஏற்கனவே ஒருமுறை எழுந்துகொண்டு, சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்தாகிவிட்டது என நொந்தவளுக்கு எழுந்துகொள்ளவும் முடியாமல் அவனருகில் உட்காரவும் முடியாமல் ஆத்திரம் கொப்பளித்தது.

“பெரிய ரோமியோ மாதிரி சொல்லாம கொள்ளாம வந்துட்டு இப்போ என்னைக் கிளம்பச்சொல்லி, தப்பெல்லாம் என்மேலத்தான்னு ஃப்ரேம் பண்ணுறீங்களா ஷ்ரவன்?” கொந்தளித்தாள்.

“நீ மட்டும் அன்னைக்குக் கல்யாணத்துக்குச் சொல்லிட்டா வந்த. மூணு பேரும் சேர்ந்துதானே பிளான் பண்ணீங்க. அப்படியிருந்தும் நான் கோபப்பட்டேனா என்ன? சந்தோஷமா தானே ஏத்துக்கிட்டேன்,” அவன் குத்திக்காட்ட, சுருக்கென்று குத்தியது அவளுக்கு.

மௌனம் சாதித்த பெண்னை மேலும் உசுப்பேற்றாமல் திரைப்படத்தில் கவனம் செலுத்தினான்.

அவர்களின் போதாத நேரம், திரைப்படத்திலும் சோகம் அடைமழையாய் பொழிந்தது. சுனாமி அலையில் அடித்துச் செல்லப்படும் கணவன். அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா எனத் தெரியாமல் ஊர் ஊராய் தேடி அலையும் மனைவி.

கணவனை உயிருடன் மீட்டெடுத்தால் போதுமென்ற நாயகியின் குமுறல்களில் தன்னையே பார்ப்பதுபோல இருந்தது ரம்யாவிற்கு. சில மாதங்களுக்கு முன் உணர்வற்று கிடந்த கணவன் முன் தானும் அப்படித்தானே அழுது தீர்த்தாள் என ஒப்பிட்டவளுக்கு, திடகாத்திரமாய் பக்கதில் அமர்ந்திருக்கும் கணவனின் தோள் சாய வேண்டும்போல இருந்தது.

கைக்கெட்டும் தூரத்தில் கணவன் இருந்தும் அவனைக் கவனிக்காமல், நாயகி மறுதிசையில் நகர, ‘தேடல்கள் தொடரும்’ என இடைவேளை அறிவிப்புடன் மின்விளக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டன.

கற்பனை கதை தானே என்றாலும் நாயகி முயற்சிகளைத் தொடர்வாளா; சலித்துப்போய் கைவிட்டுவிடுவாளா; என்ற தவிப்புடன் தன் வாழ்க்கை எந்த திசையில் போகிறது என ஏக்கமாய் தன்னவளைப் பார்த்தான் ஷ்ரவன்.

ரம்யா விருட்டென எழுந்துகொள்ள, மறுவார்த்தை பேசாமல் வழியை விட்டான்.

கணவனின் வாடிய முகத்தைக் கண்டவளுக்கு, உயிர் பிழைத்து வந்த அவன் போராட்டம் நினைவில் வர, “திரும்பி வந்துடுவேன் ஷ்ரவன்,” எனத் தோள்பையை அவனிடம் தந்துவிட்டு நகர்ந்தாள்.

தன் மனத்தில் ஊசலாடிக்கொண்டிருந்த கேள்விக்குப் பதில் கிட்டியதுபோல பனித்த இமைகளைச் சிமிட்டிக்கொண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக தருணை அழைத்தாள் ரம்யா.

அனைத்திற்கும் தயார் என்ற நிலையில்தான் அவன் அழைப்பையே ஏற்றான்.

“அண்ணனும் தம்பியும் என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க,” அவள் சீற்றம் கொள்ள,

“கூல் கூல் ரம்யா! நீ கொடுத்த சாபம் ஏற்கனவே எங்கமேல சூப்பரா வர்கவுட் ஆயிடுத்து,” என்றான் அலட்டலே இல்லாமல்.

“என்னடா உளறுர,” அதட்டியவளுக்கு உள்ளுக்குள் பதறவே செய்தது.

“நீ எங்களை இத்தனை நேரம் திட்டித்தீர்த்திருப்பன்னு தெரியும் ரம்யா. உன் சாபம் பலிச்சதுல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி, கரென்ட் போய், இப்போ மேட்சும் பார்க்க முடியாம ரெண்டுபேரும் இத்துப்போன ப்ரெட் பட்டர் ஜாம்மோட கேண்டல் லைட் டின்னர் சாப்டுட்டு இருக்கோம்,” அவன் உச்சுக்கொட்ட, பக்கென்று சிரித்துவிட்டாள்.

எந்தச் சூழ்நிலையிலும் அவளைச் சிரிக்கவைக்கும் சக்தி, தருணுக்கு மட்டும்தான் இருக்கிறது எனப் பெருமிதம் பொங்க தன்னவன் கன்னத்தில் முத்தமிட்ட உத்ரா,

“ரம்யா அக்கா! வீட்டுக்கு வரும்போது அப்படியே விரூகுட்டிக்கு டயாப்பர் வாங்கிட்டு வாங்களேன் ப்ளீஸ். சைஸ்ஸும் பிராண்டும் மெசேஜ் பண்ணறேன்,” எனச் சந்தடிசாக்கில் வேலை வாங்கினாள்.

“நான் எதுக்கு அங்க வரப்போகுறேன்,” ரம்யா கேள்வி எழுப்ப,

ஊடல் கொண்ட ஜோடிகள் அதைப்பற்றி இன்னும் பேசிக்கொள்ளவில்லை என உணர்ந்த உத்ரா, சமாளிக்க முடியாமல் திணற,

“நாங்களே பவர்கட்ல அவஸ்தைப்பட்டுட்டு இருக்கோம்; இதுல உன்னை எதுக்குக் கூப்பிடப்போகுறோம்,” இடைபுகுந்தான் தருண்.

மின்வெட்டு என்றதும், உத்ரா அன்று அரங்கேற்றிய நாடகம் கண்முன் வர,
“ஏய் உத்ரா! அவர் முன்னாடி கால் பண்ணி ஏதாவது கதை சுத்தி என்னை காரனர் பண்ணீன்னா, அவ்வளவுதான் சொல்லிட்டேன்,” எச்சரித்தாள் ரம்யா.

மறுபடியும் உத்ரா நடுக்கத்துடன் கணவனை ஏறிட்டாள்.

“வீட்டுல ஜெனரேட்டர் இருக்குன்னு தெரிஞ்சும் உன் புருஷனை உன்கூடவே தங்க வச்சுகிட்டது நீ; எங்கள ஏன் கத்திட்டு இருக்குற,” மடக்கினான் தருண்.

ரம்யா பட்டென்று அழைப்பைத் துண்டிக்க,

“அளவுக்கு மீறி சீண்டிட்ட தருண். இப்போ அவங்க அண்ணாகிட்ட சண்டைபோட்டு கிளம்பிடப் போகுறாங்க பாரு,” கவலைக்கொண்டாள் உத்ரா.

“அதெல்லாம் கிளம்பமாட்டா,” அவன் உறுதியாகச் சொல்ல,

“உனக்கு ரொம்பத்தான் ஓவர் கான்ஃபிடென்ஸ்,” எனத் திட்டினாள்.

“ஓய் ட்யூப்லைட்,” எனச் செல்லமாக அவள் தலையில் குட்டியவன்,

“பிடிக்காமத்தான் இன்டர்வெல் வரைக்கும் சினிமா பார்த்திருக்காளா,” எனக் கண்சிமிட்டினான்.

“அட ஆமாமில்ல!” இளித்த உத்ரா, “இந்த ரம்யா அக்கா, மனசுல இத்தனை ஆசை வச்சுகிட்டு, விலகியிருக்கணும்னு அது இதுன்னு ஏன்தான் தன்னைத் தானே வருத்திக்கிறாங்களோ தெரியல,” சலித்துக்கொண்டாள்.

இதற்கிடையில், விலகவும் முடியாமல் ஒன்றிப் பழகவும் முடியாமல் குழப்பத்தில் தத்தளித்தபடி இருக்கைக்குத் திரும்பிய ரம்யா, கணவனின் காதல் பார்வையில் கலவரமாகி, வெடுக்கென்று தன் தோள்பையை வாங்கியபடி பொத்தென்று அமர்ந்துகொண்டாள்.

‘மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டாளா!’ என்ற சலிப்புடன் படம் பார்ப்பதில் கவனம் செலுத்தினான் ஷ்ரவன்.

இடைவேளைக்கு முன் மிகைப்படுத்திய அளவிற்கு சோக கீதம் வாசிக்காமல் மிருதுவாக நகர்ந்த கதையில் அவன் மனமும் லேசானது. முடிவும் சுபம் எனக் கண்ட இருவருக்குமே மனதளவில் ஒருவித நிம்மதி.

திரைப்படங்கள் போல, வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் மூன்று மணி நேரத்தில் தீர்வு கிடைத்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்குமென விரக்தியில் சிரித்துக்கொண்டான் ஷ்ரவன்.

கூட்டத்தோடு கூட்டமாக வெளிய வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“மணி எட்டாகப் போகுது. இன்னைக்கு ஒருநாள் என்னோட வீட்டுக்கு வா ரம்யா,” ஷ்ரவனே முன்வந்து அழைத்தான்.

உத்ராவும் தருணும் சற்றுமுன் பேசியதை நினைவுகூர்ந்தவளோ, ‘கேஸுலா கேக்குறா மாதிரி நடிக்கிறத பாரு,’ என உதட்டுக்குள் திட்டியபடி,

“எட்டுத்தானே ஆகுது. நான் பாத்துக்கிறேன்,” வார்த்தைகளால் துளைத்தாள்.

மூன்று மணி நேரமாக அவளுடைய வெறுப்புகளை மட்டுமே அனுபவித்திருந்தவனுக்கும் உண்மை காரணத்தை சொல்ல மனமில்லை. அமைதியாகத் தலையசைத்து நகர்ந்தான்.


நண்பன் பேச்சை நம்பி இரு சக்கர வாகனத்தை எடுத்து வராததற்குத் தன்னைத்தானே கடிந்துகொண்டபடி பேருந்திற்காகக் காத்திருந்தவள், அலைபேசியின் திரையை முன்னும் பின்னுமாக நகர்த்த, உத்ராவின் குறுஞ்செய்தி தென்பட்டது.

‘இதுவும் தனக்கு விரிக்கும் வலையா,’ எனச் சந்தேகம் கொண்டவளுக்கு, குழந்தையின் விஷயத்தில் விளையாடவும் மனமில்லை.

மனையாளிடமிருந்து பத்தே நிமிடங்களில் அழைப்பு வந்ததும் சந்தோஷத்தில் மிதந்தான் ஷ்ரவன்.

உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல், “சொல்லு ரம்யா,” என்றான் சாதாரணமாக.

“நீல்கிரீஸ் க்ராஸ் பண்ணிட்டீங்களா,” படபடத்தாள்.

“நான் இன்னும் கிளம்பவே இல்ல,” அவன் கூறவும்,

“ஏன் ஷ்ரவன்?” பதற்றம் இரண்டு மடங்கானது அவளுக்கு.

“பசிக்குதுன்னு தியேட்டர் பக்கத்துல இருக்குற சரவணா பவன் வந்திருக்கேன்,” அவன் சொல்லவும், பேதையின் மனம் துடிக்க மறந்தது.

“சரி! எனக்கும் ஆர்டர் பண்ணுங்க. பத்து நிமிஷத்துல வரேன்,” என்றாள்.

பெண்ணவளின் உள்நோக்கம் புரியவில்லை என்றபோதும், சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறிதியாக இருந்தவன்,
“சரி வா! ஆனால் சாப்பிட்டு என்னோட வீட்டுக்கு வரணும்,” என்றான்.

“அதெல்லாம் முடியாது,” அவள் தீர்மானமாகக் கூற,

“அப்போ நீ வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக்கோ ரம்யா,” அவனும் முறுக்கிக்கொண்டான்.

கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள், அவன் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் கடையை மூடிவிடுவார்கள் எனக் கணக்கிட்டு,

“சரி ஷ்ரவன். விரூகுட்டிக்கு டயாப்பர் வாங்கச்சொல்லி உத்ரா கேட்டுக்கிட்டா. பத்து நிமிஷத்துல அங்க வந்து டயாப்பர் மட்டும் தந்துட்டுக் கிளம்புறேன்,” என்றாள்.

‘பெண்மான் அழைத்ததற்கு இதுதான் காரணமா!’ என யோசித்தவன், சரியென்று மட்டும் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

வீட்டிற்குப் போனால் அவளும் தனியாகத்தானே உண்ண வேண்டுமெனச் சிந்தித்தவனுக்கு, சமைத்திருப்பாளா அல்லது உத்ராவுடன் வெளியில் சாப்பிடும் எண்ணத்தில் வந்தாளா எனச் சந்தேகங்கள் கிளம்ப, தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.

இதற்கிடையில், பேருந்து நிலையத்திற்கு எதிரிலிருந்த மருந்தகம் ஒன்றில் டயாப்பரை வாங்கிக்கொண்டவள், பணம் செலுத்தும் கவுன்டருக்கு வர, 5ஸ்டார் சாக்லேட்டைக் கண்டதும், பசுமையான காதல் பரிபாஷைகள் கண்முன் விரிந்து இதழோர புன்னகையாக உருமாறியது.

“ரெண்டு 5ஸ்டாருக்கும் சேர்த்து பில் போடுங்க,” என்றாள்.

மூன்று சாக்லேட் பார்களைத் தந்த கடைக்காரர், “ரெண்டு வாங்கினால் ஒன்று இலவசம் மேம்,” என்றார்.


ஜேஜேவென நிரம்பி வழிந்தபோதும், சரவணா பவன் உள்ளே நுழைந்தவளுக்கு அவனைக் கண்டுபிடிக்க அவ்வளவு நேரம் எடுக்கவில்லை. உணவருந்த வந்தவன் வெறும் சாத்துக்குடி பழச்சாறு பருகிக்கொண்டிருக்கிறானே என வருந்தியவள்,

டயாப்பர் பையை மேஜையில் வைத்துவிட்டு, 5ஸ்டார் சாக்கலேட் ஒன்றினை அவன் சட்டைப் பாக்கட்டில் சொருகி தலைகுனிந்தாள்.

அதை லட்சியம் செய்யாதவன், “உட்காரு! உனக்கும் சேர்த்துத்தான் ஆர்டர் பண்ணிருக்கேன்,” என்று அதட்டி, ஊழியரிடம் பதார்த்தங்களை எடுத்துவரச்சொல்லி சைகை காட்டினான்.

“அதான் உங்களோட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னேன்ல,” எரிச்சல் சுர்ரென்று ஏறியது அவளுக்கு.

“தெரியும்! ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு,” அவனும் இறங்கிவருவதாக இல்லை.

ஊழியர், மசால் தோசை தட்டுடனும் சப்பாத்தி குருமா பார்சல் ஒன்றினையும் எடுத்து வர, அவருக்கு நன்றிகூறி பெற்றுக்கொண்டவன்,

“என்னோட வரதா இருந்தா பார்சலை பிரிச்சுச் சாப்பிடு. கிளம்புறதா இருந்தா வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் சாப்பிடு,” முடிவை அவளிடமே விட்டான்.

உற்றார் உறவினருடன் மகிழ்ந்து உண்ணும் மற்றவர்களைக் கண்டவளின் மனம் கனத்தது.

தன்னவனைத் தன்னந்தனியாக விட்டுச்செல்ல மனமில்லாதவள், “எனக்கு உங்களோட சாப்பிடணும் ஷ்ரவன். ஆனால் வீட்டுக்கு வரமாட்டேன்,” என உதட்டைப் பிதுக்கினாள்.

“அதான் ஏன் ரம்யா? எதுக்கு இவ்வளவு பிடிவாதம் பிடிக்குற?” இன்னும் உண்மையைச் சொல்லாமல் மழுப்புகிறாளே என எரிச்சல் மண்டியது அவனுக்கு.

“வீட்டுல நாளைக்கு முக்கியமான வேலையிருக்கு ஷ்ரவன்,” ரோஷம் பொத்திக்கொள்ள எழுந்து நின்றாள்.

‘அழுத்தக்காரி!’ சலிப்புத்தடியவன்,

“சரி! உட்கார்ந்து சாப்பிடு. உன்னை உங்க வீட்டுல விடுறதுக்காவது ஓகே சொல்ல,” எனக் கை கூப்பி கெஞ்சினான்.

“கண்டிப்பா வீட்டுல விட்டுடுவீங்க தானே,” அவள் வாய்க்குள் பேச,

“உன்னை மீறி என்னால எதையாவது செய்யமுடியுமா? உன்னைக் கட்டாயப்படுத்திக் கடத்திட்டுப்போகுறேன்னு ஊரைக் கூட்டிட மாட்ட,” அதிருப்தியில் இடவலமாகத் தலையசைத்தான்.

முகம் அஷ்டகோணலில் வழிய அவன் எதிரில் அமர்ந்தாள்.

காலி தட்டு ஒன்றை ஊழியரிடம் கேட்டு, “இன்னொரு மசால் தோசை எடுத்துட்டுவாங்க,” எனக் கூறிவிட்டு, பார்சலிருந்த சப்பாத்தியில் பாதியை தன்னவனுக்குப் பரிமாறினாள்.

உதடு பிரிக்காது புன்னகைத்தவன், மசால் தோசையில் பாதியைப் பிய்த்து அவள் தட்டுக்கு மாற்றி, “நீ ஆர்டர் பண்ண தோசை வரவரைக்கும் இதைச் சாப்பிடு,” என்றான்.

வயிறும் மனமும் நிறைந்தவர்களாக அரைமணி நேரத்தில் வாசலுக்கு வந்தனர்.

காரிருள் மேகமூட்டத்திற்கு நடுவில் இடிமுழக்கத்துடன் மின்னல் பளிச்சிட, யோசனையாக அவனைப் பின்தொடர்ந்தாள் ரம்யா. வண்டி அருகில் வந்ததும்,
“மழைவரா மாதிரி இருக்கு ஷ்ரவன். உங்களுக்கு ஏன் இந்த வீண்வேலை. நான் ஆட்டோல போறேனே,” இழுத்தாள்.

“அவ்வளவு அக்கறை இருந்தால் என்னோட வீட்டுக்கு வா,” பார்வையால் சுட்டெரித்தான்.

ரோஷம் தலைதூக்க, “அதான் வீட்டுல ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றேன்ல,” எரிந்துவிழுந்தவள், கற்சிலையாக நிற்க,

“வண்டில ஏறு! டிராப் பண்ணறேன்!” தீயென பரவிய கோபத்தை வண்டியின் கதவில் கடத்தினான்.

அவள் பிறந்த வீட்டின் தெருக்குள் நுழையவும் பெரும் கர்ஜனையுடன் கனமழை பெய்யவும் சரியாக இருந்தது. வண்டி, வீட்டு வாசலை வந்தடைய, மின்வெட்டில் தெருவிளக்குகளும் அணைந்து கும்மிருட்டானது.

வண்டியின் ஹெட்லைட் வெளிச்சதை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள், ‘என் வாயாலேயே தங்கச்சொல்ல வைக்கிறாரே,’ சிந்தித்தபடி,

“இந்த மழையில் வண்டி ஓட்டாதீங்க ஷ்ரவன். இங்கேயே ஸ்டே பண்ணுங்க,” என்றாள் மெல்லியக் குரலில்.

“அவசியமில்ல. நீ இறங்கு. எனக்கு நேரமாகுது,” பொங்கி வந்த கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள, இரு கைகளாலும் ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்துக்கொண்டான்.

“பழிவாங்குற நேரமா இது,” திரும்பி அமர்ந்து கெஞ்சினாள்.

“உன்னோட தனியா இருக்குறதுக்கு எனக்கு விருப்பமில்ல. அது என் நோக்கமும் இல்ல,” சாலையைப் பார்த்தபடி பதிலளித்தான்.

“அப்போ அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்கிறது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?’ பேரதிர்ச்சி கொண்டாள் பெண்.

“…”

“தெரிஞ்சியிருந்தும் ஏன் ஷ்ரவன் என்கிட்ட ஒரு வார்த்தைக் கூடக் கேக்கல,” உடைந்துபோனாள் பாவை.

“மறைக்கணும்னு நினைக்கிற உன்கிட்ட நான் எதுக்குக் கேக்கணும்,” இடித்துக்காட்டினான்.

அதைக்கேட்டுத் தடுமாறியவள், கண்களை இறுகமூடித் திறந்து பெருமூச்சுவிட்டபடி,

“சரி. சொல்லாதது என் தப்புதான். இப்போ அடம்பிடிக்காம உள்ள வாங்களேன் ப்ளீஸ்,” அவன் தோளினை உலுக்கினாள்.

சீற்றம் கொண்ட மழையுடன் காற்றும் பலமாக வீச, வண்டி அதிர்வதை உணர்ந்தவள்,

“ப்ளீஸ் ஷ்ரவன். இந்த மழையில் எப்படி…” அவள் முடிக்கும் முன்,

“இந்த அக்கறை ஹோட்டலேந்து கிளம்பும் போதே இருந்திருக்கணும் ரம்யா!” அவனிடமும் அதே மனவுறுதி.

“அதான் நாளைக்கு வீட்டுல ஒரு முக்கியமான வேலையிருக்குன்னு சொன்னேனே,” அவளும் அதே பல்லவியைத் தொடங்க,

“என் டைம்ம வேஸ்ட் பண்ணாத ரம்யா. வண்டியை விட்டு இறங்கு,” எனக் கர்ஜித்தான்.

இயாலமையில் அவள் கைகளை பிசைய,

“இறங்குறியா? இல்ல இந்த மழையில நனைஞ்சுகிட்டே பொடிநடையா நடந்து போட்டமா?” தீர்மானமாக மிரட்டினான்.

பெருமூச்சுடன் பைக்குள் வைத்திருந்த மற்றொரு 5ஸ்டார் சாக்லேட்டை எடுத்து அவள் சட்டைப் பாக்கட்டில் நுழைத்தவள், “ஜாக்கிரதையா வண்டியை ஓட்டுங்க. போனதும்ம் ஃபோன் பண்ணுங்க,” கசந்த குரலில் உரைத்து இறங்கினாள்.

இறங்கியவள் இரண்டடி வைப்பதற்குள், வண்டி தெருமுனைக்குச் சீரிப் பாய்ந்தது.

தன்னவன் நல்லபடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன் முக்கால் மணி நேரம் காத்திருந்து, அவன் அலைபேசிக்கு அழைத்தாள்.

‘தி நம்பர் யூ ஆர் ட்ரைங்க் டு கால் இஸ் ஸ்விட்ச்ட் ஆஃப்,’ மறுமுனையிலிருந்து வந்த அறிவிப்பில்,

“கடவுளே! என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிற,” கேவலுடன் சோஃபாவில் சரிந்தாள்.

அனைத்துமானவளே என உனை நான் ஆராதிக்கிறேன்;
அடுக்கடுக்காய் குறைகூறி ஆர்ப்பாட்டங்கள் செய்கிறாய்;
அன்பின் ஆதிக்கமே என உனை நான் அனுசரிக்கிறேன்;
அனல் காற்றாய் சுட்டெரித்து அலைக்கழிக்கிறாய் – இனியும்
அவமானங்களைத் தள்ளிவைத்து உறவாடுவேனா – விடை தேடுகிறேன்
அழுத்தக்காரியே ! நிழலாடும் நின் நினைவில்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!