Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-13(3)

அத்தியாயம் – 13-3  
செமெஸ்டெர் விடுமுறைக் காலங்கள் முடிந்து கல்லூரி திறந்திருந்தது. இதற்குப் பின் நிலவன் ஒரு மாதம் மட்டுமே கல்லூரிக்கு வரவேண்டும். எங்கே இன்டர்ன்ஷிப், என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் எல்லாம் பேராசிரியர்களிடம் கொடுத்து விட்டு இன்டர்ன்ஷிப் செல்ல வேண்டும்.
எழிலன் எம்பில் செய்வதால், அவனின் ஆராய்ச்சிகளுக்காக சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். மற்ற நாட்களில் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இந்த ஆறு மாத முடிவில் பேப்பர் பிரசன்டேஷன் முடித்து, வைவா நடக்கும். வெளியிலிருந்து எக்ஸாமினார்கள் வருவார்கள்.
நிலவன் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, சென்னைக்குப் புறப்படத் தயாரானான். ஏற்கனவே பொறியியல் படிப்பை முடித்து விட்டு, இரண்டு வருடங்கள் தங்கள் கம்பெனியிலேயே பொறுப்பேற்று இருந்தான். மேற்கொண்டு பெரிய பொறுப்பை வகிக்க மேற்படிப்பு அவசியம் எனத் தோன்றவே மேலாண்மைப் படிப்பைத் தேர்ந்தெடுத்து, இந்தக் கல்லூரியில் படித்து வந்தான்.


Advertisement

படிப்பைப் பொருத்தவரை நல்ல கல்லூரி என்பதால், நிலா இங்கே சேர்ந்ததும் அவனுக்கு சந்தோஷமே. சில கிண்டல், கேலிகள் எல்லாம் இருந்தாலும் அது அளவு மீறிச் செல்லாது என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தன் தங்கையைத் தைரியமாகவே கல்லூரி விடுதியில் விட்டு விட்டுச் சென்றான் நிலவன்,
விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பும் முன் நிலா தன் அண்ணனிடம் “அண்ணா, நான் கல்சுரல்ஸ் மட்டும் போறேனே. மற்றபடி நீ சொல்ற மாதிரி நடந்துக்கறேன். பிளீஸ்” எனக் கேட்டாள்.
அவளின் கெஞ்சலில் நிலவனுக்கு வருத்தமாகியது. “நிலாமா, அண்ணா உனக்குக் கெடுதலுக்குச் சொல்வேனா? எழிலன் தான் கல்சுரல் டீம் லீடர். அவன் அப்பா வைஸ் பிரின்சிபால், அம்மா டிபார்ட்மெண்ட் ஹெட். அதனால் அவனுக்குக் கர்வம் ஜாஸ்தி. உன்னோட நேச்சருக்கு அவன் ஏதாவது சொன்னா நீ ஹர்ட் ஆகிடுவனு தான் பயப்படறேன்” என்றான்.

Advertisement

நிலாவிற்கு இப்போது தான் எழிலனின் தந்தை தான் வைஸ் பிரின்சிபால் எனத் தெரியும். எத்தனையோ முறை மேடையில் அவரின் பாராட்டைப் பெற்றிறருக்கிறாள் நிலா. இதே கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது எல்லாம் கேள்விப் பட்டிருக்கிறாள். அதுவும் அவரின் ஜியாலோஜி டிபார்ட்மெண்ட்டை இந்த மாநில அளவில் பெரிதாகக் கொண்டு சேர்த்ததும் செழியன் தான் என எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் அவரின் மகன் தான் எழிலன் என யாரும் பேசியதில்லை.

Advertisement

“ம்ச். அண்ணா, கல்சுரல் ஹெட்டா இருந்தாலும், என்னோட டான்ஸ் பற்றி அவர் எதுவும் சொல்ல முடியாது. அதைத் தவிர நான் வேறே எதுவும் அவங்க யார் கிட்டேயும் பேசப் போறது இல்லை. அதோட அவங்க என்னோட சீனியர் அண்ட் மென்டார். சோ பெரிசா பிரச்சினை வராது” என்றாள் நிலா.
“நிலாமா” என யோசித்த நிலவன் “சரி, டான்ஸ்லே கலந்துக்கோ. ஆனா டேப்லே போட்டு டான்ஸ் ஆடு. மற்றவங்க பாடி ஆடுறது எல்லாம் வேண்டாம்” என்றான்.
“ஐயோ அண்ணா. அது என்னவோ எதேச்சையா நடந்தது. அதுக்கு அப்புறம் அப்படி ஒரு இண்டரெஸ்ட் இருக்கிறதா கூட சீனியர் என்கிட்டே சொன்னது கிடையாது. அப்போ அப்போ என்ன பாட்டு செலக்ட் பண்ணியிருக்கீங்க, பிராக்டிஸ் பண்ணியாச்சா இப்படி தான் கேட்பார். வேறே ஏதும் கேட்க மாட்டார்” என்றாள் நிலா.

Advertisement

“சரி. எதுவானாலும் ஜாக்கிரதையா இரு. எனக்கு டெய்லி ஃபோன் பண்ணு. எதுவும் பிரச்சினைனா எனக்குச் சொல்லணும்.” என்றான் நிலவன்.
“சரி அண்ணா. உன்னைத் தவிர யார் கிட்டே சொல்லுவேன்” எனத் தன் அண்ணனின் தோள்களில் சாய்ந்தாள் நிலா.
மேலாண்மைத் துறை மாணவர்கள் சீனியர்ஸ் சென்று விடவே, ஜூனியர்ஸ் அந்த அளவு வம்பு வளர்ப்பதில்லை.
இந்த செமெஸ்டெரில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பெரிதாக வேலை இல்லை. எழிலன் படிப்பிற்காக அவ்வப்போது வெளியே சென்று வர, மற்ற நேரங்களில் பேராசிரியர்களுக்கு உதவியாக இருப்பது என நேரம் சென்றது.  
நிலாவும் எழிலனும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு பெறவில்லை. டிபார்ட்மெண்ட்டுக்குள் அவ்வப்போது பார்ப்பது தான். அன்றைக்கு அந்த பாடல் அனுப்பிய பின் வேறு எதுவும் எழிலன் மெசேஜ் அனுப்பவில்லை.
அந்த வருட காலேஜ் டே அருகில் வர, எப்போதும் போல் நிலாவின் டான்ஸ் வேண்டும் என அவளின் வகுப்பு மாணவர்கள் கேட்டனர். எழிலனும் பாடல் பாடுகிறான்.
எழிலன் என்ன பாடல் என யோசிக்க, நிலாவும் என்ன பாட்டிற்கு நடனம் ஆடுவது என சிந்தித்தாள்.
நிலா பொதுவாக பரத நாட்டியப் பாடல் தான் தேர்ந்தெடுப்பாள். இந்த முறை எஸ்பிபி அவர்கள் பாடிய பாடலில் எது பரத நாட்டியத்திற்கு ஏற்றது எனத் தேடினாள்.
சலங்கை ஒலி முழுக்க எஸ்பிபியின் ராஜ்ஜியம் தானே. அதில் ‘வேதம் .. அனுவிலும் ஒரு நாதம்.” பாடலைத் தேர்ந்தெடுத்தாள். இந்த பாட்டிற்கு இதுவரை நிலா நடனம் கற்றுக் கொண்டதில்லை. நிறையவே சிரமப் பட்டாள். தன்னுடைய நடனத்தை வீடியோ எடுத்துத் தனது குருவிடமும் சரிப் பார்த்துக் கொண்டாள் நிலா.
எழிலனும் இந்த முறை ரொம்பவே யோசித்தான். அவனுக்கும் பரதநாட்டியம் கலந்த பாடல் பாட வேண்டும் என்ற எண்ணம். நிறையப் பாடல்களைக் கேட்டுவிட்டு “பூவில் வண்டு கூடும் கண்டு ..” பாடலைத் தேர்ந்தெடுத்தான்.
எழிலன் “நிலவழகி, இந்த தடவை என்னப் பாட்டு டான்ஸ் ஆடப் போறீங்க?” என மெசேஜ் செய்தான். அவன் மெசேஜ் அனுப்பும் நேரத்தில் நிலாவும் “சீனியர் என்ன பாட்டு செலக்ட் பண்ணியிருக்கீங்க?” எனக் கேட்டிருந்தாள்.
இரண்டு பேரும் ஒன்று போல் ஸஸ்பென்ஸ் எனவும் பதில் அனுப்பியிருந்தனர். அதற்கு சிரிக்கும் ஸ்மைலியும் ஒரே நேரத்தில் போட்டார்கள்.
காலேஜ் டே நாளும் வந்தது. இந்த நாளில் மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும். உடையில் ஆரம்பித்து, நேரம் வரை கட்டுப்பாடு கிடையாது. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஃபண்ட்ஸ் கொண்டு நடத்தப்படுவதால், உணவுக்கும் பஞ்சம் இராது. சாட்டில் ஆரம்பித்து, அத்தனை வகைகளும் ஸ்டால் போட்டிருப்பார்கள். முக்கியமாக அன்றைக்குக் கலை நிகழ்ச்சிகள் மட்டும் தான் என்பதால், எந்த முக்கிய விருந்தினர் வருகையும், அதைத் தொடர்ந்து உரையாற்றுவதும் கிடையாது. அதனால் மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.
காலேஜ் டே மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில், முதல் இரண்டு நாட்கள், மாணவர்களின் ட்ரில், முன்னிலை வகிக்கும் மாணவர்களுக்குப் பாராட்டுக்கள் எனச் செல்லும். அதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் தவிர, மற்றவர்கள் வருவது அரிது. இதில் எழிலனின் பங்கு அதிகம். மாணவர்கள் தலைவன் மற்றும் மற்றப் பேராசிரியர்களோடு நல்ல பழக்கம் இருப்பதால், அவனிடமே எல்லோரும் பொறுப்பை ஒப்படைத்தனர்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு மட்டும் மொத்தமாகக் குவிந்து விடுவார்கள். அதனால் பேராசிரியர்களுக்கும் அன்றைக்கு வேலை அதிகம் இருக்கும். மாணவர்களின் கொண்டாட்ட மனநிலையைப் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் எல்லோரின் பாதுகாப்பிற்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
-தொடரும் – 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!