கிரி முன் நடக்க, பின்னால் நடந்து வந்தாள் கமலி. ‘வர்ரனா? இல்லையானு கூட பார்க்காமல் போறதை பாரு’ என அகன்ற இவனது தோள்களையும், குறுகிய இடையையும், நீண்ட கால்களையும், அதை அவனுக்கெனவே அளவெடுத்து தைத்த முழு கருப்பு நிற உடைக்குள் மறைத்து நடந்ததையும் விழிகளுக்குள் நிறைத்து கொண்டு, இதழ்களால் முனுமுனுவென வசைபாடிக்கொண்டு பின் தொடரந்தாள்.
ஆனால் அது எனக்கு அனாவசியம், நீ என்னை தொடர்வதை திரும்பி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தேவையே இல்லை, எனக்கு முன்பாக வந்து விழும் உன் நிழலே போதும், என்பதை போல அவள் நிழலை பார்த்த வண்ணமே இவன் நடையை எட்டி போட்டான்.
பாதையில் கவனம் இல்லவே இல்லை. அவள் நிழலில் தான் ஒட்டுமொத்த கவனமும், நிழல் கூட இத்தனை அழகா? நிழலில் கூட போட்டி போடும் அவளது நளினத்தில் வியந்தான்,
Advertisement
இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்த அசைவில் இருவருக்கும் இடைவெளி இருந்தது தான். ஆனால் இவர்களின் நிழல்கள் ஒன்றோடு ஒன்று நிழலுரச முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
ஹாஸ்டலை விட்டு வெளியேறி, காரின் அருகில் இருவரும் ஜோடி போட்டு வர, இவனுக்காக காத்திருந்த ராம் முதலில் கிரியை தான் பார்த்தான்.
அதன் பின் தான் அருகில் நடந்து வரும் பெண்ணை பார்த்தான். யார் இந்த பொண்ணு? என குழம்பியவன், இருவரும் கிட்டே வர வர தானாகவே வாய் பிளந்துகொள்ள, கண்களை கசக்குவதும் பின் உற்று பார்ப்பதுமாய் இருந்தான். வருவது கமலியே தான் என இவன் மூளை சில நிமிடங்களிலேயே உணர்ந்திட, அந்த நொடி பட்டென காரை விட்டு கீழே இறங்கி விட்டான்.
Advertisement
அதற்குள் அவர்களும் ராமை நெருங்கி வந்து விட்டனர். அவன் பார்வை முழுதும் கமலியிடமே இருந்தது, அதை உணர்ந்த கமலியும் கூட “யார் இது இப்படி பார்ப்பது” என கமலி, கிரியை பார்த்து வைத்தாள்.
Advertisement
அதை கண்டு கொண்டு “ராம், என் அண்ணன்” என முந்தி கொண்டான் கிரி.
“ண்ணே.. கமலி” என ராமிடமும் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்த கமலி எப்படி அழைப்பது என தெரியாமல் லேசாய் சிரித்து வைக்க, ராமிற்கோ தலை சுற்றி போனது.
அதற்குள் டிரைவருக்கு கிரி கண்ணை காட்ட, தன் கையில் இருந்த இரண்டு பேக்குகள், கமலியின் கையில் இருந்த டிராலி எல்லாம் வண்டி டிக்கிக்கு இடம் மாறியிருந்தது.
Advertisement
“ண்ணா நீ முன்னாடி உக்கார்ந்துக்கிறியா..” என கிரி கேட்க, அதிர்ச்சி விலகாதவனோ சரியென முன்னால் சென்று அமர்ந்து கொண்டான்.
முன்புறம் டிரைவர் இருக்க, அருகில் ராம், பின் இருக்கையில் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.
அருகிலேயே சிறுது இடைவெளியுடன் அமர்ந்திருந்த அவனை நிமிர்ந்து நேராக பார்க்கவோ, அவனிடம் பேசவோ பிடித்தம் வருவேனா என்றது கமலிக்கு.
திருமணமான புதிதில் இவனது பார்வைக்கும், வாயில் இருந்து உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் காத்திருந்த காலமெல்லாம் நினைவடுக்கில் வந்து வந்து போனது.
இப்போதோ சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றவனின் மீது அளவு கடந்த கோபமும் ஏறி நின்றது.
இந்த அம்மா, மாத கடைசியில் தான் கிரி வருகிறான் என்று தானே கூறினார்? இவனானால் மாத இடையில் வந்திருக்கிறான். அதை விட அம்மாவிடம் தன் வருகையை சொல்ல முடிந்தவனுக்கு, தன்னிடம் சொல்ல முடியவில்லையே! என்ற ஆதங்கமே மேலோங்கியது. எல்லாமும் சேர்ந்து அவள் குணத்தை தலைகீழாக மாற்றி கொண்டிருந்தது.
காரில் இவளருகில் ஏறி அமர்ந்தவனின் பார்வை கீழே படிந்து அவள் மிஞ்சி அணிந்த பாதங்களை வருடியது. பாவி.. காலை கூட சிற்பம் மாதிரி செதுக்கி வச்சிருக்கா என நினைத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறியது இவன் விழிகள்.
வலுக்கட்டாயமாய் ஜன்னலின் வழியே பார்வை பதித்திருந்தவளை இவனும் பார்த்திருந்தான். இமை சிமிட்டாது இருந்தால் ஓவியமோ என நினைக்கும் படி மாறியிருந்தது அவள் முக அமைப்பு, அதுவும் செவிமடலின் கீழ் ஒரு சிறு கட் எடுத்து ஒரே நேர்கோட்டில் சென்று சிறு குமிழாய் மேடேறி நின்ற நாடி.. ‘ப்பா..’ கண்களை இறுக மூடிக்கொண்டு திரும்பியவன் அப்படியே சீட்டில் தலையை சாய்த்தான்.
நாடியை பார்த்ததற்கே அவன் நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது. மேலோட்டமாய் பார்த்த மற்ற பாகங்களும் அவனை உயிரோடு தின்ன காத்திருந்தது போல் தான் இவனுக்கு தோன்றியது. இதில் மற்றய பாகங்களை முழுதாய் பார்த்தால்…! குப்பென வியர்த்து போனது அவன் உடல்.
‘என்னடி இப்படி ஒரு அவதாரத்தில வந்து நிக்கிற?’ வாய் வரை வந்து நிற்கும் கேள்விகளை இவளிடம் கேட்கமுடியாமல், காரில் ராமும் டிரைவரும் இருப்பாதாலேயே அமைதியாக இருந்துவிட்டான்.
கண் மூடி கிடந்தவனின் மனமும் மூளையும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. ‘இது நாள் வரை தன் மீது நம்பிக்கை வராமல் இருந்த அவளை சீண்டாதே’ என மூளை கூற.. ‘உனக்காகவே இன்னொரு பிறவி எடுத்து வந்திருப்பவளை பார்க்க மாட்டாயா, அந்த களிப்பை, அந்த இன்பத்தை எனக்கு தர மாட்டாயா’ என மனம் மல்லுக்கு நின்றது.
இப்படியொரு போராட்டம் அவனுக்கு மிக புதிது, இரண்டும் சண்டையிட்டு கொண்டதில் இறுதியில் மனமே வெல்ல, தலையை நிமிர்த்தி மெதுவாய் அவளை தான் பார்த்தான். தன்னை கவனிப்பாள், தன்னிடம் பேசுவாள் என எதிர்பார்த்தவனுக்கு முற்றிலும் ஏமாற்றமே மிஞ்ச நொடிக்கு ஒரு முறை இவளிடமே தாவிக்கொண்டு இருந்தது இவன் விழிகள், அவளது நிலை அறியாது.
அவன் இதழ்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் அனைத்தையும், பார்வையின் மூலம் அவளை நோக்கி கேட்டு கொண்டு தான் இருந்தான்.
ஆனால் அதை படிக்க இஷ்டமில்லாதது போல, அவன்பார்வையை கண்டு கொள்ளாதது போல அவள் பார்வை வலுக்கட்டாயமாய் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
“என்னப்பனல்லவா.. என் தாயும் அல்லவா..” என்ற போனின் ரிங் டோன் சத்தத்தில் திடுக்கிட்டு கிரி பார்வையை விலக்க, காரோ அதீத வேகத்தில் பைபாசில் சென்று கொண்டிருந்தது.
“ச்சே கார் கிளம்பினது கூட தெரியல” என நினைக்கையிலேயே, சட்டை பையில் கிடந்த போன் மீண்டும் அலற, வேகமாய் கிரி எடுக்க, ராம் தான் அழைத்திருந்தான்.
குழப்பத்துடன் என்னவென கிரி, முன்னால் அமர்ந்திருந்த ராமை பார்க்க, ‘மேசேஜ் பாருடா’ என இதழைசைவில் ராம் கூற கிரியும் மேசேஜை ஓபன் செய்து பார்த்தான். ஏகப்பட்ட மேசேஜ்கள் வரிசை கட்டி நின்றிருந்தன.
“காரில் நானும் இருக்கேன்”
“அதென்ன வச்ச கண்ண எடுக்காமல் பார்த்துட்ட வர்ற?”
“நீயாடா.. இப்படி.”
“அதைவிடு.. கமலி யா இது..”
“யார்ரா இந்த பொண்ணு, மரியாதையா உண்மையை சொல்லிடு”
“அங்கே அன்னைக்கு குண்டா ஒரு பொண்ணை ‘பிடிக்கலைன்னு’ என்கிட்ட கதறுன.”
“என்னடா நடக்குது இங்க.. மண்ட காயுது.. தலை வெடுச்சிடும் போல, தயவு செஞ்சு செல்லுடா!”
ராமின் இத்தனை மேசேஜ்களையும் ஒவ்வொன்றாய் படிக்க படிக்க இவனது உதடுகள் தாராளமாய் புன்னகையை சிதறவிட்டது.
ராமின் இந்த கேள்விகள் தானே கிரியின் மண்டைக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது. அவனுக்கும் இதற்கெல்லாம் பதில் தெரியாதே? தெரியாததை எப்படி இவனுக்கு பதிலாக சொல்வது?