மனைத்தக்க மாண்புடையாள்
அத்தியாயம் 18
இரவு தாமதமாய் தூங்கினாலும் புதிய இடம் என்பதால் சீக்கிரமே விழித்துவிட்டாள் உதயா..முதல் முறை புடவை கட்டிக் கொண்டு உறங்கியதால் அவள் குத்தியிருந்த பின்களையும் மீறி அது அலங்கோலமாய் இருக்க வேகமாய் அதனை சரி செய்து கட்டிலில் இருந்து இறங்கியவள்,
Advertisement
“அய்யகோ..நம்ம கூட ஒரு ஜீவன் இருந்ததே..”
என்று வேகமாய் உதய்யை தேட குப்புறப்படுத்து இருந்தவன் முகம் இவள் பக்கம் திரும்பியிருந்தது.
ஆழ்ந்த உறக்கதில் இருந்த அவன் முகத்தை கண்டவளுக்கு நேற்று அவன் பேசியது எல்லாம் நினைவில் எழுந்தது..
Advertisement
‘பிடிக்குமாம் ஆனால் லவ் இல்லையாம்…லவ் இல்லேனாலும் வொய்ஃப்னு ஃபீலிங் இருக்காம்..கடவுளே…அவர் பேசும் போது எல்லாம் தெளிவா புரிஞ்சது..நம்ம யோசிச்சு பார்த்த தெளிவா குழப்புதே…’
Advertisement
என்று மண்டை காய்ந்தாள். ‘என்னை குழப்பி விட்டு நிம்மதியா தூங்குவதை பாரேன்…’
நங்கென்று கொட்ட பரபரத்த கையை மடக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு,
“நேத்தி நான் இருந்த கோபத்துக்கு என்ன பேசியிருப்பேன்னு எனக்கே தெரியாது..ஆனால் நான் பேசவே முடியாதப்படி வாய் அடைச்சி கடைசியா நீங்க சொல்றது தான் சரின்னு என்னையே யோசிக்க வைச்சிட்டீங்களே..வார்த்தை ஜாலத்தில் வல்லவனுக்கு வல்லவனும் வையகத்தில் உண்டு என்று நிரூப்பித்து விட்டீர் உதயகுமாரா..!!!”
Advertisement
உறங்கும் அவனை பார்த்து வசனம் பேசியவள் பின் தனக்குள்ளே,
“ஆனாலும் அவர் சொன்னதுபோல் பாஸ்ட் இஸ் பாஸ்ட்..மனசு காய்ப்படுறா மாதிரி சில விசயங்கள் நடந்து இருந்தாலும் அதையே பிடிச்சுக்கிட்டு நின்றதால் தான் அண்ணாவும் அண்ணியும் ரொம்ப பாதிக்க பட்டாங்க..அதே தப்பை நாமும் செய்ய கூடாது..முடிஞ்சு போனதுக்கு முழுக்கு போட்டுட்டு..இனி என்னனு தான் யோசிக்கணும்..”
என்று எண்ணி மீண்டும் அவன் புறம் திரும்பி,
“என் ஆசை மச்சான்..எல்லாத்தையும் டேக் இட் ஈஸின்னு அலட்டிக்காமல் சொல்றீங்கல்ல..எப்படி எப்படி லவ் இல்லையா..நீங்களே வந்து உதயா ‘நீ தான் என் வாழ்வின் உதயம்..நீ இல்லைனா துடிக்காது என் இதயம்’நு உருகி உருகி காதல் வசனம் பேச வைக்கல..நான் உதய்ய்ய்ய்யா இல்ல..”
என்று சபதம் எடுத்தவளாய் தோளை சிலுப்பி பட்டென்று திரும்ப கால் சேலையில் பின்னி தடுமாறியது.
“அய்யோ அம்மா..” என்று விழுகாமல் பேலன்ஸ் செய்து நின்றவளுக்கு சபதம் மறந்து இந்த சேலை கவலை தொற்றிக் கொண்டது.
“எல்லாரும் எப்படி..டெய்லீ இதை கட்டிக்கிறாங்களோ..ஷப்பா..மறுபடியும் குளிச்சிட்டு புடவை தான் கட்டணும்ல..”
என்று பெருமூச்சு விட்டவள் குளித்து வேறு உடைக்கு மாறி கீழே வந்தாள்.
“ஹே..முழிச்சிட்டியா உதயா..என்ன குடிக்கிற…? ம்ம்ம் வெண்பா சொல்லிருக்கா..உனக்கு டீ தான் பிடிக்கும்ல…உதய் காஃபி பிரியன்..”
மருமகளை பார்த்ததும் விரிந்த புன்னகையோடு சரண்யா பேச அவர் புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது.
“நீங்க இருங்க அத்த..நானே போடுறேன்..”
“எது எங்க இருக்கும்னு தெரியாமல் எப்படி போடுவ…கிட்சென் எங்க இருக்கு சொல்லு பாப்போம்..”
எங்கே சொல்லுவாள்…நேற்று கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் யார் பேசினாலும் ‘ம்ம்’ ‘ம்ஹூம்..’ என்று பதிலோடு குனிந்த தலை நிமிரவே இல்லையே..!! அவள் திருதிருவென விழிக்க,
“சும்மா இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேணாம்..வா..”
என்று இயல்பாய் சொல்லி அவளுக்கு டீ போட சென்றவரோடு உடன்வந்தவள் அடிக்கடி மடிப்போடு மல்லுகட்டுவதை கண்டு,
“புடவை கட்டிக்க சிரமமா இருக்கா உதயா…”
என்று கேட்க அசடு வழிய, “ஆமா அத்த..நேத்திலேந்தே இதோட போராட்டிட்டு இருக்கேன்..”
என்க,
“இன்னைக்கு மட்டும் கட்டிக்கோ..ஏன்னா கல்யாணத்திற்கு வரமுடியாத சில பேரு இன்னைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க..அப்புறம் உனக்கு வசதி படுற டிரெஸ் போட்டுக்கோ..”
என்றவரை,
“டச் பண்ணீட்டீங்களே அத்த..”
நெஞ்சில் கைவைத்துக் நாடக பாணியில் சொல்ல சிரித்தவர்,
“ஏன்..இப்ப என்னாகி போச்சு..”
என்று கேட்டார்.
“சீரியல் மாமியார் மாதிரி இல்லாமல் நாவல்ல வர்ற மாமியார் மாதிரி இருக்கீங்களே..நான் அப்படியே சிலிர்த்து போயிட்டேன்..”
“ஹாஹா..இதுக்கே வா..இதெல்லாம் வைச்சு நம்பிடாதே..நான் அவ்வளவு நல்ல மாமியார் எல்லாம் இல்ல உதயா..”
“நம்பணும் அத்த..நம்பிக்கை அதானே எல்லாம்..”
“அப்புறம் உன் பிரியம்..” என்றவர் டீ போட்டதும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
“இன்னைக்கு கூட உங்க மாமா..காலைலே கடமையா வாக்கிங் போயிட்டார்..என்ன சொல்ல போ..”
என்க அப்போது தான் அந்த காலை வேளையில் வீடே நிசப்தத்தில் மூழ்கி இருப்பதை உணர்ந்தாள்.
‘எங்க..யாருமே இல்லையா..’ என்று யோசித்தவளுக்கு நேற்றும் கூட இவள் வந்தபோது இங்கே ஒரு சிலர் தான் இருந்ததை நினைவு கூர்ந்தாள்.நேற்றைய மனநிலையில் அதனை பற்றி யோசிக்கவில்லை.
அவள் வீட்டில் அத்தனை சொந்தங்கள் கூடி ஜேஜேவென்று இருந்ததற்கு மாறாக இங்கே இத்தனை அமைதி அவளுக்கு வித்தியாசமாய் பட அதனை சரண்யாவிடமே கேட்டாள்.
“இங்க உங்க மாமா பக்கம் சரி எனக்கும் சரி சொந்தம்னு பெருசா யாரும் இல்லடா..எங்க கல்யாணத்தாலே விட்டுபோச்சு..தொடர்பில் இருந்த ஒன்னு ரெண்டும் பேரும் மண்டபத்தில் வந்து தலைய காட்டிட்டு போயிட்டாங்க..மத்தபடி எல்லாரும் நணபர்கள் தான்..எல்லா நல்லது கெட்டதுலும் கூட இருந்தாங்க..அதிலும் இந்த உதய்யிக்கு ஊரெல்லாம் ஃபிரண்ட்ஸ்..சினிமாவில் சாதிக்க வேண்டும்னு திறமையை மட்டும் நம்பி போனவனுக்கு பக்க பலமா இருந்தது அவன் நண்பர்கள் தான்..”
ஆம்..வரவேற்பன்றே பார்த்தாளே..!!எவ்வளவு நண்பர்கள்..வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும் இத்தனை தூரம் தேடி வந்து வாழ்த்தி சென்றது நட்புக்காக தானே..அதில் சில சினிமா பிரபலங்களும் அடக்கம்..!!
‘என் உதய்யோட மனசுக்கு..யாருக்கு தான் இவரை பிடிக்காமல் போகும்..’
என்று செல்லமாய் எண்ணிக் கொள்ள,
“உதயா..என்ன யோசனைக்கு போயிட்டே..”
என்று அவளை தோளில் கைவைத்து கேட்கவும் நினைத்ததை சொல்ல கூச்சப்பட்டவளாய்,
“ஹிஹி..இல்ல உங்க மகனுக்கு எப்படி டைரக்டர் ஆகும் ஆசை வந்திருக்கும்னு யோசிச்சேன்..”
என்று பேச்சை மாற்றினாள்.
“அவனுக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா ரொம்ப பிடிக்கும்மா..ஒரு படம் விடாமல் போய் பார்த்துட்டு வந்திடுவான்..க்ளாஸ் கட் பண்ணிட்டு போனாலும் வெண்பாட்ட மாட்டிடுவான்..அவ உடனே வந்து என்னுட்ட சொல்லிடுவா..அப்புறம் பூஜை தான்..”
“ஹாஹாஹா….அண்ணியா..அண்ணி போட்டு எல்லாம் குடுப்பாங்களா..”
“உன் அண்ணி எல்லா விசயத்திலும் கரெக்ட்டா இருப்பாள்..அதே மாதிரி உதய்யும் இருக்கணும்னு நினைப்பா..ஆனால் உன் புருஷன் இருக்கானே விடா கொண்டன்..எவ்வளவு திட்டினாலும் அவனுக்கு பிடிச்சதை விட்டு கொடுக்கவே மாட்டான்..ஒருவாட்டி படம் படம்னு அலையிறதால் தான் ஒழுங்கா படிக்க மாட்டேங்கிறன்னு வெண்பா சத்தம் போட்டானு ரோஷத்தோட படிக்க ஆரம்பிச்சவன் அப்புறம் படிப்பிலும் முன்னுக்கு இருந்தான்..ஆனால் அப்போ கூட அவனுக்கு இந்த ஆசை எல்லாம் இல்ல..எதனால இந்த டைரக்டர் ஆகணும்னு ஆசை வந்துச்சுன்னு நீ உதய்ய தான் கேட்கணும்..”
என்று அவர் கூறியது உதய் காதை எட்டியது போல் தடதடவென படிக்கட்டில் அவன் இறங்கி வந்தான் ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டே..
கண்களால் சுற்றி தேடியவன் கிட்சன் அருகில் இருந்த தோட்டத்தின் வாயிலில் நின்ற அன்னையையும் உதயாவையும் கண்டு அவர்களை நெருங்கினான்.
“ஹான் சர்….ஓகே சர்..இதோ தரேன் சர்..”
என்று பேசியவன் ரிசிவரை மறைத்து,
“தவரூபன் சர்..பேசு..” என்று அவளிடம் நீட்ட திகைத்தாள்.
அவர் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ஜெகனை நச்சு பண்ணி அவனை வாங்க வைத்து பார்ப்பவளுக்கு திடீரென அவரோட பேச சொன்னதும் ஒன்னும் புரியவில்லை.
“ஹ..ஹலோ சர்..”
என்று இவள் பேச தாயிடம் அவன் காஃபி என்பது போல் சைகை செய்ய அவரும் அவனுக்கு எடுத்துவர சென்றார்.
“சௌக்கியமா ம்மா..என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..”
என்று அவர் தெரிந்தவர் போல் இயல்பாய் பேச அவளும் தயக்கத்தை விட்டு பதில் கூறினாள்.
“லண்டனில் ஷூட்டிங் இல்லை என்றால் கண்டிப்பா உங்க ரிஷெப்ஷனை அட்டென் பண்ணிருப்பேன்…நான் ஊருக்கு வந்ததும் உங்களை லன்சிற்கு இன்வெய்ட் பண்ணுறேன்..கண்டிப்பா வரணும் உதயா..”
என்று அவர் சொல்லவும்,
“ஷூயர் சர்..” என்று அவளும் ஒப்புக்கொண்டு உதய்யிடம் அலைப்பேசியை கொடுக்க பேசிவிட்டு வைத்ததும்,
“திடீர்னு நீட்டவும் பயந்துட்டேன்..பேசவே வரலை..”
என்று விழி விரித்து அவள் சொல்ல சிரித்தான்.
“ஏன் பயப்படணும்..சர் ரொம்ப ஸ்வீட்..”
என்றவன் தன் அருகில் புத்தம் புது மலராய் நின்றவள் தோளில் கைப்போட அதனை அப்படியே சுற்றி தள்ளி நின்றவள்,
“குளிக்காமல் என்ன கோலம் இது..பல் விளக்குனீங்களா முதல்ல..”
இரவு உடையுடனே வந்து நின்றவனை கேலி செய்ய, “பல் எல்லாம் விளக்கியாச்சு..என் பொண்டாட்டிட்ட ஒரு மார்னிங் கிஸ் வாங்க தான் ஓடோடி வந்திருக்கேன்…”
என்று பதில் கொடுத்து அவள் கன்னத்தை நெருங்க இன்னும் இரண்டடி பின்னால் நகர்ந்து,
“இதெல்லாம் என்னுட்ட ஆகாது உதயகுமாரா..”
என்று சொல்ல அவள் விளிப்பில் புன்னகை வந்தாலும் தள்ளி போனவளை,
“ஏம்மா..”
என்றான் பாவம்போல்..
“உங்க கணக்கு படி கல்யாணத்திற்கு வேணா பிடித்தம் போதும்..ஆனால் மத்ததுக்கு எல்லாம் லவ் இருந்தால் மட்டும் தான் சர்..ஸோ அதுவரை நோ டச்சிங் நோ கிஸ்ஸிங்..”
என்று சொன்னவளை,
“ஹே..இது அநியாயம் டி..”
“இது தான் என் நியாயம்..”
என்று அவளும் சட்டமாய் சொல்ல அவன் பதில் சொல்லும்முன் சரண்யா வந்துவிட்டதால் அப்பேச்சு அத்தோடு நின்று போனது.
நடைபயிற்சிக்கு சென்றிருந்த செந்தில்நாதனும் திரும்பிவிட அதன்பின் கல்யாணத்தில் நிகழ்ந்த விசயங்களை பற்றியும் அடுதடுத்து செய்ய போவதை குறித்தும் பேசியதிலே நேரம் சென்றது.
பேச்சின் ஊடே காலை உணவுக்கான வேலையும் ஆக அவள் பயந்ததற்கு மாறாய் அந்த சிறு கூட்டில் அழகாய் பொருந்தி போனாள் உதயா.
“அம்மா..எங்க போகணும்னு ஸ்கெடியூல் போட்டாலும் இந்த வாரத்துக்குள் போடுங்க..நெக்ஸ்ட் வீக் சென்னை போகணும்..நியாபகம் இருக்குல்ல..”
சாப்பிட்டு கொண்டே அவன் சரண்யாவிற்கு நியாபகம் படுத்தினான்.நேற்றே உதயாவிடமும் சொல்லி இருந்தான் என்பதால் அவளுக்கும் தெரிந்திருந்தது.
“அதெல்லாம் அவ மறக்க மாட்டாள்..அது இருக்கட்டும்..நீ பார்த்திருக்க வீடு உதயா ஆபிஸிற்கு தூரம் இல்லல..”
என்று செந்தில் கேட்டார்.
இருவரின் பணியிடமும் சென்னை தான் என்பதால் இருவருக்கும் அலுவலகம் செல்ல அருகாமையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு வீட்டினை திருமணத்திற்கு முன்பே பேசி அட்வான்ஸ் செய்து அத்தியாவசிய பர்னிச்சரும் பொருட்களும் மட்டும் அன்னையின் உதவியோடு வாங்கியிருந்தான்.மற்றவை உதயாவின் விருப்பத்திற்கு ஏற்ப பிறகு வாங்கி கொள்ளலாம் என்று..!!
“ம்ம்ம்..இரண்டு பேருக்கும் கிட்ட தான்..உங்க மருமகளையும் கூட்டிட்டு போய் அவளுக்கு பிடிச்ச மாறி பார்க்க தான் ஆசை பட்டேன்..எங்ங்ங்க…”
“ஹான்..அது…நீங்க ஃபோன் பண்ணி..இந்த மாதிரி.. வீடு பார்க்கணும்னு சொல்லி இருக்கணும்..”
“ஆமா..ஃபோன் பண்ணா மட்டும் அப்படியே வந்திருப்ப..கால் பண்ணேன்னு ஒரே காரணத்திற்காகவே கால் மணி நேரமாச்சும் கழுவி ஊத்திருக்க மாட்ட..”
“விடு உதய்..அவளை ஏன் வம்பு இழுக்குற..”
“அது சரி..உண்மையை சொன்னால் வம்பு இழுக்கிறதாப்பா..”
என்றவன் உதயா கண்களை சுருக்கி முறைக்கவும் அப்படியே பேச்சை மாற்றினான்.
சாப்பிட்டு முடித்தபோது மதியிடம் இருந்து அழைப்பு வர,
“ஐ..அண்ணா..” என்று ஆர்வமாய் எடுத்தவள் அப்படியே மொத்த குடும்பத்திடமும் பேசி வைப்பதற்குள் சில மணிநேரங்கள் ஆனது.
அவர்கள் பொழியும் பாசத்தை பார்த்திருந்த உதய்,
“ஷப்பா..நேத்தி தானே வந்த..அதுவும் திருப்பி நாளைக்கு அங்க தான் போக போறோம்..இதுல ஆண்டாண்டு காலமாய் பிரிஞ்சு இருந்தால் மாதிரி எவ்வளவு சமாதானம்..கொஞ்சம் ஓவரா இல்ல..”
என்றான் சிரிப்புடன்..
“உங்களுக்கு ஓவரா தான் சர் இருக்கும்..எங்க இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் எங்க ஃபீலிங்ஸ்..”
திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களின் இடத்தில் இருந்து யோசித்தால் புரியும் என்ற அர்த்ததில் அவள் சொல்ல அவனோ அப்பவும் அதே புன்னகையோடு,
“ஏன் இல்லாம..என் மேல ரொம்ப அக்கறை கொண்ட..என் பாசகார அக்காவை உன் அண்ணனுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு பத்து வருஷம் அவ குரலை கூட கேட்க முடியாமல் இருந்தேனே..அந்த ஃபீலிங் எனக்கா புரியாது..”
என்று சொல்ல அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை பேச்சிழக்க செய்தது.
“உதய்..நா அப்படி..”
என்று அவள் கூறும் போதே அவள் தலையில் கைவைத்து ஆட்டிவிட்டு,
“ஏய்..பட்டர்பாக்ஸ்..ஜெஸ்ட் சொன்னேன்..முழிக்காத..”
என்றவன் வெளியே செல்வதாய் கூறி சென்று விட்டான்.
‘கோச்சிக்கிட்டு போயிட்டாரோ..’ என்று தவிப்பும்,
‘இன்னமும் மனசுல ஏதோ வைச்சு இருக்கார்…அவர் வார்த்தையில் ‘அண்ணன் தான் பிரிச்சு வைச்சார் ங்கிறா மாதிரி அர்த்தம் படுதே..’ எனக்கு தான் அப்படி தோன்னுதா..’
என்று குழப்பமும் தருவிக்க அவன் வருகைகாக காத்திருந்தாள்.
அதிகம் அவளை தவிக்கவிடாமல் மதியம் சாப்பிடும் நேரத்திற்கு வந்துவிட்டவன் வழக்கம்போல் சகஜமாய் பேச அவள் அப்பொழுது ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அன்று இரவு தூங்க முற்பட்ட அவனிடம்,
“வெண்பா அண்ணியும் உங்களையும் என் அண்ணன் தான் பிரிச்சு வைச்சாருன்னு நினைக்கிறீங்களா..அந்த எண்ணத்தில் தான் இன்னும் என் அண்ணா மேல கோபமா இருக்கீங்களா..”
என்றவள் குரலில் கோபமோ சண்டை போடும் பாவனையோ இல்லை..வெறும் ஆராய்ச்சி மட்டுமே இருந்தது.
“ஏய்..நான் எப்போ அப்படி சொன்னேன்…”
“நீங்க சொல்லல…ஆனால் நீங்க மதியம் பேசியதில் எனக்கு அப்படி தான் புரிஞ்சிது..”
“என்ன ரீட் பிட்வீன்ந்த லைன்ஸா..?? தேவையில்லாமல் யோசித்து மண்டைய குழப்பிக்காதன்னு நேத்தி தானே சொன்னேன்..”
“ஆனா..”
“ஆனாவும் இல்ல ஆவனாவும் இல்ல..வந்து தூங்கு..”
என்றவன் படுத்து கண்களை மூடிக் கொள்ள சில நிமிடங்கள் நின்று அவனையே பார்த்தாள்.
மூடிய கண்களோடே,
“நீ சொன்னா கேட்க மாட்டே..”
என்று கையை பிடித்து அருகில் இழுக்க கட்டிலில் வந்து விழுந்தாள்.அவள் கையோடு கைகோர்த்து இடுப்பில் அணைத்து பிடித்தவனின் பிடியில்,
“என்ன பண்றீங்க..காலைல தானே சொன்னேன்..”
என்று அவள் மீனாய் துள்ளினாள்.
“ஒன்னும் பண்ண மாட்டேன் தாயே..நீ யோசிக்காமல் தூங்கு..”
என்று தோளில் தட்டிக் கொடுக்க மெல்ல உறக்கத்தின் பிடியில் சென்றாள்.
அதன்பின் சின்ன சீண்டல்களுடனும் நிறைய நிறைய இனிய பேச்சுகளோடு புதுமண தம்பதியர்களுக்கு நாட்கள் சென்றது.
உதயாவின் குடும்பத்திற்கோ இன்னும் அதிக சந்தோஷம்..திருமண நாள் வரையிலும் கூட தெளியாத முகத்தோடு திரிந்த தங்கள் வீட்டு செல்ல மகளை காணும்போது அவள் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்துகிறோமே என்ற கவலை அனைவர் மனதிலும் பிறர் அறியாமல் உறுத்திக் கொண்டே தான் இருந்தது.
ஆனால் இந்த ஒரு வாரத்தில் அவளிடம் தென்பட்ட பழைய துள்ளலும் குறும்பும் அவளுக்கு இருந்த மன சங்கடங்கள் நீங்கி விட்டது என்பதை பறை சாற்ற மனம் குளிர்ந்துப்போனர்.அதிலும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் கேலி செய்து விளையாடுவதை கண்டு வாய் பிளக்காத குறை தான்.
மறுவீட்டிற்கு வந்தபோது,
“யாரோ கல்யாணமே வேணாம்ன்னு மூக்கு உறிஞ்சினாங்க அண்ணி..ஆனால் இப்ப ‘உதய் உதய்’னு உத்ய புராணம் வாசிக்கிறாங்க..என்னவா இருக்கும்…”
“அது கல்யாணத்திற்கு முன் உதயா..இது கல்யாணத்திற்கு பின் உதயா..”
என்று ஜெகன் லாவண்யாவோடு கூட்டு சேர்ந்து அவளை கலாய்க்க,
“பாருங்க ண்ணா..” என்று அவள் சிணுங்களோடு தயாளனை துணைக்கு அழைக்க,
“அடேய்..அதான் தங்கச்சி வெட்கப் படுத்துல்ல..போங்கய்யா அங்கிட்டு..” என்று அதட்டியவன்,
“எல்லாம் மஞ்சகயிறு மேஜிக்கா இருக்கும்..இல்லம்மா..” என்று அவனும் வாரவும்
“ஒன்னு கூடிட்டாங்கய்யா..ஒன்னு கூடிட்டாங்கய்யா..”
என்று அவள் ஓடிவிட அனைத்தையும் தள்ளி நின்று கவனித்த மதியின் மனமும் நிறைந்தது.
இதனால் உதய் மீது இருந்த கோபங்கள் கூட குறைந்து அவன் மேல் ஒரு நல்லெண்ணம் எழுந்தது.ஆனால் அவர்களுக்குள் பேச்சு இல்லை.அதில் ரெண்டு குடும்பத்திற்கும் வருத்தம் என்றாலும் கால போக்கில் சரியாகிவிடும் என்று நம்ப எல்லாம் நலமாக சென்ற வேளையில் புது வீட்டில் அவர்கள் குடிப்புக இரண்டு குடும்பமும் உதய் – உதயாவோடு சென்னை நோக்கி பயணமாகினர்.
