செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 41_1
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்….
இளையராஜா! யாருக்குத் தான் அவரின் இசை பிடிக்காது? இளையராஜாவின் இசை, காற்றில் தவழ்ந்து வந்தால் மனதிற்குத் தனி உற்சாகம் தான். இளையராஜாவின் இசையில்… கண்ணதாசன் அவர்கள் வரிகளை, ஜென்சியின் குரலில்.. இனிமையான இரவின் ஏகாந்தத்தில் கேட்க, பிறவி ஒன்று போதாது.
காண முடியாத.. எட்ட முடியாத உணர்வுகளை என்னால் மட்டுமே எட்டி பிடிக்க முடியும் என்று சாவல் விட்டுக்கொண்டிருந்தது காற்றில் தவழ்ந்து வந்த பாடல்.
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா… ஆ….ஆ….ஆ….
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்…
“நிலா.. மூர்த்தி சார். ரொம்ப அழகு.” என்றாள், மாடியில் தென்னங்கீற்றின் வழி தெரிந்த நிலவை பார்த்துக்கொண்டே.
“உன்ன விடவா துளசி..?” கேட்டுக் கொண்டே மனைவி மடி சாய்ந்தான். நிலவு நடுவானதிற்கு வந்துகொண்டிருந்தது. ஊர் அடங்கிப் போயிருக்க.. இன்பமான இசையில் நடுவே.. மொட்டை மாடியில் பாய் விரித்து, தூங்கச் சென்றவர்கள் இன்னும் அதை மட்டும் செய்யவில்லை.
“ஆமா.. பின்ன இல்லையா?” விரல், படுத்திருந்தவன் கன்னம் தாண்டி மீசையை வருடியது.
“கண்டிப்பா உன்ன விட இல்ல துளசி.” உணர்ந்து உரைத்த வார்த்தைகள்.
“ப்ச்.. ஏன் மூர்த்தி சார் இப்படி?” என்ன முயன்றும் முகம் சிவக்கத்தான் செய்தது.
“நிலா அழகு தான்.. மாசத்தில ஒரு சில நாள் மட்டும்! அப்பவும் அதோட அழக ரசிக்கணும்னா.. சிலுசிலு காத்தும்… தென்னங்கீத்தும், என் பஞ்சுப் பொதி பொண்டாட்டி மடியும் தேவைப்படுதே. உன்ன ரசிக்க நீ மட்டுமே போதுமே. இப்போ சொல்லு… நிலா அழகா? நீ அழகா?” வார்த்தைகள் என்னும் கரண்டியால் பெண்ணின் மனதை அள்ளி விழுங்கினான்.
“போங்க மூர்த்தி சார். உங்கட்ட பேசி ஜெயிக்க என்னால முடியாது. நீங்க வாத்தியார் இல்லையா.. அது தான்! ஆனா இந்த முறை நானும் ஒத்துக்குறேன், நிலாவ ரசிக்க நீங்க எனக்கு தேவை படுறீங்க. அந்த நிலாவ இன்னைக்கு வரைக்கும் இத்தன ரசிச்சதே இல்ல மூர்த்தி சார்.”
“என் செல்ல பொண்டாட்டி… நான் சொல்றதுக்கு எல்லாம் நல்லா தலைய ஆட்டுறாளே.. உன்ன கடிச்சு தின்ன போறேன் பாரு” கையை இழுத்து முத்தம் பதித்தான்.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல… உண்மை சொன்னா மட்டும் தான்” அழகான இரவில்.. அழகான மனைவியின்.. அழகனா சிணுங்கல். சிணுங்க வைப்பது அவளின் மூர்த்தி சார் என்பதால் அதையும் ரசிக்கலாம்.
துளசியின் பஞ்சு கையை கன்னத்தில் அழுத்திப் பதித்துக் கொண்டவன், “மேகத்த வச்சு படுக்க செஞ்சா கூட உன் மடி மாதிரி சுகமா இருக்காது துளசி” என்றாரம்பித்தான்… இந்த பேச்சு அடுத்து எங்குச் சென்று முடியும் என்று இருவருக்குமே தெரியும்.
“போங்க.. மூர்த்தி சார்..” மீண்டும் செல்ல சிணுங்கல். விரல்கள் கேசத்தை அளைந்து கொண்டே இருந்தது. இன்னும் பேச ஊக்குவித்தது அந்த விரல்கள்.
அவனும் பேசினான். எதை பற்றிய நினைப்பும் இல்லாத வெறும் காதல் பிதற்றல்கள்.
தீண்டிச் சென்ற தென்றலும், தொட்டு வருடிய காந்த வார்த்தைகளும் சுகமாய் இருவருக்குள்ளும் இறங்க.. பேச்சு எங்கு கூட்டிச் செல்லும் என்று எதிர்பார்த்தனரோ அங்கேயே கொண்டு விட்டது. மெதுவாய், மென்மையாய்.. பின் வன்மையாய்!
“மொட்டை மாடி மூர்த்தி சார்..” மயக்கத்திலும் நினைவு படுத்தினாள்.
“மாடி கதவ பூட்டிடேன் துளசி.. காயில்லாத இந்த தென்னமரமும்.. வேப்ப மரமும் தான் துளசி மா..” என்றான் மந்தகாசமாக.
“தம்பி… என்னை விட்டுடியே..” என்ற நிலவு, அதன் பின் வெகு நேரம் மேக போர்வைக்குள்ளிருந்து வெளிவரவே இல்லை.
இசையின் மாயமோ… மொட்டை மாடி செய்த மாயமோ.. மூர்த்தியின் மாயமோ… பெண் மனதில் மட்டும் அல்லாமல் உடலிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
மாதம் மாதம் வர வேண்டியது அவளுக்கு ஒழுங்காக வருவதில்லை என்றதால், வயிற்றில் ஏற்பட்ட மாற்றம் அவள் புத்தியை எட்டி இருக்கவில்லை.
தில்லியில் இருந்தவரை மாத மாதம் வருவது தான். வரும் வேளை கொஞ்சம் அசௌகரியம் இருக்கும். அப்படி எல்லாம் வலிக்காது. பாட்டி நல்லெண்ணெய், நாட்டுக் கோழி முட்டை, கருப்பு உளுந்து, கருப்பட்டி என்று பார்த்துக் பார்த்து கொடுத்து பிள்ளையைத் தேற்றி விட்டிருந்தார்.
அவளின் போறாத நேரம், படக்கூடாத இடத்தில் எல்லாம் அடியும் மிதியும் கொடுத்து, மாத்திரை மருந்தென்று கண்டதையும் உடலில் ஏற்றி அவளை ஒரு வழியாக்கியதின் விளைவாக மாதா மாதம் வர வேண்டியது, என்றாவது அத்தி பூத்தாற்போல் வரும். வரும் வேளையில் அதிக உதிரப்போக்கோடு அவளை வாட்டி வதைத்து விடும்.
இவைகள் எல்லாம் அவள் இசைந்து கொடுக்காமல் போராடிய போராட்டத்தின் பக்க விளைவுகள். அவளை விடாமல் துரத்தி வந்த பயங்கரங்கள்!
ஒன்றரை வருடமாகத் தான் மூர்த்திக்கு இது பற்றித் தெரியும். திருமணமான பின்னும் இதை எல்லாம் அவனிடம் கூறியதில்லை. படுத்தே கிடப்பாள். அவன், வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொள்வான்.
கணவனோடு உடலால் நெருங்கிய பின் தான் உள்ளம் திறந்தாள். அதுவும், அவன் வற்புறுத்தலின் பெயரில். ஒரு முறை அதிக உதிரப்போக்கும்.. வயிற்று வலியும் என்று கண்ணீர் விடுவதைப் பார்த்தவன்.. பதறிப் போனான். அவள் படும் பாட்டை சகிக்க முடியாமல் மருத்துவரைக் காண இழுத்துச் சென்றதின் விளைவாகத் தெரிந்த உண்மைகளில் மிரண்டு போனான்.
‘என்னாடா பண்ணி வச்சிருக்கீங்க என் துளசிய?’ உள்ளத்தோடு சேர்ந்து இமையும் உப்பு நீரைப் பார்த்த நொடி அது. உடலால் அனுபவிக்காமல் உணர்வால் அனுபவித்த வேதனைகளின் தாக்கம்.. வார்த்தைக்குள் அடக்க முடியாது. நொந்துபோனான்.
மருத்துவரும் உபாதைகளை அடுக்கிக் கொண்டே போக.. ‘இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? இது தான் எங்களுக்கான கடைசி அதிர்ச்சியாக இருக்கட்டுமே!’ என்று நினைக்கும் அளவுக்கு மனம் வெறுத்து போனது மூர்த்திக்கு. அவள் படும் வேதனை கண் கொண்டு சகிக்க முடியவில்லை.
யாரின் நல்ல நேரமோ.. சேதம் ஏற்பட்டிருந்தாலும், கருப்பை இருந்தது. மருத்துவர் ஆலோசனைகளை ஒழுங்காகப் பின்பற்றவே ஒரு சில மாதங்களாக வலி இல்லை.
இன்று.. காலையிலேயே தலை ஏதோ செய்தது. பல் தேய்க்கும் களிம்பு பல்லில் படவும் குமட்டல் ஆரம்பமானது.
‘நேத்து என்னத்த முழுங்கி தொலைச்சேன்..?’ மனம் அப்படி தான் யோசித்தது.
காலை காப்பிக்கு மூர்த்தியின் மடியில் சாய்ந்து கொண்டாள். அவளுக்கு பிடித்த காபி வாசம் கூட பிடிக்காமல் போனது.
“முடியல மூர்த்தி சார். ஏதோ ஒத்துகல போல.. என்னவோ பண்ணுது மூர்த்தி சார்..” வாடிப் போயிருந்தாள்.
தலையை வருடினான், “நேத்து அப்படி ஒண்ணும் சாப்பிடலியே நீ. ஒம்பது மணிக்கு தான் க்ளீனிக் திறக்கும். டாக்டர பார்ப்போம். உள்ள போய் படு..”
“ம்ம்..” உடல் பலமிழந்தது போல் தோன்றவும்.. மடியிலிருந்து எழுந்தாளில்லை.
“துளசி மா.. உள்ள போய் படு”
“ப்ளீஸ் மூர்த்தி சார். படுத்தாதீங்க. முடியலன்னு சொல்றேன். இத செய்.. அத செய்ன்னு பாடா படுத்தறீங்க” எரிந்து விழுந்தாள்.
நாள் ஒன்றுக்கே இப்படி… மூர்த்தியின் அடுத்த எட்டு மாதமும், கொஞ்சம் கஷ்டம் தான் போலும்.
தூக்கிக் கொண்டான். படுக்கையில் படுக்க வைத்தவன் கையை பிடித்துக்கொண்டே இமை மூடியவள் பத்தே நிமிடங்களில் தூங்கியிருந்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவள், மூர்த்தியைத் தேடிச் செல்ல, பின் வாசல் திண்ணையில் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தாள்.
நாளிதழை பிடுங்கி ஓரம் வைத்துவிட்டு, மடியில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன துளசி மா.. எழுந்து வந்துட்ட? இப்போ எப்படி இருக்கு?”
“நார்மலா இருக்கு மூர்த்தி சார். காலேஜ் கிளம்பாம என்ன பண்றீங்க?”
“முடியாம படுத்திருக்க உன்னை விட்டுட்டு நான் எங்க போக?”
“நான் நல்லா தான் இருக்கேன்.. கிளம்புவோம். ரசம் வாசம் வருது? சமையல் ஆகிடுச்சா?”
“நீ எங்கேயும் கிளம்ப வேண்டாம். வீட்டில இரு! நானும் லீவ் போடலாம்ன்னு நினைச்சேன்?”
“வேண்டாம். நீங்க போர்ஷன்ஸ் முடிகணும் இல்ல.. கிளம்புங்க. மாமி இருக்காங்க.. அவங்கட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு போங்க. திரும்பவும் முடியலைனா, ஃபோன் போடுறேன்.”
“அப்போ சரி… நான் கிளம்பறேன். நீ ரெஸ்ட் எடு. வீட்டுல தானே இருப்போம்ன்னு வெறும் ரசமும் சாதமும் மட்டும் தான் வச்சிருக்கேன். மதியம் ஒரு முட்டை ஆம்லேட் போட்டுக்கோ. சாயங்காலம் சீக்கிரம் வந்திடுறேன்..”
மூர்த்தி கல்லூரி சென்றதும் படுத்தவள் தான்.. அன்று மதியம் வரையுமே சோம்பி கிடந்தாள், எதுவும் செய்ய விருப்பமில்லாமல். எவ்வளவு நேரம் தான் சும்மாவே கிடப்பது. மீண்டும் தலைச் சுற்றலோ.. குமட்டலோ வரவில்லை. பொறுமையாக வீட்டு வேலையில் ஈடுபட்டாள். பெருக்கி, துடைத்து, கழுவி, துவைத்து, குளித்து என்று நேரம் சென்றது.
அருகிலிருக்கும் பள்ளி பிள்ளைகளுக்கு தேர்வு சென்றுகொண்டிருக்க.. பிள்ளைகள் மதியமே வீட்டிற்கு வந்துவிடுவார்கள். முன் போல் தினமும் மாலை துளசி பாடம் எடுப்பதில்லை. இந்த வருடம் பள்ளி துவங்கியதிலிருந்தே வாரத்தில் ஒன்றோ இரண்டு நாட்கள், சந்தேகம் இருந்தால் மட்டுமே வந்து போகுமாறு கூறிவிட்டாள். முதுகலை பட்ட படிப்பு ஆரம்பித்தபின் பேக்கரிக்கும் உதவச் செல்வதில்லை. கணவன் வீட்டோடு குடியேற போகும் கனவில் இங்கு அனைத்திலிருந்தும் தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டாள்.
துளசிக்கு, ஊரோடு போய் குடியேறுவதில் விருப்பம். மூர்த்தியால் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. துளசிக்கு இங்குக் கிடைக்கும் மருத்துவ வசதி அங்குக் கிடைக்குமா? இந்த இடமாற்றம் இப்பொழுது அவசியம் தானா? இருவராலும் அங்குத் தாக்குப் பிடிக்க முடியுமா? மாற்றிய வாழ்க்கை முறையை மீண்டும் மாற்ற வேண்டுமா? என்று பல கேள்விகள் உள்ளுக்குள். அதனால் இன்னும் கல்லூரியில் வேலை விடப் போவதாக அறிவிக்கவில்லை. துளசியும் எப்படி எல்லாமோ பேசி பார்த்துவிட்டாள்.. ‘என்ன அவசரம் துளசி… கொஞ்சம் யோசிப்போம்’ என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான்.
இன்று வெள்ளிக் கிழமை என்பதால் வீட்டின் அருகே இருக்கும் காலி இடம் மாலையானால் களைக் கட்டும். இரவு ஏழு வரைக்குமே பிள்ளைகள் வெளியே விளையாடித் திரிவார்கள். அவர்கள் விளையாடுவதைக் காண அவளுக்குப் பிடிக்கும் என்பதால் மாலை நான்கு போல் மொட்டை மாடி சென்றுவிடுவாள், வேப்பமர நிழலில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்க.
வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்திருக்க துவைத்த துணியைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். பிள்ளைகளின் கூச்சல் மாடி வரை கேட்டது. அவளுக்குப் பிடித்த இனிமையான சத்தம்.
சேலை பின் அவள் நின்று தலை முடியைக் காயப்போட அவள் அங்கு நிற்பது கீழ் இருந்து பார்ப்பவருக்கு தெரியாது.
கொடியில் விரித்திருந்த புடவை காற்றில் அசைய… அவள் பார்வை எதிர் வீட்டின் சுற்றுச்சுவர் இரும்பு கேட்டின் அருகே நின்றிருந்த நடுத்தர வயது பெண் மேல் விழுந்தது. அந்த குடும்பம் புதிதாய் அங்குக் குடி வந்திருந்தது. வந்து சில மாதம் இருக்கும்.. ஆனால் அவர்கள் ஒருவரோடும் பேசி பார்த்ததில்லை. பேசுவது இருக்கட்டும்.. புன்முறுவலுக்கே பஞ்சம்!
45 வயது மதிக்கத் தக்க மெலிந்த தேகமுடைய கணவன், நாற்பதுகளின் ஆரம்பத்தில் சின்ன உருவம் கொண்ட அமைதியான தோற்றம் கொண்ட மனைவி, அறுபதுகளில் இருக்கும் அதிகம் நடமாடாத வயதான பெண்மணி, இரு ஆண் பிள்ளைகள். அதில் ஒருவன் பத்தாவது மற்றவன் பன்னிரண்டாவது. அவர்கள் ஒருவரும் யாரிடமும் பேசுவது கிடையாது. வாலிப பிள்ளைகள் மற்ற பிள்ளைகளோடு விளையாடுவதில்லை. பத்தும் பன்னிரண்டும் என்பதால்.. எட்டு மணி வரை ட்யூஷன் என்று வீட்டில் இருப்பதில்லை.
அவர்கள் வீட்டின் முன் பெரிய பெரிய தொட்டிகளில் செடி இருக்க.. காலை, மாலையானால் அந்த மனிதன் செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன் என்று மணிக் கணக்காய் அங்கு தான் நிற்பான். மற்றபடி அவனை பார்த்தது இல்லை.
இன்று, அந்த வீட்டுப் பெண் கிரில் கேட்டருகில் நின்று கொண்டு..
யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தாள். எதற்கு இப்படிப் பார்க்கிறாள்? யாரைத் தேடுகிறாள்?
துளசி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த பெண் அவர்கள் வீட்டின் பக்கம் ஒளிந்து விளையாடி கொண்டிருந்த சிறு பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தாள். அந்த சிறுமி..? பாமா, ஏழாம் வகுப்பு. வீட்டில் பாட்டி தாத்தா இருக்க, பெற்றவர்கள் இருவரும் மாலை ஏழு மணிக்குத் தான் வேலை முடித்து வீட்டிற்கு வருவார்கள். துளசியிடம் பயின்றவள். துளசியோடு நல்ல நட்பும் கூட!
இருவரும், ஒரு நிமிடம் பேசி இருப்பார்கள். சிறுமி மறுப்பாய் தலை அசைத்தாள். எதையோ அவள் நீட்டினாள்… சிறுமி தயங்கிக் கொண்டே வாங்கினாள். சாக்லேட் பார் போன்று தோன்றியது.
ஓடப் போன சிறுமியை மீண்டும் அழைத்தாள். கேட் திறக்க… சிறுமி தயங்கிக் கொண்டே அந்த பெண் பின் சென்றாள்.