இரவு, இரண்டு மணி இருபது நிமிடங்கள்…
சுட சுட இருந்த டீயில் எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து, மெதுவடையை அதில் தொட்டு சுவைத்துக்கொண்டிருந்தனர் தலைவனும், அல்லக்கைகளும்.
முகம் குரங்கு குல்லாவால் மறைக்கப்பட்டிருந்தாலும், வாய் அருகே கிடைத்த சிறு இடைவெளியில் வடை உள்ளே சென்றுக்கொண்டிருந்தது.
ஆதி, “ச்சை” என முகம் சுளிக்க, “மிஸ்டர் கிட்னாப்பர்ஸ்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கட்டை மட்டும் அவிழ்த்து விடுங்க! நான் எங்கயும் ஓட மாட்டேன்! ஆயா ப்ராமிஸ்” என வேண்டினான் கோகுல்.
இப்படி ஒருத்தன் அங்கு இருப்பதையே மறந்தவர்களாய் அவர்கள் உண்ணும் வேலையை செவ்வனே செய்துக்கொண்டிருக்க, “நாங்க ரெண்டு பேர் தான் இங்க இருக்கோம்! மீதி ஆளுங்க எல்லாம் எங்க? அவங்களை என்ன செஞ்சீங்க?” என்று கத்தினான் ஆதி.
“ம்ம்ம்? வத்தல் காயப்போட ஆள் பத்தலைன்னு மொட்டை மாடில உட்கார வச்சுருப்பாங்க” என முறைத்த கோகுல், “ஏன்டா, நீ வேற? இவனுங்களுக்கு நீயே ‘ரவுடி’ன்னு பட்டம் குடுத்துடுவ போல?” என்றான் கடுப்பாய்.
தலைவன் தன் தொண்டையை கனைக்க, “இதோ ஆரம்பிச்சுட்டான்டா! ‘லிப்கோ’ டிக்ஷனரி! ட்ரான்ஸ்லேட் பண்ணியே சாவடிப்பான்” என்று கோகுல் வாய்க்குள் முனக,
“உங்களால எங்கயும் போக முடியாது! யூ கான்ட் கோ எனிவேர்” என்றான் அவன்.
கோகுல், “நாங்க எங்கயும் போகல! கட்டை மட்டும் கழட்டி விடுங்க போதும்” என்று சொல்ல, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பின்னே, “எங்க தல, ஒரு கதை சொல்லுவாரு! அதை கேட்டுட்டு அப்படியே அச்சு பிசகாம திருப்பி சொல்லிட்டா, உன் கட்டை கழட்டி விடுறோம்” என்று சொல்ல, “ஐயையோ! உங்க தலைவன் ரெண்டு மொழில கதை சொல்லி முடிக்குறதுக்குள்ள என் கதை முடிஞ்சுடும்! கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா” என்றான் கோகுல்.
கண்களால் ஆலோசனை நடத்திய மூவரும், ஒருமனதாய் அல்லக்கை ஒருவன் கதை சொல்வதென முடிவு செய்ய, ‘இந்த டாஸ்கில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும்’ என ஆர்வமாய் அவர்கள் சொல்ல போகும் கதையை கேட்க ஆயத்தமானனர் ஆதியும் கோகுலும்.
“நல்லா கேட்டுக்கோ, கதையை ஒருமுறை தான் சொல்லுவேன்!” என்ற எச்சரிக்கையுடன் சொல்ல துவங்கினான்.
“ஒரு ஊருல, ஒரே ஒரு தாத்தா ஒரு மரத்தடி ஓரமா உட்காந்திருந்தாராம். அவர்கிட்ட வந்த ஒரு போஸ்ட் மேன், ஒரு துண்டு சீட்டை நீட்டி, இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமான்னு கேட்டாராம்! அதுக்கு அந்த தாத்தா, ‘ஓ! தாராளமா சொல்றேனே’ன்னு சொல்லிட்டு வழியை சொல்ல ஆரம்பிச்சார்”
“இப்படியே நேரா போனா மூணு பாலம் வரும், அதுல முதல் பாலத்தை விட்டு மூணாவது பாலத்துல ஏறுனா, கொஞ்ச தூரத்துல மூணு பெரிய ரோடு வரும்… அதுல முதல் ரோடு விட்டு மூணாவது ரோடுல போனா, மூணு ஆறு வரும்… அதுல முதல் ஆறு விட்டு மூணாவது ஆறு கிட்ட போனா, மூணு படகு வரும்… அதுல முதல் படக விட்டு மூணாவது படகுல ஏறி கொஞ்ச தூரம் போனா, மூணு தெரு வரும்… அதுல முதல் தெருவ விட்டு மூணாவது தெருல போனா, மூணு சந்து வரும்… அதுல முதல் சந்த விட்டு மூணாவது சந்துல போனா, மூணு வீடு வரும்… அதுல முதல் வீட விட்டு மூணாவது வீடுக்குள்ள போனா, மூணு பீரோ இருக்கும்… அதுல முதல் பீரோவ விட்டு மூணாவது பீரோவ தொறந்தா, மூணு பெட்டி இருக்கும்… அதுல முதல் பெட்டிய விட்டு மூணாவது பெட்டிய தொறந்தா, மூணு டைரி இருக்கும்… அதுல முதல் டைரிய விட்டு மூணாவது டைரிய தொறந்தா, அதுல ஒரு பிள்ளையார் படம் இருக்கும்… அதுமேல சத்தியமா, எனக்கு இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு தெரியாது தம்பி’ன்னு சொன்னாராம்”
அல்லக்கை ஒருவன் கதையை முடிக்க, மற்றொரு அல்லக்கை அதைக்கேட்டு ஆரவாரமாய் சிரித்து கைத்தட்ட, தலைவனும் பிரம்மாண்டமாய் சிரித்து, “அருமை அருமை… சூப்பர் சூப்பர்” என்றான்.
இருவரும் பாராட்டியதில் குளிர்ந்துப்போன கதை சொன்னவன், “கதையை நல்லா கேட்டீங்கள்ள? அதை திரும்ப சொல்லுங்கடா இப்போ” என்றான் மிதப்பாய்.
கோகுலும் ஆதியும் குப்புறப்படுத்து தரையோடு சாய்த்திருந்த தலையை நொடிக்கூட நிமிர்த்தவில்லை. கதை கேட்ட வீரியத்தில் மெய்மறந்து(!?) போயிருந்தனர்.
“ஏய்… நான் சொன்ன கதையை திரும்பி சொல்லுங்கப்பா! கட்டை அவிழ்த்து விடுறேன்” என மீண்டும் அவன் அறைக்கூவல் விடுக்க,
“நெஞ்சு வலி வந்து செத்தாலும் சரி, நாங்க ஆணியே புடுங்கல! கட்டோடவே இருந்துக்குறோம்” என்றான் கோகுல்.
“உன் கதைல மெர்சலாயிட்டான் டா… அடிச்சுக்கோ” என்று உற்சாகமாய் ‘ஹைபை’ போட்டு ஆடிக்கொண்டிருந்தனர் அல்லக்கைகள்.
“நீ பரிதாபத்தை காதல்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க!”-சுரேன்
“நீங்க என் காதலை ‘பரிதாபம்’ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க!” சுரேனுக்கும் மதுவுக்கும் இடையே வாக்குவாதம் சூடாக சென்றுக்கொண்டிருந்தது.
அவள் பதிலில் சலித்தவன், “சொன்னா புரிஞ்சுக்கோ மது! ஒரே நாளுல, ஒரு மணி நேரத்துல பாக்குறதுல எல்லாம் காதல் வந்துடாது” என்றான் பிடிவாதமாய்.
“சரி, அப்போ எவ்ளோ நேரம் பார்த்தா காதல் வரும்ன்னு சொல்லுங்க, பாக்குறேன்” என மது விடாப்பிடியாய் கேட்க, “அப்படி என்ன இருக்குன்னு என் மேல லவ் வருது உனக்கு?” என்றான் சுரேன்.
ஒரே வார்த்தையாய், “தெரியல” என்றாள் மது.
அவளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பதென தெரியாமல் கடுப்பானான் சுரேன். இதில் அவன் மனம் வேறு அவள் புறம் சாய தயாராய் இருக்க, அதை கட்டுப்படுத்தி, அவளை விளக்கி நிறுத்துவது உண்மையில் வெகு சிரமமாய் இருந்தது அவனுக்கு.
சுரேன், “என் தங்கச்சியவே உன் அண்ணனுக்கு குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் நான்!”
மது, “அது உங்க இஷ்டம்”
மது அப்படி சொல்ல, “இது என்ன பதில் மது?” என சீறினான் சுரேன்.
“நான் என் அண்ணனை பத்தி உங்ககிட்ட பேசவே இல்ல!” என்றாள் மது.
சுரேனோ, “ஆனா, நீ அவனோட தங்கச்சி தானே? அப்பறம் எப்படி நா….?” என சொல்ல ஆரம்பிக்க, “அப்போ அது மட்டும் தான் உங்க பிரச்சனையா?” என வேகமாய் இடைமறித்தாள்.
‘இவளிடம் எப்படித்தான் பேசுவது?’ என குழம்பியவன், “உன் அண்ணனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா இந்த லவ்வ அவன் அக்சப்ட் பண்ணிக்க மாட்டான்” என்று சொல்ல,
“என் அண்ணனுக்கு நம்ம விஷயம் தெரியும்” என ஷாக் கொடுத்தாள் மதுதேவா.
அதிகாலை மணி நான்கு!
“ஹலோ ம்மா! எப்படி இருக்கீங்க?” என கம்பீரமாய் வணக்கம் வைத்தான் அவன்.
லட்சுமியும் தெய்வாவும் தங்கள் முன்னே நிற்கும் புதியவனை கண்டு சிரிக்க முயல, மனதில் சூழ்ந்துள்ள திகில் இயல்பான புன்னகையை முகத்திற்கு கொடுக்க மறுத்தது.
“என்னை யாருன்னு தெரியலையா?” புதியவன் இன்முகமாய் லட்சுமியிடம் கேள்வி கேட்க, அவன் அருகே நின்றிருந்த ‘தன்யா கன்ஸ்ட்ரக்ஷன்’ மேனேஜர், “மேடம்! சார் தான் நம்ம ‘ரெசார்ட் இனாக்ரேஷ’னுக்கு வந்துருக்க ‘சீஃப் கெஸ்ட்… சூப்பெரின்டன்ட் ஆஃப் சிபிஐ மிஸ்டர். இனியன் இளஞ்செழியன்” என்று அறிமுகப்படுத்தினான்.
சட்டென இரு பெண்களின் முகத்திலும் வந்துப்போன பிரகாசத்தையும், அதற்கடுத்து வந்த தயக்கத்தையும் கண்ட இனியன் புருவம் சுருக்க, “வாங்க சார், உட்காருங்க” என இருக்கையை காட்டினார் தெய்வா.
அவர் காட்டிய இடத்தில் அமர்ந்த இனியன், “சார்’ எல்லாம் வேண்டாம்மா! நான் ஆபீசரா இங்க வரல! ஜஸ்ட் பிரன்ட்லி விசிட் தான்!” என்றான்.
லட்சுமியின் முகம் குழப்பம் கொள்ள, “என் தம்பி அதியனும் சுரேனும் க்ளோஸ் பிரண்ட்ஸ்! அந்த வகைல சுரேன் எனக்கு பழக்கம்! ரெசார்ட் கட்டிருக்கேன், நீங்க கண்டிப்பா வரணும்ன்னு கூப்பிட்டான்! நானும் சரின்னு சொன்னேன்! கடைசில நான்தான் ‘சீஃப் கெஸ்ட்’ன்னு அவன் சொன்னப்போ நான் ஒத்துக்கவே இல்லை” என்று மெலிதாய் சிரித்தவன்,
“எதாவது ஹீரோ ஹீரோயினை கூப்பிட்டு ரெசார்ட் ஓபன் பண்ணு, நல்ல ரீச் இருக்கும்ன்னு எவ்வளவோ சொன்னேன்! அவன் பிடிவாதமா நாந்தான் வரணும்ன்னு சொல்லிட்டான்” என்றான் இனியன்.
தலையசைப்புடன் கேட்டுக்கொண்டிருந்த இருவரின் உடல்மொழியும் எதையோ அவர்கள் மறைக்க முயல்வதாகவே அந்த ‘சிபிஐ’ மூளைக்கு தோன்றியது.
அவர்களை கவனித்துக்கொண்டே, “நான் இப்போதான் இங்க வந்தேன்! சுரேனை பார்த்து பேசிட்டு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு நினைச்சேன்! சுரேன் எங்கம்மா?” என்றான்.
லட்சுமியின் கைகள் நடுங்குவதையும் தெய்வா அவர் கரத்தை அழுத்தி பிடிப்பதையும் இனியனின் கண்கள் கவனிக்க தவறவில்லை.
“நீங்க ரெஸ்ட் எடுங்க தம்பி, காலைல பார்க்கலாம்! சோர்வா இருப்பீங்க” லட்சுமி அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் எண்ணத்தில் சொல்ல, “ப்ளைட்ல தானேம்மா வந்தேன்! நான் சுரேனை பார்த்துட்டு போயே ரெஸ்ட் எடுத்துக்குறேன்” என உறுதியாய் சொன்னான் இனியன்.
“அப்படியா?” என்ற லட்சுமி, “ஏதாவது சாப்படுறீங்களா?” என விருந்தோம்பலுக்காக கேட்க, “ம்ம்ம்? கப் ஆஃப் மில்க்?” என்றான் இனியன்.
சற்று தள்ளி இருந்த மேசையை நோக்கி பதட்டத்துடனே சென்றார் லட்சுமி. பிளாஸ்கில் இருந்த இளஞ்சூட்டு பாலை ‘கப்’பில் ஊற்றி சிறிது சர்க்கரை சேர்க்க, ஸ்பூன் அவர் கையில் நடுங்கி சர்க்கரை துகள்களை சிதறவிட்டது.
தன்னால் நடுங்கும் விரல்களோடு, பாலை கலந்து எடுத்துக்கொண்டு வர, அவரது பதட்டமும், அதீத வியர்வையும், ஓரமாய் நிற்கும் தெய்வாவின் முகத்தில் இருந்த பதைபதைப்பும் இனியனுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.
பதட்டமாய் நிற்கும் அவர்களை கூர்மையாய் பார்த்துக்கொண்டே, “எதையாவது மறைக்குறீங்களா?” என்றான் சுற்றி வளைக்காமல்.
லட்சுமி வேகமாய், “இல்லையே, இல்லையே” என்று கூற, தெய்வா, “என்னோட ஒரே ஒரு புருஷனை கடத்திட்டானுங்க தம்பீஈஈஈ…” என பழைய மோட்டரை ஆன் செய்திருந்தார்.
“பிரிஞ்சு போற அளவுக்கு என்ன மேம் நடந்துச்சு?” தன்யாவின் மௌனத்தை தன் கேள்விகளால் தகர்க்க முயன்றாள் பிரியா.
தன்யா மௌனம் சாதிக்க, “அவர்மேல தான் தப்போ?” என்றதும், வேகமாய், “இல்ல இல்ல! தப்பு என் மேல தான்” என்றாள் தன்யா.
“என்ன ஆச்சு?” என பிரியா விடாமல் கேட்க, முதன்முதலாய் தங்கள் ‘காதல் முறிவி’ற்க்கான காரணத்தை சொல்ல ஆரம்பித்தாள் தன்யா.
“நானும் தேவாவும் தனியா வாழ ஆரம்பிச்ச ஒரு மாசத்துக்கு பிறகு, தேவாக்கு ஒரு முக்கியமான பிசினஸ் விஷயமா ‘டெல்லி’ போக வேண்டிய சூழ்நிலை வந்துச்சு! அப்போ என்னையும் அவர் கூட கூட்டிட்டு போக சொல்லி நான் அடம் பிடிச்சேன்! ஆனா, நான் சொல்ல சொல்ல கேட்காம அவர் என்னை விட்டுட்டு டெல்லி போயிட்டாரு!” என்றாள் தன்யா.
“உங்களையும் கூட்டிட்டு போனா அவர் எப்படி வேலையை சரியா பார்க்க முடியும்?” பிரியா இடைப்புக, “ஒரு பிசினஸ் வுமனா அது இப்போ எனக்கு புரியுது! ஆனா, அப்போ, அவர் என்னை அவாய்ட் பண்றமாதிரி மட்டும் தான் தோணுச்சு!” என்றாள் தன்யா.
“அவர் இல்லாத ஒருநாள், வீட்டுல ரொம்ப போர் அடிக்குதுன்னு ‘ஷாப்பிங் மால்’ கிளம்புனேன்! அங்க நான் தனியா சுத்திட்டு இருந்தப்போ, ஸ்வேதா’வை பார்த்தேன்” என்று தன்யா சொல்ல, “ஸ்வேதாவா?” என அதிர்ந்துப்போய் கேட்டாள் பிரியா.
அவள் அதிர்வை பொருட்படுத்தாத தன்யா, “அவங்களை அதுக்கு முன்னாடி நான் ஒருமுறை எங்க காலேஜ்ல பார்த்துருக்கேன்! தேவா கூட பேசிட்டு இருந்தாங்க! தேவா கூட அவங்களை, ‘இனிமே பேசுறதுன்னா வீட்டுக்கு வா’ன்னு சொன்னாரு! அதனால அந்த பொண்ணை எனக்கு நல்லா நியாபகம் இருந்துச்சு” என்றாள்.
அவளே சொல்லட்டும் என மௌனமாய் இருந்தாள் பிரியா.
“என்கிட்ட வந்த ஸ்வேதா, ‘நீதான் ஆதியோட புது கேர்ள் பிரண்டா?’ன்னு கேட்டப்போ நான் நிஜமாவே ஷாக் ஆகிட்டேன்” என்ற தன்யா அந்த நாளின் நினைவுக்கே சென்றாள்.
“நீதான் ஆதியோட புது கேர்ள் பிரண்டா?” ஸ்வேதா கேட்க, பதில் சொல்லாது தன்யா நிற்கவே, அவளது அதிர்வை உணர்ந்துக்கொண்ட ஸ்வேதா, “ஏன் கேட்குறேன்னா லாஸ்ட் இயர் நான்தான் அவனோட கேர்ள்பிரண்டா இருந்தேன்… அதான்” என்று சொல்ல, அது அடுத்த பெருங்குண்டாய் தன்யாவின் இளம் மனதை தாக்கியது.
அதிர்வின் தாக்கம் அவளை பேசவிடாமல் செய்ய, “என்ன ஷாக் ஆகிட்டியா? ஏன்? ஆதி இதெல்லாம் சொல்லலையா உன்கிட்ட?” என்றாள் ஸ்வேதா வேண்டுமென்றே.
தன்யா அசையாது நிற்க, “நீ ரொம்ப சின்ன பொண்ணு! டீனேஜ்ல நிக்குற! உனக்கு இதெல்லாம் ஏத்துக்க, நம்ப கஷ்டமா தான் இருக்கும்! பட், ரியாலிட்டின்னு ஒன்னு இருக்குல்ல? ஆதி எல்லாம் உன்கிட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேனே?!” என தன்யாவின் முகம் பார்த்தே அவளது குழம்பிய மனதில் மேலும் கல்லெறிய பார்த்தாள் ஸ்வேதா.
“நீ…நீங்க என்ன பேசுறீங்க? ஆதி அப்படியெல்லாம் கிடையாது!” என தன்யா சொல்ல, அவளது நடுங்கிய குரல், ஸ்வேதாவுக்கு தன் கட்டுக்கதையை மேலும் வளர்க்கும் தைரியத்தை கொடுத்தது.
“நான்தான் சொல்றேனே மிஸ்.தன்யா. யூ ஆர் டூ யங் அண்ட் யூ ஆர் இன் லவ்! நான் எது சொன்னாலும் உன்னால நம்ப முடியாது தான்” என்றவள், லேசாய் சிரித்து, “நானும் ஆதியும் க்ளோஸா இருக்க ‘பிக்ஸ்’ காட்டினாலாவது நம்புவியா? ம்ம்ம்?” என்று கேட்க, தன்யாவிடம் எவ்வித பதிலும் இல்லை.
அவளுக்கு அங்கே தான் ஏன் நிற்கிறோம்? ஆதியை ஒருவர் குறை சொல்ல, ‘உன் வேலையை பார்த்துட்டு போ’ என்று அவர் முகத்தின் நேரே தைரியமாய் சொல்ல முடியாது, அவள் பேச்சை கேட்டுக்கொண்டு நிற்க, தன்னை எது செலுத்துகிறது? அப்படியென்றால், தன் மனதில் ஆதியின் மீதான நம்பிக்கையின் அளவு என்ன? என பலவித சுய அலசல்கள் ஓடிக்கொண்டிருக்க, ஸ்வேதா தன் மொபைலை அவள் கரத்தில் திணித்தாள்.
அந்த சிறிய சைஸ் ‘ஆப்பிள் ஐபோன்’ திரையில் ஸ்வேதாவை குறுக்கே அணைத்தபடி அவள் தோளில் முகம் புதைத்திருந்த ஆதியை கண்டதும், தன்யாவிற்கு உலகமே ராட்டினம் சுற்றுவதைப் போல இருந்தது.
அடுத்தடுத்து திரையை ஸ்வேதா நகர்த்த, பலவித கோணங்களில் காதல் ரசம் சொட்டும் வகையில் ஸ்வேதாவை அணைத்துக்கொண்டு முகம் முழுக்க, விகாசிக்க, அத்தனை நெருக்கமாய் ‘போஸ்’ கொடுத்திருந்தான் ஆதி.
பார்த்த தன்யாவுக்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை. ‘என் ஆதியா? என் ஆதியா இப்படி?’ என்ற கேள்வியிலேயே சிக்கிக்கொண்டது அவள் மனதும் மூளையும்.
அவள் கரத்தில் இருந்த அலைபேசியை வெடுக்கென பிடுங்கிக்கொண்ட ஸ்வேதா, வெளுத்துப்போய் இருந்த தன்யாவின் முகத்தை திருப்தியாய் பார்த்து,
“இதெல்லாம் நானும் ஆதியும் நெருக்கமா இருந்தப்போ எடுத்துக்கிட்டது! எங்களுக்கு ‘என்கேஜ்மென்ட்’ கூட நடக்குறதா இருந்துச்சு! ஆனா, ஆதி தான் திடீர்ன்னு என்கூட பேசுறதை நிறுத்திட்டான்! காரணம் தெரிஞ்சுக்க தான் அன்னைக்கு நான் உங்க காலேஜ்க்கு வந்தேன்! அப்போதான் தெரிஞ்சுது, அவனுக்கு உன்கூட ‘அஃபேர்’ ஆகிடுச்சு, அதனால தான் என்னை அவாயிட் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு’… என்கூட எப்படி எப்படியெல்லாமோ இருந்துட்டு, இப்படி இன்னொருத்தி வந்ததும் என்னை அவாயிட் பண்ற கேவலமான ஆளை நான் இனிமேலும் மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுவேனா? அதான் நானே விலகிக்கிட்டேன்” என்றாள் அவள்.
தன்யா முகம் மேலும் குழப்பத்தை காட்டியது.
“எப்பவுமே ஆதி பொண்ணுங்க பின்னாடி வர மாட்டான், நம்மள தான் வர வைப்பான்! அவனுக்காக எல்லாமே நம்ம தான் செய்வோம்! ஆனா, அது நமக்கே தெரியாது!!! அதுதான் அவனோட ஸ்பெசாலிட்டியே!!!” என்ற ஸ்வேதா, “நீயேதான் அவனை தேடிப்போய் ப்ரொபோஸ் பண்ணியாமே? கேள்விப்பட்டேன்!” என்று சொல்ல,
தன்யா ஒருவாறாய் தன்னை சமாளித்து, “நான் ஆதிக்கிட்ட பேசிக்குறேன்” என்றுவிட்டு நகரப்பார்க்க, “இப்போ எங்க இருக்கீங்க? படேல் நகர் சிங்கிள் பிளாட்’லயா?” என்று ஸ்வேதா கேட்டதும், தன்யாவின் கால்கள் அப்படியே, அங்கேயே வேரூன்றியது.
“உ…உங்களுக்கு… எப்படி தெரியும்?”
இளக்காரமாய் சிரித்த ஸ்வேதா, “அது உனக்கு தான் புதுசு! எனக்கு ரொம்….ப பழசு” என்றுவிட்டு செல்ல,
‘அப்டின்னா?’
அந்நேரம் தன்யாவுக்கு திடமாய் நிற்கக்கூட பிடிமானம் தேவைப்பட்டது.
தன்யாவுடனான எதிர்ப்பாராத சந்திப்பில், திட்டமிட்டிடாத ‘நாரதர்’ வேலை முடிந்ததில் குதூகலமாகி கிளம்பி சென்றிருந்தாள் ஸ்வேதா.
தன்யா சொன்னதை கேட்ட பிரியா, அவளை இமைக்காது பார்க்க, அவள் பார்வைக்கான அர்த்தம் மட்டும் தன்யாவுக்கு விளங்கவே இல்லை.
“ஏன் அப்படி பார்க்குற?”
பிரியா, “ஸ்வேதா யாருன்னு தெரியுமா?”
“ஆதியோட கேர்ள்ஃபி…” தன்யா முடிக்க கூட இல்லை.
“புல்ஷிட்!” என கோவமாய் கத்தியிருந்தாள் பிரியா.