அறைக்குள் சுருண்டு படுத்திருந்த லட்சுமி, கதவு தட்டப்படும் ஓசையில் எழுந்து வந்தார். வெளியே தெய்வானையை கண்டதும் மகிழ்ந்து போனவராய், “அண்ணி…!” என அவர் கரத்தை பற்றிக்கொள்ள,
“வந்தவங்களை ‘வாங்க’ன்னு நீ வந்து வரவேற்க்கனும்! அதவிட்டுட்டு இப்படி ரூம்க்குள்ள அடைஞ்சு கிடக்குற? உன்னை தேடி நான் வர வேண்டியதா இருக்கு!” என்றார் உரிமையாய் கோவம் கொண்டு.
“கோச்சுக்காதீங்க அண்ணி! பசங்க வாழ்க்கையை நினச்சு மனசு வருத்தமா போச்சு! அதான் அதே நினப்புல வந்து படுத்துட்டேன்” என்றவர்,
“எப்போ வந்தீங்க அண்ணி?” என்று கேட்க,
“இங்கேயே நின்னு பேச வேணாம்! வா, எல்லாரும் நமக்காக அங்க காத்திருப்பாங்க” என்று சொன்ன தெய்வா, அவர்கள் புறப்பட்டதில் இருந்து, மாலத்தீவை வந்து அடைந்தது வரையிலான கதையை விவரித்து கூற, சிரிப்புடன் அதை கேட்டுக்கொண்டே நடந்து வந்தார் லட்சுமி.
அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்தை நெருங்கிய தெய்வா, “உன்னை மட்டும் காணோம்னு தான் நான் கூப்பிட வந்தேன்” என லட்சுமியிடம் சொல்லிக்கொண்டே, “நாங்க வந்துட்டோம்” என்று கூவ, அவர்களுக்காக காத்திருப்பதாய் சொன்ன ஒருவரும் அங்கே இல்லை!!!
இருட்டிக்கிடந்த அறைக்குள் இருகைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுவரோடு சரிந்து அமர்ந்திருந்த சுரேன், மெல்ல தன் கண்களை திறந்தான். மயக்கம் தெளிய ஆரம்பித்திருந்தது.
அவன் கண்களில் ‘கர்ணனின் கவசகுண்டலம்’ போல எப்போதும் இருக்கும் ‘கூலர்ஸ்’ காணாமல் போயிருந்தது.
கண்ணை சுருக்கி, திறந்து வெளிப்புறத்தை பார்க்க முயன்றான். ஆனால், அறையின் இருட்டு அவனுக்கு பழகாமல் இருக்க, குரலை செருமி, “யாராது இருக்கீங்களா?” என்று கத்தினான்.
அறைக்குள் அவன் குரல் சிறிதாய் எதிரொலித்தது. எழுந்து அமர முயலும்போது தான் அவனுக்கு தெரிந்தது, அவனிரு கால்களும் கட்டப்பட்டிருப்பது. நடந்ததை நினைவுகொள்ள பார்த்தவனுக்கு, பெரிதாய் ஒன்றும் நினைவில் இல்லை. ஜெயதேவ் குடும்பத்தை கண்டதும் கோவமாய் அருகே முன்னேரியவனை பின்னிருந்து யாரோ முகத்தில் துணி வைத்து அழுத்தியது மட்டுமே நினைவு இருக்கிறது அவனுக்கு.
சுரேன் மேலும் முயன்று, “யார் அது? இஸ் எனிஒன் தேர்?” என பலம் கொண்டு கத்த,
“சு…ரேன்…” மெல்லிய முனகலாய் ஒலித்தது அக்குரல். குரல் கேட்ட மறுவினாடி, தன்னை மீறி, “மது?” என விளித்திருந்தான் சுரேன்.
கண்ணை மறைக்கும் இருளில் சிறு முனகல் குரலிலேயே தன்னை அடையாளம் கண்டுக்கொண்ட சுரேனின் செய்கை முழுதாய் மயக்கம் தெளியாத நிலையிலும், மதுவுக்கு பேருவகையை அளித்தது.
மற்றொரு அறையில், ஜெயதேவ் அதே போல கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடக்க, அவரை ஒட்டியே அதே நிலையில் இருந்த ராஜகோபால், “என்னடா இது? நமக்கு மட்டும் புதுசு புதுசா நடக்குது?” என்றார் அலுப்பாய்.
“அதான் ராஜா எனக்கும் புரியல! நம்ம இங்கிருந்து போனதும், ஒரு நல்ல ஜோசியரா பார்த்து நம்ம எல்லார் ஜாதகத்தையும் காட்டணும்னு நான் நினைக்குறேன்! நீ என்ன நினைக்குற?”
ராஜகோபால், “அதுக்கு முதல்ல நம்ம இங்கிருந்து உயிரோட போகணும்ன்னு நான் நினைக்குறேன்!”
ஜெயதேவ், “பாயின்ட்!!!”
ஒரு விசாலமான அறையின் தரையில் குப்புறப்படுத்து, இருகைகளும் முதுகுபக்கம் கட்டப்பட்டிருக்க, கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீனை போல தரையில் நீந்திக்கொண்டிருந்தனர் கோகுலும், ஆதியும்.
இருவரும் எழுந்துக்கொள்ள முயற்சிக்க, வெகு சிரமமாகவே இருந்தது. யார் கடத்தியது? எதற்காக கடத்தப்பட்டோம்? என்ற எந்தவொரு விவரமும் அறியாமல் எழுந்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்தனர்.
எழுந்துக்கொள்ள முடியாத விரக்தியில், “டேய் கிட்னாப்பர்ஸ்! சத்தியமா பேதில தான்டா போவீங்க!” என கோகுல் சாபம் கொடுக்க, அவர்கள் இருந்த அறையின் கதவு ‘படார்’ என திறந்தது.
உள்ளே நுழைந்த ‘குரங்கு குல்லா’ ரவுடிகள், ஆயுத எழுத்தை(ஃ) போல பின்னே கைகளை கட்டிக்கொண்டு அணிவகுத்து நிற்க, ஆதியும் கோகுலும் இன்னும் வேகமாய் எழுந்துக்கொள்ள முயன்றனர்.
ஆதி ஆத்திரத்துடன், “யாருடா நீங்கல்லாம்? எதுக்கு எங்களை கடத்தி வச்சுருக்கீங்க?” என்று கத்தினான்.
குழுவின் தலைவன் போல மூவரின் நடுவே இருந்த ஒருவன்,
“வெல்கம் டு த கிட்னாப் ரூம்! கடத்தல் அறைக்கு உங்களை வரவேற்கிறேன்! ஐ ஹோப் எவரிதிங் இஸ் கம்போர்டபில் ஹியர். உங்களுக்கு இங்க எல்லாம் வசதியா இருக்கும்ன்னு நான் நம்புறேன்” என தமிழும் ஆங்கிலமும் கலந்து பேச,
அவன் வரவேற்ப்பிலும், மொழிப்பெயர்ப்பிலும் கடுப்பான கோகுல், “அட, மேஜர்.சுந்தர்ராஜன் சார்? நீங்களா எங்களை கடத்தினது?” என்றான்.
உடன் நின்ற இரு அல்லக்கைகளும் பதட்டமாக தலைவனை நெருங்கி, “பாஸ், நீங்க ‘மேஜர்’ன்னு அவனுக்கு தெரிஞ்சுடுச்சு” என்று சொல்ல, இன்னொருவன், “ஒருவேளை நாங்களும் ‘மேஜர்’ தான்னு தெரிஞ்சுருக்குமோ?” என்றான் சந்தேகமாய்.
தலைவனோ, “எனக்கெப்படி தெரியும்? ஹவ் டூ ஐ க்னோ?” என்றான் சிறு பதட்டமாய்.
கோகுலும் ஆதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்க்க, கோகுல், “மிலிட்டரி மேஜரா நீங்க எல்லாம்?” என்றான் வெகு திகைப்பாய்.
அல்லக்கைகள் சட்டென கைத்தட்டி சத்தமாய் சிரிக்க, தலைவனும் பதட்டம் இன்றி நின்றான். அதில் ஒருவன், சிரிப்பை அடக்க முடியாமலே, “பா……ஸ்!!! இவனுங்க நம்மள மிலிட்டரி மேஜர்ன்னு தப்பா நினைச்சுட்டானுங்க!” என்று சிரிக்க, மற்றொருவன் அடங்கா சிரிப்புடன், “18 வயசு ஆனாலே ‘மேஜர்’ தான்னு பாவம், இந்த லூசுங்களுக்கு தெரியல பாஸ்” என்றான் ஆரவாரமாய்.
ஆதி பயங்கர கடுப்புடன் தலையை தரையில் அடித்துக்கொள்ள, கோகுல் தான் அயர்ந்துப்போய், “நாங்க லூசுதான்ப்பா! நீங்க எல்லாம் கடத்துற அளவுக்கு ‘வீக்’கா இருந்துருக்கோம் பாரு! நாங்க லூசே தான்” என்றான் வெறுப்பாய்.
அல்லக்கைகளோ, “நம்ம நெக்ஸ்ட் ப்ளான் என்ன பாஸ்?” என கேட்க, இன்னொருவன், “அதை நம்ம ‘பெரிய பாஸ்’கிட்ட தானே கேட்கணும்!?” என்று சொல்ல, அவனை முறைத்த தலைவன், வேகமாய் அந்த அறையை விட்டு வெளியேறினான். பின்னோடு அவர்களும் வீரநடை போட்டு போக,
“அடேய், கிட்னாபர்ஸ், எவ்ளோ நேரம்டா ‘கரப்பான் பூச்சியை கவுத்து போட்டமாறியே’ கிடக்கிறது? கொஞ்சம் பிரட்டி விட்டுட்டு போங்கடா!!! டேய்…. டே….ய்…….” என அனாதையாய் கத்திக்கொண்டிருந்தான் கோகுல்.
தன்யா மயக்கம் தெளிந்தது முதல் அழுதுக்கொண்டே இருந்தாள். கைகள் மட்டுமே கட்டப்பட்டிருக்க, சிறு வெளிச்சத்துடன் இருந்த அந்த அறையில் அவள் எதைபற்றிய சிந்தனையும் இன்றி அழுதுக்கொண்டே இருக்க, “மேம்! ப்ளீஸ்! அழாதீங்க!!” என கெஞ்சிக்கொண்டிருந்தாள் பிரியா.
தன்யாவும் ப்ரியாவும் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பிரியா எப்படி கடத்தப்பட்டாள்? இருவரும் ஒரே அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது எப்படி? கடத்தியவர்கள் யார்? என்ற எந்தவொரு கேள்வியும் தன்யாவிடம் இருந்து வெளிவரவில்லை.
சமாதானம் செய்து செய்து, ஓய்ந்துப்போன பிரியா, “மேம்! ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங்! ஆல்ரெடி நம்மளை கடத்தி வச்சது யாருன்னு தெரியல, எப்படி இங்கிருந்து வெளில போறதுன்னு தெரியல! நீங்க இப்படி என்னன்னு சொல்லாம அழுதுட்டே இருந்தா, எப்படி மேடம்?” என்று சற்று கோபமாய் சொல்ல, தன்யாவின் அழுகை சற்றே மட்டுப்பட்டது.
தன்யாவின் அழுகை குறைவதை போல தெரிந்ததும், “மனசுல ஏதாவது பாரமா இருந்தா அதை யார்க்கிட்டயாவது ஷேர் பண்ணணும் மேம்! உங்கக்குள்ளையே வச்சுக்கிட்டு இருந்தா, கண்டிப்பா எந்தவொரு சொல்யூஷனும் கிடைக்காது! டிப்ரஷன் தான் ஏறும்…” என்றாள் பிரியா கனிவாக.
தன்யா கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
பிரியா, “சொல்லுங்க மேம்” என ஊக்க, ‘சொல்வதா? வேண்டாமா?’ என்ற தயக்கத்துடனே, “தே…வா…!” என ஒற்றை சொல்லாய் நிறுத்தினாள் தன்யா.
பிரியா சட்டென, “உங்க ப்ரதரா?” என்று கேட்க, சுள்ளென்ற கோபத்துடன், “மை ஹஸ்பன்ட்” என்று முறைத்தாள் தன்யா.
அதிர்ந்த பிரியா, “ஹ…ஸ்…? மேம்? ஆர் யூ மேரீட்?” என்று திகைத்துப்போக,
“டுவைஸ்!” என்ற தன்யாவின் குரலும் முகமும் நிமிர்ந்து மிளிர்ந்தது. ஆதியின் மீதான அவள் காதல்-கதை-பரிமாற்றம் அங்கே நிகழ்ந்தது.
மது அங்கும் இங்கும் நடந்தபடி, “ஹெல்ப்… ஹெல்ப்… ஹெல்ப்…” என கத்திக்கொண்டிருந்தாள்.
அறையில் வெளிச்சம் ஓரளவு வந்திருந்தது. சுரேனுக்கும் அவன் இருக்கும் இடம் நன்றாக பிடிபட்டது.
‘விவிஐபி’களுக்கென பிரத்யேகமாய் அவன் வடிவமைத்திருந்த கண்ணாடி ரெசார்ட் தான் அது. அதில் உள்ள நான்கு அறைகளில் தான், அறைக்கு இருவர் என அனைவரும் கடத்திவைக்கப்பட்டிருக்கின்றனர்.
‘தாங்கள், தங்கள் இடத்தில் தான் இருக்கிறோம்’ என்று தெரிந்ததுமே, சுரேனுக்கு பதட்டம் பெருமளவில் குறைந்திருந்தது.
மது, “ஹெல்ப்… சம்படி ஹெல்ப்” என கூச்சலிட, குனிந்த தலையுடன், “வேஸ்ட்டா கத்தாத! வெளில கேட்காது!” என்றான் சுரேன்.
சட்டென திரும்பியவள், “ஏன்…?” என்று கேட்க, “ரூம் முழுக்க் ‘சவுன்ட் ப்ரூப்’ சிஸ்டம்! சத்தம் வெளில கேட்காது” என்றான் சுரேன்.
‘ப்ச்!’ என சலித்த மது, குறுக்கும் நெடுக்கும் சில அடிகள் நடக்க, ஒரு அலங்கார பூச்சாடி அவள் கண்ணில் சிக்கியது.
கட்டியிருந்த கைகளுடனே லாவகமாய் அதை கையில் ஏந்தியவள் வேகமாய் கண்ணாடி சுவரை நோக்கி செல்ல, அவள் நோக்கம் புரிந்தவனாய், “என்ன? கண்ணாடியை உடைச்சுட்டு, அதுக்கப்பறம் சத்தம் போட்டு ஆளுங்களை கூப்பிட போறியா?” என்றான் சுரேன்.
“ஆமா” என்றவள், அதை செய்ய முன்னேற, “அதுவும் வேஸ்ட் தான்! இது ‘அன்ப்ரேக்கபில் கிளாஸ்” என முட்டுக்கட்டை போட்டான் சுரேன்.
சலித்துப்போனவள், தொய்வுடன் அமர, அவள் பார்க்காத நேரம் அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான் சுரேன். அதை அறியாதவள், அங்கிருந்து தப்பிக்க ஏதேனும் மார்க்கம் கிட்டுமா என ஆராய்ந்துக்கொண்டிருந்தாள்.
கண்ணாடி சுவர் வழியே இரவின் இருளில் தூரத்தில் இருந்த பல விடுதிகளில் மின்விளக்குகளின் வெளிச்சம் கண்ணில் பட, அதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தவளுக்கு, யாரோ நடந்து போவது தெரிய, சடுதியில் எழுந்தவள், கட்டியிருந்த கைகளை தூக்கி ஆட்டி, குதி குதியென குதிக்க, அதை கண்ட சுரேனுக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது.
குதிப்பதையும், கைகளை அசைப்பதையும் நிறுத்தாதவள், மேலும் மேலும் செய்ய, சுரேன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“சும்மா உட்காந்துருக்குறதுக்கு எழுந்து கை அசைச்சா, யாராவது பார்த்து உதவிக்காவது வருவாங்க” என்றாள் சுரேனிடம்.
அவளை பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பியவன், “அதுவும் வேஸ்ட் ட்ரை தான்!” என்றான் சிரிப்பை மறைத்து.
“ஏன்….????”
சுரேன், “பிகாஸ், இது ‘டூ வே மிரர்’. நம்மளால வெளில இருக்குறதை பார்க்க முடியும்! பட் வெளில இருக்கவங்களுக்கு, இட்ஸ் ஜஸ்ட் அ மிரர் டு ஸீ தேர் ஃபேஸ்” என்றான்.
அதை கேட்டதும், “எந்த கிறுக்கன் இதை டிசைன் பண்ணது?” என கத்தினாள் மது.
சுரேன், “நாந்தான்!”
“ஏன்ய்யா? ஏன் இப்படி?” அலுத்து போனவள் கேட்க, தயங்கிக்கொண்டே, “அ…து…! ஹனிமூன் வர கப்பில்-க்கு நல்லா வச…தியா… ரொமே…ன்டிக்கா… எந்த டிஸ்டர்பென்ஸும் இல்லாம, அப்படியே இயற்கையை ரசிச்சுக்கிட்டே….” என சுரேன் மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்த,
“ஓஹோ! சாருக்கு இதெல்லாம் நல்லா தெரியும்! ஆனா, காதலை புரிஞ்சுக்க மட்டும் தெரியாதுல?” என்றாள் மது காட்டமாய்.
சுரேன் குனிந்த தலை நிமிராது, இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க, பதில் சொல்லாது இருப்பவனை கண்டு ஆத்திரம் கொண்டவள், “முதல்ல நிமிர்ந்து என் முகத்தை பாருடா” என்றாள் அதட்டலாய்.
மதுவின் மரியாதையற்ற விளிப்பிலும், அழைப்பிலும், வெடுக்கென நிமிர்ந்து அவள் முகம் பார்த்தது அவனது விழிகள்.
ஜெயதேவுக்கும் ராஜகோபாலுக்கும் ‘தாங்கள் கடத்தப்பட்டோம்’ என்ற உணர்வே இல்லை. சிறுபிராய கதை முதல், நடுவே அவர்கள் பிரிந்திருந்த காலத்தில் நடந்த விடயங்கள் எல்லாம் கதை கதையாய் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டபடி அந்த இரவு பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர்.
நடுநடுவே கடத்தப்பட்ட நினைவு எட்டிப்பார்க்க, “எப்படிடா இங்கிருந்து வெளில போறது? எவன் இந்த வேலையை பார்த்ததுன்னு கூட தெரியல” என்றார் ராஜகோபால்.
“எனக்கென்னவோ, இந்த கடத்தலை என் பொண்டாட்டி தெய்வா தான் நடத்திருக்கான்னு என் எட்டாம் அறிவு எகிறி குதிச்சு சொல்லுது” என ஜெயதேவ் சொல்ல,
“அப்படியா ஜெயா? தங்கச்சியா பண்ணிருக்கும்? ஆனா, எதுக்கு பண்ணிருக்கும்?” என்று ஆர்வமாய் வினவினார் ராஜகோபால்.
“எல்லாம் நம்ம பெத்ததுங்க ஒன்னு சேரத்தான் இருக்கும்! அவ ஏதாவது ப்ளான் போட்டுருப்பா! இல்லன்னா நீ எங்களை இங்க வர சொன்னப்போ உடனே வரேன்னு கிளம்பிருக்க மாட்டாளே” என்றார் பெருமையாய்.
“அப்படி கூட இருக்குமோ? எப்படியோ ஜெயா, நல்லபடியா எல்லாம் முடிஞ்சா சரி” என்று ராஜகோபால் சொல்ல,
“நீ வேணா பாரு! இந்நேரம் என் பொண்டாட்டி பக்காவா ப்ளான் போட்டு தெறிக்க விட்டுட்டு இருப்பா!” என்றார் ஜெயதேவ்.
“நான் எங்கன்னு போய் தேடுவேன்! ஏதுன்னு சொல்லி தேடுவேன்! ஒரே ஒரு புருஷனை இப்படி தொலைச்சுட்டு உட்காந்துருக்கேனே! ‘மாலத்தீவை’ பார்த்ததே இல்லையேன்னு ஆசையா கிளம்பி வந்தேனே! இப்படி குடும்பமா தொலைஞ்சு போவோம்ன்னு தெரிஞ்சுருந்தா, மாலாவும் வேணாம், கமலாவும் வேணான்னு ரொட்டி தட்டிக்கிட்டு ஊருப்பக்கமே இருந்துருப்பேனே!”
மூக்கை சிந்தி சிந்தி புலம்பிக்கொண்டிருந்தார் ஜெயதேவ் ‘ஜேம்ஸ்பாண்ட் 007’ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த தெய்வானை.
லட்சுமி தான் அருகே அமர்ந்து சமாதானம் செய்ய வேண்டியதாய் போனது.
“அழாதீங்க அண்ணி! எல்லாரும் ஒண்ணா காணோம்ன்னா கண்டிப்பா எங்கயாவது பக்கத்துல தான் போயிருப்பாங்க… இது நம்ம இடம் தான்! நல்லா தேடுவோம்” என்று சொல்ல,
“எல்லா இடமும் தான் பார்த்தாச்சே! இனியும் எங்க பார்க்க?” என்றார் தெய்வா.
“ப்ச்! காலைல திறப்புவிழாவை வச்சுக்கிட்டு இப்போ போலிஸ்கிட்ட போகவும் முடியாது! ரெசார்ட்டுக்கு கெட்ட பேர் வந்துடும்!” என சலித்த லட்சுமி, “சிசிடிவி வைக்க ஒரு வாரம் ஆகும்ன்னு நேத்து தான் சுரேன் சொல்லிட்டு இருந்தான்! அதுக்குள்ள இப்படி ஆகும்ன்னு கனவா கண்டோம்?” என தன் பங்கிற்கு புலம்பினார்.
அந்நேரம் லட்சுமியின் அலைபேசி ஒலிக்க, ஒளிர்ந்த புது எண்ணை கண்டு தயக்கமாய் அழைப்பை ஏற்றார் லட்சுமி.
மறுப்பக்கம், “என்ன ஆன்ட்டி, எல்லாரும் ஜாலியா மால்தீவ்ஸ்’ போயிருக்கீங்க போல? சந்தோஷமா இருக்கீங்களோ?! இருக்கக்கூடாதே!!!” என நக்கலாய் ஒலித்தது பிரகாஷின் குரல்.
“என்னை யாருன்னு தெரியலையோ? நாந்தான் பிரகாஷ் பேசுறேன்! பிரகாஷ் வைத்தீஸ்வரன்!!! உங்க பொண்ணை, பொண்ணுக்கேட்டு உங்க வீட்டுக்கு வந்தேனே! அதே பிரகாஷ்!” என்று ஆர்ப்பாட்டமாய் சிரித்தான் அவன்.
தெய்வா, “என்ன? என்ன?” என கேட்க, மொபைலை ஸ்பீக்கரில் போட்டார் லட்சமி.
“உங்க பொண்ணை கேட்டதுக்கு ரொம்ப பிகு பண்ணீங்களே? உங்க பொண்ணை போய் பார்த்து பேசுனா, என்னவோ அவதான் உலகஅழகி மாறி அத்தனை பிகு பண்ணிக்கிட்டா!!!” என வன்மமாய் சொன்னவன்,
“இந்த பிரகாஷ் யாரு? என் வொர்த் என்ன? நான் நினைச்சா என்ன எல்லாம் செய்ய முடியும்ன்னு நாளைக்கு காலைல பொழுது விடியும்போது உங்க எல்லாருக்கும் தெரிய வரும்! அதுவரைக்கும் நான் என்ன செய்வேனோன்னு பயந்தே தூக்கத்தை தொலைங்க” என்றவன் பட்டென அழைப்பை துண்டித்தான்.
அவன் பேச்சை திகிலுடன் கேட்ட இருவருக்கும், நடந்த காரியத்தின் வீரியம் பயத்தை கிளப்பியது.
தன்யா தன் காதல் கதையை ரசிப்புடன் ப்ரியாவிடம் சொல்ல, அவளுக்கும் ஆதிக்கும் நடந்த முதல் திருமண நினைவுகளை பகிர ஆரம்பித்தாள்.
“எங்க காலேஜ்ல எல்லா ஊருல இருந்தும், எல்லா விதமான பசங்களும் படிச்சாங்க! அதுல ஒருத்தன் கர்நாடகா பக்கம் ஒரு மலைகிராமத்துல இருந்து மெரிட்’ல செலெக்ட் ஆகி எங்க காலேஜ்க்கு வந்துருந்தான். அவனுக்கும் தேவாக்கும் ரொம்ப நல்ல பழக்கம்! தேவா பொதுவாவே எல்லார்க்கிட்டயும் ரொம்ப பிரண்ட்லி! அவரை எல்லாருக்குமே சட்டுன்னு பிடிச்சுடும்” என்ற தன்யா, அவன் நினைவில் பூக்க தொடங்கிய முகத்துடன் மேற்கொண்டு சொன்னாள்.
“அவனோட ஊர் வழக்கப்படி, வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே ” திருவிழா மாறி நடக்குமாம்! அதுல என்ன ஸ்பெஷல்ன்னா, கல்யாணம் செஞ்சுக்க விரும்புற ஜோடிகள் சாமி சிலைக்கு முன்னாடி வரிசையா நிப்பாங்க! பூசாரிக்கு அருள் வந்து சாமியாடிக்கிட்டே, அர்ச்சனை செய்வாரு! இறுதியா, சாமி கழுத்துல இருக்க கருகமணி மாலையை எடுத்து, திரும்பி பார்க்காம அவர் வீச, அது எந்த பையனோட கழுத்துல விழுகுதோ, அந்த பையன் விரும்புற பொண்ணோட அப்போவே அங்கேயே கல்யாணம் நடக்கும்! அப்படி கல்யாணம் பண்ணிக்குறவங்களுக்கு கடவுளோட பரிப்பூரண ஆசீர்வாதம் கிடைச்சதா அர்த்தமாம்! அவங்க தீர்க்க ஆயுளோட, ஆயுசுக்கும் சேர்ந்தே இருப்பாங்கன்னு ஐதீகம்!” என்றாள் தன்யா.
பிரியா, “புல்ஷிட்…” என்று சிரிக்க,
தன்யா, “தேவாவும் இப்டிதான் சொன்னாரு! ஆனா, எனக்கு இதை நேருல பார்க்கணும் போல ஆசையா இருந்துச்சு! அதெப்படி பூசாரி வீசுற மாலை, சரியா பையனோட கழுத்துக்கு போகும்? அதே மாறி, திருமணமாகனும்ன்னு வேண்டிக்கிட்டு நிக்குற ஆளுங்களை தாண்டி வேற யார்க்கிட்டயும் அந்த மாலை குறி தப்பி போகாதுன்னு அவன் சொன்னப்போ, ஐ வாஸ் சோ க்யூரியஸ் டு விட்னஸ் தட்!!!” என்றாள்.
பிரியா குறுக்கிடாமல் இருக்க, “அதனால தேவாயை ரொம்ப கன்வின்ஸ் பண்ணி, அந்த பையன் கூட அவன் மலைகிராமத்துக்கு நாங்க போனோம்! திருவிழா நாங்க எதிர்ப்பார்த்ததை விட ரொம்ப க்ராண்ட்டா நடந்துச்சு! கடைசியா கல்யாணம் செஞ்சுக்க விரும்புறவங்களை சாமிக்கு முன்ன வந்து நிக்க சொன்னப்போ, எனக்கும் என் தேவாக்கூட ஜோடியா அங்க நிக்கணும்ன்னு ஒரு ஆசை! தேவாக்கு இதுல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை! என்னோட ஆசைக்காக அவர் என்னோட வந்து நின்னாரு” என்று நிறுத்தியவள்,
“நான் மட்டும் இல்லை! அங்க இருந்த யாருமே எதிர்ப்பார்க்கல, பூசாரி வீசுன கருகமணி மாலை தேவா கழுத்துல போய் விழுகும்ன்னு! அந்த நிமிஷம், அந்த நொடி… எனகென்னவோ அந்த கடவுளே எங்களை ஆசீர்வாதம் செஞ்சுட்டதா நான் பீல் பண்ணேன்! ஊர் வழக்கத்துக்காக, அந்த கருகமணி மாலையை சாமி காலடில வச்சு வாங்கிட்டு என் கழுத்துல போட்டாரு! அப்படிதான் எங்களோட முதல் கல்யாணம் நடந்துச்சு!” என்றாள் தன்யா.
கண்கள் கனவில் மிதக்க, அந்த நாட்களுக்குள்ளேயே சென்று பேசிக்கொண்டிருந்த தன்யாவை பார்க்கையில், ஆதியின் மீதான அவளது காதல், தெளிவாய் தெரிய,
“ரொம்ப லவ்வா?” என்று பிரியா கேட்டதும்,
சற்றும் தாமதிக்காது, “ரொம்….ப! ரொம்ப!” என்றாள் தன்யா.
“இன்னமும் அந்த லவ் இருக்கா?” என்று பிரியா கேட்க,
தன்னை மீறிய வேகத்தில், “எப்பவுமே இருக்கும்” என்ற தன்யாவை கூர்மையாய் பார்த்தவள்,
“அப்பறம் எதுக்காக பிரிஞ்சீங்க?” என்றாள் பிரியா.
சட்டென்று வந்த அவளது கேள்வியில் சில நிமிடங்கள் பேச்சின்றி போனாள் தன்யா.