சரண் – 26
மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு..
“இப்போ எப்படி இருக்குடா..? படுக்குறியா… இல்ல இப்படியே இருக்கியா.?” என்றவன் வருடலை மட்டும் நிறுத்தவில்லை.
“ம்ம்.. இப்போ நல்லாருக்கேன். கால் தான் ஊன முடியல, முள்ளு இருக்கும் போல, சுருக் சுருக்குன்னு குத்துது. ஆமா இது தான் உங்க வீடா.. மகிக்கா படத்துல காட்டின மாதிரி இல்லையே, அரண்மனை மாதிரி இருக்கும் அவங்க காட்டினது. நாம மேல இருக்கோமா.. இங்க இருந்து கீழ பார்க்கலாமா.. விழுந்துட மாட்டோமா..” என வரிசையாக கேட்க
ஹா..ஹா.. என வாய்விட்டு சிரித்தவன், “அப்போ உன்னை ஓரளவுக்கு ரெடி பண்ணிதான் வச்சிருக்கா அந்த அரைகுறை டாக்டர்.” என்று அவள் தலையில் தட்டிவிட்டு, “இது எங்க வீடு இல்ல, நம்ம வீடு. இனி அப்படித்தான் சொல்லிப் பழகனும் சரியா. இது நம்ம கம்பெனி ஃப்ளாட். கம்பெனிக்கு வர ஃபாரின் பையர்ஸ் வந்தா இங்கதான் தங்க வைப்போம். இப்போ இங்க யாரும் இல்ல. அதோட உன்னை இப்படியே நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு போகக் கூடாதுன்னு ஆச்சி உத்தரவு. முறைப்படி அவங்க எல்லாரும் வந்துதான் உன்னை அங்க கூப்பிட்டுக்கனும்ன்னு சொன்னாங்க. அதனாலதான் இங்க இருக்கோம்..” என்றவன், சற்று கீழிறங்கி அவளின் காலை எடுத்து மடியில் வைக்கப் போக,
“ஏய் என்ன பன்றீங்க, காலெல்லாம் தொட்டுட்டு, நானே எடுத்துப்பேன் விடுங்க. நீங்க தள்ளி உட்காருங்க..” என்றுக் காலை இழுத்துக்கொள்ள முயல, அவன் விடவே இல்லை.
“ஹேய் இதுல என்ன இருக்கு.. எனக்கு நீ எவ்வளவு செஞ்சிருக்க..? நான் யாருன்னு தெரியாதப்பவே அவ்வளவு செஞ்ச. இப்போ நீ என் பொண்டாட்டி. பொண்டாட்டி காலை புருஷன் பிடிச்சா என்ன.? இங்க இருக்குறவங்கதான் வித்தியாசம் பார்க்குறாங்கன்னா, நீயுமா..? அங்க கிராமத்துல எல்லாம் நான் பார்த்த வரைக்கும் யாரும் இப்படி இல்லையே.. பொம்பளைங்களுக்கு சமமா ஆம்பளைங்களும் வீட்டு வேலை செய்றதைப் பார்த்துருக்கேன். நீ இப்படி சொல்ற..” என்றவனிடம்,
“அது.. அது அப்படி இல்லை.. அவங்க புருஷன் பொண்டாட்டி..” என இழுக்க, “அப்போ நாம யாரும்மா..” எனக் கடுப்பாகக் கேட்க, “இல்ல.. வந்து,,” என அவள் தடுமாற, “இங்க பாரு.. என்னை நேரா பாரு..” என அதட்ட
விழுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அவளிடம் காட்டி “இது என்னனு தெரியுதா..? உங்க பாரம்பர்ய தாலி, உன்னோட தாத்தா இந்த மாங்கல்யத்தை கொடுத்து, இதைத்தான் என் பேத்தி கழுத்துல கட்டனும்ன்னு கேட்டுக்கிட்டார். அவர் கேட்டுக்கிட்டதால நான் இதைச் செய்யல. நீ இங்க வந்த பிறகு, நீ உங்க வீட்டு ஞாபகமா எதுவும் கொண்டு வரலன்னு நினைச்சிடக்கூடாது. நான் இருக்குறவரை இதுவும் உன்கூட இருக்கும். அதுதான். நீ இப்படி உளறினது இதுதான் கடைசியா இருக்கனும். புரியுதா..?” எனக் காட்டமாகப் பேச,
“ம்ம்.. ம்ம்..” என்றவள் “உங்களுக்கு சாதாரணமாவே பேசத் தெரியாதா..? எப்போ பாரு என்கிட்ட சண்டதான் போடுறீங்க. நீங்களும் இப்படி பேசக்கூடாது சரியா..?” என்றவள் “அங்க பேசுனீங்களா..? மகிக்காவுக்கு என்ன..? எதுக்கு அன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு போனாங்க. நான் கேட்கவே இல்ல.. உடம்புக்கு முடியலையா..?” என்றதும்,
“பார்ரா.. என்னமா பேசுது இந்த வாய்.. உன் கூட சண்ட போடனும்ன்னு எனக்கு என்ன வேண்டுதலா. என்னை அவ்ளோ டென்சன் பன்ற நீ.. அதுதான் நானும் கத்திடுறேன். இனி நோ டென்சன் ஓகே. மகி கன்சிவா இருக்காளாம். அதனாலதான் டாக்டர்கிட்ட செக்கப்க்கு வந்தாங்க அன்னைக்கு.” என்றதும் அவள் பேய் முழி முழிக்க
“என்ன.. எதுக்கு அப்படி முழிக்கிற..” எனவும், “இல்ல நீங்க பேசுறதுல பாதி புரியல, அப்போ ஏதோ ஃபாரின், பையர்ஸ், ஃப்ளாட்ன்னு எல்லாம் சொன்னீங்க. அது தேவையில்லைன்னு விளக்கம் கேட்கல. ஆனா இந்த கன்சிவ்ன்னா என்ன? குணப்படுத்த முடியாத நோயா..? அக்கா எப்படி தாங்குவாங்க. அவங்களும் டாக்டர்தான. முன்னாடியே கவனிக்கலையா..?” என கவலையாகக் கேட்க, தலையில் தட்டிக்கொண்டவன் “கிறுக்கி.. கிறுக்கி” என வாய்விட்டு சிரித்தான்.
“கன்சிவ்ன்னா கர்ப்பமா இருக்கா… அதாவது மாசமா இருக்கா..? இன்னும் வீட்டுக்கு யாருக்கிட்டயும் சொல்லல, சொன்னா உடனே கிளம்பி வரச்சொல்லுவாங்க. இல்ல கிளம்பி அங்க போயிடுவாங்க. அதனால இப்போ சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டான் வெற்றி. இன்னும் மூனு நாள் தானே இருக்கு. அங்க ஆஸ்பத்திரி ஓபன் செய்ய.. அது முடிஞ்சதும் அவங்க அப்படியே போயிடுவாங்க. நாம தான் ஊருக்கு போகனும். அவ அதிகமா பயணம் செய்யக்கூடாது இல்லையா அதான். நீயும் யாருக்கிட்டயும் சொல்லிடாத” என்று அவளிடம் சொல்ல
“ஓ… நமக்காகத்தானா இதெல்லாம். ஏன் இப்படி ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்றவள், “உங்களுக்கு ஏன் என்னைப் பிடிச்சது.. நீங்க ஏன் அங்க வரனும். நான் ஏன் உங்களைப் பார்க்கனும். பாருங்க இப்போ எல்லாருக்கும் கஷ்டம்..” என ஆற்றாமையில் பேசியவளைப் பார்த்தவனுக்கு இப்போது கோபம் வரவில்லை. பதிலாக காதல் கூடிக்கொண்டே போனது. பரவாயில்லையே புரிந்து கொண்டாளே என்ற கர்வம் மெல்ல தலைத் தூக்கியது.
“உனக்கு நான் எல்லாம் சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ சொல்லு, எப்படி காட்டுக்குள்ள மாட்டின. ஏன் அப்படி ஓடிவந்த.? நாங்க வந்ததுனால உன்னைக் காப்பாத்த முடிஞ்சது. வேற யாராவது இருந்திருந்தா என்னாகிருக்கும். நீ இல்லாத என் வாழ்க்கையை நான் நினைச்சுக் கூட பார்க்க விரும்பல. சொல்லு என்னாச்சு. வழி தவறி காட்டுக்குள்ள போயிட்டியா..? மிருகம் எதுவும் விரட்டிச்சா..? என்ன நடந்தது..” என்றவனின் குரல் மீண்டும் கடினமாக ஒலிக்க, பெண்ணுக்கு அன்றைய நாளின் நினைவில் மேனி நடுங்கியது.
தன் காலைப் பிடித்திருந்தவனிடமிருந்து அதை உருவியவள், அவன் மடியில் தலையைச் சாய்த்து, இடுப்பைச் சுற்றிக் கரத்தைப் போட்டு அவனோடு ஒட்டிக் கொண்டாள். மனையாளின் வித்தியாசாமான செய்கையில் “என்னடா.. என்ன? சொன்னாதானே தெரியும்.. பாரு எவ்வளவு பிரச்சினைன்னு. உன்னை அங்க கிராமத்துல இருந்து மஹாராணி மாதிரி கூப்பிட்டு வரனும்னு நாங்க நினைச்சோம். ஆனா நடந்தது.. ம்ச்ச்.. அதை விடு நீ சொல்லு..” என்று ஆற்றாமையில் பேசியவனும் அவளை அணைத்துக் கொள்ள
கணவனின் வருடலிலும், பேச்சிலும் சற்று வலுப்பெற்றவள், எதையும் மறைக்காமல், அன்று நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள். இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் நடுங்கியது பெண்ணுக்கு. சொல்லி முடித்து வெகுநேரம் ஆகியும் அவன் எதுவும் பேசாமல் இருக்க, நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் முத்தமிட்டவன் “வர்ரியா.. இங்க இருந்து கீழப் பார்க்கலாம். குழந்தைங்க விளையாடிட்டு இருப்பாங்க..” எனவும்,
அவன் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, அங்கு ஒன்றையும் கண்டுப்பிடிக்க முடியாமல் “சரி” என்று எழுந்து நின்றாள். மீண்டும் அவளைத் தூக்கியவன், “என் கழுத்தைச் சுத்திக் கையைப் போட்டுக்கோ. நீயும் பிடிச்சா தான் விழாம இருக்க முடியும்..” என்று அவளைச் செய்ய வைத்தவன், அங்கிருந்த பால்கனியில் இருந்த ஊஞ்சலில் உட்கார வைத்தான்.
ஏழாவது தளத்தில் இருந்து கீழேப் பார்க்க எப்படி இருக்கிறதாம் பெண்ணுக்கு. உலக அதிசயத்தைப் பார்த்ததுபோல, பரவசத்துடன் வேடிக்கைப் பார்த்தாள். அதிலும் அங்கு ஊஞ்சலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இவ்ளோ உயர்த்துல வீடா.? அம்மாடியோவ் இதைக் கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க.. ஆமா இங்க எப்படி ஊஞ்சல் வைக்கனும்ன்னு தோனுச்சு..” என ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“மணியும், மங்கையும் இங்க வந்து, இந்த வீட்டைப் பார்த்ததும் கேட்ட ஒரே விசயம் ஊஞ்சல் வேனும்ன்னு தான். அப்புறம் வெற்றி வந்தா இங்கதான் தங்குவான். அவனுக்கு எப்பவும் இந்தமாதிரி ஊஞ்சல்ல உட்கார்ந்து படிக்கிறது ரொம்ப பிடிக்கும். அதனால அப்பா உடனே செஞ்சிட்டார். உனக்கும் பிடிக்குமா..?” என்றவனிடம்,
“ம்ம்ம்… நல்லாருக்குதான… எனக்கும் ரொம்ப பிடிக்கும். அங்க ஆடு மேய்க்க போகும் போது மரத்துல கட்டி ஆடுவேன். அப்புறம் ஆத்தங்கரையில கட்டி, ஊஞ்சல்ல ஆடிட்டே அப்படியே தண்ணில விழுவேன். நல்லாருக்கும் தெரியுமா..? ஏன் உங்களூக்கு பிடிக்காதா..?” என்றவளைத் தூக்கி தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டான்.
“ம்ம்.. இப்படி இருந்தாதான் ஊஞ்சல் பிடிக்கும். வெற்றிக்கு புக் படிச்சிட்டே ஊஞ்சல்ல ஆட பிடிக்கும். எனக்கு உன்னைப் படிச்சிட்டே ஊஞ்சல் ஆட பிடிக்கும்.. படிக்கட்டுமா..? ம்ம்..” பிங்கழுத்தில் சுழன்ற குழலில் முத்தமிட்டுக் கேட்க,
கணவனின் முத்தத்தில் சிலிர்த்தவள் “ம்ஹூம்.. எல்லாரும் பார்க்குறாங்க.. உள்ள போகலாமா.?” என
“ஓ.. போகலாமே.. உள்ள போய் மீதியை வச்சுக்கலாம். என் காட்டு ராணி விருப்பமே என் விருப்பம்..” என மேலும் மேலும் அவள் கழுத்தில் முத்தமிட
“சும்மா இருங்க.. உங்ககிட்ட எனக்கு கேட்க நெறைய இருக்கு.. அப்புறம் சொல்லாம வந்ததுக்கு ஒரு சண்டையும் போடனும். சொல்லுங்க உங்களுக்கு என்னை எப்படி பிடிச்சது. நீங்க அங்க எப்படி வந்தீங்க..” என்றுக் கேள்வியாகக் கேட்க,
“இதைப்பத்தி மகி ஒன்னும் சொல்லலயா..” என்றவனிடம் “எல்லாமே மகிக்கா சொன்னா நீங்க என்ன சொல்லுவீங்க. மகிக்கா என்ன சொல்லனுமோ அதைச் சொன்னாங்க. இப்போ நான் கேட்டதை நீங்க சொல்லுங்க..” என மிரட்ட,
“அம்மாடியோவ்.. பயமா இருக்கே..” என பயந்தது போல நடித்தவன், “உனக்கு சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்லப் போறேன். ஆனா நீ அம்மாவையோ மங்கையையோ தப்பா நினைச்சிடக் கூடாது. இது உன்னோட குடும்பம்.. இங்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஒருத்தர் க்ஷ்டப்பட்டாலும் பார்த்துட்டு சும்மா இருக்காம, அவங்களுக்கு ஆறுதல் சொல்லனும். செய்வியா..? எனக்காக ம்ம்ம்” என்றதும்,
“இப்போ நீங்க தான் என்னைத் தள்ளி வைக்கிற மாதிரி பேசுறீங்க. எனக்காகா, நான் யாரு? எப்படி பட்டவ, உங்க குடும்பத்துக்கு ஒத்து வருவேனா.? இல்லையா.? இப்படி எதையும் யோசிக்காம.? எனக்காக ஒரு குடும்பமே கஷ்டப்படும் போது நான் மட்டும் எப்படி சுயநலவாதியா இருப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா, என்மேல் நம்பிக்கை இருந்தா சொல்லுங்க. இல்லாட்டி வேணாம்.” என அவள் சிறிதாகிவிட்ட குரலில் பேச,
“ஹேய் அப்படி இல்லடா.. உன்னைப்போய் நான் அப்படி நினைப்பேனா.? நான் முழுசா சொன்னாதான் ஏன் இப்படி சொன்னேன்னு உனக்கு புரியும்.” என்றவன் அவர்கள் குடும்பத்தைப் ப்ற்றி அனைத்தையும் சொன்னான். கேட்டவளுக்கோ வெற்றி மேல் பரிதாபமும், வனிதாவின் மேல் கடுங்கோபமும் வந்தது. ஆனால் அதை முகத்தில் துளியும் காட்டவில்லை.
சிறு சுனக்கத்தைக் காட்டினாலும் கணவன் வருந்துவான் என்றுத் தெரியும் போது எப்படி செய்வாள். அவன் சொல்லி முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தாள். முடித்ததும் “அத்தை இனி அங்கயே இருக்கட்டும். உங்க அண்ணாவுக்கு இதுவரைக் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் இனியாச்சும் கிடைக்கட்டும்.. நீங்க என்ன நினைக்குறீங்க..” என
“ம்ம்.. மகி கர்ப்பமா இருக்குறதுனால அம்மா அப்படி இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா அப்பாவையும், தாத்தாவையும் விட்டுட்டு இருக்குறது கஷ்டம். கொஞ்ச நாள் கழிச்சு இதைப்பத்தி பேசுவோம்..” என்றவன் “ஆமா அதென்ன உங்க அண்ணன்னு சொல்ற. மாமான்னு சொல்லு.. மகி எப்படி கூப்பிடுறா பார்த்தியில்ல.. நீங்க எப்படி கூப்பிடுவீங்க..”
“ம்ம் நாங்க பாவான்னு கூப்பிடுவோம். கட்டிக்கிட்டவங்கள மச்சான்னு கூப்பிடுவோம்..” முதலில் ‘வாவ்’ என்றவன், இரண்டாவதாக சொன்னதில் ‘அய்யே’ என முகத்தைச் சுருக்கினான். அதில் சிரித்தவள் “அதுதான் கூப்பிடல, உங்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோன்னு..”
“பிடிக்காம என்ன..? இந்த பாவா நல்லா இருக்கே, அதையே வச்சுக்கலாமா.? ஒன்னு செய்யலாம் என்னை பாவான்னு கூப்பிடு அது அப்படியே என்னை நீ கட்டிக்கிட்ட மாதிரி ஃபீல் ஆகுது. இந்த மாமாவை வெற்றிக்கு வச்சுக்கோ எப்படி என் ஐடியா.. சூப்பர்ல்ல. ரைட் இப்படியே வச்சுக்கலாம். என்னை பாவா சொல்லு, வெற்றியை மாமா சொல்லு.” என ஒரு தீர்மானத்திற்கு வர,
“சின்னபிள்ளைங்க மாதிரி பேசுறீங்க..” எனச் சிரிக்க, “சரி போதும். அங்க பாரு அந்த எதிர்த்த ஃப்ளாட் கிழவி இங்கையே பார்க்குது. வா உள்ள போகலாம். கண்ணு வச்சிடப்போகுது..” என அவள் மறுத்துப் பேசும் முன் மீண்டும் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் விட்டான்.
“காஃபி வைக்குறேன், உனக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வர்ரேன். இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வருவாங்க. எங்க வலிக்குது, எப்படி வலிக்குது எல்லாம் மறைக்காம சொல்லு, கால்ல எங்க முள்ளு இருக்குன்னும் சொல்லு எடுத்து விட்டுடுவாங்க..” என அவன் வரிசையாகச் சொல்ல, அவளுக்கோ மறுக்க மனம் வரவில்லை. சரியென்று தலையாட்டவும், புகழின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
எடுத்துப் பார்க்க வெற்றி என்று வர “சொல்லு வெற்றி.. அங்க ஒன்னும் பிரச்சினை இல்லையே.. இரு அவக்கிட்ட கொடுக்குறேன்..” என மனைவியிடம் கொடுக்க,
“சொல்லுங்க மாமா..” என இவள் ஆரம்பிக்க, “அடேங்கப்பா ஒரே நாள்ள எவ்வளவு முன்னேற்றம்..” எனச் சிரித்துவிட்டு, அங்குள்ள நிலவரங்களைச் சொல்லி, அவளின் நலத்தையும் விசாரித்துவிட்டு, மீண்டும் புகழிடம் பேசினான்.
“என்னடா சொன்னாளா.? எதுக்கு அப்படி ஓடிவந்தாளாம்..” என்றதும், “விசாரிச்சிட்டேன் டா..” எனப் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்து “எவன்டா ஃபாரஸ்ட்காரன், அவன்தான் ரூபியை பிடிச்சி வச்சி பயமுறுத்திருக்கான். பயத்துல தான் அப்படி ஓடி வந்துருக்கா.. நீ கையை உடைச்சும் அவன் அடங்கலன்னா, இனி அவன் இருக்க வேண்டிய இடம் அது இல்ல. நம்ம மில்லோட கொடவுன். நீ அவனை பேக் பண்ணி அனுப்பிவிடு. மத்ததை நான் பார்த்துக்குறேன். எவ்வளவு தைரியம் அந்த நாய்க்கு..” என வார்த்தைகளைக் கடித்துத் துப்ப
“ஓ.. அவனா.. ம்ம் சரி விடு நான் பார்த்துக்குறேன்.. ரெண்டு நாள்ள அபியை ரெடியாக்கிடுவியா.. நம்ம ப்ளான்ல எந்த சேஞ்சும் கிடையாது. நீ என்ன செய்வியோ அவள் ஹெல்த்தை சரியாக்கி இங்க அழைச்சிட்டு வா.. மகி வேற அம்மாவை ரொம்ப தேடுறா.. எங்கிட்ட சொல்லல என்றாலும், எனக்குப் புரியுது. வீட்டுல சொன்னா எல்லாமே கொலாப்ஸ் ஆகிடும். சோ ஆல்ரெடி ப்ளான் செஞ்ச மாதிரியே எல்லாமே நடக்கட்டும். என்னடா நான் சொல்றது சரிதான.. இல்ல நீ வேற ப்ளான் வச்சிருக்கியா..” எனக் கேட்க
“இல்ல.. இல்ல நானும் மகியை யோசிச்சேன். அதனால இதே ப்ளான் இப்படியே இருக்கட்டும். இப்போவே ரூபி ஆல்ரெடி ஓகே ஆகிட்டா.. சரி பண்ணிடலாம். நீ மகியைப் பார்த்துக்கோ..” என வைத்துவிட்டவனின் சிந்தனைகள் மொத்தமும் மனைவியிடம் சென்றது. அவளை எப்படி சரிசெய்வது என்று.