அதற்குள் தயாராகி கீழே வந்த விக்ரம் , வரு கிளம்பாமல் சோஃபாவில் படுத்திருப்பதைப் பார்த்து பதட்டமாக அருகில் வந்தான். சங்கரி தான் ,
“பேரா… உன் தங்கச்சிய நீ மட்டும் போய் பார்த்துட்டு , வரும் போது உங்கம்மாவையும் கையோட அழைச்சிட்டு வா … இல்ல மகளுக்கு இன்னும் சாப்பாடு ஆக்கிப் போட ஆசையிருந்தா அங்கேயே இருக்கச் சொல்லு …. நான் என் பேத்தியப் பார்த்துக்குவேன் .
வரு அருகில் அமர்ந்துக் கொண்டவன் , “என்ன என்ன செய்யுது … ரிது …ரிது..” என எழுப்ப , அதற்குள் அவர்களது கார் டிரைவர் வந்து அழைத்தார். பரணிப் பார்த்தவர் ,
“அவளுக்கு ஒன்னுமில்ல , நீ கிளம்பு ..முடிஞ்சா அக்காவையும் இன்னைக்கே கூட்டிட்டு வா..”
மெல்லக் கண் விழித்த வரு எழுந்து அமரப் பார்க்க , பரணியும் சங்கரியும் வாசலுக்குச் சென்றனர்.
அவனது டீ ஷர்ட்டைப் பிடித்துக் கொண்டவள் ,
“விக்கி … நான் உன் கூட ரொம்ப நாள் இருப்பேன் …பயப்படாதே … வித்யாவப் பார்த்துட்டு வா ….”
“இப்ப நாம டாக்டர் பார்த்துட்டு நாளைக்கு கூடப் போகலாம்… ஃபிளைட் கேன்சல் பண்றேன்…. ” என மொபைலை எடுக்க , அதை தடுத்தவள் ,
“நமக்காக ஆசையோட காத்துட்டுருப்பா… இந்த நேரம் அவள வருத்தப்படுத்தக் கூடாது … நீ பார்த்துட்டு வா … நான் பாட்டிக்கூட யும் அத்தைக் கூட யும் ஆஸ்பிட்டல் போறேன்.… விக்கி அப்பாகிட்டயும் அண்ணா கிட்டயும் ஒன்னும் சொல்லாத … பளீஸ்..” என்றுப் பலவாறாகப் பேசி அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.
அவன் கிளம்பியதும் பரணியும் சங்கரியும் வருவை மருத்துவமனை அழைத்துச் செல்ல முனைய தன் மருத்துவக் கோப்புகளை எடுத்துக் கொண்டு வந்தாள். அவர்கள் மகப்பேறு மருத்துவமனையை அடையவும் , அதுவரை தனக்கு குரல் பிரச்சினை வரக் காரணமாக இருந்த அந்த விபத்து தான் … இப்போதும் உடலில் ஏதோ செய்கிறதோ என்ற எண்ணத்திலயே இருந்தவளுக்கு … இப்போது வேறு காரணங்கள் பிடிபட , பரணிக்கையைப் பிடித்துக் கொண்டவள் ,
“அத் …தை… இங். இங்க வந்துருக்கோம் … அப்ப அப்ப ….” என மகிழ்ச்சியில் திக்கி திணறி வார்த்தைகளோடு கண்ணீரும் வர , அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு ,
“ஏன் மா அழற … எனக்கும் அத்தைக்கும் அந்த சந்தேகம் தான் … எதுக்கும் டாக்டரப் பார்த்து உறுதிபடுத்திட்டு எல்லாருக்கும் சொல்லிக்கலாம்னு தான் யாருகிட்டயும் இப்பவே சொல்லல…. ஏன் உன் புருஷன் கிட்டயும் நீதான் முதல்ல சொல்லணும்னு தான் அவங்கிட்டயும் விவரம் சொல்லல”
அதன் பிறகு மருத்துவரைப் பார்த்து பரிசோதனைகள் எடுத்து அந்த முடிவுக்காக காத்திருக்கையில் பரணிக்கு விக்கிரமராஜாவிடமிருந்து அலைபேசியில் பாட்டியிடம் ஏதோ தகவல் கேட்டு அழைக்கவும் இருவரும் மருத்துவமனை வெளியில் சென்று பேச சென்றனர்.
மருத்துவர் அழைக்கவும் அறைக்குள் சென்ற வருவுக்கு அவர் கூறிய செய்தியில் அளவில்லா ஆனந்தம் .அவரிடம் தேவையானவற்றை எழுதி வாங்கிக் கொண்டு வந்தவளை சங்கரியும் பரணியும் எதிர்கொண்டனர் .பரணி தான் போய் மருத்துவரை பார்க்கிறேன் என்றதற்கும் வேண்டாம் என்றவள் வீட்டிற்கு செல்லலாம் என்று விட்டாள்.
ஃபோனில் யாருக்கும் தகவலளிக்க வேண்டாம் நேரில் சொல்லிக் கொள்ளலாம் என்றதால் விக்ரம் ஃபோன் செய்த போதும் சமாளித்து விட்டாள். இரவில் லதாவுடன் வீடு திரும்பிய விக்ரமை பூஜை அறை அழைத்துச் சென்று விபூதி இட்ட சங்கரி பேத்தியைக் காண அனுப்பி வைத்தார்.
” யம்மாடி மகள சீராட்டிட்ட… இப்ப மருமகளப் பாரு … நம்ம வாரிச சுமந்துட்டு இருக்கா … அவள முழுக்க முழுக்க கவனிச்சுக்கிறது உன் பொறுப்பு….” அவர் மருமகள்களிடம் பேசிக் கொண்டிருக்க ,
விக்ரம் வரவை அறிந்து கதவைத் திறந்துக் கொண்டு நின்றவள் , அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள். விக்ரம் உள்ளே வந்தவன் ,
“ரிது…. என்னாச்சு இப்போ எப்படி இருக்க … உனக்கு கஷ்டமா இருந்தா இனி சத்தமா பேச வேண்டாம். இதுவே போதும்….” என்றவாறே கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகமர்த்திக் கொள்ள ,
‘இல்லை’ என்பதாக தலையசைத்தவள் ,
“விக்கி …. எனக்கு இப்போ சத்தமா ஐ லவ் யூனு சொல்லணும் போல இருக்கு…. உங்கிட்ட பேச ஆசைப்பட்டு தான் நான் ஸ்பீச் தெரஃபி எடுத்ததே… இப்ப உன்கிட்ட மட்டுமில்ல விக்கி … ” என்றவள் , அவன் முன் எழுந்து நின்று அவன் வலக்கரம் பற்றி தன் வயிற்றின் மீது வைத்தவள்,
” இவங்க கிட்டயும் பேச ஆசையா இருக்கு விக்கி ….” என அழ , முதலில் புரியாமல் பார்த்தவன் , இப்போது புரிந்ததும் ,
“ரிது….” என்றவனுக்கும் வார்த்தைகள் வராது சைகையால் தலையசைத்துக் கேட்க , அவளும் “ஆம்” என்பதாக தலையசைக்க … அவள் வயிற்றில் முத்தமிட்டு தலை சாய்த்துக் கொண்டவனை தானும் கட்டிக் கொண்டாள் , மெளனமாக கழிந்த சில நொடிகளுக்குப் பின் ,
வேகமாக அவன் முகம் பிரித்து ,
“விக்கி உனக்குத் தெரியுமா … நீ சொன்ன மாதிரியே .. நமக்கு …..” என்றவள்… அப்படியே பேச்சை நிறுத்தி விட்டாள்.
அவளை மடியில் தாங்கியவன் , ” நமக்கு … நமக்கு என்ன மை டியர் … ” என்ன சொல்ல என யோசிக்கும் போதே அவர்கள் இருவரது ஃபோனும் அழைக்க ஆரம்பிக்க , கதவைத் தட்டிக் கொண்டு பெரியவர்களும் இருக்க , இருவருக்கும் அதற்கு மேல் தனிமை இரவில் தான் கிடைத்தது.
வீட்டின் ஒரே மருமகள் வருவை தாங்கத்தான் செய்தார்கள். இரண்டு நாளிலேயே விஸ்வனநாதன் மகளைக் காண வந்து விட்டார். மருத்துவராக மகளின் உடல்நிலையையும் ஆராய்ந்தவர் , எல்லாம் திருப்திக்கரமாக இருக்கவும் , விக்ரம் வீட்டினர் மகளை கவனித்துக் கொள்வதையும் கண்டவர் , மன நிறைவோடு கிளம்பினார்.
அவர் சென்ற இரண்டு நாளில் அரவிந்த் மட்டும் வந்து தங்கையைக் கண்டு மகிழ்ந்தவன் கிளம்புகையில் விக்ரமிடம் தனியாக ,
“மாப்ள…. தங்கச்சி நல்ல ஆரோக்யமா இருக்கா…. அவ உங்க குழந்தைய நல்லபடியா பெத்து தருவா … அவளுக்கு பண்ணின சர்ஜரிக்கோ , பிரக்னன்சிக்கோ எந்தத் தொடர்புமில்ல….” என்றவன் ஒரு பெருமூச்செடுத்து , தன் கையில் இருந்த ஃபைலை எடுத்து விக்ரம் முன் நீட்டியவன் ,
“பாப்பாவுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணதும் இந்த மெடிக்கல் ரிபோர்ட் ரெடி பண்ணிட்டேன்… என் நிலைமை எந்த அண்ணனுக்கும் வரக்கூடாது … இதை உங்களுக்கு தரணும்னு எடுத்துட்டு வரல … இது அவசியம் இல்லனும் தெரியும்… இதை என்ன செய்யணும்னு நீங்க முடிவு பண்ணுங்க….” என்றவன், அதை டேபிள் மேல் வைத்து விட்டு திரும்பி பின்னால் கைகட்டிக் கொண்டு நிற்க ,
அதைக் கையில் எடுத்த விக்ரம் , அரவிந்த் முன் வந்து நின்று, “எனக்கு என் குழந்தை முக்கியம்தான்… ஆனா என் மனைவிக்குப் பிறகு தான் … ” என்றவாறே அந்த ஃபைலை பிரிக்கக் கூட இல்லாமல் கிழித்துப் போடவும், அரவிந்த் அருகில் வந்து கட்டிப் பிடித்தவன் ,
“நான் வாறேன் …” என்று விட்டு நகர்ந்தான் . வருவுக்கு என்ன சாப்பிட்டாலும் அது வாந்தியாக வெளியேற , விக்ரமிற்கு பயம் வந்து வீட்டிலுள்ளோரை ஒரு வழி செய்து விட்டான். கடைசியில் சங்கரி அவனை மிரட்டித் தான் வாயடைத்தார் .
லதாவோ , ” இப்படி அக்கறை இருக்கிறவன் அவக் கூடவே இருக்கப் பாரு… இருக்கிற சொத்தே போதும்…. ஒன்னு அந்த பிரஜக்ட் வேண்டாம் சொல்லு … இல்லையா நீ மட்டும் கிளம்பு… என் மருமகள , என் பேரப்பிள்ளைங்கள நாங்க பார்த்துக்கிறோம்…”
விக்ரமும் அதனை கைவிட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு வந்தான்.
தன்னால் தன் கணவனின் ஆசைகள் தடைபடக் கூடாது என்பதால் விக்ரமை வெகுவாக சமாதானம் செய்து ,விக்ரம் மட்டுமே வெளிநாடு செல்ல முடிவெடுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற , மனைவியைப் பிரிய மனமில்லாமல் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் வருவைக் கைக்குள்ளேயே வைத்திருந்தான்.
மறுநாள் கிளம்பும் நேரமும் வந்தது. அவன் முன் அழக்கூடாது அழக்கூடாது என்று அழுகையை அடக்க அடக்க , தலைவலி எடுக்க ஆரம்பிக்க , இரவில் படுக்க போகும் முன் பால் கொடுத்துவிட்ட லதாவிடமிருந்து வாங்கியவன் வருவிற்கு தர , வேண்டாம் என்றவளை நெஞ்சில் சாய்த்து புகட்டிய அடுத்த நொடி குமட்ட ஆரம்பிக்க, அவன் மேலெல்லாம் வாந்தி எடுத்து விட்டாள். அடக்கி வைத்திருந்த அழுகையும் வந்து விட்டது.
விக்ரமோ அறுவெறுப்பு சிறிதும் இன்றி அணிந்திருந்த ஆடையைக் கழற்றி வீசியவன் , அவள் வாயை துடைத்துக் கொண்டே சமாதானம் செய்து ,
” மை டியர் … உன்னை விட இந்த ஆஃபர் எனக்குப் பெரிசு இல்ல… இவ்வளவு கஷ்டப்படுறியே டா …..”
“விக்கி … நம்ம குழந்தைங்களால நீ எப்பவும் பெருமைப்படறதா தான் இருக்கணும்…. அவங்க வந்ததால உன் கனவு நிறைவேறாம போனதா இருக்கக் கூடாது…. எத்தனை வருஷம் உனக்காக நான் காத்துட்டு இருந்தேன்…. ஜஸ்ட் ஆறு மாசம் அவங்க வரும் போது நீ இங்க வந்துருவ… அது போதும் …நீ போய்ட்டு வா விக்கி….”
கலக்கத்தில் இருந்தவன் அவள் வார்த்தைகளை சரியாக கிரகிக்கவில்லை … அவளும் மனதில் உள்ளதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஏசியிலும் வியர்த்துப் போய் பேசிக் கொண்டிருந்தவள் முகம் பார்த்தவன் ,
“பாலும் சாப்பிட முடியல… இந்த பிஸ்கட் சாப்பிடுறியா … ”
“ம்” எனத் தலையாட்ட , பிஸ்கட்டை தன் வாயில் வைத்தவனிடம் ,
” வாமிட் பண்ணியிருக்கேன் …” என நகர்ந்தவளை , இழுத்து பிடித்து ஊட்டி விட்டுத்தான் மறுநாள் கிளம்பினான்.
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான் தூவும் ….