மாயாவி 26 :::
வாழ்க்கையின் தேடலை
ஆரம்பித்த என்னை…
இன்று நீ தேட வைத்தது…
என் காதலை…
என் வாழ்க்கையை மட்டுமல்ல…
என் காதல் வாழ்க்கையான….
உன்னையே தேட வைத்து விட்டாயே…
என்னடி மாயாவி நீ !
இன்றோடு ஒரு மாதம் ஆகிற்று அவள் அவனை விட்டு சென்று… அன்றைய இரவில் அவள் மறுப்பையும் மீறி நாம் பேசி அனைத்தையும் புரிய வைத்திருக்க வேண்டுமோ என்று அவன் எண்ணாத நாளில்லை… இங்கேயே என்னிடம் விலகி இருந்தே அவள் மனதை புரிய வைத்திருக்கலாமே…
கனவில் கூட ஒரு நாளும் நினைத்தது இல்லை, தான் இப்படி அவளின் பிரிவுக்காக வருந்துவோம் என்று… என்னவோ வாழ்க்கையே சூனியமான உணர்வு…
இந்த அளவிற்கு தான் அவளை நேசிக்கிறோமா, இந்த அளவிற்கு அவளை தேடுகிறோமா… அவளின் நேசத்தை முழுமையாக அனுபவித்து வாழாமல் போய் விடுவோமா…
ஆனால் அவளின் அந்த நேசத்திற்கு நான் தகுதியானவனா? என்று அவனுள் ஆயிரமாயிரம் கேள்விகள்… ஆனால் அதற்கான விடை தர தான் அவள் அருகில் இல்லை…
ஆம் அருகில் தான் இல்லை… அன்று அவளை தன்னோடு சாய்த்தவாறு உறங்கியவன் மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அவள் அங்கு இல்லை…
அப்போதும் வெளியே மற்றவர்களுடன் இருப்பாள் என்று ரெடியாகி வந்தவன் மனைவியை தன் குழுவில் தேட அவளை காணவில்லை…
“அமுதன்! எங்க அந்த மேடம் இன்னும் தூங்கறாங்களா?” என்று கவி கேட்கவும் இவனுக்கு பதட்டமானது.
“ஹான்! ஆமா! கவி !” என்றவன் வேகமாக தன் அறைக்கே சென்று அவளுக்கு போன் செய்ய அது அறையிலே ஒலித்தது.
அவளின் பேக் இருந்த இடம் ஆராய அதை காணவில்லை… அப்போதே அவனுக்கு தெரிந்தது அவள் அங்கிருந்து தெரியாமல் தொலைந்து போகவில்லை.. தெரிந்தே காணாமல் போய் இருக்கிறாள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவனின் நெஞ்சம் கனத்துப் போனது…
வேண்டும் என்பதை நேரிடையாக தன்னிடம் சொன்னவள் வேண்டாம் என்பதையும் நேரிடையாக சொல்லி சென்று இருக்கலாமே… ஏன் இப்படி?
ஏற்கனவே தனிமையின் கொடுமையில் இருப்பவள் அதையே தேடி சென்று இருக்கிறாளே… எங்கு எப்படி பாதுகாப்பாக இருப்பாளோ? என்று அவன் மனம் பதற கவி உள்ளே நுழைந்தான்.
வெளியே வந்து அமுதன் பேசும் போது அவன் பதட்டமே எதுவோ சரி இல்லை என்பதை உணர்த்த மற்றவர்கள் அறியும் முன் எல்லோரையும் வெளியே சுற்றி பார்க்க அனுப்பிய கவி அமுதனை தேடி வந்தான்.
“என்னாச்சு அமுதன்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? காரு எங்க? குளிக்கறாளா?” என்று கவி கேட்ட எந்த கேள்விக்கும் அவனிடம் இருந்து பதில் இல்லை.
“அமுதன்! உங்களை தான் கேட்கிறேன்… காரு எங்க?” என்றவனின் குரலில் கோபமும் தோழியை காணவில்லை என்ற பதட்டமும் ஒரு சேர இருந்தது.
“தெரியல கவி… ஆனா இங்க இல்லை…” என்றவனின் சட்டை காலரை பிடித்து வேகமாக எழுப்பியவன்,
“என்ன சொல்ற அமுதன்? காணோம்னா… உன் கூட தானே இருந்தா? தெரியலைன்னு சொல்ற?” என்று கத்தினான்.
அவனின் சட்டையில் இருந்து தன் கைகளை பிரித்தவன் வேகமாக போனை தேடி எடுத்து அவளுக்கு போன் செய்ய அது அங்கேயே ஒலித்ததும் …
“அவ பேக் எங்க?” என்று காட்டமாக கேட்க,
“அவளுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத என்னை எங்க அப்பா சொன்னாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டவ, அவளுக்கு என்னை பிடிச்சு இருந்தாலும் கட்டாயத்தின் பெயரில் என்கூட வாழணும்னு அவசியம் இல்லையே…”
“என்னோட மனசை நான் தெரிய வைக்கறதுக்குள்ள என்னை விட்டுட்டு போயிட்டா…” என்றவனின் கண்களும் கலங்க அதை பார்த்த கவி தன்னை நிதானத்துக்குள் கொண்டு வந்தான்.
“என்னாச்சு அமுதன்?” என்று அவன் பொறுமையாக கேட்க,
“நான் பேசாதது தான் பிரச்சனை கவி… இப்போதைக்கு அதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்… எல்லாம் தெளிவா யோசிச்சு போனை கூட இங்கே வைச்சுட்டு தான் இங்கிருந்து போயிருக்கா…”
“ஆனால் அவளோட பாதுகாப்பு முக்கியம்… அதை மட்டும் நீ விசாரிச்சு எனக்கு சொல்லு… ப்ளீஸ் கவி…” என்றவனிடம் தலையசைத்தவாறே வெளியேறியவன்,
தோழியின் மனநிலையை நினைத்து வருந்தினாலும் அவளின் இந்த செயலில் கோபமானவன் அவள் எங்கு சென்றாள் என்று விசாரிக்க ஆரம்பித்தான்.
என்னவோ சரி இல்லை என்பதை உணர்ந்த சரஸ் நேரம் பார்த்து கவியிடம் என்னவென்று விசாரிக்க, எரிந்து விழுந்தான். இதோ ஒரு ஒரு மாதம் ஆகியும் எதுவும் தகவல் கிடைக்காததால் இருவருமே சோர்ந்து போயினர்.
கவி திட்டினாலும் பரவாயில்லை என்று சரஸ் தான் கூடவே இருந்து இருவருக்கும் தைரியமூட்டினாள். இதுவரை அலுவகத்தில் யாருக்கும் விஷயம் தெரியாது…
உடல்நிலை சரியில்லை அதனால் வரவில்லை அதோடு ஓய்வெடுக்க ஊருக்கு சென்றிருக்கிறாள் என்று சொல்லி வைத்திருந்தான்… நாட்கள் செல்ல செல்ல மேலும் சோர்ந்த கவியை பார்த்த சரஸ்,
“சீனியர் எங்கேயும் தூரமா போயிருக்க மாட்டாங்க… இங்க நம்ம பக்கத்துல தான் எங்கயோ இருப்பாங்கன்னு தோணுது… நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க… கிடைச்சுடுவாங்க…” என்று அவன் கையை ஆறுதலாக தட்டி கொடுக்க,
“ரொம்ப பயமா இருக்கு வது… அவளுக்கு எத்தனை பிரச்சனை இருந்தாலும் அவங்க அப்பா அம்மாவை கூட விட்டுட்டு என்னை நம்பி என் பாதுகாப்புல இருந்தா….”
“எதுவா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே… இப்ப எங்க எப்படி இருக்காளோன்னு பயமா இருக்கு…” என்றவன் தன்னை தட்டி கொடுத்த கரத்திடமே ஆறுதல் தேடி அவளை அணைக்க சரஸ் ஒரு நொடி திகைத்தாலும் அவனை ஆதரவாக முதுகில் தட்டி கொடுத்தாள்.
“பத்திரமா இருப்பாள்ல வது…” என்றவனின் குரலில் இருந்த பயமும் பதற்றமும் அவளையும் கலங்க செய்ய,
“கண்டிப்பா பத்திரமா இருப்பாங்க… அவங்களுக்குள்ள ஏதோ மனஸ்தாபம் அதான் இப்படி… நீங்களே இப்படி இருந்தா எப்படி? அமுதன் அண்ணா ரொம்ப கலங்கி போயிருக்காங்க… நம்ம தானே அவங்களையும் பார்த்துக்கணும்…” என்று அவள் சொன்னதும் நிதர்சனம் உணர்ந்தான் கூடவே தான் இருந்த நிலையையும்…
அவளிடம் இருந்து வேகமாக விலகியவன், “சாரி!… சாரி… நான் ஏதோ…” என்றவனுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.
அவனின் தடுமாற்றத்தை ரசித்தவள், “நான் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றபடி அங்கிருந்து சென்றதும் கவி தன்னை தானே நொந்துக் கொண்டு அமுதனை காண சென்றான்.
தன் மனையாளை பற்றிய யோசனையில் இருந்தவன் கவி உள்ளே நுழைவதை கண்டு வேகமாக எழுந்து அவனருகே வந்தான்,
“என்னாச்சு கவி? எதுவும் விவரம் தெரிஞ்சுதா?” என்று ஆவலாக கேட்டவனுக்கு இல்லை என்பதாக தலையசைத்ததும் அமுதன் முற்றிலும் தளர்ந்து போனான்.
“அமுதன் அவ போன் கொண்டு போகல… இங்கிருந்து போயிருந்தா கூட எதுவும் தெரிஞ்சு இருக்கும்… ஆனா நம்ம வெளிய போன இடத்தில இருந்து போனதால ஒன்னும் கண்டுபிடிக்க முடியல…” என்றவனின் குரலிலும் அதே அளவு தளர்வு இருந்தது.
“அவளால ரொம்ப நாள் தனியா நம்ம கிட்ட இருந்து விலகி இருக்க முடியாது அமுதன்… சீக்கிரம் வந்துடுவா… வாங்க கிளம்பலாம்…” என்று அமுதனை அழைத்துக் கொண்டு கிளம்பியவன் குழலியின் வீட்டில் அவனை இறக்கி விட்டுட்டு சென்றான்.
கூர்க்கில் அவளோடு மனம் விட்டு பேசி அனைத்தும் சரியானதும் இங்கு அவளோடு வந்து விடலாம் என்ற அவன் எண்ணம் எதுவும் நடக்கவில்லை… அவளின் இந்த செயலால் அவனின் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகரித்தது…
அவள் எதிர்பார்த்த ஒரு வாழ்வு அவளோடு வாழ வேண்டும் என்ற அவன் ஆசையெல்லாம் எங்கோ ஒதுங்கிப் போக, இப்போது அவள் நலமாக இருந்தாலே போதும் என்ற எண்ணம் வந்து விட, மறுநாள் கவியிடம் சென்றான்.
“கவி! இப்போ தானே அந்த கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட் ஆரம்பிச்சிருக்கு… மத்த ப்ராஜெக்ட் வேலையும் சரியா போயிட்டு இருக்குல்ல… நான் ஒரு வாரம் லீவு எடுத்துக்கட்டுமா? எல்லா வேலையும் உங்க கிட்ட தள்ளி விட்டுட்டு போறேன்னு நினைச்சுக்க வேண்டாம்…”
“என்னால வேலையில கவனம் வைக்க முடியல… அதுக்காக மொத்தமா ஒதுங்கி போக விரும்பல… என்னை கொஞ்சம் திடமாக்க டைம் வேணும்… அதான்… ப்ளீஸ் கவி…” என்று கவியின் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டவனை பார்க்க பரிதாபமாக இருந்தது.
எல்லாவற்றையும் சரி செய்ய அவன் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் எத்தனை தடைகள்… அவள் காணாமல் போன இந்த ஒரு மாதத்தில் கூட அமுதன் எந்த வேலையையும் நிலுவையில் வைக்கவில்லை…
அவள் செய்த செயலில் இருந்து தப்பிக்க தன்னை வேலையில் தொலைத்தாலும் அனைத்தும் சரியாக தான் செய்திருந்தான்… அந்த அளவிற்கு வேலையிலும் வாழ்க்கையின் பொறுப்பிலும் மெருகேறி இருந்தாலும் அவள் நம்பிக்கையை பெறுவதில் தோற்று பொய் நிற்கிறானே?
அமுதன் சென்ற வேகத்தை பார்த்து பதட்டமான கவி, அவன் பின்னே விரைய அமுதனோ தனது அறையில் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருந்தான்.
“ஏன் அமுதன்? இங்க வேலையில இருந்தாலாவது உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்… அப்புறம் ஏன் லீவு?” என்று கேட்ட கவியை வெறுமையாக பார்த்தவன்,
“வீட்ல அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு கவி…” என்றவனின் பதிலே அவன் மனநிலையை உரைத்தது.
“ஓஓ! எப்படி? அவங்க அப்பா அம்மாவுக்கு கூட நம்ம சொல்லலையே? அங்கிள்க்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது அமுதன்?”
“நான் தான் சொன்னேன்…”
“ஏன்?”
“ஏன்னா? வேற என்ன பண்ண சொல்றீங்க? அவளோட வீட்ல நம்ம சொன்னதை நம்பற அளவுக்கு தான் அவ மேல அக்கறை… ஆனா எங்க அப்பாவுக்கு அப்படி இல்லையே…”
“அவ போன் எடுக்கலைன்னு எனக்கு தானே போன் பண்ணி கேட்கறாரு… இப்ப தான் நான் வேலைக்கு போறதுக்கும் அவ கூட இருக்கேன்றத்துக்கும் என்னை கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சாரு… அதுக்குள்ள இப்படி…”
“இதுல இன்னும் மூணு நாளுல எங்க முதல் கல்யாண நாள் வருது அதுக்கு ஏதோ சடங்குக்கு இரண்டு பேரையும் ஊருக்கு வர சொல்றாரு… எங்கிருந்து அவளை கூட்டிட்டு வர்றது கவி? அதான் சொல்லிட்டேன்…” என்றவனின் குரலில் விரக்தி மட்டுமே…
“என்ன சொல்றதுன்னு தெரியல அமுதன்? அவ இப்படி பண்ணி இருக்க வேணாம்… பச்… சரி இப்ப எங்க ஊருக்கு போறீங்களா…” என்று கவி கேட்டதும்,
“ம்ம்ம் ஆமா கவி!” என்றவனின் பதிலில் பதற்றம் இருந்ததோ…
“நானும் உங்க கூடவே வந்து அங்கிள் கிட்ட பேசுவேன் ஆனா இங்க நம்ம யாருமே இல்லைன்னா அது சரி வராது… அதான்… நான் அங்கிள் கிட்ட போன்ல பேசறேன்…” என்று அவனை வழி அனுப்பும் விதமாக அணைத்தவன்,
“எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும் அமுதன்… என்னை விட நீங்க அவளை தேடி ஓடற இந்த ஓட்டம் சீக்கிரமே உங்களை அவகிட்ட கூட்டிட்டு போகும்… கவலைப்படாதீங்க…” என்று கவி ஆறுதல் கூற,
என்னவோ அவன் சொன்னதே தேவ வாக்கு போல தோன்ற அமுதனும் அவனை இறுக்கி அணைத்திருந்தான்.
தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று அவளைத் தேடி தன் பயணத்தை தொடங்கி இருந்தவனுக்கு அவன் தேடியது தொலைத்த இடத்தில் கிடைக்குமா?