சரண் – 28
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!
பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !
அன்று தங்கள் குடும்பத்தைப்பற்றி முழுவதுமாக மனைவியிடம் கூறியிருந்தான் புகழ். அதைக் கேட்டதில் இருந்தே அரூபியின் முகம் யோசனையாகத் தான் இருந்தது. என்னவென்று கேட்கலாம் என அவன் யோசிக்கும் முன்னே டாக்டர் வந்துவிட, அதன்பிறகான நேரங்கள் மொத்தமும் அவளின் சிகிச்சையிலேயேக் கழிந்தது.
அவளது காலில் பல இடங்களில் முட்கள் தன் பலனை எதிர்பாராமல் சேவையை பெருமளவு செய்திருக்க, அதையெல்லாம் எடுத்து, அதற்கு மருந்திட்டு கட்டு போட்டார். பின் கைக்கு மட்டும் ஒரு எக்ஷ்ரே எடுத்து விடுவது நல்லது என அறிவுருத்தி, மாலை மருத்துவமனை வரச்சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் மதிய உணவை முடித்துவிட்டு அரூபியை சிறிது நேரம் உறங்கச் சொன்னவன், கம்பெனிக்கு அழைத்து திருவிடம் அங்குள்ள நிலவரம் குறித்துப் பேசினான். பிறகு தாத்தாவிடம் அவ்ர்கள் கிளம்புவது பற்றி பேசிவிட்டு வைத்தவனின் எண்ணங்களில் முழுவதும் நிறைந்திருந்தது மனையாளும், அவளது யோசனையான முகமும் தான்.
‘ஏன் அப்படி இருக்கிறாள். தன் குடும்பத்தைப் பற்றித் தவறாக. ஒருவேளை எனக்கும் மகிக்கும் நடக்க இருந்த திருமணத்தப் பற்றி தவறாக நினைத்து விட்டாளோ.? இல்லை.. இல்லை.. அப்படி இருக்காது. ஆனால் அவளின் முகத்தில் தெரிந்த பாவம் ஏதோ தீவிர யோசனை என்று மட்டும் தோன்றியது. இதெல்லாம் இல்லையென்றால் அம்மாவைத் தவறாக நினைக்கிறாளா..?’ என பல யோசனைகள் ஓட, தூங்கி எழுந்ததும் முதலில் இதைப் பேசி தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்த பிறகே, மற்ற வேலைகளில் கவனம் சென்றது.
உறக்கம் தெளிந்து எழுந்தவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றவன், மருத்துவர் சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் எடுத்து, பிறகு கையில் மட்டும் லேசாக எலும்பு மஜ்ஜையில் தான் பிரச்சினை என்று பிசியோதெரபி கொடுத்து என வீடு வரவே இரவு ஒன்பதாகியிருந்தது.
செல்லும் வழியில் தெரிந்த ஒவ்வொன்றையும் ஆவென பார்த்துக் கொண்டு வந்தாள். ஆனால் எதையும் அவனிடம் கேட்கவில்லை. இதெல்லாம் அவளூக்குப் புதிது தானே. சாதாரணமாக இருந்திருந்தால் இன்னேரம் அவனிடம் கேள்விகளைக் கேட்டு தினறடித்திருப்பாள். ஒன்றுமேக் கேட்காமல் வந்தது தான் அவனுக்கு பெரும் சந்தேகத்தைக் கொடுத்தது. தன்னுடனான இந்த வாழ்க்கையை அவள் எப்படி எடுத்துக் கொள்கிறாள். தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
மருத்துவமனை அலைச்சல், எடுத்துக் கொண்ட மருந்துகளின் தாக்கம் என அரூபி நேரத்திலேயேத் தூங்கிவிட, பேச வேண்டிய விசயங்கள் அனைத்தும் அப்படியே நின்று போனது. நாளைப் பேசித் தெளிவுப்படுத்தியே தீரவேண்டும் என முடிவெடுத்து அவனும் அன்றைய இரவைக் கழித்தான்.
கிராமத்தில் இருந்த வழக்கத்தில் அரூபி அன்று நேரமே எழுந்துவிட, ஆனால் எழுந்து செய்ய என்ன இருக்கிறது. எதையாவது செய்தால் காலையிலேயே இவனிடம் பாட்டு வாங்க வேண்டும். அதற்கு இப்படியே இவனருகில் கிடக்கலாம் என நினைத்து இன்னும் நெருங்கி அவனின் தலையனையில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
சீரான மூச்சின் வேகம் அவனின் ஆழ்ந்த உறக்கத்தைச் சொல்ல, மெதுவாக வலக்கரம் கொண்டு கணவனின் முகத்தை மிருதுவாக வருட ஆரம்பித்தாள். மனம் மட்டும் ‘என்ன தவம் செய்தேன். இவன் எனக்குக் கிடைப்பதற்கு..’ என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு.
‘இவனைப் பார்க்காமல் போயிருந்தால் என் வாழ்வு என்னவாகிருக்கும். அந்தக் கஞ்சா குடிகாரன் மாரப்பனுடன் தன் வாழ்வு பாழாகியிருக்கும். ஏனோ அப்படி ஒரு நிகழ்வை நினைத்தாலே உமட்டல் எடுத்தது. யார் யார் என்றுத் தெரியாமலே தன் மேல் அக்கறைக் கொண்ட அத்தனை பேர் மேலும் நன்றி பெருகியது.
அன்று நடந்தது எதுவும் தபேராவுக்குத் தெரியாது. தெரிந்தால் நிச்சயம் தன்னைக் காண வருவார் என்று நினைத்தாள். ஒரு பக்கமே படுக்க முடியாமல் மெதுவாக எழ முயற்சித்தவளை இழுத்து தன்மேல் போட்டவன், அவளைச் சுற்றி கைகளைப் போட்டு வளைத்துக் கொண்டான்.
பின் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து அவளைப் பார்த்து சிமிட்ட, “ஹேய் நீங்க தூங்கலையா..?” எனக் கண்ணை விரிக்க
“ம்ம்ம்.. தூங்கிட்டுத்தான் இருந்தேன். என் கன்னத்துல பட்டாம்பூச்சி ஒன்னு வந்து வருட ஆரம்பிச்சதா.. அந்த வருடல்ல எழுந்துட்டேன். ஆனா இப்போதான் தெரியுது அது பட்டாம்பூச்சி இல்ல, என்னோட தட்டாம்பூச்சின்னு..” என்றபடியே கழுத்தில் வாசம்பிடிக்க
“எழுந்துக்கலாமா..? எனக்குப் பசிக்கிது..” என எதைச் சொன்னால் விடுவான் என்று கனித்து அதைச் சொல்ல, “கிருக்கிடி நீ.. முன்னாடியே சொல்றதுக்கு என்ன..” என்றவன் அவளைத் திருப்பிக் கீழே படுக்கவிட்டு, தான் எழுந்து அவளையும் எழுப்பி குளியலறையில் விட்டுவிட்டு, “நடக்கக் கூடாது, என்னைக் கூப்பிடு” என்று மிரட்டிவிட்டுக் கிச்சனுக்கு சென்றான்.
முகத்தைக் கழுவிவிட்டு காஃபிக்கு பாலை வைத்தவன், ப்ரெட்டை டோஸ்ட் செய்து, அவளூக்கு பாலையும், ப்ரெட்டையும், தனக்கு காஃபியையும் எடுத்துக் கொண்டு வra, அவள் குளியலறைக் கதவைத் திறந்து வைத்தபடியே நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு சிரிப்பைக் கொடுத்தபடியே தூக்கி வந்து டைனிங்க் சேரில் உட்கார வைத்தான்.
தனக்கு முன்னே இருந்தவற்றை ஆச்சரியமாகப் பார்த்தபடியே சாப்பிட ஆரம்பிக்க, “நீ சாப்பிடு, ப்ரஷ் பண்ணிட்டு வர்ரேன். ஆமா நீ ப்ரஷ் செஞ்சியா.. நான் சொன்ன மாதிரி தானே” எனக் கிண்டலாய் சிரிக்க, ‘நேற்று பல் துலக்க அவன் சொல்லிக் கொடுத்த நினைவு வர” முகம் அந்திவானத்தை ஒத்து சிவக்க,
“போங்க நீங்க, ரொம்ப கிண்டல் பன்றீங்க..” என சினுங்க, “ம்ம்ம் உன்னை அப்படியே அள்ளிக்கனும் போல இருக்குடி.. இரு ப்ரஷ் பண்ணிட்டு வந்து அள்ளிக்குறேன்..” என்றவன் சில நிமிடங்களில் சொன்னதைச் செய்திருந்தான்.
அவள் உண்டு முடித்திருக்க, தூக்கி தன் மடியில் அமர்த்தியபடியே தன் காஃபியை அருந்தினான். “உன்னைத்தான் குடிக்க முடியல, காஃபியையாச்சும் குடிக்குறேன்..” என்ற டைலாக் வேறு. சில பல சில்மிஷங்கள் முடிய, “என்னை எப்படி பிடிச்சது.. நான் எப்படி உங்களுக்கு பொருத்தமா இருப்பேன்னு நினைச்சீங்க.. நான் இப்படி.. உங்க பக்கத்துல, உங்க மனைவியா இதையெல்லாம் நான் நினைச்சிக் கூட பார்க்கல..” அவன் தோலில் சாய்ந்தபடியே பேச
“லூசு மாதிரி பேசக்கூடாது. உன்னை எப்படி பிடிச்சதுன்னா.. நீ பொண்ணுதான, அதுவும் அழகான பொண்ணு.. அப்புறம் எப்படி பிடிக்காம போகும். ஆனா பொண்ணு அப்படிங்கிறதையும் தாண்டி நீ எனக்கு தேவதை. என்னை.. என் குடும்பத்தைக் காப்பாத்தி, எனக்கு வாழ்க்கைக் கொடுத்த தேவதை. உன்னை எப்படி எனக்குப் பிடிக்காம போகும்.. இனி இப்படி முட்டாள் மாதிரி பேசக் கூடாது..” என அதட்ட
“ம்ம்ம்.. இப்படித்தான் பேசக்கூடாதுன்னு நானும் சொன்னேன்..” என அவனின் மீசையை திருகியவள். “உங்களுக்கு பிடிச்சது சரி, ஆனா வீட்டுல எல்லாருக்கும் எப்படி பிடிச்சது. இதுக்கும் என்னை யாரும் பார்த்தது கூட இல்ல. மாமாவும் அக்காவும் ஒரு சின்ன விசயத்துல கூட என்னை யாரோ மாதிரி நடத்தல. முன்னபின்ன பார்த்தே இல்லாத என்னுக்கிட்ட எப்படி இவ்வளவு பாசம் வந்துச்சு.”
“அதுவும் ஆயா பேசும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அவங்க நினைக்கிற மாதிரி நான் இல்ல தானே. நேத்து வரைக்கும் உங்களை வேண்டாம்னு தான எல்லாருக்கிட்டயும் சொன்னேன். அத்தைப் பேசும் போதும் என் மகனை நல்லா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்புன்னு சொல்லாம, நாங்க எல்லாரும் உன்னை நல்லா பார்த்துப்போம்ன்னு தானே சொன்னாங்க.. மொழியும் தான்..” என்றவள் அப்படியே அவன்மேல் சய்ந்து அழ
சிறிது நேரம் அவளை அழவிட்டவன் “இங்க பாரு குட்டிம்மா.. இதுல அழறதுக்கு ஒன்னுமே இல்ல. அவங்க எல்லாருக்கும் என் மேல பாசம் அதிகம். அந்த பாசம் அப்படியே உங்கிட்ட காமிக்கிறாங்க. வச்சுக்கோ நீன்னு அனுபவிக்காம இப்படி அழறியே. சரி சொல்லு நேத்து இருந்து இதைத்தான் யோசிச்சிட்டு இருந்தியா.. நான் கூட உன்னோட யோசனையயைப் பார்த்து ரொம்ப பயந்துட்டேன்.” என மூக்கைப் பிடித்துத் திருக,
“ம்ச் வலிக்குது..” என அவன் கையைத் தட்டிவிட்டவளிடம், “அப்போ எனக்கு வலிக்காத மேடம். நீங்க என் மீசையைப் பிடிச்சு இழுத்தீங்கல்ல..” என பதிலுக்கு சொன்னவனிடம் “நீங்க என்ன நினைச்சீங்க, தாத்தாவை நினைச்சு பயந்துட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா..” என்றதும்
“ம்ஹூம்.. இல்ல, எனக்கும் மகிக்கும் நடக்க இருந்த கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு, மனசைக் குழப்பிக்கிற போலன்னு நினைச்சேன்..” என்றதும்
“ம்ம்.. அதுவும் ஒரு காரணம்.. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அக்கா எவ்வளவு அழகு. நீங்க அவங்களவே வேண்டாம்ன்னு சொல்லிருக்கீங்க. பிறகு எப்படி என்னை பிடிச்சது சொல்றீங்க. இவ்வளவு பிரச்சினை, எங்க கிராமத்தையே மாத்தி என்னைக் கல்யாணம் செஞ்சுட்டீங்க. அப்படி என்ன நான் அழகுன்னு தோனிச்சு. இப்படி சில குழப்பம்..” என்றவும்
“ஊப்ஸ்… என்று ஊதியவன் “இவ்ளோதானா… நான் என்னென்னமோ நினைச்சிட்டேன். உனக்குத் தெரியுமா..? மங்கையும் வெற்றியும் கல்யாணத்துக்கு முன்னாடி வரை நல்லா பேசிக்கிட்டது கூடஇல்ல. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணாங்கண்ணூ சொன்னா யரும் நம்பவே மாட்டாங்க. ஆனா மங்கையோட எண்ணம் எனக்குத் தெரிஞ்சது. அம்மா எங்கிட்ட பேசும் போது மறுக்கத் தோணல, ஏன்னா என்னைத் தவிர அவளை யாரும் நல்லா பார்த்துக்க மாட்டாங்கண்ணு தோனுச்சு. ஆனா அவ செத்துடுவேன்னு சொல்லி, போன்ல அழும்போது தான் என்னோட முடிவு தப்போன்னு நினைச்சேன். வெற்றிக்கிட்ட என்னால அப்போ நெருங்க கூட முடியல.”
“அதனால தான் ஆச்சிக்கிட்ட பேசிட்டு அங்க இருந்து வெளிய வந்தேன். ஆச்சி சொல்றதை மட்டும் தான் வெற்றி கேட்பான்னு நான் நினைச்சது சரியா இருந்துச்சு. அவங்க சொன்னதுக்கு மறுப்பே பேசாம போய் மணவறையில உக்காந்தான். ஆனா அதுக்குப் பிறகான அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு நான் பயந்துட்டே இருந்தேன். ஆனா நான் பயந்ததே தப்புன்னு ரெண்டு பேரும் உணர்த்திட்டாங்க. ரெண்டு பேருக்குள்ளும் அவ்வளவு காதல், அன்பு. இதெல்லாம் பார்க்காம பேசாம எப்படி வந்ததுன்னு நெறைய டைம் யோசிச்சுருக்கேன். ஆனா நம்ம அப்படித்தானே இருந்தோம்ன்னு சொல்லும் போது, அப்போ புரியாதது எல்லாம் இப்போ புரியுது.” என்றவன் அப்படியே அவளைக் கட்டிக் கொண்டு கழுத்தில் முகம் புதைத்தான்.
“ம்ம்ம்… எனக்கு மாமா மேல பெரிய மரியாதையே வந்துடுச்சு. அத்தை நடந்துக்கிட்டதையெல்லாம் மறந்து வெற்றி மாமா அவங்களை மன்னிச்சதே ரொம்ப பெரிய விஷயம் இல்லையா. மாமா அப்போ எவ்வளவு வருத்தப்பட்டுருப்பாங்க. மகிக்கா விசயத்துலயும் தப்பு செய்யதானே இருந்தாங்க. அப்படி ஆகாம் நீங்க ஒரு முடிவு எடுத்துட்டீங்க. இல்லாட்டி என்ன ஆகிருக்கும். வெற்றி மாமா கல்யாணமே செஞ்சுருக்க மாட்டாங்க. மகிக்கா நீங்க சொன்ன மாதிரி ஏதாவது ஒரு தப்பான முடிவு எடுத்துருப்பாங்க.”
“இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு தான நீங்க கல்யாணத்து அன்னைக்கு வெளிய வந்துட்டீங்க. அப்படி வராம போயிருந்தா எனக்கு நீங்க கிடைச்சிருக்க மாட்டீங்க தானே. இனி அதைப்பத்தி எப்பவும் பேச வேண்டாம்..” என்றவள்.. “ஆனா இந்த மகிக்கா உங்களூக்கு ஓவரா சப்போர்ட் பன்றாங்க. இத்தனை நாளா உங்களைப்பத்தியே தான் பேசுனாங்க. அவங்க உங்களைப் பத்தி பேசும் போது எனக்கு ஒரு அப்பாவைப் பத்தி பொண்ணு பெருமையா பேசுவாங்கள்ல அப்படி தோனுச்சு..” என, நான் உன்னைத் தவறாக நினைக்கவே இல்லை. இனி நினைக்கவும் மாட்டேன் என்று சூசகமாகச் சொல்ல, அவனின் மன இறுக்கங்கள் தளர்ந்து, கைகளில் இறுக்கங்கள் கூடிக்கொண்டேப் போனது.
கணவனின் அனைப்பின் இறுக்கம் கூடவும், “என்னங்க நான் குளிக்கட்டுமா.. இப்படி ரெண்டு நாள்லாம் நான் குளிக்காம இருந்ததே இல்லத் தெரியுமா..? இந்த மருந்துக் கட்டெல்லாம் கழ்ட்டி விடுறீங்களா..? முள்ளுக் குத்தினதுக்கு எல்லாம் மருந்துக் கட்டுப் போட்டு இங்கதான் பார்க்குறேன். நாலு பச்சிலையை பறிச்சுக் கையிலையே கசக்கி, அந்தச் சாறை விட்டா முடிஞ்சது. இதுக்கு எம்புட்டு பெரியக் கட்டு பாருங்க..” என உதடு சுழிக்க
மனைவியை அனைத்திருந்தவன், ஏதொ ஒரு உலகத்தில் தன்னை மறந்து அவளுடன் பயணம் செய்து கொண்டிருக்க, அதைக் கலைப்பது போல அவள் பேசியதைக் கேட்டதும் தன்னை மறந்த நிலையை எண்ணி வாய்விட்டுச் சிரித்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவள் இங்குள்ள சூழலுக்கு எப்படி இருக்க வேண்டும் என புரிய வைத்திருந்தான். அவளைக் கீழே அழைத்துப் போய் பூங்காவை காட்டினான். அங்குள்ள சிறுவர்களை பழக்கப்படுத்தினான். “நாம இங்க இருக்கப் போறது இல்ல. ஆனா பழக்கிக்கறது நல்லது தானே. வெற்றி ஊர்லயும் நாம இங்கேயும் தான் இருக்க முடியும். வெற்றி அங்க இருந்து வர ஒத்துக்க மாட்டான். இங்க தாத்தா அவரோட பிசினஸ், அப்பாவோடது எல்லாம் நான் தான் பாக்கனும். வெற்றிக்கு ஆச்சி, அந்த நிலம் விவசாயம் அதுதான் உயிர். அதைவிட்டு வான்னு சொல்ல முடியாது. அதனால அவன் அங்க நான் இங்க.. நம்ம காலம் மட்டும் இல்ல, நம்ம பிள்ளைங்க காலமும் இங்கேதான். உனக்கு இதுல வருத்தம் இல்லையே..” என்றதும்
“நம்ம காலம் சரி, நம்ம பிள்ளைங்க காலத்துல நாம ஏன் இங்க இருக்கனும். நாமளும் ஊருக்கே போயிடுவோம்.. பிறந்ததில் இருந்தே பிரிஞ்சி தான் இருக்கீங்க. கடைசி காலத்துலயாவது ஒன்னா இருக்கலாமே..” என்ற்வளைக் கட்டிக்கொள்ளத்தான் முடிந்தது.
இதற்கிடையில் அந்த வன அதிகாரியை வெற்றியின் ஆட்கள் கொண்டுவந்து கொடவுனில் அடைத்துவிட்டு புகழுக்குத் தகவல் சொல்ல, மனைவியையும் அழைத்துச் சென்று, அவள் முன்னரே அவனை நன்றாகக் கவனித்து அனுப்பியிருந்தான். இப்படியாக அவர்களின் இரண்டு நாட்களும் கழிய, திறப்புவிழாவிற்கு முதல் நாள் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு கொட்லாங்காடு நோக்கி பயணித்தனர் இருவரும்.