மாயாவி 27 :::
உன்னை தேடித் தேடி…
களைப்படைந்த என்னை…
இளைப்பாற வைத்த நீ !
சோர்வே அடையாத உன்
காதலில் காலம் முழுக்கும்
என்னை மூழ்க வைக்க நினைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ!
அவளிடம் தன் மனதை முழுமையாக தொலைத்த இடமான கூர்க்கில் அவள் நினைவுகளோடு சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாளே ஆனாலும் உரிமையும் நெருக்கமுமாக அவளையும் அவள் மனதையும் படித்த இடமாயிற்றே…
ஊருக்கு செல்லுமுன் அங்கு செல்ல வேண்டும் போல அவனுக்கு தோன்ற உடனே கிளம்பி விட்டான்… நாம் வெளியே சென்ற இடத்தில் இருந்து சென்றதால் தான் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கவி சொன்னது வேறு அமுதனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஒருவேளை வெளியே எங்கும் செல்லாமல் கூர்க்கிலே இருக்கிறாளோ என்ற ஒரு நப்பாசையில் வேறு வந்தான்….
அதிகாலை போல இங்கு வந்து சேர்ந்தவனுக்கு குளிரோ பனியோ எதுவும் உறைக்கவில்லை… இதோ ஆதவன் அவன் இல்லம் செல்லும் நேரமும் வந்து விட்டது…
ஆனால் அவளுடன் சுற்றி வந்த இடங்கள் அவளின் நினைவுகளை தான் தருகிறதே தவிர அவளைத் தரவில்லையே… ஊருக்கு செல்ல நேரம் வேறு ஆனதால் மனம் தளர்ந்து போக மாலையே அங்கிருந்து கிளம்பி விட்டான்…
வீட்டை நெருங்க நெருங்க தந்தைக்கு என்ன பதில் சொல்லுவது? அவரை எப்படி எதிர்கொள்ளுவது? என்ற பயம் அவனுக்கு ஆரம்பித்தது… அவன் பொறுப்பாக வேலைக்கு செல்ல ஆரம்பித்த இந்த காலகட்டத்தில் எத்தனையோ மாறி விட்டதே…
தன்னை போல தம்பியும் பொறுப்பில்லாமல் சுற்ற தந்தையை வைத்து அவனிடம் நிலைமையை பேசி புரிய வைத்து இன்று அவனும் பொறுப்பாக தந்தையின் அருகே இருந்து பார்த்துக் கொண்டும் வேலைக்கும் செல்கிறானே…
அன்று மருத்துவமனையில் அவளை திட்டிய தன் அம்மாவின் பேச்சை பெரிதாக எடுக்காமல் அவரிடம் இருந்து ஒதுங்காமல் எப்போதும் போல நலவிசாரிப்போடு அவ்வப்போது போனில் பேசியவளை இப்போதெல்லாம் அவரே கனிவாக விசாரிக்க ஆரம்பித்தாரே… இதெல்லாம் அவள் செய்த மாயம் அல்லவா?
எனக்கே தெரியாமல் இருவரிடமும் பேசிப் பேசியே அனைத்தையும் சாதித்து இருக்கிறாள்… இதெல்லாம் முழுமையாக என் மனைவியாக செய்யவில்லை என்ற எண்ணம் தாக்கினாலும் மாறன் மாமா என்ற அவளின் அந்த ஒற்றை உறவுக்காக அத்தனையும் செய்திருக்கிறாளே…
என்னையும் செய்ய வைக்க முயன்றவளை விட்டு நான் தான் விலகி வந்தேன்… இப்போது அவள் என்ன சொன்னாலும் செய்கிறேன் அவள் என் அருகே இருந்தால் மட்டும் போதும் என்று கலங்கியவாறே இரவு ஒன்பது மணியளவில் தன் வீட்டை அடைந்தான்.
இனி எதுவானாலும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்றவன் பெருமூச்செடுத்து கதவை தட்ட, வீட்டின் கதவை திறந்தது என்னவோ அவன் மனையாள் தான்.
அவன் முன்னே நின்று இருந்தவளைப் பார்த்து திகைத்தாலும் அந்நொடி அவன் மனதுக்குள் தோன்றியது இதுவே “இவளில்லாமல் என் வாழ்வு நிறைவடையாது…”
அமுதனுக்கு குறையாத அதே அதிர்ச்சியோடு குழலி நின்றிருந்தாள். தங்கள் முதல் திருமண நாளன்றே தாலி கோர்க்கும் சடங்கை வைக்க வேண்டும் என்றும் அதற்கு அவனை ஊருக்கு வர சொல்லி இருக்கேன் என்றும் மாறன் முன்னமே சொல்லி வைத்திருந்தார்.
நாளை வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு இன்று இந்நேரத்தில் வந்து நிற்கவும் திகைத்து போனவள் அவன் திகைப்பையும் உணர்ந்த பிறகே தானும் சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருப்பது அவளுக்கு உரைத்தது.
அதற்குள் அமுதனுக்கோ எங்கெங்கோ அவளை தேடி அலைந்து, எப்படி இருக்கிறாளோ என்று பதறியதெல்லாம் ஞாபகம் வர “குழல்” என்று அவளை அழைத்தவாறே வேகமாக முன்னே ஓரடி எடுத்து வைத்தவனை ஓங்கி அறைந்திருந்தார் மாறன்.
மாமா ! என்னங்க ! அப்பா ! என்ற குரல்கள் அதே வேகத்தில் அங்கு ஒலிக்க அதை சட்டை செய்யாதவர்,
“ஏதோ இப்ப தான் பொறுப்பை உணர்ந்து வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்க, அதுவில்லாமல் கருத்தம்மா கூடவே இருந்து அவளை பார்த்துக்கறன்னு தெரிஞ்சதும் நம்ம பையன் எல்லாத்தையும் பார்த்துப்பான்னு உன்னை நம்பினேன்…”
“ஆனா நீ இன்னும் மாறலைன்னு இவளை தொலைச்சுட்டு நிற்கும் போது தான் தெரிஞ்சுது… உன்னை நம்பி வந்த பொண்ணை இப்படி தான் தொலைச்சுட்டு நிற்பியா? நீ எல்லாம் என்ன மனுஷன்…”
“உன்னை நம்பி உனக்கு போய் இவளை கல்யாணம் பண்ணி வைச்சேன் பாரு என்னை சொல்லணும்…” என்று பேசியவாறே அவனை மறுபடியும் அடிக்க கையை ஓங்க,
“மாமா !” என்று அழுத்தமாக அழைத்தபடி அவரை தடுத்தவள் தன் கணவன் முன்னே அவனை மறைத்தவாறு வந்து நின்றாள்.
“நீங்க வளர்க்கும் போது பொறுப்பா வளர்க்காம இப்ப வந்து எதுக்கு அவரை குறை சொல்றீங்க? எங்களோட விருப்பம் கேட்காம நீங்க கல்யாணம் பண்ணி வைச்சீங்க… அதோட உங்க கடமை முடிஞ்சது… அதுக்கு அப்புறம் அதை நாங்க பார்த்துகிறோம்… எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்… உங்களுக்கு எதுக்கு அது…”
“அப்படி நான் இவர்கிட்ட கோவிச்சிக்கிட்டு போயிருக்கணும்னா எங்கயோ தானே போகணும்… இங்க ஏன் வந்து இருக்கேன்… ஏன்னா முன்னாடி வரைக்கும் இது எங்க அத்தை வீடா இருந்துச்சு ஆனா இப்ப இது தானே என் வீடுன்னு நினைச்சு தான் இங்க வந்து இருக்கேன்…”
“நான் பண்ண தப்புக்கு என் கண்ணு முன்னாடி எப்படி நீங்க என் புருஷனை அடிக்கலாம்… இப்ப நீங்க மறுபடியும் அடிக்க வரும் போது கூட அதையும் வாங்க தானே நிற்கறாரு அதிலிருந்தே தெரியல அவர் எந்த அளவுக்கு மாறியிருக்காருன்னு… உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல மாமா…” என்று ஆரம்பித்தவளின் ஆவேசம் முடியும் போது கலங்கி நின்றது.
இத்தனை நேரம் தனக்காக பேசிய மனைவியின் முகம் கலங்குவதைப் பார்த்த அமுதன் மாறன் முன்னே வந்து,
“என்னை மன்னிச்சுடுங்கப்பா… உங்க நம்பிக்கையையும் நான் காப்பாத்தல… இவளுக்கும் நான் எந்த நம்பிக்கையையும் கொடுக்கல… என்னை மன்னிச்சுடுங்க…” என்றவன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
அவன் சென்ற பிறகு தன் மாமனிடம் வந்தவள்,
“என்னை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணம் பண்ணி வைச்சிருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டேன் மாமா…” என்று தன் மனதில் உள்ள எதிர்பார்ப்புகளையும் அமுதன் வாழ்க்கையின் மீதான குற்ற உணர்வையும் மட்டும் சொன்னவள்,
“எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி போக போகத் தான் எல்லாம் என்னை விட்டு தள்ளி போகுதோன்னு தோணுச்சு… இதான் என் வீடு என் குடும்பம்னு மனசுல அழுத்தமா நிறுத்திக்கணும்னு தான் இங்க வந்தேன்…”
“எல்லாத்தையும் சரி பண்ண முயற்சி பண்ற அவரை நம்பாம அவர் என்ன சொல்ல வர்றார்ன்னு கேட்காம நான் தான் விட்டுட்டு வந்து தப்பு பண்ணேன்… நீங்களும் அதே பண்றீங்களே மாமா…” என்றவளை பார்த்த மாறன்,
“அவனுக்காக பேச அவன் பொண்டாட்டி நீ இருக்கன்றதை மறந்துட்டு என் பையன்ற உரிமையில நான் கையை நீட்டிட்டேன் கருத்தம்மா… இனி இப்படி செய்ய மாட்டேன்னு உன் புருஷன்கிட்ட சொல்லிடு…” என்றவரின் குரலில் இருந்த காட்டம் அவரின் கண்களில் இல்லை என்பதை உணர்ந்த குழல் அவரை முறைத்தாள்.
மகனுக்காக பேசிய மருமகளை பார்த்த செல்வி,
“என் அண்ணன் பொண்ணு என் மருமக இதெல்லாம் தாண்டி சின்ன வயசுல இருந்து நான் பார்க்க வளர்ந்த உன்னை ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம அன்னைக்கு அப்படி பேசிட்டேன் காரும்மா…”
“நீ பொறுப்பா எல்லாத்தையும் பார்த்துக்கலைன்னா இன்னைக்கு இந்த குடும்பம் இந்த அளவுக்கு நிறைவா இருக்காது… நான் அப்படி பேசினத்துக்கு என்னை மன்னிச்சுடு…” என்று கலங்கியவரை பார்த்து பதறியவள்,
“அத்தை மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க… இது என்னோட குடும்பம் அத்தை. அதை நான் பார்த்துக்காம வேற யாரு பார்த்துப்பாங்க…” என்றவள் அவரை அனுப்பி விட்டு அமுதனின் அறைக்குள் நுழைந்தாள்.
இங்கு வந்ததிலிருந்து அவன் அறையில் தான் தங்கினாள்… அன்றே முதல் முறை அவன் அறைக்குள் நுழையும் போது இது எங்கள் அறை என்று எழுந்த உரிமையில் ஒரு நிறைவு… இன்று அந்த அறையில் அவனிருக்க செல்லும் போது அவளுள் ஒரு படபடப்பு…
தலையை தொங்க போட்டு கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்தவனைப் பார்த்தவளுக்கு பதட்டமெல்லாம் எங்கோ போக வேகமாக அவனருகில் வந்தவள், அவன் தோளில் கையை வைத்து,
“சாரி எழில் ! எல்லாம் என்னால தான்… நான்…..” என்றவளின் பேச்சு முடிவதற்குள் அவனின் இறுகிய அணைப்பில் சிக்குண்டிருந்தாள்…
அவளை தேடித் தேடி களைப்படைந்தவன் அவளிடமே இளைப்பாறினான்… அவனின் ஆவேசமான அணைப்பின் இறுக்கமும் கழுத்தருகே அவன் விடும் மூச்சுக்காற்றும் அவனின் தவிப்பை சொன்னாலும் அவளுள் ஒரு சிலிர்ப்பு…
அவனை ஆசுவாசப்படுத்த எண்ணி அவனை அழைத்தாள்… “எழில் நான்….” என மறுபடியும் ஆரம்பித்தவளை,
“எல்லாம் உன்னாலதான்டி….” என்றபடி அவளின் இதழ்களை ஆவேசமாக சிறை செய்திருந்தவனின் வார்த்தைக்கும் செயலுக்கும் அவளுக்கு ஆயிரம் வித்தியாசம் கண்டுபிடிக்க தோன்றியது…
அவள் மீதான அவன் நேசத்தை உணர்த்தும் முன்னே அவள் பிரிவின் வலியை உணர்த்தி சென்றவளை இனி நொடியும் பிரியும் உத்தேசம் இல்லை என்பது போல அவளிடம் தனக்கு ஏற்பட்ட வலியின் வீரியத்தை கடத்தி கொண்டிருந்தான்…
செல்வி சாப்பிட இருவரையும் அழைக்கும் ஒலியில் சித்தம் தெளிந்தவன் தான் செய்து கொண்டிருக்கும் செயலை உணர்ந்து தன்னையே குட்டிக் கொண்டான்.
“சாரி ! குழல் ! சாரி குழல் ! நான் ஏதோ… சாரி!” என்றவாறே அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் வெளியேறினான்.
நிமிடமே ஆனாலும் திடீரென வேறு உலகம் அழைத்து சென்றவன் வெளியேறியதும் அங்கிருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்…
இத்தனை நாள் அவனுடனான வாழ்வு குடும்பம் குழந்தை என்ற எண்ணங்கள் மட்டுமே அவளை அதிகமாக ஆக்கிரம்பித்திருக்க முதல் முறையாக அந்த எண்ணங்கள் எல்லாம் செயலாக மாற என்னவென்று புரியாத உணர்வில் சிக்குண்டு தவித்தாள்.
உணவு உண்ண அழைத்த தாயிடம் மறுத்தவன் வெளியே சென்று விட அவன் மனைவியும் அதையே பின்பற்றி நடந்த அனைத்தையும் நினைத்தவாறு உள்ளே படுத்து விட்டாள்.
வெளியே சென்றவன் திரும்பி வந்ததும் அவனை எப்படி எதிர் கொள்வது என்று யோசித்தபடியே குழலி உறங்கிப் போக, அதற்கு அவன் இடம் கொடுக்காமல் நடு இரவே வீடு வந்து சேர்ந்தான்.
அவளருகே அவளை பார்த்தபடியே படுத்தவன் தான் அவசரப்பட்டு செய்த செயலில் ஒரு நொடி வருந்தினாலும் இருவரிடையே இருக்கும் தயக்கத்தை முதல் முறையாக உடைத்தெறிந்ததை உணர்ந்தான். .
“சாரி குழல்!” என்று அவளைப் பார்த்தவாறே சொன்னவன் அவள் தூக்கம் கலையாதவாறு தன்னருகே இழுத்து தன்னோடு லேசாக அணைத்தபடி உறங்கிப் போனான்.
மறுநாள் காலையில் உறக்கம் கலைந்த குழலி கண்டது அவளை தன் நெஞ்சில் தாங்கியதோடு அல்லாமல் அவளை அணைத்தபடி உறங்கி கிடந்த கணவனைத் தான்…
நேற்றைய இரவு அவனை எதிர்கொள்ள தயங்கியது எல்லாம் எங்கோ ஓடிப் போக தான் தன் இடம் வந்து சேர்ந்த நிம்மதியில் எழ தோன்றாமல் அவன் நெஞ்சிலே அவனின் கையணைப்பின் கதகதப்பிலே படுத்துக் கொண்டாள்…
இருவரும் நேற்று இரவும் சாப்பிடாமல் காலை ஏழு மணியாகியும் காபி கூட குடிக்க வராமல் இருப்பதை அறிந்த செல்வி வெளியே இருந்தபடியே குரல் கொடுக்க, உறக்கம் கலைந்த எழில் பார்த்தது அவனை இறுக்கமாக அணைத்தபடி கண்மூடி படுத்திருக்கும் மனைவியை தான்…
அவளின் அருகாமையை இழக்க மனம் வரவில்லை தான், ஆனால் எவ்வளவு நேரம் தான் இப்படியே படுத்திருப்பது, அவள் உறங்கவும் இல்லை என்பதை அவளின் திறந்த விழிகள் காட்டிக் கொடுக்கவும் அவளை அழைத்தான்…
“குழல்!”
“ம்ம்!”
“அம்மா கூப்பிடறாங்க…”
“ம்ம்ம் !”
“அம்மா கூப்பிடறாங்க…”
“ம்ம்ம் !”
அவளின் அந்த ம்ம்ம் என்ற வார்த்தை அவனை மயக்க செய்தாலும் இன்னும் எதுவும் பேசி சரி செய்யவில்லை என்பதை உணர்ந்து பெருமூச்செடுத்தவன்,
“அடியேய்! உன்னை அம்மா கூப்பிடறாங்க…” என்று சத்தமாக சொன்னவனை பார்த்து முறைத்தவாறே அவன் நெஞ்சில் அழுத்தமாக கையை ஊன்றி எழுந்தவள் குளிக்க சென்றாள்.
அவளின் அந்த முறைப்பிலும் செயலிலும் அவன் இதழில் தானாக புன்னகை குடியேறியது.
நாளை அவர்களின் சடங்கு இருக்க இதோ அன்றைய நாள் முடிவடைய ஆரம்பிக்கும் நேரமாகியும் இன்னமும் அவர்களுக்குள் எதுவும் பேசி தீர்க்கப்படாமல் இருக்க அவனைத் தேடினாள்.
காலையில் எழும் போது அவனைப் பார்த்தது தான் அதன்பின்னே அவள் முன்னால் வராமல் கண்ணாமுச்சி ஆடியவனை தேடி கொண்டு சென்றாள் எழிலின் குழல்…