மாயாவி 29 :::
எனக்கு நீ!
உனக்கு நான்…
என்பதை கட்டிய தாலி
கொடுத்த உணர்வை விட…
உன் விழி பார்வையால்
என்னை இந்த பந்தத்தில்
உன்னோடு இணைய வைத்தாயே!…
என்னடி மாயாவி நீ !
இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் சேர்ந்தாற் போன்ற பட்டு புடவையில் கழுத்தில் ஆரமும் நெக்லசும் அதற்கு தோதாக ஜிமிக்கியும் போட்டுக் கொண்டு, புடைவை நிறத்திற்கு இணையாக கைநிறைய வளையலோடு, இருபுறமும் மல்லி சரம் தொங்க, கூட்டமாக அமர்ந்திருந்த பெண்களின் நடுவே மலர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்த மனைவியை கண் கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான் எழிலமுதன்.
சடங்கிற்கு பூ வாங்குவது முதல் அனைவருக்கும் சாப்பாடு தாம்பூலம் வரை அனைத்தையுமே பெற்றவர்களிடம் கேட்டு கேட்டு கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்த மகனை பூரிப்பாக பார்த்திருந்தார் மாறன்…
இது சிறு விஷயம் தான் ஆனால் அதை வீட்டு ஆம்பிளையாய் பொறுப்பாக தன் மகன் செய்திருப்பது அவருக்கு சாதனையே… அதுவும் மகன் மற்றும் மருமகளிடத்தே தெரியும் அந்த மலர்ச்சி அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியே…
அங்கு நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் சந்தோஷ அலைகளையும் தன் கேமிராவில் பதிவு செய்துக் கொண்டிருந்தது கவியரசனே… வந்தவர்களுக்கு காபி பலகாரம் என்று உபசரிக்கும் செல்வியோடு உதவிக் கொண்டிருந்தது சரஸ்வதியே….
பெண்கள் அனைவரும் அவர்களின் முறைகளை ஆரம்பிக்க கல்யாணம் அன்று அவன் கட்டிய தாலி கயிற்றின் மஞ்சள் நிறம் சொன்னது இந்த ஒரு வருடமாக அவள் அதை எப்படி பாதுகாத்து இருக்கிறாள் என்று…
எல்லாவற்றையும் தங்க செயினுக்கு மாற்ற அது முழுக்க முழுக்க அமுதனின் சம்பாத்தியத்தில் வாங்கியதை நினைத்து கணவன் மனைவி இருவருக்குமே பெருமை… கவிக்கு கொடுக்க சேகரித்த பணத்தில் தான் வாங்கி இருந்தான்…
கணவனின் உழைப்பில் தங்கத்தில் அவன் ஆயிரம் வாங்கி தந்தாலும் மனைவிக்கு தாலிசெயின் வாங்கி தருவது எப்போதுமே ஸ்பெஷல் தானே… அனைத்தும் கோர்த்து முடியவும் அமுதனை அழைத்தனர்.
பெண்கள் அதை பிடித்தவாறு அவளுக்கு அணிவிக்க சொல்லி அவனிடம் சொல்ல, அமர்ந்திருந்த குழலியின் அருகே சென்றான்.
நின்றவாறே அவளை நோக்கி குனிந்து அவளுக்கு தாலி செயினை அணிவிக்க இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் அழுத்தமாக உரசி சென்றாலும் மனம் என்னவோ இருவருக்குமே நிறைந்து இருந்தது.
அன்று தாலி கட்டும் போது இனி உனக்கு எல்லாமே நான் தான் என்ற மந்திரத்தை ஒருவரை ஒருவர் உணராமல் ஏற்ற பந்தம், இன்று ஒருவரை ஒருவர் மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு இருப்பதை மகிழ்வோடு உணர்ந்தனர்.
அவளின் விழிகளைப் பார்த்தவாறே அவளுக்கு தாலி செயின் அணிவித்தவன் அவளின் வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம் வைத்ததும், இருவருக்கும் ஒரு சேர நலங்கு வைத்து அன்றைய வைபவத்தை பெரியவர்கள் இனிதே முடித்து வைத்தனர்.
அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் மகளின் மகிழ்வையும் பார்த்த குழலியின் பெற்றோருக்கு சந்தோஷமாக இருந்தாலும், பெற்றவர்களாக தாங்கள் இந்த மகிழ்வை தரவில்லை என்று குற்ற உணர்வு அவர்களுக்குள்.
மாறன் மட்டும் இல்லையெனில் அன்றும் அவனிடம் இருந்து தப்பித்து இருக்க முடியாது இன்றும் இந்த மகிழ்வு இருந்திருக்காது என்று நினைக்க நினைக்க அவர்களுக்குள் வேதனையின் சாயல்.
வந்தவர்கள் அனைவரும் வாழ்த்த பெரியவர்கள் ஆசிர்வாதம் என்று நேரம் நகர்ந்து எல்லோரும் கிளம்பியதும் உறவுகள் மட்டும் இருக்க சாப்பிட அமர்ந்தனர்.
முதலில் குழலியையும் அமுதனையும் அமர வைத்து பரிமாற ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட சொல்லி கவியும் சரசும் வற்புறுத்த இருவருக்குமே ஏதோ இன்று தான் கல்யாணம் முடிந்து அனைத்தும் நடப்பது போல ஒரு உணர்வு…
“ஹே! பூனை இப்ப எதுக்கு ஓவரா பண்ற… நான் உன் கல்யாணத்தை பார்க்கல… இப்ப பார்த்துட்டேன்… அதே மாதிரி இதெல்லாம் நான் என்ஜாய் பண்ணனும்… அமுதன் வெயிட் பண்றாரு பாரு… ம்ம்ம்… சீக்கிரம் ஊட்டு…” என்றவனை பார்த்து முறைத்த குழலி,
“நீ என்ஜாய் பண்றதுக்காக எல்லாம் நான் செய்ய முடியாது போடா…” என்று வாய் சொன்னாலும் கை தன்னாலேயே தன் கணவனுக்கு ஊட்டி விட்டது.
“ஹான்! அப்படியா!” என்றவன் இப்போது அமுதனிடம் திரும்ப , கவி பேச ஆரம்பிப்பதற்குள் குழலிக்கு ஊட்டி முடித்திருந்தான். அதை பார்த்து எல்லோரும் சிரிக்க, தம்பதிகள் சுகமான சங்கடத்தில் நெளிந்தனர்.
“சீனியர்! உங்க புடைவைக்கு மேட்சா உங்க கன்னத்துல எதுவும் பவுடர் போட்டு இருக்கீங்களா? இப்படி சிவந்து இருக்கு…” என்று சரஸ் ஒரு பக்கம் கேலி செய்ய அந்த இடமே கலகலப்பில் நிறைந்திருந்தது.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் குழலியின் பெற்றோர் கிளம்பியிருக்க, இவர்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“எழில் நம்ம எப்ப பொண்ணு பார்க்க போகலாம்… மாமா பொண்ணு வீட்ல எல்லாம் பேசிட்டிங்களா…” என்ற குழலியை இருவருமே யோசனையாக பார்க்க அவளோ கவியை நோக்கி கண் காட்டினாள்.
“பூனை! கண்ணனுக்கு இப்ப என்ன வயசாகிடுச்சுன்னு அவனுக்கு பொண்ணு பார்க்க… அவன் வேற என்னை மாதிரி ரொம்ப அமைதியான பையன்… இங்க நம்ம இவ்வளவு பேசறோம் அவனை பாரு எவ்வளவு அமைதியா இருக்கான்…”
“அப்படிப்பட்ட அந்த பச்சை மண்ணுக்கு போய் கல்யாணம் பண்ணணும்ன்னு நினைக்கறீயே…” என்றவனை குழலி கையில் கிடைத்ததை கொண்டு மொத்த,
“உங்களுக்கு மட்டும் தான் என்மேல அக்கறை இருக்குன்னா…” என்ற கண்ணனையும் சேர்த்து, மற்றவர்கள் அனைவரும் இருவரையும் முறைத்தனர்.
“ஹே பூனை! எதுக்கு இப்ப அடிக்கற? நீங்க ஏன் முறைக்கறீங்க?” என்று கவி கேட்டதும்,
“வளராத அவனுக்கு ஒன்னும் பொண்ணு பார்க்க போகல வளர்ந்து கெட்ட உனக்கு தான் பொண்ணு பார்க்க போறோம்… இங்க எங்க சொந்தத்தில் உனக்கு ஏத்த பொண்ணை பார்த்து வைச்சிருக்கோம்…”
“நீ வந்ததும் ஜஸ்ட் தட்டு மாத்த வேண்டியது தான் பாக்கி…” என்று குழலி சொன்னதும் கவியின் சிரிப்பு அப்படியே நிற்க, சரஸ்வதியோ இந்த செய்தியில் அதிர்ந்து கலங்கிய கண்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
“நான் வரல காரு…” என்று மறுத்தவனை பார்த்த அமுதன்,
“அப்ப நாங்களே எல்லாம் முடிச்சுட்டு வந்துடறோம்… நீங்க நேரா கல்யாணத்தப்ப பொண்ணை பார்த்துக்கோங்க…” என்றான்.
“இல்ல இல்ல… நான்.. எனக்கு…” என்றவன் வார்த்தைகள் தந்தியடிக்க, இத்தனை நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாறனும் செல்வியும் ஓய்வெடுக்க செல்வதாக சொல்லி சென்று விடவும், கண்ணனும் நண்பர்களை பார்க்க செல்லுவதாக சொல்லி சென்று விட்டான்.
“சொல்லு கவி உனக்கு… என்ன? உனக்கு பொருத்தமா பொண்ணு நல்லா இருக்கா… நீ பார்த்ததும் உனக்கு பிடிக்கும்…” என்று குழலி சொன்னாள்.
“எனக்கு வதுவை தான் பிடிச்சிருக்கு… வேற யாரையும் எனக்கு பிடிக்காது… நான் கல்யாணம் பண்ணா அவளைத் தான் பண்ணுவேன்…” என்று கவி வேகமாக சொன்னதும் இருவரும் சத்தமாக சிரிக்க, அவர்களின் சத்தம் கேட்டு சரஸ் வெளியே வந்தாள்.
“உனக்கு இதை சொல்ல இவ்வளவு நாள் தேவையா… உன்னை எப்படி உண்மையை சொல்ல வைச்சேன் பார்த்தியா…” என்று குழலி பெருமையாக சொல்ல,
“என்னை சொல்ல வைச்சா மாதிரியா….” என்று அவளின் காதோரம் எழில் ரகசியம் பேசியதும் அவளிடமோ வெட்கப் புன்னகை…
வெளியே வந்த சரஸைப் பார்த்த அமுதன், “கவி உங்கிட்ட ஏதோ கேட்கணுமாம் சரஸ்… என்னன்னு கேளும்மா… நாங்க இதோ வர்றோம்…” என்றவன் தன் மனைவியை கையோடு இழுத்து போனான்.
“சொல்லுங்க என்ன கேட்கணும்?” என்று வெறுமையக கேட்ட சரஸைப் பார்த்த கவி,
“நீ எப்ப ரிசைன் பண்ற?” என்று குறும்போடு கேட்கவும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“ஹே ! ஹே ! வது ! சாரி ! சாரி ! எதுக்கு இப்ப அழற? நீ வேலையை விட்டு போக வேணாம்…” என்றவனைப் பார்த்து அழுதவாறே,
“எனக்கு உங்க மேல விருப்பம் இருக்க மாதிரி உங்களுக்கு என்மேல இருக்கணும்னு நான் எதிர்பார்க்கறது தப்பு தான்… உங்களோட எல்லா உறவா நான் இருக்கணும்னு தோணுது… அந்த அளவுக்கு உங்க கூட சந்தோஷமா ஒரு வாழ்க்கை வாழணும்னு நான் நினைக்கறது தப்பு தான்… அதான் நடக்காதுல, அப்புறம் நான் எதுக்கு அங்க இருக்கணும்… அதனால நான் வேலையை விட்டு போறேன்…” என்றாள்.
“அதுக்கு தான் நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க வந்தேன்… அதுக்குள்ள நீ அழுதுட்டு இருக்க…” என்று கவி சொன்னதும்,
“ஆமா! ஆமா ! அதான் பொண்ணெல்லாம் பார்த்துட்டாங்களே… போங்க… போய்… அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க…” என்று கோபமாக அழுதுக் கொண்டே சொன்னவளை பார்த்து,
“அதை தான் வது நானும் சொல்றேன்… எனக்குன்னு என்னோட எல்லா உறவா நீ வேணும்… உன்னோட மொத்த காதலும் நானா இருக்கணும்னு ஆசையா இருக்கு… சொல்லு வது! நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்றவனின் வார்த்தையை விட அவனின் விழிகள் சொன்ன செய்தியில் இன்பமாக அதிர்ந்தவள் பாய்ந்து வந்து அவனை கட்டிக் கொண்டாள்.
“தேங்க்ஸ்! தேங்க்ஸ் ! இதை கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி தோணுது…” என்று அவனை கட்டிக் கொண்டு சொன்னவளை ஆதரவாக அணைத்த கவி,
“தேங்க்ஸ்சா… ஐ லவ் யுன்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தா இதை சொல்ற, எனக்கு இதெல்லாம் வேணாம்…” என்றான்.
“ஹான்! என்னை எவ்வளவு அழ வைச்சீங்க? அதனால இப்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும்… நீங்க கேட்டதை என்னை சொல்ல வைக்கறது உங்க கையில தான் இருக்கு… பார்க்கலாம் எவ்வளவு சீக்கிரம் அதை செய்யறீங்கன்னு…” என்று சிரித்தவளை இன்னும் தன்னோடு இறுக்கியவன்,
“அதெல்லாம் நான் நடத்திக் காட்டுவேன்… உங்க வீட்ல என்ன சொல்லுவாங்க? எனக்கு யாரும் இல்…” என்றவனை சொல்ல விடாமல் தடுத்தவள்,
“எனக்கு நீங்க போதுமே… கூர்க்ல இருந்து வந்ததுமே வீட்ல சொல்லிட்டேன்… அவங்க எப்பவோ சம்மதம் சொல்லிட்டாங்க… என் விருப்பத்தை சொல்லி உங்க விருப்பம் கேட்க இருந்தேன்… அதுக்கு சீனியரே வழி செய்து கொடுத்துட்டாங்க…” என்றாள் மகிழ்வோடு.
அந்த மகிழ்வு அவனையும் தொற்ற அவளை தன்னில் இருந்து பிரித்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட அவளும் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
இங்கு இவர்களுக்கு தனிமை கொடுத்து அவர்களுக்கான தனிமையை தேடி உள்ளே சென்றதுமே குழலியை இறுக்கி அணைத்த எழில்,
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… என்னவோ இன்னைக்கு தான் கல்யாணம் ஆன மாதிரி… எல்லாமே பிடிச்சதா நடக்கற மாதிரி… என்னன்னு சொல்ல தெரியாத ஒரு ஹாப்பி பீல்…” என்றவனை சேர்த்து அணைத்துக் கொண்டாள் குழலி.
அவளிடம் இருந்து பிரிந்தவன், “காலையில சீக்கிரம் எழுந்தது டையர்டா இருக்கும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் வா…” என்றதும் இருவரும் உடைமாற்றி வர அவளை அணைத்தவாறு படுத்தான் அமுதன்.
மாலை இருவரும் கோவில் சென்று வந்ததும் வெளியே காற்றோட்டமாக அமர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்க,
எங்க காணோம் ? என்று அமுதன் குழலியிடம் கேட்க,
“கண்ணன் கூட எங்கயோ வெளிய போனான்…” என்று அவனிடம் சொல்லிவிட்டு சரஸ்வதியிடம்,
“சரஸ் நீங்க இரண்டு பேரும் எப்பவும் சண்டை தானே போடுவீங்க… அப்புறம் எப்படி உங்களுக்குள்ள இப்படி ஒரு கெமிஸ்ட்ரி…” என்ற குழலியை,
“ஹான்! எப்படி உனக்கும் அமுதனுக்கும் நடுவுல வந்ததோ அப்படி தான்…” என்று சீண்டியபடி வந்து சேர்ந்தான் கவி.
“கண்ணா! கப் எடுத்துட்டு வா! இங்கயே சாப்பிடுவோம்…” என்று கவி சொல்ல அவன் உள்ளே சென்றான்.
“சாப்பிடற நேரத்துல என்ன கவி வாங்கிட்டு வந்திருக்க? நாளைக்கு பார்த்துக்கலாமே…” என்று செல்வி சொன்னதும்,
“சும்மா கொஞ்சம் ஐஸ்கிரீம் தான்மா… நிறைய வேணாம்னு தான் சின்ன பாக்ஸ் வாங்கிட்டு வந்தேன்…” என்றவன் எல்லோருக்கும் வைத்து கொடுக்க,
ஐஸ்கிரீம் என்றதும் அமுதன் மற்றும் குழலியின் பார்வை மட்டும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்க்க, குழலியின் மனமோ நேற்று அவன் அவளை மாயாவி என்று சொன்ன இடத்திற்கு தாவியது.