நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாசல் பக்கம் சத்தம் கேட்டது. கவிதாவும் கலைவாணியும்
ஆளுக்கு ஒரு குடையை பிடித்துக்கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தனர்.
இவர்களைப் பார்த்த லட்சுமி
“பார்த்து பார்த்து இந்த மழையில எதுக்காக இப்படி ஓடி வந்துட்டு இருக்கீங்க? வழுக்கி விழ போறீங்க.” என்று அக்கறையாக கூறினார்.
“மழை ஓரளவு நின்றிருந்தது. அதனாலதான் வேகமா ஓடி வந்துட்டோம். “ என்று கலைவாணி கூறினாள் .
“என்னமா கவிதா? இன்னைக்கு உனக்கு லீவா?” என்றார் லட்சுமி.
“ இன்னிக்கு எனக்கு லீவ் இல்ல. ஆனா இன்னிக்கி இந்த குட்டிபிசாசுக்கு பர்த்டே அதனால லீவு போட்டு இருக்கேன்.”
“குட்டி பிசாசா இருடி அம்மாகிட்ட மாட்டி விடறேன்” என்று கலைவாணி
ஒற்றை விரலை உயர்த்தி காட்டி மிரட்ட
“குட்டிபிசாசுன்னு சொல்லலையே. குட்டி தேவதை! குட்டி தேவதைன்னு சொன்னேன் தங்கம்.” என்று தங்கையின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள் கவிதா.
ஒரு புது இளம் பச்சை நிற சல்வார் அதற்கு ஏற்றார் போல வெள்ளை முத்துக்களால் ஆன தோடும் செயினும் வளையலும் அணிந்திருந்தாள் கலைவாணி. பார்ப்பதற்கு அழகாக இருந்தாள்.
இதனை கவனித்த லட்சுமி “கலைவாணி டிரஸ் சூப்பர்.” என்று பாராட்டினார் “அப்படியா அம்மா ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் கலைவாணி.
“ஹாப்பி பர்த்டே.” என்று வெண்மதி நாள் வாழ்த்தினாள்.
வெண்மதிக்கு கலைவாணியின் பிறந்தநாள் தெரியும்.
லட்சுமி “இன்னிக்கு உனக்கு பர்த்டே வா, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று அவளுடைய கையை பிடித்து குலுக்கினார்.
“தேங்க்ஸ் அம்மா.” என்றாள் கலைவாணி.
“புது டிரஸ், புது கம்மல், புது நெக்லஸ், புது வளையல், கலை கலக்குற கலக்குற.” என்று ராகமாக வெண்மதி கூறினாள்.
“இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க.” என்று தன் பையில் வைத்திருந்த டிபன் பாக்சை திறந்து அதில் இருந்த பால்கோவாவை கொடுத்தாள் கலைவாணி.
அவர் ஒன்று எடுத்துக் கொள்ள கலைவாணி ஒன்று எடுத்து வாயில் வைத்தாள். இதனை கவனித்த கவிதா
“தீனி பண்டாரம்!” என்று கூறியபடியே கலைவாணியின் தலையில் கொட்டுவதற்கு கையை ஓங்கினாள்.
இவளை கண்டு கொண்ட கலைவாணி லாவகமாக அவளிடமிருந்து நகர்ந்து கவிதாவின் கையை பிடித்துக்கொண்டு
“ நோ ஹிட்டிங். பர்த்டே பேபி.” என்று தன் சல்வாரின் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் கலைவாணி.
“பாத்தீங்களா நான் என்னோட அறிவை யூஸ் பண்ணி சல்வாரில் காலர் வச்சி தைக்க சொன்னது எவ்வளவு வசதியா போச்சு.” என்று மீண்டும் தன்னை தானே பெருமை அடித்துக் கொண்டாள் கலைவாணி.
“ அறிவுக்கொழுந்து” என்று தங்கையை தொட்டு திருஷ்டி எடுத்தவள்.
“அப்படியே அந்த அறிவை கொஞ்சம் படிப்புல காட்டினா நல்ல மார்க் ஆவது வாங்கலாம். இப்படி 35 32 34 40” என்று கவிதா பட்டியலை இழுத்துக்கொண்டே போக
“நோ நோ நோ. நோ டேமேஜ். பர்த்டே பேபி!” என்று ஒற்றை விரலை மறுப்பாக ஆட்டி திரும்பவும் ஞாபகப்படுத்தினாள் கலைவாணி.
“சரி சரி பிழைத்துப் போ.”
என்று கவிதாவும் அமைதியானாள் .
அப்பொழுது கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தான்.
அங்கு இருந்த அனைவரையும் பார்த்து
“ஹாய் எவ்ரி படி.” என்று பொதுவாக கையசைத்துவிட்டு
“இன்னிக்கு என்ன வராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க.” என்று பொதுவாக எல்லோரையும் பார்த்து கேட்டான்.
“இன்னிக்கு என்னோட பர்த்டே.” என்று கையில் இருந்த ஸ்வீட்டை கார்த்திகேயனிடம் நீட்டினாள் கலைவாணி. அவன் எடுத்துக்கொண்ட பிறகு எல்லோருக்கும் கொடுத்தாள்.
பிறகு தன் பையில் இருந்து ஒரு டிபன் பாக்சை எடுத்து
“அம்மா ப்ரைட் ரைஸ் சமைச்சு கொடுத்திருக்காங்க”. என்று அந்த டிபன் பாக்சை எடுத்து கொடுத்தாள்.
“ஏய்” என்று திரும்பவும் அவள் தலைமீது கொட்டுவதற்கு கையை ஓங்கினாள் கவிதா.
இந்த முறை வெண்மதி கவிதாவை தடுத்தாள். தடுத்தவள் “ நோ ஹிட்டிங் பர்த்டே பேபி!” என்றாள்.
“இப்படியா டிபன் பாக்சை அப்படியே கொடுப்ப? ஒரு பிளேட்டில் வச்சு கொடு.” என்று தங்கையை பார்த்து முறைத்தபடி “தொண்ணூத்தி ஒன்னு” என்று எண்ணினாள் கவிதா.
“என்னடி கவுன்ட் பண்ற?” என்று வெண்மதி கேட்டாள்.
அதற்கு கவிதா “இவளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி அது. கவுண்ட் பண்ணி வச்சிருக்கேன். நாளைக்கு மொத்தமா சேர்த்து மொத்து மொத்துன்னு மொத்திடுவேன்” என்று தங்கையை பார்த்து முறைத்தபடி கூறினாள்.
“அடிப்பாவி! கலை. நாளைக்கு உன்னோட நிலைமையை நெனச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.” என்று சிறிது வருத்தம் காட்டி கூறினாள் வெண்மதி.
“நாளைக்கு கதையை நாம நாளைக்கு பாத்துக்கலாம். விடுங்க அக்கா இதையெல்லாம் பாத்தா இவ கூட நான் குப்பை கொட்ட முடியுமா? இட்ஸ் ஆல் இந்த கேம்.” என்று அலட்சியமாக தோளை குலுக்கியபடி கூறினாள் கலைவாணி.
அதே நேரம் லட்சுமி டிபன் பாக்ஸை வாங்கி கொண்டு சமையலறை சென்று ஐந்து தட்டுகள் எடுத்து வந்து அதனில் ஃப்ரைட் ரைஸ் வைத்து கொடுத்தார். அதனை வாங்கிய வசந்த் வெண்மதியை பார்த்தபடியே சாப்பிடாமல் வைத்துக் கொண்டிருந்தான். மற்ற அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். வசந்தை கவனித்தாள் கவிதா.
“ஓஹோ இப்படி ஒரு ரூட் போகுதா?” என்று மனதினில் நினைத்துக்கொண்டாள்.
அப்பொழுது கலைவாணி “என்ன சார்? இன்னும் ஒரு வாய் கூட சாப்பிடவே இல்லை.” என்று கேட்டாள்.
“அது அது அது வந்து” என்று வசந்த் தடுமாறினான்.
“சாப்பாடு எப்படி இருக்குமோனு பயப்படுறீங்க. அப்படித்தானே?” என்று கலைவாணி கேட்க.
“இல்லை இல்லை அப்படி இல்லை.” என்றான் வசந்த் சமாளித்துக்கொண்டு.
“எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. நிம்மதியா தைரியமா சாப்பிடுங்க.” என்று கலைவாணி கூறினாள்.
இதனைக்கேட்ட கார்த்திகேயன்
“இதே டயலாக்கை நான் சொல்ல முடியாம போயிடுச்சே! நான் என்ன செய்யறது?” என்று வராத கண்ணீரை துடைத்தான்.
அவனுடைய பாவனையை பார்த்து சிரித்துக்கொண்டே கவிதா
“அப்படி என்ன நடந்துச்சு கார்த்திக்?” என்று விசாரித்தாள்.
அவன் அன்று நடந்ததை கூறவும் அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.
“இதனால நான் உங்கள் எல்லாருக்கும் சொல்ல வருவது என்னவென்றால் உங்களுக்கு யார் மீதாவது கோபம் இருந்து, போட்டு தள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் எங்கள் அம்மா லலிதா லலிதா லலிதா. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.” என்று சீரியசாக கூறி முடித்தான்.
“என்ன சார் உங்க வீட்ல இந்த மாதிரி யாராவது இன்ட்ரஸ்டிங் பர்சன் இருக்காங்களா?” என்று கலைவாணி வசந்தை பார்த்து கேட்க
வசந்த் புரியாதவனாக அவளைப் பார்த்தான்.
“உங்க அம்மா நல்லா சமைப்பாங்கலான்னு கேக்கறா என் தங்காச்சி” என்று கவிதா ராகமாக கூறினாள்.
வசந்த் “எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. ஆனால் என்னோட தங்கச்சியை பற்றி மட்டும் நான் சொல்ல மாட்டேன்.” என்று பீடிகை போட்டான்.
“அப்படியா அப்போ நீங்க அவங்களை பத்தி தான் சொல்லணும்.” என்றாள் கலைவாணி.
“சரி சொல்றேன். உங்களுக்கு சொத்தை பல் வந்தா பல்லை புடுங்க எங்க போவீங்க?” என்று எல்லோரையும் பார்த்து கேட்டான்.
“பல் டாக்டர் கிட்ட தான்.” என்றான் கார்த்திகேயன்.
“நாங்க என்ன செய்வோம் தெரியுமா? என் தங்கச்சி கையால ஒரே ஒரு சப்பாத்தி தான் சாப்பிடுவோம். செலவே இல்லாம சொத்தைப்பல் கழண்டு கைக்கு வந்துடும். அதனால நெக்ஸ்ட் டைம் யாருக்காவது பல்லை எடுக்கணும்னா எங்க வீட்டுக்கு வாங்க. என் தங்கச்சி உங்கள் பல்லை பிடுங்கி உங்க கையில கொடுத்துடுவா.” என்று வசந்த் கூற அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர். அப்பொழுது மீண்டும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கலைவாணி
“நாம எல்லோரும் சேர்ந்து மழையில் நனையலாமா?” என்று கேட்க கவிதா அவள் தலையை நோக்கி ஒரு கொட்டு வைப்பதற்காக கையை ஓங்க அப்போது அங்கு இருந்த அனைவரும் கோரசாக “நோ ஹிட்டிங். பர்த்டே பேபி” என்று கூறினர்.
“உனக்கு இருக்குதடி நாளைக்கு” என்று கவிதா முறைக்க
மற்ற அனைவரும் “பர்த்டே பேபி ஆசையை நிறைவேத்தனும் வாங்க எல்லாரும் போய் மழையில நனையலாம்” என்று கூற அனைவரும் மழையில் சென்று நனைந்தனர்.
கலைவாணி “ஒரு பாட்டு போட்டா தானே டான்ஸ் ஆடுவதற்கு வசதியாயிருக்கும்.” என்று கேட்க கார்த்திகேயன்
பாட்டை போட்டான்.
“துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பாா்த்தால் பாா்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே”
அந்த பாட்டுக்கு ஏற்ற மாதிரி அனைவரும் சேர்ந்து ஆடினர். வசந்த் வெண்மதியை பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.
“யாராவது வீடியோ எடுங்கப்பா.” என்று கவிதா கூற
வசந்த் முந்திக் கொண்டு எல்லோரையும் வீடியோ, போட்டோ எடுத்தான்.
பிறகு அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
“சரி சரி போதும் விளையாட்டு. உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது எல்லாரும் உள்ள வாங்க.” என்று லட்சுமி அதட்ட அனைவரும் உள்ளே வந்தனர்.