அத்தியாயம் 1
சென்னை நகரின் மத்திய பகுதி. ஓர் அளவுக்கு வசதி உள்ளவர்கள் குடியிருக்கும், தனித் தனி வீடுகள் வரிசையாக இருந்தது. நான்காவதாக இருந்த அந்த வீட்டில் இருந்து புளி சாதத்தின் நறுமணமும், எள்ளு துவையலின் வாசனையும் தெருவில் போவோர் வருவோரை சுண்டியிழுத்தது.
“என்ன அண்ணி, புளிசாதம் செய்றீங்க போல, வாசம் தெருவையே தூக்குது. நம்ம தனம் புறப்பட்டாச்சா?” என்று பக்கத்துக்கு வீட்டு பெண்மணி, அந்த வீட்டு வாசலில் நின்று குரல் கொடுக்க, கைகளை முந்தானையில் துடைத்துக்கொண்டே உள்ளே இருந்து வெளியே வந்தார், அவ்வீட்டின் இல்லத்தரசி சித்ரா.
“ஆமாம் லட்சுமி. புளிசாதமும் துவையலும் இப்போ தான் செஞ்சு முடிச்சேன். கொஞ்ச நேரத்தில் அவ புறப்படனும்ல, அதான்.” என்று சிரிப்புடன் பதிலளித்தார்.
அந்த நேரம் தெருவில் லட்சுமியின் மகன் மற்ற பிள்ளைகளோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க, “ஏலேய்!! அங்க என்னல சண்டை போடுறீங்க. பேசாம விளையாட மாட்டீங்க.” என்று சத்தம் போட்ட லட்சுமி, சித்ராவிடம் திரும்பி, “சரி அண்ணி, நீங்க வேலையைப் பாருங்க. இதுங்களுக்கு முதுகுல ஒன்னு போட்டாதான் சரிபடும். நான் வரேன்.” என்று கூறிவிட்டு தன் மகனை நோக்கிச் சென்றார். அவர் போவதையே சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சித்ரா, தன் மகள் புறப்படுவதற்கு நேரம் ஆவதை உணர்ந்து வீட்டினுள் சென்றார்.
உள்ளே டைனிங் டேபிளில் சித்திராவின் கணவர் மோகன், தோட்டத்தில் இருந்து பறித்து வந்திருந்த வாழை இலையை, சிறு சிறு இலைகளாகக் கத்தரித்து, அதில் புளிசாதத்தையும், எள்ளு துவையலையும் வைத்துப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டிருந்தார்.
அவர் அருகில் சென்ற சித்ரா, தன் கணவருக்கு உதவி செய்துக்கொண்டே, “தனம் ரெடி ஆகிட்டியா?! நேரம் ஆகுது பாரு. சீக்கிரம்.” என்று படுக்கை அறையை நோக்கி குரல் கொடுக்க, “இதோ ம்மா வந்துட்டேன்.” என்று சொல்லிக்கொண்டே, தன் துப்பட்டாவை சரி செய்தபடி வெளியே வந்தாள் ஆராதனா. பெயரை போலவே அழகான முகம். சராசரி உயரம். சற்றே பூசினார் போன்ற உடல்வாகு.
அவளைப் பார்த்ததும், “எல்லாம் எடுத்துவச்சுட்டியா தனம்? ட்ரைன் டிக்கட், வீட்டு விலாசம்…?” என்று தன் வேலையைச் செய்துக்கொண்டே சித்ரா கேட்க, “அம்மா!!….அம்மா!!! எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு. ‘தனம்’ன்னு கூப்பிடாதீங்க. ஓல்ட் பேஷனா இருக்கு. அழகா ‘ஆரு’ன்னு கூப்பிடுங்கன்னு….” என்று அலுத்துக்கொண்டவள், பாத்திரத்தில் இருந்த சாதத்தை ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். அவளின் கையில் ஒன்று போட்ட சித்திர, “அது என்னடி ‘ஆரு’ மோருன்னு. மொதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு.” என்று மீண்டும் அதையே கேட்க, “நேத்தே எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சுன்னு நூறு தடவை சொல்லிட்டேன்.” என்று முகத்தைச் சுருக்கியபடி பதிலளித்தாள் ஆரா.
“ஊருல இருக்கிறவங்க எல்லாம் சென்னைக்கு வேலைக்கு வராங்க. இங்கேயே நிறையக் கம்பனி இருக்கு. அதைவிட்டுட்டு நீ என்னடானா எங்கையோ இருக்கிற பேங்களூருக்கு தான் வேலைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிற.” என்று ஆதங்கத்துடன் சித்ரா கூற, ‘எல்லாம் காரணமா தான் ம்மா ‘ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட ஆராதனா, வெளியே “ஹம், என்னோட ரேஞ்சுக்குச் சென்னைலாம் சரிபட்டு வராது சித்து. ஜாலியா, பேஷனா இருக்கிற பேங்களூர் தான் கெத்தா இருக்கும்.” என்று ஒருபக்கம் சாய்ந்து நின்றுகொண்டு ‘ஸ்டைல்’ என்று மனதுக்குள் நினைத்தபடி அவருக்குப் பதில் கூற,
“என்ன பேஷனோ. நாகரீகம் நாகரீகம்ன்ற பேருல வர வர மோசமா தான் போயிட்டு இருக்காங்க இந்தக் காலப் பிள்ளைங்க. அரைகுறை ட்ரெஸ் போடுறதும், குடிச்சுக் கும்மாளம் அடிக்கிறதும் நல்லாவே இல்லை. நாகரீகம்ன்றது பேசுற வார்த்தைலையும், நடக்குற விதத்திலையும் இருக்கணும். வெறும் நாம போடுற டிரெஸ்ஸ மட்டும் இருக்ககூடாது.” என்று வழக்கம் போலச் சித்ரா புலம்ப ஆரம்பிக்க, “ஐயோ!! அம்மா போதும் போதும். உன் லெக்சரை ஆரம்பிக்காத. எனக்கு ட்ரைனுக்கு டைம் ஆச்சு.” என்றவள் “ஆச்சி!!!” என்று கத்திக்கொண்டே தன் பாட்டி பார்வதியை தேடி கிச்சனுக்குள் சென்றாள்.
சமையல் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த தன் பாட்டியை, கட்டியனைத்த ஆராதனா, “ஆச்சி. நான் போயிட்டு வரேன். உடம்பை பார்த்துகோங்க. வேளா வேளைக்கு மாத்திரை போடுங்க. ரொம்பத் தூரம் நடக்காதீங்க…….” என்று அறிவுரைகளை அடிக்கிக்கொண்டே போக, அவள் பாட்டியோ, “நான் என்னைப் பார்த்துக்கிறேன் கண்ணு. நீ அம்மா அப்பா பேச்சை கேட்ககூடாதா. இங்கனயே எதாவது வேலைக்குப் போலாம்ல. இல்லை என்கிட்டே சொல்லு. நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் செஞ்சு வைக்கிறோம். வாக்கப்பட்டுப் போற வயசுல, நீ என்னடானா பாஷை தெரியாத ஊருக்கு வேலைக்குப் போறேன்னு சொல்ற. தனியா எப்படி இருப்பன்னு கவலையா இருக்கு கண்ணு.” என்று வருத்ததுடன் அவர் கூறினார்.
அவரின் பேச்சில் தானும் வருந்தியவள், “ஏன் ஆச்சி!! ஏற்கனவே நடந்தது போதாதா?! இதுல எனக்கும் கல்யாணமா?! அதெல்லாம் வேண்டாம் ஆச்சி. எப்போ தோணுதோ அப்போ பாக்கலாம்.” என்று ஆராதனா பதிலளிக்க, “என்ன கண்ணு நீ!! ஒருத்தருக்கு ஒன்னு நடந்தா, அதே மாதிரி தான் எல்லாத்துக்கும் நடக்குமா?!” என்று அவளை, பார்வதி சமாதனம் செய்ய முயல,
“போதும் ஆச்சி இந்தப் பேச்சு.” என்று ஆராதனா அடம்பிடிக்க, “ஹம்!!” என்று பெருமூச்சு விட்டவர், “சரி கண்ணு கல்யாணத்தைப் பத்தி பேசல. வேலையாவது இங்கனயே போலாம்ல். எதுக்குக் கண்ணு தெரியாத ஊருக்கு போற?” என்று கேட்க, அவரின் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவள், “இங்க இருந்தா பசங்கள சைட் அடிக்க முடியாது ஆச்சி. தனியா இருந்தா தான் நல்லா சைட் அடிக்கலாம். அதுக்குத் தான் அங்க வேலைக்குப் போறேன்.” என்று விளையாட்டாகக் கூறி கண்ணடித்தாள். அதற்கு அவரோ “விளையாடாத கண்ணு. பெரியவங்க சொல்ற பேச்சை கேட்கனும்.” என்று சிறு கண்டிப்புடன் கூறினார்.
கண்டித்தாலும் பார்வதிக்கு அவரின் பேத்தியை பற்றி நன்றாகத் தெரியும். ஆண் நண்பர்கள் அவளுக்கு இருந்தாலும், யாருடனும் அளவாகவே பழகுவாள். அவளின் நண்பர்களும் அப்படிதான். நல்ல குணம் படைத்தவர்கள். எத்தனையோ தடவை அவளின் தோழர்கள் வீட்டிற்கு வந்து போனது உண்டு. ஒருவனிடம் கூடத் தப்பான பார்வையைப் பார்வதி பார்த்ததில்லை. ஆனால் வேலை விஷயத்தில் அவள் அடம்பிடிப்பது தான், ஒரு பாட்டியாக அவருக்குக் கவலையாக இருந்தது. ஆனால் அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு என்று ஆராதனாவுக்கு மட்டும் தான் தெரியும்.
“இந்த ஒரு விஷயத்தை மட்டும் என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க ஆச்சி. வேணும்னா கல்யணம் உங்க இஷ்டப்படி செய்யலாம்.” என்று தன் பாட்டியை அவள் தாஜா செய்ய, “என்னமோ கண்ணு. நான் கண்ணை மூடுறதுக்குள்ள, என் ரெண்டு பேத்திங்களோட வாழ்கையும் சீரும் சிறப்பா இருந்தா, அதுவே எனக்குப் போதும் கண்ணு.” என்றவர் லேசாகக் கண்கலங்க, “என்ன ஆச்சி நீங்க!! இப்படிலாம் பேசிட்டு. எங்க பசங்க, அவங்க பசங்க அவங்களோட பசங்க, இப்படி எவ்வளவு நீங்க பார்க்கவேண்டி இருக்கு. அதை விட்டுட்டு இப்படிக் கண்கலங்கிட்டு…” என்றவள் அவரின் கண்களை அழுத்த துடைத்துவிட்டாள்.
“சரி ஆச்சி. எனக்கு ட்ரைனுக்கு டைம் ஆச்சு. அக்கா எங்க?” என்று ஆராதனா கேட்க, “அவ வெளிய இருக்கா கண்ணு.” என்றார். அவர் சொன்னதும் முற்றத்தை நோக்கி சென்றாள் ஆராதனா. அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு, சில மாதங்கள் முன்பு நடந்தது நினைவுக்கு வர, தன் இரு பேத்திகளின் வாழ்கையை நினைத்துக் கவலையாக இருந்தது. அதுவும் தன் பெரிய பேத்தியின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, இனி அவள் வாழ்வு என்னாகுமோ என்ற அச்சம் வேறு அவருக்கு.
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது “அக்கா!!!” என்ற தன் செல்ல தங்கையின் குரல் கேட்டு திரும்பினாள் மிருதுளா. ஆராதனாவை விட மூன்று வயது மூத்தவள். நல்ல கலையான சாந்தமான முகம். அவளின் முகத்தைப் பார்த்தாலே, அதிர்ந்து பேச தெரியாதவள் என்று யாரும் கண்டுபிடித்துவிடலாம். அவ்வளவு அமைதி அவள் முகத்தில்.
சிறுபிள்ளை போலத் தன்னைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டவளை, நிமிர்த்திப் பசாமாக அவளின் நெற்றியில் இதழ்பதித்த மிருதுளா, “அம்மு. ரெடி ஆகிட்டியா. எல்லாம் எடுத்து வச்சாச்சா?” என்று கேட்டாள். அதற்கு ஆராதானவோ “ஷபப்பா!!! என்ன எல்லாரும் அதே கேள்விய கேட்குறீங்க. என்னக்கா நீ!! நீதானே எல்லாம் எடுத்து வச்ச. ஏழு கழுதை வயசாகுது. இப்போ வரைக்கும் நீதான எனக்குத் தலை வாரி விடுற. விட்டா என்னை மடில உட்கார வச்சு குளிப்பாட்டி விடுவ போல.” என்றவள் வாயில் விரல் வைத்து சிறு குழந்தையைப் போலப் பாவனைச் செய்ய, “வாலு.” என்று அவளைச் செல்லமாகத் தோளில் அடித்த மிருதுளா, “அங்க போய்க் கவனமா இருக்கனும் அம்மு. ஆஃபீஸ்ல எல்லாரோடையும் பார்த்து பழகனும். வொர்க் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடனும். பிரிண்ட்ஸ் கூப்பிடுறாங்கன்னு எங்கயும் போகக் கூடாது.” என்று மூத்தவளாக அறிவுரை வழங்கினாள்.
ஆனால் ஆராதனவோ, “அக்கா, கரெக்டா சொல்லு நமக்குள்ள மூணு வயசுதான வித்தாயசம்?!” என்று சீரியசாகக் கேட்க, “என்ன அம்மு?! என்ன டவுட் இது?!” என்று புரியாமல் மிருதுளா கேட்க, “இல்ல இவ்வளவு அட்வைஸ் பன்றியே, நீ எனக்கு அக்காவா இல்லை ஆச்சியான்னு ஒரே கன்ஃபுயுசா இருக்கு.” என்று யோசிப்பது போலத் தாடையில் ஒற்றை விரலை தட்டி யோசித்தாள்.
அவளின் பாவனையில் சின்னப் புன்னகை பூத்தது மிருதுளாவின் இதழில். ஆனால் அந்தப் புன்னகை ஆத்மார்த்தம் இல்லாத மேலோட்டமான புன்னகை என்பதை ஆராதனா நன்கு அறிவாள். தன் தமக்கை வாய்விட்டு சிரித்தே சில வருடங்கள் ஆகிறது என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள். என்னனவோ நடந்து இன்று அவள் வாழ்கையே கேள்வி குறியாக உள்ளதே என்பதில் தன் வீட்டாரை போல அவளுக்கும் வருத்தம் தான். கூடவே அது கூடிய சீக்கிரம் சரி ஆகிடவேண்டும் என்ற வேண்டுதலும்.
தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவளிடம், “விளையாட்டா இருக்கக் கூடாது அம்மு. நான் சொல்றதை எல்லாம் ஞாபகம் வச்சுக்கணும். டெய்லி ஃபோன் பண்ணு. அங்க ஏதாவது பிரச்சனைனா உடனே வீட்டிலையோ இல்லை என்கிட்டையோ சொல்லிடனும். சரியா?” என்றாள் மிருதுளா. “நான் என்ன தனியாவா இருக்கப் போறேன். என் ஃபெரென்ட் நித்யா கூடதான இருப்பேன். அதெல்லாம் எந்தப் பிரச்னையும் வராது க்கா. நான் பார்த்துகிறேன்.” என்று குழம்பும் தன் சகோதரியை சமாதனம் செய்தாள் அவள்.
அதன் பின் நேரம் ஆக, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, தன் தந்தையுடன் அவரின் காரில் ஆராதனா ரயில் நிலையம் வர, அங்கே அவளின் தோழி நித்யாவும் அவளின் தந்தையுடன் அங்கு வந்து சேர்ந்தாள். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை இருவரும் ஒன்றாகப் படித்ததால் மிகவும் நெருங்கிய தோழிகள். அதேபோல இரு குடும்பங்களும் பல வருடங்களாக நட்போடு இருப்பவர்கள். நித்யாவின் அண்ணன் பெங்களூரூவில் பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறான். அவன் மூலமாகத் தான் இவர்களுக்கு இந்த வேலை கிடைத்தது. அத்தோடு தான் தங்கி இருக்கும் அபார்ட்மென்ட் அருகிலயே இவர்கள் இருவருக்கும் வீடும் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிறான்.
இரு தந்தைமார்களும் வெகுநாள் கழித்துச் சந்தித்துக் கொண்டதில் பேசிக்கொண்டிருக்க, தோழிகள் தங்களுக்குள் கதையடித்துக் கொண்டிருந்தனர். அதன்பின் சிறுது நேரத்தில் ட்ரைன் வர, தங்கள் கோச் எதுவென்று தேடிப்பிடித்து ஏறியவர்கள், தாங்கள் முன்பதிவு செய்திருந்த இருக்கையைப் பார்த்துப் பெட்டிகளுடன் அமர்ந்தனர். ட்ரைன் கிளம்பும் வரை இரு தந்தைமார்களும் அறிவுரை மேல் அறிவுரை வழங்கினர். காதில் ரத்தம் வராத குறையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆராதனா, “ஐயோ! அப்பா போதுமப்பா. நாங்க என்ன சின்னக் குழந்தையா! அங்கிள் நீங்களாவது சொல்லுங்க.” என்று பாவம் போலக் கூற, “உன் அப்பா சொல்றதால உட்கார்ந்து இருக்கீங்க. இதுவே நான் சொல்ல ஆரம்பிச்சா எழுந்து ஓடியே போய்டுவீங்க.” என்று சொல்லிவிட்டு நித்யாவின் தந்தை சிரிக்க, “அங்கிள்!!!!!!!” என்று பற்களைக் கடித்தாள் ஆராதனா.
அதற்குள் ரயில் கிளம்புவதற்கான ஒலி எழுப்பப்பட, “சரிடா பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வரணும் ரெண்டுபேரும்.” என்று பெரியவர்கள் கூற, சரி என்ற தோழிகள் கை அசைத்து விடைபெற, ஆராதனாவின் மனதில் இருக்கும் உறுதியை போல வேகமெடுத்த ரயில், பெங்களூரை நோக்கி சீறிப் பாய்ந்தது.
அரட்டை, பாட்டு, புத்தகம் என்று தோழிகள் பொழுதை கழிக்க, சிறிது நேரத்தில் சாப்பிட்டுவிட்டு, தங்கள் பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டனர். அடுத்த நாள் காலை சூரிய ஒளியும், மக்களின் பேச்சு சத்தத்திலும் எழுந்தவர்கள், தங்களை ரெப்ரெஷ் செய்துகொண்டு, காபீ பருகி முடிக்கவும், அவர்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது.
தங்கள் பெட்டிகளைச் சரிபார்த்து எடுத்துக்கொண்டவர்கள், ரயில் நிலையம் வந்ததும் இறங்கினர். முதல் முறை பெங்களூருவிற்கு வருகிறார்கள். அங்கு நிலவிய மிதமான கிளைமேட் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குளிருக்கு இதமாகக் கைகளைத் தேய்துக் கொண்டவர்களை நோக்கி, நித்யாவின் அண்ணன் ரகு வந்தான். அவனைப் பார்த்ததும், “ஹாய் அண்ணா! எப்படி இருக்கீங்க?!” என்று ஆராதனா உற்சாகமாகக் கேட்க, “நல்ல இருக்கேன் பாப்பா. நீ எப்படி இருக்க? வீட்டில அம்மா அப்பா அக்கா பாட்டி எல்லாரும் எப்படி இருக்காங்க?!” என்று அவன் கேட்க, “எல்லாரும் நல்ல இருக்காங்க அண்ணா.” என்று பதிலளித்தாள். பேசிக்கொண்டே இருவரின் பெட்டிகளையும் வாங்கிக் கொண்ட ரகு, டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி அழைத்துச் சென்றான்.
இவர்களுக்காக ரகு பார்த்திருக்கும் அபார்ட்மென்ட்டை நோக்கி டாக்ஸியில் பயணித்தனர். பயணத்தின் போதே ரகு இவர்களிடம், அந்த அபார்ட்மென்ட் இருக்கும் பகுதியை பற்றியும் அதன் சுற்றுவட்டாரத்தைப் பற்றியும் கூறியவன், வீட்டு உரிமையாளரிடம் எல்லாம் பேசி, வீட்டிற்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்து விட்டதாகவும் கூறினான்.
சிறிது நேரத்தில், அவர்கள் அபார்ட்மெண்ட் வர, பெட்டிகளை எடுத்துக்கொண்டு மூவரும் இறங்கினர். ஐந்து மாடிகளைக் கொண்ட பல அபார்ட்மெண்ட்கள் ‘ப’ வடிவில் இருக்க, அவற்றுக்கு முன்பு நடைபாதையுடன் கூடிய சிறிய பூங்கா இருந்தது. மேலும் பக்கவாட்டில் சின்னச் சூப்பர் மார்க்கெட், நீச்சல்குளம், விளையாட்டு இடம் போன்றவை இருக்க, சிறு ‘கேட்வே கமுயுனிட்டி’ போல இருந்தது.
பெட்டிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ரகுவிற்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. கால்லை அட்டென்ட் செய்து “ஓகே சர். ஓகே சர். இதோ வரேன்.” என்று பேசிவிட்டு வைத்தவன், தோழிகளிடம் திரும்பி, “ஆஃபீஸ்ல இன்னைக்கு முக்கியமான வொர்க் இருக்கு. சீக்கிரம் வர சொல்றாங்க. நான் கிளம்பனும் பாப்பா.” என்றவன் அவர்களிடம் வீட்டு நம்பர், எந்த ப்ளாக் என்ற விவரத்தை சொல்லி, வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டு விடைபெற்றுக் கிளம்பினான். அதன் பின் தோழிகள் இருவரும் ஆளுக்கு இரண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு மீதம் இருந்த சில பைகளைப் பக்கத்தில் இருந்த பைக்கின் மேல் வைத்துவிட்டுத் தங்கள் பிளாக்கை நோக்கி சென்றனர்.
ஐந்தாவது மாடியில் இருந்த தங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், கதவை திறந்து உள்ளே சென்றனர். இரண்டு படுக்கை அறை கொண்ட, மர வேலைபாடுகளுடன் கூடிய அழகிய வீடு. உள்ளே சென்று பெட்டிகளை வைத்ததும், ஆராதனா, தான் சென்று மீதம் இருக்கும் லகேஜ்களை எடுத்து வருவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தவள், எதிர் வீட்டையே சில நிமிடங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் யாரையோ எதிர்பார்க்கும் ஆவல் தெரிந்தது. சில நொடிகள் நின்றவள், அதன் பின் ஒரு பெருமூச்சோடு கீழே சென்றாள்.
படிகளில் இறங்கி நடந்தவளின் கண்களில், ஒருவன் அவளின் பைகளைப் பைக்கில் இருந்து எடுத்து ஒரு அலட்சியத்துடன் கீழே வீசுவது போலத் தெரிந்தது. வேகவேகமாக அவன் அருகில் சென்றவள், “ஹலோ மிஸ்டர். அதுல திங்க்ஸ் எல்லாம் இருக்கு. இப்படித் தூக்கி போடுறீங்க.” என்று கொஞ்சம் கோபமாக ஆங்கிலத்தில் கூற, அப்பொழுதுதான் இவளை நிமிர்ந்து பார்த்தான் அவன். பார்த்தவனின் கண்களில், ஒரு அலட்சியம் தெரிந்தது போல இருந்தது ஆராதனாவுக்கு.
இவளை ஒரு நொடி பார்த்தவன், இவளுக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்துக்கொண்டு “ஒரு பைக்கை பார்த்துட கூடாது. உடனே மூட்டையை வச்சுட வேண்டியது.” என்று தமிழில் முனுமுனுக்க, ‘சுர்’ என்று கோபம் ஏறியது ஆராதனாவுக்கு. இருந்தும் அமைதியாக நின்று கொண்டிருக்க, அவனோ “இப்படி எல்லாத்தையும் பைக் மேல வச்சுட்டீங்கன்னா, எப்படி வண்டியை எடுக்கிறது?!” என்று சிறு கடுப்புடன் ஆங்கிலத்தில் பதிலளித்தான்.
“அதுக்கு இப்படிதான் தூக்கி போடுவீங்களா?” என்று சுத்த தமிழில் ஆராதனா கேட்க, அவனுக்குள் எந்த அதிர்வும் இல்லை. மாறாக ‘அட நம்நாடு’ என்ற ரீதியில் பார்த்தவன், “ஹலோ! தூக்கிலாம் போடல. எடுத்துதான் வச்சேன். இப்படி.” என்று சொன்னவன் மீதம் இருந்த ஒரு பையை எடுக்கப்போக, எங்கே, இதையும் வேண்டும் என்று வீசிவிடுவானோ என்று பயந்த ஆராதனா, பாய்ந்து சென்று அந்தப் பையை எடுக்கப்போக அவர்களின் இரு கைகளும் உரசிக் கொண்டன. அதற்கும் ஒரு முறை முறைத்தவன், பேகை எடுத்து கீழே வைத்துவிட்டு, “அதுதான் நான் எடுக்குறேன்ல அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு?” என்று சற்றே கடுப்புடன் கூறிவிட்டு, தன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
போகும் அவனின் முதுகை வெறித்தவள், “மூஞ்சிய பாரு….பிசாசு!” என்று திட்டிவிட்டு, பைகளை எடுத்துக்கொண்டு திரும்ப, அபார்ட்மெண்ட் உயரம் அவள் கண்களில் பட்டது. அந்த ஐந்து மாடி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள், ஐந்தாம் மாடியில் இருந்த அந்தக் குறிப்பிட்ட வீட்டின் பால்கனியையே பார்த்தது. “நான் நினைச்சது எப்படியாவது நிறைவேறனும் ஆண்டவா!” என்று கடவுளிடம் உருக்கமாக ஒரு வேண்டுதலை வைத்தவள், பைகளைத் தூக்கிக்கொண்டு படிகளை நோக்கி சென்றாள்.