நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வீட்டு வாசலில் வாழை மரம் கட்டி இருந்தது. உள்ளே மேளதாளம் கேட்டுக்கொண்டிருந்தது. ஏழு முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பட்டு வேஷ்டி சட்டையிலும் பட்டு பாவாடையிலும் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிகப்பு நிற பட்டுப் புடவையும் அதற்கு ஏற்றார்போல பச்சைக்கல் பதித்த வைர ஆபரணங்களும் கூந்தலில் வைத்த குண்டுமல்லியும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்க்க மணப்பெண் போல உட்கார்ந்திருந்தார் லட்சுமி. அவருக்கு பக்கத்தில் பட்டு வேஷ்டியும் சட்டையும் ஆக வைர பிரேஸ்லெட், மோதிரம், சங்கிலி அணிந்துகொண்டு மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்தார் கோவிந்தன்.
ஐயர் மந்திரம் கூற மேளதாளத்துடன் கோவிந்தன் லட்சுமியின் கழுத்தில் மேலும் ஒரு மாங்கல்யத்தை அணிவித்தார்.
பிறகு இருவருக்கும் நாற்காலி போட்டு அமர வைத்தனர்.
“சரி சரி கல்யாணம் முடிஞ்சிடுச்சு இப்போ. எல்லாரும் இவங்க கிட்ட வந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போங்க.” என்று ஐயர் கூற அனைவரும் ஜோடி ஜோடியாக வந்து லட்சுமி கோவிந்தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
முதல்ல பெரிய பையன் வாங்க. என்று ஐயர் கூற
“கதிர், வைஷ்ணவி, கௌஷிக் வாங்க.” என்று லலிதா கூப்பிட
தன் கையிலிருந்த வைர வளையலை பற்றி பெருமையாக தன் தோழியிடம் விவரித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி அவளை கூப்பிட்டதும்
“இரு லதா நான் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து இந்த நெக்லஸை பத்தி சொல்றேன்.” என்று அவளை காத்திருக்க சொல்லிவிட்டு மேடைக்கு சென்றாள். “இவளை திருத்தவே முடியாது.” என்று கூறியபடி கதிர்வேலன் தன் 4 வயது மகன் கௌசிக்கை தூக்கிக்கொண்டு மேடைக்கு வைஷ்ணவி உடன் சென்றான்.
மூவரும் சேர்ந்து அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
“நல்லா இருங்க” என்று கூறி லட்சுமியும் கிருஷ்ணனும் அட்சதை தூவி ஆசீர்வதித்தனர்.
“வெண்மதி, வசந்த் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வாங்க” என்று கிருஷ்ணன் கூப்பிட
விளையாடிக் கொண்டிருந்த 6 வயது அஷ்வத் மற்றும் 2 வயது அஸ்வினியை அழைத்த வெண்மதி
“தாத்தா பாட்டி கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம் வாங்க.” என்று அஷ்வத் தின் கையை பிடித்துக்கொண்டு வெண்மதி நடக்க,
அவளுடன் அஸ்வினியை தூக்கிக்கொண்டு
“குட்டி பாப்பா இன்னிக்கு பட்டுப்பாவாடைல ரொம்ப கியூட்டா இருக்கீங்களே. இந்த உங்க அம்மா மாதிரியே!.” என்று வெண்மதியை பார்த்தபடி தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
இதை கவனித்த கார்த்திகேயன்
“உங்க ரொமான்ஸை அப்புறம் வச்சுக்கோங்க. இப்போ போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்க .”என்று விரட்ட வெண்மதி, வசந்த், அஸ்வினி அஷ்வத் நால்வரும் மேடை ஏறி பெரியவர்களின் கால்களிலும் விழுந்து எழுந்தனர்.
அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதித்த பிறகு
“கார்த்திகேயா” என்று லலிதா கூப்பிட
கார்த்திகேயன் அவனது மனைவி கலைவாணி யுடன் அங்கு வந்தான்.
கவிதாவின் தங்கை கலைவாணியை காதலித்து மணந்து இருந்தான் கார்த்திகேயன்.
கலைவாணியின் வயிறு பெரிதாகி அவள் நிறைமாத கர்ப்பிணி என்பதை காட்டியது.
கார்த்திகேயன் மூத்த தம்பதிகளின் காலில் விழ, கலைவாணி இடுப்பை பிடித்துக்கொண்டு சிரமப்பட்டு குனிந்தாள். அப்பொழுது லட்சுமி
“பரவாயில்லை கலை. நீ விழுந்து கும்பிட வேண்டாம். கஷ்டமா இருக்கும். அப்படியே நில்லு.” என்று அக்கறையாக கூற
கார்த்திகேயன்
“அட இருங்க சித்தி. இப்பயாவது அவ குனிந்து நிமிரட்டும். சாப்பிடுவதை தவிர வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்குற.” என்றான் நக்கலாக.
“என்ன சொன்னீங்க?” என்று அவன் முதுகில் ஒரு குத்து குத்தினாள் கலைவாணி.
“அப்பா” என்று கார்த்திகேயன் வலிப்பது போல நடிக்க
“உனக்கு வேணும்டா.” என்றான் கதிர்வேலன்.
“எப்பவுமே இப்படியே கலகலன்னு சந்தோஷமா இருங்க.” என்றனர் பெரியவர்கள் ஆசிர்வதித்து.
“கவிதா, நீ வாம்மா.” என்று லட்சுமி கூப்பிட
வெண்மதியின் மகள் அஸ்வினியுடன் கைகோர்த்தபடி விளையாடிக்கொண்டிருந்த மகள் ஹரிணியை அழைத்தாள் கவிதா.
“ஹரிணி பாப்பா வாங்க. ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து அஸ்வினி பாப்பா கூட விளையாடலாம்.” என்றாள் கவிதா .
அதேசமயம் சந்துரு, கவிதா இவர்களது மகனான ஹரியை கைப்பிடித்து அழைத்து வர நால்வரும் மேடை ஏறி பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று எழுந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சாவகாசமாக உட்கார்ந்திருந்த வெண்மதியை தேடி வந்தாள் செல்வி.
“வெண்மதி என்னோட பொண்ணு பி. இ படிக்கணும்னு ஆசைப்படுறா. நீ ஏதோ டிரஸ்ட் வச்சு நடத்துவதா கேள்விபட்டேன். அது மூலமா என் பொண்ணை படிக்க வைக்க முடியுமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்
“கூட்டிட்டு வாங்க அக்கா. படிக்க வைத்து விடலாம்.” என்றாள் உறுதியாக.
“ரொம்ப சந்தோஷம் கண்ணு.” என்று வெண்மதிக்கு நன்றி கூறிவிட்டு நிறைந்த மனதுடன் சென்றாள் செல்வி.
ஆம். ‘மதி சாப்ட்வேர்’ இப்பொழுது பாண்டிச்சேரியில் உள்ள பெரிய நிறுவனங்களுள் ஒரு முக்கிய நிறுவனம். அந்த நிறுவனத்தை கதிர்வேலனும் வெண்மதியும் வெற்றிகரமாக நடத்தி வந்தனர். அவர்கள் ராகவனிடம் வாங்கியிருந்த கடனை அடைத்து இருந்தனர். அது மட்டுமில்லாமல் வேறு சில முக்கிய நகரங்களில் அவர்களது கிளைகளை தொடங்கியிருந்தனர். அப்படி சென்னையில் தொடங்கி இருந்த கிளையை கவிதாவும் சந்துருவும் நடத்திவந்தனர்.
கார்த்திகேயன் தன் படிப்பை முடித்தபிறகு ‘மதி சாப்ட்வேர்’ நிறுவனத்தில் சேர்ந்து அக்கா, அண்ணனுக்கு உதவியாக இருந்தான்.
வசந்தின் கட்டிட நிறுவனம் விழுப்புரத்தில் மட்டுமல்லாமல் மேலும் சில முக்கியமான நகரங்களில் நல்லபெயர் பெற்றிருந்தது. அவனும் வேறு சில ஊர்களிலும் கிளைகள் தொடங்கி வெற்றிகரமாக தன் தொழிலை நடத்திக் கொண்டிருந்தான்.
வசந்த் கன்ஸ்டிரக்ஷன் மற்றும் மதி சாஃப்ட்வேர் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு டிரஸ்ட் நடத்திவந்தனர். அதன்மூலம் ஏழை மக்கள் படிப்பிற்கு உதவி வந்தனர். அப்படியே செல்வியின் மகள் படிப்புக்கு உதவி செய்ய ஒத்துக்கொண்டாள் வெண்மதி .
“சரி எல்லாரும் மேடைக்கு ஏறி வாங்க. ஒரு ஃபேமிலி போட்டோ எடுக்கலாம்.” என்று கிருஷ்ணன் கூற அனைவரும் மேலே ஏறினர். மேடை நிறைந்திருந்தது. நிறைந்திருந்தது மேடை மட்டுமல்ல எல்லோரது மனமும் தான். அனைவரது முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது.
“சரி எல்லாரும் சேர்ந்து நில்லுங்க. போட்டோ எடுக்கலாம்.” என்று புகைப்பட நிபுணர் கூற அனைவரும் சேர்ந்து நின்றனர்.
“ஸ்மைல் ப்ளீஸ்.” என்று கார்த்திகேயன் கூற அனைவரும் புன்னகைத்தனர்.
புகைப்பட நிபுணர் அழகான குடும்பம் புகைப்படம் எடுத்தார்.
அந்த புன்னகை அவர்கள் முகத்தில் எப்பொழுதுமே நிலைக்க வேண்டும் என்று அங்கு இருந்த அனைவரும் வேண்டிக் கொண்டனர்.