அத்தியாயம் 1
காதலில் ஆழம்
கண்டு கொண்டேன்,
உந்தன் இதயக் கடலில்!!!
தாராவியில் இருந்து மும்பை நோக்கி அதி வேகமாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. டிரைவர் காரை ஓட்டிக் கொண்டிருக்க அவன் அருகில் ஆஜானுபாகுவான் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் சரண் ரெட்டி.
பின் சீட்டில் மயங்கி கிடந்தாள் ஒரு பெண். அவள் பெயர் சுசீலா பார்த்தசாரதி. அவளுக்கு வயது இருபத்தி மூன்று. அவளது ஊர் காஞ்சிபுரம்.
அவள் முகத்தில் குழந்தை தனம் இன்னும் மிஞ்சி இருந்தது. தயிறும் நெய்யும் சாப்பிட்ட உடல் கொழு கொழுவென்று இருந்தது. தான் என்ன நிலைமையில் இருக்கிறோம் என்று அவள் உணரவே இல்லை. இது எந்த இடம் என்று கூட தெரியாமல் மயங்கிக் கிடந்தாள்.
வேகமாக சென்ற கார் ஒரு வளைவில் திரும்பியதால் அவளது தலை காரின் முன் சீட்டில் மோதியது. அதில் அவள் மயக்கம் தெளிந்து கண்களை திறக்க முடியாமல் திறந்தாள். தலை விண் விண்ணென்று தெறித்தது. உடல் முழுவதும் அடித்து போட்டது போல் வலித்தது.
உண்மையிலே அவளை அடித்து தான் போட்டிருந்தார்கள். அவள் நெற்றியில் ரத்தம் உறைந்திருந்தது.
நெற்றிப் பொட்டைத் தடவிய படி மெதுவாக கண்களை சுழற்றினாள். அது எந்த இடம் என்று புரியவில்லை.
முன்னாள் அமர்ந்திருக்கும் அந்த அரக்கனைக் கண்டதும் அவள் உடல் தூக்கிப் போட்டது. “ஐயோ இன்னும் இவன் கிட்ட தான் இருக்கோமா?”, என்று பயந்தாள்.
அவன் தன்னை எங்கே கொண்டு செல்கிறான் என்றும் புரிந்தது. அவளைப் பொறுத்த வரை சரண் ரெட்டி அரக்கன் தான்.
பழைய நினைவுகள் எல்லாம் மனதில் உலா வந்தது. தன்னால் தப்பிக்கவே முடியாதா என்று சோர்ந்து போய் கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
“கார் எங்கேயாவது நிற்க கூடாதா? அப்படி நின்றால் அந்த இடைவெளியில் இங்கிருந்து தப்பிக்கலாமே?”, என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.
அதே நேரம் போனில் “டேய், எங்க இருக்கீங்க?”, என்று ஹிந்தியில் கேட்டான் யுவன் நாயக். வயது இருபத்தி ஒன்பது. ஆறடிக்கும் மேல் உயரத்தில் இருந்தான். பார்த்தாலே வட நாட்டுக்காரன் தோற்றத்தில் இருந்தான். ஆண்களுக்கே உரிய கம்பீரமும் அழகும் அவனிடம் கொட்டிக் கிடந்தது. ஹிந்தி பட நாயகன் தோற்றத்தில் இருந்தவனிடம் மென்மை மட்டும் மிஸ்ஸிங். அவன் முகம் கடுமையாக இருந்தது.
அவன் முகம் எப்போதுமே கடினமாக தான் இருக்கும். அந்த கடுமை தான் அவனிடம் நெருங்கும் பெண்களை எல்லாம் எட்ட நிறுத்தியதோ என்னவோ? அவனிடம் நெருங்க அனைவருமே பயந்து தான் போவார்கள். ஒரு சாம்ராஜியத்தின் அரசன் அவன்.
“அந்த சரணோட கார்க்கு பின்னாடி தான் போய்கிட்டு இருக்கோம் பையா”, என்றான் சுமன்.
“என்ன? பின்னாடி போறீங்களா? எதுக்கு ஊருகாய் போடவா?”, என்று நக்கலாக கேட்டான் யுவன்.
“பையா….”, என்று இழுத்தான் சுமன்.
“என்ன பையான்னு இழுக்குற?… இப்ப கார் எங்க போகுது?”
“ரெட்டி ஹோட்டல்க்கு…”
“சுமன், என்னை கொலைகாரன் ஆக்காத. கார் ரெட்டி ஹோட்டல்க்கு போகுதுன்னு சொன்னதே நான் தான். உனக்கு நினைவு இருக்கா? அதையே என்கிட்ட சொல்லிட்டு இருக்க? எந்த இடத்துல இருக்கீங்கன்னு கேட்டேன்?”
“சாரி பையா. நீங்க எங்க போகுதுன்னு கேட்ட உடனே அப்படி சொல்லிட்டேன். இப்ப தான் பை பாஸ் தாண்டுது”
“சரி, இன்னும் அஞ்சு நிமிசத்துல ரோடு பிரியும். இன்னும் காருக்கு பின்னாலே போகாம, வேகம் எடுத்து முன்னால போ. சரியா அந்த ரோட் வந்ததும் அந்த காரை பிளாக் பண்ணி அந்த பொண்ணை தூக்கிரு”
“சரி பையா”
“அப்புறம் அந்த சரணை அங்கேயே முடிச்சிரு”
“பையா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நாம ஏற்கனவே ரெட்டி கைவசம் இருக்குற பொண்ணு மேல கை வைக்கிறதுக்கே என்ன ஆகுமோ? அவன் கிட்ட இருக்குற பொண்ணை தூக்குறதே நமக்கு பெரிய ரிஸ்க். இதுல சரண் ரெட்டி அந்த பீமா ரெட்டியோட தம்பி. அவனுக்கு ஏதாவது ஆனா நமக்கு தான் தேவையில்லாத பிரச்சனை”
“சொல்றதைச் செய் சுமன்”
“சரி பையா”
“கார்ல நம்பர் பிளேட் மாத்திட்டியா? கால் டேக்ஸி ஸ்டிக்கர் ஒட்டிட்டியா? நம்ம கார்னு யாருக்கும் தெரியக் கூடாது”
“எல்லாம் பக்காவா செஞ்சிட்டேன் பையா”
“சரி நீங்க ரெண்டு பேரும் மாஸ்க் போட்டுக்கோங்க. அந்த கார் டிரைவரை பாருங்க. நல்லவன் மாதிரி தெரிஞ்சா அவனை விட்டுருங்க. இல்லைன்னா அவனையும் போட்டுருங்க. சீக்கிரம் வேலையை முடி. உன் லவ்வரை பாலோ பண்ணுற மாதிரி காரை பாலோ பண்ணி கோட்டை விட்ட அப்புறம் உனக்கு இன்னைக்கு தான் டெத் டே”
“சரி பையா”, என்று சொல்லி போனை வைத்த சுமன் “டேய், காரை வேகமா விடு. முன்னாடி போய் அந்த காரை பிளாக் பண்ணு”, என்றான்.
யுவன் போட்டுக் கொடுத்த பிளான் படி சுசீலா சென்று கொண்டிக்கும் கார் சுமனது காரால் வழி மறைத்து நிறுத்தப் பட்டது. திடீரென்று கார் நின்றதும் கண்களை மெதுவாக திறந்து பார்த்த சுசீலா சீட்டில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
எதுவோ கார் வழி மறைத்து இருப்பது தெரிந்ததும் “அடுத்த ஆள் கிட்ட போகனுமா? என்ன டா கொடுமை இது? பொம்பளையா பிறந்ததுக்கு இவ்வளவு கொடுமையா டா அனுபவிக்கணும் நான்?”, என்று எண்ணினாள் சுசீலா.
“யார் இவங்க? முன்னாடி வந்து நிக்குறாங்க?”, என்று எண்ணிக் கொண்டே அந்த காரை பார்த்தான் சரண் ரெட்டி.
முகமூடி அணிந்து சுமனும் அவனுடைய நண்பனுமான கேசவும் காரை விட்டு இறங்கினார்கள். அவர்கள் முக மூடியைக் கண்டதும் சரண் ரெட்டி கண்கள் கூர்மையானது. அவன் மனம் எதுவோ ஆபத்து என்று உரக்க கூவியது.
ஒரு பெண்ணைத் தானே அழைத்து செல்கிறோம் என்று எண்ணி எந்த பாதுகாப்பும் இல்லாமல் வந்தது தவறு என்று காலம் கடந்து புரிந்தது.
அவர்கள் தங்களை நெருங்கி வருவதைக் கண்டு காலுக்கு கீழே இருந்த பையில் பிஸ்டலை தேட ஆரம்பித்தான். சரண் ரெட்டி பிஸ்டலை தேடி எடுப்பதற்குள் கேசவ் அவன் தலையில் பிஸ்டலை வைத்திருந்தான். சரண் ரெட்டியின் டிரைவர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டான்.
“யார் டா நீங்க? நான் யார் தெரியுமா?”, என்று ஹிந்தியில் கேட்டான் சரண் ரெட்டி.
“இந்த நிமிஷம் சாகப் போற நீ, அதை தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போற?”, என்று கேட்ட சுமன் காரின் பின் கதவை திறந்தான்.
“இவர்களும் தன்னைக் கடத்த தான் வந்திருக்கிறார்களா?”, என்று பயந்த மான் குட்டி போல சுமனைப் பார்த்தாள் சுசீலா.
“டேய், நான் யாருன்னு தெரியாம விளையாடாதீங்க. எங்க அண்ணன் தான் பீமா ரெட்டி. அவருக்கு விஷயம் தெரிஞ்சது நீங்க தொலைஞ்சீங்க”, என்று மிரட்டினான் சரண் ரெட்டி.
அவன் மிரட்டலை காது கொடுத்து கூட இருவரும் கேட்கவில்லை. சுசிலாவோ இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற யோசனையில் இருந்தாள்.
“பொண்ணுங்களை கடத்துற இவனுங்க மட்டும் என்ன யோக்கியமானவங்களாவா இருப்பாங்க”, என்று எண்ணிக் கொண்டு அவனை பயப் பார்வை பார்த்தாள்.
“ஏய், பொண்ணு வெளிய வா”, என்று மிரட்டினான் சுமன்.
அவன் உருவம் சரண் ரெட்டியை விட ஆஜானுபாகுவாக இருந்தது. கருகருவென்று உருண்டு திரண்ட புஜங்களுடன் இருந்தான் சுமன். அவன் உருவத்தைப் பார்த்தே பயந்தவள் அவன் கையில் இருந்த துப்பாக்கியைக் கண்டதும் மிரண்டு போனாள்.
பயத்துடன் காரில் இருந்து இறங்கி நின்று மூவரையும் பார்த்தாள்.
“டேய் அவளை விடுங்க டா. ரெட்டிக்கு தெரிஞ்சா நீங்க உயிரோட திரும்ப முடியாது”, என்று மிரட்டிக் கொண்டே இருந்தான் சரண் ரெட்டி.
“பொண்ணு கிடைச்சிருச்சு தானே கேசவ்? இன்னும் என்ன அவனை புலம்ப விட்டுட்டு இருக்க? அவனை கொன்னுறு. சூட் கிம்”, என்று சுமன் சொன்னதும் கேசவ் சரணின் நெற்றியில் சுட்டான். அடுத்த நொடி அவன் உயிர் பிரிந்தது.
அவ்வளவு பெரிய உடம்புடைய சரண் அங்கேயே சடலமாக கீழே விழுந்தான். கண் முன்னே ஒரு கொலையைக் கண்ட சுசீலா அதே இடத்தில் மயங்கி விழுந்தாள்.
“போச்சு டா. இவ வேற மயங்கிட்டா. இப்ப என்ன செய்ய கேசவ்?”, என்று கேட்டான் சுமன்.
“போகும் போது பேசலாம் சுமன். முதல்ல அவளை தூக்கு. நாம கிளம்பனும்”, என்று கேசவ் சொன்னதும் சுசிலாவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு காருக்கு சென்றான் சுமன்.
கேசவ் பின் சீட்டின் கதவை திறந்து விட்டதும் அதில் சுசிலாவை படுக்க வைத்தவன் முன்னால் ஏறிக் கொண்டான். கேசவ் வண்டியை எடுத்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் கார் வேகம் எடுத்தது. இப்போதும் பின் சீட்டில் மயங்கி கிடந்தாள் சுசீலா.
அப்போது சுமன் போன் அடிக்க அதை எடுத்து காதில் வைத்தான் சுமன்.
“என்ன சுமன் வேலை முடிஞ்சிருச்சா?”, என்று கேட்டான் யுவன்.
“ஆமா பையா. சரண் இப்ப உயிரோட இல்லை. அந்த பொண்ணு நம்ம கார்ல தான் இருக்கு. கொலையை பாத்ததும் மயங்கிருச்சு”
“சரி, இப்ப எங்க போய்கிட்டு இருக்கீங்க?”
“நம்ம பேக்டரி குடவுனுக்கு”
“நினைச்சேன், அப்படி தான் பண்ணுவீங்கன்னு. அவளை அங்க கொண்டு போக வேண்டாம். நான் இருக்குற இடத்துக்கு கொண்டு வாங்க”
“என்னது பாரஸ்ட் பங்களாவுக்கா?”
“ஆமா, சேஃபா வாங்க. அந்த பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாது. பத்திரமா கொண்டு வாங்க”
“பாரஸ்ட் பங்களாவுக்கு கூட்டிட்டு போற அளவுக்கு அவ்வளவு முக்கியமா இந்த பொண்ணு? பையா, இந்த பொண்ணு யாரு?”
“அதெல்லாம் அப்புறம் பேசலாம். சீக்கிரம் வாங்க”, என்று சொல்லி போனை வைத்தான் யுவன். “கேசவ் வண்டியை பாரஸ்ட் பங்களாவுக்கு விடு”, என்று சுமன் சொன்னதும் கேசவும் “இந்த பொண்ணு யாரா இருக்கும்?”, என்று குழம்பிய படியே வண்டியை திருப்பினான்.
போனை வைத்து விட்டு அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தான் யுவன். அவன் சாய்ந்ததில் அவன் தோள் சோபாவில் அழுந்தியது. “ஸ்ஸ் ஆஆ”, என்று முணங்கியவன் தன்னுடைய தோள் பட்டையைப் பார்த்தான்.
இரண்டு நாட்கள் முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில் அவனுக்கு தோள்பட்டையில் குண்டடி பட்டு காயம் ஏற்பட்டது.
அங்கே கட்டுப் போடப் பட்டிருந்தது. அவன் நெஞ்சில் விழ வேண்டிய குண்டு அவன் தோளை கிழித்து சென்றிருந்தது. சிறிது கீழே அந்த குண்டு பதிந்திருந்தாதாலும் அவன் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டான்.
அந்த குண்டு அவன் நெஞ்சில் விழாமல் தோளில் விழுந்து அவன் உயிர் பிழைத்ததற்கு காரணம் அவள். ஆம் சுசீலா தான். அவளால் மட்டுமே அவன் உயிர் இப்போது அவன் உடலில் இருக்கிறது. அவன் உயிரைக் காப்பாற்றியதால் மட்டுமே அவளைக் காப்பாற்ற நினைத்தான். அவளை அந்த ரெட்டியிடம் இருந்து காப்பாற்றவும் செய்து விட்டான். அவள் முகத்தை அவன் சரியாக பார்க்க வில்லை என்றாலும் அவளைக் காப்பாற்ற எண்ணித் தான் சுமனையும் கேசவையும் அனுப்பினான்.
அவளைக் காப்பாற்ற அவனே தான் முதலில் கிளம்பினான். ஆனால் அவன் உடல் நிலை தேறாததால் தான் அவர்களை அனுப்பினான்.
அந்த பீமா ரெட்டியிடம் இருந்து அவளைக் காப்பாற்றி தன் வசம் கொண்டு வந்து விட்டான். அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டான்.
ஆனால் அது விடுதலையா? அதை அவள் தான் சொல்ல வேண்டும். அவளோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள். கடந்த ஒரு வாரத்தில் அவள் வாழ்வே தலை கீழாக மாறி விட்டது. தமிழ் மட்டுமே தெரிந்த அவள் இப்போது இருப்பதோ பல மொழிகள் பேசும் மும்பையில்.