சிறிது நேரத்தில் விழிப்பு வந்தது சுசிலாவுக்கு. எழுந்து அமர்ந்து வெளியே பார்த்தாள். அவள் விழித்ததைக் கண்ட சுமன் உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஒரே காடாக இருந்தது.
“டேய், என்னை எங்க கூட்டிட்டு போறீங்க? அந்த அரக்கனைக் கொன்னது எனக்கு சந்தோஷம் தான். ஆனா நீங்க யாரு? வேற கேங்கா? என்னை விட்டுருங்க டா. பிளீஸ்”, என்று கத்தினாள் சுசீலா.
அவர்களோ அவள் ஒருத்தி கத்துகிறாள் என்று கூட பாராமல் வேறு எதுவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
“கத்தி உன்னோட எனர்ஜியை வெஸ்ட் பண்ணாத சுசி”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அமைதியாக அந்த இடத்தை அடையாளம் வைக்க முயன்றாள்.
ஆனால் அது அடர்ந்த காடாக இருந்தது. சுற்றி மரங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.
சிறிது தூரம் சென்றதும் ஒரு இடத்தில் கார் நின்றது. அங்கே அரக்கு நிறத்தில் ஒரு பெரிய கேட் மட்டும் கண்ணுக்கு தெரிந்தது.
கேசவ் ஹாரன் அடித்ததும் அந்த மரத்தால் ஆன கேட் திறக்கப் பட்டது. அந்த இடத்தை விழி விரித்துப் பார்த்தாள் சுசீலா.
கேட் திறந்ததும் காரை உள்ளே விட்டான் கேசவ். சிவப்பு நிறத்தில் கோட்டை போல் ஒரு அரண்மனை இருந்தது. அதைச் சுற்றி மரங்களும், பல வண்ண மலர்களும் இருந்தது.
அந்த கோட்டை மதில் சுவரை ஒட்டி நாற்பது ஐம்பது பேர் துப்பாக்கி ஏந்திய படி நின்றார்கள்.
எதுவோ திகில் படம் பார்த்ததை போல பயந்து போனாள் சுசீலா. “இது யார் வீடா இருக்கும்? உள்ள போயிட்டு வெளிய வரணும்னு நினைச்சா கூட இவனுங்களைத் தாண்டி வர முடியாதோ?”, என்று பயந்தாள்.
அந்த கோட்டை முன்பு காரை நிறுத்தினான் கேசவ். “இறங்கு பொண்ணு”, என்று ஹிந்தியின் சொன்னான் சுமன்.
அவன் குரலில் அவனை முறைத்த படியே இறங்கிய சுசி “இது தான் அந்த ரெட்டி வீடா? ஆனா அந்த ரெட்டியோட தம்பியையே கொன்னு என்னை இங்க கொண்டு வந்துருக்காங்களே? அப்ப இவங்க எல்லாரும் ரெட்டியோட எதிரியா? எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போங்க டா. எவனாவது என் மேல கையை வைக்க வந்தா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன்”, என்று எண்ணிக் கொண்டே அவர்களைப் பார்த்தாள்.
“உள்ள போ”, என்று சுமன் சொன்னதும் அந்த கோட்டையையே பார்த்த படி உள்ளே சென்றாள் சுசீலா. அவர்கள் இருவரும் அவளுடன் வரவில்லை. உள்ளே போகும் அவளையே பார்த்த படி நின்றார்கள்.
“உனக்கு இந்த பொண்ணு யாருன்னு தெரியுமா சுமன்? எனக்கு குழப்பமா இருக்கு? இவளை எதுக்கு நம்ம பையா இங்க கொண்டு வரணும்? அதுவும் அந்த ரெட்டி இந்த பொண்ணை வாங்கிருக்கான். அவனை எதுத்து அதுவும் அவனோட தம்பியைக் கொன்னுட்டு தூக்கிட்டு வந்துருக்கோம். இருக்குற பிரச்சனை போதாதா?”, என்று கேட்டான் கேசவ்.
“அதே குழப்பம் தான் கேசவ் எனக்கும். அப்புறம் இன்னொரு விஷயம் நோட் பண்ணியா?”
“என்ன சுமன்?”
“இது பாரஸ்ட் பங்களா. இங்க பையாவோட அம்மாவும் தங்கச்சியும் மட்டும் தான் இருக்காங்க. பையாவோட குடும்பம் இருக்குற இடத்துக்கு எதுக்கு அந்த பொண்ணை கொண்டு வரணும்?”
“அதே தான் எனக்கும் குழப்பமே. சரி உண்மை எப்பவாது வெளிய வரும். சரி வா டிபன் சாப்பிடலாம்”, என்று சொன்ன கேசவ் டைனிங் ஹாலை நோக்கிச் சென்றான்.
மனம் முழுவதும் பயத்துடனும். நடுக்கத்துடனும் கண்களில் பீதியுடனும் தான் அந்த கோட்டைக்குள் சென்றாள் சுசீலா.
அந்த கோட்டை சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமாக இருந்தது.
கோட்டைக்கு உள்ளேயோ அதற்கு எதிர் மறையான வெள்ளை நிறத்தில் பளபளத்தது.
டைல்ஸ் முதல் கொண்டு மேலே இருக்கும் விளக்கு வரை அனைத்தும் வெண்மையே. அதுவும் தூய்மையாக இருந்தது. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் அந்த வீட்டில் இருக்கும் பொருள்களை துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
படத்தில் கூட இப்படி பட்ட இடத்தை பார்த்திராதவள் கண்களை அகல விரித்து பார்த்தாள்.
“நீ என்ன பிக்னிக்கா வந்திருக்க? இப்படி ரசிச்சு பாத்துட்டு இருக்க?”, என்று மனசாட்சி அதட்டியது. அவள் மனசாட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க “என்ன ஏஞ்சல் நம்ம இடம் பிடிச்சிருக்கா?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் யுவன் நாயக்.
அவன் குரலில் அதிர்ந்து திரும்பியவள் அப்படி அழகான ஒரு இளைஞனை அங்கே எதிர் பார்க்க வில்லை.
அவளுடைய அக்ரகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு கம்பீரம் என்ற ஒன்று இருக்கவே செய்யாது. அனைவரும் மீசை இல்லாமல் சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் கம்பீரத்தின் மொத்த வடிவமாக இருந்தான் யுவன் நாயக்.
ஆறடிக்கும் மேல் அகன்ற தோள்களுடன் இருந்தான் யுவன். அளவான மீசை அவனுக்கு மேலும் அழகு சேர்த்தது. அவனுடைய கண்கள்.. அதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை அவனும் விழி எடுக்காமல் பார்க்க ஆரம்பித்தான்.
அவனும் அவளை இப்போது தான் நன்றாக பார்த்தான். ஐந்தரை அடி உயரத்தில் எழுமிச்சையும் பாலும் கலந்த வண்ணத்தில் இருந்தாள் சுசீலா.
வளைந்த வில் போன்ற புருவமும், கூரான சிறிய மூக்கும், குண்டு கண்களும், கொழு கொழு கன்னமும், இயற்கையிலே சிவந்த அதரங்களும் அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.
இடையை தாண்டிய பின்னல் கலைந்து அவளுக்கு ஒரு வசிகரத்தைக் கொடுத்தது.
அரை குறை ஆடைகளும், லிப்ஸ்டிக் பூச்சும் என செயற்கை அழகு கொண்ட பெண்களையே அதிகம் பார்த்திருந்த யுவனுக்கு இயற்கை அழகைக் கண்ட பெண்ணைக் கண்டதும் அவன் மனம் ரசிக்க ஆரம்பித்தது.
அவளைக் காப்பாற்ற தான் இங்கே அழைத்து வர வைத்தான். ஆனால் இப்போதோ அதையெல்லாம் மறந்து அவளையே ரசித்த படி இருந்தான்.
அவளும் அவனைத் தான் அளந்து கொண்டிருந்தாள். அவன் கண்களை பார்த்தவள் அது எதுவோ காந்த சக்தி போல் இழுப்பதை உணர்ந்து வேறு பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
கருப்பு நிற குர்தாவும் அதே நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தான். கருப்பு நிற உடை அவனுடைய சிவந்த நிறத்தை மேலும் உயர்த்திக் காட்டியது.
“இங்கே இது தான் வீட்டில் அணியும் உடை போல?”, என்று எண்ணிக் கொண்டாள்.
அதன் பின் அவன் முகத்தை பார்த்து விட்டு மீண்டும் அவள் பார்வை அவன் கண்களுக்கு தான் சென்றது. அவன் கண்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் நீல நிறமாக இருந்தது.
ஆம் யுவனுக்கு நீல நிற நயனங்கள் தான். அந்த நீல விழிகளை விசித்திரமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தவள் அவன் கண்களுக்குள்ளே மூழ்குவது போன்ற உணர்வை அடைந்தாள். அந்த கண்களில் எதுவோ ஒரு ஈர்ப்பு விசை இருப்பது போல இருந்தது. அது அவளது பிரம்மையா என்று தெரிய வில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி எடை போட்டுக் கொண்டிருக்க “பையா இது யாரு?”, என்று கேட்ட படி அங்கு வந்தாள் மாயா.
மாயா யுவனின் தங்கை. அவள் வரவில் இருவரும் நடப்புக்கு திரும்பினார்கள். சுசிலாவுக்கு அவன் கண்களைப் பார்த்து கொண்டிருந்த போது இல்லாத பயம் மீண்டும் ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் ஒரு ஆண்மகனை இப்படி ரசித்ததை நினைத்து அவள் முகம் சிவந்து போனது. திடீரென்று அவளுக்கு அவளுடைய தற்போதைய நிலை நினைவு வந்தது.
மாயா என்ன கேட்டாள் என்று சுசீலாவுக்கு புரிய வில்லை என்றாலும் தன்னைக் காட்டி அவள் எதுவோ ஹிந்தியில் கேட்டதும் தன்னைத் தான் கேட்கிறாள் என்று புரிந்து கொண்டாள்.
“இவன் என்ன சொல்லப் போறானோ?”, என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மாயா, அவங்களை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். இனிமே தான் அவங்க வீட்டுக்கு இந்த பொண்ணை அனுப்பணும்”, என்று ஹிந்தியில் சொன்னவன் சுசிலாவிடமும் “உன்னோட பேர் என்ன?”, என்று ஹிந்தியில் கேட்டான்.
அவன் சொன்னது புரியாது அவள் முழிக்கும் போதே “உன்னோட ஊர் என்ன?”, என்று கேட்டான்.
அவளுக்கு ஹிந்தி தெரியாததால் மௌனமாக நின்றாள். முதலில் அதை உணராதவன் பின் அதை யோசித்து விட்டு ஆங்கிலத்தில் அவள் ஊரைக் கேட்டான்.
அவன் கேட்டது இப்போது புரிந்தது தான். ஆனால் சொல்லவா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
அவள் மௌனமாக இருந்ததும் அவன் புருவங்கள் உயர்ந்தன. “இங்க பாரு, நீ உன்னோட ஊர் பேர் சொன்னா தான் நீ அங்க போறதுக்கு நான் டிக்கட் ஏற்பாடு பண்ண முடியும்? இங்கே இருந்தேன்னா அந்த ரெட்டியோட ஆட்கள் உன்னை மறுபடியும் கடத்திட்டு போகலாம்? உன்னோட ஊர் என்ன சொல்லு”, என்று பொறுமையாக சொன்னான்.
அவனுடைய பொறுமையான பேச்சும் மென்மையான முகமும் மாயாவுக்கு குழப்பத்தைக் கொடுத்தது. அவள் அறிந்த வரை யுவனிடம் இப்படி பட்ட பொறுமையையும் அணுகுமுறையையும் அவள் கண்டதில்லை. தன்னுடைய அண்ணனையும் சுசிலாவையும் ஆராய்ச்சியாக பார்த்தாள்.
சுசிலாவோ அவன் சொன்னதைக் கேட்டு ஆனந்தமாக அதிர்ந்தாள். அவன் சொன்ன பிறகு தான் அவன் தன்னை காப்பாற்றி இருக்கிறான் என்ற உண்மையே சுசீலாவுக்கு புரிந்தது.
கடவுளுக்கு மனதார நன்றி சொன்னவள் “சார் நிஜமாவா? நிஜமாவே என்னை காப்பாத்திருக்கீங்களா? நீங்க உண்மையை சொல்றீங்களா? பொய் சொல்றீங்களா?”, என்று தமிழில் பேசியிருந்தாள்.
அவள் பேசியதைக் கேட்டும், அவள் பேசிய மொழியைக் கண்டு கொண்டும் அண்ணன் மற்றும் தங்கை முகத்தில் புன்னகை வந்தது.
“ஓ, மதராசியா?”, என்று யுவன் கேட்டதும் அவன் என்ன கேட்கிறான் என்று தெரியாமல் விழித்தாள். (https://thereader.com)
“தமிழ் நாட்டில் நீ எந்த ஊர்?”, என்று சுத்த தமிழில் கேட்டான் யுவன். அவன் தமிழில் பேசியதும் சந்தோஸமாக நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
அவள் மனதில் எண்ணியதை புரிந்து கொண்ட யுவன் “எனக்கு நம்ம பக்கம் இருக்குற எல்லா மொழியும் தெரியும். மாயாக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சரி உன்னோட ஊர் பேர் சொல்லு. உன்னை அங்க அனுப்பி வைக்கிறேன்”, என்றான் யுவன்.
அவன் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி விட்டான் தான். ஆனால் சொந்த ஊருக்கு அவளால் போக முடியுமா? அங்கே செல்வம் இருக்கிறான். மீண்டும் தன்னை இப்படி ஒரு இடத்தில் தான் விற்பான். அதையும் விட துரோகிகள் ஆன தன்னுடைய மாமா குடும்பம் அங்கே இருக்கும் போது அங்கே போய் என்ன செய்வது? தனக்கென்று யாருமே இல்லாத நிலையை அந்த நிமிடம் வெறுத்தாள்.
“நேக்கு யாரும் இல்லை. நான் ஒரு அநாதை. போக எந்த ஊரும் இல்லை”, என்றாள் சுசீலா.
அவள் சொன்னதும் அவன் கண்கள் மின்னியது. அவளுக்கு யாரும் இல்லை என்றால் இவளை இங்கேயே இருக்க வைத்து விடலாமா என்று எண்ணினான்.
“நீ மும்பைல எங்கயும் இருக்க முடியாது. இப்பவே ரெட்டி உன்னை தேட ஆரம்பிச்சிருப்பான். நீ எங்க போகணும்னு சொல்லு. நான் அனுப்பி வைக்கிறேன்”, என்றான் யுவன்.
“எனக்கு எங்க போகன்னு தெரியலை. எனக்கு யாருமே இல்லை”, என்று சோர்ந்து போய் பதில் சொன்னாள்.
அவள் அப்படி சொன்ன போது “உனக்கு நான் இருக்கிறேன்”, என்று சொல்ல வேண்டும் போல் யுவனுக்குள் ஒரு உணர்வு.
“நீ இங்கயே என் கூட இருக்குறியா?”, என்று அடுத்த நிமிடம் கேட்டே விட்டான். அவன் கேட்ட கேள்வியில் அவனுக்கே திகைப்பு என்றால் பெண்கள் இருவரும் அவனை விசித்திரமாக பார்த்தார்கள்.
“பாத்த கொஞ்ச நேரத்தில் என் கூடவே இருக்கியான்னு ஒரு பொண்ணு கிட்ட கேட்டால் எல்லாரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? நான் ஏன் அப்படிக் கேட்டேன்?”, என்று தன்னையே கடிந்தவன் “என்னோட அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அவங்களை இங்க இருந்து நீ பாத்துக்குறியான்னு கேக்க வந்தேன். இங்க நிறைய பேர் இருக்காங்க தான். ஆனா எல்லாருமே சாயங்காலம் அவங்க குவாட்ரஸ்க்கு போயிருவாங்க. மாயா சொன்னா அம்மா எதுவுமே கேக்க மாட்டாங்க. மாத்திரை கூட போட மாட்டாங்க. எங்க ரெண்டு பேர் கிட்டயும் ரொம்ப செல்லம் கொஞ்சுவாங்க. அதான் உன்னை இருக்க சொன்னேன். உனக்கு யாருமே இல்லை. அதனால நீ இங்கயே தங்கிக்கலாம். உனக்கும் பாதுகாப்பு கிடைச்ச மாதிரி இருக்கும். அதான் அப்படிக் கேட்டேன்”, என்றான்.
“இங்க அந்த ரெட்டியோட ஆட்கள் வரமாட்டாங்களா?”, என்று பயத்துடன் கேட்டாள் சுசீலா.
அவளைப் பார்த்து சிரித்தவன் மாயாவைப் பார்த்தான். அவளும் அண்ணனைப் பார்த்து புன்னகைத்தாள். “என்னை மீறி இங்க யாரும் வர மாட்டாங்க”, என்றான் யுவன்.
அவன் பதிலில் நிம்மதியானவள் அவனை பார்த்தாள். அவன் கண்கள் அவளை எதுவோ ஈர்க்க வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“மாயா அம்மா ரூம்க்கு அவங்களை கூட்டிட்டு போ”, என்று யுவன் சொன்னதும் :’வேண்டாம் வேண்டாம்”, என்று அவசரமாக மறுத்தாள் சுசீலா.
“ஏன் என்ன ஆச்சு?”, என்று கேட்டான் யுவன்.
“நான் குளிச்சு அஞ்சு நாள் மேல ஆகிருச்சு. குளிக்கணும்”, என்றாள்.
“அவ்வளவு தானே?”, என்றவன் “மாயா அவங்க ரூமைக் காட்டு. அப்புறம் உன்னோட டிரஸ் இருந்தா எடுத்துக் கொடு”, என்றான்.
“வாங்க“, என்று மாயா அழைத்ததும் அவளுடன் நடந்தவளை ஒரு சிரிப்புடன் பார்த்த யுவன் “ஒரு நிமிஷம் நில்லு”, என்றான்.
இருவரும் திரும்பி பார்த்ததும் “உன்னோட பேர் என்னன்னு சொல்லவே இல்லையே”, என்றான்.
“சுசீலா”, என்று மட்டும் சொல்லி விட்டு மாயாவுடன் சென்றாள்.
“சுசி”, என்று சொல்லிப் பார்த்துக் கொண்ட யுவன் டிவியை போட்டு நியூஸ் சேனல் வைத்தான்.
ஹைவே ரோட்டில் பயங்கரமான கொலை. கொலையாளி மாயம், போலீஸ் விசாரணை. கார் டிரைவருக்கு வலை வீச்சு என்று சரண் ரெட்டி சாவு பற்றி தான் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
தம்பியின் உடலை கட்டி அனைத்துக் கதறிக் கொண்டிருந்த பீமா ரெட்டியைப் பார்த்து சிரித்த யுவன் டிவியை நிறுத்தி விட்டு தன்னுடைய அன்னையைக் காணச் சென்றான்.
காதல் தொடரும்….