அத்தியாயம் 32 (1)
“அம்மு! ஓடாதடி! நில்லு! நானா பிடிச்சேன் சேதாரம் உனக்குதான்!” என்றபடி அந்த அதிகாலை பொழுதில், யாழினியை துரத்திக் கொண்டிருந்தான் கெளதம். ஆனால் அவளோ, சிறு குழந்தை போல இவனுக்குப் பழுப்பு காட்டியபடி, அந்த ஹோட்டலின் ஹனிமூன் சூட் அறையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அவர்கள் கம்பனியில் அமெரிக்காவில் பள்ளி விடுமுறை சமயம் இங்கேயும், பத்து நாள் விடுமுறையாக ஹாலிடே வரவிருப்பதால், திருமணத்திற்கு அதிகம் விடுப்பு எடுக்காத கெளதம், யாழினி, இப்பொழுது கூடுதலாக ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டு இரண்டு வாரம் ஹனிமூன் ட்ரிப்பாக ஷிம்லா வந்திருந்தனர். வந்த இடத்தில தான் இந்த அக்கப்போர். அதற்குக் காரணம், கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாப்போம்.
வந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று காலை சீக்கிரமே எழுந்துகொண்ட யாழினி, தன்னை இறுக அணைத்திருக்கும் கௌதமின் முகத்தையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவள், வெட்க புன்னகையுடன் குனிந்து அவனின் நெற்றியில் இதழ் பதிக்க, நேற்று இரவு நடந்தவை எல்லாம் கண்முன் ஓடியது. “நைட் எல்லாம் என்னைத் தூங்க விடாம சாருக்குத் தூக்கத்தைப் பாரு. ஏதாவது பண்ணுமே.” என்று தனக்குள் பேசிக் கொண்டவளுக்கு, ஒரு ஐடியா கிடைக்க, “வந்து வச்சுக்கிறேன் உங்களை!” என்றபடி எழுந்து குளித்து முடித்து வந்தவள், தன்னுடைய கண் மையை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த கௌதமின் உள்ளங்கை முழுவதும் தடவிவிட்டு, பின்பு பூச்சாடியில் இருந்து ஒரு குச்சியை உருவி, அதை அவன் முகத்தில் படறவிட, கூச்சத்தில் அசைந்த கெளதம், தன் கையை வைத்து முகத்தைத் துடைக்க, அவன் கையில் இருந்த கருப்பு மை, அவன் முகம் முழுவதும் அப்பியிருக்க, அவன் முகத்தைப் பார்த்து, பக்கென்று சிரித்துவிட்ட யாழினியின் சிரிப்பில் மெதுவாகக் கண் விழித்தவன், அவளின் புன்னகையைப் பார்த்து, பல்லை காட்டியபடி, “குட் மார்னிங் அம்மு!” என்று சொல்ல, கருப்பு முகத்தில், கண்களும், பற்களும் மட்டும் வெள்ளையாகத் தெரிய, அந்தக் காட்சியில் ஒரு படத்தின் காமடி காட்சி யாழினிக்கு நியாபகம் வர, இன்னும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“என்ன அம்மு?! எதுக்குச் சிரிக்கிற?!” என்று கெளதம் கேட்டதும், “உங்க …………உங்க “ என்று அவனின் முகத்தைக் கை காட்டியபடி மீண்டும் அவள் விழுந்து விழுந்து சிரிக்க, கெளதமோ, ‘என்னாச்சு இவளுக்கு! ஒருவேளை நைட்டோட நைட்டா அரக்கனா ஆகிட்டேனா??” என்றபடி கண்ணாடியை எடுத்து பார்க்க, அப்பொழுதுதான், யாழினி செய்து வைத்திருந்த அக்கபோரு தெரியவர, “அம்மு!!!!” என்றபடி அவளைத் துரத்த ஆரம்பித்திருந்தான்.
பல நிமிடங்கள் இவனுக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்தவளை, ஒரு கட்டத்தில் ஏமாற்றி, வளைத்து பிடித்தவன், “மாட்டுனியா நீ!!” என்று கூறிக்கொண்டே, அவள் இடுப்பில் கைகொடுத்து அப்படியே தூக்கிக்கொள்ள, யாழினியோ, “என்ன பண்ண போறீங்க??” என்று முகத்தைப் பீதியாக வைத்துக்கொண்டு கேட்க, “எனக்கு நீ மை பூசிவிட்டல, அதே மாதிரி உனக்குப் பூச போறேன்” என்று பதில் சொல்ல, “எ…எப்படி??” என்று அவள் பதில் கேள்வி கேட்க, “இப்படிதான்!” என்று சொன்னவன், அப்படியே அவளைக் கட்டிலில் தொப்பென்று போட்டுவிட்டு, அவள் மேல் கவிழ்ந்தவன், தன் முகத்தில் இருந்ததை, முத்த ஊர்வலத்தின் வாயிலாக, அவள் உடல் முழுவதும் பூச, முத்தத்தில் ஆரம்பித்ததை, கூடலில் கொண்டு போய் முடித்து, தான் நினைத்ததையும், அவள் நினைக்காததையும் செய்து முடித்த பின்பே அவளை விடுவித்தான் கெளதம்.
அடுத்து காலை உணவை முடித்துக்கொண்டு, ஹோட்டலை விட்டு கிளம்பி வந்தவர்கள், அந்த அதிகாலை வெயில், குளிர் பனி என்று இரண்டும் கலந்த அந்த அழகிய வானிலையை ரசித்துக்கொண்டே ஊர் சுற்றினார். jakhoo slope, scandal point, state museum, naldehra and shally peak, chadwick falls, kufri, tattapani (hot water spring located on the bank of river sutlej), ridge, jakhoo temple, chail, tara devi temple, annadale, போன்ற ஷிம்லாவின் பிரபல சுற்றுலா இடங்களை அந்த இரண்டு வாரங்களும் சுற்றியவர்கள், கைவினை பொருட்கள், கம்பளி துணிகள், போன்றவற்றுக்குப் பிரபலமான mall, lakkar bazar, tibetian market, Emporium, lower bazaar போன்ற இடங்களில் ஷாப்பிங் செய்து, குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டனர்.
இவ்வாறு தெகட்ட தெகட்ட தேனிலவை கொண்டாடியவர்கள், இரண்டு வாரம் கழித்துச் சென்னை வந்து சேர்ந்தனர். வீடு வந்து சேர்ந்ததும், ஷிம்லாவில் இருந்து வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தாள் யாழினி. சேகருக்கு கைத்தறி சால்வையும், ஜெய்க்கு, ஸ்வெட்டர் மற்றும் வாட்ச் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினாள். பின் மாலை கௌதமுடம் இனியனின் வீட்டிற்குச் சென்ற யாழினி, சேகருக்கு வாங்கிய அதே மாடலில் தன் பெற்றோருக்கு, வாங்கி இருந்த சால்வையையும், கூடவே அன்னைக்கு வாங்கியிருந்த கைவினை பொருட்கள் சிலவற்றையும் கொடுத்தவள், ஜெய்க்கு வாங்கியது போலவே, இனியனுக்கு வாங்கி இருந்த, ஸ்வெட்டர் மற்றும் வாட்ச்சையும் அவனிடம் கொடுத்தாள். அதன்பின் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் நேரம், தன் போன மாத சம்பள பணத்தை இனியனிடம் கொடுத்தவள், நாளை ஊருக்குப் போனதும், பெற்றோரிடம் கொடுத்துவிடும்படி கூறினாள்.
தான் நேரடியாகக் கொடுத்தாள், பெற்றோர் நிச்சயம் வாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். முன்பு என்றால் பரவா இல்லை. ஆனால் இப்பொழுது திருமணம் ஆகிவிட்டதால், தன் சம்பள பணத்தை வாங்க மறுத்து விடுவார்கள், அதுவே அண்ணனிடம் கொடுத்து அனுப்பினாள், எப்படியாவது வாங்க வைத்துவிடலாம் என்று நினைத்திருந்தாள். கூடவே, அவர்கள் ஊரில் அடுத்த வாரம், கோவில் கொடை. அதற்கு இவளும் கௌதமும் விருந்துக்குச் செல்வதால், தந்தைக்குச் செலவுக்குப் பணம் தேவைப்படும் என்பதை இவள் உணர்ந்திருந்தாள். ஆகையால் தான், இனியன் மறுக்க மறுக்க அவன் கையில் சம்பள பணத்தைத் திணித்திருந்தாள்.
ஆனால் இனியனோ அதை வாங்காமல், பாவமாகக் கௌதமை பார்த்தவன், “ஏன் மச்சான், நீயாவது சொல்லகூடாதா, இதெல்லாம் எதுக்கு?? அவளுக்குச் செலவுக்குத் தேவைப்படும்ல?” என்று மச்சானை துணைக்கு அழைக்க, கெளதமோ, “அவ கொடுக்கிறதுல என்ன தப்பு இருக்கு மச்சான். ஆம்பள பிள்ளைங்களைப் படிக்க வைக்கப் பெத்தவங்க எவ்வளவு கஷ்டபட்டாங்களோ, அதே மாதிரி தான் பொண்ணைப் படிக்க வைக்கவும் கஷ்டபட்டிருப்பாங்க. பையனுங்க எப்படிப் பெத்தவங்களுக்குக் கடமை பட்டு இருக்காங்களோ, அதே மாதிரி தான், பொண்ணுங்களும் பெத்தவங்களுக்குக் கடமை பட்டிருக்காங்க. ஆம்பள பசங்களுக்காவது, கடைசிக் காலம் வரை பெத்தவங்களைக் கூட இருந்து பார்த்துக்கச் சந்தர்ப்பம் கிடைக்குது. ஆனா அந்தச் சந்தர்ப்பம் கூடப் பொண்ணுங்களுக்குக் கிடைக்குறது இல்லையே. அப்போ அட்லீஸ்ட், தன் பெத்தவங்க வாங்கிகொடுத்த டிகிரீல சம்பாரிச்ச சம்பளத்தைப் பெத்தவங்ககிட்ட கொடுக்கிறதுல என்ன தப்பு?? அதுமட்டுமில்லாம, என் பொண்டாட்டியோட செலவை என்னால பார்த்துக்க முடியும் மச்சான். அவ சம்பாரிச்சு தான் அவ செலவை பார்த்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அப்பாக்கும் பென்ஷன் பணம் வருது. சோ, எங்க ரெண்டு பேரோட சம்பளம், நாளுக்குப் பேருக்கு போதும். இதுக்கு மேல உன் தங்கச்சி சம்பளம் வந்துதான், வீடு நிறையப் போகுதுன்னு இல்லை. அது அவ உழச்சு சம்பாதிச்சது. அவ பெத்தவங்களுக்குக் கொடுக்கிறா. இதுல நான் சொல்ல எதுவும் இல்லை. இதை ஏற்கனவே என்கிட்டே சொல்லவும் செஞ்சுட்டா. யோசிக்காம, வாங்கிக்கோ மச்சான்.” என்று நீண்ட விளக்கம் கொடுக்க, அண்ணன் தங்கை இருவரும் அவனைப் பெருமையாகப் பார்த்தனர். இனியன் வார்த்தையில் தன் நன்றிகளைக் கூற, யாழினியோ, கலங்கி இருந்த தன் கண்களின் மூலம், காதலுடன் கலந்த தன் நன்றிகளை உணர்த்தினாள்.
பணத்தைப் பெட்டியில் வைக்கவென இனியன் உள்ளே சென்றதும், தன் மனைவியின் அருகில் குனிந்த கெளதம், “என்ன அம்மு நீ!! இதுக்கெல்லாமா கலங்குவாங்க. உன்னை இப்படிப் பார்த்தா மச்சான் மனசு கஷ்டப்படப் போகுது. மொதல்ல கண்ணைத் துடை, இல்லைன்னா வெளியிடம்ன்னு பார்க்க மாட்டேன். என் லிப்ஸ் வச்சு துடைச்சுவிடுவேன். எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.” என்று சிரிப்புடன் சொல்லவும், கஷ்டப்பட்டுப் புன்னகைத்தவள், “தேங்க்ஸ்ங்க!!” என்றாள் நன்றியுடன். அவளின் நன்றியை கேட்டு “அம்மு!! அடிவாங்க போற. நமக்குள்ள எதுக்குத் தேங்க்ஸ்.” என்று பொய்யாக இவன் முறைக்க, அவளோ புன்னகையுடன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
சொன்னது போலவே, தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவளின் ஊர் கோவில் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றான் கெளதம். நல்லவேளை, விடுமுறை தினத்தில் திருவிழா வந்தது, அவர்கள் இருவருக்கும் வசதியாகப் போயிற்று. வியாழக்கிழமை ஊருக்கு கிளம்பி சென்றவர்கள், திங்கள் மதியம் தான் சென்னைக்குத் திரும்பினர்.
அங்கிருந்த மூன்று நாட்களும், யாழினி, கௌதமை ஒரு இடத்தில் உட்காரவிடவில்லை. தான் படித்த பள்ளிகூடம், விளையாடிய இடங்கள், ஆடு, மாடு, கோழி, தோழிகள் வீடு, அவள் அடிக்கடி செல்லும் தோப்பு, வயல், கோவிலுக்குப் பின்னால் இருக்கும் விளையாட்டு மைதானம், மிட்டாய் வாங்கிச் சாப்பிடும் பலசரக்குக் கடை, சினிமா பார்த்த சிறிய தியேட்டர் என, ஊரில் ஒரு தெரு விடாமல் சுற்றி காட்டியதோடு, எல்லா இடத்திலும் அவனுடம் விதவிதமான முகபாவனையுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாள்.
திருவிழா அன்று, அன்னையின் அறிவுறுத்தலின் பேரில், பெரிய கரை போட்ட, அழகிய மாம்பழ நிற பட்டு புடவையைக் கட்டி, சிறிய அளவில் நகை போட்டு, ஜடை பின்னி, அதில் மல்லிகை பூவை சூடி, அழகிய மங்கையாக யாழினி காட்சி அளிக்க, அவளைப் பார்த்த கெளதமோ, தன் கண்களை அவள் மேல் இருந்து எடுக்க முடியாமல் திணறினான்.
மாலை திருவிழா நேரம், யாழினியின் தந்தையும், அண்ணனும் கோவிலுக்குக் கிளம்பியது, யாழினியை அழைத்த அவள் தாய், கௌதமிற்கு, குடிக்கக் காபீ போட்டு கொடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்துக் கோவிலுக்கு வரும்படி கூறிவிட்டு சென்றார். ஏனெனில், புதிதாகத் திருமணம் ஆனவர்கள், அங்கே போய்ச் சும்மா உட்காரும் நேரம், எல்லோரும் இவர்களைப் பார்க்க நேர்ந்தால், கண்திருஷ்டி பட்டுவிடும் என்று நினைத்திருந்தார். இந்தச் சாக்கில் மகளுக்கும் மருமகனுக்கும் தனிமை கொடுத்துவிட்டு சென்றார்.
அனைவரும் கிளம்பிய அடுத்த நொடி, வாசலில் நின்றிருந்த தன் மனைவியின் இடுப்பில் கைகொடுத்து, தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்ட கெளதம், “அம்மு, கலக்குற டி. அப்படியே கோவில் சிலை மாதிரி.” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், மேலும் முன்னேற போக, அவனிடம் இருந்து கஷ்டப்பட்டு விலகியவள், “வேண்டாம் மாமா. கோவிலுக்குப் போகும்பொழுது, இதெல்லாம் தப்பு.” என்று சிறு குழந்தையென முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, அவளின் ‘மாமா’ என்ற அழைப்பில் கிறங்கி போன கெளதம், “அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை டி, என் பொண்டாட்டி.” என்றவன், பாய்ந்து சென்று மீண்டும் அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “அது என்னடி, புதுசா மாமான்னு சொல்ற. கேட்கும்போதே கிக்கா இருக்கு.” என்று கூற, யாழினியோ, வெட்கத்துடன் கீழே குனிந்துகொண்டு, “அம்மா தான் அப்படிக் கூப்பிட சொன்னாங்க.” என்று சொல்ல, “இதுகூட நல்லா தான் இருக்கு அம்மு.” என்றவன், அவள் இதழ்களில் நீண்ட முத்தத்தை வைத்தபின்னே அவளை விடுவித்தான். அன்றில் இருந்தே அவர்களின் தனிமை நேரத்தில் அவளின் ‘மாமா’ என்ற அழைப்பு வழக்கமானது.
இப்படியே, அன்பும், காதலும், கூடலும், ஊடலுமாக அவர்களின் திருமண வாழ்க்கை ஆறு மாதத்தை கடந்திருக்க, ஒரு நாள், வேலை முடிந்து கௌதமுக்கு முன்பே வீட்டிற்கு வந்த யாழினி, தன் கையில் இருந்த சாவியை வைத்து வாசல் கதவை திறந்து வீட்டிற்குள் வர, ஹால் தரையில் கௌதமின் தந்தை, சேகர் மயக்கபோட்டு விழுந்திருப்பது தெரிய, “மாமா!!!” என்ற அலறலுடன் அவரின் அருகில் சென்று மூச்சை பார்த்தவளுக்கு, அவரின் மயக்கம் புரிய, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துமனைக்குச் சென்றவள், உடனே அங்கே அட்மிட் செய்து, பார்மாலிட்டிட்ஸ் எல்லாம் முடித்துச் சேர்க்கை கட்டணம் எல்லாம் கட்டிவிட்டு, மருத்துவர் அவரைச் செக் செய்யும் நேரம், கௌதமிற்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவனோ அடித்துப் பிடித்துக் கிளம்பி வந்தான்.
கெளதம் மருத்துவமனைக்கு வரவும், செக் செய்து முடித்துவிட்டு வெளியே வந்த மருத்துவர், “லோ பி.பீ. அதான் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க. மெடிசன்ஸ் எழுதி கொடுத்து இருக்கேன். உடம்பு சரி ஆகுற வரைக்கும், யாரவது பக்கத்தில இருந்து பாரத்துக்கோங்க. மெடிசின்ஸ் கரக்டா எடுத்துகிட்டா எதுவும் ப்ராப்ளம் இல்லை. டேக் கேர்.” என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் சென்றதும், “தேங்க்ஸ் டா அம்மு!” என்று கண்கள் கலங்க யாழினியிடம் கெளதம் சொல்ல, “என்னங்க நீங்க, என்கிட்டே தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. மொதல்ல அவரு எனக்கு அப்பா, அப்புறம் தான் மாமா. என் அப்பாவை நான் பார்க்காம, வேற யார் பார்த்துகிறது. கண்ணைத் துடைங்க.” என்று சொல்ல, அவளைப் பெருமையுடன் பார்த்தான் இவன்.
இதற்கிடையில், பேங்கில் லோன் போட்டு அவசரத்துக்கு உதவும் என்று கார் வாங்கினான் கெளதம். சேகரின் திடீர் மயக்கம், அவனைக் கொஞ்சம் பயம்கொள்ளச் செய்திருந்தது. அன்றைய தினம் ஆட்டோ பிடித்துப் போவதற்குள் யாழினி எவ்வளவு, பரிதவித்துப் போயிருப்பாள் என்று அன்றைய நிகழ்வை நினைத்தவன், அதற்காகவே உடனே கார் ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து வாங்கியிருந்தான்.
அதன் பின் வந்த நாட்கள், சேகரை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டாள் யாழினி. கிடைக்கும் நேரங்களில் அலுவகத்திற்கு லீவ் போட்டுவிட்டு, சேகரை பார்த்துக்கொண்டாள். நேரம் தவறாமல் அவருக்குத் தேவையான உணவுகளைச் செய்து, அவரை உண்ண வைத்து, மாத்திரைகளை நேரத்துக்குக் கொடுத்து, என்று அவருக்குத் தேவையானவற்றை முகம் சுளிக்காமல் செய்தாள். அலுவகம் செல்லும் நேரம், அவரது மொபைலில், மாத்திரை எடுக்க வேண்டிய நேரத்துக்கு ரிமைன்டர் அலாரம் செட் செய்து, அத்தோடு பக்கத்துக்கு வீட்டு பெண்மணியிடமும் ஒருவார்த்தை சொல்லிவிட்டு தான் செல்வாள். வேலை நேரத்திலும், சரியான நேரத்திற்குச் சேகருக்கு போன் செய்து, அவர் உணவு, மாத்திரை எல்லாம் எடுத்துக்கொண்டாரா என்று தவறாமல் விசாரிப்பாள். இப்படியாக அவருக்குப் பெற்ற மகளாகவே மாறி போனாள்.
அவருக்கு அப்படி என்றாள், ஜெய்யை தன் உடன்பிறந்த தம்பியாகவே பார்த்துக்கொண்டாள். தினமும் இரவு உணவு முடிந்ததும், அவனின் கல்லூரியில் நடந்தவற்றை, பாடம் சம்பந்தவற்றை என்று எல்லாம் கேட்டுக்கொள்பவள், பாடத்தில் அவனுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து, ரெகார்ட் வொர்க், சார்ட் வொர்க், என்று அவனது வகுப்பில் கொடுக்கும் வேலைகளிலும், அவனுக்கு உதவி செய்து, என்று எல்லாம் செய்தாள்.
நாளடைவில், ஜெய்யே அவளிடம் அன்றைய நிகழ்வுகளைத் தானே சென்று சொல்பவன், சில சமயங்களில், கல்லூரி கலாட்டாகளையும், பெண்களைக் கிண்டல் செய்வதையும் சொல்பவன், ‘இன்னைக்கு ரோட்டில ஒரு பொண்ணு பார்த்தேன் அண்ணி. அழகா இருந்துச்சு.’, ‘காலேஜ்ல அந்தப் பொண்ணு என்கிட்டே ரொம்ப வழியுது அண்ணி.‘ என்று இளமையின் கலாட்டாக்களையும், எந்த வித ஒலிவு மறைவும் இல்லாமல் தன் மனதில் இருக்கும் எல்லாவற்றியும் யாழினியுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.
சில சமயம், ஜோக் சொல்லி அவர்களுக்குள் சிரிக்கும் சத்தம், அந்த வீட்டையே சிரிப்பில் ஆழ்த்தும். அந்த நேரங்களில், “என்ன ஜெய், அவ்ளோ சிரிப்பு. ரூம் வரைக்கும் கேக்கு.” என்றபடி கௌதமும் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளபவன், என்ன விஷயம் என்று தெரிந்ததும், “டேய்! காலேஜ்ல படிக்காம, பொண்ணைச் சைட் அடிக்கிறியா!!” என்று சில சமயம் தம்பியை கிண்டலுடன் கடிய, அந்த நேரம், “பின்ன, உங்கள மாதிரி அம்மாஞ்சியா இருப்பாங்களா! சும்மா சைட் தான அடிக்கிறான். இப்போ என்ஜாய் பண்ணாம, வேற எப்போ பண்ணுவாங்களாம், உங்களை மாதிரி அரைக் கிழவன் ஆனபிறகா??“ என்று கௌதமுக்கு கவுண்டர் கொடுக்கும் யாழினி, சிரிப்புடன் ஜெய்க்கு ஹை – பை கொடுப்பாள்.
“அம்மு! நான் அரைக் கிழவனா??” என்று பதிலுக்குத் தேவை இல்லாமல் சிலிர்த்தெழும் கெளதம், “நான் சைட் அடிச்சு நீ பார்த்ததில்லையே. காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க என் பின்னாடி சுத்தி இருக்காங்க தெரியுமா?? ஹம், என்னோட கெப்பாசிட்டி உனக்கு எப்படித் தெரியும்.” என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டே, திரும்ப, யாழினியோ, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி, ஸ்பெயின் காளை போல, புஸு புஸுவென மூச்சு விட்டுகொண்டே அவனை முறைத்துக் கொண்டிருப்பாள்.
அவளைப் பார்த்ததும் தான், ‘கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ!!’ என்று மனதுக்குள் இவன் நினைக்க, அங்கே ஜெய்யோ, ‘அய்யய்யோ! சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டியே அண்ணே. இன்னும் சிறிது நேரத்தில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பம்.’ என்று, மைன்ட்வாயிஸ் என்று நினைத்து சத்தமாகவே சொல்லிவிட, “ஜெய்!” என்று உறுமியபடி அவன் பக்கம் திரும்பிய யாழினி, “உன்கிட்ட இருக்கிறதுலையே, பெரிய புக்கா எடுத்து கொடு.” என்று குரலில் தீப்பொறி பறக்க சொல்ல, அடுத்த நொடி, அண்ணனின் முறைப்பையும் மீறி, அண்ணி கேட்டதை எடுத்து கொடுத்த ஜெய், “அண்ணா, ஆல் த பெஸ்ட்! அண்ணி, ரெடி ஸ்டார்ட். மீ எஸ்கேப்.” என்றபடி அங்கிருந்து ஓடி விடுவான்.
அடுத்து அங்கு நடந்த அக்கபோரில் உடம்பில் ஒரு இடம் விடாமல், ஊமைக்குத்து விழுந்து, கௌதமின் சட்டை கிழிந்து தொங்கியது எல்லாம் வெளியே சொல்லமுடியாத (சொல்ல தெரியாத) ரகசியம். இப்படி ஒவ்வொரு முறையும், தேவை இல்லாமல் வாயை விட்டு, அடிகளையும் வாங்கிகொண்டு வெளியே வரும்பொழுது, “கல்யாணத்துக்கு முன்னாடி இந்தப் பூனையும் பால்குடிக்குமா ரேஞ்சுக்கு இருந்துட்டு, இப்போ என்னடான்னா, புருசனையே புறட்டி எடுக்குறா. அம்மே! வாய் ஒரு பக்கமா கோனிக்கிசே!” என்று சொல்லிக்கொண்டே, அவ்வையார் மாதிரி முதுகு வளைந்து அறையை விட்டு வெளியே வருவது வழக்கமாகி விட்டது கௌதமிற்கு.
இவ்வாறு, சேகருக்கு மகளாக, ஜெய்க்குத் தாயாக, இவை இரண்டும் சேர்ந்து, கௌதமிற்கு மனைவியாக என்று அந்த வீட்டின், மகாலட்சுமியாக, இருந்தாள் யாழினி. அந்தச் சந்தோஷத்தில், தனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பதையே அவள் மறந்து போயிருந்தாள். அதைப் பற்றிய நினைவும் அவளுக்கு இல்லை. கிராமத்தில் இருந்தால், ஒருவேளை அக்கம் பக்கத்தினரின் விசாரிப்பில், குழந்தை பற்றிய விஷயம் மனதுக்குள் இருந்திருக்குமோ?? ஆனால், இங்கே, இந்தப் பிசியான சென்னை அபார்ட்மெண்ட் வாழ்கையில், பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்று கூடப் பார்க்காத மக்களுக்கு மத்தியில், அதைபற்றிப் பேச ஆள் இல்லை. ஆயினும், இதில் விதிவிலக்காக, மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசியே காலம் கழித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்