நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணாமலை கோயில் பிரகாரத்தை சுற்றி விட்டு விழுந்து கும்பிடும் இடத்தில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்து வந்து உட்கார்ந்தார்.
சுதாராணி அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“அப்பா சீக்கிரம் வாங்க போகலாம்.” என்று அவசர படுத்தினாள்.
“சரிமா.” என்று கூறியபடி எழுந்திரிக்க முற்பட்டார்.
அதேநேரம் ஒருவர் அவரை தாண்டி நடந்து போகும்போது அவர் கையில் இருந்த விபூதி காற்றில் பறந்து இவர் கண்ணில் பட்டது.
கண்ணில் விபூதி பட எழுந்த அண்ணாமலை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தார்.
இவரை கவனித்த சுதாராணி
“கண்ணுல என்ன ஆச்சு அப்பா?” என்று கேட்டாள்.
“விபூதி பட்டுடுச்சுu நினைக்கிறேன்.” என்று கூறிக்கொண்டே கண்ணை கசக்கினார்.
அவரை கவனித்த அந்த ஒருவர்
“சாரி தெரியாம விபூதி பறந்து உங்க கண்ணுல பட்டுடுச்சு. சாரி” என்று மீண்டும் மீண்டும் சாரி சொல்லியபடி குனிந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தார்.
கண்களை துடைத்துக் கொண்டு கண்ணை திறக்க முயற்சித்தார் அண்ணாமலை.
அப்போது “சுதாராணி கொஞ்சம் இருங்கப்பா.” என்று கூறியபடி அவர் கண்ணை திறந்து ஊதி விட்டாள்.
இப்பொழுது அவர் கண்ணை திறக்க முடிந்தது.
அந்த ஒருவர் மீண்டும் “சாரி” என்றபடி அண்ணாமலையை பார்த்தார்.
அண்ணாமலை அந்த ஒருவரைப் பார்த்ததும் திகைத்தார்.
“நீங்க நீங்க சிதம்பரம் தானே?” என்று சந்தேகமாகவே கேட்டார் அண்ணாமலை.
“ஆமாம். நீங்க நீங்க அண்ணாமலையா?” என்று அவர் கேட்டார்.
“ஆமாம் நான் அண்ணாமலை தான். சிதம்பரம் எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தார்.
“என்னடா நீ வாங்க, போங்கன்னு கூப்பிடற? நீ வா போnu கூப்பிடு.” என்று உரிமையோடு கூறினார் சிதம்பரம்.
“நான் நல்லா இருக்கேன். உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு? நீ எப்படி இருக்க?” என்று ஆர்வத்துடன் விசாரித்தார் சிதம்பரம்.
“நான் நல்லா இருக்கேன்டா. நீ சென்னை வந்து விட்டதா நான் கேள்விப்பட்டேன். அதுக்கப்புறம் உன்னை பற்றி எதுவும் கேள்வி படல. “
“ஆமாண்டா. நான் வள்ளியை கூட்டிக்கிட்டு சென்னை வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆயிட்டேன். எங்க ரெண்டு பேர் வீட்லயும் எங்கள சேர்த்துக்கொள்ளவில்லை. அதனால ஊர் பக்கம் ரொம்ப போறது கிடையாது. எப்பயாவது அப்பா அம்மாவை பார்க்க வருவேன். ஆனால் அவர்களும் என்கிட்ட முகம் கொடுத்து பேசுவது கிடையாது.” என்றார் வருத்தமாக
“சரிடா. கவலை படாதே. சீக்கிரம் உன்னை சேர்த்துக் கொள்வார்.” என்றார் அண்ணாமலை.
“சரி அண்ணாமலை. என்னோட கதையை விடு. நீ எப்படி இருக்க? திருச்சி போய் விட்டதா கேள்விப்பட்டேன். “
“ஆமாண்டா நான் திருச்சியில் குடும்பத்தோடு இருக்கிறேன். அங்க அண்ணாமலை ஸ்டோர்ஸ் நடத்திக்கிட்டு இருக்கோம். எனக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணு பெரியவனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. சின்ன பையன் எம்.பி. ஏ முடிச்சுட்டு அண்ணாமலை ஸ்டோர்ஸ் நடத்திக்கிட்டு இருக்கான். பொண்ணு காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்கா. ஒரு பேரன் மருமகள் நாங்க எல்லோரும் ஒரே வீட்டிலே கூட்டுக் குடும்பமா இருக்கிறோம்.”
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா. எங்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இருக்காங்க. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல. பொண்ணுக்கு தான் வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.” என்றார்.
“நான் கூட என் சின்ன பையனுக்கு வரன் பார்த்துக் கொண்டு தான் டா இருக்கேன். முருகன் நல்ல வழி காட்டணும்” என்றார் அண்ணாமலை.
“காட்டுவார்” என்று சிதம்பரம் கூறும் பொழுது மதுமிதாவும் வள்ளியும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சிதம்பரத்திடம் வந்தனர்.
“இவள் தான் என் பொண்ணு மதுமிதா.”என்று சிதம்பரம் மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது கைப்பேசி ஒலித்தது.
சுதாராணி தான் எடுத்து பேசினாள்.
அண்ணாமலை “நான் பிரண்டு கிட்ட பேசுறnu அவன் என்கிட்ட சொல்லிடாத.” என்று கூறியதால் அவள் மாதவனிடம் சிதம்பரத்திடம் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்ததை சொல்லவில்லை.
“ஏன்டா சொன்னால் என்ன?” என்று கேட்டார் சிதம்பரம்.
“அவன் ஏதோ பிரண்டை பார்க்கணும்னு சீக்கிரமா வர சொல்லிட்டு இருக்கான். அதான் அப்படி சொல்ல சொன்னேன்.” என்று விளக்கம் கொடுத்தார் அண்ணாமலை.
“அவருக்கு ஏதோ வேலை இருக்கு அதனாலதான் அப்படி சொல்றாரு.” என்று முன்பின் பார்த்திராத அவனுக்கு பரிந்து பேசினார் சிதம்பரம்.
“அது சரிதான். இருந்தாலும் உன்னை நான் ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்திருக்கிறேன். ரெண்டு வார்த்தை நிம்மதியா பேச விட மாட்டேங்கிறான்.” என்று சலித்துக் கொண்டார் அண்ணாமலை .
அண்ணாமலையின் தொலைபேசி மீண்டும் ஒலித்தது.
அண்ணாமலை அதை எடுத்து “கொஞ்ச நேரம் நிம்மதியா பேச…” என்று ஆரம்பித்து மாற்றிக் கூறி கைபேசியை துண்டித்தார்.
பிறகு “இவள் தான் என் பொண்ணு சுதாராணி.” என்று அவளை அறிமுகம் செய்து வைத்தார் அண்ணாமலை.
மதுமிதா சுதாராணி இருவரும் “ஹாய்” சொல்லிக் கொண்டனர்.
“நீங்கள் என்ன படிக்கிறீங்க?” என்று கேட்டு இருவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.
தொடர்ந்து சுதாராணி தன்னுடைய படிப்பை பற்றி கூறினாள். மதுமிதா தன்னுடைய வேலையை பற்றி பேசினாள்.
மதுமிதாவுக்கு சுதா ராணியை பிடித்துப்போனது. சுதா ராணிக்கும் அப்படித்தான்.
சிறிது நேரம் பேசிய பிறகு மதுமிதா தாயிடம் வந்து
“அம்மா எனக்கு நிறைய வேலை இருக்கு. போகலாமா?” என்று ரகசியமாக கேட்டாள்.
“சரி நீ போய் காரை எடுத்துட்டு வந்து கோயிலுக்கு முன்னாடி வெயிட் பண்ணு.” என்று வள்ளி கூற அவள் சிதம்பரம் அண்ணாமலை மற்றும் சுதா ராணியிடம் விடைபெற்றுக்கொண்டு பார்க்கிங்க்கிற்கு வந்தாள்.
வந்து காரை எடுக்கும் பொழுது யாரோ ஒருவன் திடீரென்று கவனிக்காமல் குறுக்கில் வரவும் மதுமிதா பிரேக் போட்டு நிறுத்தினாள்.
குறுக்கே வந்த அவன்மீது கோபம் பொங்க ஹாரன் அடித்தாள். ஆனாலும் தடுமாறிக் கொண்டிருந்த அவனை கண்டதும் கோபம் அதிகமாக ஜன்னலை திறந்து
“கார் வர்றது தெரியல ?”என்று கோபமாக கேட்டுவிட்டு மீண்டும் ஜன்னலை மூடினாள்.
அப்போதுதான் அவளுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது. யோசித்தாள்.
“ப்ளூ ஷர்ட்! ப்ளூ ஷர்ட் போட்டு இருந்தான் தானே! அதே மாதிரி ஹேர் ஸ்டைல், அதேமாதிரி உயரமா இருக்கான். அவனாக இருக்குமோ?” என்று நினைத்துக்கொண்டு
“ப்ளூ ஷர்ட்” என்று கூப்பிட்ட படி ஜன்னலை திறந்தாள்.
ஆனால் அது அவன் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. அல்லது விழுந்தும் அவன் கவனிக்காமல் செல்லுகிறான் என்று சந்தேகம் கொண்டவள்
மீண்டும் “ஹலோ ப்ளூ ஷர்ட் கொஞ்சம் திரும்புங்க.” என்று வேகமாகவே கூப்பிட்டாள்.
ஆனால் அவன் திரும்பவே இல்லை.
கையிலிருந்த தொலைபேசியியை காதுக்கு கொடுத்து யாரிட மோ பேச ஆரம்பித்து விட்டான். போன் அடிக்கவே இல்லை. யார் கிட்ட இவன் பேசறான் இல்லை இவன் யாருக்காவது போன் பண்ணி பேசுறானா? நாம கூப்பிட்டது காதுல விழுந்துச்சு இல்லையா? தெரியலையே’ என்று யோசித்தாள்.
‘வண்டியை விட்டு கீழே இறங்கி போய் அவனை பார்க்கலாமா?’ என்று யோசிக்கும்போதே ஒரு கார் ஹாரன் அடித்தது.
அவள் காரினை அந்த தெருவில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடைஞ்சலாக நடுவில் நிறுத்தி இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.
எனவே காரிலிருந்து இறங்கி அவனை பின் தொடர வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு காரை அங்கிருந்து ஓட்ட ஆரம்பித்தாள்.
கோயிலின் முன்பு காரை நிறுத்திவிட்டு பெற்றோர்களை தேடினாள்.
அப்படியே அவனையும் தேடினாள். ஆனால் அவன் அவள் கண்களில் படவே இல்லை.
மதுமிதா கூப்பிடுவது காதில் விழுந்தாலும் மாதவன் அது காதில் விழாத மாதிரி கைப்பேசியில் பேசுவது போல பாவனை செய்துவிட்டு அங்கிருந்து நழுவி விட்டான்.
சிறிது தூரம் அப்படியே வந்தபிறகு யோசித்தான். அவள் பேசிக் கொண்டிருக்கும்போது” சீக்கிரம் வாங்க அப்பா” என்று கூறியது ஞாபகம் வந்தது.
‘அப்படி என்றால்? அப்போ என் வருங்கால மாமனார் கோயில்ல தான் இருக்காரா? அட இவ்வளவு நேரமா எனக்கு இது தெரியாம போச்சே!’ என்று நினைத்தவன் வேகவேகமாக கோயிலுக்குள் நுழைந்தான்.
கோயில் முழுதும் சுதாராணி,
சிதம்பரத்தை தேடினான்.
தேடி களைத்துப் போய் ஓரிடத்தில் நின்றான்.
‘ஆஞ்சநேயர் சன்னதியில் இருப்பதாக சொன்னாரு. இங்க இல்லையே எங்கதான் போனார்களோ’ என்று எரிச்சல் பட்டுக் கொண்டான்.
அப்போது அவனை ஒருவர் தோள் தொட்டு “தம்பி” என்று கூப்பிட்டார்.
‘இந்த நேரத்துல யாருடா இது?’ என்று சலித்துக் கொண்டு திரும்பினான். அங்கு சிதம்பரம் நின்றுகொண்டிருந்தார்.
கோயிலுக்குள் மிகவேகமாக வந்துகொண்டிருந்த மாதவனை பார்த்த அண்ணாமலை “டேய்”. என்று கூப்பிட்டார்
ஆனால் அவன் காதில் அது விழவில்லை. அண்ணாமலை, சிதம்பரம், சுதாராணி, வள்ளி நால்வரும் தரையில் உட்கார்ந்து இருந்தனர்.
ஆனால் மாதவன் நின்று, நடந்து கொண்டிருந்த எல்லோரையும் பார்த்து அதில் தந்தையை தேடிக்கொண்டிருந்தான்.
அவன் பார்வையை கவனித்த அண்ணாமலை
“எப்படி மேல பாத்து தேடிக்கிட்டு இருக்கான் பாரு. கீழே பார்க்கவே மாட்டேங்குறான். சரி நான் போய் கூட்டிட்டு வரேன்.” என்று சிதம்பரத்திடம் கூறினார்.
“அண்ணாமலை யாரை கூட்டிட்டு வர போகிற?” என்று கேட்க
“நான் உன்கிட்ட சொல்லவே இல்லை இல்ல. அதான் என் பையன் கோயிலுக்குள்ள என்ன தேடிக்கிட்டு இருக்கா. பாரு. நீல கலர் சட்டை போட்டு இருக்கான் இல்ல. அவன் தான்.” என்றார் அண்ணாமலை கண்களை மீண்டும் கசக்கியபடி.