தள்ளிபோகாதே 8
தேவிகாவின் இல்லம்
அன்று நீதிமன்றத்தில் இருந்து வீட்டின் நுழைவாயிலில் நுழையும் போது தேவிகா தன் கண்களில் வழிந்த கண்ணீரையும் தன் முகம் சோர்வுற்றிருப்பதையும் வெளிக்காட்டாது தண்ணீரில் முகத்தை அலசினாள். இது வழக்கமாக நடப்பது தான் இருந்த போதிலும் இன்று அவளால் துளி கூட தாங்கமுடியவில்லை. தேவிகா ஏன் இப்படி அழுகிறாள்? அவளுக்கு விவாகரத்தில் சூர்யாவின் சம்மதம் தானே முக்கியம் அப்படியிருக்க இந்த அழுகையின் பின்னால் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்…
அவள் அறையில் குழந்தை அழுது கொண்டிருப்பது அவள் காதில் விழவே தன் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டாள். தன் தாயிடம் எதையும் வெளிக்காட்டாது தன் அறையில் சென்று கதவை பூட்டிவிட்டு விம்மி விம்மி அழ தொடங்கினாள் சூரியாவின் புகைபடத்தை பார்த்து. காரணம், சூரியா விவாகரத்துக்கு சம்மதித்ததா அல்லது அவளது அண்ணன் சூரியாவை அடிக்க கை ஓங்கியதா என்பது அவளுக்கு தான் தெரியும்.
கொஞ்ச நேரம் அழுகைக்கு பின்னால் தன் தாயின் குரலுக்கு செவி சாய்த்தவள் வீட்டிலுள்ள அனைவரோடும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தாள். அப்போது விதவிதமான சாப்பாடுகளால் மேஜை நிறைந்து காணப்பட்டது.
“தேவி, உனக்கு மட்டன் பிடிக்காதுன்னு. மீன் குழம்பு தான் வச்சிருக்கேன் நீ அதை எடுத்து சாப்பிடு,” என்றாள் லட்சுமி.
அப்போது அவளது கண்கள் அந்த மட்டன் குழம்பின் மேல் பார்வையை செலுத்தியது.
அதைப்பார்த்த அடுத்த நொடியே அவளது கண்கள் குளமானது அதை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டாள். சூர்யாவின் நினைவுகள் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது ஏனென்றால் அவளுக்கு மட்டன் என்றாலே பிடிக்காது. அவள் சாப்பிடாத எந்த உணவையும் சூர்யா சாப்பிடுவது இல்லை. சூர்யாவிற்கு மட்டன் என்றால் உயிர் ஆனால் தேவிகாவிற்கு பிடிக்காத ஒரே காரணத்தினால் அவன் மட்டனை ஒதுக்கி வைத்து விட்டான். இவள் எவ்வளவோ வற்பறுத்தியும் அவன் சாப்பிடவில்லை. கடைசியாக அவனுக்காக இவள் மட்டன் சாப்பிட ஆரம்பித்தாள்.
“நான் இப்போது சாப்பிட பழகிவிட்டேன்,” அம்மா” என்று கொஞ்சம் சாதம் எடுத்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் அறைக்குள் புகுந்தாள். வீட்டில் அவளிடம் யாருமே எந்த கேள்வியும் கேட்பது இல்லை காரணம் அவளது அண்ணன். பொண்ணுக்கு விவாகரத்து உறுதியான நிலையில் எந்த வீட்டில் இப்படி விதவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள்? எல்லாம் ஒரு விசித்திரமாக தான் இருந்தது தேவிகாவின் வீட்டில் காரணம் தான் என்ன?
(ஆதிராவின் சென்னை வருகைக்கு பின் அடுத்த நாள் நடந்தது)
காலை அண்ணனை வர சொல்லி சூரியாவிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாது அண்ணனோடே வீடு வந்து சேர்ந்தாள், தேவிகா. அவள் வீட்டில் உள்ளவர்களிடம் சூரியாவிற்கு பணி நிறைய இருப்பதால் அவரால் வீட்டிற்கு சில இரவு பொழுதுகள் வர முடியவில்லை என்றும் அதனால் தன்னை ஒழுங்காக கவனிக்க முடியாது என்றும் கூறி வீட்டில் உள்ளவர்களை சமாளித்தாள். அவள் சூர்யாவைப் பற்றி வேறு எதுவுமே தெரிவிக்கவில்லை. அவளது அண்ணணுக்கு கூட தெரியாது.
பின்பு, தனக்கு தெரிந்த தோழி மூலமாக அவளது அண்ணன் ஒருவன் வக்கீலாக இருக்கிறான் என்பதை அறிந்தவள், தன் மனதை கல் ஆக்கி கொண்டு விவாகரத்துக்கான முயற்சிகளை தொடர்ந்தாள். தனது அண்ணனிடம் இந்த வாழ்க்கை தனக்கு பிடிக்கவில்லை என்றும் இதை பற்றி வேறு எதுவும் கேட்க வேண்டாம் என்றவள் காரணத்தைக் கூட கூறவில்லை. எனினும் அவன் வக்கீல் மூலமாக அறிந்து கொண்டான்.
இதை பெற்றோரிடம் எப்போது கூறலாம் என்று கேட்டவளிடம், “பெற்றோரிடம் பொறுமையாக கூறிக்கொள்ளலாம் நீ எதற்கும் கவலைப்படாதே. நீ என்ன முடிவெடுத்தாலும் அதற்கு உறுதுணையாக தான் இருப்பேன். நீ எதையும் சரியாகத்தான் செய்வாய்,” என்று அவளின் விருப்பத்திற்கு தலையசைத்தான் தீபக் (தேவிகாவின் அண்ணன்). அதேபோல் சூர்யாவின் பெற்றோர்கள் வரும்பொழுதும் ஏதாவது ஒன்றை சொல்லி சமாளித்து விடுவாள்.
அண்ணனும் தங்கையும் மருத்துவமனைக்கு செல்வதாகவே வீட்டில் கூறிக்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வார்கள். தன் அண்ணனுக்கு முழுமையாக விஷயம் தெரியும் என்பதே அவளுக்கு இன்று நீதிமன்றத்தில் வைத்து தான் தெரிந்தது. தன் அண்ணன் சூர்யாவை அடிக்க கை ஓங்கிய போது அவளின் உதிரம் கொதித்தது அவளுக்கு தான் தெரியும்.
ஒவ்வொரு முறையும் சூர்யாவை நிதிமன்றத்தில் சந்தித்து வரும் தேவிகாவின் மனக்குமுறலை யாரறிவார்? சூரியா முன் ஏதோ ரொம்ப மன தைரியம் உள்ளவளாய் பாவனை காட்டுபவள் தன் கண்ணீரை எங்கு தான் அடக்கி வைத்திருப்பாளோ தெரியாது அவன் தலை மறைந்ததும் மளமளவென ஓடும் நீராய் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கும். சூர்யாவின் நினைவுகளை நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் அவளால் அவன் நினைவுகளை ஒரு நிமிடம் கூட களைந்து வாழ்ந்து விடமாட்டாள் என்பதே நிதர்சனம். அந்த நீதிமன்ற காவலில் முன்வைத்து சூரியா குழந்தையை சாரா குட்டி என்று கொஞ்சினது போல அவளும் வீட்டில் வந்து கொஞ்சி கொஞ்சி அழ தொடங்கினாள். இனி தன் கணவர் குழந்தையை பார்க்க வேண்டாம் அவரால் அவளை பிரிய இயலாது என்று எண்ணியே அடுத்த முறை நீதி மன்றத்திற்கு செல்லும் போது குழந்தையை கொண்டு செல்லவில்லை.
நாட்கள் நகர நகர தேவிகாவிற்கு அம்பு படுக்கையின் மேலே படுத்தது போலவே தோன்றியது. இப்படியே நாட்கள் உருண்டன, சூர்யாவும் விவாகரத்துக்கு சம்மதம் என்று சொல்லும் நிலைமையும் ஏற்பட்டது. தேவிகா தன் காதலை மூடிமறைத்து அவனிடம் விவகாரத்து பெற நினைப்பது ஏன்? அந்த ஜீவிதா தான் காரணமா?
*****
விவாகரத்திற்கு முன்தினம்,
சூரியாவின் வீடு,
மேற்கு வானில் சூரியன் முழுவதுமாக மறைந்து இருள் படர்ந்த நேரமது. வானத்தில் ஒளிரும் நிலவும் அதோடு சேர்ந்து நட்சத்திரங்களும் உலகையே தன் வசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் சூரிய ஆனந்தன் மொட்டைமாடியில் வெட்டாவெளியை பார்த்தப்படி படுத்திருந்தான். அவனது மனயோசனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுக்க அவன் கண்களும் குளமானது. திடீரென, ‘தேவிகா’ ‘சாரா குட்டி’ என்று கூறிக் கொண்டே விம்மி அழத்தொடங்கினான். ஏன்? என்னவாயிற்று அவனுக்கு? ஏன் இந்த இயற்கை வருடும் தென்றலை கூட ரசிக்காமல் அழுகிறான் என்றால் அவனுக்கு நாளைய தினம் விவாகரத்து உறுதியாகிவிடும். காதல் மனைவியையும் மகளையும் பிரியும் நிலை. இந்த நிலையில் அவனால் இயற்கையை ரசிக்கவா முடியும்?
“எல்லாம் என் தவறு தான். நான் செய்த முட்டாள்தனம் தான் காரணம்,” என்று புலம்பிக் கொண்டே இருந்தான். அவனுடைய தவறுதான் என்ன? செய்த தப்பை உணர்ந்தும் அவனுடைய மனைவி அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளவில்லையா? அவன் கண்களில் பொங்கும் காதல் துளிகளின் ஆழத்தை அவள் புரிந்துகொள்ளவில்லையா?
சூர்யாவின் பெயரில் மட்டும் தான் வெளிச்சம் ஆனால் அவன் வாழ்க்கை இருளானது. தன் வாழ்க்கை இருளானதன் காரணமும் அவன் தான் என்று தன்னையே நொந்துக் கொண்டு அந்த நிலவை பார்த்தபடியே அவன் வாழ்க்கையில் ஜீவிதாவின் பங்கு தான் என்ன? அதை அவன் தேவிகாவிடமிருந்து மறைத்ததறக்கு தண்டனை தான் இந்த விவாகரத்தா? அவன் தேவிகாவிடம் சொல்லகூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று வருந்தினான். அவன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற பக்கத்தை புரட்டி பார்ப்போம்.
அவனுடைய வாழ்க்கை தேவிகாவோடு மகிழ்ச்சி நிரம்பி சென்று கொண்டிருந்த வேளையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. தேவிகா கர்ப்பத்தை உறுதி செய்தபின் கொஞ்ச நாட்கள் சென்றிருக்க கூடும், ஜீவிதா சூரியா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கம்பேனியில் மறுபடியும் வந்து சேர்ந்தாள். அவளும் சூரியாவும் காதலர்களாக இருந்த போதே இதே கம்பேனியில் தான் பணியாற்றினார்கள், பின் ஜீவிதாவிற்கு வேறொருவன் மேல் காதல் முளைக்க அவள் இந்த கம்பேனிலிருந்து ராஜினாமா செய்து விட்டு சென்றாள். அவள் அங்கிருந்து செல்லும் முன் தன் கணவனை பெரிய செல்வந்தனாக காட்டிக் கொண்டு சென்றவளை காற்று ஏன் மறுபடியும் வீசி அவளை இங்கே கொண்டு வந்து சேர்த்தது என்று ஜீவிதாவே சொன்னால் தான் தெரியும்.
அந்த மாதத்தில் தான் மருத்துவரை சந்தித்த சூரியாவிடம் மருத்துவர் கூறியதாவது, “உங்கள் மனைவியை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். அவளுக்கு உடம்பில் சத்து குறைவாக காணப்படுகிறது இனி அடுத்தடுத்து வரும் செக்கப்புகளில் இவ்வாறு இருந்தால் அது உங்கள் குழந்தையை பாதித்துவிடும் எனவே மிகவும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள்,” என்று கூறினார். எனவே தேவிகாவிடம் ஜீவிதா பற்றி இப்போது சொல்ல வேண்டாம் என்று எண்ணினான். தேவிகாவிற்கு சத்தான உணவையை அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தான். அவனே அவளுக்கு நேரம் ஒதுக்கி அனைத்து பணிவிடைகளையும் செய்தான்.
அலுவலகத்திலோ, சூரியா ஜீவிதாவின் முகத்தை கூட எட்டி பார்க்காதவனாய் இருந்தான். அவனுக்கு இப்போது அவள் மேல் வெறுப்பு தான் அதிகரித்தது. அவனுக்கு அந்த நிறுவனத்தில் பணி புரியவே விரும்பமில்லை. தனக்கு நெருங்கிய மேல் அதிகாரிகளிடம் பணி இடமாற்றத்திற்குகான அழுத்தம் கொடுத்தவாறே இருந்தான்.
ஜீவிதா எப்போதுமே சூரியாவிடம் பேச வருவது போல வருவாள் ஆனால் அவன் அவளை கண்டுக் கொள்ளதாபடியினால் அவள் அந்த இடத்திலிருந்து நகர்வாள். இப்படியே இரண்டு மாதங்கள் சென்றது அவளும் பேசிய பாடில்லை.
அன்று அவள் குரலை தாழ்த்தி, “சூரியா! என்னை மன்னித்துவிடு,” என்றாள்.
“யாரு நீ? நீ யாருனு எனக்கு தெரியல. உன்னை நான் எதுக்கு மன்னிக்கனும்? மன்னிப்பு அது இதுனு தேவை இல்லாமல் உன் வேலையை ஏன் கிட்ட வச்சிக்காத.சொல்லிட்டேன்,” என்று தன் இடத்தையே காலி செய்து வெளியே கிளம்பி விட்டான்.
ஒருவாரம் கழித்து அங்கு பணிபுரிபவர்களிடம் ஜீவிதா தங்களால் முடிந்த பணம் தந்து உதவுமாறு கேட்டிருப்பது சூரியாவின் செவிகளையும் எட்டியது. இவள் கணவன் தான் செல்வந்தனாச்சே இவள் ஏன் பிச்சைக்காரி போல அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும்? என்று வெறுப்புடனே நினைத்துக் கொண்டான்.
ஜீவிதா சூரியாவை விட்டு வைக்கவில்லை. கண்கள் நிறைய கண்ணீரோடு சூரியா முன் நின்று, “சூரியா, நீ தான் என் பையனை காப்பாற்றனும்..அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் புரளவில்லை. நான் உனக்கு பண்ணுண துரோகத்தை மனதில் வைக்காது உதவி செய்வாயா சூரியா? உன்னை விட்டால் நான் யாரிடமும் கேட்கயியலாது,” என்று விம்மி விம்மி அழுதாள்.
“அறுவை சிகிச்சையா? எதற்கு?” என்று அந்த குழந்தைக்காக மனம் இறங்கினான்.
“இதயத்தில் சின்னதாக அடைப்பு இருக்கிறது அதை உடனே சரி செய்ய வேண்டும். அதற்கு ஓரளவு பணம் புரட்டிவிட்டேன் இன்னும் ஒரு ஐம்பதாயிரம் பணம் தேவை படுகிறது. நான் மூன்று மாதத்துக்குள் திருப்பி கொடுத்து விடுகிறேன்,” என்று வேண்டினாள்.
எதையும் யோசிக்காமல், “சரி நான் தருகிறேன்,” என்றான் அவன்.
அவனை கையெடுத்து கும்பிட்டாள், “சூரியா உனக்கு மிகவும் பெரிய மனசு. உன்னை விட்டு அவனை தேடி சென்றேன். அவனோ என்னை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு வேறொருத்தியை தேடி சென்றுவிட்டான். அவனுக்காக உன்னையும் என் பெற்றோரையும் இழந்து நிற்கதியானேன்,”
“ம்ம்ம்ம்,”
சூரியா கூறியபடியே ஜீவிதாவின் மகனுக்கு பணம் கொடுத்து உதவினான். அறுவை சிகிச்சையும் நல்ல படியாக முடிந்தது. நீண்ட விடுமுறைக்கு பின் வந்த ஜீவிதா, சூரியாவை சந்தித்து அன்று நன்றி தெரிவித்தாள். அதை தான் அன்று மதிய வேளையில் உணவு கொண்டு வந்த தேவிகா பார்த்தது. தேவிகா பார்த்தது என்னவென்றால் சூர்யாவின் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீரோடு ஜீவிதா அவனிடம், “என் வாழ்வில் நான் உன்னை தொலைத்துவிட்டேன், சூரியா. நான் உனக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டேன். நீ எனக்கு இப்போது தெய்வமாக தெரிகிறாய்,” என்று கூறிய ஒரு சில வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது.
அதற்கு அவனோ, “பரவாயில்லை! உன் குழந்தைக்காக தான் நான் செய்தேன். என்னுடைய மனைவியும் வயிற்றில் கருவை சுமக்கிறாள். அதன் பாசம் நான் அறிவேன்”
“வாழ்த்துக்கள் சூரியா,” என்று இடத்தை விட்டு நகர்ந்தனர். அதன் பிறகு சூரியா வெளியே வந்து பார்த்தபோது அவன் இருக்கையில் மதிய உணவு இருப்பதை கவனித்தான்.
அன்று தேவிகாவின் ஏழாவது மாத செக்கப்பிற்கு செல்லாமல் ஜீவிதாவின் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அன்று தான் மீண்டும் ஒருமுறை தேவிகா சூரியாவை ஜீவிதாவோடு பார்த்தாள்.
நாட்கள் செல்ல செல்ல ஜீவிதாவின் குழந்தை உடல் நலம் தேற ஆரம்பித்தான். பின் ஜீவிதாவுடனான தொடர்பையும் முறித்துக்கொண்டான். அவனிடம் வாங்கி பணத்தை அவள் திருப்பி கொடுத்தபோதும் அவன் வாங்காமல், “குழந்தையின் மருத்துவ செலவு இருக்குமானால் தயங்காமல் கேள். வேறு எதற்காகவும் என்னை தொடர்பு கொள்ளாதே,” என்று இடம் மாற்றத்திற்கு முன் கூறி சென்றான்.
இவ்வளவு தான் நடந்தது.. இதை தான் தேவிகா தவறுதலாக புரிந்து கொண்டாளோ? நாளைய தினம் சட்டப்படி விவாகரத்து அடைந்துவிடுவார்கள். இதற்கிடையில் சூரியாவின் வாழ்க்கையில் ஒளியேற்றபடுமா?