இரு ஆண்களும் அவளை ஆர்வமாக பார்க்க “முதல்ல மாயாவுக்கு இப்ப இருக்குற சூழ்நிலை மாறனும். பழைய விஷயங்களை நினைவு படுத்துற இந்த ஊர்ல அவங்க இருக்க கூடாது. நல்ல என்வீரான்மென்டும் கூடவே சுமனோட அதிக நேரம் செலவழிச்சா மாயா மனசுல சுமனைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் வர ஆரம்பிக்கும். அப்ப எல்லாம் சரியாகிரும். யுவன், முதல்ல ரெண்டு பேரையும் பாதுகாப்பா வேற ஊருக்கு அனுப்பி வைங்க. கொஞ்ச நாளானாலும் சரி. இல்லை ஒரெடியானாலும் சரி. அவங்க எங்கயாவது போகட்டும்”, என்று அவள் சொன்னதை இருவரும் ஒத்துக் கொண்டார்கள்.
“சரி நான் இதைப் பத்தி யோசிக்கிறேன். இப்ப போய் தூங்குங்க”, என்று சொல்லி விட்டு சென்றான் யுவன்.,
“நீங்க மாயா கூட தூங்குறீங்களா சுசீ?”, என்று கேட்டான் சுமன்.
“இல்லை, இப்ப தானே சொன்னேன்? நீங்க தான் அவங்க கூட இருக்கணும்னு? அவங்க நல்லா தூங்குறாங்க. இனி எந்திக்க மாட்டாங்க. போய் படுங்க. அப்படி ஏதாவது எழுந்தா என்னை எழுப்புங்க”, என்று சொல்லி விட்டு சென்றவளின் கண்களில் சுமனின் கை மற்றும் முகத்தில் இருந்த காயம் பட்டது.
மாயாவைப் பற்றிய யோசனையோடே தன்னுடைய அறைக்குச் சென்றாள். நெஞ்சில் ஏறிய பாரத்தோடு அறைக்குள் சென்றான் சுமன். இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மாயா.
அவளைக் கண்டு விரக்தி சிரிப்பு உதயமானது சுமனுக்கு. அவள் மேல் அளவு கடந்த காதலை வைத்திருக்கிறான் சுமன். ஆனால் ஒரு தோழமையோடு கூட அவளை அவனால் நெருங்க முடியவில்லை என்னும் போது ஒரு ஆணாக அவனுக்கு வலித்தது.,
அவன் உணர்வுகள் எதுவும் அறியாத மாயா நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள்.
சுசீலா அறைக்கு சென்ற போது அவள் அறைக்கு வெளியே யுவன் நின்றிருந்தான்.
“தூங்கலையா யுவன்?”
“தூக்கம் வரலை சுசீ. மனசுக்கு கஷ்டமா இருக்கு”, என்று அவன் புலம்ப அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை படுக்க வைத்து விட்டே தன்னறைக்கு வந்தாள்.
ஆனால் படுத்ததும் தூக்கம் தான் வந்த பாடில்லை. “எனக்கு அம்மா, அப்பா இல்லை அப்படிங்குற கஷ்டம் மட்டும் தான். ஆனா யுவன் மாயாவுக்கு தான் எவ்வளவு கஷ்டம். கேசவ், சுமன் கூட பாதிக்க பட்டவங்க தான். சில பேர் நிம்மதியா இருக்குற வாழ்க்கையை அதோட அருமை தெரியாம தொலைக்கிறாங்க. அவங்களுக்கு எல்லாம் இந்த கஷ்டம் எல்லாம் தெரியலை. அதனால தான் அப்படி இருக்காங்க”, என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்த நாள் காலை யாரையும் எதிர் பார்க்காமல் விடிந்தது. அவரவர் அவரவர் வேலையை செய்ய மாயா எழுந்த போது சுமன் அங்கே இல்லை. இது எப்போதும் நடப்பது தான். அவள் எழுவதற்கு முன்பே அவன் அங்கிருந்து சென்று விடுவான்.
இரவு என்ன நடந்தது என்று தெளிவாக நினைவில்லாத போதும் கனவு கண்டு அழுதது நினைவில் வந்தது. நேராக குளிக்க சென்றவள் வேறு உடை அணிந்து கீழே வந்தாள்.
அங்கே சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த சுசீலாவைப் பார்த்து சிரித்தாள். ஆனால் சுசீலா அதற்கு எதிர்வினை புரிய வில்லை என்றதும் “சுசீ என்ன ஆச்சு?’, என்று கேட்டாள்.
“என்ன? என்ன ஆச்சு?”,என்று கேட்டாள் சுசீலா.
“இல்லை டல்லா இருக்கீங்கன்னு தான் கேட்டேன்”
“நான் எங்க டல்லா இருக்கேன்? நல்லா தானே இருக்கேன்?”
“இல்லை எனக்கு வித்தியாசம் தெரியுது. பொய் சொல்லாம உண்மையைச் சொல்லுங்க”
“ஆமா, டல்லா தான் இருக்கேன் போதுமா?”
“என்ன ஆச்சு சுசீ? யார் மேல கோபம்?”
“வேற யார் மேல உங்க மேல தான்”
“நானா? நான் என்ன செஞ்சேன்?”
‘நேத்து நடந்தது எல்லாம் நினைவு இருக்கா?”
“பாதி நினைவு இருக்கு? எதுக்கு என் மேல உங்களுக்கு கோபம்? உங்க தூக்கத்தை எல்லாம் கெடுத்துட்டேனா?”
“அது ஒரு பெரிய விஷயமா? இது வேற. நீ நடந்துக்குறது கொஞ்சமும் சரியில்லை மாயா”
“புரியுற மாதிரி சொல்லுங்களேன்”
“நேத்து நீங்க கனவு கண்டு ஒரே அழுகை. சுமன் உங்களை சமாதானப் படுத்த பாத்திருக்காங்க. ஆனா நீங்க அவங்களை அடிச்சு காயப் படுத்திருக்கீங்க? அன்னைக்கு தானே படிச்சு படிச்சு சொன்னேன்? சுமன் கிட்ட மனசு விட்டு பேசுங்கன்னு. இன்னும் ஒதுங்கியே இருந்தா என்ன அர்த்தம்? முதல்ல அவர் காயத்தைப் போய் பாருங்க”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.
அடுத்த நொடி பதறிப் போய் சுமனைத் தேடிச் சென்றாள். அவன் கேசவ் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க உள்ளே வந்த மாயாவைக் கண்டதும் புருவம் உயர்த்தினான்.
அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி கேசவ் வெளியே சென்று விட்டான். சுமனையே பார்த்த படி அவனை நெருங்கிய மாயா அவன் கை மற்றும் கன்னத்தில் இருந்த காயங்களைப் பார்த்தாள்.
பெரிதாக இல்லை என்றாலும் ஆங்காங்கே சிவந்து போய் இருந்தது. அவனையே அவள் பார்த்த படி இருக்கவும் “என்ன ஆச்சு மாயா?”, என்று கேட்டான் சுமன்.
“சாரி”, என்று சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதில் பதறிப் போனவன் அவளை நெருங்கி அவள் கண்ணீரை துடைக்க போனான். ஆனால் எழுந்த கையை இறக்கிக் கொண்டான். அவளை தொட்டால் அவள் எதுவும் கஷ்டப் படுவாள் என்று எண்ணிக் கொண்டான்.
அவள் அழுது கொண்டே இருக்கவும் “என்ன மாயா இது? சின்ன பிள்ளை மாதிரி? எதுக்கு இந்த அழுகை?”, என்று கேட்டான் சுமன்.
“நைட் உங்களை ரொம்ப காயப் படுத்திட்டேன்ல?”
“இது ஒரு காயமா? எறும்பு கடிச்ச மாதிரி தான் இருந்துச்சு. என்ன, கொஞ்சம் பெரிய சைஸ் எறும்பு. வேற ஒண்ணும் இல்லை”, என்று புன்னகையுடன் சொல்ல அவள் உதடுகளும் மலர்ந்தது.
“சாரி”, என்று அவள் மீண்டும் முணுமுணுக்க “பரவால்ல விடு”, என்றான்.
அடுத்து எதுவும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்கவும் “மாயா உன்கிட்ட ஒண்ணு கேக்கவா?”, என்று ஆரம்பித்தான்.
“சொல்லுங்க”
“நான் உன்னோட ரூமை ஷேர் பண்ணுறது உனக்கு அன்னீசியா இருக்கா? நான் வேணும்னா என்னோட ரூமுக்கு போயிரவா?”
“வேண்டாம், வேண்டாம்”, என்று அவசரமாக சொல்லி விட்டு அவள் நாக்கைக் கடிக்க இப்போது அழகாக சிரித்தான் சுமன்.
“நைட் சரியா தூங்கிருக்க மாட்ட. போய் ரெஸ்ட் எடு”, என்று சொன்னதும் அவனைப் பார்த்த படியே வெளியே சென்றவள் நேராக சுசீலாவைக் காணத் தான் சென்றாள்.
“என்ன மாயா?”
“நாம கொஞ்சம் வெளிய போகலாமா?”
“நாமளா? வெளியவா?”, என்று அதிர்வோடு சுசீலா கேட்க “ஆமா, நாம இப்ப வெளிய போறோம். நீங்க கிளம்புங்க. நான் பையா கிட்ட கேக்குறேன்”, என்று சொல்லி விட்டு ஓடினாள்.
ரெட்டி இறந்தாலும் அவன் அனுப்பிய சுசிலாவின் போட்டோவால் அவளுக்கு ஆபத்து இருக்கும். அதனால் அவளை வெளிய யுவன் அனுப்ப மாட்டான் என்று எண்ணி கிளம்பாமல் அமர்ந்திருந்தாள் சுசீலா.
மாயா கேட்டதும் யுவனும் அதையே தான் சொன்னான். “இங்க பாரு மாயா. ரெட்டி நிறைய பேர் கிட்ட சுசீலா போட்டோவைக் கொடுத்து தேடச் சொல்லிருக்கான். இப்ப அவ வெளிய போய் யார் கண்ணுலயாவது மாட்டினா பிரச்சனை”, என்று சொல்லி மறுத்தான் யுவன்.
மாயா அவனை பிடிவாதமாக பார்க்கவும் “என்ன முறைக்கிற? இதெல்லாம் உன் புருஷன் கிட்ட வச்சிக்கோ. சரி சரி. ரெண்டு பேரும் கிளம்புங்க. நானே உங்க கூட வரேன்”, என்று சொன்னதும் சந்தோஷமாக சென்றாள் மாயா.
சுசீலா கிளம்பாமல் இருக்கவும் “சுசீ என்ன கிளம்பாம இருக்கீங்க? நாம வெளிய போறதுக்கு பையா ஓகே சொல்லிட்டாங்க. சீக்கிரம் கிளம்புங்க”, என்று சொல்லி அவளைக் கிளப்ப சொல்லி விட்டு கிளம்பச் சென்றாள் மாயா.
வேறு வழியில்லாமல் சுசீலா கிளம்பி கீழே வரும் போது அங்கே தயாராகி இருந்தான் யுவன். அவளைக் கண்டதும் அவன் பார்வை ரசிக்கும் பார்வையாக மாற அவன் பார்வையைத் தாங்க முடியாமல் முகம் சிவந்தாள் சுசீலா.
அதை ரசித்தவன் அங்கே வேலையாட்கள் நடமாடவும் தன்னுடைய பார்வையை மாற்றிக் கொண்டு “என்ன நீ மட்டும் வர? எங்க மாயா?”, என்று கேட்டான்.
“கிளம்ப போனாங்க. சரி எனக்கு ஒரு சந்தேகம். எப்படி எங்களை தைரியமா வெளிய விடுறீங்க? முன்னாடி எல்லாம் வெளிய போனா ஆபத்துன்னு சொல்லுவீங்களே? காதலைச் சொன்ன உடனே எனக்கு என்ன ஆனா பரவால்லன்னு நினைச்சிட்டீங்களா?”, என்று கேட்டு வம்பிழுக்க அவளை முறைத்தவன் “காதலைச் சொன்ன உடனே இன்னும் அதிகமா பாதுகாப்பை உனக்கு நான் உருவாக்கிட்டேன் போதுமா? அதனால தான் உன்னை தைரியமா வெளிய விடுறேன்”, என்றான்.
“அப்படியா? அப்படி என்ன பாதுகாப்பு?”
“அந்த பாதுகாப்பே நான் தான். நீ தான் என்னோட மனைவின்னு ஆன பிறகு உன்னை தனிய விட என்னால முடியுமா? உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறதே நான் தான்”, என்று சொன்னதும் சந்தோஷமாக விழி விரித்தாள் சுசீலா.
அவனுடனான பயணத்தை ஆவலாக எதிர் பார்த்தாள். மாயா கிளம்பி வரவும் மூவரும் கிளம்பினார்கள்.
போகும் போது மூவரும் சலசலத்துக் கொண்டிருக்க மாயா சொன்ன இடத்தில் காரை நிறுத்தினான் யுவன். இறங்கி அந்த இடத்தைப் பார்த்த யுவன் மற்றும் சுசிலாவுக்கு அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் தான் வந்தது.
அது ஒரு சைக்காடிஸ்ட் வீடு. வீட்டுக்குள்ளே அவர் கிளினிக் ஆரம்பித்திருக்க அங்கே தான் வண்டியை நிறுத்த சொன்னாள்.
“மாயா இங்க எதுக்கு?”, என்று யுவன் குழப்பமாக கேட்க “சுமனுக்காக நான் என்னை மாத்திக்கணும் பையா. அதனால கொஞ்ச நாள் டிரீட்மெண்ட் போகலாம்னு நினைச்சேன்”, என்று சொன்னதும் சுசீலாவும் யுவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
யுவன் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க
“நல்ல விஷயம் தான் மாயா. உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும். வா உள்ள போகலாம்”, என்று அழைத்து
சென்றாள் சுசீலா.
யுவனும் அவர்கள் பின்னே சென்று தேவையான பணம் செலுத்தினான். பின் மாயா மட்டும் டாக்டரைக் காண உள்ளே செல்ல அவர் அவள் மனதில் இருப்பதை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு வாங்கினார். அனைத்தையும் அவரிடம் சொன்ன மாயா சுமனைப் பற்றியும் அவளுடைய சந்தேகங்கள் அனைத்தையும் சொல்ல அனைத்தையும் குறித்துக் கொண்டவர் சிறு குழந்தையிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தார்.
பின் சில நாட்கள் அவளை வரச் சொன்னார். வெளியே வரும் போது அழுது வீங்கிய முகத்துடன் வந்த மாயாவைக் கண்டு இருவருக்கும் வருத்தம் தான் வந்தது.
“மாயா என்ன ஆச்சு டா? அழுதியா?”, என்று கேட்டான் யுவன்.
“பழைய விஷயங்கள் சொல்லும் போது அழுகை வந்துருச்சு பையா. ஆனா டாக்டர் சரியாகிரும்னு சொல்லிருக்காங்க”, என்று நம்பிக்கையாக சொன்னாள்.
அவளுடைய நம்பிக்கை இருவருக்கும் நிம்மதியை கொடுத்தது. பின் மாயா மற்றும் சுசீலாவுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு வந்ததும் காரில் இருந்து இறங்குவதற்கு முன்பு யுவன் மற்றும் சுசிலாவிடம் இந்த விசயத்தை பற்றி சுமனிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னாள் மாயா.
அவள் மனதைப் புரிந்தவர்களும் சரி என்று சொன்னார்கள். மூவரும் காரில் இருந்து இறங்கியதைக் கண்ட சுமனும் கேசவும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ஆனாலும் இருவரும் எங்கே சென்றீர்கள் என்று கேட்கவில்லை.
காதல் தொடரும்..