பூ 11:
பிரவீணுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் அவனுக்கு அடைக்கப்பட்ட பக்கமாகவே இருந்தது. துளசியிடம் எப்படியாவது பேசி புரிய வைத்து விட வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய இணைப்பைத் துண்டித்திருந்தால் விஷ்வ துளசி.
சொந்த அண்ணனுக்கு கூட தன்னுடைய மனநிலை புரியவில்லை என்பதே துளசியின் மனக்குறை. அவளுக்கு என்று உறுதுணையாய் இருந்த சுரேஷும் இப்பொழுது குடும்பத்தார் பக்கம் நின்றார்.
ஒருவேளை தன் தாயின் கடந்த கால வாழ்க்கை தெரிந்திருந்தால் இவ்வளவு பிடிவாதம் பிடித்திருக்க மாட்டாளோ என்னவோ..?
மனம் போன போக்கில் சிந்தனையும் போக, தூக்கம் என்பது மருந்தளவுக்கும் இன்றி தவித்தாள் துளசி. நேரம் நடு நிசியைத் தாண்டிக் கொண்டிருக்க, பிரவீண் மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். துளசியும் சில நிமிடங்கள் போக்குக் காட்டியவள், அவன் விடாமல் அழைக்கவும் வேறு வழியின்றி போனை எடுத்தாள்.
“இப்போ எதுக்கு விடாம போன் பண்ற…? நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையை ஆட்டுறேன்னு ஓவரா ஆடாதிங்க. நிம்மதியா தூங்கக் கூட விட மாட்டிங்களா..?” என்று [பிரவீணை பேசவிடாமல் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் துளசி.
“துளசி..! பிளீஸ்..! நான் என்ன சொல்ல வரேன்னு முதல்ல கேளு..!” என்றான்.
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..! பாடுன பழைய பல்லவியைத் தான் பாடப் போற… கேட்டுக் கேட்டு எனக்கு காதுல ரத்தம் வந்தது தான் மிச்சம்..!” என்றாள் துளசி கோபமாய்.
“துளசி..!!” என்று எதிர்புறம் பிரவீணின் குரல் கோபமாக ஒலிக்க, ஒருநிமிடம் வாயை மூடினாள் துளசி.
“நான் என்ன சொல்ல வரேன்னு கேட்காம உன் இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்க. வெளியே என்திருச்சுப் போ. விஜய்யை என் பிரண்ட் டிராப் பண்ண வந்திருக்கான். வீட்ல இருக்கவங்களுக்குத் தெரியாம விஜய்யை அவன் ரூம்ல விட்டுடு..!” என்றான் பிரவீண்.
“ஏன்..? துரை தானா வர மாட்டாரோ..? நான் போக மாட்டேன்..!” என்று துளசி சொல்ல,
“துளசி பிளீஸ்..! இப்போ அவன் அன் கண்டிஷன்.அதிகமா குடிச்சிருக்கான். தாத்தாக்கு தெரிஞ்சா ரொம்பக் கஷ்ட்டப்டுவார்..!” என்றான் இறங்கிய குரலில்.
“பாருங்கப்பா..! அவரு குடிக்கிறாரு…இவரு நடிக்கிறாரு. அவனை போல உண்டான்னு இந்த வீட்ல தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறாங்கல்ல. இன்னைக்குப் பார்க்கட்டும் அவன் லட்சணத்தை..!” என்றாள் வெறுப்புடன்.
“செய்ய முடியும்ன்னா செய். இல்லையா முடியாதுன்னு சொல்லிடு. நான் அவனை என் பிரண்ட் வீட்டுக்கே கூட்டிட்டு போக சொல்லிக்கிறேன். நான் இப்போ அங்க இருந்திருந்தா இந்த பஞ்சாயத்தே இல்லை..!” என்று கோபமுடன் சொல்லிவிட்டு போனை வைக்க போக,
“ரொம்ப பண்ணாத. உன் மூஞ்சிக்காக செய்யுறேன். இதெல்லாம் செய்யனும்ன்னு என் தலைஎழுத்து…!” என்று பிகு பண்ணி, பின்பு சரி என்று சொன்னாள். அவளின் பதிலைக் கேட்ட பிரவீணுக்கு எதிர்முனையில் கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது. துளசியைப் பற்றி அவனுக்குத் தான் நன்றாகத் தெரியுமே.
விஜய்யை முழுமையாக வெறுப்பவளும் அவளே..! முழுமையாக நேசிப்பவளும் அவளே..!
வீடே தூக்கத்தில் இருக்க, கீழே இறங்கி சென்றவள், கதவைத் திறந்து வைத்து காத்திருக்க, சற்று நேரத்தில் அங்கு வந்த காரில் இருந்து முதலில் பிரவீணின் நண்பன் இறங்கினான். பின் விஜய்யை இறங்க வைக்க அவன் கொஞ்சம் கஷ்ட்டப் பட வேண்டியதிருந்தது. அவனால் நிற்க கூட முடியவில்லை.
விஜய்யைப் பார்த்த துளசிக்கு அப்படி ஒரு கோபம். நிற்க கூட முடியாமல் அவன் தள்ளாடிக் கொண்டு நிற்க,
“இவனை எங்க விடனும் சிஸ்டர்..?” என்றான் அவன்.
“பரவாயில்லைண்ணா..! நான் பார்த்துக்கறேன்…! நீங்க கிளம்புங்க…! ரொம்ப தேங்க்ஸ்..!” என்றாள் பார்வையை விஜய் மீது வைத்துக் கொண்டு.
“எஸ் நண்பா..! நீ கிளம்பு. இவ பார்த்துப்பா என்னை..!” என்று விஜய் குழறியபடி சொல்ல, அவனை முறைத்தாள்.
அவனோ விட்டால் போது என்பதைப் போல் சென்று விட்டான்.
“வா போகலாம்..!” என்று துளசி அழைக்க,
“ம்ம்..! போகலாமே..!” என்று இரண்டு எட்டு வைத்தவன் மீண்டும் தடுமாற, அவனைத் தாங்கிக் கொண்டாள் துளசி.
“நிலா…எப்பவும் வானத்துல தான இருக்கும்…இன்னைக்கு பூமில அதுவும் என் பக்கத்துல இருக்கு..!” என்று உளறிக் கொண்டு, பேசிக் கொண்டே வர,
“பேசாம வரப் போறியா இல்லையா..? இப்படியே உளறிட்டு இருந்த, நேரா தாத்தா ரூம்க்கு கூட்டிட்டு போய் விட்டுடுவேன்…!” என்றாள் துளசி.
“ஹேய்..! என்னையவே மிரட்டுறியா..? இந்த விஜய்யையே மிரட்டுறியா..? நான் யார் தெரியுமா…? என் பவர் என்ன தெரியுமா…? நீயென்ன தாத்தா ரூம்க்கு கூட்டிட்டுப் போறது…நானே போறேன்..!” என்று அவன் அவர் அறையை நோக்கி செல்ல,
“அடேய் கொழுப்பெடுத்தவனே..! என் உசுர வாங்குறதையே வேலையா வச்சிருக்கியா..? வந்து தொலைடா வெளக்கெண்ணை. பெருசு எந்திருச்சா பக்கம் பக்கமா கிளாஸ் எடுக்கும்..!” என்று எரிச்சலுடன் அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பிட,
“இந்த உதடு என்ன பாவம் பண்ணிச்சு..? அதையேன் இப்படி கடிச்சு குதற..?” என்று அவளின் உதட்டை நீவி விட,
“கையை எடுடா பொறுக்கி..!” என்ற பட்டென்று தட்டி விட்டாள் துளசி.
அவள் பொறுக்கி என்று சொன்னதும் அவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. இந்த வார்த்தை தான் அவன் மூச்சு முட்ட குடிக்கக் காரணம். அதை துளசி மீண்டும் சொல்ல, மறைந்திருந்த கோபம் மீண்டும் அவனுக்குத் துளிர் விட்டது.
“பொறுக்கின்னு சொல்லாத..!” என்றான் அந்த தள்ளாடிய நிலையிலும்.
“அப்படித்தாண்டா சொல்லுவேன்..! நீ செய்ற வேலைக்கு பேரு வேற என்னன்னு நினைச்ச..?” என்று அவனைத் திட்டிக் கொண்டே, அவனையும் தள்ளிக் கொண்டு மாடியேறிக் கொண்டிருந்தாள்.
அவளின் வார்த்தையில் பட்டென்று அவளை உதறினான் விஜய். அவள் தடுமாறி கம்பியைப் பிடித்து நிற்க, விஜயோ வேகமாக போகிறேன் என்ற பேர்வழி, மீண்டும் தடுமாறி விழப் போனான்.
“டேய் தடிமாடு…! இந்நேரம் நானும் விழுந்திருப்பேன். அறிவு இருக்கா உனக்கு..? இங்க இருந்த விழுந்தா மண்டை பிளந்திடும்..!” என்றவள் மீண்டும் அவனைத் தாங்கிப் பிடிக்க,
“நான் விழும் போது எல்லாம் தாங்கிப் பிடிக்க..நீ என்ன என் பொண்டாட்டியா…?” என்றான் வார்த்தைகள் குழற,
“நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும். நீ மூக்கு முட்ட குடிச்சிருக்கன்னு நீயே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அவ்வளவு தெளிவா பேசுற. ஆனா துரைக்கு நடக்க மட்டும் முடியலை..!” என்று அவனைப் பேசிக் கொண்டே, அவனின் அறைக்குள் சென்று விட்டாள்.
மல்லாந்து அவன் கட்டிலில் விழுந்தவன், அவளையும் சேர்த்து தன்னுடன் விழ வைத்து இருந்தான்.விஜய்க்கு மேல் அவளும் விழுந்திருக்க,
“ஏண்டி என்னை பொறுக்கின்னு சொன்ன..?” என்று மீண்டும் புலம்பத் தொடங்கினான்.
“டேய் குடிகாரா..! விடுடா விளக்கெண்ணெய்..! இம்சை பிடிச்சவனே..!”என்று கோபமாகத் திட்டிக் கொண்டே, அவன் கைகளை விளக்கி விட்டு தட்டுத் தடுமாறி எழுந்தாள் துளசி.
“ஐயாம் சாரி…! துளசி. நான் பொறுக்கி இல்லடி. அப்படி சொல்லாதடி..!” என்று புலம்பிக் கொண்டே அவன் உறக்கத்திற்கு செல்ல, அவனையே பார்த்துக் கொண்டிருந்த துளசி, அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளியே கொட்டினாள். அவை கண்ணீராய் மாறி,அழுகை கேவலாக மாறியது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நினைவுகள் பின்னோக்கி செல்ல, அதை கஷ்ட்டப்பட்டு இறுக்கிப் பிடித்தாள்.
‘வேண்டாம் துளசி பழசை நினைக்காத…! அப்பறம் இருக்குற கொஞ்ச நிம்மதியும் போய்டும்..!’ என்று மனதில் நினைத்தவள், அவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் வெளியே வர, அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் வித்யா.
“இப்ப எதுக்காக அவனை யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போய் உள்ள விட்டுட்டு வர..?” என்றார் வித்யா.
“அய்யோ அம்மா..! ரொம்ப கற்பனை பண்ணிக்காதிங்க. பிரவீண் சொன்னானேன்னு செஞ்சேன். வேற எந்த எண்ணமும் என் மனசில் இல்லை..!” என்றாள் பட்டென்று.
“பிரவீண் எது சொன்னாலும் செஞ்சுடுவியோ…?” என்றார் வித்யா.
“ஆமா, இப்போ அதுக்கென்ன..?” என்றாள்.
“அப்போ கல்யாணத்துக்கு தயாராகு…!” என்றார்.
“நடுசாமத்துல பேச வேண்டிய பேச்சா இது. என்னமோ நான் வேண்டாம்ன்னு சொன்ன உடனே, நீங்க எல்லாம் சேர்ந்து அந்த பேச்சை விட்டுட்ட மாதிரி என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க. அதான் என்னை ஒரு பொருட்டாவே மதிக்காம கல்யாண வேலையில முழுமூச்சா இறங்கிட்டிங்க. முழுசா நனஞ்சதுக்கு அப்பறம் எதுக்கு இந்த முக்காடு..!” என்றாள் கோபமாய்.
“அப்போ உனக்கு சம்மதம், அப்படித்தான..?” என்றார் வித்யா.
“நடக்குறது எல்லாமே என்னை மீறிதான் நடக்குது. ஆனா ஒன்னு, நான் எதிர் பார்த்த வாழ்க்கை இது இல்லை. என்னோட மனசு புரியாத அம்மாவா நீங்க இருக்கும் போது, வேற வழி. என் அப்பாவுக்காக மட்டும் தான் நான் சம்மதிக்கிறேன். மத்தபடி, என் அப்பாவையே மாத்துன உங்களை நான் முழுசா வெறுக்குறேன். எந்த குடும்பம் கட்டாயப்படுத்தி இதை செய்தோ, அந்த குடும்பம் என் கல்யாண வாழ்க்கையைப் பார்த்து தினம் தினம் அழும். அதுக்கு நான் கியாரண்டி..!” என்று நக்கலுடன் சொல்லிவிட்டு அவளுடைய அறையில் நுழைந்து கொண்டாள்.
அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாய் இருந்தது வித்யாவிற்கு. துளசிக்கு கொஞ்சம் பிடிவாதம் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பிடிவாதம் இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை அவருக்கு. ஆனால் அவள் எப்படிப் பேசினாலும், அவள் வாழ்க்கை விஜய்யுடன் தான் என்பதில் உறுதியாக இருந்தார் வித்யா. விஜய்யின் மேல் அப்படி ஒரு நம்பிக்கை அவருக்கு. மகள் தன்னை வெறுப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான், விஜய்யின் பாசத்திற்கு முன்னால்.
மறுநாள் விடியல், பல பிரச்சனைகளுக்கு விடியலாகவே அமைந்தது.
காலையில் எழுந்த விஜய்க்கு தலை விண்ணென்று தெரித்துக் கொண்டிருந்தது. உடல் எல்லாம் அடித்துப் போட்டத்தைப் போன்று வலிக்க, அப்படியே மல்லாந்து படுத்திருந்தான்.
முந்தைய நாள் துளசியை வீட்டில் விட்டுவிட்டு கோபமாக சென்றது, பாருக்கு போனது, கோபத்தில் அளவுக்கு மீறி குடித்தது எல்லாம் நியாபகம் இருந்தது.வீட்டிற்கு வந்தது, துளசியிடம் பேசியது என்று கொஞ்சம் அலைவரிசை விட்டு விட்டு நியாபகத்திற்கு வர, படக்கென்று எழுந்து அமர்ந்தான் விஜய்.
“ஓஹ ஷிட்..!” என்று தலையைத் தேய்த்தவன்,
“விஜய் என்ன பண்ணி வச்சிருக்க..? சும்மாவே உன்னைக் கண்டா அவ மதிக்கிறது இல்லை. இதுல நேத்து நீ பண்ண வேலைக்கு இன்னும் சலங்கை கட்டிட்டு ஆடப் போறா..?” என்று மனதில் நினைத்தவன், நேரமாவதை உணர்ந்து, குளித்து கிளம்பி வெளியே வந்தான்.
அதே நேரத்தில் துளசியும் அறையில் இருந்து வெளியே வர, அவளைப் பார்த்தவன் அதிர்ந்தான்.
ஏன் என்றால்…. அவள் தூங்கவே இல்லை என்பதை அவள் கண்களும் முகம் காட்டிக் கொடுத்தது அவனுக்கு. ஏனோ கொஞ்சம் சோர்வாய் இருப்பதைப் போலவும் இருந்தது.
‘என்னன்னு கேளுடா..?’ என்று மனம் சொல்ல,
‘காலையிலேயே ஆரம்பிக்காத. உன் வேலையை மட்டும் நீ பாரு. நீ கேட்டாலும் அவ சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பா…!’ என்றது அவனின் மூளை.
“என்ன இன்னமும் தெளியலையா..?” என்றாள் இடக்காக. அவளையே பார்த்துக் கொண்டு நிற்கவும் அவள் அப்படிக் கேட்டாள்.
“வாட்..??” என்றான்.
“காலையில ஹீரோ வேஷம்…. நைட் ஆனா, ஆன்ட்டி ஹீரோ வேஷம்… விளங்கிடும்..!” என்றாள்.
காலையிலேயே விஜய்க்கு கோபம் சுர்ரென்று ஏறியது. வெளிவரத் துடிக்கும் வார்த்தைகளை முயன்று கட்டுப் படுத்தினான். பேசாமல் அவளைக் கடந்து செல்ல முற்பட,
“என்ன முகத்தைப் பார்த்து பேச தன்மானம் தடுக்குதோ..?” என்றாள்.
“தன் மானம் தடுக்கலை… உன் மானம் தான் தடுக்குது. நைட்டியை ஒழுங்கா போடு..!” என்றவன், விறுவிறுவென்று கீழே இறங்கி செல்ல,
“எதுக்கு இப்படி சொல்றான்…?” என்று தன்னை ஆராய்ந்தவள், லோ நெக்கில் இருந்த நைட்டியை படக்கென்று பின்னே இழுத்து விட்டாள்.
“இவனுக்கு பார்வை அங்க தான் போகுமா..? பொறுக்கி..!” என்று திட்டியபடி கீழே சென்றாள்.
“டிரஸை ஒழுங்கா போடாதது உன் தப்பு.அதுல அவன் எங்க இருந்து பொறுக்கியானான்..?” என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலில்லை அவளிடம்.
“நேத்து எப்ப வந்த விஜய்..? நான் தூங்கப் போற வரைக்கும் ஆளையே காணோமே..?” என்று வள்ளிப் பாட்டி வாஞ்சையுடன் அவனைக் கேட்க, அவனுக்குத் தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. பதிலுக்குப் பொய் சொல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் அமைதியாக இருந்து விட்டான்.
துளசி அதே கோலத்தில் கீழே வர,
“இப்படி இந்த உடுப்போட ஹாலுக்கு எல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல துளசி..!” என்று வள்ளி அதட்ட, அவளோ அதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை.
“அத்தை எனக்கு ஒரு காபி பிளீஸ்..!” என்றாள் நீலாவிடம்.
“நான் பேசிட்டே இருக்கேன். பதில் சொல்றாளா பாரு. உன்னை விட சின்ன பொண்ணு பவித்ரா. காலையில எழுந்து குளிச்சு கோலம் போடுறதுல இருந்து எல்லாம் பார்க்குறா. நீ என்னடான்னா இந்த நேரத்துல வந்து காபி கேட்டுட்டே இருக்க..?” என்று வள்ளிப் பாட்டி ஏகத்திற்கும் பேச ஆரம்பிக்க,
“அவளுக்கு வீட்டு வேலை வருது. எனக்கு ஆபீஸ் வேலை வருது. யாருக்கு என்ன வருமோ அதைத்தான் செய்ய முடியும். ஒரு காபிக்கு இவ்வளவு அக்கப் போறா..? எனக்கு காபியே வேண்டாம்..!” என்று எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காபியுடன் வந்தார் நீலா.
“நீங்க ஒருத்தர் தான் அத்தை.. இந்த வீட்லயே என் மனசு புரிஞ்சு நடந்துக்குறிங்க…!” என்றவள் அந்த காபியை வாங்கி ரசித்துக் குடித்துக் கொண்டே தோட்டத்துப் பக்கம் போனாள்.
“விஜய்.. அடுத்த மாசம் அஞ்சாம் தேதி நாள் நல்லா இருக்காம். அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்..!” என்று வள்ளி சொல்ல அதிர்ந்தான் விஜய்.
“என்ன பட்டி சொல்றிங்க..? வித்யா அத்தை ஏதோ பேச்சுக்கு சொன்னாங்க. நீங்க அதையே பிடிச்சுக்கிட்டிங்களா..? அவளுக்கு சுத்தமா இந்த கல்யாணம் பிடிக்கலை. அப்பறம் ஏன் கட்டாயப்படுத்தி செய்யணும். வேண்டாம் விட்ருங்க..!” என்றான்.
“அதெல்லாம் அவ சரின்னு சொல்லிட்டா..! நீ எதுவும் புதுசா ஆரம்பிக்காத..!” என்றார் வள்ளி.
“நம்பற மாதிரி இல்லையே..?” என்றான் யோசனையுடன்.
“எதுக்கு விஜய் இவ்வளவு யோசிக்குற..? இந்த அத்தைக்காக இதைக் கூட பண்ண மாட்டியா..?” என்று வித்யா கேட்கவும்,
“உங்களுக்காக நான் எது வேணும்ன்னாலும் செய்வேன் அத்தை. ஆனா, இதுல நான் மட்டும் சம்பந்தப்படலை. உங்க பொண்ணும் சம்பந்தப் பட்டிருக்கா. அவ சம்மதம் கண்டிப்பா முக்கியம்.அதுவே இல்லைங்கும் போது..” என்று அவன் நிறுத்த,
“அவளுக்கு சம்மதம் தான் விஜய். அவகிட்ட கேட்டுத்தான் செய்றோம்..!” என்றார் வித்யா.
“அதுக்கு மேல உங்க பிரியம்..!” என்றவன் ஆபீஸ் கிளம்ப, வெளியே தோட்டத்தில் இன்னமும் அதே கோலத்தில் தான் இருந்தாள் துளசி.
‘பாட்டி இவளைத் திட்டுறதிலும் தப்பே இல்லை..!’ என்று மனதில் நினைத்தவன், ஏதோ ஒரு உணர்வு உந்த மீண்டும் அவளைப் பார்த்தான்.
எந்தவொரு போலிச் சாயமும் இல்லை அவள் முகத்தில். கலைந்த கூந்தலும், நலுங்கிய நைட்டியும், அதைப் பற்றிய கவலை சிறிதும் இன்றி எதோ தீவிர யோசனையில் இருந்தாள்.
“விஷ்வா..!” என்றான் காரின் அருகில் நின்று கொண்டு.
அவள் திரும்ப,
“தேங்க்ஸ்..!!” என்றவன், அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி சென்று விட்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் எப்போதும் அழைக்கும் ‘விஷ்வா’ என்ற அழைப்பு. அவளின் அடி மனது வரை ஊடுருவி சென்றது அவனின் அழைப்பும்,பார்வையும். அதற்கு மேல் அவளுக்கு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை.
சில நேரங்களில், நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்போம். ஆனா,அதுக்கு மாறாக இது தான் வாழ்க்கை என்று சில பாடங்களை நமக்குப் புகட்டும் வாழ்க்கை. இவளும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தாள். அவள் மனதின் காயங்கள் யாரும் அறியாமல் அவள் மனதிற்குள்ளேயே புதைக்கப்பட்டிருந்தன. அதை என்றாவது வெளிப்படுத்துவாளா விஷ்வ துளசி..?
அங்கு திவ்யாவுக்கோ முழுக்க முழுக்க கோபம். விஜய் பேசிச் சென்ற வார்த்தைகள் மீது அப்படி ஒரு கோபம். வெளியே தெரியாமல் துளசியிடம் நாடகம் ஆடிவிட்டு வந்தாலும், ஏனோ அவளின் உள்மனம் அவனின் உதாசீனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி பேசியிருப்ப..?” என்று மனதிற்குள் நினைத்து நினைத்து கோபத்தை ஏற்றிக் கொண்டிருந்தாள்.
‘பொறுமையா இரு திவ்யா. இதுல நிறைய குழப்பம் இருக்கு. அதுக்கு முதல்ல விடை தெரியணும். அப்பத்தான் சரியா காய் நகர்த்த முடியும்..!’ என்று தீர்மானம் எடுத்துக் கொண்டிருக்க,
“நீ செய்றது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை திவ்யா. பிரச்சனை பெரிய அளவுல கொண்டு போய் விட்டுடும். மாமாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..” என்றான்.
“உனக்கு பிடிக்கலைன்னா அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. அப்பாவுக்கு தெரியறதைப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னோட ஆசையை நிறைவேத்த துப்பில்லை. அவருக்கு ஏன் நான் பயப்படனும். இனி என்ன செய்யனும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்..!” என்றாள் திமிராக.
“நீ நினைக்கிறது இந்த ஜென்மத்துல நடக்காது. அதுக்கு அந்த பிரவீனும் விட மாட்டான்..!” என்றான் விமல்.
“முதல்ல அவனைப் போட்டுத் தள்ளனும். அப்பத்தான் நான் நினைச்சது நடக்கும்..!” என்றாள்.
“அது அவ்வளவு சுலபம் இல்லை. நீ பகல் கனவு கண்டுட்டு இருக்க வேண்டியது தான்.” என்ற விமலுக்கு, மனதிற்குள் எரிந்து கொண்டிருந்தது. அதற்காகவே திவ்யாவிற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தான்.
பார்க்க அப்பாவியாய் தெரியும் விமலின் முகத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அந்த வக்கிர முகத்தை இதுவரை யாரும் பார்க்கவில்லை. இத்தனை நாட்கள் சோறு போட்டு வளர்த்த அவனின் மாமன் கனகவேலிற்கு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டது தான் விமலின் சாமர்த்தியம்.
விஜய்யின் வீட்டில்…
திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. விஜய் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றிருந்தான். துளசியோ யாருக்கோ கல்யாணம் என்பதைப் போல்… தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாள்.
கல்யாணத்தை சிம்பிளாக செய்யலாம் என்று வித்யா சொல்ல, ரத்னவேல் அதற்கு சம்மதிக்கவில்லை.
“என்னோட பேரன் கல்யாணத்தை ஊரே மெச்சுர மாதிரி ஜாம்ஜாம்ன்னு நடத்தனும்..!” என்றார்.
“அதுக்கில்லைப்பா.. அந்த கனகு ஏதாவது பிரச்சனை பண்ணுவானோன்னு பயமா இருக்கு. அவன் புத்தியைப் பத்தித் தான் நமக்கு நல்லாத் தெரியுமே..?” என்றார் சுந்தர்.
“சுந்தர் சொல்றது ஒரு வகையில யோசிக்க வேண்டிய விஷயம் தான்ப்பா..!” என்றார் ராஜ சேகர்.
“அவனுக்கு பயந்து நம்ம பையன் கல்யாணத்தை கோவில்ல வச்சா நடத்த முடியும். அவன் பஞ்சத்துக்கு பணக்காரன் ஆனவன். ஆனா நம்ம குடும்பம் அப்படியா..? எது வந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்தை சிறப்பா பண்ணனும்..” என்று உறுதியாக சொல்லிவிட்டார் ரத்னவேல்.
“என் கல்யாணத்தையும் இப்படித்தான பண்ணுவிங்க தாத்தா..?” என்றான் அருண்குமார்.
“உனக்கு ஏண்டா இப்படி ஒருசந்தேகம்..?” என்றார் வள்ளி.
“இல்ல…தெரிஞ்சுக்கலாமேன்னு தான்..!” என்று அசடு வழிந்தான்.
“எனக்கும் சீக்கிரம் பொண்ணுப் பார்க்குற வழியைப் பாருங்கன்னு சுத்தி வளைச்சு சொல்றான் பாட்டி..!” என்றாள் பவித்ரா.
“ஆமா, இவளுக்கு ஜோசியம் தெரியும்..!” என்றான் அருண்.
“டேய் மவனே… நீ எப்ப, எப்படி, எதுக்கு பிட்டைப் போடுவான்னு எனக்குத் தெரியாதா..? இப்போதைக்கு உன் ஜாதக கட்டத்துல கல்யாண யோகம் இல்லை ராசா. முக்கியமா, அண்ணன் கல்யாணத்துல பொண்ணுங்களை சைட் அடிக்கிற யோகம் கூட உனக்கு இல்லை..!” என்றாள் சிரித்தபடி.
“எல்லாம் என் நேரம்..!” என்று தலையில் அடித்த அருண்,
“பிரவீண் சென்னையில இருந்து எப்ப வருவான்…?” என்றான்.
“அதென்ன வருவான்..? மாமான்னு சொல்ல முடியாதா..? என்றார் வள்ளி.
“சின்ன வயசுல இருந்து இப்படித்தான் கூப்பிடுறேன்.திடீர்ன்னு எல்லாம் மாத்த முடியாது..!” என்றான் அருண்.
“அவன் பவித்ராவை கட்டிக்கப் போறவன். கொஞ்சம் மரியாதை குடுத்துப் பேசு அருண்..!” என்று ரத்னவேல் அதட்ட, அதைக் கேட்ட பவித்ராவிற்கு மனதிற்குள் ஏதோ குறுகுறுப்பாய் இருந்தது.
“என்ன உடனே ட்ரீமா..? இன்னும் அந்த அளவுக்கு நீ வளரலை. எல்லாம் அண்ணன் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் சரியா.போ போய் படி போ..!” என்றான்.
“போடா..!”
“போடி..!” என்று இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க, அப்போது வந்தாள் துளசி.
“வா துளசி…! கல்யாண ஜவுளி எடுக்க போகணும். எங்க போகலாம்..?” என்றார் வித்யா.
“என்னை எதுக்கு கேட்குறிங்க..?”என்றாள் பட்டென்று.
“உன்னைக் கேட்காம யாரைக் கேட்பாங்க. நீ வந்து தான் புடவை எடுக்கணும்..!” என்றார் வித்யா.
“வரப் போற புருஷனே எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. இதுல புடவையை மட்டும் பிடிச்ச மாதிரி எடுத்து என்ன செய்ய…?” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
கல்யாணம் நெருங்க நெருங்க சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. சொல்ல முடியாத பதட்டம் விஜய்யை நினைத்து.