Thaen Sinthum Koodal 10 2
‘மீனா ரொம்ப நாள் லீவ்ல இருக்கிறா காலேஜ்ல இருந்து கால் செய்திருந்தாங்கன்னு அப்பா சொன்னார் மாமா.. செமஸ்டர் வேற வரப்போகுது.. வீட்டுக்கு வந்தா தனியா மேனேஜ் செய்துட்டு காலேஜ் போய்க்குவியான்னு கேட்டேன்.. அம்மா வந்ததுக்கப்புறம் காலேஜ்க்கு போறேன்னு சொன்னா.. அம்மா வீட்டுக்கு வர இன்னும் இருபது நாள் பக்கம் ஆகும்னு சொன்னேன்.. அதுக்குத்தான் இப்படி அழறா..” என்றான் வருந்திய குரலில்.
‘காலேஜ்தான..? நாங்க இங்கயிருந்து அனுப்பிக்கிறோம்.. அதுக்காக பூங்கொடி வீட்டுல இல்லாத நேரமா பார்த்து மீனாவை தனியா இருக்க சொன்னியா..?” என கடிந்து.. ‘நீ அழாதடாம்மா.. அம்மாவைத்தான பார்க்கனும்..? உன்னை ஹாஸ்பிட்டலுக்கு நான் கூட்டிட்டு போறேன்..” என்றார் முருகேசன்.
‘வேணாம் மாமா.. மீனாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகாதிங்க.. அவ கண்டிப்பா அம்மாகிட்ட உளறிடுவா.. இன்னும் இருபது நாள்தானே.. அம்மா வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் எல்லாம் சொல்லிக்கலாம்..” என்றான் எழிலரசன்.
‘சரிப்பா.. நீ சொல்றதும் சரிதான்.. நேத்து கூட அதிர்ச்சி ஆகறமாதிரி எதுவும் பேசக்கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க.. மீனாவைப் பத்தின கவலை உனக்கு வேண்டாம்.. நீ பத்திரமா இரு.. “ என்றார் முருகேசன்.
Advertisement
‘சரிங்க மாமா..நான் வைக்கிறேன்..” என்று எழில் வைத்ததும்.. ‘டீ குடிடாம்மா..”என்று பழனியப்பன் சொல்ல.. ‘வேணாம் மாமா..” என்றாள் அழுகையோடே.
இவளின் அழுகையை சகிக்க முடியாமல்.. இப்போ எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சிட்டிருக்கா..? டாக்டர்தான் அத்தைகிட்ட அதிர்ச்சியாகற மாதிரி எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கள்ல..? என்று வீரபத்திரன் மனதுக்குள் குமைந்துகொண்டிருந்தான்.
‘இங்க பாருடாம்மா.. வீட்லயே அடைஞ்சிருந்தாத்தான் அம்மா நினைப்பு அதிகமாகும்.. எழிலு சொன்னமாதிரி நாளைல இருந்து காலேஜ் போறியா..? பரிட்சை வேற பக்கமா வருதாமே..?” என்று பேத்தியிடம் தன்மையாய் கேட்டார்.
Advertisement
‘எனக்கு படிக்க வேணாம் தாத்தா.. அம்மாக்கு சரியானதும் வேலைக்கு போலாம்னு இருக்கேன்.. அம்மாவை பார்த்தே ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சி.. ஒரு முறை அம்மாகிட்ட கூட்டிட்டு போங்களேன்.. நிஜம்மா அவங்ககிட்ட அந்த வருண் நாயைப் பத்தி பேசமாட்டேன்.. என்னை கூட்டிட்டு போறிங்களா…?” என்று மீண்டும் கேட்டாள்.
Advertisement
‘சரி நான் கூட்டிட்டு போறேன்..” என்று மன்னாதன் சொல்ல.. எழிலிடமிருந்து மீண்டும் அழைப்பு வர.. இவள் அட்டன் செய்ய.. ‘மீனா போனை மாமாகிட்ட கொடு..” என்றான்.
‘மாமா.. அரசு பேசனுமாம்..” என்று மொபைலை நீட்ட.. வாங்கியவர்.. ‘ம் சொல்லுப்பா..?” என்றார்.
‘மாமா.. மீனாகிட்ட அந்த வருண் நடந்துகிட்டதையே நினைச்சி நினைச்சி அப்பா அழுதுட்டிருந்திருக்கார்.. எதுக்கு இப்படி அழறிங்க..? எனக்குதான் சரியாகிடுச்சில்லன்னு அம்மா கேட்டுருக்காங்க.. மனசு தாங்காம அப்பா எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லிட்டாங்களாம்.. இன்னைக்கே டிஸ்சார்ஜ் செய்ங்கன்னு டாக்டர்கிட்ட கேட்டிருக்காங்க.. அவங்களும் ஓ.கே சொல்லிட்டாங்களாம்.. இன்னும் ஒரு மணிநேரத்தில அப்பா அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாராம்.. அப்பா இப்போதான் போன்ல சொன்னார்.. மீனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுறிங்களா மாமா..?” என்றான் எழில்.
Advertisement
எழில் சொன்னதை பழனியப்பன் அனைவரிடமும் சொல்ல.. ‘அம்மா வீட்டுக்கு வரப்போறாங்களா..? என்னை கூட்டிட்டு போறிங்களா மாமா..?” என்று உற்சாகத்தோடு மீனா கெஞ்சினாள்.
அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்த வீரபத்திரன் உள்ளே வர.. வீரவிடமும் பழனி நடந்ததை சொல்ல.. ‘நீங்க கூட்டிட்டு போய் அந்தாளுகிட்ட அசிங்கப்படறதுக்கா.? அவங்க வீட்டுக்கெல்லாம் நீங்க யாரும் போகக்கூடாது.. கூட்டிட்டு வந்தவனே வந்து கூட்டிட்டு போகட்டும்..” என்றான் வீரா.
வீரா பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த எழில்.. ‘மாமா நான் வர இன்னும் இருபது நாளுக்கு பக்கம் ஆகும்..” என்று இறங்கிய குரலில் சொன்னவன்.. ‘அப்பா எதுவும் தப்பா பேசமாட்டார்.. மீனா பாவம்.. அம்மாவை பார்த்தே ஒரு மாசத்துக்கு மேல இருக்கும்..” என்று கெஞ்சலாய் கேட்டான்.
‘சரிப்பா.. நானே போய் விட்டுட்டு வரேன். நீ இங்கயே நினைச்சிட்டிருக்காத.. போக்குவரத்துல கவனமா இரு.. நான் வைக்கிறேன்..” என்று சொல்லி பழனியப்பன் இணைப்பை துண்டிக்க.. வீரபத்திரன் தன் அப்பாவை முறைத்துக்கொண்டிருக்க.. ‘பாவம்டா.. சின்ன பொண்ணு.. அதுக்கும் அம்மாவை பார்க்கனும்னு இருக்கும்தானே.? அந்தாளு எதுவும் தப்பா பேசமாட்டான்னு எழிலு சொன்னான்.. அப்படியே பேசினாலும் நாக்க புடுங்கிக்கிற மாதிரி நானும் நல்லதா நாலு கேட்டுடறேன்..” என்று வீராவை சமாதனம் செய்தார்.
‘என்னவோ செய்ங்க..” என்று கடுகடுத்தவன் தனதறைக்குள் புகுந்து கொண்டான்.
‘பில் செட்டில் செய்து அம்மா வீட்டுக்கு போக எப்படியும் இரண்டு மணிநேரத்துக்கும மேல ஆகும்.. போய் முகம் கழுவிட்டு வா.. டீ குடிச்சிட்டு வீட்டுக்கு போலாம்..” என்றார்
‘சரிங்க மாமா..” என்று தனக்கென ஒதுக்கப்ட்ட அறைக்கு சென்றாள் உற்சாகத்தோடு. மீனாட்சி வந்த அன்றும் அடுத்தநாள் காலை உடற்பயிற்ச்சி முடித்து வந்தபோதும் பார்த்ததுதான்.. அதன்பின் கடந்த பத்து நாட்களாக வீரா அவளிடம் பேசியதும் இல்லை.. மறைமுகமாகக் கூட அவளின் முகம் பார்க்க விழையவில்லை.. ஆனாலும் அவள் கிளம்புகிறாள் என்றதும் ஏனோ கோபம் கோபமாக வந்தது வீரபத்திரனுக்கு..
தன் தந்தையும் பெரியப்பாவும் மதியாதார் வீட்டு வாயிலை இவளுக்காக மிதிக்க வேண்டுமா..? ஏன்..? அவள் அண்ணன் வரும்வரை இங்கிருந்தால் ஆகாதா..? அந்தாளு எதாவது சொன்னான் என்றால் அதன் பிறகு எத்தனை வாதாடினாலும் சொன்னது சொன்னதுதானே..? என தன் தந்தை பெரியப்பாக்காக கோபப்படுவதாக நினைத்து பொரிந்து கொண்டிருந்தான்.
மீனா முகம் கழுவி வெளியே வர.. சாரதா டீ கொடுத்தார்.. வாங்கி குடித்தவள்.. ‘என்னை பிடிக்கலன்னாலும் வீடு தேடி வந்த புள்ளைய சரியா நடத்தனும்னு ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டிங்க..” என்றவள் திடுமென சாரதாவை கட்டியணைத்து.. ‘ரொம்ப தேங்க்ஸ் அத்தை..” என்றாள் முழு மனதாக..
அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்க.. சாரதாவிடமிருந்து விலகி சாந்தியிடமும் இதையே செய்ய.. ‘இதில என்னமா இருக்கு..? உனக்குன்னு தனியாவா பொங்கி போட்டோம்..? தேங்செல்லாம் சொல்லக்கூடாது..” என்றார்.
‘ரொம்ப சந்தோசம்த்தை.. எப்படியோ இப்போவாவது பேசுனிங்களே..” என்றாள் சந்தோசமாக.. அங்கே தங்கராசுவும் வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்தவன்.. ஆச்சர்யமாய் பார்த்திருந்தான் தன் அம்மாவை.
மீனாட்சி வீட்டிற்க்கு செல்வதை சாந்தி மகனிடம் விளக்க.. தினமும் மதியம் சாப்பிட வரும்போது சாப்ட்டியாம்மா..? என தங்கராசு கேட்கும் ஒரு கேள்விக்கு தாத்தாவோடு சாப்டுக்குவேன் என பதிலளிப்பவள்..
அதன் பின் அவனின் பட்டறையின் வேலைப் பற்றி.. அத்தனை பெரிய லாரியை எப்படி ஓட்டக்கத்துகிட்டிங்க..? என்பன போன்ற நிறை கேட்பாள்.. இரண்டு நாள்வரை வேறு வழியின்றி பதிலளித்தவன்.. பிறகு மீனாட்சியின் விடா முயற்ச்சியில் தன் தொழில் பற்றிய அவளின் கேள்விகளுக்கு சலிக்காமலும் ஆர்வமாகவும் பதிலளிக்க ஆரம்பித்திருக்க.. கடந்த ஒரு வாரமாக இருவரிடமும் இயல்பான பேச்சுகள் இருப்பதால்.. ‘இரும்மா.. பத்து நிமிசத்தில குளிச்சிட்டு வந்திடறேன்..” என்று உள்ளே போனான் தங்கராசு.
பூவரசியின் அறையருகே சென்றவள்.. ‘பூவம்மா..” என்றழைக்க.. படித்துக் கொண்டிருந்த பூவரசி ஆச்சர்ய பார்வையோடுவெளியே வர.. ‘நான் கிளம்பறேன்..” என்றாள் சிரித்த முகமாக.
‘ம்..” என்றாள். எத்தனைதான் மீனாட்சி இயல்பாக பேசினாலும் பூவரசி ம் என்ற வார்த்தை தவிர முடிந்தவரை வேறு பேசமாட்டாள்.. இன்றைக்கும் ‘ம்..” என்று சொன்னதால் இச்சிறு பெண்ணின் மனதை கூட நம்மால் வெல்ல முடியவில்லையே என சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள்..
‘தினமும் ஐஞ்சு மணியானா உன்னோட டீயும் பாட்டும்தான் எனக்கு நியாபகம் வரும்..” என்று சொல்லி வீரபத்திரனின் அறையருகே சென்றவள்.. சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தாள். பின்னர் மெதுவாய் கதவை தட்டினாள்..
‘வா.. பூவம்மா.. இதென்ன..? புதுசா கதவை தட்டுற..?” என்று வீரபத்திரன் சொல்ல..
‘நா.. நான்.. மீனா..” என்றாள் தயக்கத்தோடு.
அவளின் மேலிருந்த கோபத்தில் கதவை திறவாமலே.. ‘என்ன..?” என்றான் கடுகடுப்பாக..
மீனா பக்கத்திலேயே நின்றிருந்த மயிலம்மா பேரனின் அறை கதவை திறந்து விட்டு.. ‘உன் கிட்ட சொல்லிட்டு போக நிக்குது வீரா..” என்றார்.
என் மேல எதுக்கு இத்தனை கோபம்.? அப்படி உன்னை என்னதான் செய்துட்டேன்..? என மனம் வெம்ப.. கண்களிலும் நீர் கோர்த்தது.. இவள் மூக்கை உறிஞ்சும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன்.. ‘நாங்கள்லாம் உன்னை கொடுமை செய்த மாதிரி எதுக்கு இப்படி உன் வீட்டுக்கு போற நேரத்தில அழுதிட்டிருக்க..? இப்படி மூஞ்சியைப் பார்த்தா எங்கத்தை எங்களை என்ன நினைப்பாங்க..?” என்றான் கோபத்தோடே.
தன் கண்களை துடைத்துக்கொண்டவள்.. ‘போய்ட்டு வரேன்..” என்றாள்.
‘ம்..” என்றான் தன் மொபைலை சார்ஜில் போட்டபடி.
‘பூவம்மா.. டீ..” என்ற தங்கராசின் குரல் கேட்கவே.. அவ்விடம் விட்டு நகர்ந்தவள்.. ‘போய்ட்டு வரேன் அண்ணா..” என்றாள் தங்கராசிடம்.
‘இதென்னடாம்மா..? மாமனை அண்ணான்னு கூப்பிட்டுகிட்டு..? தங்கராசு உனக்கு மாமன் முறையில்ல ஆகுது..” என்று மயிலம்மா சிரிப்போடு எடுத்துரைக்க.. சற்று முன் அழுததில் கண்கள் சிவந்திருந்தாலும்.. சின்ன சிரிப்போடு..
‘போய்ட்டு வரேன் மாமா..” என்றாள் தாமதமின்றி.
‘அந்த வருணையும் அவன் நடந்துகிட்டதையும் மறந்திடனும்.. உன்னை நினைச்சி அத்தை வருந்தினாலும் நீதான் தைரியம் சொல்லனும்.. சரியா..?” என்றான் கனிவாக.
‘ம் மாமா..” என்றாள்.
‘நல்லா படி.. பத்திரமா இருந்துக்கோ…” என்றான்.
‘சரிங்க மாமா.. ஜோதி அக்காகிட்ட சொல்லிட்டு வந்திடறேன்..” என்று தங்கராசின் அறைக்குள் உரிமையாய் சென்றவள்.. படுத்திருந்த ஜோதியிடம்.. ‘உடம்பை பார்த்துக்கோங்கக்கா.. ஹெல்தி புட் சாப்பிடுங்க.. நான் என் வீட்டுக்கு போய்ட்டு வரேன்..” என்று சொல்ல.. ஜோதி தலையசைக்க.. வெளியே வந்தவள்..
‘போலாமா மாமா..?” என்றாள் பழனியப்பனிடம்.
‘மீனாம்மா.. உன் துணிமணில்லாம் எடுத்துக்கலயாடா.?” என்றார் மன்னாதன்.
‘ஏன் தாத்தா..? இவ்ளோ பெரிய வீட்ல என் துணிவைக்க இடமில்லையா..? இல்ல திரும்ப நான் இங்க வரக்கூடாதா..?” என்றாள் முகம் சுணங்கியவளாய்.
‘அச்சோ.. என்னடாம்மா இப்படி சொல்லிப்புட்ட..? இது உன் தாத்தா வீடுடா.. உன் தாய்மாமன் வீடுடா.. உனக்கில்லாத உரிமையா..? காலேஜி போற புள்ள.. மாத்தி போட்டுக்க ஆகுமேன்னுதான் சொன்னேன்..” என மன்னாதன் வருந்தினார்.
‘வருத்தப்படாதிங்க தாத்தா.. அம்மாக்கு சரியானதும் இனி அடிக்கடி நானும் அம்மாவும் இங்க வருவோம்.. அப்போ மாத்திக்க எனக்கு ஆகும்ல.. அதை நினைச்சிதான் எதுவும் எடுத்துக்காம போறேன்..” என்றாள்.
‘சரிடாம்மா.. பத்திரமா இரு.. நான் தினமும் போன் பண்றேன்..” என்றார் கண்கலங்கியவராய்.
தன் தாத்தாவையும் பாட்டியையும் கட்டியணைத்தவள்.. இருவருக்கும் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு ‘அழாதிங்க தாத்தா.. அம்மாக்கு சரியாகற வரைக்கும்தான் வரமாட்டேன்.. அதுக்கப்புறம் சனி ஞாயிறானா நானும் அம்மாவும் இங்கதான்..” என்று சொல்லி தன் மாமன்களோடு காரில் கிளம்பினாள்.
தன் அறையின் ஜன்னலிலிருந்து இவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தவன்.. போடி..என் தாத்தாக்கு என் அண்ணன் நான் பூவம்மான்னு எல்லாரும் இருக்கோம்.. சனி ஞாயிறானா இவ வருவான்னுதான் எங்கப்பாவும் தாத்தாபாட்டியும் ஏங்கிட்டிருக்காங்க பாரு..? என்னவோ இவ இல்லன்னா என் தாத்தா பாட்டிக்கு பொழுதே போகாதமாதிரி இல்ல கட்டிபிடிச்சி முத்தம் கொடுத்து ஐஸ் வச்சிட்டு போறா.. என கடுப்போடு நினைத்திருந்தான்.
