அத்தியாயம் 18
பிரிவு என்பது ஒருவரை
மறப்பதா? இல்லவே இல்லை,
மீண்டும் மீண்டும் நினைப்பதே!!!
அவர்களை வரவேற்க சுமனும் மாயாவும் வந்தார்கள். அடுத்த இரண்டு நாளில் அங்கிருக்கும் கோயிலில் வைத்து எளிமையாக யுவன் மற்றும் சுசீலா திருமணம் நடந்தது.
தன்னுடைய கழுத்தில் கிடந்த தாலியை வியப்பாக பார்த்தாள் சுசீலா. ஆனந்தத்தில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
“உனக்கு கல்யாணத்தைப் பத்தி நிறைய கனவு இருக்கும். நம்ம ரெண்டு பேருக்குமே அம்மா அப்பா கிடையாது சுசீ. உங்க முறைப்படி நம்மால கல்யாணம் செய்ய முடியாது. அட்லீஸ்ட் உனக்கு பிடிச்ச ஹிந்து முறைப்படியாவது கல்யாணம் செய்யணும்னு தான் இப்படி செஞ்சேன். உனக்கு பிடிச்சிருக்கு தானே?”, என்று கேட்டான் யுவன்.
“ம்ம், முறைல என்னங்க இருக்குது? எல்லா முறைப்படி தான் அஸ்வதி கல்யாணம் நடந்துச்சு. ஆனா… சரி விடுங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க கிடைச்சது நான் எந்த ஜென்மத்துல பண்ணுண புண்ணியமோ?”, என்று சந்தோஷமாக சொன்ன சுசீலா அவன் நெஞ்சிலே முகம் புதைத்துக் கொண்டாள். சுமனும் மாயாவும் தான் கிண்டல் செய்து அவர்கள் மனநிலையை மாற்றினார்கள்.
பின் அனைவரும் வீட்டுக்கு வந்ததும் மணமக்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்றார்கள் மாயாவும் சுமனும். தேனிலவின் மகிமை, மாயா இப்போது மூன்று மாதக் கருவை தன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளைப் பூ போல் தாங்கிக் கொண்டிருந்தான் சுமன். மாயாவும் எப்போதுமே சுமனை தேடிக் கொண்டே இருப்பாள்.
அவர்கள் சென்றதும் என்ன பேச என்று தெரியாமல் விழி பிதுங்கி இருவரும் வெளியே வந்து அமர்ந்து விட்டார்கள். அவர்கள் இருக்கும் வீடு அவ்வளவு அழகாக இருந்தது. சுற்றிலும் இருந்த புல்வெளிகள் மரங்கள் எப்போதுமே அவர்கள் மனதை அமைதி படுத்தியது.
அன்று இரவு உணவு முடிந்ததும் யுவனும் சுசீலாவும் மட்டும் அறையில் தனித்திருக்க இருவருக்குமே ஒரு அவஸ்தை வந்து ஒட்டிக் கொண்டது. மற்ற நேரமாக இருந்திருந்தால் இதெல்லாம் தோன்றியிருக்காதோ என்னவோ? இன்றே நல்ல முகூர்த்த நாள் என்பதால் அவர்களின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதனால் தான் இந்த தடுமாற்றம்.
பட்டுடுத்தி மிதமான அலங்காரத்தில் இருந்தவளை ரசித்தான் யுவன். அவளின் அழகு அவனை கொள்ளை கொண்டது. அவளையே அவன் ரசித்துக் கொண்டிருக்க அவனை எதிர்கொள்ள முடியாமல் நெளிந்தாள். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க என்று எண்ணி அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான்.
விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் அவள் கை கால்கள் எல்லாம் வெடவெடத்தது. “சுசீ”, என்று தாபத்துடன் வந்தது அவன் குரல்.
“ம்ம்”
“நீ எனக்கு வேணும் சுசீ. இப்ப மட்டும் இல்லை. உன் கூட வாழப்போற இந்த அருமையான வாழ்க்கை எனக்கு எல்லா ஜென்மத்துலயும் வேணும்”, என்று சொன்னவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.
மேலும் முன்னேறியவனை தடுக்காமல் வளைத்து அணைத்துக் கொண்டாள் சுசீலா. அவனுக்கு மறுப்பதற்கு என்று அவளிடம் எதுவுமே இல்லை.
இருவருக்கும் இடையில் காற்று கூட புக இயலாத நெருக்கம் உண்டானது. அவன் கைகள் ஆவலுடன் அவள் உடலில் பதிந்து அழுந்தியது. அவன் கொடுத்த ஈர முத்தங்கள் கணக்கில்லாமல் சென்றது. சுசீலாவோ அவன் உருவாக்கிய காதல் உலகத்தில் சந்தோஷமாக நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகியவனின் முகத்தில் நிம்மதி நிலவியது.
சோர்ந்து போய் இருந்தவள் “தூங்கலாமா?”, என்று கேட்க “ஓ, தூங்கலாமே?”, என்று சொன்னவனின் உதடுகள் அவள் முகத்தில் கோலமிட அங்கே இன்னொரு அத்தியாயம் ஆரம்பமானது.
எப்போது தூங்கினார்கள் என்று தெரியாமலே தூங்கிப் போனார்கள். சுசீலா கண் விழிக்கும் போது விடிந்திருந்தது. உடனே எழுந்து செல்ல மனதில்லாமல் அவன் கை அணைப்பில் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டு படுத்திருந்தாள்.
திடீரென்று கண் விழித்த யுவன் அவள் விழித்திருப்பதைக் கண்டு அவளை இன்னும் இறுக அணைத்து அவள் காதருகில் தன்னுடைய உதடுகளை பதித்தான்.
“தூங்கலையா டி நீ?”, என்று மென்மையாக முணுமுணுத்தான். அப்போது அவன் உதடுகள் காதில் பட்டு அவஸ்தையைக் கொடுத்தது. அவள் மனம் அவளிடத்தில் இல்லவே இல்லை.
பல பேரின் உயிரைக் கொன்ற யுவன் அவளுக்கு மட்டும் மென்மையானவன், அவளை பூவைப் போல கையாண்டவன். அந்த நினைவில் அவனைப் பார்த்து கனிவாகச் சிரித்தவள் “விடிஞ்சிருச்சு. இன்னுமா தூங்குவாங்க?”, என்று கேட்டாள்.
“மாமி விடிஞ்சிருச்சுன்னு வெளிய போய் கோலம் போட கிளம்பிராத டி. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சொன்னவன் தூங்கிப் போனான்.
அவன் தலையை கலைத்து செல்லமாக விளையாடியவள் குளிக்க சென்றாள். அதன் பின் அவனும் எழுந்து காலை டிபன், அரட்டை என்று அந்த நாள் சென்றது. அதன் பின் அவர்களும் தேனிலவு பயணம் சென்றார்கள்.
இருவருக்கும் வாழ்க்கை அழகானதாக சென்றது. சுமனின் உதவியுடன் கடல் உணவுகளை பதப்படுத்தி இறக்குமதி செய்யும் தொழிலை விரைவாக ஆரம்பித்து விட்டான் யுவன்.
இந்தியாவில் இருந்து இவர்களுக்கு உதவுவது கேசவ் என்பதால் வேறு எந்த சிக்கலும் இல்லாமல் தொழில் நல்ல படியாக சென்றது. இது சட்ட விரோதமான செயல் இல்லை என்பதால் லாபம் மிதமானதாகவே இருந்தது தான். ஆனால் அனைவரின் மனதிலும் நிம்மதி வந்திருந்தது.
காதலில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று புரிந்தது. அவன் இந்த அளவுக்கு தெளிவாக இருப்பதற்கு காரணம் சுசீலா தான் என்று நம்பியது யுவனின் மனம். தன்னுடன் மனம் உவந்து, காதலுடன் குடும்பம் நடத்தும் சுசீலாவை நினைத்து அவன் மனம் சிறகைப் போல லேசாக இருந்தது.
எங்கோ பிறந்து கடைசியில் யாரையும் தெரியாத அந்த நாட்டில் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்கள். அவள் காட்டும் பரிவும் நேசமும் மட்டுமே அவனுக்கு உயிர் மூச்சாக இருந்தது.
“இவளுடைய அருகாமை போதும். இவள் என் பக்கத்தில் இருப்பதே எனக்கு நிம்மதி. வேற எதுவும் வேண்டாம்”, என்று சந்தோஷமாக எண்ணிக் கொண்டான்.
வாழ்நாள் முழுவதும் போராட்டமாக கழிந்த அவனுக்கு இளைப்பாற இடத்தைக் கொடுத்தது சுசீலா தான். அவனுடைய வாழ்க்கையின் வசந்தமே அவள் தான்.
மும்பையில் அவனைத் தெரியாதவர்களே கிடையாது. ஆனால் அவன் ரெட்டி போல ஒரு குற்றவாளி கிடையாது. பிஸ்னஸ் என்ற போர்வைக்குள் இருந்து ரெட்டி போன்ற ஆட்களை களை பறித்தவன். நிறைய பேரின் வாழ்க்கையை காப்பாற்றி அவர்கள் நெஞ்சில் குடிபெயர்ந்தவன். அவனைப் பற்றிய எந்த தவறான ஆதாரமும் யாருக்கும் கிடைக்காததால் அவன் மேல் எந்த கேசும் கிடையாது.
அவன் தனிக்காட்டு ராஜா. அவனை தேடி வந்த ரோஜா சுசீலா தான். அவளை காத்து தனக்கென்று சொந்தமாக்கிக் கொண்டான். அவன் குணத்துக்கு அப்படியே நேர் மாறானவள் சுசீலா. ஏதோ ஒரு ஊரில் பிறந்து வளர்ந்தவள். யாருக்கும் அவளை தெரியாது. பக்கத்து தெருவில் கேட்டால் கூட அவளை யாருக்கும் தெரியாது.
அப்படிப் பட்ட ஐயர் மாமியின் கைக்குள் தான் அந்த அடங்காத சிங்கம் உறங்கிக் கொண்டிருந்தது. வாழ்க்கை விசித்திரமான ஒன்று தான். எப்படி பட்ட குணாதீசியங்களை கொண்ட இருவரையும் இணைத்திருக்கிறது என்று எண்ணி வியப்பாக இருந்தது.
இப்படி எல்லாம் நடக்கும் என்று சுசீலா கனவா கண்டாள்? அவளை பொறுத்த வரை திருமணமே கனவு. அப்படியே திருமணம் நடந்தாலும் அவளுடைய மாமா பார்க்கும் ஒரு பிராமனப் பையனை தான் திருமணம் செய்து கொள்வாள் என்று நினைத்தாள்.
ஆனால் இப்போதோ யுவனுடன் அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அவர்களை பிணைத்து வைத்திருப்பது காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
அனைவருக்கும் வானமாய், யாரும் தொட்டு விடாத சூரியனாய் இருந்தவன் தான் யுவன் நாயக். அப்படி பட்டவனிடம் மயங்கி நின்றாள் சுசீலா. அவளிடம் அவனை மயங்கவும் வைத்தாள்.
மூன்று மாதம் கழித்து ஒரு நாள் காலையில் எழுந்து குளித்து விட்டு சுசீலா சமையல் அறைக்கு சென்ற போது யாருமே இன்னும் எழுந்து கொள்ள வில்லை. மாயாவும் இன்னும் எழுந்து வரவில்லை.
மாயாவுக்கு வாந்தி பிரச்சனை இருப்பதால் அவள் எப்போதும் ஓய்விலே இருக்க வேண்டும் என்பது சுமனின் கட்டளை. சுமன் மாயாவை நினைத்து புன்னகை பூத்த சுசீலா அனைவருக்கும் காபி
கலந்து பிளாஸ்கில் ஊற்றி வைத்தாள்.
பின் நால்வருக்குமான சமையல் வேலையை செய்ய ஆரம்பித்தாள். அனைத்தையும் முடித்து விட்டு இரண்டு காபி கப்புகளை ஒரு டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள். அங்கே அவள் சேலையை மூடிய படி தூங்கிக் கொண்டிருந்தான் யுவன்.
அங்கிருந்த டேபிள் மீது காபியை வைத்து விட்டு அவன் அருகே அமர்ந்து அவன் தலை கோதி அவனை எழுப்பினாள்.
கண் விழித்தவன் அவளை கரை காணா காதலுடன் பார்த்தான். அடுத்த நொடி அவள் மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டான். எவ்வளவு இனிமையான ஒரு காலை என்று அவனுக்கு தோன்றியது.
ஈரத் தலையை துண்டினுள் அடக்கிய படி நெற்றி வகிட்டில் குங்குமம் மின்ன அன்று பூத்த புது மலர் போல இருந்தவளின் அழகு அவனை கொள்ளை கொண்டது.
“இவ்வளவு நேரமாக தூங்குவாங்க? உடம்பு வலிக்கும். எந்திரிங்க”, என்றாள் சுசீலா.
அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் “ரொம்ப நேரம் தூங்கினா தான் உடம்பு வலிக்குமா? நேத்து நைட் செஞ்ச வேலைக்கு சும்மாவே உடம்பு வலிக்க தான் செய்யுது டி”, என்று சொல்லி கண்களைச் சிமிட்டினான்.
அவன் எதை சொல்கிறான் என்று புரிந்து முகம் சிவந்தவள் “எப்பவும் இதே பேச்சு தான். எழுந்து காபி குடிங்க. ஆறுது”, என்று சொல்லி சிரித்தாள்.
அவன் முகம் கழுவி வந்த பிறகு அவன் கையில் காப்பியைக் கொடுத்து அவன் அருகே அமர்ந்து அவளும் குடித்தாள்.
அவனிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று சுசிலாவுக்கு உள்ளுக்குள் பரபரப்பாக இருந்தது. கூடவே சொல்ல தயக்கமாகவும் இருந்தது. அவள் தனக்குள் எப்படி சொல்ல என்று பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்க “மாயா, சுமன் எழுந்துட்டாங்களா?”, என்று கேட்டான் யுவன்.
“இன்னுமில்லை. காபி பிளாஸ்க்ல இருக்கு. மாயா எங்க எழப் போறாங்க? சுமன் தான் சேவகம் செய்வாங்க. அப்புறம் சுமன் மாயாவை எப்படி எல்லாம் கவனிக்காங்கன்னு நோட் பண்ணிக்கோங்க. கொஞ்ச நாள்ல நீங்களும் செய்ய வேண்டியது இருக்கும்”, என்று வெட்கத்துடன் சொல்ல அவன் கண்கள் மின்னியது.
“ஏய் சுசீ, நிஜமாவா?”, என்று ஆர்ப்பரித்தான் யுவன்.
“ஆமா”, என்று அவள் முணுமுணுக்க “இனி உன்னை நான் எப்படி பாத்துக்குறேன் பாரு”, என்று சொல்லி அவளை கொஞ்ச ஆரம்பித்தான்.
அவன் கொஞ்சலில் கரைந்து கொண்டிருந்தவள் அவன் சற்று எல்லை மீறவும் அவனிடம் இருந்து விலகி “இன்னைக்கு உங்களுக்கு லீவ் கிடையாது ஆபிசர் சார். ஒழுங்கா எந்திச்சு வேலைக்கு கிளம்புங்க. சாயங்காலம் வந்து கொஞ்சலாம்”, என்று சொல்லி அவனை கிளம்ப வைத்தாள்.
குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட வந்து அவள் முன்
நின்றவனுக்கு அவள் தான் தலையை துவட்டி விட வேண்டும். இது எப்போதும் நடப்பது தான். ஒரு குழந்தையை போல அவளிடம் தன்னுடைய தலையை கொடுத்துக் கொண்டிருந்தான் யுவன்.
அவன் பெறாத தாய்ப் பாசம் அனைத்தையும் அவளிடம் இருந்து பெற முயன்றான். அவன் மனது புரிந்த அவளும் அவனுக்கு அதை தாராளமாக கொடுத்தாள்.