Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ05_1 Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 5_1

 

 

“மாது ண்ணா.. கம்யூட்டர் சென்டர் சேர்ந்தா வசதியா இருக்கும்ன்னு பாக்கறேன். என்ன ண்ணா சொல்ற?”



Advertisement

 

“ஏன் டீ? காலேஜ்ல சொல்லி தரது புரியலியா?”

 

Advertisement

“புரியுதுண்ணா… எனக்கு….”

Advertisement

 

சமைத்த சாப்பாட்டை பரிமாறிக் கொண்டே அலர்விழி மாதவனோடு கேட்டுக் கொண்டிருக்க.. சம்மந்தமே இல்லாமல் ஆஜர் ஆனார் பாக்கியா.

 

Advertisement

“ஏன் டி அலர் இந்த செமஸ்டர் பாஸ் ஆக மாட்டியா? உனக்கு எதுக்கு இந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் எல்லாம்? அதுக்கு தான் கடலூர்லயே ஏதாவது காலேஜ்ல காமர்ஸ்.. எக்கனாமிக்ஸ் எடுத்து படிச்சிருக்கணும். எல்லாம் உன் அப்பன சொல்லணும். நீ என்ன சொன்னாலும் எதுவும் யோசிக்காம தலைய தலைய அவர் ஆட்டவும் நீயும் தலை கால் புரியாம ஆடுற.”

 

“மா… ஏன் மா சும்மாவே இருக்க மாட்டீங்களா? போங்க மா… போய் உங்க பொண்ண டிவிய ஆஃப் பண்ணிட்டு படிக்க சொல்லுங்க.. மேடம் பன்னெண்டு ஒழுங்கா பாஸ் பண்ணினா தான் காலேஜ் பக்கமாது போக முடியும்.”

 

“ம்கும்.. என் பையன என்ன பண்ணினாளோ தெரியல.. இதுவும் அவளுக்கு பூம் பூம் மாடு மாதிரி மண்டைய மண்டைய ஆட்டுது..”, வாய்க்குள் பொருமிக் கொண்டே நகர்ந்தார்.

 

அவர் அப்படி தான். அலர்விழியை மென்று விழுங்க முகவும் பிடிக்கும். அனைத்திலும் அவர் மகளை விட ஒரு படி மேல் இருப்பவளைக் கொஞ்சம் மட்டம் தட்டிப் பார்ப்பதில் ஒரு தனி சுகம் அவருக்கு.

 

“நீ சொல்லு.. என்ன சென்டர்? என்ன படிக்க?”

 

கல்லூரியில் முதல் செமஸ்டர் முடிவடைந்திருக்க.. இரவு இரயிலில் வீட்டிற்குக் கிளம்ப இருந்தவளைத் தனியே போக மாதவன் சம்மதிக்கவில்லை. வம்படியாக விடுதி சென்று வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.

 

‘சித்தப்பாவ பாத்து நாள் ஆச்சு… நானும் வரேன்’, என்றுவிட அண்ணனும் தங்கையும் நாளை மாலை கிளம்பிவிடுவர்.

 

பாக்கியாவிற்கு அதிலும் எரிச்சல் தான். ‘போறவ பஸ்ல ஏறி போகாம என் பையன ட்ரைவர் வேல பாக்க வச்சுகிட்டு!’ அந்த கோபம் தான் இன்று அலர்விழி வந்தது முதலே.. குத்தலும் குதர்க்கமுமாய் அவள் தலை மேல் மழையாய் பொழிந்து கொண்டு.

 

“கிராபிக்ஸ் அண்ட அனிமேஷன், விஷுவல் எஃபக்ட்ஸ், அப்புறம் கேமிங் (Graphics and animation, visual effects, gaming) படிக்கலாம்ன்னு நினைக்கிறேன்.”

 

“உன் ஃப்ரெண்ட்ஸ் யாராவது படிக்கிறாங்களா?”

 

“நான் சேந்தா, என் ஃப்ரெண்ட்  ஸ்ருதி சேறேன்னு சொன்னா..”

 

“எனக்கு இந்த ஃபீல்ட் தெரியல அலர். விசாரிச்சு சொல்லவா?”

 

“ஹாஸ்டல்ல ஜானகி ஆண்டிட்ட அன்னைக்கு பேசும் போது சொன்னேன்… அவங்க ராயபெட்-ல இருக்க ‘டேர் டு ட்ரீம் கம்ப்யூட்டர் சென்டர்’ போய் பாக்க சொன்னாங்க. ஹாஸ்டல்ல இருந்து பக்கம் தானே, ஊருக்கு போயிட்டு வந்ததும் அங்க விசாரிக்கவா..” யோசனையாக அவன் முகம் பார்த்தாள்.

 

விஷுவல் கம்யுனிகேஷன் மாணவியை கணினி வரைகலை அதிகமாக ஈர்த்தது. கல்லூரியில் சொல்லித்தருவது போதவில்லை. இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசை. நூலக புத்திகளில் படிப்பதை எல்லாம் செய்து பார்க்கும் ஆவல். அவள் விருப்பத்தை அவளின் நலன் விரும்பி ஜானகி ஆண்டியிடம் கூறினாள்.

 

“மூணு வருஷம் காலேஜ் முடியும் போது, கைல ஆஃபர் லெடர் இருக்கணும் ஆண்டி. அதுக்கு முதல்ல இப்போ ட்ரெண்டுல இருக்க சாஃப்ட்வேர் படிக்கணும். அப்புறம் அங்கேயே ஒரு ஆறு மாசம் சம்பளம் இல்லேனா கூட பரவாலன்னு வேலை செய்யணும். அப்படியே முடிஞ்ச அளவு நிறைய கத்துக்கணும். அப்புறம் ஒரு க்ராஃபிக்ஸ், வெப் டிசைனிங்க் பண்ற சின்ன கம்பனில சேரணும். படிப்பு முடியவும்… கையில டிகிரீ, மண்டை பூரா சரக்கோட பெரிய கம்பனில ஜாயின் பண்ணனும். அப்புறம் ஆன் சைட்-ல போய் வேல பார்த்து அம்மா அப்பாக்கு ரெஸ்ட் குடுக்கணும் ஆண்டி. ஒரு நாள் நான்.. நானும் பிரம்மாண்டமான ஒரு கம்யூடர் சென்டர் வைக்கணும்.. நிரைய பிள்ளைங்க அங்க படிக்க வரணும்..”

 

கண்ணில் கனவோடு பேசிய அலர்விழி மேல் ஒரு தனி மதிப்பே ஜானகி ஆண்டிக்கு ஏற்பட்டது நிஜம்.

 

ஜானகிக்கு குடும்பம் மட்டும் தான் இல்லை.. மற்றபடி அவர் நட்பு வட்டாரம் கிளைப்பரப்பின ஆலமரம் போல்.

 

“எஸ்தர்ன்னு எனக்கு ஒரு ஃப்ரெண்டு, அடிக்கடி இங்க வருவா.. அறிமுகபடுத்தி வைக்கிறேன் உனக்கு.

 

உன்ன பாத்தா எனக்கு அவ தான் நினைவுக்கு வரா. நான் கல்யாணம் ஆனதும் இருந்த வேலைய விட்டுட்டு என் புருஷன் மாமியார் மாமனார் கொழுந்தனுக்கு ஏத்த மாதிரி சமைக்கவும் வீட பாத்துக்கவும் இறங்கின சமயம் அது. எனக்குன்னு இருந்த கனவெல்லாம் மறந்து போயி குடும்பமே எல்லாமா மாறி போன டைம்! அப்போ தான் அவளுக்கும் கல்யாணம் ஆச்சு. அவளுக்கும் ஒரு கனவு இருந்துது ஆனா என்னை மாதிரி அவ லட்சியத்த மறக்கல! இன்னைக்கு ஒரு கம்யூட்டர் சென்டர் வச்சிருக்கா. நீ கூட கேள்வி பட்டிருப்பியே டேர் டு ட்ரீம்! அவளுது தான்.

 

அவ சென்டர் போய் பாரு.. அங்க படிச்சா கண்டிப்பா வேலை உறுதி!

 

நீயும் எஸ்தர் மாதிரி உன் லட்சியத்த அடைய என் வாழ்த்துக்கள் அலர்விழி.”

 

இன்று அதே சென்டர் பற்றித் தான் மாதவனோடு பேசிக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு இந்த சென்டர் பத்தி தெரியல டா. ஏன் தள்ளி போட்டுகிட்டு? நாளைக்குச் சனிக் கிழமை தான.. எனக்கு அடையார்ல ஒரு வேலை இருக்கு.. உன்ன சென்டர்ல விட்டுட்டு நான் வந்திடுறேன்… நீ வேல முடிஞ்சதும் அடையார் வந்திடு. சேர்ந்தே வீட்டுக்கு வந்திடலாம்.. நாலு இடத்தில விசாரிப்போம்.. எது சரி வருதோ அதுல ஜாயின் பண்ணிக்கோ.” – மாதவன்

 

ஆறு மாதமாக அவளின் உடன் பிறப்பாய் மாறிப் போயிருந்தான் மாதவன். தள்ளித் தான் நிறுத்த பார்த்தாள் உறவுகளை.. ஆனால் அவன் விட்டானில்லை. அவளின் அனைத்து முடிவுகளிலுமே அவன் இருந்தான். ‘இத செய்யவா?’ என்பதை எதிர்பார்க்கவில்லை. ‘இத செய்யறேண்ணா’ என்ற தகவல் அவனுக்கு போதும். வெள்ளி மாலை ஒன்றாய் பயணம்.. திங்கள் காலை பயணம்… என்று ஆரம்பித்த உறவு ஆறு மாதங்களில் அதிகம் ஆழம் பிடித்தது.

 

சிறியதில் அவனுக்கு அரனாய் அவள் சுற்றிய காலம் மாறி, அலர்விழிக்கு அண்ணனாய் இருக்க ஆசை கொண்டான் தமையன்.

 

கூறியது போலவே காலை ஒன்பது மணிக்கு பைக் ராயப்பேட்டையை நோக்கிச் சென்றது.

 

ராயப்பேட்டையில் கம்யூட்டர் மையம் மட்டுமா உள்ளது?

 

சென்னையில் பலதரப் பட்ட மக்களைக் காணலாம். ஒரு தெருவில் ரோல்ஸ் ராய்சும், பென்டியிலும் சர்வ சாதாரணமாய் உலாவரும். அதே தெருவில் பின்னால் இருக்கும் தெருவில் சைக்கிள் நுழைவது கடினம். அங்குக் குழாய் சண்டை காதை கிழிக்கும். இது தான் சென்னை!

 

வீட்டின் முன் இரண்டு மகிழுந்தாவது நிற்கும் ராயப்பேட்டை பகுதி அது. பெரிய பெரிய வீடுகள். எல்லாம் அந்த காலத்துத் தனி வீடுகள். அங்கொன்றும் இங்கொருமாய் புதிதாக முளைத்துக் கொண்டிருந்தது அடுக்கு மாடிக் கட்டிடங்கள்.

 

அடுக்கு மாடி கட்டிடங்கள் தவிர மற்ற அனைத்து வீட்டு மதில் சுவருக்கு வெளியே ஏதோ ஒரு பூ பூக்கும் மரம் நிற்க, அந்த ஒரு வீட்டின் மதில் சுவரிக்கு வெளியே நாவல் மரம் ஒன்று. இரண்டு மாதம் முன்பு வரை அதில் கொத்து கொத்தாய் பழுத்துத் தொங்கிய பழங்களுக்காக குட்டி குரங்குகளாய் மாறிப் போன பள்ளி பிள்ளைகள் தான் எத்தனை.

 

காம்பொண்ட் கேட் உள்ளே நுழைந்ததும் ஒன்றரை ஆள் உயரத்திற்குப் பவளத்தையும் முத்தையும் மலராய் ஏந்தியிருந்த பவழமல்லி. செடியில் சிலது மட்டுமே வீற்றிருக்க, இரவு பூத்த பவழமல்லி வாசலை அலங்கரித்திருந்தது. 

 

கண்டிப்பாக அந்த வீட்டின் வெளிப்புறம் மனதில் ஒரு அமைதியை ஏற்படுத்த வல்லது. மிகப் பெரிய வீடில்லை என்றாலும் மூன்று நபருக்குச் சற்று பெரியது தான். பெரிய போர்ட்டிகோ, உள்ளே பெரிய ஹால், சுற்றி சில பல அறைகள். ஹால் வழியே, சுற்றிக் கொண்டு மாடி அறைகளுக்குச் செல்ல அகலமான படிகள். படி ஏறி மாடி ஹாலுக்கு செல்லும் வரையிலுமே அங்கு அமைதி தான்.

 

அந்த அறையின் தேக்கு மரக் கதவைத் திறக்கும் வரை இருந்த அமைதி, அதைத் திறந்த பின் காணாமலே போனது. காலை வேளையின் அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தது இசைத்துக் கொண்டிருந்த அயல் நாட்டுப் பாடல் ஒன்று.

 

கூடவே சத்தமாகப் பாடிக்கொண்டு, தலை வாரிக் கொண்டிருந்தவன் வாயும் கையும் அதன் வேலையை நிறுத்தியது. காரணம் பாட்டு நின்றிருந்தது.

 

திரும்பிப் பார்த்தவன், “ஏன் மா இப்போ அத ஆஃப் பண்ணினீங்க?”, கேட்டுக் கொண்டே மீண்டும் பாடலை பாடவிட்டவனிடம் எஸ்தரின் முறைப்பு எடுபடவில்லை.

 

“காலையில கடவுள் பாட்டு கேட்டா என்ன? இல்லையா மனுஷன் கேக்குற மாதிரி பாட்டு கேக்கணும்! இது என்ன டா பாட்டு? ஃபிட்ஸ் வந்தவன் பாடுற மாதிரி?”

 

“ஆரம்பிச்சுட்டீங்களா? ரசனையே இல்ல மா உங்களுக்கு! காலையில எனர்ஜட்டிக்கா அப்பிடியே நாடி நரம்பெல்லாம் சுறுசுறுப்பாகல?”

 

அவர் முகம் போன போக்கைப் பார்த்தவன், “ஆகலியா? சரி வரியில இருக்க அர்த்தத்தை பாருங்கம்மா… அந்த ஃபீல் இருக்கே…”

 

அவர் முகம் கேவலமான.. அழுகி போன பழத்தை உண்டது போன்ற முக பாவத்தைக் காட்ட, “போங்கமா உங்களுக்கு இந்த ஜென்ரேஷன் புரியாது.”, என்று வேண்டுமென்றே “ஹே கூகுள் ப்ளே நேக்ஸ்ட் சாங்”, என்று கூகுள் ஹோமிற்கு(google home) கட்டளையிட அது அடுத்த பாடலுக்குத் தாவ…

 

“அம்மாஆஆ… டேய் அந்த வலிப்பெடுத்த பாட்டே தேவலாம்! ஒரு நாள் இல்ல ஒரு நாள்.. இந்த ஸ்பீக்கர அடுப்பில வைக்கல..? வைக்கல இல்ல.. வைக்கிறேன்!”

 

“ம்மா!!”

 

“உனக்கு கருத்து தானே வேணும்.. கண்ணதாசன் பாட்ட கேளு.. தத்துவம் கொட்டும்.. அவர் வரில இல்லாத உணர்வுகளா?”

 

“இன்னும் அவரையே பிடிச்சுகிட்டு தொங்காதீங்க… வளருங்கமா”

 

இவர்கள் வாக்குவாதத்தை நாம் கண்டு கொள்ள வேண்டாம். என்றும் நடப்பது தான். இவர் ஆவேசமாக ஆரம்பிப்பதும்… அவன் தோளோடு அம்மாவை கட்டி கொண்டு அம்மா கன்னத்தில் இதழ் பதிப்பதும், “எப்படி மா இந்த வயசுலேயும் உங்க சப்பி சீக்ஸ் இன்னும் இப்படி அழகா இருக்கு. என் செல்லம் மா நீங்க..”, என்று கொஞ்ச ஆரம்பிப்பதும்…

 

எஸ்தர், தான் தான் உலகத்திலேயே பேறு பெற்ற தாய் போல் உணர்வதும்.. “போடா போக்கிரி..” என்று அவர் வழிவதும்.. தினம் நடக்கும் கூத்துகளின் ஒன்று!

 

“வா சாப்பிட..”

 

“உங்கள முட்டி வலியோட மேல வர வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேனா இல்லியா? ஏன்மா படுத்துறீங்க?”

 

மாடி ஏறிவிடுவார் முட்டியை பிடித்துக் கொண்டே, இறங்குவதில் அப்படி ஒரு சிரமம் அவருக்கு.

 

பட்டென்று அம்மாவைத் தூக்க.. அவர் குய்யோ முறையோ என்று ஒலி எழுப்ப… “எபி… அம்மாக்கு என்ன ஆச்சு?” என்று அப்பா குரல் எழுப்பிக் கொண்டே மாடிப் படி ஏற…

 

“ஒன்னும் இல்ல பா…” அப்பாவிற்கு பதில் அளித்து, அம்மாவிடம், “இனி மேல் மாடி பக்கம் வந்தீங்க… இது தான் கதி..”, கூறிக் கொண்டே கீழே தூக்கிச் சென்றான் மைந்தன்.

 

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பெயர் போன குடும்பம். சென்னைக்குக் குடிபெயர்ந்து வருடம் 25 ஆகிறது. பால்ராஜ் படிப்பு முடிந்ததும் சென்னையில் வங்கி வேலையில் அமர, அவரை திருமணம் செய்துகொண்ட எஸ்தருக்கும் சென்னை பிடித்துவிட, ஒரு கட்டத்தில் சொந்த ஊர் என்பது வருடத்திற்கு ஒரு முறை போகும் சுற்றுலாத் தலம் போல் ஆனது.  தம்பதியினரின் பெற்றோர் காலம் சென்றபின் அங்கிருந்த நில புலம் எல்லாம் விற்றுவிடச் சென்னை தான் அவர்கள் சொந்த ஊர் ஆகிப்போனது.

 

இன்று பால்ராஜ் அரசு வங்கியில், அதிக பணப்புழக்கத்தில் இருக்கும் ஒரு கிளையில் மேனேஜராக இருக்க, எஸ்தரோ ஒரு கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார்.

 

“அக்கா… இன்னைக்கு சாம்பார் சூபர் க்கா..”, தட்டிலிருந்த இட்டிலியை விழுங்கிக் கொண்டே வீட்டோடு தங்கி வீட்டு வேலை செய்யும் யமுனாவிற்கு ஒரு பாராட்டைத் தட்டி விட்டான், எபி.

 

“இன்னும் ஒரு இட்டிலி வச்சுக்கோ கண்ணு…”

 

“போதுங்கா… நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்க.”, என்றவன் சாப்பாடு மேசையிலிருந்து எழும்ப, கையில் கொடுக்கப்பட்ட மசால டீயை கண்மூடி ரசித்தான்.

 

“எபி, நான் வர லேட் ஆகும். அது வரைக்கும் சென்டர்லேயே இரு. இன்னைக்கு ஃபேக்கல்டிக்கு ஷார்ட் லிஸ்ட் பண்ணின ரெண்டு பேரு வராங்க.. நீ ஃபைனல் இன்டெர்வியூ பண்ண வேண்டி இருக்கும்..”, எஸ்தர் கூற, எந்த மறுப்பும் கூறாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு, “சரி மா.. கிளம்பறேன்.. அப்பா  பைய், க்கா வரேன்..” அனைவருக்கும் அறிவித்துக் கொண்டே கிளம்பினான்.

 

எபி-யின் கார் அவர்களது கணினி மையத்திற்குள் நுழையவும் அவன் கண்ணில் தென்பட்டாள் காந்த கண்ணழகி. அவள் தான்.. கண்டுக் கொள்ள இந்த முறை சிரமாக இருக்கவில்லை.

 

அப்பொழுது தான் தலைக்கவசத்தைக் கழட்டியவள்.. சுருள் சுருளாய் முதுகில் விரிந்து விழுந்த கூந்தலை சுருட்டி எடுத்து ஒன்றாய் க்ளிப் செய்தாள்.

 

நூடுல்ஸ் மண்டை என்று பீச் நிற சல்வார்.. காட்டன் துப்பட்டா என்று அழகிய கோலத்தில் காட்சியளித்தாள்.

 

சாக்கலேட் பாயின் பல்ஸரிலிருந்து இறங்கியவள் ஏதோ அவனோடு பேசிவிட்டு மையத்தில் வாயில் நோக்கிக் கிளம்பவும் அவன் பர்ஸிலிருந்து பணம் கொடுக்க.. வாங்க மறுத்தவளை அவன் முறைக்க… அவள் அவனைப் பாவமாகப் பார்க்க.. அவன் ஏதோ கூறிக் கொண்டே கை பிடித்து அதில் சில தாள்களைத் திணித்துவிட்டுப் பறந்தான்.

 

“யாரு டா நீ?” எபியின் மண்டை காய்ந்தது. இரண்டு மாதம் இருக்குமா இவளைப் பார்த்து? அன்று மைதானத்தில் பார்த்தது. அடுத்து வந்த சனிக்கிழமைகளின் அவன் கண் மைதானத்தை துழாவ அவளைக் கண்டானில்லை. இன்று இன்ப அதிர்ச்சி. முகத்தில் புன்னகை ஒட்டிக் கொண்டது.

 

‘இன்டெர்வியூக்கு மட்டும் நீ வந்திருந்த… ஐஸ் பேபி யூ ஆர் செலெக்டெட்’ சொல்லிக் கொண்டான்.

 

கையில் கார் சாவியைச் சுற்றிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் முகத்தில் அளவிற்கு அதிகமான புன்னகை. பார்த்ததும் எதிரில் இருப்பவருக்கு ஒட்டிக் கொள்ளும் புன்னகை அது.

 

“குட் மார்னிங் எபி”, சிரித்தாள் வரவேற்பாளர்.

 

“ஹாய் வனிதா. குட் மாட்னிங்”. இவனை விட ஏழு வயது பெரியவள். பார்த்தால் தெரியாது.

 

பூலோகத்திற்குத் தரையிறங்கினாலும் குஷி மூடிலேயே உள்ளே சென்றான்.

 

மாதவனோடு வந்திறங்கியவளுக்கோ அந்த ஆறு மாடி கட்டித்தில் எங்கு செல்வது என்ற பார்க்க, ‘டேர் டு ட்ரீம்’ அனைத்து தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது.

 

ஏதேனும் ஒரு தளத்தில் வகுப்பு இருக்கும் என்று நினைத்தவளுக்குக் கண்ணாடி கட்டிடம் கண்ணைக் கட்டியது.

 

‘கோர்ஸ் ஃபீ கம்மியா இருக்கணுமே..’ வேண்டிக் கொண்டாள்.

 

‘இந்தியாவின் தலை நகரம் சென்னையாக இருக்க வேண்டுமே’ என்ற வேண்டுதலுக்கு இணையானது அவள் வேண்டுதல் என்று சற்று நேரத்திற்கெல்லாம் தெரிந்து கொண்டாள்..

 

உள்ளே செல்ல.. ஏசி-யின் குளுமையும், அறையில் தவழ்ந்த வாசமும் வயிற்றைக் கலக்கியது. இவள் உள்ளே சென்றதும் ஓரமாய் இருந்த மேசையின் பின் இருந்த வரவேற்பாளர் சிரித்தாள்.

 

“வாங்க. எந்த விதமான உதவி வேணும்?” என்பதைச் சரளமான ஆங்கிலத்தில் கேட்க

 

‘இவனுங்க ஏசிக்கும்… பில்டிங் வாடைகைக்கும்… இதோ இவ சம்பளத்துக்கும் இங்க படிக்க வரவங்க தானே காசு குடுக்கணும்! இங்க எல்லாம் நமக்கு கட்டு படியாகுமா அலர்? உன் வசதிக்கு ஏத்த மாதிரி வேற இடம் பாரு’

 

‘போய்டலமா?’ எண்ணிக் கொண்டே கண்ணை உருட்டி உருட்டிக் கட்டிடத்தைப்  பார்க்க…

 

“ஹாய்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”, மீண்டும் அழகி கேட்க.. வந்ததுக்கேனும் விசாரித்து செல்வோம் என்ற எண்ணத்தோடு அவள் முன் போய் நின்றாள்.

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் சிற்றேடுடன்(ப்ரோஷர்) தனியறையில் அமர்ந்திருந்தாள். கல்லூரி முடித்தவர்கள் தினம் காலை முதல் மாலை வரை வந்து செல்லும் இடம் என்பது புரிந்தது. இவளை போன்ற மாணவர்கள் மிகவும் அரிது! வார இறுதியில் இவர்களைப் போன்று வேலை செய்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் வகுப்பு இருந்தது.

 

“நீங்க கேட்ட கோர்ஸ் டீச் பண்ற ஃபேகல்ட்டி யார் ஃப்ரீயா இருக்காங்கன்னு பார்த்து அனுப்புறேன். அவங்களால உங்க கேள்விக்கு எல்லாம் சரியான பதில் கொடுக்க முடியும். ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பை த பை.. ஐ அம் வனிதா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு கப் ஆரஜ் ஜீஸும், கோர்ஸ் பற்றிய வழவழப்பான புத்தம் போல் இருந்த ப்ரோஷர் ஒன்றைக் கொடுத்து, ஏதோ எமிரேட்ஸ் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பது போன்ற ஃபீலை கொடுத்து சென்றாள் வனிதா!

 

மீண்டுமாக அந்த பெரிய கண் அறையை வலம் வந்தது.

 

பதினெட்டு வயது. உலகம் தெரியாது. கண் முன் ஒரு கனவு… கனவை நினைவாக்கும் முதல் படி. சறுக்காமல் ஏற வேண்டும்.. ஆனால் இது தன்னை போல் மிடில் க்ளாஸ் ஆட்களுக்கு ஏற்ற இடமா? வனிதா.. ஆளும்.. அவள் பேச்சும்… அழகும்.. ஒப்பனையும்.. கண்டிப்பா ரொம்ப காஸ்டியான இடமா இருக்கும்! ஏதேதோ எண்ணம்.

 

‘இந்த ப்ரோஷோர்ல ரேட் போட்டிருக்குமோ..?’

 

இழுந்து ஒரு மூச்சை விட்டவள், கப்பிலிருந்த ஜூசை வாய்க்குள் ஊற்றி விட்டு கையிலிருந்த புத்தக வடிவிலிருந்த கோர்ஸ் புத்தக்த்தில் கண்ணைப் பதித்தாள்.

 

ஜூசை விழுங்கத் தோன்றவில்லை. ஆசைப் பட்ட கோர்ஸ் அனைத்துமே இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள கொடுக்க வேண்டிய விலை? கண் ஏகத்திற்கும் விரிந்தது. அவள் நினைப்பைப் பொய்யாக்கவில்லை அதில் தெரிந்த எண்கள்!

 

குனிந்து மும்முரமாகச் சிற்றேட்டில் தலையை விட்டிருப்பவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த எபி-க்கோ உள்ளுக்குள் குதூகலம்.

 

எத்தனை நாள் மூடிய இமைக்குள் வந்து சித்திரவதை செய்தது அந்த மலர் விழிகள்? எத்தனை சனிக்கிழமைகள் அவன் கண்கள் அந்த மைதானத்தைச் சுற்றி வந்தது? தேடினானே அவளை! அவளின் ஒவ்வொரு அசைவையும் எத்தனை நாட்கள் அசைபோட்டான். அவளின் இதயத்துடிப்பு? அந்த சொட்டு வியர்வை.. மனம் மீண்டும் துள்ளியது.

 

‘என்னைத் தேடி இருப்பாளா? தன்னை நினைவு வைத்திருப்பாளா?’

 

கதவைத் தட்டிவிட்டு வந்தவன், “ஹலோ மிஸ்.அலர்விழி..” என்று எதிரில் அமர.. அவள் முகத்தை உயர்த்த.. “மிஸ் மி?” என்றான் நமுட்டு குறுஞ்சிரிப்போடு.

 

அவன் மிஸ் மி-யில், வாயிலிருந்தது தொண்டைக்குச் செல்லும் வழியில் தடம் மாறி மூக்கின் வழியும் வாயின் வழியும் வெளியே வந்து முன் இருந்தவனை அபிஷேகம் செய்தது ஆரஜ் நிற திரவம்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!