“ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லை மா”
“என்ன இருந்தாலும் இப்படி சொல்லலாமா பார்த்தி, அம்மாவை பத்தி. மருமகளே உன் பையன் எப்படி சொல்லிருக்கான் பாரு? அவனை விடாத”, என்று ஏத்தி விட்டாள் வள்ளி.
“ஐயோ கிழவி ஏத்தி விடுதே. எல்லாம் இவளால தான். என் மானமே போகுது”, என்று நினைத்து கொண்டு மித்ராவை முறைத்தான்.
அவன் முறைப்பு புரிந்தாலும் “இது தான் நீங்க சொன்ன சகுனி கிழவியா?”, என்று அடுத்த கேள்வியை கேட்டாள் மித்ரா.
“ஐயோ, இன்னைக்கு செத்தேன்”, என்று பயந்தே போனான் பார்த்திபன்.
அதே நேரம் அவனை காப்பாற்ற அங்கு வந்தார் மகேந்திரன்.
அவன் தலையை விட்டுவிட்டு “ஏங்க இங்க பாத்தீங்களா? இவன் என்ன காரியம் செஞ்சிருக்கான்னு?”, என்று புகார் வாசித்தாள் பார்வதி.
“ஐயோ அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா”, என்று கெஞ்சினான் பார்த்திபன்.
“என்னை இந்த எடுபட்ட சிறுக்கி மிரட்டுறாங்க. சொன்னானே, காலைலே சொன்னானே படுபாவி. என் பொண்டாட்டி கூட சேந்துக்கிட்டு, உன்னை வீட்டை விட்டு விரட்டுவேன்னு சொன்னானே. சொன்ன மாதிரியே செஞ்சிட்டானே”
மகேந்திரன் விஷயம் எதுவும் புரியாமல் நின்றார். நிலைமை விபரீதமா ஆகும் என்று நினைத்து “பார்வதி இப்ப எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சு ஊரை கூட்டி வச்சிருக்க? கொஞ்சம் வாயை மூடு. நான் விசாரிக்கேன். டேய் பார்த்தி, இந்த பொண்ணு யாரு?”, என்று கேட்டார்.
“எப்பா இவராவது தெளிவா இருக்காரேன்னு”, நினைத்து கொண்டு “எனக்கு தெரியாது”, என்று சொன்னான்.
அவர் மேலும் குழம்பினார்.
“என்னல நினைச்சிட்டு இருக்க? ஒரு பொண்ணை கூட கூட்டிட்டு வந்துருக்க? உங்க அம்மா நீ இழுத்துட்டு வந்துட்டன்னு உக்காந்து புலம்பிட்டு இருக்கா. கேட்டா நீ தெரியாதுன்னு சொல்ற?”
“அப்பா எனக்கு நிஜமாவே, இது யாருன்னு தெரியாது பா”
“யாருன்னு தெரியாதுன்னா எதுக்கு கூட்டிட்டு வந்துருக்க? நீ உரக்கடைக்கு தான போன? உரம் வாங்குனியா?”
“இந்தா போட்டுட்டாரே கேட்டை. எனக்கு சொன்ன வேலையை மட்டும் தெளிவா நினைவு வச்சிருப்பாரு”, என்று நினைத்து கொண்டு “அது வந்து பா. நான் கடைக்கு தான் போனேன். போற வழியில இந்த பொண்ணு நம்ம மணிகிட்ட மாட்டிகிட்டு நின்னா. அதான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன்”, என்றான்.
“டேய் பிராடு, நீயா டா என்னை காப்பாத்துன?”, என்று அவன் காதை கடித்தாள் மித்ரா.
“என்னது டேயா?”, என்று நினைத்து கொண்டு “கொஞ்சம் சும்மா இருங்க. எனக்கு எங்க அப்பான்னா கொஞ்சம் பயம்”, என்று கெஞ்சினான் பார்த்திபன்.
இப்போது பார்வதி “பாத்தீங்களா எப்படி ரகசியம் பேசுறான்? கேட்டா தெரியாதாம். பொய் சொல்றான்”, என்று சொன்னாள்.
“பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா உதவி செய்ய அப்படியே துடிப்பயே”, என்று சொன்னாள் வள்ளி பாட்டி.
“இந்த கிழவிக்கு முதல்ல பொங்கல் வைக்கணும். எப்ப டா என் மானத்தை வாங்கலாம்னு இருப்பா”, என்று நினைத்து கொண்டு அப்பாவை பார்த்தான்.
“என்ன பார்த்தி இதெல்லாம். தெரிஞ்ச பொண்னு மாதிரி பேசிட்டு இருக்க? கேட்டா தெரியாதுன்னு சொல்ற?”, என்று கேட்டார் மகேந்திரன்.
“அப்பா, நிஜமாவே இவ யாருனு எனக்கு தெரியாதுப்பா”
“ஏமா நீ யாரு? எதுக்கு இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்க?”, என்று மித்ராவிடம் கேட்டார் மகேந்திரன்.
“என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? என்னை தெரியலையா?”, என்று கேட்டு அவருக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றினாள் மித்ரா.
“என்னது மாமாவா?”, என்று விழித்தாள் பார்வதி.
“நீ எங்க பையனை விரும்புரியா? அதுக்கு தான் இங்க வந்துருக்கியா? ஆனா இவன் எங்க ஊர் பொண்ணுங்க கிட்ட தான வம்பு அளப்பான்? உன்னை பாத்தா டவுன் காரி மாதிரி இருக்கே”, என்று மித்ராவிடம் கேட்டார் மகேந்திரன்.
பார்த்திபனை ஒரு பார்வை பார்த்தவள் “சே சே நான் எதுக்கு இவனை விரும்ப போறேன்?”, என்று கேட்டாள்.
அதில் பார்த்திபன் கர்வம் அடி வாங்கியது. “இரு டி உன்னை அப்புறம் வச்சிக்கிறேன்”, என்று நினைத்து கொண்டான்.
“அப்ப எதுக்கு மா இங்க வந்துருக்க? ஊரே வேடிக்கை பாக்குது. என்ன பிரச்சனை சொல்லு மா”
“என்ன மாமா? என் வீட்டுக்கு நான் வராம, வேற யார் வருவா?”, என்று கேட்ட மித்ரா “சரி சரி யாருக்கும் புரியலைல? நானே சொல்லுறேன். நான் அத்தையோட தம்பியோட பொண்னு. இது என்னோட அத்தை வீடுன்னா, அப்ப என்னோட வீடு தான?”, என்று கேட்டாள்.
ஒரு நிமிடத்தில் அங்கு அனைவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி.
ஒரு நிமிடம் பார்வதி கண்ணில் வந்த பிரகாசம், அடுத்த நொடி காணாமல் போனது. “நீ மோகனோட பொண்ணா?”, என்று கேட்டாள் பார்வதி.
“ஹ்ம்ம் ஆமா அத்தை”, என்று சொன்னாள் மித்ரா.
“யாரு டா, அந்த புது மாமா?”, என்று பார்த்தான் பார்த்திபன்.
“என்ன சொல்ல?”, என்று தெரியாமல் அமைதியானார் மகேந்திரன்.
“என் பிள்ளையோட வாழ்க்கையை கெடுத்தவனோட பொண்னு வந்துருக்கா. ஐயோ பார்வதி, அவளை அடிச்சு கொள்ளுமா”, என்று பெருங்குரலெடுத்து கத்திய வள்ளி பாட்டி கீழே விழப் போனாள்.
“அம்மா”, என்ற படி அவரை பிடித்து கொண்டார் மகேந்திரன்.
“அத்தை”, என்று பார்வதியை பார்த்து அழைத்தாள் மித்ரா.
“யாரு டி அத்தை? யாருக்கு யாரு அத்தை? உங்க நிழல் கூட இந்த வீட்டு மேல பட கூடாது. வெளிய போ. பார்த்தி இவளை இந்த ஊர் எல்லைல விட்டுட்டு தலை முழுகிட்டு வா”, என்று சொன்ன பார்வதி “எதுக்கு இங்க எல்லாரும் கூடி இருக்கீங்க. பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. கலைஞ்சு போங்க எல்லாரும். நீங்க உள்ள வாங்க அத்தை”, என்று சொல்லி வள்ளியை தன்னோடு அணைத்து கொண்டாள்.
பார்த்திபன் “என்ன செய்ய?”, என்று தெரியாமல் நின்றான்.
பார்வதி, வள்ளி, மகேந்திரன் மூவரும் உள்ளே செல்ல திரும்பும் போது, சொடக்கு போட்டு அழைத்தாள் மித்ரா.
அந்த சத்தத்தில் திரும்பி பார்த்தார்கள். “நீங்க சொன்னா நான் போயிருவேனா? ஒரு அடி கூட இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன்”, என்று சொல்லி விட்டு அங்கேயே கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மூவரும் உள்ளே சென்றார்கள். விவரம் அறிய பார்த்திபனும் உள்ளே சென்று விட்டான்.
எல்லாரும் சோகமாக அமர்ந்திருந்தார்கள்.
அப்போது ஒரு அறையில் இருந்து, ஒரு பெண்மணி வெளியே வந்து “என்ன மதினி சத்தமா கேக்குது?”, என்று கேட்டாள். அவள் நந்தினி. மகேந்திரனின் தங்கை.
எல்லாரும் அவளை பார்த்து அமைதியாக இருந்தார்கள்.
“என்ன பார்த்தி எல்லாரும் அமைதியா இருக்காங்க. என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் நந்தினி.
“அது வந்து அத்தை, யாரோ மோகனாம். அவங்க பொண்னு வந்துருக்கா. என் வீடுன்னு சண்டை போட்டுட்டு வெளிய உக்காந்துருக்கா. இதை நாங்க பாத்துக்குறோம். உங்களுக்கு காச்சல் தான? நீங்க உள்ள போய் படுங்க”, என்று சொன்னான் பார்த்திபன்.
அப்படியே நாடி நரம்பு எல்லாம் துடிக்க, சந்தோஷத்தில் கண் இமைகள் எல்லாம் உடைப்பெடுக்க, அப்படியே சிலிர்த்து போய் நின்ற நந்தினி, அடுத்த நொடி வாசலுக்கு ஓடினாள்.
எல்லாரும் அவள் பின்னே ஓடினார்கள்.
வெளிய அமர்ந்து மித்ரா யோசித்து கொண்டிருந்தாள். “எப்படியோ பிரச்சனையை கிளப்பியாச்சு. இனி சமாளிச்சிறலாம். நேரா வீட்டுக்குள்ள போயிறலாமா? வேண்டாம் மித்ரா, ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணு. நம்ம ஹீரோயின் மேடம் வரட்டும். அவங்க ரியாக்சன் பாத்துட்டு, அடுத்த பிளான் செய்யலாம்”, என்று தனக்குள்ளே முடிவு எடுத்து அமர்ந்திருந்தாள்.
வெளியே பாய்ந்து வந்த நந்தினி, நேராக மித்ரா முன் போய் நின்றாள்.
“ஐ ஹீரோயின் வந்தாச்சு”, என்று துள்ளி குதித்தது மித்ராவின் மனது.
“அண்ணா, தாஸோட பொண்னு அண்ணா. அண்ணி பாருங்களேன் அப்படியே உங்க தம்பியை உரிச்சு வச்சு இருக்கா. அம்மா உங்க பேத்தி மா. பார்த்தி இது யாரு தெரியுமா? உன்னோட மாமா பொண்னு டா”, என்று குதூகலித்து சொன்னாள் நந்தினி.
அவள் முகத்தில் இருந்த அளவிட முடியாத சந்தோசத்தை, வியந்து பார்த்தார்கள் அனைவரும். வள்ளி பாட்டியின் கண்கள் கலங்கியது.
மெதுவாக நந்தினியின் கைகள், மித்ராவின் கன்னத்தை வருடியது.
“உன்னோட பேர் என்ன மா?”, என்று கேட்டாள் நந்தினி.
“மித்ரநந்தினி. ஆனா வீட்டுக்கு ஒரு நந்தினி போதும்னு என்னோட பேரு வெறும் மித்ரா”, என்று சொன்னாள் மித்ரா.
“என்னை யாருனு தெரியுதாம்மா?”, என்று கேட்டாள் நந்தினி.
“ஹ்ம்ம் தெரியும்”
“யாரு?”, என்று கேட்ட நந்தினிக்கு இதய துடிப்பே எகிறியது.
“என்னோட அம்மா”, என்று சொன்னாள் மித்ரா.
மித்ரா சொன்னதை கேட்டு, அழுது கொண்டே அவளை அணைத்து கொண்டாள் நந்தினி. “அம்மா”, என்று மித்ராவும், நந்தினி தோள்களில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.
சுற்றி இருந்த மகேந்திரன், பார்வதி, வள்ளி பாட்டி கண்களும் கலங்கியது.
பார்த்திபன் சுவாரசியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
மித்ராவை தன்னிடம் இருந்து விலக்கிய நந்தினி, கண்களை துடைத்து கொண்டு அவளுடைய கண்ணீரையும் துடைத்து விட்டாள்.
“என்னை பத்தி தாஸ், சொல்லிருக்கானா மித்ரா?”, என்று கேட்டாள் நந்தினி.
“ஆமா மா. உங்களை பாக்க தான் நான் வந்தேன்”, என்று சிரித்தாள் மித்ரா.
“என் செல்லம். அழகா இருக்க டா. அப்படியே தாஸ் மாதிரியே இருக்க. சரி உள்ள வா”
“ஆனா அம்மா, இந்த சகுனி கிழவியும், இந்த சொர்ணக்காவும் உள்ள விட மாட்டிக்காங்க”, என்று புகார் வாசித்தாள் மித்ரா.
“மறுபடியும் என்னை மாட்டி விடுறாளே”, என்று பல்லை கடித்தான் பார்த்திபன்.
“ஹா ஹா இந்த வாலு தான், உனக்கு இந்த பேரு எல்லாம் சொல்லி கொடுத்தானா? இவங்களுக்கு எல்லாம் நீ பயப்பட வேண்டாம் மித்ரா. நானும், பார்த்திபனும் சேந்து தான் இவங்களுக்கு, இந்த பேர் எல்லாம் வச்சோம். எங்க அண்ணனுக்கு கூட ஒரு பேரு வச்சிருக்கோம்”, என்று சொன்னாள் நந்தினி.
“அத்தை சும்மா இரு”, என்று சத்தம் கொடுத்த பார்த்திபன், தன் அப்பாவை பயத்துடன் பார்த்தான்.
“ஐயோ இன்னைக்கு என் தோலை எல்லாரும் உரிக்க போறாங்க”, என்று மனதுக்குள் அலறினான் பார்த்திபன்.
“என்ன பேரு மா?”, என்று ஆவலாக கேட்டாள் மித்ரா.
“விருமாண்டி போலீஸ்”, என்று சிரித்தாள் நந்தினி.
மகேந்திரனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் மித்ரா. அவளை முறைத்து விட்டு, பார்த்திபனையும் திரும்பி முறைத்தார் மகேந்திரன்.
“பொருத்தமான பேர் தான் மா”, என்று சொன்னாள் மித்ரா.
“ஆமா அதுக்கு தான் அந்த பேர் வச்சோம். சும்மா மீசையை முறுக்கிகிட்டு திரியுவான். அப்படி தான பார்த்தி?”
“ஹி ஹி அத்தை, என்னை இன்னைக்கு பொங்கல் வச்சு சாப்பிடாம விட மாட்ட அப்படி தான?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“விடு டா, இப்ப நம்ம கூட கூட்டுக்கு மித்ரா வந்துட்டா. இனியும் பய படணுமா? சரி இன்னைக்கு படத்துக்கு போக, புது சாவி செஞ்சிட்டியா?”, என்று கேட்டாள் நந்தினி.
எல்லாரும் திரும்பி அவனை முறைத்தார்கள்.
“நான் போய் உர மூட்டை வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி ஓடிய பார்த்திபன் “வந்த உடனேயே எனக்கு ஆப்பு அடிச்சிட்டாளே”, என்று புலம்பி கொண்டே போனான்.
“நீ உள்ள வா மித்ரா”, என்று கை பிடித்து அழைத்து சென்றாள் நந்தினி.
தன் பேக் எடுத்து கொண்ட மித்ரா பார்வதியை ஒரு முறை முறைத்து விட்டு, பாட்டியை பார்த்து வக்கனம் காட்டி விட்டு உள்ளே சென்றாள்.
காதல் தொடரும்….