அத்தியாயம் 2
“என்னை காப்பாத்த எனக்கு தெரியும். வேணும்னா இங்க விழுந்து கிடக்கானே, அவனை காப்பாத்துங்க”
“ஏன் அவனுக்கு என்ன ஆச்சு? உங்க கிட்ட தப்ப நடந்து கிட்டானா? எப்பவுமே இவன் இப்படி தான். உங்களுக்கு ஒன்னும் ஆகலையே? ஆமா மணி எதுக்கு எந்திக்க முடியாம படுத்து கிடக்கான்? ஏலே என்ன ஆச்சு?”, என்று கேட்டான் பார்த்திபன்.
இவனை பார்த்ததும் “பார்த்தி காப்பாத்துடா”, என்று சொன்னான் அங்கு கிடந்த மணி.
“என்கிட்டயே தப்பா நடந்துக்க பாத்தா விடுவேனா? எனக்கு வர்ம கலை தெரியும். அவனால் நடக்க முடியும். ஒரு மாசத்துக்கு வலது கை தான், ஒழுங்கா வேலை செய்யாது”, என்று சொல்லி விட்டு கையில் ஒட்டி இருந்த மண்ணை தட்டி விட்டு, நடந்தாள் மித்ரா.
அவனை பார்த்து “நீ எல்லாம் திருந்தவே மாட்டியா டா?”, என்று கேட்ட பார்த்திபன், “அவன் எல்லாம் வாழவே வேண்டாம். இவனை காப்பாத்துறதும் பாம்புக்கு பால் கொடுக்குறதும் ஒன்னு தான். கையை ஓடிச்ச நீங்க, உயிரையும் எடுத்திருக்கலாம்”, என்று சொல்லி கொண்டே மித்ராவின் பின்னால் போனான்.
அவனை பார்த்து சிரித்து விட்டு, தன்னுடைய பேக் கிடக்கும் இடத்துக்கு சென்றாள் மித்ரா.
“வயசு பொண்ணை பாத்துட்டானா? இன்னும் அது திருப்பி இவனை பாக்குற வரைக்கும், விட மாட்டானே. எப்படி அவ பின்னாடியே போறான் பாரு. ஆள் தெரியாம கையை வச்சிட்ட மணி. பொண்ணா இது? சரியான பேய். மெது மெதுவா எந்திச்சு வீடு போய் சேரு”, என்று தனக்குள் புலம்பிக்கொண்டான் மணி.
ஒரு பேகை தன் தோள்களில் மாட்டி கொண்டு, மற்றொரு பேகை கையில் எடுத்து கொண்டாள் மித்ரா.
“நீங்க இந்த ஊருக்கு புதுசா?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“ஹ்ம்ம் ஆமாங்க. நீங்க?“, என்று கேட்டாள் மித்ரா.
“நான் பார்த்திபன். எனக்கு இந்த ஊரு தான். நீங்க இப்படி தனியா வரலாமா? பாத்தீங்களா இப்படி ஒரு நாய் வாலாட்டுது. காலம் கெட்டு கிடக்குங்க”
“நாய்க்கு பயந்து நாம வீட்டை பூட்டிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க. நாயோட வாலை வெட்ட தெரிஞ்சிருந்தா போதும்”. என்று சிரித்தாள் மித்ரா.
“அவன் கிடக்கான். அவன் எப்பவும் இப்படி தான். எங்க ஊரு பொண்ணுங்க வெளக்கமாத்தால அடிப்பாங்க அவனை. அசிங்கம் பிடிச்சவன். ஆமா நீங்க எதுக்கு எங்க ஊருக்கு வந்துருக்கீங்க?”
“சும்மா சுத்தி பாக்க”
“என்னது சுத்தி பாக்கவா? இந்த பொட்டல் காட்டை சுத்தி பாக்கவா, இப்படி கிளம்பி வந்துருக்கீங்க?”
“ஹ்ம்ம் ஆமாங்க”
“நம்பிட்டேன்”
“இன்னும் எவ்வளவு தூரம் போகணும், ஊருக்கு போறதுக்கு?”
“இன்னும் அரை மணி நேரம் நடக்கணும். ஆமா நீங்க யார் வீட்டுக்கு வந்துருக்கீங்க?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“இங்க பார்வதி அம்மா வீட்டுக்கு”, என்று சொன்னாள் மித்ரா.
“நம்ம அம்மாவை தேடி எதுக்கு, இந்த கிளி வந்துருக்கு?”, என்று நினைத்து கொண்டு “வாங்க நான் வேணா வீட்டில் விடுறேன்”, என்று சொன்னான் பார்த்திபன்.
“நீங்க இந்த பக்கமா எங்கயோ வேலையா, போற மாதிரி இருக்கே”, என்று கேட்டாள் மித்ரா.
“உரமூட்டையோட வரலை வெளக்கமாத்தால அடி பின்னிருவேன்”, என்று பார்வதி சொல்லி விட்டது மனகண்ணில் வந்தது.
“சொர்ணாக்கா தான? சமாளிச்சிக்கலாம்”, என்று நினைத்து கொண்டு “வேலை எல்லாம் இல்லைங்க, சும்மா தான் இந்த பக்கம் வந்தேன்”, என்று சொன்னான் பார்த்திபன்.
“ஹ்ம்ம் அப்ப சரி போகலாம்”, என்று உடனே சொன்னாள் மித்ரா.
“ஹ்ம்ம் ஏறுங்க”, என்று வண்டியை எடுத்தவன், “இப்படி நான் கூப்பிட்ட உடனே ஏறிட்டிங்க. நானும் கெட்டவனா கூட இருக்கலாம். யாரையும் நம்ப கூடாதுங்க”, என்று சொன்னான்.
“ஹா ஹா”, என்று சிரித்தவள் “கவலை படாதீங்க. எனக்கு பல விதமான வர்ம கலை தெரியும். மிஞ்சி மிஞ்சி போனா பொண்ணை கடத்தி ரேப் பண்ண தான் பாப்பாங்க. அப்படி பண்ணும் போது, அவங்க சரியான பாயிண்ட்ல அடிச்சு தப்பிக்கிற வித்தை எல்லாம் தெரியும்”, என்றாள் மித்ரா.
“ஐயையோ நான் அப்படி எல்லாம் இல்லைங்க. தப்பா கிப்பா விதையை என்கிட்ட யூஸ் பண்ணிராதீங்க. நான் ரொம்ப நல்லவன் “
“ஹ்ம்ம் தெரியும்”
“தெரியுமா?”
“ம்ம்”
“எப்படி?”
“உங்களை பாத்தா ஜொள்ளு மன்னன்னு தான் தெரியுது. அந்த அளவுக்கு எல்லாம் போக மாட்டிங்க”, என்று சிரித்தாள் மித்ரா.
“ச்சி இப்படி ஒப்பனவா தெரியுது?”, என்று நினைத்து கொண்டு “உங்க பேர் என்ன?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“என் பேரு மித்ரா”
“சரி அந்த பார்வதி அம்மா உங்களுக்கு என்ன வேணும்? அவங்களை எப்படி தெரியும்?”
“எப்படியோ தெரியும். அதை விடுங்க. அவங்க ஆள் எப்படி?”, என்று கேட்டாள் மித்ரா.
“ஆள் எப்படின்னா?”
“இல்லை ரொம்ப அமைதியானவங்களா? இல்லை ரொம்ப கோப காரங்களான்னு கேட்டேன்”
“அது சரியான சொர்ணாக்காங்க”, என்று சிரித்தான் பார்த்திபன்.
“என்னது சொர்ணாக்காவா?”
“ஹ்ம்ம் ஆமா. அது நான் அதுக்கு வச்சிருக்க பேரு. சின்ன பிரச்சனைன்னா போதும் ஊரையே கூட்டிருவா”
“ஐயையோ அப்படியா?”
“ஹ்ம்ம் ஆமாங்க. நீங்க அவங்க வீட்டுக்கு எதுக்கு போகணும்?”
“அங்க போனா உங்களுக்கே தெரிஞ்சிரும் மிஸ்டர் பார்த்திபன். சரி அவங்க வீட்ல யார்லாம் இருக்காங்க?”
“இவ எதுக்கு நம்ம வீட்டையே தூண்டி துருவுறா? சரி போனா விஷயம் தெரிஞ்சிர போகுது”, என்று நினைத்து கொண்டு, “பார்வதி அம்மாவோட வீட்டுக்காரர் இருக்காரு. அவர் பேரு மகேந்திரன்”, என்றான்.
“அவர் எப்படி”
“எப்படின்னா என்ன சொல்றது? அவர் கொஞ்சம் ஒரு மாதிரி. எப்ப என்ன யோசிப்பாருன்னு சொல்லவே முடியாது. ஆனா ஊருக்குள்ளே அவரை பாத்தாலே நடுங்குவாங்க. வெள்ளை வேஷ்டி சட்டை போட்டு கம்பீரமா போனாருன்னா, எல்லாரும் வணக்கம் சொல்லுவாங்க. எனக்கே ரொம்ப பயம் அவரை பார்த்து”, என்று தன் அப்பாவை பற்றி உண்மையான விஷயங்களை சொன்னான்.
“ஹ்ம்ம் சரி அடுத்து வேற யாரு இருக்காங்க?”
“வேற ஒரு சகுனி கிழவி இருக்கு. யார் மேல டா குத்தம் கண்டு பிடிக்கன்னு விளக்கெண்ணையை ஊத்திக்கிட்டு அலைவா. அவ பேரு வள்ளி. முழு பேரு செண்பக வள்ளி. அப்படி தான் பீத்திக்கும். கொஞ்சம் கவனமா இருக்கணும், அது கிட்ட”, என்று தன் பாட்டியை பற்றி சொன்னான் பார்த்திபன்.
“ஹ்ம்ம் வேற யார் எல்லாம் இருக்கா?”
“வேற அங்க ஒரு பையன் இருக்கான். சும்மா ஹீரோ மாதிரி. ஹ்ம்ம் எப்படி சொல்றது? என்னை மாதிரின்னு வச்சிக்கோங்களேன். அவனுக்கு இந்த ஊரு பொண்ணுங்க, எல்லாம் அடிமை தெரியுமா? அந்த அளவுக்கு அழகன், மன்மதன், எல்லாருடைய உள்ளம் கவர்ந்த கள்வன்”, என்று தன்னை பற்றியே சொன்னான் பார்த்திபன்.
“நீங்க ரொம்ப படம் பாப்பீங்களா பார்த்திபன்?”, என்று கேட்டாள் மித்ரா.
“எதுக்கு அப்படி கேக்குறீங்க?”
“இல்லை அழகன், மன்மதன், உள்ளம் கவர்ந்த கள்வன்ன்னு படம் பேரா சொல்றீங்களே, அதான் கேட்டேன். சரி வேற யார் எல்லாம் இருக்கா?”
“அசிங்க படுத்துறாளே”, என்று நினைத்து கொண்டு, “நீங்களே உள்ள போய் பாத்துக்கோங்க. வீடு வந்துட்டு”, என்று சொன்னான்.
“ஓ வீடு வந்துட்டா? தேங்க்ஸ் பார்த்திபன்”, என்று சொல்லி கொண்டே இறங்கினாள் மித்ரா.
இறங்கிய மித்ரா கம்பீரமாக நின்ற, அந்த மாடி வீட்டையே பார்த்தாள்.
“என்னங்க வெளிய நின்னு வீட்டையே பாத்துட்டு இருக்கீங்க? உள்ள வாங்க”, என்று சொன்னான் பார்த்திபன்.
“இல்லை நான் போய்க்கிறேன். நீங்க கிளம்புங்க. கொண்டு வந்து விட்டதுக்கு தேங்க்ஸ்”, என்று சொன்னாள் மித்ரா.
“அட நீங்க வேற? உங்களை அவங்களுக்கு அறிமுக படுத்திட்டு போறேன்”, என்று சொல்லி கொண்டே அவள் கையில் உள்ள பையை வாங்கி கொண்டு, கேட் உள்ளே நடந்து போனான்.
“எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க கலவரம் நடக்க போகுது. இவனும் இருந்தா தப்பில்லை”, என்று நினைத்து கொண்டு அவன் பின்னே சென்றாள் மித்ரா.
கதவை தட்டி விட்டு காத்திருந்தான் பார்த்திபன். அவனுடனே போய் நின்றாள் மித்ரா.
கதவு தட்டும் சத்தம் கேட்டு திறக்க வந்தாள் பார்வதி.
கதவை திறந்து வெளியே பார்த்த பார்வதியின் கண்கள் விரிந்தது.
“இவங்க தான் நீங்க கேட்ட பார்வதி”, என்று மித்ராவின் காதில் சொன்னான் பார்த்திபன்.
கண் முன்னே நின்ற பார்த்திபனும், மித்ராவும் ஜோடியாக நின்றது, அவள் கண்ணில் இருவரும் மாலை அணிந்து நிற்பது போன்ற, ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.
கண்களை கசக்கி கொண்டு பார்த்தாள் பார்வதி. இப்போது மணமாலை தெரியாமல், கையில் இருந்த இருவரின் பை மட்டும் தெரிந்தது.
மித்ராவும் பார்வதியை தான் பார்த்து கொண்டிருந்தாள். “சமாளிச்சிறலாமா? சொர்ணாக்கா மாதிரி எல்லாம் இல்லை. காமெடி பீஸ் மாதிரி தான் இருக்கு. பாத்துக்கலாம்”, என்று நினைத்து பார்வதியை பார்த்து சிரித்தாள்.
ஆனால், பார்வதி பதிலுக்கு சிரிக்காமல் “ஐயையோ நாம இப்படி மோசம் போய்ட்டோமே. இந்த நாசமா போற பய இப்படி செஞ்சிட்டானே. இப்படி எதுவும் செஞ்சிர கூடாதுன்னு தான பொத்தி பொத்தி பாத்துக்கிட்டேன். கடைசில இழுத்துகிட்டே வந்துட்டானே. எல்லாரும் வாங்களேன். இந்த அநியாயத்தை பாருங்க”, என்று ஒப்பாரி வைத்தாள்.
பார்வதி சத்தம் கேட்டு உள்ளே இருந்து, வள்ளி பாட்டி வந்தார்.
“எதுக்கு பார்வதி, இப்படி வாசல்ல நின்னு கத்திக்கிட்டு இருக்க?”, என்று கேட்டாள் வள்ளி.
“ஐயோ அத்தை இங்க பாருங்களேன். இவன் நம்ம தலைல எல்லாம் கல்லை தூக்கி போட்டுட்டானே”, என்று கத்தினாள்.
அப்போது தான் பார்த்திபனுக்கு நிலைமையே புரிந்தது. “நான் தான் இவளை இழுத்துட்டு வந்துருக்கேன்னு நினைச்சு சொர்ணாக்கா புலம்புது”, என்று மனதில் நினைத்தவன் பார்வதி கத்துவதை பார்த்து “அம்மா”, என்று அழைத்தான்.
“என்னது அம்மாவா?”, என்று அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் மித்ரா.
“ஹ்ம்ம் ஆமா. இது என் வீடு தான். இவங்க தான் நீங்க கேட்ட பார்வதி. இப்ப நான் உங்களை காதலிச்சு இழுத்துட்டு வந்துருக்கேன்னு நினைச்சு கத்துது”, என்று ரகசியம் பேசினான்.
“இது நான் எதிர்பார்க்காத விஷயமா இருக்கே”, என்று நினைத்து கொண்டு “உன்னை பத்தி தான் நீயே பெருமை பேசுனியா?”, என்று சிரித்தாள் மித்ரா.
“என்ன வா போன்னு பேசுறா?”, என்று நினைத்து கொண்டு அம்மாவை பார்த்தான் பார்த்திபன்.
“பாத்தீங்களா? நம்ம முன்னாடியே இப்படி ரகசியம் பேசுறான்?”, என்று கத்தினாள் பார்வதி.
“இந்த குழாய் போட்ட தம்பி யாரு?”, என்று கேட்டாள் வள்ளி. அப்போது தான் அவளையே திரும்பி நன்கு பார்த்தான் பார்த்திபன்.
ஜீன்ஸ் போட்டு ஆம்பளை பையன் போல உடை அணிந்திருந்தாள் மித்ரா. ஆனாலும் தலையில் குதிரை வால் தான் போட்டிருந்தாள்.
“இந்த கிழவிக்கு காமெடியை பாரு? இவளை பாக்க பையன் மாதிரியா இருக்கு? அப்படியே லட்டு மாதிரி இருக்கா”, என்று நினைத்து கொண்டு “இவ பையன் இல்லை கிழவி. பொண்ணு”, என்று சொன்னான்.
“நான் என்ன எல்லாம் கனவு கண்டேன்? ஒரே பிள்ளையை பெத்து வச்சு, ஊருக்கே ஒரு வாரத்துக்கு விருந்து வச்சு கல்யாணம் பண்ணனும்னு கனவு கண்டேனே. இப்படி சொல்லாம கொள்ளாம ஒரு சிறுக்கியை இழுத்துட்டு வந்துட்டானே”, என்று அழுது புலம்பி முந்தானையில் மூக்கை சீந்தினாள் பார்வதி.
பக்கத்து வீடுகளில் இருந்து வந்து, ஆள்கள் இங்கே குழுமி விட்டார்கள்.
“இது தான் சரியான நேரம் மித்ரா, உள்ள புகுந்துரு”, என்று தனக்குள் சொல்லி கொண்டு “சிறுக்கி கிறுக்கின்னு சொன்னீங்க, பாத்துக்கோங்க”, என்று சண்டைக்கு போனாள் மித்ரா.
“ஏய் என்ன டி சத்தம் பெருசா வருது? இது என் வீடு. நீ என் வீட்டுக்கு வந்துட்டு என்னை சத்தம் போடுறியா?”, என்று பதிலுக்கு பேசினாள் பார்வதி.
“இது உங்க வீடு மட்டும் இல்லை. இனி எனக்கும் இது தான் வீடு. மரியாதையா பேசுனா, மரியாதை கிடைக்கும். இப்படி திமிரா பேசுனா, நானும் அப்படி தான பேசுவேன்”
“என்னது திமிரா? யாருக்கு டி திமிரு? உனக்கு தான் திமிரு. ஆளையும் மண்டையும் பாரு?”
“ஏன் ஏன் மண்டைக்கு என்ன? நான் ஒரு பியூட்டி குயின் தெரியுமா? உங்க பிள்ளை கூட என்னை அழகா இருக்கன்னு சொல்லிருக்காரு”, என்று சொன்னாள் மித்ரா.
“ஐயோ நான் எப்ப சொன்னேன்? மனசுல தான நினைச்சேன்?”, என்று மனதுக்குள் புலம்பினான் பார்த்திபன்.
“அவன் சொல்லுவான். கேனை பய. ஊருல இருக்குற ஒரு பொண்ணையும், விட்டு வைக்க மாட்டான். அவன் சொன்னான்னு பின்னாடி வந்துருக்க. நீ எப்படி பட்ட கைகாரியா இருக்கணும்?”, என்று கேட்டாள் பார்வதி.
“கேனை பயலா? ஐயோ எல்லாரும் வேடிக்கை பாக்காங்களே”, என்று நினைத்து தலையை சுழற்றி பார்த்தான்.
தூரத்தில் சுமதி நின்று அவனை பார்த்து காதல் பார்வை வீசி கொண்டிருந்தாள். அடுத்த பக்கம் திரும்பினான். பரிமளா அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
“எல்லா பொண்ணுங்க முன்னாடி இந்த அம்மா இப்படி மானத்தை வாங்குதே”, என்று நினைத்து “அம்மா நான் சொல்றதை கேளேன்”, என்று சொன்னான் பார்த்திபன்.
“நீ சொல்றதை நான் ஏன் டா கேக்கணும்? குடும்ப மானத்தை கெடுக்க வந்தவனே”, என்று கத்தினாள் பார்வதி.
“ஏன் பார்த்தி, நீங்க சொன்ன சொர்ணாக்கா இவங்க தானா? என்ன கத்து கத்துறாங்க?”, என்று கேட்டு அவனை மாட்டி விட்டாள் மித்ரா.
“ஐயையோ”, என்று விழி பிதுங்கினான் பார்த்திபன்.
அவன் தலை முடியை கொத்தாக பிடித்த பார்வதி “நான் சொர்ணாக்காவா டா? இன்னும் என்ன எல்லாம் சொல்லிருக்க டா?”, என்று திட்டினாள்.