காதல் 14:
தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவு திறப்பதைப் போல் உணர்ந்தாள் சக்தி பிரியதர்ஷினி. லேசான வெளிச்சம் அறைக்குள் வர, அவள் வாழ்வின் வெளிச்சம் அவளை விட்டு செல்வதைப் போல் இருந்தது. காலடி சத்தம் கேட்க கேட்க, மயக்கத்தில் இருப்பவளைப் போன்றே கண்களை மூடிக் கொண்டாள் சக்தி.
லெனின் தான் தேவனை அந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தான். சக்தியைப் பார்த்த தேவனின் கண்களில் வெற்றிச் சிரிப்பு.
“என்னடா இன்னும் மயக்கம் தெளியலை போல..?” என்றான் தேவன்.
“குடுத்த மருந்து வேலையை சரியா செய்யுதுண்ணே..!” என்ற லெனின்னுக்கு அவளைப் பார்த்ததும் கண்களில் வெரி குடி கொண்டது.
“சும்மா சொல்லக்கூடாது லெனின்..! நான் கூட நீ சொல்லும் போது என்னவோன்னு நினைச்சேன். ஆனா, நேர்ல பார்க்க ஆளு நல்ல நாட்டுக் கட்டையா தான் இருக்கா..?” என்றான் தேவன்.
“அதாண்ணே..! என் தம்பி மயங்கிப் போய் இவளைக் கட்டுனாலே கட்டணும்ன்னு சொன்னான். அன்னைக்கு அவன் மட்டும் அரஸ்ட் ஆகாம இருந்திருந்தா, இந்நேரம் இவ அவனுக்கு பொண்டாட்டியா ஆகியிருப்பா. ருத்ராவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்திருக்கும். இவளால இப்ப ஒரு கொலை பண்ண வேண்டியதா போய்டுச்சு..!” என்றான் லெனின்.
மயக்கத்தில் இருப்பவளைப் போல் இருந்த சக்திக்கு அதிர்ச்சி. அந்த கல்யாண மாப்பிள்ளையின் அண்ணன் இவன் என்பதே அவளுக்கு இப்போது தான் தெரியும். அந்த சமயத்தில் அவன் அண்ணன் இருக்கிறான் என்று மட்டும் தெரியும். சில காரணத்துனால கல்யாணத்துக்கு வரமுடியாது என்று ருத்ரா சொல்லியிருந்தாள்.
அதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்த சக்திக்கு ருத்ராவை எண்ணி மனம் குமைந்தது. இந்த கேடுகெட்டவனுக்காகவா என்னோட அண்ணனை நீ கொலை செஞ்ச..? என்று எண்ணி எண்ணி மனதிற்குள் அழுது தீர்த்தாள்.
சக்திக்கு அப்போது தான் எல்லாம் தெளிவாக விளங்கியது. ருத்ராவின் கள்ளத் தொடர்பு வெளியே தெரியாமல் இருக்க, சக்தியை அவர்கள வீட்டு மருமகளாக்கி, சொந்தமாக்கி கண்பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவள் திட்டம் என்று. ஆனால், கடைசி நிமிஷத்தில் அவள் தப்பியிருக்கிறாள். அதற்கு காரணம் கூட வருண் தான்.
“வருண் சார்..! தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட வாழ்க்கையில என்னை நிறைய தடவை காப்பாத்தியிருக்கிங்க. இதுக்கெல்லாம் ஒரு நன்றி கூட சொல்ல முடியாம சாகப் போறேங்கிறதை நினைச்சாதான் மனசு வலிக்குது..!” என்று ஊமையாய் அரற்றிக் கொண்டிருந்தாள்.
“எப்போடா மயக்கம் தெளியும்..?” என்றான் தேவன்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடும்ண்ணே..!” என்ற லெனின்,
“இவ அந்த ஆதாரத்தை எங்க வச்சிருப்பான்னு நினைக்கிறிங்க..? இன்னைக்கு அதை கண்டு பிடிக்காம விடக் கூடாதுண்ணே..!” என்றான் லெனின்.
“இவ தங்கிருந்த வீட்ல தான் ஒரு ஆதாரமும் கிடைக்கலையே..? உண்மை தெரிஞ்சது மொத்தம் மூன்றே பேர். அதுல அந்த ஷிவானியையும், அவ புருஷனையும் போட்டாச்சு. மீதி இருக்கிறது இவ ஒருத்தி மட்டும் தான். இத்தனை நாள் இவளும் நமக்கு தண்ணி காட்டிட்டு இருந்தா. இப்போ இவ கதையையும் முடிச்சுட்டா, நிம்மதியா அடுத்த வேலையை பார்க்கலாம் பாரு..!”என்ற தேவனின் கண்களில் அப்படி ஒரு குரோதம்.
“எங்க தேடியும் அந்த வீடியோ ஆதாரம் கிடைக்கலையே அண்ணே..!” என்று லெனின் சொல்ல,
“இவ உயிரோட இல்லாம போனதுக்கு அப்பறம் அந்த வீடியோ வெளிய வந்தா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியும். நமக்கு பிரச்சனை இவ மட்டும் தான். மத்த எல்லாத்தையும் ஈசியா முடுச்சிடலாம்..!” என்ற தேவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
அதற்குள் லெனின்னுக்கு போன் வர, அதில் சொன்ன செய்தி உவப்பானதாக இல்லை..!
“என்னாச்சு லெனின்..?” என்றான் தேவன்.
“போலீஸ் நான் தான்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க. என்னைத் தேடி நம்ம இடத்துக்கு வந்துட்டு போயிருக்காங்க…!” என்றான் கோபமாய்.
“இப்போ இவளை என்ன பண்றது..?” என்று தேவன் கேட்க,
“இப்போதைக்கு இவ இங்கயே இருக்குறது மட்டும் தான் சேப்டின்னு நினைக்கிறேன். எப்படியும் போலீஸ் எல்லா இடத்துலையும் என்னைத் தேடுவாங்க. அவங்க கைல சிக்குறதுக்கு முன்னாடி இவ கதையை முடிச்சுடுறேன் அண்ணே..!” என்றான்.
“அப்ப சரி..! இன்னைக்கு முக்கியமான ஏஜென்ட் நாலு பேரை மீட் பண்ண வேண்டி இருக்கு. நான் அந்த வேலையை முடிச்சுட்டு வரதுக்கு முன்னாடி நீ இவளை முடிச்சுடு. நீ ஆசைப்பட்ட படி இவளை அனுபச்சிட்டு அப்பறம் தீர்த்துக் கட்டு..!” என்ற தேவன் அங்கிருந்து கிளம்ப,
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு உள்ளே சர்வாங்கமும் நடுங்கியது.
“சாகப் போறப்ப கூட நான் மானத்தோட சாக முடியாது போல இருக்கே..?” என்று வெந்து வெதும்பியவள்,
“நோ..! இவன் கைக்கு சிக்கவே கூடாது. எப்படியாவது இவன்கிட்ட இருந்து தப்பிச்சே ஆகணும். அதுக்கு மேல கடவுள் விட்ட வழி..!” என்று நினைக்கும் போது கண்கள் கலங்குவதைப் போல் இருக்க,
“எனக்கு பொண்ணுங்க அழுதாலே பிடிக்காது..! எதுக்கெடுத்தாலும் சும்மா கண்ணீரை விட வேண்டியது…!” என்று வருண் சொன்ன வார்த்தைகள் அவள் நினைவுக்கு வர, பட்டென்று கண்ணீரைத் தவிர்த்தாள். அவள் இருக்கும் நிலைக்கு அழுதால், அவன் கண்டு பிடித்து விடுவான் என்பதும் ஒரு காரணம் தான்.
வருண் அவன் போக்கில் நடந்து கொண்டிருக்க,
“இன்னும் இப்படியே எவ்வளவு தூரம் நடக்குறதா உத்தேசம் வருண்..?” என்றான் முரளி கொஞ்சம் மூச்சு வாங்க.
“என்ன மாமா..? இதுக்கே மூச்சு வாங்குனா எப்படி..? இன்னும் கொஞ்ச தூரம் நடந்துட்டு போவோம்..!” என்றான் வருண்.
“டேய்..! என்னைப் பார்த்தா பாவமா தெரியலையாடா உங்களுக்கு. நீங்க ரெண்டு பேரும் போலீஸ்டா. நடந்து நடந்து சர்வீஸ் ஆகி இருக்கும். ஆனா, நான் அப்படியா..?” என்றான் முரளி.
“விடுங்க முரளி அண்ணா..! வயசாகிட்டாலே இதெல்லாம் சாதாரணம்..!” என்றான் கார்த்தி சிரிக்காமல்.
“ஏண்டா..? ஏன் சொல்ல மாட்ட..? மூச்சு வாங்குதுன்னு சொன்னது ஒரு குத்தமாடா..?” என்றான் முரளி சிரிக்காமல்.
அவர்கள் பேசிக்கொண்டிக்கும் போதே சற்று தள்ளி, கீழே ரோட்டில் அதே கார் போவதைப் பார்த்தன வருண்.
அந்த காரைப் பார்த்தவனது பார்வை கூர்மையாக,
“எதை அப்படி பார்க்குறான்..?” என்று யோசித்த கார்த்தியும், முரளியும் அவன் பார்வை சென்ற திசையில் பார்க்க, அவர்களும் பார்த்தனர் அந்த காரை.
“நீ சொன்ன கார் இது தானா வருண்..?” என்றான் முரளி.
“ஆமா மாமா..!” என்றவன் அதைப் பின்தொடரப் போக,
“வருண் ஒரு நிமிஷம்..! அந்த கார்.. அதோ அந்த பக்கத்துல இருந்து தான் கீழ இறங்குச்சு..!” என்றான் கார்த்தி.
“நீ பார்த்தியா கார்த்தி..?” என்றான் வருண் வேகமாய்.
“எஸ்..! நான் பார்த்தேன். அது அந்த பக்கம் இருந்து தான் இறங்குச்சு..!” என்றான் தீர்மானமாய்.
“இப்போ இந்த காரை பாலோ பண்ணி பிரயோஜனம் இல்லை. சக்தி கடத்தப்பட்டிருந்தா இவ்வளவு நேரத்துக்கு கார்லயே வச்சுட்டு சுத்த அவங்க ஒன்னும் முட்டாள் இல்லை. இந்த கார் எங்க இருந்து வந்துச்சோ அங்க சக்தி இருக்கணும். அப்படி இல்லையா அங்க போனா ஏதாவது குளு கிடைக்கும்..!” என்ற வருண் வேக வேகமாய் நடக்க,முரளியும் கார்த்தியும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
வருண் நடையின் வேகத்திலயே தெரிந்தது, அவன் சக்தியை எவ்வளவு தேடுகிறான் என்று.
சக்திக்கு அதற்கு மேலும் நடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் கண்ணைத் திறந்தால் என்ன நடக்கும் என்று அவளுக்கும் தெரியும். லெனின் யாருடனோ முனைப்புடன் போனில் பேசிக் கொண்டிருக்க, மெதுவாக கண்களைத் திறந்தாள் சக்தி.
லெனின் எதிர்புறம் திரும்பி பேசிக் கொண்டிருந்தான். எப்படி இருந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியாது. கைகள் கட்டப்பட்டிருக்கும் அவளால் என்ன செய்ய முடியும்.
“இந்த கட்ட அவிழ்க்காம ஒன்னும் செய்ய முடியாது. நானா அவிழ்க்கவும் முடியாது. அவனே கட்டை ரிமூவ் பண்ணாத்தான் உண்டு..!” என்று எண்ணியவள், அவன் பார்க்கும் போது, அப்போதுதான் மயக்கம் தெளிவதைப் போல் நடித்தாள். அவள் கண்ணைத் திறக்க வேகமாக போனை வைத்தான் லெனின்.
“மேடம்க்கு ஒரு வழியா மயக்கம் தெளிஞ்சுடுச்சு போல..?” என்றான் நக்கல் குரலில்.
அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“என்னடி பூச்சாண்டி காட்டிட்டு போனா, உன்னை அப்படியே விட்ருவோமா..? நல்ல வசமாத்தான் வந்து மாட்டியிருக்க…! சும்மா சொல்லக் கூடாது இப்பக் கூட சும்மா கும்முன்னு தான் இருக்க..!” என்றான் விகாரமாய்.
“என்னை விட்டுடு பிளீஸ்..!” என்றாள் நலிந்த குரலில். அதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது. ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தது வேறு அவளை சோர்வடையச் செய்ய,
“இந்த லட்சனத்துல எப்படி சக்தி நீ தப்பிக்கப் போற..?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
“உன்னை அவ்வளவு ஈசியா விட்டுடுடா முடியுமா..? வாழ்க்கையில தேடுனாலும் கிடைக்காத ரகம்டி நீ..! கொக்கு இரைக்குக் காத்துகிட்டு இருக்குற மாதிரி காத்துகிட்டு இருந்திருக்கேன். திருப்பியும் உன்னை உயிரோட வெளிய விட , எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..?” என்று அவன் சிரிக்க,
சக்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனிடம் இருந்து தப்பிப்பது கஷ்ட்டம் என்று தான் தோன்றியது.
எதையோ அவன் வாய்க்குள் வைக்க, அதை அவன் சொல்லாமலேயே அவளுக்குத் தெரிந்தது அது கஞ்சா என்று. அவளின் துப்பட்டா அவன் கையில் இருக்க, அவளுக்கு உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
“என் பக்கத்துல வராதடா நாயே..! வந்த கொன்னுடுவேன்..!”என்றாள் ஆங்காரமாய்.
“பாருங்கப்பா..! புள்ளப் பூச்சி எல்லாம் எனக்குப் பயம் காட்டுது. உன் பக்கத்துல வராம இருக்குறதுக்கா, அவ்வளவு தூரத்துல இருந்து உன்னை கடத்திட்டு வந்திருக்கேன்..!” என்று அவன் அவளை நெருங்க நெருங்க, அவளின் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.
“கடவுளே..! என்னை இந்த நிமிஷமே கூட சாகடிச்சுடுங்க. ஆனா, இவன் கை மட்டும் என் மேல படவே கூடாது..!” என்று அவளால் வேண்ட மட்டுமே முடிந்தது.
லெனின் அவளைப் பார்த்து கோணல் சிரிப்பு சிரிக்க,
“மூச்சை அடக்கி செத்தாலும் சாவனே தவிர, இவன் கைக்கு சிக்க மாட்டேன்..!” என்று எண்ணியவள், தன் சுவாசத்தை தானே அடக்க ஆரம்பித்தாள்.அது அவ்வளவு எளிதல்ல என்று அவளுக்கு யார் சொல்லி புரிய வைப்பார்கள். ஒரு நிலைக்கு மேல் அதுவும் அவளால் முடியவில்லை.
“என்ன கார்த்தி..? எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கு..?” என்றான் வருண்.
“அந்த லாஸ்ட் மூணு வீட்ல ஒரு வீடா இருக்கணும்.ஏன்னா அந்த கார் இங்க இருந்து தான் கீழ இறங்குச்சு..!” என்றான் மீண்டும்.
“ஒருவேளை இந்த மூணு வீட்லையுமே ஆள் இல்லைன்னா…?” என்றான் முரளி.
“இல்ல மாமா..! எனக்கு என்னவோ சக்தி இங்க இருக்குற மாதிரி தான் தோணுது. ஆழ்மனம் சில விஷயங்கள்ல பொய் சொல்லாது…” என்றான் வருண். இவர்களிடத்தில் அவன் பேசிக் கொண்டிருந்தாலும், கண்கள் என்னவோ அந்த மூன்று வீட்டையும் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது.
“சரி ஆளுக்கு ஒரு வீடா போய் தட்டிப் பார்ப்போம். சந்தேகப் படுற மாதிரி யாராவது இருந்தா உடனே உஷாரகிடனும்..!” என்றான் வருண்.
“ஓகே மாப்பிள்ளை..!” என்றான் முரளி.
மூவரும் ஆளுக்கு ஒரு வீட்டின் முன்பு செல்ல,
சக்தியை நெருங்கி விட்ட லெனினுக்கு, அப்போது கேட்ட அந்த சத்தம் தொந்தரவு செய்தது.
“இந்த நேரத்துல யார் வந்து கதவை தட்டுறது..? இவனுகளை அங்க தான இருக்க சொன்னேன்..!” என்று எரிச்சல் பட்டபடி, அவசரத்தில் புத்தியிழந்து போய் வேகமாய் கதவை திறந்தான்.
லெனினை அங்கு பார்த்த கார்த்தியின் கண்கள் இடுங்க…
கார்த்தியைப் பார்த்ததும் லெனினின் உடலில் பதட்டம் தொற்றிக் கொண்டது. ருத்ரா கேஸில் தன்னை அரஸ்ட் செய்ய வந்திருப்பதாக எண்ணிக் கொண்டான்.
“லெனின்..! அவ உள்ள இருக்குறது இவனுக்குத் தெரியாது. இப்போதைக்கு இவன் கையில சிக்காம இருக்கணும். அது தான் முடியம்..!” என்று மனதிற்குள் நினைத்த லெனின்,
“இது யார் வீடு..? உள்ள யார் இருக்கா..?” என்றான்.
“உள்ள யாருமில்லை… அந்த ருத்ரா கேஸ்க்காகத்தான என்னைத் தேடி வந்திருக்கிங்க. தேவன் அண்ணே எனக்கு முன் ஜாமீன் இந்நேரம் வாங்கியிருப்பாரு..!” என்றான் தானாகவே. பதட்டத்தில் தவளை தன் வாயாலயே கெட்டது. லீவில் இருக்கும் கார்த்திக்கு இவன் குற்றவாளி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.
லெனினின் காலர் சட்டையை பட்டென்று கொத்தாகப் பற்றினான் கார்த்தி.
“எப்படிடா தானா வந்து ஸ்டேட்மென்ட் குடுக்குறிங்க..?” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, கார்த்தியின் கையைத் தட்டிவிட்டு அவன் ஓட, வருண் தான் போன வீட்டில் யாருமில்லை என்று பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தவனின் கண்களில் பட்டது இந்த காட்சி.
“வருண் அவனைப்பிடி..!” என்று கார்த்தி கத்த, அந்த நேரத்தில் வருணை அங்கு லெனின் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவன் அரண்டு விழித்த அவன் பார்வையிலேயே தெரிந்தது.
வருண் அவனைப் பிடிக்கப் போக, அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடியவன் கால் இடறி கீழே உருள,அவனை நான்கே எட்டில் தாவிப் போய் பிடித்தான் வருண். பிடித்தவனுக்கு வெறி அடங்காமல் அங்கேயே போட்டு அவனைத் துவை துவை என்று துவைத்து எடுத்தான்.
“வருண்..! செத்துடப் போறான்..!” என்று முரளி அவனைத் தடுக்க, வருணின் அந்த அடிக்கே துவண்டு விட்டான் லெனின்.
யாரோ வெளியில் வந்து அவனை விசாரிப்பது தெரிந்தும் சக்தியால் கத்தக் கூட முடியவில்லை. உடலிலும் சுத்தமாக தெம்பில்லை. முடிந்தவரை கத்தினாள்.
“உள்ள யாராவது இருக்காங்களான்னு பார்த்தியா கார்த்தி..?” என்றான் வருண்.
“இல்லை..! யாரும் இருக்குற மாதிரி தெரியலை. இவன் மட்டும் தான் இருந்தான்..!” என்றான்.
“உள்ள போய் பார்த்தியா..?” என்றான்.
“இல்ல, அதுக்குள்ள இந்த நாய் தப்பிச்சு ஓடவும் இவன் பின்னாடி வந்துட்டேன்..!” என்று கார்த்தி சொல்ல,
“ஓகே..! நீ இவனைப் பார்த்துக்கோ… நான் போய் பார்த்துட்டு வரேன்..!” என்றபடி வேகவேகமாய் சென்றான். ஏனோ அந்த வீட்டை வீட்டை நெருங்க நெருங்க அவனுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
வீட்டின் முன்னால் இருந்த எந்த அறையிலும் யாரையும் காணவில்லை. கடைசி அறையில் ஒரு மூலையில் யாரோ முனங்கும் சத்தம் கேட்க, வேகமாக அங்கு சென்றான் வருண். கொஞ்சம் இருட்டாக இருக்க, அந்த அறையின் சுவிட்சை தேடித் போட்டான்.
பட்டென்று வந்த வெளிச்சத்தில் அவள் லேசாக கண்களைத் திறக்க, அரைகுறையாக தெரிந்தன வருண்.
“ஷக்தி…!” என்றவன் வேகமாய் அவள் அருகே சென்று அவளை உலுக்க, அவளுக்கு கனவு போல் இருந்தது. வருண் வந்துவிட்டான் என்பதை அவளால் சில நிமிடங்களுக்குப் பிறகுதான் உணர முடிந்தது.
“வ..வருண் சார்..!” என்றவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, வேகமாய் அவளின் கட்டுக்களை அவிழ்த்தான் வருண். அது வரை அவன் முகத்தை மட்டுமே பார்த்திருந்தவள், தன்னுடைய கட்டுக்கள் அவிழ்க்கப் பட்ட அடுத்த நிமிடம், அவனைப் பாய்ந்து அணைத்திருந்தாள்.
அவளிடமிருந்து இப்படி ஒரு செய்கையை வருண் எதிர்பார்க்கவில்லை.
“வருண் சார்..!” என்ற வார்த்தையும், அவள் கண்ணீரும் மட்டும் தான் அவளிடம் இருந்து வந்தது. இனி அவனை விடவே மாட்டேன் என்பதைப் போல் இறுகக் கட்டிக் கொண்டாள். அவனுக்குள் தொலைந்து அப்படியே காணாமல் போய்விடுபவள் போல் அவன் நெஞ்சிற்குள் புதைந்து போனாள். வருணின் கைகளும் ஒரு வினாடி யோசனைக்குப் பின் அவளை அணைத்துக் கொண்டது.
அவ்வளவு நேரமும் அவனுக்குள் இருந்த பாரங்கள் எல்லாம் வினாடியில் விலகிப் போவதைப் போல் உணர்ந்தான் வருண். தலையெல்லாம் கலைந்து, சோர்வுடன் அவளைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
“உனக்கு ஒன்னும் ஆகலையே..?” என்றான்.
“இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்..!” என்றாள் கதறியபடி.
“அதான் ஒன்னும் ஆகலைல…!” என்றவன் அவளை வலுக்காட்டாயமாக தன்னிடம் இருந்து பிரிக்க, அவள் இருந்த நிலை கண்டு அவன் உள்ளம் பிசைந்தது. தன்னுடைய ஜெர்கினை கழட்டி அவளுக்கு அணிவித்தவன்,
“வா..! போகலாம்..!” என்றான்.
ஒரே இடத்தில் இருந்ததால் அவள் கால்கள் பின்னிக் கொள்ள, தன் கையணைப்பிலேயே அவளை வெளியே கூட்டி வந்தான் வருண்.
வருண் அவளை வெளியே கூட்டி வருவதை ரத்தம் வழியும் உதட்டுடன் பார்த்தான் லெனின்.அந்த நிலைமையிலும் அவன் கண்களில் குரோதம் தெறிக்க, அதைக் கண்ட சக்தி மேலும் நடுங்கியபடி வருணுக்குள் புதைந்து போனாள்.
அவளின் நிலையைப் பார்த்த கார்த்திக்கும், முரளிக்கும் கூட கோபம் வர, மேலும் இரண்டு சாத்து சாத்தினான் கார்த்தி.
“ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணிட்டியா கார்த்தி..?” என்றன வருண்.
“இன்னும் இல்லை வருண்..!” என்று கார்த்தி சொல்ல, அவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான் வருண். அவன் கண்களிலேயே செய்தியைப் படித்துக் கொண்டான் கார்த்தி.
“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையேம்மா..?” என்றான் முரளி.
“இல்லை..!” என்பதைப் போல் அவள் தலை வேகமாக ஆட,
“கொஞ்சம் பயந்து போயிருக்கா மாமா..! வேற ஒண்ணுமில்லை..!” என்றான் வருண்.
“வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா..?” என்றான் முரளி.
வருண், கார்த்தியை யோசனையாய் பார்க்க,
“தாராளமா..!” என்றான் கார்த்தி பட்டென்று.
அங்கே கார்த்தியின் வீட்டில்,
“இவங்க வாங்கிங் போனாங்களா..? இல்லை கொடைக்கானலையே வாங்கப் போனாங்களா..? இன்னும் ஒருத்தரும் சாப்பிடலை..!” கௌசி புலம்பிக் கொண்டிருக்க,
“வந்துடுவாங்க கௌசிக்கா..!” என்று சாதனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்து விட்டிருந்தனர்.
“வந்துட்டாங்க போல..!” என்று வெளியே சென்ற கௌசிக்கு அதிர்ச்சி.
“ஏங்க என்னங்க ஆச்சுக்கு சக்திக்கு..? அவ இங்க எப்படி…?” என்று கௌசி அதிர்ந்து பேசியதில் குடும்பமே ஒன்று கூடியது.
“என்னாச்சு இவளுக்கு…? ஏன் இப்படி பயந்த மாதிரி இருக்கா..?” என்று அவள் கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்க, அவளைப் பார்த்துவிடும் ஆர்வத்தில் வேகமாய் வந்த சாதனா தடுக்கி விழப் போனாள்.
“ஹேய் சாது பார்த்து..!” என்று வருண் வேகமாய் அவளைப் பிடித்து நிறுத்த, சட்டென்று கண் கலங்கினால் சாதனா.
“எனக்கு ஒண்ணுமில்லை கிருஷ்ணா..!” என்றாள். அதற்கு மேல் அவன் அவளிடம் பேசவில்லை.
“கௌசிக்கா இவளை உள்ள கூட்டிட்டு போங்க..!” என்ற வருண், சக்தியை கௌசியிடம் ஒப்படைத்தான்.
“சும்மா சொல்லக் கூடாது கௌசிக்கா…! ஆள் செம்மையா இருக்கா, அதான் கிருஷ்ணா கவுந்துட்டான் போல..?” என்று சாதனா சிரிக்க, இது எதுவும் சக்தியின் சிந்தனையில் விழவில்லை.
“எனக்கு என்னமோ இதெல்லாம் சரியா படலை மூர்த்தி..!” என்று மோகனா ஆரம்பிக்க,
“தயவு செஞ்சு இனி வாயைத் திறக்காதக்கா..! இன்னொரு தடவை அந்த பொண்ணை ஏதாவது சொன்னன்னு தெரிஞ்சா வருண் மனுஷனா இருக்க மாட்டான். அன்னைக்குப் பார்த்த தான, அவன் பேசின பேச்சை..!” என்று சத்யமூர்த்தி எச்சரிக்க,
“ஆமா அண்ணி..! இனி அவன் விஷயத்துல நீங்க தலையிடாதிங்க..!” என்றார் நித்யாவும்.
“ரெண்டு பெரும் புரிஞ்சு தான் பேசுறிங்களா..? ஊர் பேர் தெரியாத ஒருத்தியை எப்படி வீட்ல சேர்க்க முடியும். அவனும் என்னமோ அந்த பொண்ணைப் பார்த்தா உருகுறான்..!” என்று மோகனா கடுப்புடன் சொல்ல,
“அவனுக்கு அவதான்னு எழுதி வச்சிருக்கோ என்னவோ..?” என்ற நித்தியா வேலையைப் பார்க்க போய்விட்டார்.
“என்னவோ மூர்த்தி.. எனக்கு எதுவும் சரியா படலை. பார்த்துக்கோ..!” என்பதோடு முடித்துக் கொண்டார் மோகனா.
“அவனை எதுக்காக ஸ்டேஷன் கொண்டு போக வேண்டாம்ன்னு சொன்ன வருண்..?”என்றான் கார்த்தி.
“எதுக்கு…? அவனை அரஸ்ட் பண்ண அடுத்த நிமிஷம் அந்த தேவன் ஜாமீனோட வந்து நிக்குறதுக்கா…? இவனுகளை எல்லாம் இப்படி ட்ரீட் பண்ணக் கூடாது..!” என்றான் கோபமாய்.
“அவனை என்ன செய்யப் போறதா உத்தேசம்..?” என்றான்.
“என்கவுன்ட்டர் தான்..!” என்றான் வருண் அசால்ட்டாய்.
“வருண் விளையாடாத..?” என்றான் கார்த்தி.
“யாரு நானா விளையாடுறேன்..? நான் ஒரு எஸ்பி. ஆனா, அந்த பயம் கொஞ்சம் கூட இல்லாம, அந்த ருத்ரா பொம்பளை, இவனோட மசிரக் கூட புடுங்க முடியாதுன்னு என்கிட்டயே சவால் விடுறா..?மசிரு இல்ல உசுரையே புடிங்கிட்டேன்னு சொல்ல வேண்டாம்..?” என்றான்.
அவன் சாதரணமாக பேசுவதைப் போல் தான் இருந்தது. ஆனால் முகம் இறுகி, கண்கள் இடுங்கி, அவன் முகம் பார்ப்பதற்கே அப்படி கடினமாக இருந்தது.
இதற்கு மேல் கார்த்தி சொல்வதற்கும் ஒன்றுமில்லை. அப்படி சொன்னாலும் கேட்கும் ரகம் இல்லை வருண் கிருஷ்ணா. அவன் முடிவு எடுத்துவிட்டால், அதில் இருந்து மாறும் ரகமில்லை.
“இன்னும் நீ வீட்டுக்குள்ளயே வரலை..!” என்றாள் கௌசி.
“அம்மா…! தாயே..! வரேன் போ..!” என்று அவள் பின்னால் சென்ற வருணுக்கு, மனம் ஏனோ அவ்வளவு லேசாக இருந்தது.
அங்கே குளியலறையில் இருந்த சக்திக்கு, தண்ணீரோடு, கண்ணீரும் வற்றாமல் போய்க் கொண்டிருந்தது.