“என்ன சொல்றாங்க உங்க அண்ணி..?” என்றாள் ஷிவானி.
“லெனின் பாடின அதே பல்லவியைத் தான் ருத்ரா அண்ணியும் பாடுறாங்க..!” என்றாள் சக்தி.
“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத..? உங்க அண்ணிக்கு இந்த லெனின் என்ன வகையில உறவு முறை வேணும்..?” என்றாள் ஷிவானி.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது..?” என்றாள்.
“இல்லை, உனக்குப் பார்த்த மாப்பிள்ளையும் உங்க அண்ணி பார்த்தது தான். அதுவும் சரியா இல்லை. இந்த வேலைக்கு உன்னை அனுப்பி வச்சதும் அவங்க தான். இங்கயும் ஒன்னும் சரியில்லை..! அதான் கேட்டேன்..!” என்றாள் ஷிவானி.
“சச்சா..! எங்க அண்ணி அப்படி எல்லாம் கிடையாது. இங்க வேலை பார்க்குற நமக்கே இப்பத்தான் விஷயம் தெரியும். அங்க இருக்குற எங்க அண்ணிக்கு, இங்க நடக்குற கூத்தெல்லாம் எப்படி தெரியும். அது மட்டுமில்லாம அவங்க ரொம்ப நல்லவங்க தான். என்ன கொஞ்சம் முன்கோபம் வரும் அவ்வளவு தான்..!” என்றாள் சக்தி.
“சரி இப்போ என்ன பண்ணலாம்..?” என்றாள் ஷிவானி.
“இப்போதைக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்..! உன்னோட கல்யாணம் வேற பக்கத்துல வருது. அதனால நீ அந்த வேலையை மட்டும் பாரு..! இதை அப்பறம் பார்த்துக்கலாம்..!” என்றாள் சக்தி.
“கல்யாணம்..! அது ஒன்னு தான் இப்போ குறைச்சல். அவர் வீட்ல யாரும் சம்மதம் சொல்லாம, இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் இப்போ ரொம்ப அவசியமா..?” என்றாள் ஷிவானி.
“கண்டிப்பா அவசியம் தான். போகப் போக அவங்களே ஏத்துப்பாங்க. சோ, ரொம்ப யோசிக்காம ஆக வேண்டிய வேலையைப் பாரு..!”
“நான் சென்னை போய்ட்டா, நீ மட்டும் எப்படி இங்க தனியா..? இப்போ இந்த பிரச்சனை வேற..?” என்று தயங்கினால் ஷிவானி.
“இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையா..? எனக்கு ஒண்ணுன்னா.. நீங்க எல்லாம் வந்துட மாட்டிங்களா..?” என்றாள் சக்தி.
“இருந்தாலும் எனக்கு என்னவோ தப்பாப் படுது சக்தி..!” என்றாள் ஷிவானி.
“அம்மா தாயே..! இந்த பேச்சை இதோடு விடு..!” என்று அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள் சக்தி.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஷிவானியின் திருமணம் முடிந்து சென்னை சென்று விட்டாள்.
ஷிவானி அருகில் இருந்த போது தெரியாத ஒரு வெறுமை, இப்போது சக்திக்கு நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு நாளும் செல்வது அவளுக்கு ஒரு யுகமாய் பட, அப்போது தான் அவளைத் தேடி வந்தது பிரச்சனை.
அவள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கூறி அவசர அவசரமாக அந்த கேஸை முடித்திருந்தனர். பெண்ணைப் பெற்றவர்கள் குடும்ப கௌரவத்திற்கு பயந்து ஊமையாகிவிட, சக்திக்கு அந்த விஷயத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆம், அந்த பெண் இறக்கும் போது இரண்டு மாத கர்ப்பம் என்று அறிக்கை சொல்ல, அதை அப்படியே நிர்வாகம் மூடி மறைத்தது.
“இப்படி ஒரு அசிங்கத்தைப் எப்படி நாங்க வெளிய சொல்றது..?” என்ற பெற்றோர், இறந்த தங்கள் பெண்ணை வசை பாடிவிட்டு சென்று விட, அவர்கள் மீது வெறுப்பாக வந்தது சக்திக்கு. எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. அதற்கு அடுத்து வந்த நாட்களில் ஒரு பைத்தியம் போல் இருந்தால் சக்தி. ஷிவானியிடம் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை.
“பேசாம நீ கிளம்பி சென்னை வந்துடு சக்தி. இங்க வேற வேலை தேடிக்கலாம். நீ அங்க இருக்குறது எனக்கு சரியா படலை..!” என்றாள் ஷிவானி.
“இல்லை..! நான் இதை எப்படியாவது வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். இது எல்லாத்துக்கும் காரணமான அந்த தேவனோட முகத்திரையை நான் கிழிப்பேன்..!” என்று சக்தி ஆவேசமாய் சொல்ல, அவளின் பேச்சு ஷிவானிக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியது.
அதற்கு அடுத்து வந்த நாட்களில், சின்ன ஆதாரங்களையும் சேகரிக்கத் தொடங்கினாள் சக்தி. அதற்கு சில மாணவர்களும், மாணவிகளும் கூட உதவி செய்தனர். என்ன செய்தும் அவளுடைய மன அழுத்தம் மட்டும் குறையவேயில்லை.
வீட்டில் தனிமையில் இருந்தவளுக்கு, அவளின் அண்ணன் சிவாவின் அழைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“சொல்லுங்க சிவாண்ணா..!” என்றாள் சக்தி.
“நாளைக்கு உன்னைப் பார்க்க, நாங்க அங்க வரோம்டா..! உங்க அண்ணி வேற ரொம்ப பீல் பண்றா. அவளாலதான் நீ வீட்டை விட்டு வெளிய போயிட்டேன்னு சொல்லி..!” என்று சிவா சொல்ல,
“அப்படி எல்லாம் எதுவுமில்லை சிவாண்ணா..! கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட அண்ணிகிட்ட பேசினேன்..!” என்றாள்.
“அதையும் சொன்னா ப்ரியா..! நீ சொன்ன விஷயத்தையும் சொன்னா. நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை எல்லாம். நான் நாளைக்கு வரும் போது, பேசாம எங்க கூடவே வந்துடுமா..!” என்றான் சிவா.
“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு சிவாண்ணா. அது முடிஞ்சதும் நானே வந்துடுறேன்..!” என்றாள்.
“எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு, நாங்க வந்த உடனே எங்க கூட கிளம்பி வர..!” என்று போனை வாங்கி ருத்ரா அதட்ட,
“சாரி அண்ணி..! நீங்க அன்னைக்கு சொன்னப்ப நான் அமைதியா இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு, எனக்கு இப்பத்தான் புரியுது. ஒரு வேளை அன்னைக்கே நான் இந்த பிரச்சனையை மீடியாவுக்கு எடுத்துட்டு போயிருந்தா, இப்போ அநியாயமா ஒரு பொண்ணோட உயிர் போயிருக்காது. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, இங்க நடக்குற எல்லாத்தையும் வெளிய கொண்டு வந்த பிறகு தான் எனக்கு வேற வேலையே..!” என்றாள் சக்தி.
சக்தி இவ்வளவு உறுதியாய் பேசுவது ருத்ராவிற்கு எங்கோ இடித்தது.
“என்ன சொல்ற சக்தி..? அதுக்கெல்லாம் ஆதாரம் இல்லாம, நாம என்ன பண்ண முடியும்..?” என்று ருத்ரா அவளிடம் போட்டு வாங்கினாள்.
“ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு அண்ணி. எல்லாமே வீடியோ ஆதாரம். என்கிட்டே இருக்குறது காணாமப் போனாலும், ஷிவானிகிட்ட இருக்கு. அதனால இவங்க தப்பிக்கவே முடியாது..!” என்று ருத்ராவின் மேல் இருக்கும் நம்பிக்கையில் உளறி விட்டாள் சக்தி.
“வீடியோ ஆதாரமா..?” என்ற ருத்ரா அதிர,
“அதை நான் பார்த்துக்கறேன் அண்ணி. இந்த மாவட்ட எஸ்பி ரொம்ப நேர்மைன்னு சொன்னாங்க. அவரைப் போய் நேர்ல பார்த்து, அவர்கிட்ட குடுத்துடலாம்ன்னு இருக்கேன்..!” என்றாள் சக்தி.
“எதுவா இருந்தாலும், நாங்க வர வரைக்கும் வெயிட் பண்ணு..!” என்ற ருத்ராவிற்கு ஆயிரம் யோசனைகள். அவளுக்கு லெனினை மட்டுமே தெரியும். இந்த பிரச்சனைகள் எல்லாம் தெரியாது. அவனுக்கு உதவி செய்வதாக நினைத்து, சிவாவிற்கு தெரியாமல் அவனுக்கு போன் செய்தாள்.
“என்ன ருத்ரா..? இந்த நேரத்துக்கு கூப்பிடுற..?உன் புருஷன் ஊர்ல இருந்து வரதா சொன்ன..?” என்றான் லெனின்.
“அதெல்லாம் வந்தாச்சு..? என்ன நடக்குது அங்க…? ஏதோ ஒரு பொண்ணு செத்துப் போய்டுச்சாமே..?” என்றாள்.
“அதெல்லாம் லவ் மேட்டர். பெருசா ஒண்ணுமில்லை..!” என்றான்.
“பெருசா ஒன்னுமில்லையா..? சக்தி என்ன என்னவோ சொல்றா..? நீ இப்படி சொல்ற..?” என்றாள்.
“என்ன சொன்னா..?” என்றான் லெனின்.
“அவகிட்ட ஏதோ வீடியோ ஆதாரம் எல்லாம் இருக்குதுன்னு சொல்றா. நாளைக்கு அதை எஸ்பிகிட்ட குடுக்கப் போறேன்னு சொல்றா..? அப்படி அங்க என்ன தான் பண்ற..?” என்று ருத்ரா கேட்க, லெனினுக்கு ஆத்திரமாக வந்தது.
“நிஜமா அவகிட்ட வீடியோ ஆதாரம் இருக்குதுன்னு சொன்னாளா..?” என்றான் லெனின்.
“ம்ம் ஆமா..!” என்றாள் ருத்ரா.
“அது மட்டும் வெளிய தெரிஞ்சா, நான் ஆயுசுக்கும் ஜெயில்ல களி தான் திங்கணும்..!” என்றான் லெனின்.
“அச்சோ..! இப்போ என்ன பண்றது..?” என்றாள் ருத்ரா.
“நீ.. நம்ம பிளான் படி நாளைக்கு உன் புருஷனை போட்டுத் தள்ளிடு. அதுக்கப்பறம் நான் சொன்ன மாதிரி ஒரு நாடகத்தைப் போட்டுட்டு அங்க இருந்து கிளம்பிடு. நீ தங்க வேண்டிய இடத்தை டிரைவர் சொல்லுவான். நாளைக்கும், அந்த டிரைவர் தான் உனக்கு உதவிக்கு வருவான். இங்க இவளோட கதையை நான் பார்த்துக்கறேன்..” என்றான் லெனின்.
“அவளை என்ன செய்ய போற லெனின்..?” என்ற ருத்ராவிற்கு கொஞ்சம் உதறல் எடுக்க,
“நீயும் நானும் ஒண்ணா வாழனுமா வேண்டாமா..? அதுவும் அளவுக்கு அதிகமான பணத்தோட வாழனும். அதுக்கு இவங்களை மாதிரி சில இடைஞ்சல்கள் வரத்தான் செய்வாங்க. தட்டி எரிஞ்சிட்டுப் போயிட்டே இருக்கணும்..!” என்றான்.
“எதை செய்றதா இருந்தாலும் பார்த்து செய் லெனின்..!” என்ற ருத்ராவிற்கு மனதிற்குள் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. தாய்மை, பெண்மை இப்படி அனைத்தையும் மீறி, அவளுடைய கள்ள உறவு அவளை அனைத்தயும் செய்ய வைத்தது.
லெனின் இந்த விஷயத்தை உடனடியாக தேவனிடம் எடுத்துச் செல்ல, அந்த நேரத்தில் தேவனும் அந்த ஸ்கூல் ஹாஸ்ட்டல் வந்திருந்தான்.
“என்ன சொல்ற லெனின்..? நீ சொன்னன்னு சொல்லி அவளை அசால்ட்டா விட்டது எங்க போய் விட்டிருக்குன்னு பாரு..!” என்று தேவன் கோபத்தில் கத்த,
“நீங்க கவலையை விடுங்கண்ணே..! அவ கதையை முடிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நாளைக்கு இந்நேரம் அவ இல்லைங்கிற செய்திதான் உங்களுக்கு வரும். அந்த ஆதாரத்தையும் அளிக்க வேண்டியது என்னோட பொறுப்பு..!” என்றான் லெனின்.
“இப்படியே பேச மட்டும் தான் வரும் உனக்கு. அந்த ஷிவானி, அவ புருஷன் யாரா இருந்தாலும் போட்டுத் தள்ளிடு. இதுல சம்பந்தபட்ட யாரா இருந்தாலும் அவங்க உயிரோட இருக்கக் கூடாது. ஷிவானி கதையையும் முடிச்சுடுட்டு, புருஷன் செத்த துக்கம் தாங்காம அவளும் சூசைட் பண்ணிகிட்டதா, கேசை குளோஸ் பண்ண சொல்லு..! இங்க இருக்குற இவளை ஈசியா முடிச்சுடலாம். அங்க இருக்குற ஆதாரத்தை தான் முதல்ல அழிக்கனும்” என்று தேவன் அடுத்தடுத்து காய் நகர்த்தினான்.
“சரிண்ணே..!” என்று லெனின் சொல்லிக் கொண்டிருக்க,
“இங்க இவளை எதை செய்றதா இருந்தாலும் ஒரு நாலு நாள் கழிச்சு செய். நாளைக்கு தலைவர் இங்க வரார். அவரோட கவனத்துக்கு எதுவும் போய்டாம பார்த்துக்கணும். இந்த நேரத்துல அவளை ஏதாவது பண்ணி, அதனால எதாவது பிரச்சனைன்னா, நம்ம மேல சந்தேகம் வந்திடும் தலைவருக்கு. ஹாஸ்ட்டல்ல ஒரு நாலு நாளைக்கு எதுவுமே நடக்காத மாதிரி பார்த்துக்கணும். அதே சமயம் அடுத்த நாலு நாளும் அந்த சக்தி பொண்ணை கண்காணிச்சுகிட்டே இருக்கணும். நம்மை மீறி அவ எங்கயும் போய்ட கூடாது. முக்கியமா, எஸ்பி வருண் வரைக்கும் இந்த விஷயம் போகாம பார்த்துக்கணும்” என்றான் தேவன்.
“விஷயம் நமக்குத் தெரியும்ன்னு அவளுக்குத் தெரியாதுண்ணே. அதனால ஈசியா அவளை நம்ம கண்காணிப்புல வச்சுக்கலாம்..! அதுக்கு அப்பறம் அவ கதையை முடிச்சுட வேண்டியது தான்…!” என்றான் லெனின்.
“முக்கியமா, அடுத்து வர நாலு நாளும் அவ எங்கயும் போகக் கூடாது…!” என்று தேவன் சொல்ல,
இதையெல்லாம் கேட்ட ஒரு மாணவன், வேகவேகமாக சக்திக்கு கால் செய்து அவர்கள் பேசியது அனைத்தையும் ஒப்புவித்தான்.
“நீங்க எங்கயாவது போய்டுங்க மேம்..! இவங்க ரொம்ப தப்பா தெரியறாங்க..!” என்று அவன் சொல்ல, சக்திக்கு பயத்தில் குப்பென்று வியர்த்தது. எப்படி அவர்களுக்கு விஷயம் தெரிந்தது என்று அவளால் யோசிக்க முடியவில்லை. அதிலும் ருத்ராவை அவள் கொஞ்சமும் சந்தேகப்படவில்லை. பதட்டத்தில் அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை.
“உனக்கு நாலு நாள் டைம் இருக்கு சக்தி..!” என்று மனசாட்சி சொல்ல,
“அதுக்குள்ளே இவங்க ஏதாவது பண்ணிட்டா..?” என்று யோசித்தாள்.
“அவங்க இப்படி பேசி வச்சிருக்கிற திட்டம் உனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருப்பாங்க. நீயும் அதையே பாலோ பண்ணி, நாலு நாளைக்குள்ள தப்பிச்சிடனும்..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
முதல் வேலையாக, ஷிவானிக்கு போன் செய்தாள். இரண்டு அழைப்பு சென்றும் அவள் எடுக்காமல் இருக்க, சக்திக்கு டென்ஷன் கூடிக் கொண்டே போனது. மூன்றாவது அழைப்பில் எடுத்தால் ஷிவானி.
“எங்கடி போய் தொலைஞ்ச..?” என்று எடுத்த எடுப்பில் சக்தி கத்த,
“என்னாச்சு சக்தி..? ஏன் இவ்வளவு பதட்டமா பேசுற..?” என்றாள் ஷிவானி.
“விஷயம் எப்படியோ அந்த தேவனுக்கு தெரிஞ்சு போய்டுச்சு..! அவங்க நம்மளைப் போட்டுத் தள்ள பிளான் பண்ணியிருக்காங்க. அவங்ககிட்ட சிக்கவே கூடாது. நீ பார்த்து பத்திரமா இரு..!” என்றாள் சக்தி.
“என்னடி என்ன என்னவோ சொல்ற..? எனக்கு பயமா இருக்கு. நான் இருக்குறது இருக்கட்டும். நீ முதல்ல அங்க இருந்து கிளம்பிடு. இல்லைண்ணா உங்க அண்ணிகிட்ட ஹெல்ப் கேளு..!” என்று ஷிவானி சொல்ல,
“நாளைக்கு அந்த தலைவர் வராராம். இவங்க பயப்படுறதைப் பார்த்தா, அவருக்குத் தெரியாமத்தான் இதெல்லாம் நடக்கும் போல. நான் எப்படியாவது நாளைக்கு அவரை மீட் பண்ணி இதெல்லாம் சொல்லிட்டா, அவர் பார்த்துப்பார். நமக்கு ஒன்னும் ஆகாது. அதுவரைக்கும் நீ சேப்டியா இரு..!” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் சக்தி.
நேரம் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.