காதல் 17:
அன்னைக்கு நாங்க எப்பவும் போல ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தோம் என்ற சக்திக்கு நினைவுகள் அந்த நாளுக்கே சென்றது.
“பிரியா கிளம்பலாமா..?” என்றாள் ஷிவானி.
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..? என்னை சக்தின்னு சொல்லு. பிரியான்னு சொல்லாதன்னு..” என்றாள் சக்தி.
“சக்தி பிரியதர்ஷின்னு பேரை நீட்டி முழக்கி வைக்கும் போதே தெரிஞ்சிருக்கணும். எனக்கு எப்படித் தோணுதோ அப்படி தான் கூப்பிடுவேன்..!” என்ற ஷிவானி,
“டைம் ஆச்சு..! இப்ப உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்க..?” என்றாள்.
“இந்த மாவட்டத்துக்கு எஸ்பியாம் இவரு. பேட்டி குடுத்துட்டு இருக்கார். அதான் பார்த்துட்டு இருக்கேன்..! சும்மா சொல்லக் கூடாது, ஆளு சும்மா ஜம்முன்னு இருக்காரு..!” என்றாள் சக்தி.
“மேடம் இப்போ இது ரொம்ப முக்கியமா… கிளம்புற வழியைப் பாருடி..!” என்றாள் ஷிவானி.
“உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லடி. இங்க வந்து பாரு.. என்னா பேஸ்.. என்னா மாஸ்.. சினிமால வர போலீஸ் மாதிரி இருக்காண்டி..!” என்றாள் சக்தி.
“ஆத்தா..! அவன் யாரா வேணா இருக்கட்டும். இன்னைக்கு எக்ஸாம்ஸ் இருக்கு. கொஞ்சம் சீக்கிரம் போகலாம்ன்னு நேத்து நீ தான சொன்ன. இப்ப இப்படி உட்கார்ந்து வழிஞ்சுட்டு இருக்க. கிளம்புடி போகலாம்..!” என்று ஷிவானி கெஞ்சாத குறையாக கெஞ்சவும், மனமே இல்லாமல் டிவியை நிறுத்தினாள் சக்தி.
இருவரும் பேசிக் கொண்டே நடந்து செல்ல, ஷிவானி யோசனையுடன் வந்து கொண்டிருந்தாள்.
“என்னாச்சு ஷிவானி..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றாள்.
“ஒன்னும் இல்லடி..! நம்ம ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க எல்லாம் பெரிய இடத்து பிள்ளைங்க. அவ்வளவு பணத்தையும் கொட்டி இங்க வந்து ஹாஸ்ட்டல்ல விட்டுட்டு போய்டுறாங்க. ஆனா, அதுக்கப்பறம் பிள்ளைங்க எப்படி இருக்காங்க..? என்ன செய்றாங்க..? அப்படின்னு யோசிக்க கூட டைம் இல்லாம பிசியாயிடுறாங்க..!” என்றாள்.
“இப்போ இதையெல்லாம் நீ நினைச்சு கவலை படுற அளவுக்கு என்ன நடந்திடுச்சு..?” என்றாள் சக்தி.
“நேத்து பிளஸ் ஒன் பசங்க ரெண்டு பேர், காலையில கிளாஸ்க்கு வரும் போதே போதையில தான் இருந்தாங்க. கேட்டா.. உங்க வேலையைப் பாருங்கன்னு திமிரா பதில் சொல்றானுக. இந்த வயசுலேயே இதெல்லாம் பழகி… இதுங்க எங்க உருப்பட போகுதுங்க..!” என்று ஷிவானி புலம்ப,
சக்திக்கும் அந்த கவலை மனசுக்குள் உண்டு. அவளும் தினசரி பார்க்கிறாள் தானே. இதில் சில மாணவிகளும் அப்படி இருப்பது தான் வேதனையின் உச்சம்..!
“ஒன்னும் சொல்றதுக்கு இல்லை… அவங்களா திருந்துனா தான் உண்டு..!” என்று சொன்ன சக்தி,
“ஆனா, அவங்களுக்கு ஸ்கூலுக்கு உள்ள எப்படி இந்த சமாச்சாரம் எல்லாம் கிடைக்குது. அதிலையும் முக்கால்வாசிப் பேர் ஹாஸ்ட்டல் ஸ்டூடண்ட்ஸ் தான்.. அது தான் ஒன்னும் பிடிபட மாட்டேங்குது…” என்றாள் சக்தி.
“இதுல நாம ஒன்னும் செய்ய முடியாது. ஆனா, சிலரை பார்த்து எல்லா பிள்ளைங்களும் கெட்டுப் போய்டுவாங்களோ அப்படின்னு தான் கவலையா இருக்கு..!” என்று அவர்கள் பேசிக் கொண்டே நடக்க, ஸ்கூல் பஸ்சும் வந்து விட்டிருந்தது.
“இதையேன் நாம மேனேஜ்மென்ட்ல சொல்லக் கூடாது..?” என்றாள் சக்தி.
“அவங்களுக்குத் தெரியாமையா இருக்கும்..?” என்றாள் ஷிவானி.
“அப்ப ஒன்னு பண்ணலாம். எங்க ருத்ரா அண்ணிக்கு லெனின் அப்படின்றவரை நல்லாத் தெரியும். அவங்க கிட்ட சொல்லி, மேனேஜ்மென்ட் காதுக்கு கொண்டுப் போகலாமா..?” என்றாள் சக்தி.
“இதுவும் நல்ல ஐடியா தான்..! அப்படியே செய்யலாம்..!” என்றாள் ஷிவானி.
“ஸ்டாப் ஸ்டாப்..!” என்ற வருணின் குரலில் நிஜத்திற்கு வந்தாள் சக்தி.
“என்னாச்சு சார்..?”
“அப்போ, ஏற்கனவே என்னை உனக்குத் தெரிஞ்சிருக்கு. நான் யாருன்னும் தெரிஞ்சிருக்கு. அப்பறம் ஏன் தெரியாத மாதிரி.. ஏதோ புதுசா பார்க்குற மாதிரி பார்த்த..!” என்றான் வருண்.
“இப்போ இது தான் உங்க கவலையா சார்..! நான் என்ன சொல்ல வரேன்னு மட்டும் கேளுங்க..! உங்க சந்தேகத்தை எல்லாம் அப்பறம் கேளுங்க..!” என்றாள்.
“எல்லாம் என் நேரம்..! சரி சொல்லு..” என்றான் வருண். அவனுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை என்பது அவன் முகத்தை வைத்தே உணர்ந்து கொண்டாள் சக்தி.
“நான் சொன்ன மாதிரி அந்த லெனின் கிட்ட இந்த பிரச்சனையைக் கொண்டு போனோம். அதுக்கு அவனும் கண்டிப்பா, தேவன் கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கறதா சொன்னான். ஆனா, அதுக்கு அப்பறமும் ஸ்கூல்குள்ள இதெல்லாம் தொடர்ந்து நடந்துகிட்டு தான் இருந்தது..” என்றாள்.
“இந்த ஸ்கூல் தேவனோடதா..?” என்றான் வருண்.
“நோ..! அவன் இங்க பொறுப்பு மட்டும் தான். அதாவது பினாமி. இந்த ஸ்கூலோட ஒரிஜினல் முதலாளி ஒரு முக்கியமான அரசியல் பிரமுகம். ஆனா, இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சு நடந்துச்சான்னு கேட்டா, எங்களுக்குத் தெரியாது..” என்றாள்.
“இதுல நீங்க எப்படி சிக்குனிங்க..?” என்றான் வருண்.
“ஒரு நாள் ஸ்கூல்ல இருந்து டுவெல்த் பசங்களை எஸ்கேர்ஷன் மாதிரி கூட்டிட்டு போயிருந்தோம். அது அந்த தேவனோட எஸ்டேட் தான்..! அங்க போனப்ப தான் சில விஷயங்கள் புரிஞ்சது..” என்றாள்.
“என்ன விஷயம்..?” என்றான் பார்வை கூர்மையாக.
“அங்க கவர்மென்ட் தடை பண்ணியிருக்குற போதை காளான்ல இருந்து இன்னும் போதை அதிகமா ஏற்படுத்தக் கூடிய கஞ்சா செடி வரைக்கும் அதிகமா விளைவிக்கிறதை பார்த்தோம். இங்க இயற்கையாவே அந்த காளான் வளரும். அதில் சிலோசைப்பின் அப்படிங்கிற வேதிப் பொருள் இருக்கும். அது தான் போதையைத் தரக் கூடியது. இவங்க அதை செயற்கையாவும் விளைவிக்கிறாங்கன்னு உணர முடிஞ்சது. ” என்றாள்.
“அது அந்த செடி தான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..?” என்றான் வருண்.
அவனை முறைத்தவள், “நாங்க பாட்னி ஸ்டூடன்ட்..!” என்றாள் எரிச்சலுடன்.
“சரி சரி..! அப்பறம்..?”
“அப்போதான் உண்மை தெரிஞ்சது… ஸ்கூல்ல நடந்த போதை வியாபாரம் எல்லாம், தேவனோட கவனத்தின் கீழ தான் நடக்குதுன்னு. ஹாஸ்ட்டல் பசங்களுக்கு போதை காளான் எல்லாம் சமைச்சு தர தனியா ஒரு சமையல்காரர் வரைக்கும் அந்த தேவனோட ஏற்பாடு தான்…” என்றாள்.
“இதை அந்த பசங்களோட பேரண்ட்ஸ் கவனத்துக்கு கொண்டு போயிருக்கலாமே..?” என்றான் வருண்.
“பிரச்சனை அதோட நிக்கலை சார்..! வெளி நாட்ல இருந்து வர சில நாய்களுக்கு பொண்ணுங்க சப்ளையும் நடந்தது. அதாவது இவங்க நடத்துற விடுதியில இந்த காளான் கிடைக்கும் என்பதற்காகவே கூட்டம் அலைமோதும். ஒரு தடவை வந்துட்டு போனவங்க மறுபடியும் நிறைய பேரை கூட்டிட்டு வரும் அளவுக்கு. அவங்க சூஸ் பண்ற பொண்ணுங்களுக்கு, வலுக்கட்டாயமா போதையை ஏத்தி, அவங்களை சீரழிச்சு, அதை வீடியோவும் எடுத்து , யாரையும் வெளிய வாய் திறக்காத மாதிரி பண்ணிட்டாங்க.
நாங்க முதல்ல இதை சாதாரணமா நினைச்சு தான், வீடியோ எடுத்தோம். அவங்களுக்கேத் தெரியாம கிடைச்ச ஆதாரத்தை எல்லாம் சேகரிச்சோம். இந்த பொண்ணுங்க விஷயம் கூட எங்களுக்கு கடைசியா தான் தெரிஞ்சது.
இதுக்காக கல்வி அமைச்சருக்கு ஒரு பெட்டிஷன் கூட போட்டோம். ஆனா, ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்போதான் வேற வழி இல்லாம அந்த லெனினை நம்பி, அவன் கிட்ட போய் சொன்னேன். ஆனா, அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது அந்த நாய் அந்த தேவனோட வலது கையின்னு.
யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லைன்னு, ஷிவானியோட லவ்வர் கிட்ட போய் சொன்னோம். அவரும் தெரிஞ்ச ஒரு போலீஸ்கிட்ட இந்த விஷயத்தை கொண்டு போனார். ஆனா, அவரும் நேர்மையா இல்லை. விஷயம் சுவத்துல அடிச்ச பந்தா, திரும்பியும் தேவன் காதுக்கு வந்திடுச்சு…” என்ற சக்தி நிறுத்த,
“வெளிய அவன் எஸ்டேட்ல எடுத்த வீடியோ சரி.. ஹாஸ்ட்டல்ல எப்படி எடுத்திங்க..?” என்றான் வருண் யோசனையுடன்.
ஹாஸ்ட்டல்ல, அந்த பழக்கமே இல்லாத ஒரு பையனை வச்சுத்தான் வீடியோ எடுக்க முடிஞ்சது. அது மட்டும் இல்லாம, அங்க பசங்களோட ஓவ்வொரு நடவடிக்கையையும் அவன் வீடியோவா எடுத்தான். ஸ்கூல்ல எல்லா இடத்துலையும் சிசிடிவி இருக்கு. ஆனா, ஹாஸ்ட்டல்ல மட்டும் இல்லை. இதை அவங்க இஷட்டத்துக்கு பயன்படுத்திகிட்டாங்க..! விஷயம் தெரிஞ்ச லெனின் என்னையும்,ஷிவானியையும் கூப்பிட்டு அனுப்பிச்சான்.
“என்ன நினச்சுட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்..? ப்ரியா..! நீ தெரிஞ்ச பொண்ணுன்னு தான் நான் உனக்கு இங்க வேலை வாங்கிக் கொடுத்தேன். நீ நடந்துக்கறதைப் பார்த்தா, என்னோட வேலையையும் காலி பண்ணிடுவ போல இருக்கு. இது தான் உங்களுக்கு முதலும் கடைசியும். உங்க அண்ணி முகத்துக்காக இந்த ஒரு தடவை விடுறேன். திரும்பவும் இதே மாதிரி பண்ணிட்டு இருந்திங்கன்னா, நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை.
ஏன்னா..? தேவன் சார் ரொம்ப கோவக்காரர்..! ஏதோ நீ எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க போய் இந்த ஒரு தடவை விட்டுட்டார். பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க..!” என்று அவன் எச்சரித்து விட்டு செல்ல,
“என்னடி..? இவன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினச்சா, இப்ப இப்படிப் பேசிட்டுப் போறான்..?” என்று ஷிவானி தனது மனக் குமுறலை வெளியிட,
“விடுடி..! இப்போ வரைக்கும் நாம வீடியோ எடுத்தது இவங்களுக்குத் தெரியாது. பேசாம இதை மீடியாகிட்ட குடுத்திடலாம். அப்ப இவங்களால ஒன்னும் செய்ய முடியாதுல..!” என்றால் சக்தி.
“இவனுக ஸ்கூல நடந்துறானுங்களா..? இல்லை வேற எதுவுமா..? இத்தனை நாள் நமக்கு இது தெரியாம போய்டுச்சு பாரேன்..?” என்று வேதனைப் பட்டாள் ஷிவானி.
“இதுக்கு முன்னாடி நாம போன கிளாஸ்ல இந்த பஞ்சாயத்து இல்லை. இப்போ போற கிளாஸ்ல இருக்கு. அதனால பிரச்சனை நமக்கு தெரிய வந்திருக்கு.விடு பார்த்துக்கலாம்..!” என்றாள் சக்தி.
“இதுக்கு முன்னாடி இருந்த டீச்சர்ஸ் ஒருத்தர் கூடவா இந்த விஷயத்தை கவனிக்கலை. இல்லை நமக்கேன் வம்புன்னு இருந்துட்டாங்களா..? எத்தனை பெத்தவங்க எவ்வளவு கனவோட இவங்களை படிக்க அனுப்புறாங்க. இவங்க படிப்பைத் தவிர மத்த எல்லாத்தையும் கத்துக்கறாங்கன்னு தெரிஞ்சா, அவங்க மனசு என்ன பாடுபடும்..?” என்று ஷிவானி புலம்ப,
“நாம புலம்பி ஒன்னும் ஆகப் போறதில்லைடி. நம்மால என்ன முடியுமோ அதை செய்வோம். அதுக்கப்பறம் அந்த கடவுள் விட்ட வழிதான்..!” என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளுக்கு ருத்ராவிடம் இருந்து போன் வந்தது.
“ஒரு நிமிஷம் ஷிவானி..!” என்ற சக்தி,
“சொல்லுங்க அண்ணி..!” என்றாள்.
“சக்தி..! நீ அங்க என்ன பண்ணிட்டு இருக்க..? உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் நீ ஏன் மூக்கை நுழைக்கிற..?” என்று ஆரம்பமே வசையுடன் ஆரம்பிக்க,
“இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டிங்க அண்ணி..!” என்றாள் சக்தி.
“அங்க என்னவும் நடந்துட்டு போகுது. அது நமக்கெதுக்கு..? போன வேலை என்னமோ அதை மட்டும் பாரு. உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்காத…!” என்று திட்டி விட்டு போனை வைத்து விட்டாள் ருத்ரா.