Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ19_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 19_2

 

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை – கூறியவர் ஞானி!



Advertisement

 

நேற்று மட்டுமா… இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இருப்பதில்லை. அது தான் உண்மை.

 

Advertisement

மாதவன், ஒரு தனித்துவம் படைத்த தனி பிறவி எல்லாம் இல்லை. நம்மைப் போல் ஒருவர். வயதிற்கேற்ற துள்ளலோடு சுற்றும் வாலிபன்.

Advertisement

 

இரண்டு வருடம் முன்பு ஒற்றை தங்கை மட்டும் தான். ஆனால் இன்று, அலர் என்பவள் அவன் வாழ்வில் மீண்டும் நுழைய ஒன்றுக்கு மூன்று தங்கைளுக்கு தமையன். அவர்களைக் கரை சேர்க்கும் பொறுப்பெல்லாம் இல்லாத சாதாரண அண்ணன். மற்ற இருவரும் அவனிடம் எதற்குமே வந்து நிற்பதில்லை என்றாலும் அலர்விழிக்கு சகலமும் அவன் தான். அப்படி தான் அவனை அவள் வாழ்வில் புகுத்திக் கொண்டான்.

 

Advertisement

இப்படி பெண்கள் அவனைச் சுற்றி இருப்பதாலோ என்னவோ அவன் பார்வை இன்று வரை அத்துமீறியதில்லை. அதுவும் மாற்றான் மனைவியை எல்லாம்..? அவன் சைட் லிஸ்டில் கூட சேராது!

 

அபிகேல் தனியாகத் தெரிந்தாள். வெண்மேனி மோகம் கொண்ட ஜனம் நடுவே அவள் தனியே தான் தெரிந்தாள். தாய்மை அவள் பொலிவைக் கூட்டிக் காட்டியது. இது எதுவுமே அவனைக் கவரவில்லை.. அவன் கவனிக்கவும் இல்லை எனலாம். கையில் குழந்தையோடு இருப்பவளை ஆசை கண்ணோடு பார்க்கவில்லை மாதவன். ஆனால் பிள்ளை அவனை இழுத்தாள். இந்த பிஞ்சு தளிர் கரம் அவனைக் கட்டிப் போட்டது உண்மை.

 

அபிகேலின் பெரியம்மா பேசியதைக் கேட்டபின் மனம் ஏதோ செய்தது. ‘விதவையா இவள்? தாய் தகப்பன் என்ற எந்த உறவுமே இல்லையா இவளுக்கு? பட்ட மரம்.. அனாதை.. இன்னும் என்னவெல்லாம் பெயர் இவளுக்கு?’ என்னவென்று உணர தெரியவில்லை அந்த இளம் ஆண்மகனுக்கு. அந்த குட்டி மகளுக்குத் தகப்பன் இல்லாதது இவனுக்குக் குறையாகப் போனது. ‘சங்கமித்ரா’ இழுத்து மூச்சை விட்டுக் கொண்டான்.

 

“மாதவா.. சாப்டியா டா?”, பாக்கியா வந்து கேட்கவும் சிந்தனை கலைந்தது. வயிறு தன் இருப்பை காட்டியது.

 

“இல்ல மா..”

 

“போடா போய் சாப்பிடு. இப்போ தான் வினோத்தும் கீழ போனான். பணத்த பத்திரமா வச்சுட்டியா? சாவிய அம்பிகாட்ட குடுத்துட்டியா?”

 

நினைவு வந்தவனாய்.. “அதுக்கு தான் வந்தேன். மறந்துட்டேன். இந்தாங்க நீங்களே குடுத்துடுங்க”, என்று சாவியை கொடுத்தவன் எழுந்துக் கொண்டான்.

 

கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. மண்டபத்தில் வீட்டார் மட்டுமே. பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் ஏதோ விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. சுற்றி அவன் வீட்டாட்கள். கடந்து சென்றான்.

 

வழியில்.. மாடிப்படிக்குப் பின், “ஐயோ வழி விடுங்கத்தான். அண்ணா  தம்மடிக்கிற கெட்ட பையனோட எல்லாம் சேரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க…”. நகுநா கிசுகிசுக்கும் சத்தம் கேட்டது.

 

“ரொம்ப பிகு பண்ணாத டி வெல்லகட்டி. நேத்து மாதிரி ரொம்ப சீன் காட்டின, தம்மடிச்ச வாய்ல சரக்க ஊத்தி விட்டுடுவேன்..”

 

“அதுவாது நல்ல ப்ராண்டா த்தான்?”

 

வினோத்தின் கொஞ்சலோடு கூடிய மிரட்டல் சத்தமும், கூடவே அவள் பதில் பேச்சும்.. இவன் நடக்க நடக்க மெலிந்து கொண்டே போனது. ‘குட்டி பிசாசு இவனையே முழுங்கிடுவா போல.. ரெண்டும் ஜாடிக்கேத்த மூடி தான்!’. மெல்ல சிரித்துக் கொண்டான்.

 

பத்திருபது பேர் உண்டு கொண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் அபிகேல் தனியே அமர்ந்திருக்க மகள், அம்மாவை பிச்சு பிடுங்கிக் கொண்டிருந்தாள். புடவையை இழுப்பதும்.. முடியை இழுப்பதும்… இலையை இழுப்பதும் என்று நான்கு மாதமே ஆன வால் அபியை உண்ண விடுவதாகத் தெரியவில்லை.

 

“குட்டி தங்கம்..”

 

சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தனர் அம்மாவும் மகளும். இம்முறை மாதவன் பார்வை மகளோடு நிற்கவில்லை. சினேக புன்னகை இவன் செலுத்தும் முன் அவள் செலுத்தியிருந்தாள்.

 

மாதவனைப் பார்க்கவும் மகள் தாவிக்கொள்ள, “உன் பெரியம்மாட்ட மேடம் போகலியா?”

 

“பச்.. பச்…”, கண் சிமிட்டி சிரித்தாள்.

 

பிள்ளையை அவன் அணைக்க, அவனுள் அடங்கிக் கொண்டாள். அபிகேல் பார்வை முழுவதும் மகள் மேல். ஆண் வாடை மகளுக்கு பிடித்தமில்லை, ஒருவனை தவிர! எபியை தவிர ஆண்களிடம் போகவே  மாட்டாள். இன்று இவனைக் கண்டாலே மகள் தாவிச் செல்கிறாள்! இவனும் அவனைப் போன்ற தோற்றமுடையதால் இவனை எபி என்று எண்ணிக் கொண்டாளா?! தெரியவில்லை.

 

மாதவனைப் பார்த்தாலே பொக்கை வாய் எச்சில் ஒழுக சிரித்தது.

 

“அம்மா சாப்பிட வேண்டாமா. என் தங்கம் டம்மி ஃபுல்லானா போதுமா..?”, இரு கைகளாலும் அந்தரத்தில் மகளை உயர்த்தி அந்த குட்டி வயிற்றில் மூக்கை  கொண்டு தேய்த்து அவன் கொஞ்ச.. மகள் கெக்கப் பிக்க என சிரிக்க… அபி முகத்திலும் ஒளி! இந்த ஒரு மாதத்தில் இன்று தான் பார்க்கிறாள் மகள் சத்தம் போட்டுச் சிரிப்பதை!

 

பிள்ளையைத் தோளில் போட்டுக் கொண்டே.. “நான் மாதவன் அபிகேல். எங்க வீட்டு கல்யாணம் தான் இது.”, தன்னை அறிமுக படுத்திக் கொண்டான்.

 

“எனக்கு புரியுது. நீ சுத்துது ரெஸ்ட் இல்லாம. சாப்டாச்சா.. சாப்பிடாட்டி, நான் பேபிய வச்சுக்கிறேன். நீ சாப்பிடு” என்றாள், ஆங்கிலத்தை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து.

 

“நீங்க பொறுமையா சாப்பிட்டுட்டு வாங்க. இங்க ஏசி இல்ல.. நாங்க மேடைக் கிட்ட இருக்கோம்.”

 

“ம்ம்” என்றாள்.. மகளைக் கொடுக்க பயம் தான்.

 

“எதுக்கும் என் நம்பர் தரேன்.. உங்க கண்ணுல நான் படலன்னா ஒரு காள் போடுங்க வந்திடுறேன்..”

 

கைப்பேசி எண்ணைக் கேட்டு ஒரு மிஸ்ட் காள் கொடுத்தான். “அவ அழுதா தூக்கிட்டு வரேன். பொறுமையா நிம்மதியா சாப்பிடுங்க”

 

அவன் முதுகை அபிகேலின் பார்வை துளைப்பது தெரிந்தது. திரும்பினானில்லை. குட்டிப் பெண்ணோடு முதல் தளத்திற்குச் சென்று அமர்ந்தான். அவன் பேச. அவளுக்கு என்ன புரிந்ததோ கண்.. காது மூக்கு.. முடி என்று அனைத்தையும் பிச்சு பீராய்ந்துக் கொண்டிருந்தாள்.

 

குழந்தை என்றால் பிடிக்கும் தான். ஆனால் தள்ளி நின்று கன்னம் தடவிச் செல்லும் அளவு தான் பிடிக்கும். அவனுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கே பிடிபடவில்லை. குட்டி பஞ்சு போதியோடு விளையாட மிகவும் பிடித்தது. அவ்வப்போது அவனையறியாமலே உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டான். ஆசை தீர அணைத்துக் கொண்டான். ஆனால் இது தீரும் ஆசை போல் தோன்றவில்லை. நீல விழிகளில் விழுந்து மூழ்கிப் போனான்.

 

அவன் கொஞ்ச.. மித்து சிரிக்க..அவர்கள் மேல், பார்ப்பவர் கண் பட்டுவிடும்!

 

“பாப்பு குட்டி… மித்து பேபி..”, அலர்விழி அண்ணன் அருகில் வந்தமர்ந்தாள்.

 

“உனக்கு தெரிஞ்ச பொண்ணு தானே அலர் அவ.. கொஞ்சம் கவனிச்சுக்க மாட்டியா? தனியா சின்ன குழந்தையோட கஷ்டபடுறா!”

 

“இந்த குட்டி என் கிட்ட வரவே மாட்டேங்குது ண்ணா.. அப்புறம் நான் என்ன செய்ய முடியும்? அந்த அத்த கூட நாலு நாளா இருக்கு.. அவங்களையே தூக்க விட மாட்டேங்கறா!”

 

“ம்..”

 

“உன் கிட்ட எப்பிடிண்ணா இப்படி ஒட்டிகிட்டா..? நான் தூக்கறேனே..”, கேட்டுக்கொண்டே குழந்தையை வாங்கவும், குட்டி மகள் மாதவனைப் பார்த்து உதடு பிதுக்கினாள்.

 

“குழந்தைய அழ விடாத”, வாங்கிக் கொண்டான். அவளும் கழுத்தைக் கட்டிக் கொள்ள.. அலர்விழி நம்பாத பார்வை பார்த்தாள்.

 

“என்ன டி?”

 

“அவ எந்த ஆம்பிளைங்கட்டயும் போக மாட்டான்னு மனோ சொல்லுவார்”,  கூறிய பின் நாக்கை கடித்தால் என்ன கடிக்காமல் போனால் என்ன? செத்த அலர்.. நினைத்துக் கொண்டாள்.

 

ஆனால் மாதவன் வேறு கேட்டான்.

 

“அபிகேல் பத்தி சொல்லு”, என்று கேட்க… தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினாள்.

 

“அபியோட அப்பா ஐரிஷ்! ஆனா ரெண்டு ஜெனரேஷனா அமெரிக்கா தான். அபி அம்மா தமிழ். இப்போ ரெண்டு பேருமே இல்ல. பேபி அப்பிடியே அவ அம்மா ப்ளஸ் அவ தாத்தாவோட செராக்ஸ் காபி!

 

அபி சென்னையில தான் என்ஜினியரிங் முடிச்சது.  அம்மா இறந்த பிறகு நியூ ஜெர்சிலயே தங்கிட்டாங்க. அங்க தான் அவங்க வீடும் ஆஃபீசும்.

 

ஸ்டீவ்ன்னு ஒரு ஆள் கூட பழக்கம். இவங்க கூடா மூவ்-இன் பண்ணினான் போல. வயத்துல பிள்ள வந்ததும் இவங்க மேரேஜ் பண்ண கேட்கப்போய் அவனுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டான். இவங்க திரும்ப திரும்ப அதையே கேக்க அவன் வீட்டுல தங்கிறது குறைஞ்சுடுச்சு. முதல் மூனு மாசம் ஏதாவது வேலைன்னு சொல்லிட்டு போய்டுவான்.. அப்புறம் வீட்டுக்கு எப்போவாது வருவானாம்!

 

அப்புறம் ஒரு நாள் இவங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கும் போது இவன எதிர்வீட்டுல பார்த்திருக்காங்க.. அவன் பொண்டாட்டி பிள்ளைங்களோட!

 

பாவம் ண்ணா.. சின்ன பொண்ணு! நம்பி ஏமாந்துட்டா! அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ‘டிவொர்ஸ் போயிட்டு இருக்கு.. டிவொர்ஸ் ஆனதும் கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுவரைக்கும் வெளியில சொல்ல வேண்டாம்ன்னு’ கேட்டான் போல. அவன் பொறுமையா டிவொர்ஸ் ஆகி இவங்கட்ட வந்ததும் ‘நீ உன் மனைவிக்கும் உண்மையா இல்ல… உன்ன காதலிச்சவளுக்கும் உண்மையா இல்ல. இப்போ எனக்கு உன் மேல காதலும் இல்ல! நீ எனக்கும் என் வயத்தில் இருக்கக் குழந்தைக்கும் வேண்டாம்’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.” 

 

“அப்போ டெலிவரி எல்லாம்?”

 

“அவங்களுக்கு எல்லாமே மனோ தான். அவர் தான் ப்ரெக்னென்சி பூரா அவங்கள பாத்துகிட்டது. நடுவுல ஒரு மாசம் இண்டியா வந்தார்.. அப்போ அவரோட ஒரு ஃப்ரெண்டு அபி கூட தங்க வச்சுட்டு வந்தார். அவர் தான் பாப்பாவோட காட்-ஃபாதர்”

 

“அவங்க ரெண்டு பேருக்கும்…?”

 

“ஐயோ அண்ணா.. அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அவங்க ரெண்டு பேரும் கூட பிறக்கல அவ்வளவு தான். வேற ஒன்னும் இல்லண்ணா..”

 

“அப்பிடியா?”

 

“கண்டிப்பா ண்ணா”

 

“எப்படி சொல்லற?”

 

“மனோ.. மனோ பத்தி எனக்கு எல்லாம் தெரியும் ண்ணா..”

 

“எல்லாம் தெரியும்?”, புருவம் உயர்ந்தது.

 

அண்ணன் மோப்பம் பிடித்துவிட்டான் என்று தெரிந்தது. எப்படியும் கூறித்தானே ஆக வேண்டும்.

 

“அது வந்து… மனோ.. நான்.. அவர…”

 

“மனோவ எப்படி தெரியும்?”

 

“எங்க சென்டர் அவங்க அம்மாது”

 

“அவங்க கூடா தான் அபி தங்கி இருந்தாளா?”

 

“ம்ம்”

 

“சொல்லு… மனோ பத்தி”

 

“அபிகேலோட க்ளாஸ் மேட் ண்ணா. அங்க நியூ ஜெர்சில இவங்க வீட்டுல தங்கி வேலைக்குப் போனார். இப்போ ஜாப்-அ விட்டுட்டு எம்.ஐ.டி.-ல மாஸ்டர்ஸ் பண்றார். அப்பப்போ நேரம் கிடைக்கும் போது அப்பியையும் பாப்பாவையும் பாத்துட்டு போவார்”

 

“பாஸ்டன்ல இருந்து ஜெர்சிக்கு? இம்ம்! அது தான் முதலையே அவங்க ஃப்ரெண்ட்ஷிப் பத்தி சொல்லிட்டியே. உங்கள பத்தி சொல்லு”

 

“ண்ணா..”

 

“ம்ம் சொல்லு..”

 

“விரும்பறேண்ணா அவர. அப்போவே பிடிக்கும் ரெண்டு பேருக்கும், ஆனா இப்போ ரெண்டு மாசம் முன்ன அமெரிக்கா போகும் போது தான் பிடிச்சிருக்குன்னு சொன்னார். ரொம்ப நல்லவர் ண்ணா. பேசி பழகி பாரேன். உனக்கும் பிடிக்கும் ண்ணா.”

 

சிரித்தான். அவன் சிரிக்க, சின்ன சிட்டும் சிரித்தது. சிரிக்கும் அவன் வாய்க்குள் தளிர் விரல்கள் நுழைய.. அடுத்த இரண்டு நிமிடங்கள் குட்டி மகளோடு.

 

“அந்த நல்லவன் கிட்ட பேசணுமே..”. எதிர்பார்த்திருப்பான் போலும். இலகுவாய் பதில் பேசினான். அந்த நல்லவனை இவனுக்குப் பிடித்துப் போனதால் கூட இருக்கலாம். காரணம் இல்லாமலே நண்பனாய் அபியையும் மித்துவையும் தாங்கிக் கொள்வதால் இருக்கலாம்.

 

“அண்ணா.. அவங்க உன்ன விட பெரியவங்க!”, முகம் பார்க்காமலே உரைத்தாள்.

 

சிரித்தான். “நல்லவர்! போதுமா?”

 

“போண்ணா…”, முகத்தில் அவள் அனுமதியின்றி உஷ்ணம் பரவியது.

 

“இப்போ ஃபோன் போடவா ண்ணா..?”

 

“முகம் பாத்து பேசணும் அலர்”

 

மணி இங்கு இரண்டு… அங்கு விடிந்திருக்காதே! எழுப்ப மனமில்லை. பார்த்து இரண்டு நாட்கள் ஆகவே மாதவன் பெயரைச் சொல்லி ஒரு முறை பார்த்துவிடலாம் என்ற ஆசையில் அழைத்துவிட்டாள்.

 

அழைத்தாள். எடுக்க மாட்டான் என்று எண்ணி அழைத்தாள். எண்ணம் பொய்யாகி அவள் முகம் வண்ணம் கொள்ளும்படி அடுத்த நொடி எடுத்திருந்தான். அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தான்.

 

“விழி..”, இரண்டு நாட்களுக்குப் பின் பார்க்கிறான்.. ‘விழி’யில் உருக்கம் வழிந்தோடியது.

 

அவளின் “மனோ”விலும் அதே தவிப்பு.

 

குட்டி மகளோடு விளையாடிக் கொண்டிருந்த மாதவன் காதில் விழுந்தது. இவர்கள் அழைப்புக்குள் இருந்த ஆயிரம் ஆயிரம் ‘மிஸ் யூ’க்ள் மதவனுக்குப் புரிந்தது. 

 

“எடுக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்! ஏங்க மணி மூனரைக்கு முழுச்சிருக்கீங்க..? உடம்ப கெடுக்காம விட மாட்டீங்களா?”, செல்ல கோபம்.

 

“என் தூக்கத்த கெடுத்துவ இந்த கேள்வி கேக்கலாமா?”

 

“பச்..”

 

“பத்துக்கே படுத்துட்டேன் டா. அர மணி நேரம் முன்ன தான் எழுந்தேன் விழி. கொஞ்சம் வேலை டா.. ஆமா, என்ன இந்நேரம்?  அவன் பிரச்சினை எதுவும்..?”

 

“இல்ல.. இல்ல. அண்ணா பேசணுமாம்.”.

 

“மாதவனா? குடு”, என்றான்.

 

மாதவன் காதில் விழுந்தது. தன்னை பற்றி எல்லாம் தெரியும் போலும் என்று எண்ணிக் கொண்டான்.

 

“..ண்ணா..”, அவள் நீட்டவும், மடியில் வைத்திருந்த குழந்தையை வலது கை அணைத்திருக்க மற்றதைக்கொண்டு வாங்கினான்.

 

மித்ரா அவன் கையை பிடித்து இழுக்க மனோ பார்த்த முதல் முகமே  சங்கமித்ராவுடையது தான்.  திரையில் எபி! மாதவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது இவனை! ‘சார் தான் மனோவா..!’. மெல்லிதாய் இதழ் விரிந்தது.

 

குட்டியை பார்த்ததும் மனோ முகம் பிரகாசித்தது. தூக்கம் போன திசை தெரியவில்லை. “என் சங்கு பாப்பா.. என் பாப்பு குட்டி அங்க என்ன பண்றீங்க?”. மனோவின் கொஞ்சல் சத்தம் கேட்கவும் பிள்ளை துள்ளிக் குதிக்க ஆரம்பித்தாள். ஆ ஊ என்று சத்தமெழுப்ப ஆரம்பித்தாள். கைப்பேசி திரையைப் போட்டு அடித்து மாதவன் மேல் ஏறிக் கொண்டு எம்பிக் குதிக்கவுமே கைப்பேசி அலர்விழி கைக்கு மாறியது.

 

மாதவன் முகத்தைப் பார்த்தது குழந்தை. கைப்பேசியைப் பார்த்தாள். கைப்பேசி அலர்விழி கையில்.. இவளுக்கு எட்டவில்லை. மாமா வேண்டும். உணர்ச்சிகளைக் கொட்டத் தெரியவில்லை மழலைக்கு. மாதவன் முகத்தில் பிஞ்சு கைக்கொண்டு நான்கைந்து அடி விழுந்தது.

 

கைப்பேசியில் எபி சிரித்தான் அவன் சங்கு பாப்பாவைப் பார்த்து. “மாமாட்ட எப்போ வரீங்க சங்கு பாப்பு..”. காற்றில் முத்தங்கள் பறந்தது. பிள்ளை குதித்தது.

 

“ஆ ஊ”, என்றவள் மாதவன் கழுத்தில் தலை முட்டி கழுத்தை பொக்கை வாய் கொண்டு கடிக்க ஆரம்பித்தாள். அவள் மாமா வரவும் இல்லை தூக்கவும் இல்லை! பிள்ளை அழத் தயாரானாள்.

 

இருவருக்குமான உறவை உணர முடிந்தது. ஏன் என்றே தெரியாமல் குட்டி பொறாமை கூட எட்டிப் பார்த்தது மாதவனுக்கு.

 

அழைத்தற்காக இரண்டு வார்த்தையேனும் பேச வேண்டுமே.. 

 

“சாரி எபி. ரொம்ப அன்டைம். யோசிக்காம கால் பண்ணிட்டேன்.. எப்பிடி இருக்கீங்க?”

 

“நோ ப்ராப்ளெம். என் பட்டுக் குட்டிய பாக்க கிடைச்சதுக்கு உங்களுக்குத் தான் தாங்க்ஸ் சொல்லணும். என் குட்டிமா உங்கட்ட ஒட்டிக்கிட்டாளா.. நேத்தே ஏதோ ஃபங்ஷன் போரதா சொன்னா அபி.. இங்கையா இருக்கும்ன்னு நினைக்கல..”, என்று பேச்சு ஆரம்பித்தது.

 

பழைய நண்பர்கள் போல் தான் பேச்சு எல்லாம்! ‘என்ன டா நடக்குது’, விழி தான் விழி விரித்தாள். இவள் மனோ என்று தானே கூறினாள். ‘எபி’ எங்கிருந்து வந்தது? தெரியுமா இருவருக்கும்? மண்டை காய்ந்தது.

 

சங்கமித்ராவில் ஆரம்பித்து அபிகேயில் நோக்கி பேச்சு பிரயாணப் பட்டது. குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.  கால் மணி நேரத் தனிமை பேச்சின் பின் கைப்பேசி அமர்ந்திருந்த அலர்விழியிடம் கொடுக்கப்பட்டது.

 

சிறிது நேரம் பேசிய மனோ, “அப்புறம் நீ தனியா இருக்கும் போது காள் போடு விழி.. மிஸ் யூ விழி.”, என்றான். “ம்ம்..” என்றவள் கண்கள் நீர் கோர்த்தது.

 

“என்ன டி..”, அவள் வாடிய முகம் பார்க்கச் சகிக்காதவனாய்..

 

‘ம்கூம்’ என்று தலை அசைத்தாள்.

 

“இப்பிடி முகத்த வச்சிருந்தா அடுத்து உன் கூட பேசிற வரைக்கு எனக்கு வேலையே ஓடாது விழி..”. குரல் கெஞ்சியது.

 

“ஆ ம் ஓகே. பத்திரம்.” “லவ் யூ மனோ” சத்தமில்லாமல் காதலை கடத்தினாள்.

 

கண்டும் காணாமலும் நின்றிருந்தவனுக்குப் பெருமூச்சு வந்தது. இந்த காதல் கரை சேருமா? சாத்திய கூறுகள் கண்களில் தென்படவில்லை. இரு துருவங்களை அவனால் சேர்த்து வைக்க முடியுமா? எட்டா நிலவைப் பார்க்க விரும்பலாம். அதனுள் வாழ ஆசைப் படலாமா? பாரம் ஏறிக் கொண்டது. வீட்டை எதிர்த்து திருமணம்  செய்து கொண்டால் உண்டு! ஆனால் அலர்விழி அதைச் செய்வாளா? அவள் காதலுக்கு அவ்வளவு வலிமை உள்ளதா? அதன் ஆயுள் தான் என்ன?

 

அபிகேல் வந்தாள். மகளுக்காக கரம் நீட்டினாள். மகளை கொடுப்பதற்குப் பதில் நீட்டிய கரத்தைப் பிடிக்கத்தோன்றியது மாதவனுக்கு. காலை மண்டபத்திற்குள்  நுழைந்ததிலிருந்தே பார்ப்பவளை முதல் முறை பார்த்தான். அழகாக இருந்தாள். மகளின் சிரிப்பைப் போலவே இவளின் புன்னகையும் அவன் மனதை நிறைத்தது. அவன் இதழ் அழகாக விரிந்தது, அவனைவிட வயதில் மூத்தவளைக் கண்டு!

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!