பூ 17:
மறுநாள் எரிச்சலுடன் கிளம்பி கல்லூரி சென்றாள் துளசி. ஏனோ அன்று காலையில் இருந்து அவளுக்கு எதற்கெடுத்தாலும் கோபம், யாரைப் பார்த்தாலும் கோபம் வந்து கொண்டிருந்தது. வெளியே தெரியாத வெறுப்பு அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளின் வெறுப்பை இன்னும் கூட்டுவதைப் போல் அங்கே பிரவீனும்,விஜய்யும் சிரித்துக் கொண்டிருந்தனர் கேண்டீனில்.
“எதுக்கு மச்சான் உன் தங்கச்சி பத்ரகாளி மாதிரி முகத்தை வச்சுகிட்டு வரா..?”என்றான் விஜய்.
“அவ காதுல மட்டும் கேட்கணும். மவனே நீ செத்தடா..!” என்று பிரவீன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்தாள் துளசி. வந்தவள் அவர்களைப் பார்த்து தீயாக முறைத்து,
“நேத்து அந்த பெருசுகிட்ட என்னடா சொல்லி வச்சிங்க…?” என்று எறிந்து விழ,
“தாத்தாவை அப்படி சொல்லாதன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது..?” என்றான் விஜய் அழுத்தமான பார்வையுடன்.
“நீங்க கொஞ்சம் அடங்குங்க சார்..! அவர் உங்களுக்கு மட்டும் தாத்தா இல்லை. எனக்கும் தாத்தா தான். அவர நான் எப்படி வேணுமின்னாலும் பேசுவேன்..!” என்றாள் திமிராய்.
“இந்த திமிர் தாண்டி உனக்கு..! இது எப்பவும் குறையப் போறதில்லை. கொஞ்சமாவது பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்கியா..? எவ்வளவு தைரியம் இருந்தா குடிக்க பீர் கேட்டிருப்ப..? அந்த கண்ணன் உனக்கு உடந்தையா..? வரட்டும் அவன் வச்சுக்கிறேன்..!” என்று விஜய் வார்த்தைகளை கடித்துத் துப்ப,
“ஆமா, நான் கேட்ட உடனே நீயும் வாங்கிக் குடுத்துட்ட பாரு. ஹாஸ்ட்டல் வார்டுகிட்ட என்னங்கடா சொல்லி வச்சிங்க..? அந்தம்மா நான் எதைப் பண்ணாலும் நம்ப மாட்டேங்குது..!” என்றாள்.
“சிம்பிள்..! உண்மையை சொன்னோம்..!” என்றான் விஜய்.
“நான் பீர் அடிப்பேன்..! முடிஞ்சா சரக்கு கூட அடிப்பேன்..! அது எதுக்குடா உங்களுக்கு..? நீங்க பெரிய ஒழுங்கா..? நீங்க அடிக்கலை? ஏன் ஆம்பளைங்க தான் இதையெல்லாம் குடிக்கனுமா..?” என்றாள் மூச்சு வாங்க.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு..? பீர் வாங்கித் தரலைன்னு கோபமா..? இல்லை உன்னை விட்டு நாங்க மட்டும் குடிச்சோம்ன்னு கோபமா..?” என்றான் விஜய், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ரெண்டும் இல்லை..! இதை ஏண்டா பெரிசுகிட்ட சொன்னிங்க..? என் காதுல ரத்தம் ஒன்னு தான் வரலை..! அப்படி ஒரு பேச்சு..!” என்று கடுப்புடன் சொன்னாள் துளசி.
“நாங்க குடிச்சதையும் நான் தாத்தாகிட்ட சொல்லிட்டேன். இனிமேல் அதை சொல்லி எங்களை நீ பிளாக் மெயில் பண்ண முடியாது..!” என்றான் விஜய்.
“நீயெல்லாம் ஒரு அண்ணனா..? அவன் பேசிட்டே இருக்கான், நீ கேட்டுட்டே இருக்க..?” என்று பிரவீன் பக்கம் திரும்ப, பிரவீன் முழித்துக் கொண்டு நின்றான்.
“சுத்தம்..! உன் ரியாக்ஷன் இப்படித் தான் இருக்கும்ன்னு தெரிஞ்சும் உன்கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்..? இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் விஜய், இனி என் விஷயத்துல தலையிடாத..!” என்றாள் துளசி.
“உனக்குத் தெரியாம துளசின்னு பேரு வச்சுட்டாங்க..! ஆனா பேசுறது எல்லாம் பீரு, மோருன்னு தான்..!” என்றான் விஜய்.
“இருந்துட்டு போகட்டும். அதைப் பத்தி நான் கவலைப் படனும், என்னை கட்டிக்கப் போறவன் கவலைப் படனும். நீ ஏன் கவலைப் படுற..?” என்றாள் நக்கலாய்.
“எவன் உன்கிட்ட சிக்கி சீரழிய காத்திருக்கானோ..? அந்த இளிச்சவாப் பயலை நினைச்சாத்தான் எனக்கு கண்ணு வேர்க்குது..!” என்று விஜய் சிரிக்காமல் சொல்ல, துளசிக்கு ஒரு மாதிரியாகிப் போனது. பதில் ஏதும் சொல்லாமல், பட்டென்று சென்று விட்டாள்.
“என்னடா விஜய்..? அவ என்ன குடிக்கவா பீர் கேட்டா..? நம்ம சரக்கு அடிக்கக் கூடாதுன்னு தான், அவ வம்பு இழுத்ததே..!” என்றான் பிரவீன்.
“அது எனக்குத் தெரியுமே..? அவளுக்கு அந்த ஸ்மெல் கூட அலர்ஜின்னு எனக்குத் தெரியாதா..?”
“அப்பறம் ஏண்டா, வீணா அவ வாயைக் கிளர்ற..? அவ முகமே செத்துப் போச்சு..!” என்று பிரவீன் குறை பட,
“விடுடா..! இதெல்லாம் என்ன புதுசா..? மத்தியானம் விஜய் சோறு வாங்கிக் குடுன்னு இங்க தான் வந்து நிப்பா..! அப்ப பார்த்துக்கலாம்..!” என்று விஜய் சிரிப்புடன் சொல்ல, பிரவீன் தான் தலையில் அடித்துக் கொண்டான்.
அங்கே கனகவேல் வீட்டில்…
“என்னங்க மறுபடியும் எப்போ சென்னை கிளம்புறிங்க..?” என்று ராதிகா கேட்டுக் கொண்டிருக்க,
“என் விஷயம்..?” என்றார் கனகவேல்.
“இல்லை..! பாப்பாவை பார்க்க வரணும்..!” என்றார் ராதிகா.
“ஆமா, பாப்பா..! இன்னும் பாப்பான்னு சொல்லிக்கிட்டு இரு. படிப்புளையும் மந்தம், ஒரு கூறும் இல்லை. எனக்குன்னு வந்து பிறந்திருக்கு பாரு..!” என்று கனகவேல் சலித்துக் கொண்டார்.
“ஏங்க..? அதுக்காக பெத்த பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா..! அவ பத்திர மாத்து தங்கம். சுட்டு போட்டாலும் நமக்கு அந்த குணம் வராது..!” என்றார் ராதிகா.
“அப்படி தங்கமா இருந்தா வேலைக்கு ஆகாது. என்னோட ரெண்டாவது பொண்ணு படிச்சு முடிச்சுட்டு எப்படி வரப் போறான்னு பாரு..! அப்படியே எல்லாரும் அசந்து போகணும், அவ திறமையைப் பார்த்து. என் தொழில் வாரிசே அவதாண்டி..!” என்று கனகவேல் திவ்யாவைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
“கிளம்பலாமா மாமா..?” என்றபடி வந்தான் விமல்.
விமலைப் பார்த்த கனகவேலுக்கு, மனதிற்குள் ஒரு எண்ணம் வந்து போனது. ஆனால் அதை அப்படியே மாற்றிக் கொண்டார். அவரின் வலதுகை, இடதுகை எல்லாமே அவன் தான். ஒரு டிகிரியை மட்டும் முடித்தவன், தன் மாமனுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
“நீ இன்னும் படிச்சிருக்கலாம் விமல்..! இப்படி என்கூடவே வச்சிருந்து, உன்னை வீணாக்கிப் போட்டேனோ அப்படின்னு தோணுது..?” என்று கனகவேல் சொல்ல,
“என்ன மாமா..? இப்படி எல்லாம் பேசுறிங்க..? அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் எவ்வளவு படிச்சாலும், உங்ககூட தான் இருப்பேன். அதிகம் படிச்சு நான் என்னத்தை கிழிக்கப் போறேன்..?” என்றான் விமல்.
“நம்ம வந்தனாவை, சிஎம் அவரோட அக்கா பையனுக்கு கல்யாணம் பண்ண கேட்குறார். நான் ஒரு பதிலும் சொல்லலை. என்ன பண்றது ராதிகா..?” என்றார் கனகவேல்.
“ஜாதகத்தை குடுக்க சொல்லுங்க. எல்லாம் பொருந்தி வந்தா, முடிச்சு வச்சுடுவோம்..! இன்னும் ஒரு வருசம் தான்… அவளுக்கும் படிப்பு முடிஞ்சுடும்..!” என்றார் ராதிகா.
“அப்ப சரி..! நான் அவர்கிட்ட பேசுறேன்..!” என்று சொல்லிவிட்டு கனகவேல் கிளம்ப, அதுவரை அவர்களின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் இருந்த விமலுக்கு, மனதிற்குள் எரிச்சல் மண்டியது. அவன் மனதில் என்ன இருக்கென்று யாருக்குத் தெரியும்?
இவர்கள் வந்தனாவிற்கு வரன் பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருக்க, அங்கே வந்தனாவோ மனதிற்குள் விஜய் மீதான காதலுக்கு நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டிருந்தாள். அதற்கு தகுந்தார் போல், விஜய்யுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பாக, ஒரு சந்தர்ப்பம் தானாக அமைந்தது வந்தனாவிற்கு.
அன்று காலேஜில், காலேஜ்டே கொண்டாடுவதற்காக, எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்தனர். நிறைய கலாட்டா, அரட்டை என்று ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. விஜய், பிரவீனுக்கு அது இறுதி வருடம் என்பதால், கொஞ்சம் சோகமாகத் தான் இருந்தனர். கண்ணனைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
“இப்போ ஏண்டா உம்முன்னு இருக்க..?” என்று பிரவீன் கேட்க,
“ஏண்டா, எல்லாரும் கேர்ல்ஸ் டீமையும் சேர்த்து தான் குரூப் டான்ஸ் ஆடுறாங்க. நீங்க மட்டும் ஏண்டா பசங்களையா குரூப்ல சேர்த்திருக்கிங்க..?” என்றான் சோகமாய்.
“அதை என்னைக்கு வந்து கேட்குறான் பாரு மாப்பிள்ளை..!” என்று பிரவீன் சிரிக்க,
“ஏண்டா சிரிக்க மாட்டிங்க. என்னோட கஷ்ட்டம் எனக்கு. ஜூனியர் பசங்க கூட பொண்ணுங்க கூடத்தான் ஜோடியா ஆடுறானுக. நம்மல்லாம் சூப்பர் சீனியர் லிஸ்ட்ல வருவோம்டா..! பொண்ணுங்களை லவ் பண்ணத்தான் குடுத்து வைக்கலை. டான்ஸ் ஆடக் கூட குடுத்து வைக்கலையேடா..!” என்று புலம்பித் தள்ளினான்.
“விடு மச்சான்..! எப்படியும் இன்னும் ஒரு வாரம் செலிப்ரேஷன் இருக்கும். உனக்குன்னு ஒரு பொண்ணு கிடைப்பா பங்கு..!” என்றான்.
“இதைத்தாண்டா, நீயும் யுஜில இருந்து சொல்ற..! ஆனா, அந்த நல்ல காரியம் மட்டும் நடக்கவே மாட்டேங்குது..!” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அடுத்து டான்ஸ் ஷோவிற்கான அழைப்பு வர, வேகமாக ஸ்டேஜைப் பார்த்தனர் மூவரும்.
“யுஜி..! தேர்ட் இயர், கம்ப்யுட்டர் சயின்ஸ் டிப்பார்ட்மென்ட்..!” என்று அங்கே ஒரு குரல் சொல்லிக் கொண்டிருக்க, வந்தனா, ப்ரீத்தியுடன் அணியாக வந்தாள்.
“காஸ்ட்யூம் பார்த்தா, பழைய சாங் மாதிரி தெரியுது மச்சான்..!” என்று கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் எண்ணியது போல,
“ராதை மனதில், ராதை மனதில் என்ன ரகசியமோ..!
கண் ரெண்டும் தந்தியடிக்க,கண்ணா வா கண்டு பிடிக்க..!”
என்ற பாடல் வரிகளுக்கு, அழகாக அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தாள் வந்தனா. நிஜ ராதையாகவே தெரிந்தாள் பலரின் கண்களுக்கு.
“ஹேய்..! இந்த பொண்ணு, அன்னைக்கு ஹால்ல அழுத பொண்ணுடா..!” என்று விஜய் ஆச்சர்யமாய் சொல்ல,
“மச்சான் ரொம்ப கவனிச்சிருக்க போல… சரியா, நியாபகமெல்லாம் வச்சிருக்க..?” என்று கண்ணன் கிண்டல் அடித்துக் கொண்டிருக்க, அங்கே வந்தனா அழகாக ஆடிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் காட்டிய நளினமும், நயமும் அனைவரையும் கட்டிப் போட, நடனம் முடிந்த அடுத்த நிமிடம் அப்படி ஒரு கை தட்டல் கிடைத்தது.
“செம்ம டான்ஸ் மச்சான்..!” என்று விஜய் சொல்ல,
“டேய்..! கடுப்ப கிள்ளப்பாத..? இதெல்லாம் நான் ஸ்கூல் டேய்ஸ்லயே பார்த்தாச்சு. இந்த பொண்ணுங்க ஏண்டா இப்படியே இருக்காங்க..? ஒன்னு பரத நாட்டியம்.. இல்ல அதை விட்டா, இப்படி ஒரு பாட்டு..ராதை,கோதைன்னுட்டு..!” என்ற கண்ணனுக்கு எரிச்சலாக வந்தது.
“கண்ணனா இருந்துகிட்டு நீயே இப்படி சொல்லலாமா ராசா..!” என்ற விஜய்க்கு, அவனின் முகப் போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த சிரிப்பு, அடுத்த அறிவிப்பு வரும் வரை தான்.
“மச்சான், அடுத்து நம்ம துளசிடா..!” என்று பிரவீனிடம் சொல்ல, துளசியைப் பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள்.
“என்னடா..? உன் தங்கச்சி டூயட் சாங் பெர்பார்ம் பண்றாளா..? என்ன ட்ரஸ்டா இது…?” என்று விஜய் கேட்க, பிரவீனும் அப்போது தான் நன்றாகப் பார்த்தான். அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல.
“விளங்கிடும்..! டிரஸ்சே இந்த லட்சணத்துல இருக்கு.பாட்டு எந்த லட்சணத்துல இருக்குமோ..!” என்று விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அப்பன் பண்ண தப்புல, ஆத்தா பெத்த வெத்தல,
வெளஞ்சிருக்குடா, வெளஞ்சு நனஞ்சிருக்குடா…
அடி உன்ன சொல்லி தப்பில்லை,வயசு பொண்ணு மப்புல,
மாஞ்சிருக்கடி…மாஞ்சு காஞ்சிருக்கடி..!” பாட்டுக்கு அவள் ஆடிக் கொண்டிருந்தாள்.
“உன் தங்கச்சிக்கு வேற பாட்டே கிடைக்கலையாடா..?” என்று விஜய் நொந்து கொள்ள, அந்த பாட்டைக் கேட்ட மாணவர்கள் எல்லாம்,
“விஷ்வா..விஷ்வா..!” என்று கோஷம் போட்டு கத்திக் கொண்டிருந்தனர். சிலர் கீழே நின்று கொண்டு ஆடிக் கொண்டிருக்க, அடுத்த நிமிடம் பாடல் மாறியது.
“காத்தடிக்குது காத்தடிக்குது…காசி மேட்டு காத்தடிக்குது,
எங்க திசை பார்த்தடிக்குது, ஏழை சனம் கூத்தடிக்குது” என்ற பாடலுக்கு சரி குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
“இவளை..!!!!” என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான் விஜய்.
“இப்ப எதுக்குடா கோவப்படுற..? இதாண்டா செலிப்ரேஷன். பாரு, எத்தனை பேர் அவளைப் பார்த்து ஆடிட்டு இருக்காங்கன்னு. அதை விட்டுட்டு, ராதை,கோதைன்னு ஆடுற பொண்ணுங்களைத் தான் உனக்கு பிடிக்குது..! நான் எப்பவும் துளசி கட்சி தான்ப்பா..!” என்றான் கண்ணன்.
“டேய் பிரவீன்..! வீடியோ எடுடா..! இன்னைக்கு செத்தா தாத்தாகிட்ட..!” என்று விஜய் சொல்ல,
“வேண்டாம் விஜய்..! அவளுக்கு மட்டும் தெரிஞ்சது, நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா..?” என்று பிரவீன் சொல்ல சொல்ல,
விஜய்யோ, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அவனை ஆடிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்த துளசி, அவன் வீடியோ எடுப்பதையும் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். அவள் ஆடிக் கொண்டே பல்லைக் கடிக்க, இவனும் கவனித்து விட்டான்.
‘இப்ப என்ன பண்ணுவ..?” என்று செய்கையில் சிரித்துக் கொண்டே கேட்க,
“கொன்னுடுவேண்டா உன்னை..!” என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் துளசி.
அந்த வாரம் முழுவதும், பாட்டு, நடனம், விளையாட்டு, அந்தந்த துறை சார்ந்த போட்டிகள் என்று அந்த கல்லூரியே கலை கட்டிக் கொண்டிருந்தது. வந்தனாவும், எப்படியோ விஜய்யுடன் பேசும் அளவிற்கு தேறியிருந்தாள்.
விஜய் ஆடிய டான்ஸில், காலேஜில் இருந்த பாதி பெண்கள் மயங்கியிருந்தனர். இதில் ஆடும் போது, கண்ணனுக்கு வேட்டி அவிழ்ந்தது எல்லாம் தனிக் கதை.
“என்ன சொல்லு துளசி… உன்னோட டான்ஸ் பெப்பர் மாதிரின்னா… விஜய் டான்ஸ் அப்படியே சில்லி மாதிரி.. செம்ம..! என்னா டாக்கிங்..என்னா வாக்கிங்..!” என்று ரோஸ்லின் சொல்ல, அவளை முறைத்தாள் துளசி.
“நான் சொல்லலை..! காலேஜே சொல்லுது. பாதி பேர் அவரைத்தான் சைட் அடிக்கிறாங்க. நான் தான் அண்ணான்னு சொல்லிட்டேனே..?” என்று அவள் சோகமாய் சொல்ல,
“அதுல உனக்கு ரொம்ப வருத்தம் போல..!” என்றாள் துளசி எரிச்சலுடன்.
“இருக்காதா பின்ன..?எவ்வளவு டேலன்ட் இருந்தாலும், அவர் அதை வெளிய காட்டிக்கிறதே இல்லை துளசி. ஒரு பந்தா இல்லை, திமிர் இல்லை.. விஜய் அண்ணா ஒரு சூப்பர் மேன்..! அதான் ஒரு மான் குட்டி அவர் பின்னாடியே சுத்துது..!” என்றாள் ரோஸ்லின்.
“மான் குட்டியா..? அது யாருடி..?” என்று கேட்டாள் துளசி.
“எல்லாம் நமக்கு சீனியர் தான். நம்ம டிப்பார்ட்மென்ட் தான். அன்னைக்கு உனக்கு முன்னாடி ஒரு டான்ஸ் பெர்பார்மன்ஸ் போச்சே…! அந்த பொண்ணுதான், பேரு வந்தனா. பார்க்க செம்ம பிகர். விஜய் அண்ணா மேல அந்த பொண்ணுக்கு ஒரு கண்ணு. இவருக்கும் அப்படித்தான் இருக்கும் போல..!” என்றாள் ரோஸ்லின்.
“உனக்கெப்படித் தெரியும்..?” என்றாள் துளசி.
“நாங்க தான் பார்த்தோம்ல. லவ் பண்றவங்க மூஞ்சி எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியாதா..?” என்றாள்.
ரோஸ்லின் சாதரணமாக சொல்ல, துளசியின் முகம் யோசனைக்குப் போனது. அதற்கு அடுத்து வந்த நாட்களில் வந்தனாவைக் கண்காணிக்கத் தொடங்கினாள் துளசி. அவளும் ஹாஸ்ட்டல் என்பதால் அவளுக்கு வசதியாகிப் போனது.
ரோஸ்லின் சொன்ன எல்லாமே அச்சுப் பிசகாமல் இருந்தது. ஒரு நாள் அவளின் அறைக்கே சென்று விட்டாள் துளசி.
“வந்தனா எங்க..?” என்றாள் பிரீத்தியிடம்.
“அவ குளிக்கப் போயிருக்கா..!” என்று ப்ரீத்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து சென்றிருந்தாள் துளசி. அவள் அப்படிப் போனது ப்ரீத்திக்குப் பிடிக்கவில்லை. சிறிது நேரத்தில் வந்தனா வந்து விட,
“என்னடி..? கோவமா இருக்க மாதிரி இருக்கு..?” என்றாள் ப்ரீத்தியிடம்.
“சிம்ரன்..! உன்னைத் தேடி அந்த துளசி பொண்ணு வந்துட்டு போனா..? சீனியருங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லை. என்னா தெனாவெட்டா பேசுது அந்த பொண்ணு.!” என்று பிரீத்தி பேசிக் கொண்டிருக்க, வந்தனாவின் முகம் யோசனைக்கு தாவியது.
“எதுக்காக வந்திருப்பா..? என்னை எதுவும் விசாரிக்க வந்திருப்பாளோ..? ரெண்டு நாளா என் கண்ல அடிக்கடி படுறாளே..?” என்று வந்தனா யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சிம்ரன்..? நான் பேசிட்டு இருக்கேன்..! நீ அமைதியா இருக்க..?”
“ஒண்ணுமில்லை ப்ரீத்தி..! திரும்ப வந்தா பார்த்துக்கலாம்..!” என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள் வந்தனா. ஆனால் அதற்கு பிறகு துளசி வரவேயில்லை.
வந்தனாவும் அவளைத் தேடிப் போகவில்லை. அதற்கு அடுத்து வந்த நாட்களில் விஜய்யின் குரூப்பில் வந்தனாவும் ஒரு அங்கமாகிப் போனாள்.
“எப்படி சிம்ரன் இதெல்லாம். நீயா இது..? இல்லை வந்தனா 2.0 வா..?” என்று ப்ரீத்தி கேட்கும் அளவிற்கு.
வந்தனா, விஜய் அருகில் நெருங்க நெருங்க, துளசியோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தாள். இப்போதெல்லாம் அவள் விஜய்யை சீண்டுவதே இல்லை. சும்மாவே அவளுக்கும், அவனுக்கும் ஆகாது என்பதால், துளசியின் இந்த மாற்றம் விஜய்க்கு தெரியாமலேயே போனது.
“உன் தங்கச்சி திருந்திட்டாளா மச்சான்..? ஆனா, அவ தொந்தரவு இல்லாம இப்பத்தான் நல்லா இருக்கு..!” என்று விஜய் சொல்லிக் கொண்டிருக்க, அத்தி பூத்தார் போல், அவர்களைப் பார்க்க வந்த துளசியின் காதில் அப்படியே விழுந்து வைத்தது. கோபத்தில் அவள் அப்படியே திரும்பிப் போக முற்பட,
“என்ன துளசி..? வந்துட்டு பார்க்காம கூடப் போற..?” என்று கண்ணன் கேட்கவும் தான், இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
“என்ன துளசி..?” என்றான் பிரவீன்.
“ஈவ்னிங் எத்தனை மணிக்குக் கிளம்பணும்..? அதைக் கேட்கத்தான் வந்தேன்..!” என்றாள்.
“கார் நாலு மணிக்கெல்லாம் வந்துடும். நாம அஞ்சு மணிக்கு கிளம்பலாம்..! கண்ணனும் நம்ப கூடத் தான் வரான்..!” என்றான் பிரவீன்.
“ஓகே..!” என்றவள் எதுவும் பேசாமல் திரும்பிப் போக, அவளின் அமைதியை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். குலதெய்வக் கோவிலுக்கு செல்ல வேண்டி மூவரும் விடுப்பு எடுத்திருந்தனர். பிரவீன், கண்ணனையும் அவர்களுடன் அழைக்க, அவனும் விடுப்பு எடுத்திருந்தான்.
“நீயும் வாடி ரோசு..!” என்றாள் துளசி.
“அம்மா தாயே..! ஆளைவிடு. உங்க தாத்தாவைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு. எப்பப் பார்த்தாலும் கண்ணை உருட்டி முறைச்சுகிட்டே இருப்பார். அதுமட்டுமில்லாம, செமஸ்டர் வேற வந்திடுச்சுடி. நீ படிப்ஸ்..அதனால கவலை இல்ல. நான் அப்படியா..? நீ போயிட்டு வா..!” என்று ஜகா வாங்கியிருந்தாள் ரோஸ்லின்.
விஜய்யும், பிரவீனும் காரில் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, வேண்டுமென்றே மெதுவாக வந்தாள் துளசி.
“இந்த ஹாஸ்ட்டல்ல இருந்து வர இவ்வளவு நேரமா துளசி..?” என்ற விஜய்யின் கேள்விக்கு, அவளின் முறைப்பு மட்டுமே பதிலாய் கிடைத்தது. அவர்கள் கிளம்பும் நேரம் சரியாக வந்தாள் வந்தனா.
“ஊருக்கு கிளம்பியாச்சா..?” என்றாள் விஜய்யிடம்.
“ஆமா, வந்தனா..! ரெண்டு நாள் தான் வந்துடுவோம்..!” என்றான் விஜய்.
“ரெண்டு நாள் பார்க்காம இருக்கனுமா..? கொஞ்சம் கஷ்ட்டம் தான்..!” என்றவளின் முகத்தில் கவலையின் சாயல். இந்த பேச்செல்லாம் காரின் உள்ளே இருந்த துளசிக்குக் கேட்டாலும், அவள் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல் அமைதியாக இருந்து விட்டாள்.
“உங்களையெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்..!” என்று வந்தனா சொல்ல,
“நீயும் வேணும்ன்னா கூட வாயேன்..!” என்றான் கண்ணன்.
‘நானும் வந்தா அவ்வளவு தான். எங்கப்பா காதுக்கு விஷயம் போய்டும்..’ என்று மனதிற்குள் எண்ணியவள்,
“இல்ல கண்ணா..! நீங்க போயிட்டு வாங்க..! ரெண்டு நாள் தானே..!” என்றாள்.
“ஓகே..! அப்ப நாங்க ஊருக்கு போயிட்டு கால் பண்றோம் சிம்ரன்..!” என்றான் விஜய்.
“விஜய் நீங்களுமா..?” என்றாள் வந்தனா சிரிப்புடன்.
“எஸ்..! ப்ரீத்தி வச்ச பேரு நல்லாத்தான் இருக்கு. ஒழுங்கா படி சிம்ரன்…!” என்று விஜய் அதட்ட,
“கண்டிப்பா..! பாய்..!” என்று அவள் சொல்ல,
“அண்ணா..! வண்டியை எடுங்க டைம் ஆகுது..!” என்றாள் துளசி பட்டென்று. அவள் அப்படி சொல்லவும் வந்தனாவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது.
சிறிது தூரம் சென்ற பின்,
“உனக்கு நல்லவிதமா பேசவே வராதா துளசி. இப்போ எதுக்கு வந்தனாகிட்ட முகத்துல அடிச்ச மாதிரி பேசுன..?” என்றான் விஜய்.
“நான் எங்க அப்படி பேசினேன்? காரை எடுங்கன்னு தான் சொன்னேன். இதுல என்ன தப்பைக் கண்டு பிடிச்சிங்க..?” என்றாள்.
“ஐயோ..! துளசிக்கு மரியாதையா கூட பேச வருமா..?” என்று கண்ணன் கலாய்க்க,
“அடிச்சு, மூஞ்சி கீஞ்சி எல்லாம் பேத்துடுவேன். ஒழுங்கா இருந்துக்க..!” என்றவள், அதற்கு பிறகு அவர்கள் யாரிடமும் எந்த பேச்சையும் வைத்துக் கொள்ளவில்லை.
“வந்தனாவைப் பத்தி என்ன நினைக்கிற பிரவீன்..?” என்றான் விஜய்.
“ஏண்டா கேட்கிற..? நிஜமாவே ரொம்ப நல்ல பொண்ணு விஜய். ரொம்ப இன்னசன்ட்…!” என்றான் பிரவீன்.
“ஆமா மச்சான்..! ரொம்ப ஹோம்லி..!கொஞ்சம் பயந்த சுபாவம். மத்தபடி ரொம்ப அருமையான பொண்ணு..!” என்று கண்ணனும் தன் பங்குக்கு சொல்ல, துளசியோ இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் வந்தாள்.
“வந்தனா, உன்னை லவ் பண்றான்னு தோணுது விஜய்..!” என்றான் பிரவீன்.
“தெரியும் பிரவீன்..!” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான் விஜய். ஊர் சென்று சேரும் வரை துளசி அமைதியாக வர, அவளைப் பார்த்த கண்ணனுக்கு ஏதோ வித்தியாசமாகப் பட்டது. இருந்தாலும் மனதிற்குள் வைத்துக் கொண்டான்.
ஊர் சென்று, கோவிலுக்கெல்லாம் போய்விட்டு வந்த பிறகும், துளசி விஜய்யுடன் பேசவே இல்லை. முதலில் சாதரணமாக எடுத்துக்கொண்ட விஜய்க்கு, கொஞ்சம் லேட்டாகத் தான் பல்ப் எரிந்தது.
“என்னாச்சு துளசி..? ஏன் என்கிட்டே பேசவே மாட்டேன்கிற?” என்றான்.
“என்ன பேச சொல்ற..? உனக்கு எங்க திரும்புனாலும், சிம்ரனா தெரியும் போது, நான் வந்து என்னத்தை பேச..?” என்றாள்.
“அடிப்பாவி..! இதெல்லாம் ஒரு காரணமா..? இன்னும் அந்த பொஸிசிவ்நஸ் உன்னை விட்டுப் போகலையா..?” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை..!” என்றாள் முகத்தைத் தூக்கிக் கொண்டு.
“சின்ன பிள்ளை மாதிரி பிகேவ் பண்ணாத துளசி. கொஞ்சமாவது பெரிய பொண்ணு மாதிரி நடந்துக்க. இவ்வளவு பிடிவாதம் ஆகாது..!” என்றான் விஜய்.
அவனை முறைத்தவள்,ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சென்று விட்டாள்.