“நீ கொஞ்சம் பிடி குடுத்துருந்தா, அந்த லால்குடி வரனையே முடிச்சு, இந்நேரம் நான் பேரன், பேத்தி கூட பார்த்துருப்பேன்! எல்லாம் உன்னால தான்டா!” என கோவமாய் கத்தினார் விஜயா.
“நான் என்னம்மா பண்ணட்டும்? எனக்கு ஒண்ணுமே தோணலையே?”
“என்ன தோணனும்?”
“கல்யாணம் பண்ணனும்ன்னு தோணனும்… ஏனோ எனக்கு அந்த மாதிரி எண்ணம் வரவே இல்லை யாரை பார்த்தும்!” சோகம் போல சொன்னான் வீரா.
“இப்படி சொல்லி சொல்லியே அஞ்சு கழுதை வயசாச்சு உனக்கு”
“ம்மா?” என வேகமாய் வந்தவன், “ஒரு கழுதைக்கு எத்தனை வயசும்மா?” என்றான் முக்கியமாய் தோன்றிய சந்தேகத்தில்.
அதில் இன்னும் கடுப்பானவர், “ம்ம்ம்? ஏழு வயசு” என்று சொல்ல, சமத்தாக, “அப்படியா?” என கேட்டுக்கொண்டான்.
“ப்ச்! போடா” விஜயாவின் சலிப்பு அவனது ஹாஸ்யத்தை அவர் ரசிக்கவில்லை என சொன்னது.
உடனே தன் விளையாட்டுத்தனத்தை கைவிட்டவன், அவரை நெருங்கி கரத்தை பற்றிக்கொண்டு,
“ம்மா? ஒரு பொண்ணை பார்த்து விரும்பி ஆசைப்பட்டு கட்டிக்கனும்ன்னு நினைக்குறேன்! தப்பா?” என்றான்.
“தப்பே இல்லடா! ஆனா, அரேஞ் மேரேஜ்ல இதெல்லாம் நடக்க நாளாகும்! பார்த்த உடனே மனசுக்கு பிடிக்கணும்ன்னு ஏன் நினைக்குற?” என்றார்.
“லவ்வு தான் வரலை! அட்லீஸ்ட் ஒரு பொண்ணை பார்த்து கல்யாண ஆசையாது வரணும்ன்னு நினைச்சேன்! உங்களுக்கு பிடிக்கலன்னா சரிம்மா! நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி பாருங்க, நான் கல்யாணம் செஞ்சுக்குறேன்” என்றான் மெல்லிய குரலில்.
“பிடிக்காத வரனுக்கு ஓகே சொல்லுன்னு நான் கேட்கல! இது சரியில்லை, அது சரியில்லைன்னு நொட்டை சொல்லாம இரு! அது போதும்” என்றார்.
உள்ளே போன குரலில், “ம்ம்ம்” என்றான்.
தொங்கிப்போன அவன் முகத்தை பார்த்தவர், “அது எப்படிடா இத்தனை நாளுக்கு ஒரு பொண்ணு கூட பிடிக்காம போச்சு?” என்றார் ஆதங்கம் போல!
“பிடிக்காம இல்லம்மா! பிடிக்கத்தான் செஞ்சுது! ஆனா, இந்த ‘ஜ்ரேமே சைஆ’ தான் வரலை!”
“அது என்ன சேமியா டா?”
“ஹாஹா சேமியா இல்லம்மா! ‘மேரேஜ்… ஆசை'” என்றதும்,
“போடா லூசுபயலே!” என எழுந்துக்கொண்டார் விஜயா.
“ம்மா? என்னமா சீரியசா சொல்றேன், எழுந்து போறீங்க?” அவரிடம் கேட்டுக்கொண்டே பின்னால் போனான் வீரா.
“பின்ன என்ன? என்னவோ இப்போதான் இளமை ஊஞ்சலாடுற மாறி சேமியா நூடுல்ஸ்ன்னு பேசிக்கிட்டு நிக்குற? விடலை பையன்னு நினைப்பா உனக்கு? உன்கூட படிச்சவனுக்கு எல்லாம் ஸ்கூல் போற வயசுல புள்ள இருக்கு!”
“ம்மா? நீங்க என்னவோ என்னை ‘தொண்டு கிழவன்’ ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க?” என்றதும்,
“இன்னும் கொஞ்ச நாள் இதே மாறி சேமியா, சௌமியான்னு பேசிக்கிட்டு இருந்தா அதான் நடக்கும்” என்றதோடு பூஜை அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
சில நிமிடங்கள் அங்கேயே நின்றவன், இடப்பக்கம் திரும்ப, அங்கிருந்த முழு நீள கண்ணாடியில் தன்னை ஆராய்ந்துப்பார்த்தான்.
‘அவ்ளோ வயசாகிடுச்சா என்ன?’
மனதின் என்னமோ? அன்னையின் பேச்சோ? அவனை வயது கூடியவனாய் காட்டித்தொலைத்தது.
பெருமூச்சுடன் இடுப்பில் கைவைத்து நின்றவன், பின்னே சமையல் முடித்து அன்னையுடன் சேர்ந்து காலை உணவை முடித்து, அவருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்துவிட்டு,
“ம்மா! நான் பங்க்குக்கு கிளம்புறேன்! நீங்க கதவை பூட்டிக்கோங்க” என்று சொல்ல, அவன் பைக்கை கிளப்பிக்கொண்டு வாசல் தாண்டி செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்த விஜயா, கதவை சாற்றிவிட்டு தரகரை ஒருவழி பார்க்க தன் மொபைலில் அவர் எண்ணை அழுத்தினார்.
அதிக மக்கள் புழக்கம் இருக்கும் பேருந்து நிலையத்தின் வெகு அருகிலேயே இருந்தது அவனது பெட்ரோல் பங்க். காலை நேர பரபரப்புக்கு பஞ்சமின்றி வாகனங்கள் வருவதும் போவதுமாய் இருக்க, இவனது பைக்கை கண்டதுமே ஊழியர்களின் வேலை வேகமெடுத்தது.
நேராக அலுவல் அறைக்கு சென்றவன், தனது இருக்கையில் சென்று அமர, “குட் மார்னிங் வீரா தம்பி” என வந்து நின்றார் மேனேஜர் சுப்புராஜ். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கடந்த பத்து வருடங்களாய் அங்கே வேலையில் இருப்பவர்.
“குட் மார்னிங் ஸார், சேல்ஸ் எப்படி போகுது?” என்றான் எப்போதும் போல.
ஊழியரோ, முதலாளியோ ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும் என எண்ணுபவன் தனது கீழே வேலை பார்ப்பவர்களை எப்போதுமே மரியாதையாகவே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
“நல்லா போகுதுங்க சார்! லோடு தான் இன்னைக்கு வர வேண்டியது, நாளைக்கு அனுப்புறதா சொன்னாங்க” என்று கூற, “ஏனாம்?” என்றவன், பின்னே, “சரி, நான் பேசிக்குறேன்” என்றுவிட்டான்.
முதல் நாள் இரவு முழுக்க நடந்த சேல்ஸின் ரிபோர்ட் அவன் கேட்காமலே அவன் மேசை மீது வந்து அமர்ந்தது.
அதை கவனமாய் சரிப்பார்த்தாலும், கண்ணாடி தடுப்பின் வெளியே நடக்கும் சேல்ஸின் மீதும் ஒரு கண்ணை வைத்தபடியே அவன் வேலையை கவனிக்க, “நேத்து டீசல் கணக்கு குறைஞ்சுதே! இன்னைக்கு டேலி ஆகுமா?” என்று கேட்க,
“நேத்து லீவுங்குறதால ஸ்கூல் பஸ்ல ரெண்டு வரலை, அதான் கணக்கு குறைஞ்சுது தம்பி! இன்னைக்கு எல்லாம் சரியா வரும்…” என சுப்புராஜ் சொல்லிக்கொண்டிருக்க, வெளியே ஏதோ கும்பல் சேருவதை போல தோன்றியது அவனுக்கு.
“ஸார், வெளில என்ன நடக்குது? கும்பல் கூட்டாம சீக்கிரமா அனுப்ப சொல்லுங்க…” என அவன் சொல்ல, சரியென்று வெளியே விரைந்தார் சுப்புராஜ்.
கணக்கு ஏட்டில் மூழ்கிப்போனவன், அடுத்த ஐந்தாவது நிமிடம் எதேச்சையாய் நிமிர, முன்பிருந்ததை விட கூட்டம் சற்று அதிகமாக ஆனதே தவிர குறைந்தபாடில்லை.
வரிசையாய் இருசக்கர வாகனங்களும், ஷேர் ஆட்டோவும் இன்ன பிறவும் நிற்க, அவர்களின் முகத்தில் எல்லாம் ‘நேரமாகிறதே!’ என்ற எரிச்சல் அப்பட்டமாகவே தெரிந்தது. அதிலும் சிலர் வண்டியை திருப்பிக்கொண்டு போக, புதியதாய் வந்தவர்களும் கூட்டதைக்கண்டு ரிவர்ஸ் எடுப்பதை கண்டவன், மறுநொடி எழுந்து விட்டான்.
காலை நேர பரபரப்பில் ஒவ்வொரு நொடியும் அத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவன் அவன். வேலைக்கோ, பள்ளி, கல்லூரிக்கோ, வியாபாரத்திற்கோ அல்லது ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கோ செல்பவர்களின் நேரத்தை முடிந்த மட்டும் வீணடிக்காது, அவர்களை முகம் சுளிக்கும்படி செய்யக்கூடாது என்பதே அவனது ஊழியர்களிடம் அவன் எதிர்ப்பார்க்கும் முதல் விடயமாய் இருக்க, இப்போதோ கூட்டத்தை இத்தனை சேரவிட்டு எல்லோரும் என்ன செய்கிறார்கள்? என்ற இயல்பான சினம் எழுந்தது அவனுக்கு.
வேகமாய் வெளியேறியவன், “என்னாச்சு ஸார்?” என அங்கே கையை பிசைந்துக்கொண்டு நின்றிருந்த மேனேஜரிடம் கேள்வியெழுப்ப, “அது.. தம்பி?” என சங்கடமாய் இழுத்தார் அவர்.
அப்போது ‘ஹை-டெசிபல்’ வாய்சில், “எங்க உங்க சிசிடிவி புட்டேஜ்? எடுங்க அதை! யாரைப்பார்த்து ‘பொய்’ சொல்றேன்னு சொல்றீங்க?” என எகிறிக்கொண்டு ஒரு பெண்குரல் கேட்க, ‘என்னடா இது தலைவலி?’ என சலிப்பாக பார்த்தவன், அங்கே ஒரு ‘பள்ளி மாணவியை’ சத்தியமாய் எதிர்ப்பார்க்கவில்லை.
‘இந்த பொடுசா இத்தனை கூட்டத்தை கூட்டி வச்சுருக்கு?’ என்றெண்ணியவன், அருகே செல்ல, அவனைக்கண்ட ஊழியர்கள் படபடத்தனர்.
“என்ன புட்டேஜ் கேட்டதும் பயந்துட்டீங்களா?” என அவள் முன் நின்ற ஊழியனை பார்த்து கேட்க, “என்ன பாப்பா பிரச்சனை இங்க?” என்றான் வீரா.
உடனே அவனைப்பார்த்து திரும்பியவள், “எதே? பாப்பா வா? விட்டா சொப்பு ஜாமான் வாங்கிக்குடுத்து விளையாட சொல்லுவீங்க போல?” என கோபமாய் கேட்டவள், “நீங்க யாரு? என்ன பிரச்சனைன்னு உங்ககிட்ட எதுக்கு இப்ப சொல்லணும்?” என்றாள் அவள்.
சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் வீரா. கடிகாரத்தையும் இவர்களையும் எரிச்சலுடன் பார்த்துக்கொண்டு நின்ற கூட்டத்தை கண்டதும், “இங்க பாருங்க மேடம், உங்களால எத்தனை பேரு வெயில்ல நிக்குறாங்க? கொஞ்சம் இந்த பக்கம் நகர்ந்து வந்தீங்கன்னா, என்ன பிரச்சனைன்னு பேசி தீர்த்துடலாம்” என தணிவாய் பேச,
“ஹலோ மிஸ்டர், நீங்க யாருன்னு நான் கேட்டேன்?” என்றாள் அவள் அதிகார தொனியில்.
கோபமூச்சுடன், “நான் இந்த பங்க் ஓனர்! இப்போ வரீங்களா?” என ஓரமாய் கைக்காட்டினான் வீரா.
லேசான தடுமாற்றத்துடன், “அதெல்லாம் முடியாதுங்க, எனக்கு மீதி சில்லறையை குடுங்க, நான் போய்க்கிட்டே இருக்கேன்” என்றாள்.
‘இவ்ளோதானா?’ என்று நினைத்தவன், அங்கிருந்த ஊழியரை பார்த்து, “குடுத்து அனுப்ப வேண்டியது தானே?” என்று காட்டமாய் கேட்க,
“ஸார், நூறு ரூவாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு ரெண்டாயிரம் நோட்டை குடுத்தாங்க” என்று ஆரம்பிக்க,
அவளோ, “இருக்குற காசை தானே குடுக்க முடியும்? இவ்ளோ பெரிய பங்க் வச்சுருக்கவங்க கொஞ்சம் சில்லறை கூடவா வச்சுக்க மாட்டீங்க?” என்று கேட்க,
முகம் சற்று கடுமை பூச, “குடுக்க வேண்டியது தானே முருகேசன்?” என்றான் வீரா.
“ஸார், இந்த பொண்ணு ‘நார், நாரா’ கிழிஞ்சுப்போன நோட்டை குடுத்து சில்லரை கேக்குது ஸார்” என்றவனோ அவள் கொடுத்த ‘இரண்டாயிரத்தை’ காட்ட, தன்னாலே அவன் பார்வை அவளிடம் சென்றது, ‘இது தான் நோட்டா?’ என்ற பாவத்துடன்.
அவளோ முகத்தில் எதையும் காட்டாது, “போன வாரம் இதே பங்க்ல வந்து பெட்ரோல் போட்டுட்டு போனேன்! அப்போ இந்த நோட்டை நீங்க தான் குடுத்தீங்க, அப்போ இருந்த அவசரத்துல சரியா கவனிக்கல! இப்போ திரும்ப உங்ககிட்ட குடுத்தா… என்னவோ அதை நானே வாசிங் மெசின்ல போட்டு கிழிச்சு, ஒட்டி கொண்டு வந்த மாறி இவ்ளோ ஸீன் போடுறீங்க?” என்று எகிற, அவளை மேலும் கீழும் பார்த்தான் வீரா.
ஊழியனோ, “ரெண்டாயரரூவா நோட்ட சில்லறையா குடுத்ததா எனக்கு நியாபகமே இல்ல ஸார்!” என்றிட, அவருக்கு துணை வந்த வேறொரு ஊழியர்,
“அதுவும் இப்படி குப்பையா கிழிஞ்ச ஒரு நோட்டை நம்ம எப்டி ஸார் முதல்ல கலெக்ஷன் பேக்’ல வைப்போம்?” என அவர்களது நடைமுறையை சுட்டிக்காட்டி வீராவிடம் பேச,
அவளோ, “அப்போ நான் ‘பொய்’ சொல்றேன்னு இன்டைரெக்டா சொல்றீங்க? அப்படிதானே?” என்று கேட்க,
“டைரெக்டாவே தான் சொல்றோம்” என எதிரே நின்ற ஊழியர் முனகியது கூட அவள் செவிகளை சென்றடைய, இன்னமும் கத்தப்போனவளை கையமர்த்தி, “இப்போ என்ன சில்லரை தானே? குடுத்து விடுங்க முருகேசன்” என்றான் வீரா.
“ஸார்… எனக்கு நல்லா தெரியும்! இது நம்ம குடுக்கவே இல்லை” என அவர் சொல்ல, ‘எவ்ளோ நேரம் ஸார் ஆக்குவீங்க?’ ‘என்னடா இது ச்சை…!’ என கத்திக்கொண்டிருந்த கும்பலை சுட்டிக்காட்டி, “குடுத்து விடுங்க” என தலையசைத்தான் வீரகேசரி.
முருகேசனும் கடுப்புடனே மீதி ஆயிரத்தி தொள்ளாயிரத்தை எண்ணி கொடுக்க, “எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு இங்கிருந்து போங்க” என்றார் அவர் கறாராய்.
அவளோ பெரிய மனது போல, “இருக்கட்டும்! இனிமேலாவது பார்த்து நடந்துக்கோங்க” என ‘ப்ரீ அட்வைஸ்’ கொடுத்துவிட்டு, வீராவிடம், “இந்த தப்பு இனியும் நடக்காம பார்த்துக்கோங்க! ஓகே’வா?” என கேட்டுவிட்டு தனது ஸ்கூட்டியில் சிட்டாய் பறந்து செல்ல,
“ஸார், எனக்கு நல்லா தெரியும் ஸார், இந்த பொண்ணு ‘பொய்’ சொல்லிட்டு போகுது” என்றார் முருகேசன்.
வீரா, “விடுங்க முருகேசன், நோட்டை பேன்க்ல குடுத்து மாத்திக்கலாம்! இந்த சின்ன சண்டையால எத்தனை வண்டி திரும்ப போய்டுச்சு தெரியுமா? சீக்கிரம் போய் கூட்டத்தை கவனிங்க” என்றதும், “சரிங்க ஸார்” என சென்றுவிட்டார் அவர்.
*****
ஸ்கூட்டியில் பறந்து சென்ற அந்த சில்வண்டு அந்த வானத்தையே வளைத்து கட்டிவிட்ட பூரிப்பில், உற்சாகமாய் தனது வீட்டின் முகப்பில் வண்டியை ‘பார்க்’ செய்துவிட்டு குதித்துக்கொண்டு உள்ளே ஓட, “வந்துட்டா உங்க அருமை பொண்ணு அஷ்….டலட்சுமி!” என்று சமையல் வேலையை கவனித்தபடியே குரல் கொடுத்தார் நீலா. வீட்டின் தலைவி, பெயரளவில் மட்டும்!
“எங்கடா போன காலங்காத்தால?” ஈஸி சேரில் அமர்ந்து காலை உணவை சுவைத்தபடி குடும்பத்தின் மூத்த உறுப்பினரான அவளது பாட்டி மங்களம் கேட்க, அதே நேரம் பாத்ரூமில் இருந்து தலை துவட்டியபடி வந்தார் சண்முகம். அந்த வீட்டின் தலைவர்.
“சாப்பிட்டியாமா?” என சண்முகம் ஆதூரமாய் கேட்க, “அத விடுங்கப்பா! காலைல உங்க பொண்டாட்டி என்னை அந்த பேச்சு பேசுனாங்களே? இப்போ அவங்க முகத்தை எங்க கொண்டு போய் வச்சுப்பாங்கன்னு கேட்டு சொல்லுங்க” என்றாள் சட்டமாய் சோபாவில் அமர்ந்துக்கொண்டு.
அடுக்களையில் இருந்து புளியை கரைத்தபடி வெளியே வந்த நீலா, “நீ கேட்குறதுக்காக எல்லாம் முகத்தை இடம் மாத்தி வைக்க முடியாது! அது எப்பவும் போல கழுத்து மேல தான் இருக்கும்” என்று கடிக்க,
“ப்ச்! அப்பா! அஃடர்ஆல் ஒரு டூ தவுசன்ட் ருபீஸ் நோட் கிழிஞ்சதுக்கு ‘நான் பொறந்ததே வேஸ்ட்டுங்குற அளவுக்கு பேசுனாங்களே? இப்போ நான் அதை சரி பண்ணிட்டேன்னா, இவங்க பேசுனதை எல்லாம் திரும்ப வாங்கிக்க முடியுமா?” என நியாயவாதியாய் அவள் கேள்வியெழுப்ப,
“அப்படியே ஓங்கி அடிச்சேன்னு வை, அஃடர்ஆல் ரெண்டாயிரமா உனக்கு? ஏழுகழுத வயசாகியும் உன்னை வேலைக்கும் அனுப்பாம, கட்டியும் குடுக்காம உட்கார வச்சு மூக்குமுட்ட மூணு வேலை சோறு போடுறோம்ல? நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவடி” என நீலா பேசி முடிப்பதற்குள்,
“வாயை மூடு நீலா!”
“ஏய்… சும்மா இருடி” என தலைவரும், மூத்த உறுப்பினரும் ஒரு சேர நீலாவை திட்ட,
‘பொம்பளை புள்ளைக்கு இந்த அளவு செல்லம் குடுக்காதீங்கன்னா ஒருத்தரும் கேட்குறதில்லை’ வழமை போல மனதோடு நொந்துக்கொண்டார் அவர்.
“காலைல நீ அவளை திட்டுனதுக்கே நான் உன்மேல கோவத்துல இருக்கேன், இதுல இப்போ அடிக்க வேற செய்வேன்னு பேசுற?” என்ற சண்முகத்துக்கு ஈடாய்,
“துணி துவைக்க வேண்டியது உன் வேலை தானே? நீ அலுப்பு பட்டுகிட்டு என் பேத்தியை துணி அள்ளி போட சொன்ன! அது பச்சை மண்ணு… காசு இருந்தது தெரியாம தூக்கி மெசினுல போட்டுடுச்சு! அதுக்கு இப்ப என்னவாம்?” என பேத்திக்கு வக்காலத்து வாங்கி வந்தார் மங்களம்.
இன்னும் இரு நொடிகள் அங்கே நின்றாள் கூட வாயில் நன்றாக வந்துவிடும் என்று நினைத்த நீலா, சத்தமின்றி வந்த வழி சென்றுவிட்டார் அவர் சென்றதும், “எங்கடா போன காலைல?” என்று சண்முகம் கேட்க,
‘டொன்ட்டடொய்’ என்ற மியூசிக்கோடு ‘பங்கி’ல் இருந்து பெற்று வந்த ஆயிரத்தி தொள்ளாயிரத்தை எடுத்து நீட்ட, “என்னடா இது?” என்றார் சண்முகம் ஆச்சர்யம் போல!
“தெரியல? உங்க கிழிஞ்சு போன ரெண்டாயிரம் தான்!”
முகமெல்லாம் பிரகாசமாய், “என்னடா சொல்ற?” என்று இருவரும் வினவ, அடுக்களையில் இருந்து எட்டிப்பார்த்த நீலா,
‘காலைலயே எவன் தலைல மொளகா அரைச்சுட்டு வந்து உட்காந்துருக்காளோ தெரியல’ என மனதுக்குள் முனகிக்கொள்ள,
“அந்த கிழிஞ்ச நோட்டை குடுத்து நல்ல நோட்டா மாத்திட்டேன்! பட், அதுக்கான சர்விஸ் டேக்ஸ் ஹன்ட்ரெட் ருபீஸ் எனக்கு! ஓகே வா?” என அஷ்டலட்சுமி கேட்டதும், “உனக்கில்லாததா குட்டிமா? பூராத்தியும் கூட எடுத்துக்கோ” என்றார் சண்முகம்.
“நிஜமாவாப்பா?” என்றவள் உடனே அதை தனது பர்சுக்குள் சொருகிக்கொண்டாள்.
அவளது இந்த வீர பராக்கிரமத்தை அறியும் ஆவலில், “எப்படிடா மாத்துன?” என்று மங்களம் கேட்க,
“அதுவா அப்பத்தா? அம்மா திட்டுன கடுப்புல நேரா ஸ்கூட்டியை ஓட்டிட்டு போனேனா? அப்போ ஒரு பங்க்’ல பிஸியா சேல்ஸ் நடந்துட்டு இருந்துச்சு! சரி, இந்த பரபரப்புல நம்ம உள்ள போய் நோட்ட நீட்டுனா ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்னு நினைச்சா, கரெக்ட்டா கண்டுபிடிச்சு, வேற நோட்டு குடுங்கன்னு கேட்டுட்டானுங்க” என்று அவள் இழுக்க,
“அச்சச்சோ! அப்பறம் என்னாச்சு?” என ஆவலாய் கதைக்கேட்டனர் இருவரும்.
“விடுவேனா நானு? இதை குடுத்ததே நீங்கதான்னு சொல்லி ஒரு டிராமாவ போட, கடைசில அந்த பங்க் ஓனரே ஏமாந்துப்போய் மீதி காசை குடுத்து அனுப்பிட்டான்னா பார்த்துக்கோங்க!” என்றதும்,
“பாருடி என் பேத்தியோட சாதூர்யத்தை! உனக்கெல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த சூட்டிகை வருமா?” என முறைத்துக்கொண்டு நின்ற மருமகளை வம்புக்கு இழுத்தார் மங்களம்.
“அவ ஒருத்தன பொய் சொல்லி ஏமாத்திட்டு வந்துருக்கா! அதை கண்டிக்காம எல்லாரும் சேர்ந்து அவ செஞ்சது சரின்னு ஏத்திவிட்டுட்டு இருக்கீங்க” என நீலா சொன்னதும் நொடியில் முகம் வாடிய மகளை கண்ட சண்முகம்,
“பேசாம போ நீலா! இந்த காலத்துல இப்படி இருந்தா தான் பொழைக்க முடியும்” என்றுவிட்டு, “நீ சிரிடா என் தங்கம்” என கொஞ்சினார் தன் மகளை.
வழமைப்போல, ‘இதுங்களை திருத்தவே முடியாது!’ என்று நினைத்த நீலா, ‘இது எந்த வீட்டுல வாக்கப்பட்டு சீப்படப்போகுதோ!?’ என மனதோடு மருகிக்கொண்டு தன் சமையலை தொடர்ந்தார்.
****
“டேய் கண்ணா! சாப்பிடலாம் வரியாடா?” கையில் ரிமோட்டை வைத்து தட்டிக்கொண்டே கேட்டார் விஜயா.
ரூமிற்குள் இருந்தவனோ, “ஏம்மா? சீரியல் எல்லாம் முடிஞ்சுடுச்சோ?” என்று கேட்க,
“உனக்கு ரொம்பதான்டா நக்கலு! புள்ள சாப்புடுற நேரமாச்சேன்னு கூப்பிட்டேன் பாரு” என அலுத்துக்கொண்டதை போல சொன்ன விஜயாவுக்கு சிரிப்பு தான் வந்தது.
அதையே பிரதிபலித்தது அவன் முகமும். சிரிப்புடனே, “அட..ட..ட..டா! நம்பிட்டேனே!” என்றவன், முன்னமே சுட்டு ஹாட்பாக்ஸில் வைத்திருந்த சப்பாத்திகளை எடுத்து இருவருக்கும் வைக்க, இரவு உணவு வேளையை எப்போதும் போல ஒன்றாக கழித்தனர்.
“அந்த தரகனுக்கு போன் போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டுட்டேன்! இன்னும் ஒரே வாரம் மட்டும் குடுங்க! நல்ல இடமா பார்த்துட்டு வரேன்னு சொல்லிருக்கான்”
விஜயா சொன்னதும், நமட்டு சிரிப்போடு, “உங்க தொல்லை தாங்காம ஒரே வாரத்துல போன் நம்பரை மாத்திட்டு வேற ஊருக்கே போய் செட்டில் ஆகிடுவான் பாருங்க” என வீரா சொல்ல,
“ச்ச! ஏன்டா இப்படி அபசகுனமா பேசுறவன்?” என கண்டித்தார் விஜயா.
“நீங்களும் வருஷக்கணக்கா பாக்குறீங்க! குடும்பம் சரிவந்தா பொண்ணு பிடிக்கல! பொண்ணு பிடிச்சா அவங்களுக்கு என்னை பிடிக்கல! எல்லாம் சரி வந்தாலும் கடைசியா ‘ஜாதகம் ஒத்துவரலை!’ எட்டுல செவ்வா இருக்கு, ஒன்பதுல புதன் இருக்குனு சொல்லி ரிஜெக்ட் பண்றாங்க… இதெல்லாம் எப்பவும் நடக்குறது தானேம்மா!”
விஜயா, “அதெல்லாம் அப்போ கண்ணா! இப்போ அப்படி இல்லை! இந்த சனி பெயர்ச்சில உனக்கு நேரம் அமோகமா இருக்காம்! கல்யாணம் ஆகாத இளம் ஆண்கள் பெண்களுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும்னு சொல்லிருக்காங்கடா!” என்று அபிநயம் பிடித்து ஏற்ற இறக்கங்களோடு சொல்ல,
“யாரு சொன்னது? இந்த நாள் நன்மைகளை அள்ளித்தரும் நல்ல நாளாக அமையும்’ன்னு காலைல டிவில உட்காந்து அருள்வாக்கு சொல்வாரே!? அவரா?”
“அவரே தான் டா”
“அவர் சொல்றதுக்கெல்லாம் கல்யாணம் நடக்கனும்ன்னா, தினம் ஒரு கல்யாணம் நடக்கணும் எனக்கு! அட போங்கம்மா!” என்றவன் உண்டு முடித்த தட்டை தூக்கிக்கொண்டு எழுந்து சென்றான்.
விஜயா, “நீ ‘ம்ம்ம்’ சொன்னாலும் கல்யாணம் நடக்கும்டா” என உரக்க சொல்ல,
“சொல்லிட்டா……..லும்” சலிப்பாய் முடித்தான் வீரா.
“ப்ச்!” என சலித்துக்கொண்டலும் விஜயாவுக்கு மனதில் ‘இந்த வருடம் எப்படியும் மகனுக்கு திருமணம் முடிந்துவிடும்’ என ஒரு உள்ளுணர்வு சொல்லியது.
“கேபில்க்காரர் வந்தாங்களா? மளிகை கடைக்கு செட்டில் பண்ணிட்டீங்களா?” அடுத்த பேச்சுக்கு தாவிவிட்டான் வீரகேசரி.
“எல்லாம் குடுத்தாச்சு” என விஜயா சொல்ல,
“அப்போ செலவுக்கு காசு எடுத்துக்கோங்கம்மா என் பர்ஸ்ல இருந்து!” என்றிட, ‘விட்டால் மறந்துவிடுவோம்! பின்னே அதற்கும் கத்துவானே!’ என்று நினைத்து உடனே அவன் பர்சை எடுத்தார் விஜயா.
உள்ளிருந்து தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டவர் கண்களில் சிக்கியது அந்த கிழிந்துப்போன இரண்டாயிரம் ரூபாய் நோட்டு!
அதை கண் முன் தூக்கி பிடித்து பார்த்தவர், “என்னடா இது? நாய் கொதறின மாறி இருக்கு?” என்றதும் திரும்பியவன் அந்த இரண்டாயிரத்தை பார்த்து,
“ப்ச்! அதை வைங்கம்மா! வேற நோட்’ இருக்கு பாருங்க” என்று சொல்ல,
“நான் வேண்டியத எடுத்துக்கிட்டேன்! இது என்னன்னு சொல்லு? யார்கிட்ட இப்படி ஒரு நோட்டை வாங்கின நீ?” என்றார்.
“அது… ஒரு பொண்…” என சொல்ல ஆரம்பித்தவன், பின்னே வேண்டாம் என முடிவெடுத்து, “அது கட்டுல வாங்குறப்போ நடுல இருந்துச்சும்மா! கவனிக்கல!” என்றதும்,
“என்னடா நீ இப்படி இருக்க? இப்படி ஏமாளியா இருந்தா என்னத்துக்கு ஆகும் இந்த காலத்துல? நானெல்லாம் இப்படி இருந்துருந்தா…………….” என்று ஆரம்பித்து கதை கதையாய் பேச, நைசாக அவரிடம் இருந்து பர்சை வாங்கியவன் ஓடியே விட்டான் தனது அறைக்குள்.
மறக்காமல் அந்த இரண்டாயிரம் அவனது பர்சின் உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்தது.