அ36_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
Post Views:74
கொல்லை துளசி எல்லை கடந்தால் 36-2
மனைவியின் முதுகைப் பார்த்துப் படுத்திருந்தவனுக்குத் தூக்கம் வருவேனா என்றது. இன்றோடு சரியாக ஒரு மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்து. இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை கூட அதிகமில்லை.
தோள் தொட்டு விழியை தன் புறம் திருப்பினான். வறண்டக் கண்கள் அவனைப் பார்த்தது.
“வா…” என்று இழுத்து கைக்குள் அடக்கிக் கொண்டான். பெண்ணவள் ஒட்டிக்கொள்ளவுமில்லை. விடுபட விழையவும் இல்லை.
“பேசு விழி. மனசில இருக்கத வெளியில தள்ளி விட்டுடு விழி. உள்ளேயே போட்டு இன்னும் எவ்வளவு நாள் புழுங்குவ?”
“பட்டு.. உன்னோட எல்லாத்துலேயும் கூட இருப்பேன்னு சத்தியம் செஞ்சேனே ஞாபகம் இருக்கா? நீ அதுக்கு உன் வாழ்க்கையில கொஞ்சம் இடம் எனக்கு கொடுக்கணும் விழி”
“என் அன்பு மேல சந்தேக படுறியா பட்டு?”
நெஞ்சுக்குள் முகம் புதைந்தது.
“ஏதாது பேசு டி. உன்ன இப்பிடி பாக்க முடியல விழி. தினம் தினம் என்னை கொல்ற விழி. கையாலாகாத ஆம்பிள்ளை மாதிரி ரொம்ப வலிக்குது விழி. உன் வேதனைய என் கிட்ட ஷேர் பண்ண முடியாத அளவுக்கு தள்ளி போய்டேனா டி? தாலி கட்டின புருஷனா பாக்க முடியலைனாலும் ஒரு ஃப்ரெண்டா கூடவா பாக்க முடியல? நீயா என் கிட்ட மனம் திறப்பன்னு ஒரு மாசமா காத்திருக்கேன் விழி. சத்தியமா என்னால முடியல டி. உன் மனசுல என்ன தான் ஓடுது?”
“நான் உங்களுக்கு உண்மையான மனைவியா இருப்பேன்னு சொன்னேனே மனோ! ஆனா அப்பிடி நான் இல்லயே மனோ…”
“ஏன் விழி என்னை தவிற வேற யாரையாது உன் மனசளவில நினைச்சியா?”
“மனோ…”
“இல்ல தான? அப்புறம் எத வச்சு நீ இப்பிடி நினைக்கலாம்?”
“அவமானமா இருக்கு மனோ. அருவருப்பு தாங்க முடியல. என்ன நடந்துதுன்னு யோசிச்சு யோசிச்சு பைத்தியம் ஒன்னு தான் பிடிக்கல. நான் எப்பிடி சின்ன சண்டை கூட போடாம எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தேன் மனோ? அப்போ நானும் அதுக்கு உடன்பட்டிருப்பேனோ? அதுக்கு தான் நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்ன்னு சொன்னானோ?”
“ச்ச ச்ச… என்ன பேச்சிது? ஆழ்ந்த தூக்கம் மாதிரி, பேச்சு மூச்சில்லாம கிடந்த நீ! உன் மயக்கத்தை அவன் யூஸ் பண்ணிக்கிட்டான். இதுல நீ எங்க இருந்து சண்டை போட முடியும்?”
“அவன் பார்வை சரியில்லன்னு நீங்க சொன்ன பிறகும் உங்க பேச்ச கேக்காம நான் கூப்பிட்டு இருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன் மனோ… ஆனா அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தாங்க முடியல மனோ… என்னால என்னையே மன்னிக்க முடியல மனோ”
“விக்டிம் ஷேமிங்(victim shaming) பண்ணாத விழி! ஒருத்தருக்கு கேன்சர் வந்தா… அவங்க உடம்ப கவனிச்சுக்கல! ஒருத்தங்க பிள்ளைய விபத்தில இழந்துட்டா… அது அவங்க செஞ்ச பாவம்! நைட் வேல முடிச்சு வர வழியில ஒரு பொண்ண ஒருத்தன் ரேப் பண்ணிட்டா… அவள யாரு அந்நேரம் அந்த வழியா வர சொன்னா? இது தான் நாம வாழற மனிதாபிமானமில்லாத சொசைட்டி! இப்படி பட்டவங்கள்ல ஒருத்தியா நீயும் மாறாத விழி!
நேத்து எனக்கு அவன பிடிக்கல! நாளைக்கு உன் அண்ணனைப் பிடிக்காது… அடுத்த நாள் உன் அப்பாவ பிடிக்காது! அதுக்காக யாரையும் வீட்டில சேக்காம இருக்க முடியுமா? இதே உனக்கு என் ஃப்ரெண்ட பிடிக்காட்டி… நான் அவள உனக்காக விட்டுக் கொடுப்பேனா?
அவன மட்டும் தனியா கூப்பிட்ட மாதிரி பேசற? அன்னைக்கு அவனை தவிர வேற நாலு பேரையும் கூப்பிட்டு இருந்தோம். உன் கூடவே நான் இருப்பேன்னு என்னை நம்பி தான அவனைக் கூப்பிட்ட? நான் தான் உன் நம்பிக்கையை உடைச்சுட்டேன். இதுல உன் தப்பு எங்க இருந்து வந்துது?
மும்பையில ஒருத்தன் தெரு நாய்க்கெல்லாம் சோறு போடுவானாம். எதுக்குன்னா அது கூட உடல் உறவு வச்சுக்க! அவன் மேல இப்போ கேஸ் போட்டிருக்காங்க நாய ரேப் பண்ணிட்டதா! இப்போ யார் மேல தப்பு? அவன் கொடுத்த சாப்பாட சாப்பிட்ட நாய் மேலையா? இல்ல உள்ளுக்குள்ள வக்கிரம் நிறைஞ்ச அவன் மேலையா?
நல்ல மனசு டி உனக்கு. அந்த பாவிக்கு அது தெரியல! உணர்வில்லாத ஜடம் அவன். அவன் செஞ்ச தப்புக்கு… உனக்கு நீ தண்டனைக் கொடுக்காத விழி. ஐ ஆம் வெரி வெரி சாரி டி பட்டு. அவ்வளவு கெஞ்சின அன்னைக்கு…! பச்! பைத்தியம் டி நான். உடம்புக்கு முடியாத உன்ன நிற்கதியா விட்டுட்டு போயிட்டேன். நான் தான் உனக்கு ஏத்த புரிஷனே இல்ல. ‘ஏன் டா அவன் கிட்ட என்னை விட்டுட்டு போன? ஆம்பிள்ளையா டா நீ’ன்னு என் சட்டையை பிடிச்சு நீ கேக்கம என்னை கொல்றடி” பேசிக் கொண்டிருந்தவன் குரல் பிசிற,
“மனோ…” என்றவள் தலை நிமிர்த்தி முகம் பார்த்தாள்.
கன்னம் வருடி, தலைவருடி,“ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி டி பட்டு. அந்த நாள்ல மருந்திடுவோமே! உன் நினைவில இல்லாத விஷயத்த யோசிச்சு யோசிச்சு… வாழ வேண்டிய நம்ம வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம் விழி” என்றவன் மார்பில் முகம் புதைத்தவளின் கண்ணீர் சுட்டது.
“உன் மனசு வேதனை எனக்கு புரியலன்னு மட்டும் நினைக்காத விழி. வாழ்க்கை எப்போ யாருக்கு எதை கொடுக்கும்ன்னு சொல்ல முடியாது.
பெத்தவங்க காலம் முடியறதுக்குள்ள, உயிரா வளர்த்த பிள்ளையோட ஆயுசு முடிஞ்சு போன பெத்தவங்கள பாத்திருக்கியா? அந்த உயிரில்லாத உடல பாக்கும் போது உயிரோட அவங்க அங்கத்த பிடிங்கி எடுக்கிற வலியோட கிடப்பாங்க. அவங்க இழப்புக்கு ஆறுதல் கிடையாது. கண்கூடா பார்த்திருக்கேன். உன் வலி எனக்கு தெரியலன்னு நினைக்காத விழி. ஆனா அவங்க வாழ்க்கை அதோட முடியறது இல்ல… வாழ்ந்து தான் ஆகணும். அவங்க எல்லாம் வாழல? சிரிக்கல? அவங்களும் மனுஷங்க தான்! அவங்களால முடியும் போது உன்னால முடியாத?
சில வருஷம் முன்ன ஒரு பொண்ண பார்த்தேன். ரொம்ப வித்தியாசமான பொண்ணா என் கண்ணுக்கு தெரிஞ்சா. பார்த்த அன்னைக்கே என் ஃப்ரெண்ட்ஸ் அவள லேடி ஜாக்கி சான்னு கூப்பிட்டாங்க. அவ ஒரு குட்டி ரௌடி பொண்ணு. அவ கழுத்த மரத்தோட வச்சு நசுக்கினேன்… அப்போ கூட அந்த கண்ணுல ஒரு சொட்டு பயத்தை நான் பாக்கல. ‘போடா’ன்னு லுக்கு விட்ட அவ தான் என்னோட விழி.
யாருக்கும் பயப்படாத ரொம்ப தைரியமான பொண்ணு எங்க போனா? ஒரு சின்ன டௌன மட்டுமே பாத்த அம்மா-அப்பாக்கு பிறந்து, தனியா நின்னு போராடி, இப்பிடி வெளிநாடு வரை தனியா வந்து அவ கனவ சாதிச்ச விழி எங்க? இது நீயே இல்லன்னு உனக்கு தெரியுதா? நீ மயங்கிக் கிடக்கும் போது… முதுகெலும்பு இல்லாத ஒரு கோழை உன்ன தொட்டதும் பயந்து விழுந்துடுவியா? என் விழியா இருந்தா எழுந்து அவன தான் அடிப்பா… அவனால அவ கண்ண பாக்க முடியாத படி அவன் முன்னால வாழ்ந்து காட்டுவா! நீ யாருன்னு மறக்காத.
விழுந்த நீ எழுந்திரு. அடிச்சவன் முன்னால நிமிர்ந்து நில்லு. நீ யாருடா என்ன வீழ்த்தன்னு அவன் முன்னால எழுந்து உயர்ந்து தைரியமா நில்லு விழி. ஒரு வக்கிரம் பிடிச்ச சைக்கோட்ட தோத்து போயிடாத விழி.”
“என்ன நடந்ததுன்னே உனக்குத் தெரியாது. தெரியாத ஒரு விஷத்துக்கு உருவம் கொடுக்காத பட்டு. எனக்கு கொடுத்த இடத்துல சாக்கடைக்கு இடம் வேண்டாம் விழி! கடந்து தான் போகணும். கூடவே இருக்கேன் விழி. சேர்ந்தே கடப்போமே…”
கேவல் வெடித்தது. நெஞ்சோடு முகம் புதைத்தவளுக்குப் புரியாமல் இல்லை. தெரியாத, உணராத ஒன்றிற்கு ஏன் வடிவம் கொடுத்து அதற்கு உணர்வு கொடுக்கவேண்டும்? நிழலைத் துரத்தி நிஜத்தைத் தொலைக்கும் அளவிற்குத் தான் ஒரு முட்டாளா? வீழ்த்த நினைப்பவன் முன் வீழ்ந்துபோகத் தான் போகிறாளா?
உச்சந்தலையில் மனோவின் இதழ் பதியவும், அவனோடு ஒன்றியவளின் மனம் முழுவதும் மனோ மட்டும் தான். அங்கு கசடுக்கு இடமில்லை.
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ! (மகாகவி பாரதியார்)
(சோறு உண்ண வருடங்கள் பயின்று, வேலையில் அமர்ந்து, உண்டு, கதைகள் பேசி நேரம் கழித்து, மனம் வாடி துன்பத்தில் உழன்று, பிறரையும் வருத்தி, முதுமை எய்து, ஒரு நாள் மாய்ந்து போகும் வேடிக்கை மனிதர் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ!)