காதல் 15:
“என்ன ஈஸ்வரா..? தோட்டத்துக்கு போறேன்னு சொல்லிட்டு, அதுக்குள்ளே வந்துட்டிங்க..?” என்றார் வசுந்தரா.
“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..! மகா வீடு வரைக்கும் போயிருந்தோம். அதான் அப்படியே வீட்டுக்கே வந்துட்டோம். இவளை வீட்டுல விட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்ம்மா..” என்றான்.
“என்னப்பா மறுபடியும் உங்களுக்குள்ள சண்டையா..?” என்றார்.
“சண்டையெல்லாம் ஒண்ணுமில்லைம்மா…” என்றான்.
“சரி, நீ உள்ள வந்து சாப்பிட்டு போ ஈஸ்வரா..” என்று வசுந்தரா சொல்லவும்,
“அதுவும் சரிதான்..” என்றபடி உள்ளே சென்றான்.
“நான் தான் சொன்னேன்ல வசுந்தரா, பணக்காரன் மக, பண்ணைக்காரனுக்கு வாக்கப்பட்டா, இப்படித்தான் இருக்கும். போன வேகத்துல திரும்பி வந்திருக்கா பாரு.. இவல்லாம் பண்ணையம் பண்ணி, குடும்பம் நடத்துன மாதிரித்தான்..” என்று நொடித்துக் கொண்டார் ருக்கு.
“சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காதிங்க பாட்டி. நானும் தான் போய் வேலை செஞ்சேன்..” என்றாள் வீராப்பாய்.
“அப்படி என்ன வேலையை நீ செஞ்சு கழட்டிட்ட..?” என்றார் ருக்கு.
“ம்ம்..! நாத்து நட்டேன்..” என்றாள் வெடுக்கென்று.
அவள் சொன்ன விதத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு புரையேறியது.
“எதுக்கு மகா, போய் வேலையெல்லாம் செஞ்சுகிட்டு. சும்மா அப்படியே சுத்திப் பார்த்துட்டு வர வேண்டியது தானே..?” என்றார் வசுந்தரா.
“எதுக்கு அத்தை வம்பு..? இதோ பாட்டி இப்படி பேசுறதுக்கா..? நானும் ஒன்னும் சும்மா இல்லை..” என்று பிகு செய்து செய்து கொண்டாள்.
“அம்மா, சும்மா சொல்லக் கூடாது, உங்க மருமக வேலைன்னாலும் வேலை அப்படி ஒரு வேலை.. நான் கூட இவளை என்னமோன்னு நினைச்சுட்டேன். இன்னைக்கு நேர்ல பார்க்கவும் தான தெரியுது..?” என்றான் சிரிக்காமல்.
“நிஜமாவா ஈஸ்வரா..? நீதான் அவளைத் திட்டிட்டே இருந்த.. பாரு எப்படி வேலை செஞ்சுட்டு வந்திருக்கான்னு..?” என்று வசுந்தரா, மகாவின் மீது கரிசனை காட்ட,
“உங்க வீட்டு வேலை, எங்க வீட்டு வேலையில்லை. அப்படி ஒரு வேலை. நட்டது பத்தே நாத்து. அதுலயும் பாதி மேல மிதந்துகிட்டு. இதுல பத்து நாத்து நட்டதுக்கே, தலை சுத்தல் வேற..?” என்றவன், கொஞ்சம் சத்தமாக சிரித்து வைத்தான்.
வசுந்தராவிற்கும் சிரிப்பு வர, அடக்கிக் கொண்டார். ஆனால் ருக்குப் பாட்டியால் அப்படி இருக்க முடியவில்லை.
“அதானே பார்த்தேன். இவளாவது வேலை செய்றதாவது..?” என்று சிரித்தே விட்டார்.
ஈஸ்வரனை நன்றாக முறைத்து வைத்தாள் மகா.
“எனக்கு என்ன வருமோ அதைத்தான் செய்ய முடியும். ஓவரா கிண்டல் பண்ணாதிங்க…” என்று பட்டென்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னப்பா இது..? நிஜமாவே கோவிச்சுகிட்டா போல..?” என்றார் வசுந்தரா.
“அம்மா.. அவ சந்தரமுகி மாதிரி. எப்ப சிரிப்பா, எப்ப அழுவா, எப்ப கோபப்படுவா, எப்ப கத்துவான்னு அவளுக்கே தெரியாது. எனக்குப் பழகிடுச்சு. போகப் போக உங்களுக்கும் தானா பழகிடும்..” என்றான்.
“எனக்கென்னமோ, மகாவுக்கு இங்க ஒத்துவராதுன்னு தோணுது ஈஸ்வரா. பேசாம அவகூட சென்னைக்கே போய்டேன். கொஞ்ச நாள் அங்க இருங்க. அது தான் சரியா இருக்கும்..” என்றார்.
“இப்போதைக்கு அந்த யோசனை இல்லைம்மா. கொஞ்ச நாள் போகட்டும். அவளுக்கு இங்க செட்டாகலைன்னா பார்ப்போம்..” என்றவனுக்கும் யோசனை தான்.
“ரொம்ப குணமான பொண்ணாத்தான் தெரியறா ஈஸ்வரா. கொஞ்சம் நீயும் வளைஞ்சு குடுத்தா உன்னோட வழிக்கு வந்துடுவா. நீயும் இப்படி அவளுக்கு பிடிக்காத மாதிரியே செஞ்சு வெறுப்பேத்திட்டு இருக்க..?” என்று கவலைப் பட்டார்.
“கவலைப்படாதிங்கம்மா..! இப்ப தான் அவளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் புரியுது. இனி பெருசா எந்த பிரச்சனையும் வராது..” என்றவன், சாப்பிட்டு முடித்து, மகாவைத் தேடிச் சென்றான்.
“இப்ப எதுக்கு விளையாட்டுக்கு பேசினதுக்கு எல்லாம் கோவிச்சுட்டு வந்து உட்கார்ந்திருக்க..?” என்றான் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்.
“நான் எங்க கோவிச்சுட்டு வந்தேன். டயர்டா இருந்தது, அதைச் சொன்னா உங்க பாட்டி இன்னும் பேசும். அதான் அப்படியே கோவிக்கிற மாதிரி கோவிச்சுட்டு எஸ்ஸாகி வந்துட்டேன்..” என்றாள்.
“போய் சாப்பிட்டுட்டு மாத்திரையை மறக்காம போடு. நான் தோட்டத்துக்கு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்..” என்றான்.
“எனக்கு ஒன்னு கேட்கணும்..?” என்றாள்.
“என்ன..?”
“நான் திருப்பியும் ஜாப் போறதைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலையே..?” என்றாள்.
“இப்போதைக்கு வேண்டாம்..” என்றான்.
“அதான் ஏன்..?” என்றாள்.
“நீ சின்ன பொண்ணில்லை மகா. உன்கிட்ட ஒளிச்சு மறைச்சு பேச, நான் சினிமா ஹீரோ இல்லை. டாக்டர் உனக்கு இப்போ நல்ல ரெஸ்ட் வேணும்ன்னு சொல்லியிருக்கார். தேவையில்லாம நீ டென்ஷன் ஆகவே கூடாதுன்னு சொல்லியிருக்கார். இந்த நேரத்துல நீயா வழியப் போய் ஏன் வொர்க் பிரஷர், டென்சனை எல்லாம் ஏத்திக்கணும். அது தான் வேண்டாம்ன்னு சொல்றேன். அதுமட்டுமில்லாம உங்கப்பாவுக்கும் இப்போ அடிக்கடி முடியாம போய்டுது. அவங்களுக்கு ஆறுதலுக்கு இருக்குறதே நீ ஒருத்தி தான். நீயும் தூரப் போய் இருந்தா அவங்க நிலைமையையும் யோசிச்சு பாரு..” என்றான்.
“நீங்க சொல்றது எல்லாம் சரித்தான். இப்படி உடனே வேலையை விடனும்ன்னா, மூணு மாச சம்பளத்தையும் குடுத்தாத்தான் ரிலீவ் பண்ணுவாங்க. ஏற்கனவே லாங் லீவு வேற. இதுல லோன் வேற இருக்கு..” என்றாள் திக்கித் திணறி.
“ஒன்னும் பிரச்சனையில்லை. நான் தரேன்..!” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம். அது நல்லா இருக்காது. நான் வேணும்ன்னா வொர்க் பிரம் ஹோம் வாங்கிக்கிறேன்..” என்றாள்.
“யாருன்னே தெரியாதவனுக்கேல்லாம் வேலை செய்வ. கட்டுன புருஷன் நான் தர்றேன்னா தன்மானம் தடுக்குதோ..? இந்த ஒரு புத்தியை மட்டும் உன்கிட்ட மாத்த முடியாதுடி..” என்று கோபமாய் சொன்னவன்,
“உன்னோட ப்ரியம், உனக்கு என்ன தோணுதோ அதை செய். அதுக்கும் நாளைக்கு என்னைத்தான் பேசுவ..? ஆணாதிக்கம், பெண்ணடிமைன்னு பேசியே மனுஷனை சாவடிச்சிடுவ. இது தேவையா எனக்கு..?” என்றான்.
“நீங்க என்ன இப்படி சொல்லி தப்பிச்சுக்கலாம்னு பார்க்குறிங்க..? இன்னமும் நீங்க ஓகே சொல்லவேயில்லை..” என்றாள்.
“அப்படியே நான் சொல்றதை செஞ்சுட்டு தான் மறுவேலை பார்ப்ப? எப்படியும் நீ நினைச்சதைத் தான் செய்வ..? எனக்கு இது தேவையா..?” என்றான்.
“அதுக்கில்லை..” என்று அவள் இழுக்க,
“அதுக்கும் இல்லை இதுக்கும் இல்லை. உனக்கு என்கிட்டே வாங்குறது தான் கௌரவ குறைச்சல்…” என்றவன்,
“ஒன்னு சொல்லவா..?” என்றான்.
“ம்ம்..”
“நீ இந்த வேலையை விட்ரு. ஒரு மூணு மாசம் சந்தோஷமா இரு. எதைப் பத்தியும் யோசிக்காத. நல்லா சாப்பிடு, நல்லா தூங்கு. யோகா பண்ணு.மைண்டயும், மனசையும் ரிலாக்ஸா வச்சிக்க. அதுக்குள்ளே உன்னோட ஹெல்த் பிராப்ளமும் சரியாகிடும். ஆப்டர் த்ரீ மந்த்ஸ் கழிச்சு, உனக்கு அப்பவும் வொர்க் பண்ணனும்ன்னு ஆசை இருந்தா, நீ பண்ணு.” என்றான்.
“ம்ம். ஆனா நீங்க குடுக்குற பணத்தை நான் கண்டிப்பா திருப்பிக் குடுத்துடுவேன்..” என்றாள்.
“வட்டியோட குடுத்துடணும். நான் காசு விஷயத்துல எல்லாம் கரெக்ட்டா இருப்பேன்..” என்றான் சிரிக்காமல்.
“ம்ம்..” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“சரி நான் கிளம்புறேன்..” என்றவன்,
“ஆமா, நிவேதா இறந்ததுக்கு அப்பறம், அவளோட திங்க்ஸ் எல்லாம் எங்க..?” என்றான்.
“எதைக் கேட்குறிங்க..?” என்றாள்.
“மொபைல், லேப்டாப்..இதையெல்லாம் தான் கேட்குறேன்..” என்றான்.
“அசோக் மேல் கம்ளைன்ட் குடுத்த உடனே, போலீஸ் ஸ்டேஷன்ல நிவி மொபைல் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாங்க. விசாரணைக்கு வேணும்ன்னு சொல்லி..” என்றாள்.
“நீங்களும் கேனைத்தனமா தூக்கிக் குடுத்துட்டிங்க..?” என்றான் நக்கலாய்.
“யாரைப் பார்த்து கேனைன்னு சொல்றிங்க..?” என்று கோபமாய் கேட்க,
“சட்சாத் உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். உன்னோட வாயெல்லாம் என்கிட்டே மட்டும் தான் போல. உள்ள ஒண்ணுமில்லை, ஒரு கூறும் இல்லை. நீ கொஞ்சம் கவனமா இருந்திருந்தா நிவேதா இன்னைக்கு இறந்திருக்க மாட்டான்னு தோணுது..” என்றான்.
“நீங்க பார்த்திங்களா வந்து..? எதை வச்சு நீங்க இப்படி சொல்றிங்க..?” என்றவளுக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது.
“நீங்க ரெண்டு பேரும் அப்படி ஒரு ஒற்றுமைன்னு கேள்விபட்டேன். அப்பறம் எப்படி நிவேதா பிரச்சனை உனக்குத் தெரியாம போச்சு. அவ உன்கிட்ட சொல்லலையா..? இல்லை, நீ அவகிட்ட எதுவும் கேட்டுக்கலையா..?” என்றான்.
“ரெண்டும் தான்,.” என்றாள் தலையை குனிந்து கொண்டு.
“இங்க தான் இடிக்குது. நீ ஏன் கண்டுக்கலை..?” என்றான்.
“நிவி என்கிட்டே எதுவுமே சொல்லவேயில்லை. எனக்கா புரிஞ்ச விஷயங்கள் தான் சிலவும். அது கூட அவளா என்கிட்டே சொல்லலை. உண்மையை சொல்ல போனா, காயத்ரி வயசுக்கு வந்தப்ப இருந்து தான் நான் நிவியை நோட் பண்ணேன். நீங்க பொண்ணு பார்க்க வந்தப்ப கூட அவ சந்தோஷமா இல்லை. நான் கூட உங்களைப் பிடிக்காததுனால தான் அவ அப்படி இருக்கான்னு நினைச்சுட்டேன். உங்க மேல கோபப்பட்டது கூட அதனால தான்…” என்றாள்.
“இதென்னடி வம்பா போச்சு..? உங்கக்காவுக்கு பிடிக்கலைன்னா, பார்க்க வர்ற மாப்பிள்ளை மேல கோபப்படனும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன..?” என்றான்.
“இல்லைதான், ஆனா ஏன் கோபப்பட்டேன்னு தெரியலை..” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“நிவேதா இறந்த சமயத்துல வேற ஏதாவது நடந்ததா..?” என்றான்.
“இல்லை..” என்றாள்.
“அந்த அசோக் நம்பர் உன்கிட்ட இருக்கா..?” என்றான்.
“அவன் நம்பரை, நான் நிவி இருக்கும் போது கூட வாங்கினது இல்லை..” என்றாள்.
“ஹோ..” என்றவன் யோசனையுடனே தான் வெளியே வந்தான்.
மகாவிற்கும் அது தான் யோசனையாக இருந்தது. ஈஸ்வரனின் மேல் இருந்த கோபத்தை கொஞ்சம் தள்ளி வைத்து பார்த்த பிறகு தான் பல விஷயங்கள் அவளுக்குத் தெளிவாக புரிந்தது.
பாண்டியனின் பதட்டமும், தொடர்ந்து வாங்கிய கடன்களும், தன்னுடைய கல்யாணத்தில் அவர் காட்டிய அவசரமும் என வரிசையாய் அவள் கண் முன் படம் பிடித்து நின்றது.
நடந்த பிரச்சனையை வசுந்தராவிடம் சொல்லாமல் அவன் மழுப்பியதில் இருந்தே அவனின் மேல் முதன் முறையாக நல்ல அபிப்ராயம் வந்திருந்தது அவளுக்கு.
ஈஸ்வரனும் இதைத்தான் யோசித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.
அங்கே அசோக்கோ, ஈஸ்வரனின் மேல் அப்படி கொலைகாண்டில் இருந்தான்.
“போய் எவன்கிட்டையோ அடிவாங்கிட்டு வந்து நிக்கிற..? உனக்கு வெட்காமயில்லையா அசோக். உன்னை அவன் அடிக்கிற வரைக்கும் அந்த ஆள் வேடிக்கை பார்த்தானா என்ன..?” என்று அசோக்கின் தாய் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.
“நீ வேற ஏன்மா..? நானே அவன்கிட்ட அசிங்கப்பட்டு வந்து நிக்கிறேன். நேரம் காலம் தெரியாம பேசிட்டு இருக்க..?” என்றான் எரிச்சலாய்.
“ஆமாடா.. இந்த கோபத்தை அவன்கிட்ட காட்டுறதை விட்டுட்டு என்கிட்டே வந்து தான் காட்டுவ. அவனை அங்கயே நாலு அப்பு அப்பிட்டு வர்றதை விட்டுட்டு, இங்க வந்து கோபத்தைக் காட்டி என்ன பிரயோஜனம்..?” என்றார்.
“கொஞ்ச நேரம் வாயை மூடுறியா..? கோபத்தைக் காட்டத் தெரியாமத்தான் அமைதியா வந்தாங்களா..? அவன் என்கூட படிச்சவன் தான். அப்பவே ரொம்ப புத்திசாலி. நான் கோபப்பட்டு, அந்த பாண்டியன் ஏதாவது வாயைத் திறந்திருந்தா அவ்வளவு தான். நம்மளை எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பான். பாண்டியன் நமக்கு பொன் முட்டையிடுற வாத்து. அவ்வளவு சீக்கிரம் அதை இழக்க முடியாது.
இந்த இடத்துல கோபப்பட ஒரு நிமிஷம் போதும். ஆனா, அடுத்த நிமிஷம் நம்ம எல்லாருமே கூண்டோட கைலாசம் தான்…” என்றான்.
“அதுக்காக இப்படி அவன்கிட்ட அடி வாங்கிட்டு வருவியா..?” என்றாள் அவனின் அம்மா.
“அவன்கிட்ட அடிவாங்கினது கூட பெரிசில்லைம்மா.. ஆனா, அந்த மகா என்னை அடிச்சுட்டா. அதைத்தான் என்னால தாங்க முடியலை. பொட்டச்சிக்கு புருஷன் பக்கத்துல இருக்கவும் அப்படி ஒரு தைரியம்..” என்றான்.
“அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..? உன்னையே அடிக்கிறான்னா, அவளை சும்மா விடுறதா..?” என்றாள் அவனின் அம்மா.
“அவளுக்கு ஈஸ்வரன் பக்கத்துல இருந்த தைரியம். முதல்ல அந்த தைரியத்தை உடைக்கிறேன். ஒன்னு அவனை இல்லாமப் பண்ணி, அவளைக் கதற வைக்கணும். இல்லைன்னா, அவளைத் தூக்கி அவனைக் கதற வைக்கணும். இந்த ரெண்டுல எதையாவது பண்ணியே ஆகணும். பண்ணுவான் இந்த அசோக்..” என்றான் வஞ்சம் நிறைந்த வார்த்தைகளுடன்.
ஈஸ்வரன் சென்ற பிறகு கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தாள் மகா. ருக்கு பாட்டி டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்க, வசுந்தராவைக் காணவில்லை.
“அத்தை எங்க பாட்டி..?” என்றாள்.
“தலைவலிக்குதுன்னு சொல்லிட்டு போனா..தூங்கிட்டாளா இருக்கும்..” என்றார்.
“நைட்டுக்கு என்ன சமைக்கணும்..?” என்றாள்.
“ஏன் நீ செய்ய போறீயா..? என்றார் ருக்கு.
“எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்..” என்றாள் படக்கென்று.
“சாப்பிட்டு பார்த்தாத்தான தெரியும்..” என்றார் ருக்குவும்.
முதல் முறையாக அந்த வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்தாள் மகா. ஆனால் அவள் எதுவும் செய்யத் தேவையே இல்லை என்பதைப் போல் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார் வசுந்தரா.
“நாளையில இருந்து அத்தைக்கு ஹெல்ப் பண்ணனும்..” என்று நினைத்துக் கொண்டே வெளியே வர, வசுந்தராவும் எழுந்து விட்டார்.
“என்ன மகா.. டீ வேணுமா..?” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. சமைக்கலாம்ன்னு போனேன். நீங்க எல்லாமே ரெடி பண்ணி வச்சிருக்கிங்க..அதான் வந்துட்டேன்..” என்றாள்.
“தோசை மட்டும் சூடா ஊத்திக்கலாம் மகா..!” என்றார்.
“முகத்தை கழுவிட்டு, தலையை சீவு மகா. அங்க மல்லிகைப்பூ கட்டி வச்சிருக்கேன். எடுத்து வச்சுக்கமா. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு பூ இல்லாம இருக்கலாமா..?” என்றார்.
“சரிங்கத்தை..” என்றவள், அவர் சொன்னதையெல்லாம் செய்துவிட்டு வர, பூவில் பாதியை கட் பண்ண போனாள்.
“அப்படியே வைம்மா..!” என்றார்.
“இவ்வளவா..? தலைவலிக்கும் அத்தை..” என்றாள்.
“புதுப் பொண்ணு..பூ வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது. அப்படியே தலையில வச்சு விடு வசுந்தரா. இப்ப இருக்குற பிள்ளைகளுக்கு எல்லாமே கஷ்ட்டம் தான்..” என்றார் ருக்கு.
“எப்படித்தை இந்த பாட்டிகிட்ட இருந்து காலத்தை ஒட்டுனிங்க..? கொஞ்சம் சிரமம் தான்..” என்றாள் மகா.
“வயசானாலும் என் காது இப்பவும் கணீர்ன்னு கேட்கும்..” என்று ருக்கு சொல்ல, வாயை அப்படியே மூடிக் கொண்டாள் மகா.
“உன்னை இப்படி சிரிச்ச முகமா பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா மகா. அப்படியே மகாலெட்சுமி மாதிரியே இருக்கம்மா. வீடே இப்பத்தான் கலகலன்னு இருக்கு..” என்றார் வசுந்தரா.
“இதுக்கு முன்னாடி மட்டும் எப்படி இருந்தது அத்தை..?” என்றாள் சிரிப்புடன்.
“மஞ்சு இருந்த வரைக்கும் வீடே கலகலன்னு இருக்கும். மஞ்சுவையும் பக்கத்துலையே கல்யாணம் பண்ணி குடுக்கவும், பெருசா கஷ்ட்டமா இல்லை. ஈஸ்வரன் படிக்க ஹாஸ்ட்டல் போனப்ப தான் கொஞ்சம் கஷ்ட்டமா இருந்தது. அப்படியே வேலைக்கும் போயிட்டானா..? வீடே வெறிச்சோடி போய்டுச்சு. ஒருநாள், எதுவுமே பிடிக்கலை, விவசாயம் தான் பண்ணப் போறேன்னு வந்து நின்னான். அப்ப எங்க எல்லாருக்குமே அதிர்ச்சி தான். கொஞ்சம் பயமா கூட இருந்தது. ஆனா, எங்க பயமெல்லாம் தேவையே இல்லைன்னு, பையன் அடிச்சுப் புடிச்சு முன்னுக்கு வந்துட்டான்..” என்றார் வசுந்தரா.
“எந்த காலேஜ்ல படிச்சாங்க அத்தை..?” என்றாள்.
“கோயம்புத்தூர்ல PSG இஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சான்..” என்றார் சாதரணமாய்.
“இன்ஜினியரிங்கா..?” என்று வாயைப் பிளந்தாள்.
“ஏன் மகா இப்படி அதிர்ச்சியாகுற..?” என்றார் புரியாமல்.
“ங்கா.. அதெல்லாம் ஒன்னுமில்லத்தை..” என்றவள்,
“அப்போ இன்ஜினியரிங் படிச்சிருக்காங்கன்னு சொல்லுங்க..” என்றாள் கிண்டலாய் சொல்வதைப் போல.
“இல்லம்மா, MBA வும் சேர்த்து தான் முடிச்சான்..” என்ற வசுந்தரா அமைதியாக இருக்க, மகாவிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.
நல்ல வேலை அவன் வேலை பார்த்த இடத்தை சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்திருப்பாள்..மகா.
“என்ன மகா..? எந்திருச்சுட்ட..?” என்றார் வசுந்தரா.
“ஒரு சின்ன வேலை இருக்கு அத்தை. போன உடனே வந்துடுறேன்..” என்று அறைக்குள் சென்றவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார் வசுந்தரா.
“எதுக்கு வசுந்தரா சிரிக்கிற..?” என்றார் ருக்கு.
“மகாவுக்கு நம்ம ஈஸ்வர் என்ன படிச்சிருக்கான்னே தெரியாது அத்தை. நான் சொல்லவும் அவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. இனி கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்குவா அத்தை..” என்றார் வசுந்தரா.
“இத்தனை நாள் அவளுக்குத் தெரியாதா..? ஈஸ்வரன் சொல்லவேயில்லையா..?” என்றார் ருக்கு.
“நான் ஈஸ்வரை சொல்ல சொன்னேன் அத்தை. ஈஸ்வர் தான் படிப்பைப் பார்த்து என்மேல அவளுக்கு பிடிப்பு வரவேண்டாம்ன்னு சொல்லிட்டான் அத்தை. அதான் நான் சொன்னேன்..” என்றார் வசுந்தரா.
“அதுவும் நல்லதுக்குத் தான்..” என்றார் ருக்கு.
அறைக்குள் சென்ற மகாவிற்கு முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
‘எதுவுமே தெரியாம, தேவையில்லாம பேசி, சண்டையிழுத்து.. இப்ப அவன் முகத்துல எப்படி முழிப்பேன்..” என்று நொந்து போனாள். ஈஸ்வரனைப் பற்றிய அவளுடைய எண்ணங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொன்றாய் உடைந்து கொண்டே வந்தது.
ஈஸ்வர் அன்றைக்கு நேரம் தாண்டித்தான் வந்தான். வந்தவன் கை,கால்களில் அடிபட்டு கட்டுடன் வந்தான்.