அத்தியாயம் 2_ 2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:2,446
அப்போது ஒரு டம்ளர் டீ வாங்கிக் கொண்டு வந்தவன் “பசியா இருப்ப. இந்தா குடி”, என்று அவள் கையில் கொடுத்தான்.
அவனுடைய அந்த அக்கறை அவள் மனதை தொட்டது. இது வரை அவளுக்கு அவளுடைய தந்தையை தவிர வேறு யாரும் வாங்கித் தந்ததில்லை. அவளுடைய மாமாவும் அவருடைய பிள்ளைகளுக்கு தான் வாங்குவார். அவளுக்கு வாங்க மாட்டாள். தேவையான பொருள்கள் கூட ரேகா அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவளே தான் வாங்குவாள்.
அதனால் அவன் அக்கறையுடன் தந்ததும் சிறு புன்னகையுடன் அவன் தந்ததை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள். சூடான டீ அவள் தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் குளிர் குறைந்தது போல இருந்தது.
அவள் டீ குடித்து முடித்ததும் “உன்னைப் பாத்தா நேத்து நைட்ல இருந்து சாப்பிட்டவ மாதிரி தெரியலை. இன்னும் வீட்டுக்கு போனா உன்னால சாப்பிட முடியுமா தெரியலை. ஆளுக்கு நாலு இட்லி சாப்பிட்டு போவோமா?”, என்று கேட்டான்.
அவனது அந்த அக்கறையில் “கடவுளே இப்படி ஒருத்தனை எனக்கு மாப்பிள்ளையா நீ கொண்டு வந்திருக்க கூடாதா?”, என்று இரண்டாவது முறையாக எண்ணினாள் ரேகா.
எதனால் இப்படி ஒரு நினைப்பு வருகிறது என்று அவளுக்கு புரியவும் இல்லை. அவளது பதிலுக்காக அவன் காத்திருப்பது புரிய “பசிக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனா இந்நேரம் எங்க சாப்பாடு இருக்கும்? அது மட்டுமில்லாம இன்னும் பல் கூட விளக்கலை”, என்றாள் ரேகா.
“இருபத்தி நாலு மணி நேர ஹோட்டலும் இங்க இருக்கு. அதனால எந்நேரமும் அங்க சாப்பாடு இருக்கும். அப்புறம் பல் விளக்குறது பத்தி சொல்லனும்ல? ஒரு நாள் பல்லு விளக்கலைன்னா ஒண்ணும் ஆகாது. விலங்குகள் எல்லாம் பல்லா விளக்குது? என்னைக் கேட்டா இந்த பல் பொடி, பேஸ்ட், பிரஸ் எல்லாம் வந்த அப்புறம் தான் மனுசனுக்கு பல்லு வலியே வருதுன்னு தோணுது”, என்றான் அவன்.
“அந்த காலத்துலயும் செங்கல் பொடி, கரி, சாம்பல் எல்லாம் வச்சு பல்லு விளக்கிருக்காங்க தானே?”, என்று கேட்டாள் ரேகா. அவனுடன் உரையாடுவது அவளுக்கு சுவாரசியமாக இருந்ததால் பதில் சொன்னாள்.
“நான் சொன்னது அதுக்கும் முன்னாடி வாழ்ந்தவங்களைப் பத்தி. நீ சொல்ற செங்கல், கரி வச்சு விளக்கின தாத்தா பாட்டி தான் பல் இல்லாம சுத்திட்டு இருந்தாங்களோ என்னவோ? ஆனா அதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்களுக்கு பல் விழுந்துருக்காதுன்னு தோணுது. ஏன்னா கண்டிப்பா அவங்க பல்லு விளக்கிருக்க மாட்டாங்க. அப்புறம் இந்த ஆராய்ச்சி இப்ப தேவையா? முதல்ல சாப்பிடலாம் வா. அதோ அங்க ஹோட்டல் இருக்கு”, என்று சொல்லி முன்னே நடந்தான்.
ரேகாவுக்கு அப்போது தான் அவன் அவளை ஒருமையில் அழைத்து பேசுவதே நினைவில் வந்தது. “இவன் என்ன என்னை வா போன்னு பேசுறான்? புதுசா பாக்குற என்னை இவன் எப்படி இப்படி கூப்பிடலாம்?”, என்று அவள் எண்ணினாள்.
“ஏன் அவன் அப்படி வா போ ன்னு உரிமையா கூப்பிடுறது உனக்கு பிடிக்கலையோ? வாங்க மேடம் போங்க மேடம்னு சொல்லியிருந்தா நீயே அப்படிக் கூப்பிடாதீங்கனு சொல்லிருப்ப”, என்று அவளைக் கலாய்த்தது அவள் மனசாட்சி. அதற்கு பதில் சொல்ல தெரியாமல், அவன் பின்னே சென்றாள்.
இருவரும் அந்த உணவகத்துக்குள் நுழைந்து ஒரு டேபிளில் எதிர் எதிரே அமர்ந்தார்கள். அதன் பின் பேரர் அங்கே வர அவளுக்கு வேண்டியதை கேட்டு கேட்டு ஆர்டர் செய்தான். “அதோ அங்க வாஷ்பேசன் இருக்கு பாரு. முகம் கழுவிக்கோ. ஒரு மாதிரி இருந்தா வாயையும் கழுவிக்கலாம். விலங்குகள் மாதிரி கழுவவே கூடாதுன்னு இல்லை”, என்று சொல்லி சிரித்தான். அவனை ஒரு நொடி முறைத்து பார்த்தவளுக்கும் சிரிப்பே வந்தது. பின் முகம் கழுவ எழுந்து சென்றாள்.
அவள் திரும்பி வந்ததும் சூடான உணவு வர “நல்லா சாப்பிடு”, என்றான் அவன். அவன் செய்கைகள், அவன் வார்த்தைகள் அனைத்துமே அவளுக்கு பிடித்து தொலைத்தது.
அவனது அக்கறையில் இறந்து போன அவளுடைய தந்தையின் நினைவு அவளுக்கு அதிகம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தொண்டையில் உணவு இறங்கிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை அவனை தொட்டு தொட்டு மீண்டது.
அவனுடைய அக்கறை எதற்காக என்று தெரியாமல் குழம்பினாள். “இவனுக்கு என் மேல இருக்குறது அக்கறையா? இல்லை என்னோட நிலை அறிஞ்சு அவன் காட்டும் இரக்கமா?”, என்ற கேள்வியும் அவளுக்குள் எழுந்தது.
“இரக்கமா தான் இருக்கும். இப்ப கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னானே, இன்னும் வீட்டுக்கு போனா உன்னால சாப்பிட முடியுமா தெரியலைன்னு? அப்ப என் நிலைமை இவனுக்கு தெரிஞ்சிருக்கும் போலவே? இவன் பரிதாப படுற மாதிரியான மாப்பிள்ளையைத் தான் மாமா பார்த்திருக்காரா?”, என்று எண்ணினாள்.
“என்ன யோசிச்சிட்டே இருக்க? சாப்பிடு. வேற ஏதாவது சொல்லட்டுமா?”, என்று கேட்டான் அவன்.
“வேண்டாம்”, என்று தலையசைத்தவளுக்கு “எனக்கு உன்னோட இந்த இரக்க பார்வை வேண்டாம்”, என்று கத்த வேண்டும் போல இருந்தது.
முதலில் அவன் தான் சாப்பிட்டு விட்டு கை கழுவ எழுந்து சென்றான். இவளும் கைக் கழுவ அவன் பின்னே சென்றாள். அது சின்ன ஹோட்டல் என்பதால் ஒரு பைப் மட்டுமே இருந்தது.
அவன் கை கழுவி கொண்டிருக்க அவன் பின்னே அவள் காத்திருந்தாள். கை கழுவி விட்டு அவன் வேகமாக திரும்ப பின்னால் நின்ற அவளை இடித்து விட்டான். அவன் அப்படி பலமாக மோதுவான் என்று எதிர் பார்க்காத ரேகா கீழே சரிய ஆரம்பிக்க அவள் கீழே விழுந்து விடாமல் அவன் தாங்கிக் கொண்டான். அவனது கரம் அவள் இடையை பற்றியிருந்தது.
நடுக்கத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள் ரேகா. பார்த்தவளுக்கு அவன் முகத்தில் இருந்து பார்வையைத் திருப்ப முடியவில்லை. அந்த பார்வையில் தாகம், தவிப்பு, தேடல், காதல், ஆசை, ஆர்வம், ரசனை என அனைத்து உணர்வையும் பிரதிபலித்தான் அவன்.
இப்படி ஒரு ஊடுருவும் பார்வையை முதல் முறை கண்ட ரேகா முகம் சிவந்து போனது. அவள் முகம் சிவந்ததில் அவள் இடையில் இருந்த அவனது கை மேலும் அழுந்தியது. அவன் அணைப்பு இறுகியதில் அவள் இதய துடிப்பு அதிகமானது. முதல் முறையாக அவள் உணர்ந்த ஆணின் பரிசம் அவளை நிலை குலைய வைத்தது.
அவளுடைய கண்களில் இருந்த மயக்கத்தைக் கண்டவனுக்கு ஒரு பூவைத் தாங்கிய உணர்வு தான் வந்தது. அவனது உணர்வு நரம்புகள் அங்கே இங்கேயென மீட்டி விடப் பட்டது போல இருந்தது. வளவளவென்று இருந்த அவள் இடுப்பில் இருந்த அவனது கை இது வரை இப்படி ஒரு மென்மையை உணர்ந்ததில்லை என்பதால் அந்த இடத்தை நன்றாக பிடித்திருந்தது.
அவளுக்கோ அவனுடைய தொடுகையில் தேகம் முழுவதும் சுடுவது போல இருந்தது. அந்த பரிசம் அவளின் உயிர் வரை தீண்டியது.
அவள் வெற்றிடையில் பதிந்திருந்த அவன் விரல் அங்கே இங்கே சிறிதாக அசைய அதன் தாக்கத்தில் அவள் உடல் நடுங்கியது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்களை மூடி இதழ் துடிக்க அவள் நின்ற தோற்றம் அவனை பித்தம் கொள்ள வைத்தது.
தன்னுடைய கைக்குள் நடுங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்த்தவன் அவளை மேலும் இறுக்கி அணைத்தான். “இவன் அணைப்பதால் நடுக்கம் வருகிறதா? இல்லை நடுக்கம் வந்ததால் இவன் இன்னும் அணைக்கிறானா?”, என்று புரியாமலே இருவரும் கட்டுண்டு இருந்தார்கள்.
அவனுடைய சட்டையில் இருந்து வந்த அவனது வாசனை அவளை மேலும் கிறங்க வைத்தது. அவளது சேலையை தாண்டி வெற்றிடையில் பதிந்திருந்த அவன் கரம் அவளுக்குள் கனலை மூட்டியது. ஒரு இதமான இம்சை அவள் அடி வயிற்றில் கிளர்ந்தது.
இடையில் இருந்த விரல்கள் அவள் இடையை உராய்ந்ததில் தீ மூட்டியது போல இருந்ததும் கண்களைத் திறந்து அவன் கண்களை மிக நெருக்கத்தில் பார்த்தாள்.
அவள் கண்களைத் திறந்ததும் அவள் முகத்தில் வந்த உணர்வுகளைப் படித்தான் அவன். அதில் வெறுப்போ கோபமோ இல்லாமல் தவிப்பு மட்டுமே இருந்ததும் அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.
“இப்படி செய்யாதேயேன்”, என்று அவள் கண்கள் அவனிடம் யாசகம் கேட்க அவள் விழி பேசிய பாஷை புரிந்தவனுக்கோ குதூகலமாக இருந்தது. அவளை மேலும் நெருங்கினான். அவளுக்கும் அவனை விட்டு விலக முடியவில்லை. இருவருக்கும் சுற்றுப் புறம் மறந்து போனது. அவர்கள் இருந்த அறைக்குள் யாரும் கை கழுவ வராதது அவர்கள் அதிர்ஷ்டம் போல?
அவன் அவள் இடுப்பை இறுக்கி பிடிக்க அந்த உணர்வுகளை தாங்க முடியாமல் அடுத்த நொடி அவன் மார்பில் முகம் புதைத்து அவன் முதுகைக் கட்டிக் கொண்டாள் ரேகா. இந்த சரணாகதியை சத்தியமாக அவன் எதிர்பார்க்க வில்லை. ஆனந்தமாக அதிர்ந்து போனான்.
புதிதாக பிறந்த உற்சாகத்துடன் அவனும் அவளைக் கட்டிக் கொண்டான். இருவரும் ஒருவர் அணைப்பில் மற்றவர் அடைக்கலமானார்கள். அவளை இன்னும் இறுக்கி அனைத்துக் கொண்டவன் அவள் தோள் வளைவில் முகம் புதைத்தான்.
அவள் கண்களில் இருந்த மயக்கமும், தன்னிடம் இருந்து அவள் விலகாமல் நின்றதும் அவனை அடுத்த நிலைக்கு தூண்டியது. அவள் காது மடல்களில் தன்னுடைய உதட்டைப் பொறுத்தினான். அந்த தீண்டலைத் தாங்க முடியாமல் ரேகாவின் கை அவன் முதுகை இறுக்கிப் பிடித்தது.
அவள் கண் மூடி அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த கோலம் அவன் மனதை மயக்க அடுத்த நொடி அவளை தன்னுடைய நெஞ்சில் இருந்து விலக்கினான். சாக்லேட்டைப் பிடுங்கிய குழந்தை போல அவள் அவனைப் பார்க்க அதற்கு மேல் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளுடைய துடிக்கும் இதழ்களில் இதழ் பதித்து விட்டான்.
கண்களை இறுக மூடிக் கொண்ட ரேகா அவன் முத்தத்தில் மயங்கிப் போனாள். சிறிது நேரம் கழித்து அவள் இதழ்களில் இருந்து விலகியவன் அவள் நெற்றி கன்னம் என்று மாற்றி மாற்றி தன்னுடைய உதடுகளைப் பதித்தான். அவனது கரம் அவள் கன்னங்களை மென்மையாக வருடியது.
“இதுக்கு மேல இங்க நிக்க முடியாது. யாராவது வந்திருவாங்க. சீக்கிரம் முகம் கழுவிட்டு வா, நாம கிளம்பலாம்”, என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான். அவன் பேசியதும் மயக்கம் அனைத்தையும் துறந்த ரேகா நடந்த நிகழ்வை எண்ணி விதிர்த்து போய் நின்றாள் .
“ஐயோ என்ன காரியம் செய்து விட்டேன் நான்?”, என்று அவள் உடல் முழுவதும் நடுக்கம் பிறந்தது. அந்த குளிரிலும் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“கடவுளே? இப்ப நடந்தது எவ்வளவு பெரிய விஷயம்? நான் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து போனேன்? என்னைப் பத்தி என்ன நினைப்பான் இவன்? நான் இவனை பாத்துட்டே வந்ததுனால நான் கேவலமான பொண்ணுன்னு நினைச்சிட்டானா? என்ன நினைச்சு இவன் என்னைத் தொட்டிருப்பான்? தொட்டவுடன் மயங்கிட்டான்னு கேவலமா தானே என்னைப் பத்தி நினைச்சிருப்பான்? ஐயோ இன்னும் கொஞ்ச நேரத்துல யார் கூடவோ கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்ப இந்த டிரைவர் கூட, அதுவும் பெயர் கூட தெரியாத இவன் கூட முத்தமெல்லாம்… நான் செஞ்ச விஷயம் கேவலமானதா இருந்தாலும் எனக்கு பிடிச்சிருந்ததே? ஏன்?”, என்று எண்ணியவளின் கண்களில் கண்ணீர் வந்தது.
அவளை நினைத்து அவளுக்கே கோபம் வந்தது. யாரோ ஒருவனிடம் இருந்து முத்தம் பெற்றதையும் அவன் கையணைப்பில் இருந்ததையும் அவளால் சகிக்க முடியவில்லை தான். அதை விட கொடுமையான விஷயம், நடந்ததெல்லாம் அவளுக்கு பிடித்திருப்பதை தான்.
அவனுடைய கைக்குள் இருந்த போது உணர்ந்த கதகதப்பு, அவன் நெஞ்சில் சாய்ந்த போது ஏதோ தன்னிடத்தில் இருக்கும் நிறைவு, உயிர் வரை தொட்டு அவள் உணர்வுகளை கிளறிய இதழ் தீண்டல் என அனைத்தும் அவளுக்கு பிடித்து தொலைத்ததை தான் அவளால் தாங்க முடியவில்லை. இது என்ன புதுவகையான தவிப்பு என்று எண்ணியவள் தன்னை அடக்கி கொண்டு தண்ணீரை முகத்தில் அடித்து கழுவினாள்.
இங்கே நடந்ததை வேறு யாராவது பார்த்திருப்பார்களோ என்று காலம் கடந்த சிந்தனை அவளுக்கு வந்தது. பயந்து போய் எங்காவது கேமரா இருக்கிறதா என்று பார்த்தாள். அப்படி எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை என்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.
இப்போது அவனை எப்படி எதிர் நோக்க என்று சங்கடம் வந்தது. அவன் முகத்தில் விழிக்கவே தடுமாறிப் போனாள். ஆனால் எவ்வளவு நேரம் தான் இங்கே இருக்க முடியும்? அவள் வெளியே சென்று தானே ஆக வேண்டும்? அதனால் குனிந்த தலை நிமிராமல் வெளியே வந்தாள்.
வெளியே வந்த அவளை ஆவலாகப் பார்த்தவன் கலங்கி இருந்த அவள் முகத்தைக் கண்டு புருவம் உயர்த்தினான். ஆனால் அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.